You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 13

Quote

அத்தியாயம் – 13

 “கவிதா மேடம் பேசணுமாம்” என்று அந்தப் பங்களாவின் காவலாளி, தன் செல்பேசியை ரஞ்சனிடம் நீட்ட, “எனக்கு நேர்லதான் பேசணும்.” என்று பிடிவாதமாக அதனை வாங்க மறுத்தான்.

 “அவர் போன்ல பேச மாட்டாராம் மேடம். நேர்லதான் பேசுவாராம்” என்று காவலாளி பதிலுரை கேட்டு உச்சமாக எரிச்சலான கவிதா ஜன்னல் திரைச்சீலை வழியாக எட்டிப் பார்த்தாள்.

 வெளிவாயிலில் ரஞ்சனும் அஜயும் தங்கள் காரருகே நின்றிருந்தனர். அப்போது அமலா, “ஸ்ரீ வந்துட போறான் கவிதா. ஏதாவது பேசி அவங்கள சீக்கிரமா அனுப்பி விடு” என்று அவளை அவசரப்படுத்தினார்.

அதேசமயம் காவலாளியும், “இப்போ என்ன பண்றது மேடம்” என்று  கேட்டான்.

கவிதா யோசித்து விட்டு, “இங்கே பார்க்க முடியாது. வேணா அவங்க எங்க தங்கி இருக்காங்கனு கேட்டு சொல்லுங்க, நான் நேர்ல போய் பேசுறேன்” என்றாள்.

இந்த விஷயத்தைக் காவலாளி சொன்ன மறுநொடி ரஞ்சன் செல்பேசியை வாங்கினான்.

“நான் சில்வர் ஸ்ப்ரிங்க்ஸ் ரிசார்ட்ல தங்கி இருக்கேன். ரூம் நம்பர் 201”

“சரி நான் வரேன்”

“கண்டிப்பா வருவீங்களா?”

“ம்ம்ம் வரேன்” என்ற போதும் அவன் விடாமல், “எத்தனை மணிக்கு வருவீங்க?” என்று கேட்டான்.

“இன்னைக்கு ஈவினிங் ஆறு மணிக்கு”

“எனக்கு உங்க நம்பர் வேணும், அதாவது உங்க நம்பர்” என்று அவன் மேலும் கேட்கப் பல்லைக் கடித்தவள், “சரி சொல்றேன் நோட் பண்ணிக்கோ” என்று தன்னுடைய எண்ணைத் தந்தாள்.

“நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்த ரஞ்சனின் விழிகள், தேடலுடன் அந்த பங்களாவின் வெளிப்புறத்தை நோட்டமிட்டன.

ஜன்னலின் திரைச்சீலை வழியாக கவிதா எட்டிப் பார்க்கவும் அவன் பார்வை அவ்விடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. உடனடியாக அவள் அதனை மூடிவிட்டுத் தள்ளி வந்தாள்.

அப்போது அமலா, “நேர்ல போக போறியா, இது சரியா வருமா” என்று கேட்க, “அவன் வேறென்ன ஆப்ஷன் கொடுத்தான் எனக்கு” என்ற கவிதா பெருமூச்சுடன் படுக்கையில் அமர்ந்து கொண்டாள்.

அவனை நேரில் பார்த்துப் பேசுவதை நினைக்கவே அவளுக்குக் கலவரமாக இருந்தது.

****

“இன்னையலிருந்து  நீயும் என் கூட ஆபிஸ் வர போற” என்று கவிதா சொல்ல,

“என்ன நானுமா?” என்று தயக்கத்துடன் கேட்டான் ரஞ்சன்.

“என்ன நானுமானு கேட்குற. ஆபிஸ் போனாதான் அட்மினிஸ்ட்ரேஷன் எல்லாம் கத்துக்க முடியும்” என்றவள் சொல்ல, அவனுக்கு மறுக்க வழி இல்லை.

“சரி போலாம், ஆனா நான் கார் ஒட்டுறேனே” என்று அவள் கையிலிருந்த கார் சாவியை கேட்டான்.

“இந்த ஒரு வேலையைத்தான் நீ உருப்படியா செய்யற” என்று அவனை முறைத்து கொண்டே சாவியை தந்தவள் காரில் அமர்ந்ததும், “நான் கொடுத்த பைலை எல்லாம் படிச்சியா?” என்று கேட்டாள்.

“படிச்சுட்டேன்”

“படிச்ச சரி, என்ன தெரிஞ்சுகிட்ட”

“நம்ம கம்பெனி கடந்த இரண்டு வருஷமா நஷ்டத்துல போயிட்டு இருக்க, சேல்ஸ் இல்லாததால தமிழ்நாட்டுல இருக்க மூணு பிராஞ்சை மூடிட்டாங்க”

“இதை எப்படி சரி பண்ண முடியும்னு ஏதாவது ஐடியா இருக்கா?”

“சரியா போகாத பிராடக்ட்ஸ நிறுத்திட்டு புது பிராடக்ட்ஸ் லாஞ் பண்ணலாம்.”

 “நல்ல ஐடியாதான். ஆனா புதுசா இல்லை. ஏதாவது புதுசா யோசி” என்றவள், “அப்புறம் ஆபிஸ் பைலை படிச்சு மட்டும் எதையும் கத்துக்க முடியாது. பிஸ்னஸ்ங்குறது நாலு மனுஷங்கள நேர்ல பார்க்குறது. முக்கியமா கான்பிடன்ட்டா பேசுறது. இதெல்லாம்தான் நீ கத்துக்கணும்” என்றாள்.

“சரி” என்று அவன் தலையசைக்க, “என்ன சொன்னாலும் இப்படி தலையாட்டுறதை நிறுத்துடா” என்று கூற, அதற்கும் அதேபோல தலையாட்டி வைத்தான்.

“ஐயோ முடியல, உன்னை எப்படித்தான் ட்ரெயின் பண்ண போறேன்னு தெரியலயே” என்று சலிப்புடன் தலையிலடித்து கொண்டாள். அதன் பின் அவர்கள் கார் அலுவலகத்தின் வாயிலில் நுழைய, அஜய் வாசலிலியே நின்றிருந்தான்.

“இவன்தான் அஜய், என்னோட பெஸ்ட் பிரெண்ட். எனக்கு அப்புறம் இந்த ஆபிஸ்ல எல்லாமே அஜய்தான்” என்று ரஞ்சனிடமும்,  “அப்புறம் அஜய், இது ரஞ்சன்” என்று அஜயிடமும் பரஸ்பரம் அறிமுகம் செய்தாள்.

“ஹெலோ” என்று இயல்பாக கை கொடுத்தவன் அலுவலகம் உள்ளே வந்ததும் கவிதாவிடம், “நான் உன்கிட்ட தனியா பேசணும்” என்றான்.

 “ரஞ்சன் நீ என் கேபின் ல இரு” என்றவள் அஜயின் அறைக்கு வர, அவன் அவளை கடுமையாக முறைத்தான்.

“சாரி சாரி நான் பாதிலேயே போயிருக்க கூடாது, ஆனா என்ன நடந்ததுன்னு உனக்கு தெரிஞ்சா” என்றவள் விளக்கம் தர,  “எல்லாம் எனக்குத் தெரியும்” என்றதும் அவள் தலையைத் தாழ்ந்து கொண்டாள்.

“அப்படினா எனக்கும் ரஞ்சனுக்கும் இருக்க வயசு வித்தியாசம் பத்தியும்...” என்று இழுத்தாள்.

“அதுவும் எனக்குத் தெரியும்”

“ஆனா எனக்கு அந்த விஷயம் முன்னாடியே தெரியாதுடா, தாத்தா என்கிட்ட சொல்லவே இல்ல” என்றவள் தயக்கத்துடன் கூற, “ஏய் நிறுத்து, உன்னை யார் இதுக்கு எல்லாம் விளக்கம் கேட்டா, இது உன் முடிவு. உன் வாழ்க்கை. அதைப் பத்தி பேச அந்த சுனிதாவுக்கு எந்த உரிமையும் இல்ல. அவளுக்கு காலேஜ்ல இருந்தே உன் வளர்ச்சி மேல காண்டு. அதைத்தான் இப்படிக் காட்டி இருக்கா. நான் அவளைக் கூப்பிட்டு இருக்கவே கூடாது. எல்லாம் என் தப்புதான்.” என்று ஆதங்கத்துடன் பேசிய நண்பனை,

“அதெல்லாம் இல்லடா” என்று சமாதானம் செய்தாள்.

“இல்ல என் தப்புதான். ஆனா நீ ஏன் டி அவளை பேச விட்ட, செவுலிலேயே ஒன்னு கொடுத்திருக்க வேண்டியதுதானே”

“உன் நிச்சயத்துல பிரச்னை வேண்டாம்னு பார்த்தேன்”

“நல்லா பார்த்த. இருக்கட்டும் எங்கயாச்சும் தனியா மாட்டுவா இல்ல. அப்ப பார்த்துக்கிறேன் அவளை” என்றவன் கோபத்துடன் பொங்கிக் கொண்டிருக்க, “இப்ப எதுக்குடா இவ்வளவு டென்ஷனாகுற விடு.” இந்தா தண்ணி குடி” என்று அவன் தோளைத் தட்டி அமைதிப்படுத்தினாள்.

கவிதாவின் அறை கண்ணாடி வழியாக இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சன் கண்களில் அவர்கள் நட்பின் மீது பொறாமை வந்தது.

 அஜய் பார்வை திரும்பியதும் அவர்களைப் பார்க்காதது போலத் ரஞ்சன் தலையைக் குனிந்து கொண்டான்.

“ஆமா, இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு முதலயே தோணுச்சு. இப்பதான் ஞாபகத்திற்கு வருது”

“நீயும் இவனை காலேஜ்ல பார்த்திருக்கியா?”

“நான் மட்டும் இல்ல நீயும்தான் பார்த்த”

“எப்போ, எனக்கு ஞாபகத்துல இல்லையே”

“ஒரு தடவ அவனை சீனியர்ஸ் புல்லிங் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த சமயத்துல நீதான் அவங்ககிட்ட இவனுக்காகச் சண்டை போட்ட”

“அப்படியா... எனக்கு சுத்தமா ஞாபகத்துல இல்ல”

“நீ ஒன்னு இரண்டு பஞ்சாயத்து பண்ணி இருந்தாதானே உனக்கு ஞாபகத்துல இருக்கும்” என்று கேலி செய்த சிரித்தவன், “அது சரி, அவனை எதுக்கு நீ நம்ம ஆபிஸ்க்கு கூட்டிட்டு வந்திருக்க.” என்றான்.

“அவன் இங்க இருந்து எல்லாத்தையும் கத்துக்கட்டும்னுதான்”

“கத்துக்கிட்டு என்ன பண்ண போறான். எப்படி பார்த்தாலும் இவன்தான் அவங்க தாத்தாவோட கோடிக்கணக்கான சொத்துக்கு எல்லாம் ஒரே வாரிசாக போறான். இந்த நோகாம நோன்பு கும்பிடுறதுனு சொல்வாங்களே அந்த மாதிரி”

“ரஞ்சன் நீ நினைக்குற மாதிரி இல்ல. அவன் பாவம்டா”

“என்ன பாவம், நம்ம அளவுக்கு அவன் ஏதாவது கஷ்டப்பட்டு இருக்கானா”

 “நம்மள விட அதிகமா கஷ்டப்பட்டு இருக்கான்”

“என்ன சொல்ற”

“இன்னைக்கு வேணா அவன் கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசா இருக்கலாம். ஆனா கொஞ்சம் நாள் முன்னாடி வரைக்கும் அவன் டேபிள் துடைக்கிறதுல தொடங்கி கேப் ஓட்டுற வரைக்கும் எல்லா வேலையும் செஞ்சிருக்கான். ஏன் இப்பவரைக்கும் அவங்க தாத்தா சொத்துல இருந்து அவன் ஒத்த பைசா எடுத்து செலவு பண்ணல தெரியுமா?.

நான்தான் அவனை கம்பெல் பண்ணி எல்லாத்தையும் வாங்கி கொடுத்துட்டு இருக்கேன். டிரஸ் உட்பட.” என்று கவிதா சொன்னதைக் கேட்டு அஜயிற்கு ஆச்சரியமாக இருந்தது.

“அது மட்டுமில்ல. அவங்க அப்பா அவனை ஒரு அடிமை மாதிரிதான் நடத்திட்டு இருந்திருக்காரு. அதுவும் மாட்டை அடிக்கிற மாதிரி அடிச்சு... ப்ச் சொல்லவே கஷ்டமா இருக்கு” என்று கவிதா சொன்னதை எல்லாம் கேட்ட அஜயிற்கு, ரஞ்சன் மீது இரக்கம் பிறந்தது. அது நாளடைவில் அன்பாகவும் நட்பாகவும் மாறியது.

பின்னாளில் வியாபார நுணுக்கங்களை எல்லாம் ரஞ்சன் கற்றுத் தேர்ந்தாலும், அவன் அதே இலகுவான மனம் படைத்தவனாகவே இருந்தான்.

ஆனால் இன்று தான் பார்த்த ரஞ்சனிடம் அது இல்லை.

அதுவும் கவிதாவை பார்க்க வேண்டுமென்று தீவிரமாகச் சண்டையிட்ட ரஞ்சனிடம்.

அங்கிருந்து திரும்பிய போது அவனுடன் நடந்த உரையாடலை நினைக்கும் போதே அஜயிற்கு மிரட்சியாக இருந்தது.

“வேற ஒருத்தன் கூட லிவின் ல இருக்கேன் சொன்னவளை நேர்ல வர வைச்சு என்னடா பேச போற”

“என் கூட வர சொல்ல போறேன்”

“அதெப்படிறா முடியும்?”

“எப்படிறானா அவங்க என் வொய்ப்”

அவனை கவலையுடன் பார்த்த அஜய், “அது உண்மைனு நீதான்  நம்பிட்டு இருக்க. ஆனா அது உண்மை இல்ல. உனக்கும் அவளுக்கும் இடையில கணவன் மனைவிங்குற உறவு இருந்ததே இல்ல” என்றான்.

“ஸ்டில் ஷி இஸ் மை வொய்ப்”

“வெறும் டாகுமென்ட்ல மட்டும் இருக்குறதுக்கு பேர் உறவு இல்ல”

மௌனமாகிவிட்ட ரஞ்சன் பின் மெல்லிய குரலில், “நீங்களும் உங்க ப்ரெண்ட் மாதிரியே பேசுறீங்க இல்ல? என்னதான் இருந்தாலும் அவங்கதான் உங்க பிரெண்ட். நான் இல்லயே” என்று வருத்தமாக கூற,

“என்னடா இப்படி எல்லாம் பேசுற. உனக்காக அவகிட்ட நான் சண்டை எல்லாம் போட்டேன்” என்றான் அஜய்.

“ஆனாலும் உங்களுக்கு என் வலி புரியலயே”

“எனக்கு புரியுதுடா, நீ கவிதாவை எந்தளவு நேசிக்குறனு. ஆனா அவ உன்னை நேசிக்கலயே. அப்படி இருக்கும் போது நீ எப்படி அவளை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வர முடியும். லீகலா கூட அப்படி செய்ய முடியாதுடா”  

“முடியும்... முடியணும்” என்று பிடிவாதமாகச் சொன்னவன், “”எனக்கு கவிதா வேணும் ண்ணா, யாருக்காகவும் நான் அவங்கள விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்ற போது அவன் உடல் முழுவதும் அதிர்ந்தது.

“வில்லன் மாதிரி பேசாதடா. பயமா இருக்கு” என்று அஜய் சொல்ல அவன் சிரித்து விட்டு,

“நான் வில்லனாகுறது ஹீரோகுறது எல்லாமே உங்க பிரண்டுகிட்டதான் இருக்கு” என்று சொன்ன ரஞ்சனின் முகத்திலிருந்த கொஞ்சம் நஞ்சம் அப்பாவித்தனமும் அப்போது வடிந்து போயிருந்தது.

கவிதா கிடைக்காத ஏமாற்றத்தினால் இப்படி எல்லாம் பேசுகிறானோ என்ற யோசித்த அஜய், அதற்கு மேல் அந்த உரையாடலை வளர்க்கவில்லை.

ரஞ்சனும் எதுவும் பேசவில்லை. அறைக்குத் திரும்பியதும் அமைதியாகச் சென்று படுத்துக் கொண்டான்.

“டேய் ஏதாவது சாப்பிட்டு படுத்துக்கோடா?” என்று அஜய் அழைக்க, “இல்ல எனக்கு எதுவும் வேண்டாம்” என்றவன் போர்வையை எடுத்து முகத்தை முழுவதுமாக மூடி கொண்டான்.

இந்த நிலைமையில் அவனைத் தனியாக அறையில் விட்டுப் போகப் பயந்த அஜய், அறையிலேயே காலை உணவை வரவழைத்து உண்டான். அப்போது  மனைவியின் எண்ணிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அவளுக்குப் பதிலாக அவனுடைய மாமனார் பேசினார். மகளை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொல்ல, அஜய் பதறிவிட்டான்.

“நான் இதோ உடனே கிளம்பி வரேன் மாமா” என்றவன் ரஞ்சனை எழுப்பி, “டேய் குழந்தை அசைவே இல்லாம இருக்காம். டாக்டர் உடனே ஆபிரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டாங்களாம்” என்று தெரிவிக்க,

“நீங்க முதல சென்னைக்கு கிளம்புங்க அண்ணா.” என்றவன் அஜயின் பையை எடுத்து துணிகளை அடுக்கிக் கொடுத்தான்.

 “அப்போ நீ என் கூட வரலயா?”

“இல்ல ண்ணா, நீங்க போங்க”

“நீ வேற ரொம்ப அப்செட்டா இருக்க, உன்னை இங்க தனியா விட்டு போக எனக்கு ரொம்ப பயமா இருக்குடா”

“நான் அப்செட்டாதான் இருக்கேன். ஆனா நான் கோழைத்தனமா எந்த முடிவையும் எடுக்க மாட்டேன். ஏன் னா நான் பழைய ரஞ்சன் இல்ல” என்றான். அதற்கு மேல் அவனை  கட்டாயப்படுத்த முடியாது என்று அஜய் தான் மட்டும் கிளம்பினான்.

“போனை மட்டும் ஆப் பண்ணாதடா ப்ளீஸ்” என்று காரில் ஏறியபடி சொல்லவும், “சரி அண்ணா, ஆப் பண்ணல. நீங்க பார்த்து பொறுமையா ஓட்டிட்டு போங்க” என்றான்.

அஜயின் கார் செல்வதைப் பார்த்த ரஞ்சன் அதன் பின் உணவகத்திற்கு வந்தமர்ந்தான். சாப்பிட்டு முடித்து அறைக்குத் திரும்பியவன் அலுவலக வேலைகளில் ஆழ்ந்துவிட்டான்.

ஆனாலும் ஆறு மணிக்கு அவளைப் பார்க்கப் போகிறோம் என்று ஒரு குரல் அவனுக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஆதலால் ஐந்து மணிக்குக் குளித்து தயாராகி அவளுக்காகக் காத்திருந்தான். காத்திருந்தான். காத்திருந்தான். காத்துக் கொண்டே இருந்தான். அவள் வரவே இல்லை.

அவள் செல்பேசிக்கு அடித்தான். அதுவும் எடுக்கப்படவில்லை.

அவன் உள்ளம் கொதித்தது. அந்தக் கொதிப்பை அடக்குவது எப்படி? மீண்டும் அந்த பங்களாவிற்கு சென்று சண்டை போடுவது என்ற பைக்கில் ஏறிவிட்டான். ஆனால் எதுவோ ஒன்று அவனைப் போகாதே என்று தடுத்தது.

எதுவும் செய்ய முடியாத இயலாமை ஒருபக்கம். வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டாள் என்ற கோபம் மறுபக்கம். அவனால் தாங்க முடியவில்லை.

பைக்கிலிருந்து இறங்கியவன் அங்கிருந்த பாரில் அமர்ந்து குடிக்க தொடங்கிய சமயம் சரியாக, எதிரே இருந்த நாற்காலியில் சந்தன நிறச் சுடிதாரில் வந்து அமர்ந்தாள் கவிதா.

அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவள் முகம் மட்டும் தனியாக ஒளிர்வது போலத் தெரிந்தது.

‘இது கனவா நிஜமா? ஒரு வேளை போதை ரொம்ப ஏறிடுச்சா... ஆனா இப்பதானே ஆரம்பிச்சோம். ஒரு ரவுண்டு கூட முடியலேயே’ என்று மனதில் எண்ணியவன், “இது நிஜம்தானா?” என்று கேட்டான்.

 “எல்லாம் பொய்யா போயிடும்னும்னுதான் நானுமே நினைக்குறேன். ஆனா பொய் இல்ல. இது நிஜம்தான்” என்று அவன் கேள்விக்கு அவள் பதில் சொல்ல, “கவிதா” என்று அவன் கண்கள் ஆச்சரியத்துடன் விரிந்தன.

 

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content