You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 24

Quote

அத்தியாயம் – 24

கவிதா தோட்டத்தில் நின்றபடி ஸ்ரீதரின் அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தாள். அவளைச் சமாதானம் செய்வது மிகவும் கடினமாக இருந்தது.

“நீங்க கவலைப்படாதீங்க... ஸ்ரீ நல்லா இருக்கான்... சரி.. இல்ல நான் பேசச் சொல்றேன்... கண்டிப்பா சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், ‘ப்ப்ப்பா’ என்ற பெருமூச்சுடன் திரும்பிய கணத்தில், ரஞ்சன் நின்றிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.

கடந்த மூன்று நாட்களாக அவனை அவள் முடிந்தளவு தவிர்த்து வந்தாள். அதேநேரம் ஸ்ரீதரிடம் அவள் காட்டிய அதிக நெருக்கத்தைக் கண்டு அவனே விலகிச் செல்ல, அதையே அவனைத் தள்ளி வைக்கும் யுக்தியாகப் பயன்படுத்திக் கொண்டாள்.

ஆனால் இப்படி சடாரென்று அவன் முன்னே வந்து நிற்கவும், அவள் இதயம் படபடக்கத் தொடங்கிவிட்டது. போதாக்குறைக்கு அவன் அடிக்கடித் திரும்பித் திரும்பிப் பார்க்கவும், ஸ்ரீதர்தான் அவனை இங்கே அனுப்பி வைத்திருப்பான் என்று அவளுக்குப் புரிந்தது.

அவள் எதுவும் பேசாமல் அங்கிருந்து விலகிவிட எத்தனிக்க, “கவிதா” என்று மறித்து, தன் கையிலிருந்த அழைப்பிதழை நீட்டினான். அவனைப் புரியாமல் பார்த்தவள், பின்னர் அதனை வாங்கி வாசிக்கும் இடைவெளியில் அவன் மீண்டும் பின்பக்கமாகத் திரும்பிப் பார்க்க, வீட்டிற்குள் இருந்த ஜன்னல் வழியாக ஸ்ரீதர் ஏதோ சைகை செய்துகொண்டிருந்தான்.

அதை எல்லாம் கவனிக்காதது போலக் காட்டிக் கொண்டவள், “வாவ்... Best Entrepreneur Award... கங்கிராஜுலேஷன்ஸ்!” என்றாள்.

“தேங்க்ஸ்” என்றவன் முடிப்பதற்குள் அவள் அவனைச் கடந்து செல்லப் பார்க்கவும், “கவிதா” என்று மீண்டும் மறித்தான்.

“என்ன வேணும் உனக்கு? அதான் விஷ் பண்ணிட்டேன் இல்ல”

“அது இல்ல... அவார்ட் ஃபங்க்ஷனுக்கு நீங்களும் வரணும்னு கேட்க வந்தேன்” என்றான் தயக்கத்துடன்.

“நானா?”

“ஆமா, நீங்க என் பக்கத்துல நிக்கணும்.”

“சாரி, எனக்கு விருப்பம் இல்ல” என்றவள் மீண்டும் அவனைத் தவிர்த்துவிட்டுச் செல்ல, “என் வெற்றில உங்களுக்கு உண்மையிலேயே சந்தோஷம் இல்லையா?” என்று கேட்டான். அவன் கண்களில் தேங்கியிருந்த ஏக்கத்தைக் கண்டவள், “டெபனட்லி நோ” என்றாள் கறாராக.

“கவி வியர்ஸ் நீங்க உருவாக்கினது...”

“இப்போ அது உன்னோடது... நீதான் அதை நடத்திட்டு இருக்க... எனக்கு அதோட வளர்ச்சில எந்தப் பங்கும் இல்ல.”

“என்னோட வளர்ச்சில இருக்கே... என்னுடைய இந்த வெற்றிக்கு நீங்கதான் காரணம்.. அன்னைக்கு பேசும் போது கூட சொன்னீங்களே, நீங்க இல்லாம நான் இல்லன்னு?”

“ஆமா சொன்னேன், ஆனா நான் அதை நினைச்சுப் பெருமைப்படல.”

“பொய்ய்ய்ய்யய்!” என்று கட்டுப்படுத்த முடியாமல் அவன் கத்திவிட, அவள் ஒரு நொடி அதிர்ந்து விழித்தாள். பின்னர் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “பொய் பேசறது எல்லாம் உனக்கு மட்டும்தான் வரும்... எனக்கு வராது” என்று அடித்துச் சொன்னாள்.

“வராதா? நிஜமாவா?” என்று எள்ளலாகக் கேட்க, “ஆமா வராது” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவள் முன்னே சென்றுவிட, “I love that fucking bastard” என்ற அவனது வார்த்தைகள் அவளை உறைய வைத்தன.

அசையாமல் அப்படியே நின்றுவிட்டாள். அவன் இரண்டே எட்டில் அவளை நெருங்கி வந்தவன், “Seriously... fucking bastard-ஆஆஆ?” என்று கேட்க, அவள் முகம் சுண்டிவிட்டது.

‘டேய் அஜய்!’ என்று மனதிற்குள் நண்பனைத் திட்டித் தீர்த்தவள், அதேநேரம் ரஞ்சனை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலையை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டாள்.

அவளை ஊடுருவிப் பார்த்தவன், “என்னை லவ் பண்ணேன்னு ஒத்துக்குறதுல அப்படி என்ன ஈகோ உனக்கு... ம்ம்ம்?” என்று கேட்க, அவள் உதடுகள் துடித்தன. கண்களில் கண்ணீர் இறங்கியது.

“கவிதா” என்றவன் அழைக்கவும், அவனை வலியுடன் ஏறிட்டவள், “உன்கிட்ட ஆசை ஆசையா காதலைச் சொல்ல வந்த என்னை, நீ ஏமாத்திக் கல்யாணம் பண்ணணும்கிற விஷயம் தெரிஞ்சா எப்படி இருக்கும்? அந்த நிமிஷம் நான் ஃபீல் பண்ணது ஈகோவை இல்ல... ஒருவிதமான அவமானத்தை... அசிங்கத்தை! உன்னை நான் லவ் பண்ணத நினைச்சே I feel ashamed of myself!” என்றாள்.

அவன் பேச்சற்று நின்றுவிட, “உண்மை வேணும் உண்மை வேணும்னு கேட்டியே... கிடைச்சிருச்சா நீ கேட்ட உண்மை?” என்றாள்.

அவன் மௌனமாகிவிட அவள் வேகமாக வீட்டிற்குள் சென்றுவிட்டாள். அவள் கோபமாக உள்ளே செல்வதைப் பார்த்த ஸ்ரீதர் வெளியே வந்து ரஞ்சனைச் சந்தித்தான்.

“என்னாச்சு?” என்று விசாரிக்க, “என்னை காதலிச்சதையே அவங்க அவமானமா நினைக்கிறாங்க” என்றான்.

“என்ன...”

“நான்தான் அப்பவே சொன்னேனே... வேணாம் வேணாம்னு. நீங்களும் அஜயும்தான் பேசு பேசுன்னு என்னை இழுத்து விட்டீங்க... இப்ப என்னாச்சுன்னு பார்த்தீங்களா? இனிமே நான் இங்க இருக்குறதுல எந்த அர்த்தமும் இல்ல. நான் போறேன்” என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு அவனும் மாடிக்குச் சென்றுவிட்டான்.

“ரஞ்சன்” என்ற ஸ்ரீதரின் அழைப்பை அவன் காதில் வாங்காமல் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். என்ன செய்வது என்று குழம்பிய ஸ்ரீதர், யோசனையுடன் தன்னுடைய அறைக்குள் நுழைய, அங்கே கவிதா பெட்டிகளில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க நீ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“நம்ம இங்கிருந்து கிளம்பிடலாம் ஸ்ரீ.”

“நம்மனா? நான் உன் கூட வரேன்னு சொல்லவே இல்லையே.”

“அந்த ரஞ்சன் கூடத்தான் நீ இருக்கப்போறேன்னா இரு, நான் போறேன்” என்றதும் ஸ்ரீதர் அவள் கையைப் பலமாகப் பிடித்தான்.

“தப்பு என் பேர்லதான்... அவார்ட் ஃபங்க்ஷனுக்கு உன்னை கூப்பிடச் சொன்னது நான்தான்... நீ பக்கத்துல இல்லாம அந்த அவார்ட் வாங்குறதுல எந்த அர்த்தமும் இல்லன்னு அவன் சொன்னான்... அதான் போய் பேசச் சொன்னேன். அவன் மாட்டேன்னுதான் சொன்னான்... நான்தான்...” என்று பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதருக்குப் பயங்கரமாக இருமல் வந்தது.

“ஸ்ரீ... என்னாச்சு ஸ்ரீ?” என்று பதறியவள், உடனடியாகச் செவிலியரை அழைத்து வந்தாள். அவர் சோதித்துக் கொண்டிருக்கும் போதே ஸ்ரீதர் ரத்தமாக வாந்தி எடுத்தான்.

“வெயிட் பண்ணக்கூடாது, ஹாஸ்பிடல் போகணும்” என்றதும் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. “ரஞ்சன்... ரஞ்சன்” என்று கத்திக்கொண்டே மாடிக்கு ஓடினாள்.

அவன் தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு எதிரே வந்தான். அவள் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. “இனிமே உங்க வாழ்க்கைல எப்பவும் வரமாட்டேன்” என்று சொல்லி நகரவும், அவன் கையைத் திருகிப் பிடித்துக் கொண்டாள்.

அவன் அவள் முகம் பார்த்தான். அவள் கண்ணீருடன், “ஸ்ரீயை ஹாஸ்பிடல்ல கூட்டிட்டு போகணும்” என்று சொன்னதுதான் தாமதம், பெட்டியைப் போட்டுவிட்டு ஓடினான்.

உடனடியாக அவனைச் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். ஸ்ரீதரை அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் அழைத்துச் செல்ல, வாசலில் நின்று உடைந்து அழத் தொடங்கினாள் கவிதா.

அவளை எப்படித் தேற்றுவது என்றே ரஞ்சனுக்குத் தெரியவில்லை. அவள் அருகில் சிலையாக நின்றான். சில நிமிடங்களில் அமலா, ராஜேஷ், அஜய் என எல்லோரும் வந்துவிட்டனர்.

ராஜேஷ் மட்டும் உள்ளே சென்று சிகிச்சையளித்த மருத்துவரிடம் பேசிவிட்டுத் திரும்பினான். அவர் முகத்திலிருந்த அவநம்பிக்கையைப் பார்த்து அமலா கதறி அழுதாள். ஏற்கனவே கவிதா அழுது அழுது ஓய்ந்து போயிருந்தாள். அவள் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, “தம்பிக்கிட்ட பேசணுங்க” என்று அமலா அழுதபடி கேட்டாள்.

ராஜேஷ் மருத்துவரிடம் பேசிவிட்டு வந்து, அவர்களை ஒவ்வொருவராக உள்ளே செல்லச் சொன்னார்.

“என்னை மன்னிச்சிடு தம்பி” என்று அமலா தம்பியின் கையைப் பிடித்துக் கதற, “இல்லக்கா... நீதான் என்னை மன்னிக்கணும். என்னாலதான் உன் வாழ்க்கையில எந்தச் சந்தோஷமும் இல்லாம போச்சு... இனிமேயாச்சும் சந்தோஷமா இருக்கணும் கா” என்று மூச்சிரைக்கச் சொல்லிவிட்டு, ராஜேஷை நிமிர்ந்து பார்த்து, “அக்காவைப் பார்த்துக்கோங்க மாமா” என்றான்.

அதன் பின்பு அவன் கண்கள் கவிதாவைத் தேடியதை உணர்ந்த ராஜேஷ், “ஸ்ரீ உன்கிட்ட பேசணுமாம்” என்று அவளிடம் சொன்னார். அவள் அசைவின்றி அமர்ந்திருந்தாள்.

“கவிதா” என்று அஜய் அவள் தோளைத் தொட, “நான் உள்ளே வரமாட்டேன்” என்றாள் மரத்துப் போன குரலில்.

“ப்ளீஸ் வாம்மா” என்று அழைத்தார் ராஜேஷ்.

“உஹும், வரமாட்டேன்.”

“அவன் உன்கிட்ட பேசணும்கிறாடி” என்று அஜய் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

“வரமாட்டேன்னா வரமாட்டேன்... அவனுக்கு என்கிட்ட பேசணும்னா அவனை வெளியே வரச் சொல்லு... நான் உள்ளே வரமாட்டேன், வரமாட்டேன், வரமாட்டேன்!” என்று சத்தமாகக் கதறிவிட்டுத் தலையைச் சாய்த்து முகத்தை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

அதற்கு மேல் அவளைக் கட்டாயப்படுத்த யாராலும் முடியவில்லை. ரஞ்சனும் அஜயும் மட்டும் உள்ளே வருவதைப் பார்த்த ஸ்ரீ, “கவிதா?” என்றான் மூச்சு வாங்க.

“நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவ வரமாட்டேன்னு சொல்றா” என்று அஜய் அவன் கையைப் பிடித்துச் சொல்ல, அத்தனை வலியிலும் ஸ்ரீதரின் உதடுகள் மெலிதாகப் புன்னகைத்தன.

‘பிடிவாதக்காரி’ என்று முணுமுணுத்துவிட்டு ஆதங்கத்துடன் வாயிலைப் பார்த்தான். அவள் முகம் தெரியாதா என்று!

தெரியவில்லை. பின்னர் அஜயை ஏறிட்டு பார்த்தவன்,

“அவங்க அம்மாவோட இறப்பு ஏற்படுத்தின பாதிப்பே இன்னும் அவளுக்குப் போகல... இதுல நானும்...” என்றவன் நீண்டதாக மூச்சை இழுத்துவிட்ட பின்னர், “அதனாலதான் திரும்பவும் அவ தனிமையாகிடக் கூடாதுன்னு ரொம்ப பயந்தேன்” என்று விட்டு மீண்டும் வாயிலை பார்த்தான்.

“உஹும்... என் முடிவையும் யாராலயும் மாத்த முடியாது, அவ முடிவையும் யாராலயும் மாத்த முடியாது”

அவனை வேதனையுடன் பார்த்த அஜய், “நாளைக்கு நம்ம காலேஜ் பிரண்ட்ஸ் எல்லோரும் வர்றாங்கடா... என்ன எல்லாம் பண்றதுன்னு ப்ளேன் எல்லாம் போட்டு வைச்சோமே” என்று சொல்ல, ஸ்ரீதர் உதட்டைப் பிதுக்கினான்.

“Better luck next time” என்று வலியுடன் நகைத்தவன், அடுத்து ரஞ்சனைப் பார்த்து அருகே வரும்படி சைகை செய்தான்.

“ஐம் சாரி ஸ்ரீ” என்று ரஞ்சன் குலுங்கி குலுங்கி அழ, “நீ கில்டி ஆக வேண்டிய அவசியம் இல்ல... இது உன்னால எல்லாம் இல்ல” என்று சொல்லிவிட்டு, “நான் சொல்றதை மட்டும் கவிதாகிட்ட சொல்லிடுறியா?” என்று கேட்டான்.

“சொல்லுங்க.”

“ஐ... லவ்... யூன்னு சொன்...னேன்னு சொல்லிடு...” என்று அந்த ஒவ்வொரு வார்த்தையும் உயிரை இழுத்துப் பிடித்துக்கொண்டு அவன் பேசி முடிக்க, ரஞ்சனுக்கு வெடித்து அழ வேண்டும் போலானது.

அழுதுவிடாமல் இருக்கத் தன் உதட்டை அழுத்தி கடித்துக்கொண்டவன், தலையை மட்டும் அசைத்து வைத்தான். அடுத்த நொடி, ஸ்ரீதரின் மூச்சுத் திணறல் அடங்கி உயிர்க் காற்று பிரிந்திருந்தது.

அவன் கண்கள் அசைவற்று நின்றுவிட, அந்த அறையிலிருந்த அத்தனை பேரும் கதறினர்.

வெளியே அவர்களின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட கவிதா, உண்மை தெரிந்து அப்படியே வாயைப் பொத்திக்கொண்டு விம்மினாள்.

 

You cannot copy content