You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Amara - Episode 1

Quote

அமரா

1

பதினைந்து வருடங்களுக்கு முன்பு…

பாலமுருகன் ஐ.பி.எஸ். தன்னுடைய அலுவலக அறையில் அமர்ந்தபடி, “வாங்க ஆல்வின்… இப்பதான் கமிஷ்னர் உங்க விஷயமா பேசுனாரு…” என்றார்.

ஆறரை அடி உயரமான முப்பது வயது மதிக்கத்தக்க கம்பீரமான இளைஞன் அந்த அறைக்குள் நுழைந்தான். பழுப்பு நிற கண்களும் சற்றே கருத்த மேனியனுமாக இருந்தவனின் முகத்தில் வெளிநாட்டு சாயல் கலந்திருந்தது.

 மேலும் அந்த இளைஞனின் கண்களில் ஆழமான சோகம் படர்ந்திருக்க அதனை கவனித்தபடியே, “உட்காருங்க… கம்ப்ளையின்ட் எழுதி எடுத்து வந்திருக்கீங்களா?” என்று விசாரித்தார் பாலமுருகன்.

அவன் எதிர் இருக்கையில் அமர்ந்துவிட்டு தான் எடுத்து வந்திருந்த புகாரினையும் அதனுடன் இருந்த புகைப்படத்தையும் நீட்டினான்.

புகாரை வாங்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு அதிலிருந்து புகைப்படத்தை உற்று நோக்கினார் பாலமுருகன். குண்டு குண்டு கன்னங்களும்… முத்து பற்களும் தெரிய அழகாய் சிரித்திருந்த அந்தச் சிறுமியின் முகத்தைக் காணுகையில் பாலமுருகனின் மனம் பிசைந்தது.

‘அமரா’ என்று புகாரிலிருந்த பெயரைப் படித்தவர் ஆல்வினை நிமிர்ந்து பார்க்க, அவன் வருத்தத்துடன் பேசத் தொடங்கினான்.

“சார் அவளுக்கு ஆறு வயசுதான் ஆகுது… அவங்க அம்மா” என்று ஏதோ சொல்ல வந்தவன் துக்கம் தொண்டையை அடைக்கப் பேச முடியாமல் கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டான்.

பாலமுருகன் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து, “தண்ணிக் குடிச்சிட்டு… நிதானமா சொல்லுங்க… என்ன நடந்துச்சு?” என்று அவனை ஆசுவாசப்படுத்திப் பேச வைத்தார்.

“ஒரு வாரமா என் பொண்ணு அமராவைக் காணோம் சார்… எங்கே தேடியும் கிடைக்கல” பேசும் போதே அவன் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது.

“அழாம... பொறுமையா பேசுங்க ஆல்வின்” என்று சொன்ன பாலமுருகன், “நீங்க யூ எஸ் சிட்டிசனு போட்டிருக்கு… இங்கே யார் இருக்கா? நீங்க ஏன் சென்னைக்கு வந்தீங்க? எப்படி குழந்தை தொலைஞ்சுது… எல்லாத்தையும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” என்று விவரமாக கேட்டார்.

“சார்… எங்களுக்கு பூர்விகம் இந்தியாதான்… ஆனா எங்க தாத்தா அங்கே போய் செட்டிலாகிட்டாரு… அதுக்கு அப்புறம் நாங்க எல்லாம் அங்கேதான் இருக்கோம்… என் மனைவி பேர் அமுதா… அவளுக்கு அம்மா அப்பா கிடையாது.

சென்னையில இருக்க அமரஜோதி ட்ரஸ்ட்லதான் படிச்சு வளர்ந்தா… ஷி இஸ் வெரி பிரில்லியண்ட்… நான் வேலை பார்த்துட்டு இருந்த ரிசர்ச் சென்டர்ல அவளுக்கும் ஆஃபர்கிடைச்சு யு எஸ் வந்துட்டா

அங்கேதான் இரண்டு பேரும் மீட் பண்ணோம்… அப்புறம் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்… எங்களோட ஒரே மகதான் அமரா… இந்த அக்டோபர் மாசம்தான் அவளோட பர்த்டே .

பாப்பாவோட பர்த்டேவை அமுதா அவ வளர்ந்த ஆசிரமத்துல கொண்டாடணும்னு  நினைச்சிட்டு இருந்தா… அதுக்குதான் அவளும் பாப்பாவும் சென்னை வந்தாங்க” என்றவர் தொடர்ச்சியாக நடந்தவற்றை சொல்லிக் கொண்டிருக்க,

“நீங்க வரலையா?” என்று இடையில் நிறுத்திக் கேட்டார் பாலமுருகன்.

“கொஞ்சம் வொர்க் இருந்தது… நான் வேலையை முடிச்சிட்டு சென்னை வந்து பாப்பாவோட பர்த்டே அன்னைக்கு ஜாயின் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்… ஆனா அதுக்குள்ள” என்றவன் மேலே அந்தச் சம்பவத்தை தொடர முடியாமல் தவிக்க,

“சொல்லுங்க ஆல்வின்… அப்புறம் என்னாச்சு… பாப்பா எப்படி காணாம போனா?” என்று கேட்டார்.

“என் மனைவி ட்ரைன் ஆக்சிடென்ட்ல இறந்துட்டா… அன்னைக்குதான் குழந்தையும் எங்கேயோ மிஸ் ஆகி இருக்கு”

“ஓ மை காட்” என்று அதிர்ந்த பாலமுருகன், “எப்படி… எந்த ஸ்டேஷன்ல இது நடந்துச்சு… இரயில்வே போலீஸ்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிங்களா?” கேட்டார்.

“பெரம்பூர் ஸ்டேஷன் சார்… ட்ரைன் ஏறும் போது மிஸ்ஸாகி விழுந்துட்டதா சொன்னாங்க… இரயில்வே போலீஸ்லயும் கம்பிளைன்ட் பண்ணிட்டேன்… பாப்பா கிடைக்கல… இங்க எனக்குப் பெருசா ரிலேட்டிவ்ஸ் ஃபிரண்ட்ஸ்னு யாரும் கிடையாது… இருக்கிறவங்க யார் கூடவும் பெருசா கான்டெக்ட் இல்ல… அமுதாவோட ஆசிரமத்தை நடத்துற கணேசன் சார்தான் இப்போ கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்காரு.

பைத்தியக்காரன் மாதிரி ஒரு வாரமா என் பொண்ணைத் தேடி ரோடு ரோடா அலைஞ்சிட்டிருக்கேன்… அவ கிடைக்கவே இல்ல சார்” இந்த வார்த்தைகளைச் சொல்லும் போது அவன் குரல் உடைந்தது.

“எனக்கு ஒன்னுமே புரியல… நான் செத்து போன என் மனைவிக்காக அழுவேனா இல்ல தொலைஞ்சு போன என் குழந்தைக்காக அழுவேனா” என்று அவன் சொல்லிவிட்டு மீண்டும் முகத்தை மூடிக் குலுங்கிக் குலுங்கி அழ பாலமுருகனும் அவன் சொல்வதைக் கேட்டு  வேதனையடைந்தார்.

“கவலைப்படாதீங்க ஆல்வின்… எப்படியாவது உங்க குழந்தையைக் கண்டுபிடிச்சிடுறோம்” என்றபடி அவர் உடனடியாகத் தொலைப்பேசி எடுத்து சில ஆணைகளைப் பிறப்பித்தார்.

ஆல்வின் அவரிடம் மீண்டும் வேண்டுதலாக தன் மகளை எப்படியாவது கண்டுபிடித்து தரும்படி கேட்டுவிட்டுச் செல்ல, பாலமுருகன் அந்தக் குழந்தையின் படத்தைப் பார்த்தார்.

ஆல்வினுக்கு தைரியம் சொல்லி அனுப்பிவிட்ட போதும் இந்தக் குழந்தை திரும்பி கிடைப்பதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவாக இருப்பதாகவே அவருக்குத் தோன்றியது. எனினும் அவர் தன்னால் இயன்ற முயற்சியைச் செய்தார்.

குழந்தைகளை வைத்து கொண்டு பிச்சை எடுக்கும் கோஷ்டிகள், குழந்தைகளைக் கடத்தும் கோஷ்டிகள் என்று தமிழகத்தில் இப்படியாகச் சுற்றிக் கொண்டிருக்கும் கூட்டங்களைக் கட்டம் கட்டித் துரத்தித் துரத்தி விசாரித்தது அவரின் குழு. இந்த விசாரணையில் நிறைய குழந்தைகளை மீட்டுடெடுத்த போதும் அமராவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இரயில் நிலையத்தில் தொலைந்து போனதால் வேறேதாவது ஊருக்குப் பயணித்து சென்றிருக்க கூடும். அவ்வாறு சென்றிருந்தால் அவர்களின் தேடல் இன்னும் சிரமமாக இருக்கும். அதுவே வெளி மாநிலமாக இருந்தால் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்புகள் அரிதுதான்.

சில மாதத்திற்குப் பிறகு அமரா தொலைந்து போன வழக்கும் தொலைந்து போனது. ஆனால் ஆல்வின் மட்டும் விடாமல் பாலமுருகனைத் துரத்திக் கொண்டே இருந்தான். மாதத்திற்கு ஒரு முறையாவது அவரை அழைத்துப் பேசிவிடுவான். சில நேரங்களில் அவர் எங்கே இருந்தாலும் நேரில் வந்து சந்தித்தாவது தன் குழந்தை கிடைத்துவிட்டதா என்று கேட்டுச் செல்வான்.

இந்தியா முழுக்க உள்ள ஆசிரமங்கள் குழந்தை கடத்தல் கும்பல்கள் என்று ஒவ்வொரு நாளும் அவன் தன் மகளைத் தேடி அலைந்தான். விபசார விடுதிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்திலிருந்து அழைத்துப் பேசுவான்.

‘இங்கேயும் என் மக இல்ல சார்’ அவன் வார்த்தையில் தெரிந்த வலியும் ஏமாற்றமும் அவரைக் குற்றவுணர்வில் தள்ளிவிடும்.

குழந்தை கடத்தல்கள் கும்பல் தமிழகத்தில் எந்த ஊரில் சிக்கினாலும் அமராவைப் பற்றி அவர்களைத் தேடிச் சென்று விசாரித்து வருவார். ஆனால் இன்று வரை ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை. 

ஒரு வேளை அமரா உயிருடன் இருந்தால் இன்று அவள் ஒரு அழகான பருவ வயது பெண்ணாக வளர்ந்திருக்க கூடும்.

இன்னும் ஒரு மாதத்தில் பாலமுருகனின் பதவிகாலம் முடிய இருந்தது.

விடியற்காலை உடற்பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருந்த பாலமுருகனை அவரது கைப்பேசி ரீங்காரிமிட்டு அழைக்க அவர் தன் ஓட்டத்தை நிறுத்திவிட்டு மூச்சு வாங்க அதனை எடுத்துப் பார்த்தார்.

‘ஆல்வின் காலிங்’

அவர் முகம் கவலையில் சுருண்டது. ஒரு வேளை மகள் கிடைத்துவிட்டால் என்ற செய்தியாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழ அழைப்பை ஏற்றுப் பேசினார்.

“சொல்லு ஆல்வின்” என்று ஆரம்பிக்க,

“உங்களை நான் ஒன்னும் தொந்தரவு பண்ணிடலயே” என்றவன் கேட்க,

“இல்ல இல்ல ஜாகிங் போய்ட்டு இருந்தேன் சொல்லு… போன தடவை கூட சவுதில இருக்க ஏதோ குழந்தை கடத்தல் கும்பலைத் தேடிப் போறேன்னு சொன்ன… அமரா பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா?” என்று வினவினார்.

“உஹும் இல்ல சார்… ஆனா இந்தியாவில இருந்து கடத்தப்பட்ட நிறைய குழந்தைகள் அங்கே இருக்காங்க… அந்தக் குழந்தைங்களை டார்ச்சர் பண்றாங்க சார்…. பந்தயம் கட்டி ஓட்டகத்துல இழுத்துட்டு போய்… பார்க்கவே முடியல” என்றவன் இயலாமையுடன் சொல்ல, பாலமுருகன் அமைதி காத்தார்.

“சார்”

“இதெல்லாம் எனக்குத் தெரியும்… நாங்களும் எங்களால முடிந்தளவு குழந்தை கடத்தல்களைத் தடுக்க முயற்சி செஞ்சிட்டுதான் இருக்கோம்… ஆனா அதுக்கு மேல”

“எனக்குப் புரியது சார்… உங்க வேலையல நிறைய லிமிடேஷன்ஸ் பிரஸர்ஸ் இருக்குன்னு எனக்குத் தெரியும்”

“ம்ம்ம்ம்” என்று பெருமூச்செறிந்தவர்,

“சரி நீ ஏதோ ஹெல்ப்னு கேட்டியே அதைச் சொல்லு” என்றார்.

“ஆக்சுவலி அமராவோட ஐந்து வயசு ஃபோட்டோ வைச்சு ஒரு கிராபிக்ஸ் எக்ஸ்பர்ட் மூலமா இந்த வயசுல அவ எப்படி இருப்பான்னு மூணு வகையான  ஃபோட்டோஸ் டிசைன் பண்ணி வாங்கி இருக்கேன்…” என்றவன் சொல்லிக் கொண்டிருக்க,

“நிஜமாவா ஆல்வின்” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

“இப்போ இந்த மாதிரி நிறைய டெக்னாலஜி வந்திருச்சு… எனக்கே என் மகளோட முகத்தைப் பார்த்து ஆச்சரியமா இருக்கு… அவளை எப்படியாவது நேர்ல பார்த்துடணும்னு ஆசையாவும் இருக்கு” என்றவன் சொல்லும் போது ஒரு தந்தையின் வலியையும் ஏக்கத்தையும் பாலமுருகன் உணர,

ஆல்வின் மேலும், “சார் நான் அந்த ஃபோட்டோவை உங்களுக்கு அனுப்புறேன்… நீங்க தமிழ் நாட்டோட ஐடன்டிஸ்ல மேட்ச் பண்ணி அமரா பத்தி ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பார்க்க முடியுமா?” என்று கேட்டான்.

“கண்டிப்பா ஆல்வின்… நீ உடனே அந்த டிசைன் பண்ண ஃபோட்டோவை எனக்கு அனுப்பிவிடு” என்றார்.

“தாங்க்ஸ் சார்… தாங் யூ ஸோ மச்… நான் இப்பவே அனுப்பி விடுறேன்” என், அவரும் சரியென்று இணைப்பைத் துண்டித்தார்.

அதற்கு பிறகு தன்னுடைய ஓட்டத்தை நடைப்பயிற்சியாக மாற்றிக் கொண்டு மெல்ல நடந்து வீடு வந்து சேர்ந்தார்.

“என்னங்க இன்னைக்கு லேட் ஆகிடுச்சு… வழில யாராவது ஃப்ரண்டைப் பார்த்திங்களா என்ன?” என்று அவர் மனைவி கீதா கேட்க, அவர் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக வந்து சோஃபாவில் அமர்ந்துவிட்டார்.

துவலை எடுத்து நீட்டியபடி, “எப்பவுமே ஜாக்கிங் போயிட்டு வந்தா அப்படியே உற்சாகமா வருவீங்க… இன்னைக்கு என்னாச்சு?” என்று கேட்டார் கீதா.

மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர், “ஆல்வின் கால் பண்ணி இருந்தான்” என்று சொல்ல கீதா உடனே,

“அவன் பொண்ணு கிடைச்சிடுச்சாமா?” என்று கேட்டார்.

அவர் இல்லையென்பது போல தலையசைக்க கீதா ஏமாற்றத்துடன், “பாவங்க அந்தப் பையன்… எவ்வளவுதான் அவனும் தேடி அலைவான்” என,

“பையனா… இன்னைக்கு அவனுக்கு நாற்பது அஞ்சு வயசு இருக்கும்… அவன் பொண்ணை முப்பது வயசுல தேட ஆரம்பிச்சான்… அவனுக்கு இப்போ வயசம் போச்சு… வாழ்க்கையும் போச்சு… ஆனா இன்னும் அவன் தேடுறதை நிறுத்திக்கவே இல்ல.

என்ன மனுஷன் இவன்னு எனக்கு ஒவ்வொரு நாளும் ஆச்சரியமா இருக்கு… வேற யாராவதா இருந்தா மூணு நாலு வருஷம் தேடிட்டு வேற ஒரு கல்யாணம் பண்ணிட்டு வாழ ஆரம்பிச்சிருப்பாங்க… ஆனா ஆல்வின்” என்றவர் ஆச்சரியத்துடன் நிறுத்த,

“என்ன இப்படி பேசுறீங்க… ஒரு வேளை நமக்கு ஒரு பொண்ணு இருந்து அவ காணாம போயிருந்தா நீங்க தேடுறதை நிறுத்திடுவீங்களா?” என்று கேட்டார்.

“உண்மையைச் சொல்லணும்னா ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல நிறுத்தி இருப்பேன் கீதா… நம்பிக்கையை இழந்திருப்பேன்… இதுக்கு மேல முடியாதுன்னு அடுத்த வேலையைப் பார்க்க போயிருப்பேன்… ஆனா ஆல்வின்… எந்த நம்பிக்கைல பதினைஞ்சு வருஷமா தேடி அலைஞ்சிட்டு இருக்கான்னு எனக்குப் புரியல… ஒரு வேளை அந்தப் பொண்ணு உயிரோட இருக்கோ இல்லையோ?” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“ஏன் இப்படி அபசகுனமா யோசிக்கிறீங்க… ஒரு வேளை அந்தப் பொண்ணை யாராச்சும் கூட்டிட்டுப் போய் நல்லபடியா வளர்த்திருப்பாங்கன்னு யோசிங்களேன்” என்றார்.

“நான் ஆல்வினை சமாதானப்படுத்த இப்படி கூட சொல்லி பார்த்ததேன்… ஆனா அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? என் பொண்ணு எங்கே இருந்தாலும் எப்படி இருந்தாலும்  நான் சாகிறதுக்குள்ள ஒரு தடவையாவது அவளைப் பார்த்திடணும்னு... தான் பிடிச்ச பிடியில நிற்குறான்”

“கண்டிப்பா பார்ப்பான்… எனக்கு நம்பிக்கை இருக்கு… முயற்சி எப்பவும் வீண் போகாது” என்று கீதா சொல்லும் போது அவருடைய கைப்பேசி அழைத்தது.

“ஹரிதான் கூப்பிடுறான்… நான் பேசிட்டு வந்துடுறேன்… நீங்க கிளம்பி ரெடியாகுங்க” என்று சொல்லியபடி எழுந்து கொள்ள பாலமுருகனால் ஏனோ இயல்பு நிலைக்கு வர முடியவில்லை. தன் கைப்பேசியை உற்றுப் பார்த்து கொண்டிருந்தார்.

ஆல்வின் அனுப்ப போகும் அமராவின் புகைப்படங்களுக்காகக் காத்திருந்தார். 

கீதா தன் உரையாடலை முடித்துவிட்டு திரும்பி வரும் போது கணவர் அப்படியே அமர்ந்திருப்பதைப் பார்த்து, “என்னங்க அப்படியே ஃபோனைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கீங்க… ட்யூட்டிக்குக் கிளம்புலையா?” என்று கேட்க,

“இல்ல … ஆல்வின் அவன் பொண்ணு இப்ப எப்படி இருப்பானு கிராபிக்ஸ்ல டிசைன் பண்ண ஃபோட்டோஸ் அனுப்புறேன் சொன்னான்… அதான் பார்த்திட்டு இருக்கேன்” என்றவர் மனைவியை நிமிர்ந்து பார்த்து,

“சரி… ஹரி என்ன சொன்னான்… வேலையெல்லாம் முடிஞ்சுடுச்சா… எப்போ உன் பையன் லண்டனில இருந்து வரானாம்” என்றவர் கேட்டுக் கொண்டே எழ,

“இன்னும் ஷூட்டிங் முடியலயாம்… இழுத்துட்டே போகுதாம்… ஆனா உங்களோட ரிடையர்மெண்ட் பங்கஷனுக்குள்ள எப்படியாவது முடிச்சிட்டு வந்துடுவேன்னு சொன்னான்… அப்புறம்” என்று இழுக்க, 

“அப்புறம் என்ன?” என்று கேட்டார்.

“இல்ல… ஒன்னும் இல்ல” என்று கீதா சொல்ல பாலமுருகன், “சரி… நான் ரெடியாகுறேன்… லேட்டாயிடுச்சு” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட கீதா தன் கைப்பேசியை பார்த்தார். அதிலிருந்த பெண்ணின் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேஜை மீதிருந்த பாலமுருகனின் கைப்பேசியில் குறுந்தகவல் அறிவிப்பு வந்தது.

கீதா யோசனையுடன் அதனை எடுத்துப் பார்த்தார்.

ஆல்வின் அனுப்பியிருந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வரிசைக்கட்டி வந்தன. அவற்றை திறந்தவர் முதலில் அதிர்ந்துவிட்டு பின் மகன் தன்னுடைய பேசிக்கு அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தார்.

இரண்டையும் ஒத்துப் பார்த்த போது ஒரே மாதிரியான ஜாடையில் இருந்தது.

ஹரி லண்டனில் வசிக்கும் தமிழ் பெண் ஒருத்தி மீது காதல் வயப்பட்டுவிட்டதாகச் சொல்லி அனுப்பிய படம்தான் அது.

ஒரு வேளை இவள்தான் தொலைந்து போன அந்தப் பெண் அமராவோ?

கீதா குழம்பியபடி அமர்ந்துவிட்டார்.

தொடரும் ...

Quote
  1.  
monisha has reacted to this post.
monisha

You cannot copy content