You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 10

Quote

10

வரும் பதினெட்டாம் தேதி

ஆதித்தியா!

நிமிர்ந்த நடையோடும், மின்னலென வேகத்தோடும் சந்திரகாந்தின் அறைக்குள் நுழைந்தான். அவனின் வேகத்துக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் பின்னோடு ஆதியின் நெருங்கிய நண்பன் சமுத்திரனும் வந்தான்.

சந்திரகாந்த் அவர்கள் இருவரையும் அமரச் சொல்ல, ஆதித்தியா மட்டும் அந்த இடத்திற்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லாதவன் போல் நின்று கொண்டிருந்தான்.

நிமிர்ந்து பார்க்க செய்யும் உயரமும், அவனின் உடலமைப்பை பளிச்சென்று காட்டும் டீ ஷர்ட்டும், அவன் அதில் மாட்டியிருந்த கூலிங் கிளாஸும், ஸ்டைலாக நிற்கும் தோரணையும் அவனின் ஆண்மையை மட்டுமல்ல அவனுடைய திமிரையும் பறைசாற்றியது.

சந்திரகாந்த் ஆதியை சிறிதளவும் கவனிக்காமல் சமுத்திரன் முகத்தைப் பார்த்தபடியே வினவினார்.

“வீட்டில் சுபா உன் ரெண்டு வாலு பசங்களும் நல்லா இருக்காங்களா?” என்று சந்திரகாந்த் சமுத்திரனை விசாரித்தார்.

“ம்... ரொம்ப நல்லா இருக்காங்கப்பா” என்றான் சமுத்திரன் புன்னகை அரும்பிய முகத்தோடு.

“நீயும் பிஸியா இருக்க... அவனையும் பிடிக்க முடியல... சோ நானே இன்விடேஷன் மாடலை சூஸ் பண்ணிட்டேன்” என்று சொல்லி இன்விடேஷனை சமுத்திரன் கையில் காட்டினார்.

அதில் ‘ஆதித்தியா வித் மதுமிதா’ என்று அச்சிடப்பட்டிருந்ததை சமுத்திரன் கவனித்தான். ஆதியின் முகம் கடுகடுவென மாறியது.

சந்திரகாந்த் பேசிக் கொண்டிருப்பதைப் பொருட்படுத்தாமல் அந்த அறையை விட்டு வெளியேறினான்.

ஆதித்தியாவின் செயலால் கோபமான சந்திரகாந்த்தை சமுத்திரன் முடிந்தளவு சமாதானம் செய்தான். ஆதியின் அனுமதியின்றி அவனுக்குத் திருமணம் ஏற்பாடுகள் செய்தது தவறென்று சந்திரகாந்த்துக்குத் தெரிந்த போதும், அதில் அவருக்கான சில நியாயங்கள் இருப்பதைச் சமுத்திரனிடம் புரிய வைத்தார்.

நாளுக்கு நாள் அவனுடைய பொறுப்பின்மை வளர்ந்து கொண்டே போவதால் இதுதான் சரியான முடிவு என்று அவர் கருத, சமுத்திரனும் ஆதித்தியாவை திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கும் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி வெளியேறினான்.

சிறிது நேரத்தில் வெளியே கோபத்தின் உச்சத்தில் நின்றிருந்த ஆதித்தியாவின் தோள் மேல் சமுத்திரன் கை வைத்தான்.

“என்ன ஆதி இது? இப்படியா அப்பா பேசிட்டிருக்கும் போதே மேனர்ஸ் இல்லாம...” என்று அவன் பேசி முடிக்கும் முன்னரே தன் கூரிய விழிகளால் ஆதி சமுத்திரனை முறைத்தான்.

“என்னோட என்கேஜ்மன்ட்டை என்னோட அனுமதி இல்லாம மிஸ்டர் சந்திரகாந்த் டிசைட் பண்றதுதான் மேனர்ஸா சமுத்திரா?“ என்றான் ஆதி.

“கமான் ஆதி... விஜய் குரூப் ஆஃப் இன்டஸ்ட்டிரீஸோட ஓரே மகள் மதுமிதா. ஸ்டேட்ஸிலிருந்து எம். எஸ் முடிச்சிட்டு நாளைக்கு வர்றா”

ஆதி சிரித்தபடி “கேல்குலேட்டிவா இருந்தா அது பிஸ்னஸ்... லைஃப் இல்ல. பொண்ணுங்க லைஃப்ல இருந்தா இன்டிரஸ்டிங்... பட் ஒரே பெண்ணே லைஃபா மாறிட்டா இட்ஸ் டிஸ்கஸ்டிங்” என்றான்.

“அப்போ என்ன செய்யலாம்... அப்பாகிட்ட உனக்கு விருப்பமில்லனு சொல்லிடுவோம்” என்றான் சமுத்திரன்.

“வேண்டாம்... என்னைக் கேட்காம பிஃக்ஸ் பண்ணாரில்ல... இந்த என்கேஜ்மென்ட் தானா நிக்கனும்... மிஸ்டர். சந்திரகாந்த் கில்டியா ஃபீல் பண்ணனும்” என்று ஆதி ஏதோ உள்நோக்கத்தோடு சொல்ல சமுத்திரன் யோசனையில் ஆழ்ந்தான்.

ஆதி மேலும் சமுத்திரனை நோக்கி, “ஏன்டா… நீ பெரிய கிரிமனல் லாயர்தானே... என்கேஜ்மென்ட்டை ஸ்டாப் பண்ண ஒரு ஐடியா கொடேன்”

“நோ வே... அப்பாகிட்ட சிக்கிட்டா அவ்வளவுதான்” என்று சமுத்திரன் தயங்கினான். சட்டென்று ஆதித்தியா ஏதோ ஞாபகம் வந்தவனாக

“நீ என்ன சொன்ன?” என்று சமுத்திரனிடம் கேள்வி எழுப்பினான்.

“நோ வேனு சொன்னேன்” என்றான் சமுத்திரன்.

“அது இல்ல... நாளைக்கு... வாட்ஸ் ஹெர் நேம்... எஸ்... மதுமிதா... ஷீ இஸ் ரிடனிங் டு சென்னை ரைட்?” என்று சொல்லி மனதில் ஏதோ ஒரு திட்டத்தை வகுத்தான்.

“என்னடா... என்ன செய்யப் போற?”

“வெயிட் அன் வாட்ச்” என்றான் ஆதி.

இருவரும் அங்கிருந்து கொஞ்சம் தொலைவு வந்தவுடன் ஆதி அப்படியே சிலை போல் நின்றுவிட்டான்.

“வாட்... ஆதி?” என்று சமுத்திரன் அவன் அருகில் நின்றான்.

“இங்கதான் ஒரு பொண்ணு என்னை இடிச்சிட்டுப பாஸ் ஆகிட்டா... சாரியும் கேட்டா... பட் டென்ஷனில் அவ முகத்தைப் பார்க்க மிஸ் பண்ணிட்டேன்” என்றான் ஆதி அவள் முகத்தை நினைவுபடுத்தியபடி.

“இப்ப அது ரொம்ப முக்கியமா?”

“நானா யோசிக்கல சமுத்திரா... தானா தோணுது. நின்னு அவ முகத்தைப் பார்த்திருக்கணும்” என்று ஆதி சொல்ல மின்னலென அந்த நிகழ்வு அவன் மனதில் தோன்றி மறைந்தது.

“நல்ல வேளை நீ அவள பார்க்கல... இல்லாட்டி போனா நீ அந்தப் பொண்ணு பின்னாடி போயிருப்ப... அப்புறம் நான் வேற உன்னைத் தேடணும்”

“இத்தனை வருஷமா நீ என் கூட இருக்க. இன்னும் நீ என்னைப் புரிஞ்சிக்கலயே... பெண்கள் எப்பவும் நம்ம பின்னாடி வரணும் சமுத்திரா... நாம அவங்க பின்னாடி போகக் கூடாது” என்று ஆதி சமுத்திரனிடம் சொல்லும் போது அவனுடைய ஆண்மையின் திமிரும் ஆணவமும் கொஞ்சம் அதிகமாகவே தலைதூக்கியது.

“உன்னைத் திருத்தவே முடியாது” என்று சமுத்திரன் முன்னாடி நடக்க, ஆதியும் அவனின் பின்னோடு சென்றான்.

அவன் பார்க்க முடியாமல் போனதாக வருத்தப்படும், அந்த முகம் தெரியாத அவளைச் சந்திக்கும் தருணத்தில் நம் கதாநாயகனின் தலைக்கணம் நிச்சயம் தரைமட்டமாகப் போகிறது.

இங்கே நாம் ஆதியை கவனித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் அங்கே விந்தியா பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டிருந்தாள்.

மாப்பிள்ளை கிருஷ்ண குமார் அவளின் எதிரே நின்று கொண்டு அவனுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க கதைகளைக் கூறிக் கொண்டிருந்தான். போதாக் குறைக்கு அவளின் படிப்பு, சம்பளம் பற்றிக் குடைந்து குடைந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமா என்பது பற்றி அவன் சிறிதும் கவலை கொள்ளவில்லை. கடைசியாக அவன் பேசி முடித்தபின் அவள் அவனிடம் பெருமூச்சுவிட்டபடி,

“சோ சாரி... மிஸ்டர். கிருஷ்ண குமார். இதுதான் என்னோட உலகம்... ஐ வான்ட் டு பி இன் இந்தியா... எனக்கு லண்டனில் வாழ துளி கூட விருப்பமில்லை” என்று விந்தியா ஒருவித அலட்சிய தொனியில் உரைத்தாள்.

விந்தியா இப்படிச் சொல்லவும் அவன் ஷாக்கடித்ததைப் போல நின்றுவிட்டான். பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டவனாய்...

“நீங்க கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.

‘லூசா இருப்பானோ? நாம தெளிவாதானே சொன்னோம்... அப்புறம் எதுக்கு என்னை யோசிக்கச் சொல்றான்’ என்று விந்தியா குழம்பினாள்.

இப்படி விந்தியா எண்ணமிட்டுக் கொண்டிருக்க ஒவ்வொருவராக அவள் மீது படையெடுத்து வந்தனர். முதலில் அவளுடைய அம்மா கண்ணீரால் மிரட்டினாள். வருண் வயதுக்கு மீறிப் பேசினான்.

வனிதாவோ சிவாவை நினைவில் வைத்துக் கொண்டுதான் அவள் திருமணத்தை நிராகரிக்கிறாளோ என சந்தேகத்தோடு பார்த்துவிட்டு போனாள். அவளை ஒரு குற்றவாளியை போலவே பாவித்தனர்.

திருமணத்திற்கான முடிவை எடுப்பது அவளுடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று யாருக்கும் புரியவில்லை. அவளின் அம்மா உட்பட. வீட்டில் நடப்பவை எல்லாம் விந்தியாவை திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கும் நோக்கத்திலேயே நடந்தது.

அவர்கள் கிருஷ்ண குமாரை மாப்பிள்ளையாக முடிவெடுத்து விட்டு அந்த முடிவை விந்தியாவின் மீது திணித்தனர்.

வேறு வழியின்றி வீட்டாரின் விருப்பத்திற்காக விந்தியா திருமணத்திற்கு சம்மதிக்க நேரிட்டது. அவள் விருப்பமின்றி சம்மதம் சொன்னதைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் அதனைக் கொண்டாடினர்.

கிருஷ்ணகுமாருக்கு உடனே லண்டன் புறப்பட வேண்டி இருப்பதால் அவசர அவசரமாக நிச்சியதார்த்த ஏற்பாடுகள் நடைப்பெற்றன. வரும் பதினெட்டாம் தேதி நிச்சியதார்த்தம் என முடிவு செய்யப்பட்டது.

அந்த தேதி சந்திரகாந்த் அழைப்பிதழில் இருந்த தேதி என்பதை விந்தியா நினைவுப்படுத்திக் கொண்டாள். அந்த அழைப்பிற்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தமுற்றாள்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content