You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 24

Quote

24

லாக்கர் எண்

விந்தியா ஆதித்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

அதே அறையில் இருந்த போதும் விந்தியா அவனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஆதித்தியா தான் பல பெண்களை நிராகரித்ததின் பலனாகவே விந்தியா தனக்கு வாய்த்திருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டான்.

விந்தியா ஹோட்டலுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருக்க ஆதித்தியாவும் எத்தனையோ விதமாய் அவள் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தான்.

“ஏய்... நான் உன் கண்ணுக்கு தெரிகிறேனா இல்லையா... ஹாலோமேன் மாதிரி மறைஞ்சிட்டேனோ?” என்று ஆதித்தியா கண்ணாடியை பார்த்து உடையைச் சரி செய்து கொண்டிருந்த விந்தியாவின் பின்னோடு நின்று கேட்டான்.

அவனின் எந்தச் செயலையும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தாள். விந்தியா தன் தோள் பையை மாட்டிக் கொண்டு அறைக்கு வெளியே செல்ல அவளின் முந்தானை மாட்டிக் கொண்ட உணர்வில் திரும்பி பார்த்தாள்.

இம்முறை அது ஆதித்தியாவின் கையில் சிக்கி கொண்டிருந்தது. அவள் எரிச்சலோடு முந்தானையை இழுக்க அவனின் பிடிப்பு இறுக்கமானது.

“என் மேல உனக்கு கோபமாய் இருந்தால் இரண்டு அடி கூட அடிச்சிடுடி... இப்படியெல்லாம் பண்ணாதே... ஆனா கையாலதான் அடிக்கணும்” என்றான்.

விந்தியா இம்முறையும் அவன் பேச்சை கவனிக்காமல் புடவையை உதறிக் கொண்டு படிக்கெட்டுகளில் இறங்கி வர, ஹாலில் அமர்ந்திருந்த மாதவி, வருண், நந்தினியை பார்த்து சிலையாய் அங்கேயே நின்றுவிட்டாள்.

பின்னோடு வந்த ஆதித்தியாவும் விந்தியாவின் அருகில் வந்து நின்றான். ஆதித்தியாவிற்கு வந்தவர்களைப் பார்த்தவுடன் கண்களில் குறும்புத்தனம் தெரிந்தது.

“என்னோட குட் டைம்... உன்னோட பேட் டைம்” என்று சொல்லி விந்தியாவின் தோள்களை அணைத்தபடி அவளைக் கீழே அழைத்து வந்தான்.

மாதவி புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க அவன் பிடியை விலக்கி விட முடியாமல் தவித்தபடி விந்தியா இறங்கி வந்தாள். அவர்களை நெருங்கியதும் அவன் பிடியிலிருந்து விலகி, மாதவியை அணைத்துக்கொண்டாள்.

சண்முகம் வந்தவர்களுக்குக் காபி கொண்டு வந்தான்.

விந்தியாவின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கொண்டிருந்த ஆதியை பார்த்து,

“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?“ என்றாள் மாதவி.

“உங்க பொண்ணோட கவனிப்பில் ரொம்ப நல்லா இருக்கேன்” என்றான்

எல்லோரின் முகமும் அவன் பதிலில் மலர்ந்தது விந்தியாவைத் தவிர. எல்லோரும் ஆதியை நலம் விசாரிக்க விந்தியா நந்தினியை பார்த்து,

“என் தம்பி உன்னை நல்லா பாத்துக்கிறானா?” என்றாள்.

“ஏதோ பாத்துக்கிறாரு. ஆனா வார்த்தைக்கு வார்த்தை எது செய்தாலும் அக்கா இப்படி... அக்கா அப்படினு... ஓயாம அக்கா புராணம்தான்” என்றாள் நந்தினி. எல்லோரும் கலகலவென்று சிரித்தனர்.

இவர்கள் பேச்சு இப்படியே நீண்டு கொண்டிருக்க மாதவி திருநள்ளாறு போய்விட்டு வந்ததாகக் கூறி பிரசாதத்தை விந்தியாவிற்குக் கொடுத்து, வைத்துக் கொள்ளச் சொன்னாள்.

“மாப்பிள்ளைக்கும் கொடு” என்றாள் மாதவி.

விந்தியா அவன் முகத்தைப் பார்க்காமல் ஆதித்தியாவிடம் நீட்ட அவன் நெற்றியை காண்பித்தபடி நின்றான்.

“அக்கா... மாமா எத்தனை நேரம் குனிஞ்சிட்டு இருப்பாரு... அவர் நெற்றியில் வைத்து விடு” என்றான் வருண்.

விந்தியா வேறுவழியின்றி அவன் முகத்தைப் பார்த்து நெற்றியில் விபூதி இட்டு விட

“பார்த்தியா... கடவுள் கூட என் பக்கம்தான் இருக்காரு” என்றான் ஆதி.

விந்தியா எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த முடியாமல் திரும்பிக்கொண்டாள்.

மாதவி புறப்படுவதாகச் சொல்லவும், “அதெல்லாம் முடியாது... உங்க பொண்ணு கையால நீங்க சாப்பிட்டிட்டுதான் போகணும்” என்றான் ஆதி.

“அய்யோ மாமா... இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்... அக்காவுக்கு சுட்டுப் போட்டாலும் சமையல் வராது” என்றான்.

“இப்ப நீ இதை கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?” என்றாள் விந்தியா கோபமாக.

ஆதி சிரித்துக் கொண்டே,

“உங்க அக்காவுக்குச் சமைக்கத்தானே தெரியாது... நல்லா பரிமாறத் தெரியும்ல”

“அப்படின்னா ஓகே” என்றான் வருண்.

மாதவி, “அக்காவை கேலி செய்யாதே” என்று வருணை அதட்டினாள்.

எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க விந்தியா பரிமாறினாள்.

ஆதியின் சீண்டலையும் விந்தியாவின் ஊடலையும் நந்தினி ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்தாள். நந்தினி அது பற்றி விசாரிக்க விந்தியா எதுவுமில்லை என்று சிரித்து சமாளித்துவிட்டாள்.

மாதவி விந்தியாவிடம் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு ஆதித்தியாவிடம் கண் கலங்கியபடி,

“விந்தியாவைப் பாத்துக்கோங்க” என்றாள்.

ஆதித்தியா புன்னகையோடு

“என்ன அத்தை சொல்றீங்க? உங்க பொண்ணை யாராவது பாத்துக்கணுமா? அவளுக்கு தன்னைத் தானே பாத்துக்கிற தைரியம் நிறைய இருக்கு... என்னைதான் உங்க பொண்ணு கண்கலங்காம பாத்துக்கணும்” என்றதும் எல்லோரும் வயிறு குலுங்க சிரிக்க விந்தியா மட்டும் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

“ரொம்பக் கரெக்ட்” என்றாள் நந்தினி. அவர்களை வழி அனுப்பிவிட்டு விந்தியா கோபத்துடன் திரும்பினாள். ஆதித்தியா தயாராக, “திட்டணும்னு தோணல... கம்மான் திட்டு விந்தியா!” என்றான்.

அவள் திட்டப்போவதை கூட ரசிக்கக் காத்துக் கொண்டிருப்பவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் விந்தியா தன் பேக்கை மாட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு புறப்பட்டாள்.

சமுத்திரன் தன்னுடைய வீட்டினுள் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்க சுபா அவனுக்குக் குடிக்கப் பால் எடுத்து வந்தாள். அங்கே சமுத்திரனின் செல்ஃபோன் ஒயாமல் அடித்துக் கொண்டிருக்க சுபா அதை எடுத்து அவனருகில் வைத்தாள்.

“ஃபோன் அடிச்சிட்டே இருக்கே…” என்றாள்.

“எனக்கென்ன காது கேட்காதா? நீ போ நான் பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஃபோனை கையில் எடுத்தான்.

அதில் வி. டி என்று குறியிட்டிருக்க சமுத்திரனின் முகத்தில் பயம் தோன்றியது. விருப்பமில்லாமல் மிரட்சியோடு அழைப்பை ஏற்றான்.

“என்ன சமுத்திரா... ஃபோனை எடுக்க நேரமில்லையா இல்ல விருப்பமில்லையா?”

“இல்ல சார்... எடுக்கக் கூடாதுன்னு இல்ல”

“எடுத்தா என் கேள்விக்குப் பதில் சொல்லணுமே... அதானே?” இதற்குச் சமுத்திரன் எந்தப் பதிலும் உரைக்கவில்லை.

“என்ன நடந்தது? நேற்றிலிருந்து மனோஜோட முகமே சரியில்லையே…”

“இல்ல சார்... எதுவும் நடக்கலையே” என்று சமுத்திரன் சொல்லும் போது அவன் நெற்றியில் வியர்வை துளிர்த்தது.

எதிர்புறத்தில் சிரிப்புச் சத்தம் கேட்டது.

“என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்க எனக்கு நிறைய வழி இருக்கு... இருந்தும் நான் உன்னைக் கேட்கிறேனா அது நான் உன் மேல வைச்சிருக்கிற நம்பிக்கை” என்று அந்தக் கம்பீரமான குரல் சொல்ல அதற்கு மேல் எதையும் மறைக்காமல் சமுத்திரன் நடந்ததை உரைத்தான்.

அவன் சொல்லி முடித்த போது எதிர்புறத்தில் அமைதி நிலவியது. அந்த மெளனம் அவனுக்குள் பயத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் அந்தக் குரல், “இந்த விஷயத்தை இப்போதைக்கு மனோஜை ஒத்திப்போட சொல்... எலக்ஷன் வர நேரம்” என்று அந்தக் குரல் சொன்னதும் சமுத்திரன் நிம்மதி அடைந்தவனாய் “சரி” என்றான்.

ஆனால் மனோஜ் இவன் சொல்வதை எடுத்துக்கொள்வானா என்பது சந்தேகம்தான். அவன் அத்தனை வெறியோடும் கோபத்தோடும் இருக்கிறான்.

விந்தியாவின் இந்தச் செயலால் ஆதித்தியாவிற்கு ஏதோ ஒரு ஆபத்து நேரிடப் போகிறதோ என சமுத்திரன் யூகித்திருந்தான்.

சிவாவும் வேணுவும் ஒரு சீ ஷோர் ரெஸ்டிரான்டில் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்தபடி ஒரு பெண் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் உடையும் நிறமும் நெற்றியின் வகுட்டில் நீட்டமான குங்குமம் வட நாட்டுக் கலாசாரத்தைப் பிரதிபலித்தது. மகிளாவிற்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்ததினால் சிவா அவளை ஆங்கிலத்திலேயே விசாரணையை நடத்தினான்.

கேத்ரீனின் இறப்புக்கு முன்னர் வரையிலும் எங்கள் நட்பு நெருக்கத்தோடு இருந்ததாகக் கூறினாள். கேத்ரீனோடு மாதத்திற்கு இருமுறையாவது தங்குவேன் என்றாள்.

அவளின் லாக்கர் நம்பர் பற்றிக் கேட்டபோது தன்னிடம் இதுவரையிலும் அது பற்றிச் சொன்னதில்லை என்றாள். நிச்சயம் அந்த ரகசிய எண் ஏதோ ஒரு மறக்க முடியாத தேதியை குறிப்பது என்பதை மட்டும் கேத்ரீன் ஒருமுறை தெரிவித்ததாகக் கூறினாள்.

சிவா ஏற்கனவே அந்த விஷயத்தை யூகித்து அவள் வாழ்கையின் முக்கியமான தேதிகளை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இதுவரையிலான விசாரணையில் அவர்களுக்கு புதிதான தகவல் கிடைக்கவில்லை.

கடைசியாகக் கேத்ரீனின் வாழ்கையில் காதல் என்ற உறவை பற்றிக் கேட்க மகிளா ரொம்ப நேரம் யோசித்த பின் அவள் சில வருடங்களுக்கு முன்பு ஆதித்தியா என்பவனை காதலித்ததாகவும் கூறினாள்

. இத்தனை நேரம் தடுமாற்றமே இன்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த சிவா லேசாகத் தயங்கியவனாய், “யார் அந்த ஆதித்தியா?” என்றான். அவளோடு கல்லூரியில் படித்தவன் என்றும்… அது கிட்டதட்ட கேத்ரீனின் ஒரு தலை காதல் என்றும் சொன்னாள்.

 அவர்கள் இருவருக்கும் இடையில் தீர்க்க முடியாத சண்டை ஏற்பட்டதால் இருவரும் சந்தித்துக் கொள்வதை நிறுத்திவிட்டதாக சொன்னாள்.

தான் ஆதித்தியாவை ஒரே ஒரு முறைதான் பார்த்ததாகவும் இப்பொழுது அவன் முகம் தனக்கு நினைவில்லை என்றாள். ஆனால் ஆதித்தியாவிற்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை என்று அவள் இறுதியாகச் சொன்னபோது, வேணு குறுக்கிட்டு அது எங்கள் விசாரணையில் தெரியவரும் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

சிவா கேத்ரீனோடு கல்லூரியில் படித்தவர்களின் பட்டியல் ஒன்று அவனிடம் இருந்தது. அதை வேகமாய் புரட்டிப் பார்த்தான்.

ஆண்களின் வரிசையில் முதலிடத்திலேயே ஆதித்தியா என்ற பெயர் இருந்தது. அதற்குக் கீழே சன் ஆஃப் சந்திரகாந்த் என்று இருந்தது.

வேணு ஆனந்த களிப்போடு, “கேத்ரீன் ஹோட்டல் ஆதித்தியாவில் தங்குவதற்கான காரணமா?” என்று கேட்க சிவா பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. இந்த கேஸ் அவனின் நட்புக்கும் கடமைக்கும் இடையில் சிக்க வைக்கப் போகிறதோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.

சிவா அன்றிரவு கலக்கத்தோடு விந்தியாவிற்கு தொடர்பு கொண்டான். அவனின் நம்பரை பார்த்ததும் விந்தியா ஆர்வத்துடன் எடுத்து பேசினாள்.

“என்ன சிவா... எப்படிப் போயிட்டிருக்கு உன்னோட இன்வெஸ்டிகேஷன்?”

“ம்... போயிட்டிருக்கு... நான் உன் கிட்ட சொன்ன வேலையை முடிச்சிட்டியா?”

“செய்யாம இருப்பேனா... இட் இஸ் ஆல்மோஸ்ட் டன்” என்றாள்.

“அப்போ அந்த எவிடன்ஸ்?”

“நீ வரும் போது அது உன் கையில இருக்கும்”

சிவா சந்தோஷப்பட முடியாமல் அந்த ஆதாரத்தில் இருக்கப் போவது அவளின் வாழ்வுக்கு எதிரானதாக இருக்குமோ என்ற பதட்டமும், அதை தான் அவள் கையாலேயே பெறப் போகிறோம் என்ற துக்கமும் தொண்டையை அடைக்க சிவா சிறிது நேரம் மெளனமானான்.

அதே சமயத்தில் ஆதித்தியா அறைக்குள் நுழைய விந்தியா ஃபோனை காதில் வைத்துக் கொண்டு,

“சிவா... சிவா... பேசுடா... ஏதாவது சிக்னல் பிராப்ளமா?” என்று கேட்டு கொண்டிருந்தாள்.

ஆதித்தியாவிற்கு அவள் அழைத்துக் கொண்டிருந்த பெயர் எரிச்சல் மூட்டிய போதும் விந்தியாவிடம் ஏதோ பேச நினைத்து அவள் அருகில் வந்து நின்றான்.

விந்தியா முகத்தைத் திருப்பிக் கொள்ள, “நான் சொல்றதை நீ கேட்க மாட்டனு தெரியும். பட் ஐ நீட் டு டெல் யூ... கம்மிங் மன்டே என்னோட பர்த்டே. அன்னைக்கு உனக்காக ஸ்பெஷல் சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன்... அதைக் கேட்டதும் நிச்சயமா நீ சமாதானமாயிடுவ” என்று சொல்லிவிட்டு ஆதித்தியா அவளிடமிருந்து எந்தவொரு பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.

சிவா ஃபோனில் ஆதியின் குரல் கேட்க அவன் சிந்தனையிலிருந்து மீண்டவனாய் கேட்டான்.

“அது ஆதித்தியா குரல்தானே... அவன் இப்ப என்ன சொன்னான்?”

“நத்திங்... கம்மிங் மன்டே அவரோட பர்த்டேவாம்... மிஞ்சிப் போனால் பார்ட்டி செலிபிரேட் பண்ணுவாங்க... வேற என்ன செய்யப் போறாங்க…” என்று விந்தியா பேசிக் கொண்டிருக்க சிவாவிற்கு லாக்கர் எண் பற்றிய நினைவு வந்தது.

ஆதித்தியாவின் பிறந்த நாள்.

You cannot copy content