You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Iru Thruvangal - Episode 35

Quote

35

நீதானே என் உயிர்

Girl in tension talking in her phone

விந்தியா அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றாள். இருவேறு உறவுகளில் எதை இழப்பாள். மனதில் புரியாத கற்பனைகள் அவளை வேதனைப்படுத்தின. இப்படி அலைப்பாய்ந்து கொண்டிருந்த மனதின் நினைவுகளைக் கடிவாளம் போட்டு நிறுத்தி விட்டு வருணை அழைத்தாள்.

அவள் கையிலிருந்த போனில் சிவாவிற்கு முயற்சி செய்தாள். அதே நேரத்தில் இறங்கி வந்த வருணிடம் ஆதித்தியாவிற்கு ஃபோன் செய்யச் சொன்னாள்.

சிவாவிற்கு இணைப்பு கிடைத்த போதும் அவன் அந்த அழைப்பை ஏற்கவில்லை. ஆதித்தியாவின் ஃபோன் அணைப்பில் இருந்ததாக வருண் சொல்ல விந்தியாவிற்கு பதட்டம் அதிகரித்தது.

அவளின் பதட்டத்துக்கான காரணத்தை வருண் கேட்டுக் கொண்டிருக்க, அவன் சொல்வதைக் காதில் கூட வாங்காமல் விந்தியா சுபாவுக்கு ஃபோன் செய்தாள்.

“சொல்லுங்கண்ணி”

“சுபா நீ எங்க இருக்க?”

“கோர்ட்டிலிருந்து கிளம்பி வீட்டுக்குப் போய்டிருக்கேன்”

“ஆதி உன் கூட இருக்காரா?”

“இல்ல அண்ணி... அவரு தனியா கிளம்பிட்டாரு”

“ஒ... சிவா... பத்தி தெரியுமா?”

“அவரு கமிஷனர் ஆபிஸ் போணும்னு சொல்லிட்டிருந்தாரு”

“சரி... சரி ஓகே” என்று சொல்லி வேகமாக அழைப்பினை துண்டித்தாள்.

“கமிஷனர் ஆபிஸுக்கு ஃபோன் பண்ணு வருண்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வருணின் ஃபோன் ஒலித்தது.

விந்தியா போனை அவனிடமிருந்து பறித்து, “ஹெலோ” என்றாள்.

மறு புறத்தில் அவள் தான் எதிர்பார்த்த குரல் ஒலிக்கிறதா என கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் குரல் எதுவும் கேட்காமல் மெளனமாகவே இருந்தது.

ஆதித்தியாவிற்கு விந்தியாவின் குரல் தெரியாமல் போகுமா என்ன? திடீரென்று அவள் குரல் கேட்டதும் வார்த்தைகள் வராமல் அமைதியானான்.

விந்தியாவின் தவிப்பு அதிகரிக்க, “ஹெலோ சிவா... பேசுடா” என்றதும் ஆதித்தியா ஃபோனை அருகில் நின்றிருந்த சிவாவிடம் கொடுத்தான்.

“சொல்லு விந்தியா”

“சிவா உனக்கு ஒண்ணும் இல்லயே?”

விந்தியாவின் குரலில் இருந்த பதட்டம் அவளுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்பது புரிய ஒரே வரியில், “வீ ஆர் ஆல் ரைட்” என்றான்.

“ஆதித்தியாவையும் சேர்த்து சொல்றியா?”

“ஆமாம் விந்து... நான் வீட்டுலதான் இருக்கேன்... நீ கிளம்பி வா. நேரில் பேசிக்கலாம்” என்றான்.

அவனின் வார்த்தைகளைக் கேட்ட பின்புதான் விந்தியா நிம்மதி பெருமூச்சே விட்டாள்.

விந்தியா சிவாவின் வீட்டை அடைந்தாள். என்னதான் விந்தியாவிற்கு நிம்மதி ஏற்பட்ட போதும், நேரில் நடந்ததைத் தெரிந்து கொண்ட பின்புதான் அவளுக்கு முழுமையான தெளிவு ஏற்படும்.

விந்தியா உள்ளே நுழைந்ததும் சற்றும் எதிர்பாராமல் ஆதித்தியா ஹாலிலே அமர்ந்து கொண்டு காபி குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

விந்தியாவை ஆதித்தியா பார்த்த பார்வையில் ஏக்கத்தோடு நிரம்பிய காதல் மொத்தமும் அவனின் கண்களில் வெளிப்பட்டது. அவள் அவனைக் கண்ட தருணத்தில் இதயத்தில் ஏற்பட்ட காதல் ஊற்றை மறைத்தபடி கடந்து வந்தாள். அந்த நேரத்தில் அவள் முன்னே வந்து நின்ற சிவாவை பார்த்தவுடன் அவளுக்குக் கண்ணீர் பொங்கியது.

“என்னாச்சு விந்து... ஏன்டி அழற?”

அவளுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. உயிர் போய் உயிர் வந்தது போல் இருந்தது அவளுக்கு. கண்ணீரோடு அவனின் தோள் மீது சாய்ந்து கொண்டவளை தட்டி சமாதானப் படுத்தினான்.

“ஏய்… நாங்க நல்லாதனே இருக்கோம்”

அவள் சிவாவின் மீது சாய்ந்து கொண்டு அழுவதை வனிதா, வருண், சரோஜா, தனசேகரன் எல்லொருமே பார்த்து புரியாமல் நின்றனர். அவர்களின் கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான நட்பு எல்லோருக்கும் புரிந்த போதும் ஆதித்தியா அங்கே அமர்ந்திருப்பது கொஞ்சம் நெருடலை ஏற்படுத்தியது.

ஆனால் ஆதித்தியா முகத்தில் சலனமோ பொறாமையோ இல்லை. அந்த அழகான நட்பை அவன் நன்றாகவே புரிந்து கொண்டான்.

ஒரு பெண்ணிற்கு அன்பான கணவன், பண்பான காதலன் அமைவது அத்தனை கடினமல்ல. ஆனால் அவளைச் சக உயிராய் பாவித்து, வெறும் தூய்மையான அன்பை மட்டுமே அடிப்படையாய்க் கொண்டு, துவண்டு போகும் போது தோள் கொடுக்கும் தோழன் அமைவது அபூர்வமானது என்பதை ஆதித்தியா அன்று உணர்ந்து கொண்டான்.

விந்தியா கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு கண்களைத் துடைக்க, “உனக்கெப்படி தெரிஞ்சுது... எங்க இரண்டு பேருக்கும் ஆபத்துனு?”

“அப்படின்னா உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுச்சா?” என்றாள்.

“அது தெரிஞ்சதுனால தானே நீ பதட்டமாய் இருக்க”

அப்பொழுதுதான் விந்தியா மனோஜ் சொன்னவற்றை விளக்கமாக உரைத்தாள்.

“பாத்தியா ஆதி... நம்ம இரண்டு பேரையும் போட்டுத்தள்ள மனோஜ்தான் ஏற்பாடு பண்ணிருக்கான்”

ஆதித்தியா எழுந்து நின்று கொண்டு, “அதான் அவன் நினைச்சது நடக்கலயே”என்றான்.

அவர்கள் இருவரும் இயல்பாகப் பேசிக் கொண்டது விந்தியாவிற்குக் குழப்பமாய் இருந்தது. அவர்கள் கார சாரமாய் மனோஜை பற்றிப் பேசிக் கொண்டிருக்க விந்தியா பார்க்காத அதிசயத்தைப் பார்ப்பது போல அவர்களையே பார்த்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் ஆதித்தியா புறப்படுவதாகச் சொன்னதும் அவர்கள் இருவரும் கட்டியணைத்து கொண்டனர். விந்தியாவின் கரு விழிகள் அசையவே இல்லை. ஆதித்தியா சிவாவை கட்டிக் கொண்டே விந்தியாவை அவன் நோக்கிய போதுதான் அவள் மீண்டும் சுயநினைவு பெற்றாள்.

ஆதித்தியா சிவாவிடம் சொல்லிவிட்டு விந்தியாவைக் கடந்து சென்றவன் மீண்டும் அவளை நோக்கி திரும்பி வந்தான். அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டு விந்தியா தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

“பாத்து பத்திரமா இரு... ஏன்னா நீதான் என்னுடைய உயிர்” என்று சொன்ன மறுகணமே ஆதித்தியா வாசலை அடைந்தான். மின்னலைப் போலக் காரில் மறைந்து போனான்.

அங்கே இருந்த எல்லோர் முன்னிலையிலும் அவன் அப்படிச் சொன்னதும் விந்தியாவிற்கு வெட்கத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் சொல்ல முடியாத உணர்வு முகத்தில் தென்பட்டது.

சிவா அவள் அருகில் வந்து, “ஹீ இஸ் மேட்லி லவ்விங் யூ” என்றான்.

விந்தியா அந்த எண்ணங்களைத் தவிர்த்தபடி, “அத விடு சிவா... என்ன நடந்ததுனு முதல்ல சொல்லு” என்றாள்.

“என் வாழ்கையில நான் பார்க்காத ஹாரிபிள் அக்ஸிடன்ட்...”

“அக்ஸிடென்டா?”

“நான் கமிஷனர் ஆபிஸ் போயிட்டு இருந்த போது ஆதி திடீர்னு என் பைக்கை ஓவர்டேக் பண்ணி நிறுத்தினான்... ஏதோ பிரச்சனை பண்ண போறான்னு நினைச்சேன்...

ஆனா என் முன்னாடி வந்து ‘சாரி... நான் உங்களைச் சரியா புரிஞ்சிக்கல’னு சொன்னதுமே... எனக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு... அப்புறம் ஆதித்தியாக்கிட்ட பேச பேச எனக்கும் ஆதி மேலே இருந்த கோபம் மனவருத்தம் எல்லாம் சுத்தமா காணாமா போச்சு...

எப்படியோ இரண்டு பேரும் பேசிட்டிருந்துட்டு கிளம்பினோம்... அந்தப் பெரிய ரோட்டில ரொம்ப நிறைய வண்டிங்க கூட வரல. ஆதித்தியாதான் முதல்ல காரை ஸ்டார்ட் பண்ணான்... நானும் பைக்கை ஸ்டார்ட் பண்ணும் போது ஒரு ஃபோன் வந்துச்சுப் பேசிட்டிருந்தேன்.

 அந்த நேரத்தில் ஆதி சைட் மிரர்ரில் ஸ்பீடா வந்த பெரிய கண்டய்னர் பார்த்திருக்கான்... ஏதோ மனசுக்குத் தப்பா பட்டிருக்கு... ஆதித்தியா நினைச்சிருந்தா அவன் தன்னை மட்டுமே காப்பாத்திட்டு இருக்கலாம். பட் ஆன் தி ஸ்பாட் இறங்கி ஓடி வந்து என்னையும் பைக்கில இருந்து கீழே தள்ளி... ஜஸ்ட் ஒன் செகண்டில் நடந்து போச்சு.

அந்தக் கண்டய்னர் வந்த ஸ்பீடுக்கு என் பைக்கை அடிச்சி தூக்கிடுச்சு... ஆதித்தியாவோட காரையும் மோதி கம்பிளீட் டேமேஜ்... இரண்டு பேரும் மயிரிழையில் உயிர் தப்பினோம்”

விந்தியாவிற்கு சிவா சொல்வதெல்லாம் படக் கதை போலத் தோன்றிற்று. அப்படியே திகலாய் அமர்ந்திருந்த விந்தியாவின் தோளை சிவா தட்டினான்.

“என்ன விந்து பயந்திட்டியா?”

“பின்ன... ஏதாவது தப்பா நடந்திருந்தா?”

“நடந்திருக்கலாம் பட் நடக்கலியே... ஆனா இந்த ரணகளத்திலும் நீ ஆதித்தியாக்கிட்ட பேசல. என்னதான் இருந்தாலும் இவ்வளவு கோபம் ஆகாதுடி. ஆதித்தியாவுக்கு ஏதாவது நடந்திருந்தா அப்பவும் இப்படிதான் இருப்பியா விந்து?”

“நிறுத்து சிவா... அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது”

“நடந்தா?” என்றான் சிவா.

“நடக்காது…” என்றாள் விந்தியா.

உடனே வருண் முன்னாடி வந்து, “அப்படி எல்லாம் நடக்காது மாமா... ஏன்னா ஆதி மாமாவோட உயிர்தான் இங்க இருக்கே”

விந்தியா அவர்கள் பேசுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கோபித்துக் கொண்டு எழுந்து சென்றாள்.

மாளிகை போல ஒரு வீட்டில் சதிகார கூட்டம் நடைப்பெற்று கொண்டிருந்து. சமுத்திரன், வேணு மகாதேவன், வி. டி என்கிற வித்தியாதரன், மனோஜ்.

நம் கதையின் பெரும்புள்ளி என்பதால் ரொம்பவும் தாமதமாகவே வித்தியாதரனை பார்க்கிறோம். ஆஜானுபாகுவான உடல், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கறுப்பு கலந்த வெள்ளை முடி, பார்பவர்களை மிரட்டும் தோரணை, நெற்றியில் பட்டையும் கழுத்தில் ருத்ராட்ச கொட்டையும் அணிந்து கொண்டு மக்களோடு சேர்த்து கடவுளையும் ஏமாற்றுகின்ற வேஷம்.

இப்படியாக ஒரு பெரிய சோபாவில் நடுநாயகமாய் உட்கார்ந்திருக்க இரு பக்கங்களில் வேணுவும் சமுத்திரனும் அமர்ந்திருந்தனர். மனோஜ் மட்டும் இப்படியும் அப்படியுமாய் நடந்து கொண்டிருக்க முதலில் வித்யாதரனின் கர்ஜனை மிகுந்த குரல் அவன் மீது பாய்ந்தது.

“முட்டாள்... போலீஸ்காரனை கொல்றது என்ன விளையாட்டு காரியமா? அது நமக்கு நாம வைச்சிருக்கிற கொல்லி”

“போதும் நிறுத்துங்க... அந்த ஆதித்தியா சிவா இரண்டு பேரில ஒருத்தனாவது செத்திருந்தா அந்த விந்தியாவைக் கதிகலங்க வைச்சிருப்பேன்” என்றான் மனோஜ்.

“போயும் போயும் ஒரு பொம்பளைக்காக...” என்று வித்யாதரன் சொல்ல சமுத்திரன் பதில் சொன்னான்.

“ஒருத்தியா? அவ ஒரு ஒன் உமன் ஆர்மி... இந்த கேஸில நமக்கு எதிரா பெரிய பிளான் போட்டிருக்கா” என்றான் சமுத்திரன்.

“அதுக்கு உங்க மனைவியும் உடந்தையா?” என்று வேணு கேட்க,

“அவளால எல்லாம் நம்மள ஒண்ணும் பண்ண முடியாது” என்றான் சமுத்திரன்.

வித்தியாதரன் இவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டு,

“இப்போ என்னோட ஒரே கவலை இந்த கேஸ் மட்டும்தான்... அதை முதலில் முடிக்கணும்... என் பக்கம் பார்வை திரும்பாம இந்த கேத்ரீன் கேஸ் முடியணும். அப்புறம் மனோஜ் நீ செய்யுறது ஏதாவது என்னோட அரசியல் சமாராஜ்யத்துக்கு பிரச்சனையா இருந்துச்சு... மகன்னு கூடப் பார்க்க மாட்டேன்”

அந்த மிரட்டல் சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து மிரட்டியது.

இவர்களின் சதிகார கூட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், ஆதித்தியா சோபாவில் படுத்துக்கொண்டு எதைப் பற்றியுமே கவலை இல்லாமல் விந்தியாவைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன். இருளில் சிகரெட் பாக்கெட்டை தேடி அவள் மீது தான் விழுந்ததும், அவள் தன்னைக் கடிந்து கொண்டதை பற்றி எண்ணி தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

 இந்தச் சத்தம் சந்திரகாந்த்திற்குக் கேட்க அவர் உள்ளே வந்து “ஆதி” என்று அழைத்தார்.

“டேட்” என்று சோபாவிலிருந்து எழுந்து கொண்டான்.

“நீ ரொம்ப நல்ல மூடுல இருக்க போல”

ஆதித்தியா லேசாகப் புன்னகை புரிந்தான்.

“அப்படின்னா சரி... நான் கேட்க வேண்டியதை கேட்டுறேன். ஏன் இன்னமும் நீயும் விந்தியாவும் பிரிஞ்சி இருக்கீங்க”

“அத நீங்க உங்க மருமகள் கிட்டதான் கேட்கணும்”

“அப்போ இந்தப் பிரச்சனையில உன்னோட பங்குனு எதுவும் இல்லையா ஆதி?”

ஆதித்தியா மெளனமாக நின்றான்.

“நீ தப்புச் செஞ்சிருந்தா கொஞ்சமும் யோசிக்காம அவ கிட்ட போய் மன்னிப்பு கேள்... அப்பதான் இந்தப் பிரச்சனை சால்வ் ஆகும்... புரியும்னு நினைக்கிறேன்” என்று சொல்லி அவன் தோள்களைத் தட்டி விட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அப்போழுதுதான் ஆதிக்கு தோன்றியது. இன்றளவில் தான் அவளிடம் மன்னிப்பே கேட்கவில்லை...

பாவம்! ! !

ஆதித்தியா நாளை நடக்கப் போகும் விபரீதத்தைப் பற்றி யோசிக்காமல் ஏதேதோ நினைவுகளில் இருந்தான்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content