You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow Kanavugal - 15

Quote

15

விடியலுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில் வீட்டிற்கு புறப்பட எழுந்த ஜெயா தன் மேஜை மீதிருந்தக் கோப்புகளை அடுக்கி வைத்தபடி,

“பார்த்துக்கோங்க சுமதி… நான் கிளம்புறேன்” என்று சொல்ல,

“மேடம்” என்றவள் தயக்கத்தோடு அவள் முன்னே நின்றாள்.

“என்ன சுமதி?” என்று ஜெயா கேட்கவும்,

“அந்த பொண்ணு சாப்பிடவே இல்லை மேடம்… அழுதிட்டே இருக்கு” என்றாள்.

“இதெல்லாம் நமக்கென்ன புதுசா… சாப்பிடலன்னா நாம என்ன ஊட்டியா விட முடியும்” என்ற அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவள் புறப்பட எத்தனிக்கவும் கான்ஸ்டபிள் சங்கரன் எதிர்ப்பட்டு வந்தார்.

அவரை பார்த்ததும் ஜெயா பரபரப்போடு, “வாங்க சங்கரன்… உங்களைப் பத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன்… எப்படி இருக்கு அவருக்கு… ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று வினவ,

“ஒன்னும் பிரச்ச்னையில்ல மேடம்… நல்லாத்தான் இருக்காப்ல” என்று அவர் சொன்னதைக் கேட்டவள் ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டாள்.

சங்கரன் மேலும், “அவனுக்கு தெரிஞ்சவங்க யாரோ ஹாஸ்பெட்டிலுக்கு வந்திருந்தாங்க மேடம்” என்று சொல்லவும் ஜெயா புரிந்தவளாக தலையை அசைத்தாள்.

“சரிங்க சங்கரன்… நீங்க வீட்டுக்கு கிளம்புங்க” ஜெயா சொல்ல,

சங்கரன் தயங்கி தயங்கி தன் பாக்கெட்டில் இருந்த கடிதத்தை அவளிடம் நீட்டினார்.

“என்னது இது?” என்றவள் குழப்பமாக,

“அவன்தான் அவன் பொண்டாட்டிகிட்டக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தான்” என்றார்.

அதனை கையில் வாங்கி கொண்ட ஜெயாவின் முகம் வியப்போடு, “அந்தளவு அடிப்பட்டு இருந்துது… எப்படி இந்த லெட்டரை எழுத முடிஞ்சுது?” என்றுக் கேட்க,

“நீங்க வேற மேடம்… அவன் அவ்வளவு அடி வாங்கியும் பொண்டாட்டியைப் பத்திதான் புலம்பிக்கிட்டே வந்தான்… தலையில… வலது கையில எல்லாம் பெரிய கட்டு… அவ்வளவு வலியிலையும் அவன் சும்மா இல்லாம ஜாடையில என்னைப் பேப்பர் கொடுக்க சொல்லி இடது கையில எழுதிக் கொடுத்தான்னா பாருங்களேன்” என்று அவரும் ஆச்சரியப்பட்டு அவன் செயலை விவரிக்க, அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

தினம் தினம் மனிதர்களின் பல அசிங்கமான கோர முகங்களைப் பார்த்து பார்த்து கசந்து போன அவள் எண்ணங்களுக்கு இப்படியும் ஒருவன் இருக்க கூடுமா என்பது வியப்பாகவே இருந்தது.

அந்தக் கடிதத்தை அவள் யோசனையோடு பார்த்திருக்க சங்கரன் தயக்கத்தோடு, “அந்தப் பொண்ணுகிட்ட” என்று சொல்ல வரவும்,

“நான் கொடுத்துடுறேன்… நீங்க கிளம்புங்க” என்று அந்தக் கடிதத்தை வாங்கி கொண்டு இந்துமதியிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

தரையில் கால்களை மடக்கியபடி கூனி குருகி தலையைக் குனிந்து அவள் அமர்ந்திருந்த கோலமே ஜெயாவின் மனதைப் பிசைந்தது.

மேஜை மீது அவளுக்காக வைக்கப்பட்ட உணவு பொட்டலம் பிரிக்கப்படாமல் அநாதரவாக கிடந்தது.

ஜெயா பெஞ்சில் அமர்ந்தபடி அவள் தோளைத் தொட அச்சத்தில் பதறித் துடித்து அவள் நிமிர,

“பயப்படாதே நான்தான்” என்றாள்.

இந்துமதியின் விழிகள் அப்போதும் மாறாத பயத்தோடு அவளை எதிர்கொண்டது. முகமெல்லாம் அழுது வீங்கிய அடையாளங்கள். அவளின் நிலையைப் பார்த்து பச்சாதாபம் கொண்ட ஜெயா அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்ட இந்து வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.

“தண்ணிக் கூட குடிக்காம இருந்தா உடம்பு ரொம்ப வீக்காயிடும்… குடி” என்று அக்கறையாக சொல்ல

“ஆனா ஆகிட்டு போகுது” என்று அவள் பாராமுகமாக சொல்ல,

“ஆனா ஆகிட்டு போகுதா? இப்போ இன்ஸ்பெக்டர் வந்தா என்ன பண்ணுவ… அந்த ஆளு எப்ப வேணா வரலாம்… இப்ப கூட வரலாம்… அவரை ரெசிஸ்ட் பண்ணவாச்சும் உன் உடம்புல கொஞ்சமாச்சும் தெம்பு வேண்டாம்” என்றுக் கேட்டாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடி இந்து அருவருக்கத்தக்க முகபாவத்தோடு, “சீ… இப்படியெல்லாம் பேச உங்களுக்கு அசிங்கமா இல்ல?” என்று வினவ,

“இந்த மாதிரி அசிங்கமெல்லாம் நான் நிறைய பார்த்துட்டேன்… எனக்கு அதெல்லாம் பழகிப் போச்சு” என்றாள் ஜெயா அலட்சிய தொனியில்!

இந்துவைக் கிலிப்பற்றிக் கொள்ள அவள் முகத்தை மூடி அழ தொடங்க, ஜெயாவிற்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

“ஏ அழாதே… இப்போதைக்கு அந்த ஆளு வர மாட்டான்” என்றதும் இந்துமதியின் அழுகை மட்டுப்பட அவள் நிமிர்ந்து பார்த்து, “எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல… மாமா பாவம்… அவரை விட்டுடுங்களேன்” என்று இறைஞ்சினாள்.

“உன் மாமாவை ஹாஸ்பெட்டில சேர்த்தாச்சு… நல்லாதான் இருக்காராம்” என்று ஜெயா சொன்ன அடுத்த நொடி இந்துவின் விழிகள் ஒளிர்ந்தன.

கண்ணீர் திரையிட, “நிஜமாவா மேடம்” என்றவள் குரலில் நம்பிக்கை வெளிப்பட ஆமோதித்தாள் ஜெயா.

இந்துமதி பெருமூச்செறிய, “இப்பயாச்சும் சாப்பிடு” என்றாள் ஜெயா!

சட்டென்று இந்துமதியின் முகம் இறுகி போக, “நான் சாப்பிடணும்னு என்கிட்ட இப்படி பொய் சொல்றீங்கதானே” என்று சந்தேகித்து கேட்க ஜெயா நகைத்தாள்.

இந்துமதியின் முகம் மீண்டும் துவண்டுவிட,

“நீ நம்பலன்னா… இதோ உன் புருஷனே கைப்பட எழுதின லெட்டர்” என்று அந்தக் காகிதத்தை எடுத்து காண்பித்தாள். இந்துமதி ஆச்சரிய பார்வையோடு, “லெட்டரா?” என்றுக் கேட்க,

“ம்ம்ம்” என்று தலையசைத்தாள்.

‘இத்தனை நாளில மாமா ஒரு தடவை கூட இந்த மாதிரி எனக்கு எதையும் எழுதி காண்பிச்சதே இல்லையே’ என்றவள் மனதிற்குள் யோசிக்க,

“என்ன யோசிக்குற… இது உன் மாமா எழுதின லெட்டர்தான்… இப்பதான் உன் மாமாவை ஹாஸ்பெட்டில சேர்த்த கான்ஸ்டபிள் என்கிட்ட கொண்டு வந்து கொடுத்தாரு” என்றவள் சங்கரன் சொன்ன அனைத்தையும் தெரிவித்தாள்.

இந்துமதியின் விழிகள் தாரைத் தாரையாக கண்ணீரை உதிர்த்தன. இத்தனை நேரமிருந்த வலியும் தவிப்பையும் விட இப்போது ஜெயா சொன்னதுதான் அவளுக்கு அதிகமாக வலித்தது. குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்தாள்.

“நீ இப்படியே அழுதுட்டிருந்தா நான் எழுந்து போயிட்டே இருப்பேன்” என்று ஜெயா எழுந்துக் கொள்ளவும்,

“ப்ளீஸ் மேடம்… அந்த லெட்டரை கொடுங்க” என்று கம்மிய குரலில் கேட்டாள்.

“அப்படின்னா சாப்பிடு” என்று ஜெயா சொல்ல மௌனமாக ஏறிட்ட இந்து, உடனடியாக மேஜை மீதிருந்த உணவு பொட்டலத்தைப் பிரித்து உண்ண ஆரம்பித்தாள். தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவளருகில் வைத்த ஜெயா,

“பொறுமையா சாப்பிடு… லெட்டர் எங்கேயும் ஓடி போயிடாது” என்றாள்.

இந்துவிற்கு அத்தனை பொறுமையில்லை. பசித்து ருசித்து சாப்பிடும் மனநிலையிலும் அவள் இல்லை. ஆனால் மனதில் ஒரு புது தெம்பு பிறந்திருந்தது.

எந்தச் சூழ்நிலையிலும் தன் கணவன் தன்னைவிட்டுக் கொடுக்க மாட்டார் என்ற நம்பிக்கையின் ஆதாரம் அந்தக் கடிதம்.

அவள் உணவை உட்கொள்வதைப் பார்த்தபடி ஜெயா அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“ஆமா… நீங்க ரெண்டு பேருக்கும் லவ் மேரெஜா?” என்றுக் கேட்டு வைக்க இந்துவிற்குப் பொறையேறியது.

வேண்டா வெறுப்பாக அவள் செய்துக் கொண்ட திருமணமல்லவா அது. காதலின் சாயல் கூட அவர்கள் உறவின் மீது படிந்தது இல்லையே என்று எண்ணியவள் தண்ணீரை அருந்திவிட்டு இல்லையென்பது போல மறுப்பாக தலையசைத்தாள்.

“அப்போ சொந்தமா?” என்றுக் கேட்க,

“ம்ம்ம்” என்று ஆமோதித்தவள், “அத்தை மகன்” என்றாள்.

“ஒ” என்ற ஜெயா மீண்டும் அவளிடம், “ஆமா உன் வீட்டுகாரருக்கு லாயர் மதுபாலாவை எப்படி தெரியும்?” என்று வினவ,

இந்துமதி குழப்பத்தோடு, “லாயர் மதுபாலாவா அது யாரு?” என்றுக் கேட்டாள்.

“உனக்கு அப்போ மதுபாலாவை தெரியாதா?” என்ற ஜெயா யோசனையாக கேட்க, இந்துமதியின் புருவங்கள் சுருங்கின.

“ஆன் தெரியும்” என்றவள் மதுவிற்கும் சுரேஷிற்குமான உறவுமுறைப் பற்றி சொல்ல ஜெயா எரிச்சலோடு, “என்ன உளற? நான் உன் வீட்டுகாரரோட வந்த லாயர் மதுபாலாவைப் பத்திக் கேட்கிறேன்” என்று அழுத்தி சொல்ல,

“என் வீட்டுக்காரரோடவா… எனக்கு தெரியல” என்றதும் அவளை ஆழ்ந்து பார்த்த ஜெயா, “அதெப்படி தெரியாமா இருக்கும்… அந்தப் பொண்ணு உன் வீட்டுகாரரை ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசுது” என்றதும் இந்துமதி அவளிடம்,

“அவருக்கு தெரிஞ்சிருக்கும்… ஆனா எனக்கு தெரியாது” என்றாள். பெயருக்குத்தான் இருவருக்கும் திருமணமானது. அவனைப் பற்றியே அவளுக்கு ஒன்றும் தெரியாது. அப்படியிருக்க அவனுக்கு நெருக்கமானவர்கள் பற்றி மட்டும் அவளுக்கு எப்படி தெரிந்திருக்க கூடும்.

ஜெயா குழப்பமாக இந்துவை பார்த்து, “சரி… நீ சொன்ன மதுபாலா எப்படி இருப்பாங்க?” என்றுக் கேட்டாள்.

“அவங்க நல்லா உயரமா இருப்பாங்க… பார்க்க அழகா இருப்பாங்க” என்றதும் இன்னும் அதிகமாக குழம்பிய ஜெயா,

“உயரமாவா?” என்று யோசித்தவள் சில நொடிகள் கழித்து,

 “ஆமா அவங்க கர்ப்பமா இருந்தாங்களா?” என்று வினவ இந்து ஆமோதிப்பாக,

“ஆமா ஆமா… அவங்களுக்கு ட்வின்ஸ்… ஏழு மாசத்திலயே வயிறு நிறை மாசம் மாதிரி இருந்தது” என்று அவள் சொன்ன நொடி தலையைப் பிடித்து கொண்டாள் ஜெயா!

அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இறந்து போன சுரேஷிற்கு உறவினரான மது எதற்கு இவளுக்காக வக்காலத்து வாங்க சரவணனுடன் வர வேண்டும். இது பெரிய இடியாப்ப சிக்கலாக இருக்கும் போலவே என்று யோசித்த ஜெயாவை, “மேடம்” என்றழைத்து அவள் சிந்தனையைக் கலைத்தாள் இந்துமதி!

“நான் சாப்பிட்டேன்… அந்த லெட்டர்” என்று இந்துமதி கேட்க அந்தக் கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு ஜெயா எழுந்து சென்றுவிட்டாள்.

இந்துவின் மனதில் அப்போது பரவிய பரவசமும் பரபரப்பும் புதுவிதமானது. அவசரமாக அந்தக் கடிதத்தைப் பிரித்தாள்.

அவன் இடது கரத்தில் எழுதியதாலோ என்னவோ அந்த எழுத்துக்கள் அவளுக்கு புரிய சில நிமிடங்களானது.

 “இந்த கேஸ்ல இருந்து எப்படியாவது நான் உன்னைக் காப்பாத்திடுவேன் மதி. நீ கவலைபடாதே.

யார் என்ன பேசினாலும் நீ அதையெல்லாம் காதிலயே போட்டுக்காதே மாமா இருக்கேன் உனக்கு. தைரியமா இரு.”

அவன் கையெழுத்து கோணல் மாணலாக இருந்த போதும் அதில் அவன் வெளிபடுத்திய உணர்வுகள் அத்தனைத் தெளிவாகவும் திடமாகவும் இருந்தது.

யாரும் இதுநாள் வரை அவளை மதி என்று அழைத்ததே இல்லை. அந்த அழைப்பு ஊமையாக கிடந்த அவனின் ஆழ் மன ஆசைகளை அவளிடம் எடுத்து சொல்லியது. 

அந்தக் கடிதத்தை தன் மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட காதல் அட்டைகளும் அதில் அழகுற எழுதப்பட்ட காதல் கவிதைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த நான்கு வரிகளுக்கு முன்பு!

அவனின் ஆழமான காதலை சொல்லாமல் சொல்லிவிட்டது. தன்னுடைய சூழ்நிலையெல்லாம் மறந்து பூரிப்பில் ஆழ்ந்தாள் அவனின் மதி!

Quote

Super ma 

You cannot copy content