மோனிஷா நாவல்கள் MenuForum NavigationForumActivityLoginRegisterForum breadcrumbs - You are here:ForumMonisha Ongoing novels: Kadhalum KabadamumKadhalum Kabadamum - Episode 32Post ReplyPost Reply: Kadhalum Kabadamum - Episode 32 <blockquote><div class="quotetitle">Quote from <a class="profile-link highlight-admin" href="#">monisha</a> on July 6, 2026, 7:07 PM</div><h1 style="text-align: center">32</h1> <p>யாத்ராவின் அலாரம் நிறுத்தாமல் அடித்துக் கொண்டே இருந்தது. ஆனால், சுத்தமாக அந்த சத்தம் அவள் காதில் கேட்கவே இல்லை. இரவெல்லாம் உறக்கத்தைத் தொலைத்ததன் விளைவு.</p> <p>மெதுமெதுவாக அலாரச் சத்தத்தை உணர்ந்து கண் திறந்தவள், செல்பேசியைக் கையில் எடுத்து நேரத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.</p> <p>“ஷிட்… லேட்டாகிடுச்சு”</p> <p>அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்தவள், நேரமின்மை காரணமாக எளிமையான ஒரு அடர் நீல நிற ஸ்லீவ்லெஸ் டாப்பும் வெள்ளை பேண்டையும் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள்.</p> <p>ஒப்பனைக்கு அதிகம் மெனக்கெடாமல் கூந்தலை அப்படியே தோளில் தவழவிட்டவளுக்கு, கண்ணாடி முன்பு நின்று உடையைச் சரிபார்க்கக் கூட நேரம் இருக்கவில்லை.</p> <p>பையைத் தயார் செய்து எடுத்துத் தோளில் அணிந்து கொண்டு வெளியே வர, ஹாலில்… கார்த்திக் நின்றுகொண்டிருந்தான். சௌந்தர்யாவுடன் ஏதோ சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தான்.</p> <p>நேற்று இரவு அவன் விரல்கள் அவளது கன்னத்தின் அருகே வந்ததும், பின் தீண்டாமல் விலகியதும் அவள் நினைவிலோடியது.</p> <p>‘யாத்ரா கண்ட்ரோல்…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்ட அதே கணத்தில், அவனது பார்வையும் அவள் மீது விழுந்தது.</p> <p>ஆனால், நேற்று இரவு நடந்ததற்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாதது போல அவன் பார்வை இருந்தது. ஏனோ அதனை ஏற்றுக் கொள்ள முடியாத எரிச்சல் கலந்த வலி அவளுக்குள் சுழன்றடித்தது.</p> <p>அந்த நேரம் தேன்மொழி எல்லோருக்கும் டிபன் எடுத்து வந்து வைத்துவிட்டுச் சாப்பிட அழைத்தார்.</p> <p>நேரத்தைப் பார்த்த யாத்ரா, இந்திரனைச் சுற்றுமுற்றும் தேடினாள்; அவனைக் காணவில்லை. ஆதலால் அவள் கிளம்ப எத்தனிக்க,</p> <p>“சாப்பிட்டுப் போம்மா…” என்ற தேன்மொழியின் கனிவான அழைப்பில் அவளது கால்கள் அப்படியே நின்றுவிட்டன.</p> <p>“வாம்மா…” என்று அவர் மீண்டும் அழைக்க, அவளது பார்வை கார்த்திக்கைப் பார்த்தது. அவன் இறுக்கமாக நின்றிருக்க, “இல்ல, டைமாகுது…” என்று தவிர்த்துவிட்டு அவசரமாக வெளியேறினாள்.</p> <p>வாசலை கடக்கும்போது… அவள் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தாள். அதே நேரம்… கார்த்திக்கின் பார்வையும் அவளைத் தட்டியது. இரண்டு நொடிகள்… நேற்றிரவு நினைவுகள் இருவரது மனதிலும் மின்னலென வெட்டி மறைந்தது.</p> <p>அதன் பிறகு யாத்ரா தாமதிக்கவில்லை. மின்தூக்கியில் வந்து ஏறியதும் பின்னிருந்த சுவரில் சாய்ந்துகொண்டாள்.</p> <p>“கடவுளே! இன்னும் நாலு நாள்... எப்படி சமாளிக்கப் போறேன்…” என்று புலம்பிக் கொண்டவள், அபார்ட்மெண்ட் வெளியே வந்ததும் கைப்பேசியில் வாடகை கார் பதிவு செய்ய முயன்றாள்.</p> <p>“Searching for rides…” என்று வந்தது. ஒவ்வொரு முறையும் புக் ஆகி கேன்சல் ஆக, அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.</p> <p>“ஷிட்…” என்று கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அவள் பதற்றமாக அங்குமிங்கும் நடந்தாள்.</p> <p>அப்போது ஒரு கார் அவள் முன் வந்து நின்றது.</p> <p>“ஏய்! இன்னும் கிளம்பல நீ?” என்று இந்திரன் தலையை நீட்டினான்.</p> <p>“கேப் புக் பண்ணேன்.... ஆனா கேன்சல் ஆகிட்டே இருக்கு…”</p> <p>“எங்க உன் ஆபீஸ்?” என்று விசாரித்தவன் பின், “நாங்க போற வழிதான், வா,” என்று சகஜமாக அழைத்தான்.</p> <p>அவள் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திக்கைச் சங்கடத்துடன் பார்த்துவிட்டு மறுத்தாள்.</p> <p>“கார்த்திக் ஏதாவது சொல்லுவான்னு யோசிக்குறியா?” என்று நேரடியாகக் கேட்டுவிட்டவன், திரும்பி கார்த்திக்கிடம், “உனக்கு யாத்ராவை டிராப் பண்ண எந்தப் பிரச்னையும் இல்லையே?” என்று கேட்க, அவன் கடுமையாக முறைத்தான்.</p> <p>ஆனால், அவன் முறைப்பைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், “பாரு, அவனே எதுவும் சொல்லல... நீ ஏறு,” என்றான் இந்திரன்.</p> <p>அவள் தயங்க, “ப்ச்… ஏறுடி, லேட் ஆகுது,” என்று இந்திரன் சொல்ல, யாத்ரா பின்பக்க இருக்கையில் அமர்ந்தாள்.</p> <p>ஸ்டீயரிங்கைப் பிடித்திருந்த கார்த்திக், அதை இறுகப் பற்றிக் கொண்டு பற்களைக் கடித்தான்.</p> <p>“கிளம்பு கார்த்திக்,” என்று இந்திரன் சொல்ல, வேறு வழியில்லாமல் வண்டியைக் கிளப்பினான்.</p> <p>அவள் ஒரு மாதிரி தயக்கத்துடன் அமர்ந்திருக்க, இந்திரன் சகஜமாக அவள் வேலை மற்றும் அலுவலகத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தான். அவளும் ஏதோ மேம்போக்காகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தாள்.</p> <p>அவ்வப்போது அவள் விழிகள் ரியர் வியூ மிரரில் தெரிந்த கார்த்திக்கின் விழிகளை நோக்கின. ஆனால், அவன் ஒரு முறை கூட அவளைப் பார்க்க முனையவில்லை. நேற்று அவன் பார்வை காட்டிய தாபமும், இப்போது அதே விழிகள் காட்டும் மறுப்பும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது.</p> <p>ஷோலிங்கநல்லூர் ஐடி பார்க் நெருங்கவும், “நான் இங்க இறங்குறேன்…” என்றான் இந்திரன்.</p> <p>யாத்ரா சங்கடத்தின் உச்சத்துக்கே போய்விட்டாள்.</p> <p>“பார்த்துப் போ யாத்ரா,” என்று இந்திரன் இறங்கிவிட்டுச் சொல்ல, அவள் கண்கள் ‘தனியா என்னை இப்படி மாட்டி விட்டுட்டு போறியே’ என்பது போலப் பாவமாகக் கெஞ்சியது.</p> <p>ஆனால், இந்திரன் தங்கையின் தவிப்பை உணராதவன் போல, “கார்த்திக் டிராப் பண்ணிடுவான்,” என்று சகஜமாகச் சொல்லிவிட்டுத் கடக்க, அவள் பதற்றத்துடன் ரியர் வியூ மிரரைப் பார்த்தாள்.</p> <p>இம்முறை கார்த்திக்கின் விழிகளும் கண்ணாடியில் நிலைத்து நின்றதைப் பார்த்தவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவள் பார்வையால் அண்ணனை கெஞ்சியதும், அவன் கண்டுகொள்ளாமல் விட்டுப் போனது அத்தனையும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.</p> <p>அந்தக் கண்ணாடி வழியே இருவரின் விழிகளும் நேருக்கு நேராக முட்டிக்கொண்டன.</p> <p>அடுத்த கணம் கார் நகர்ந்தது.</p> <p>உள்ளே ஒரு பயங்கர அமைதி. அவளது மார்புக்கூடு தன் பார்வையில் படபடவென்று ஏறி இறங்குவதைக் கண்ணாடி வழியாகக் கவனித்த கார்த்திக்கின் மனதில், இன்னும் நேற்றிரவு தவிப்பின் மிச்சங்கள்.</p> <p>‘பார்க்காதடா அவளை, பார்க்காத!’ என்று அவனுக்குள் ஒரு எச்சரிக்கைக் குரல் கேட்டுக் கொண்டே இருந்தபோதும், மனம் அவர்களின் முதல் பயணமான அந்த ஏற்காட்டின் வழித்தடத்தை நினைவு கூர்ந்தது. அந்த அழகான மலைச்சாரலில், வளைந்து நெளிந்த சாலைகளில் இதே கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து ரசித்தது, காதலில் திளைத்தது அத்தனையும் அவன் நினைவிலோடியது.</p> <p>அவன் கட்டுப்பாட்டையும் மீறி ரியர் வியூ மிரர் பக்கம் போன விழிகளை இழுத்துப் பிடித்து நேராக்கினான். ஆனால், ரொம்ப நேரம் அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் பார்த்துவிட்ட அதே கணத்தில் அவளும் பார்த்தாள்.</p> <p>உடனே இருவரும் திடுக்கிட்டுத் தங்களின் பார்வையைத் திருப்பிக் கொண்டனர். அந்த கண்ணாடி வழியாகச் சத்தமில்லாமல் இருவருக்குள்ளும் ஒரு பெரும் உணர்ச்சிப் போராட்டமே நிகழ்ந்தது.</p> <p>இறுதியாகக் கார் நின்றது. ஆனால், அவள் அலுவலகத்தை விட்டுத் தள்ளி நிற்க, நேரத்தைப் பார்த்தவள், “கொஞ்சம் முன்னாடி நிறுத்த முடியுமா… லேட் ஆகுது…” என்று நடுங்கும் குரலில் கேட்டாள்.</p> <p>கண்ணாடியில் அவளை முறைத்தவன், பின் எதுவும் பேசாமல் அவள் அலுவலகத்தின் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினான்.</p> <p>அவசரமாகக் காரிலிருந்து இறங்கியவள், “தேங்க்ஸ்” என்று சொல்வதற்குள் அவன் காரைக் கிளப்பிக் கொண்டு பறந்துவிட்டான். ஏமாற்றத்துடன் அவன் செல்வதைப் பார்த்துவிட்டு அலுவலகத்திற்குள் நடந்து வர, ஆரவ் அவளைக் கடுகடுப்புடன் பார்த்தான்.</p> <p>“சாரி சார்… கேப் கிடைக்கல.”</p> <p>அவளை முறைத்தவன் பின்னர், “சீக்கரம் வேலையை ஆரம்பி,” என்று உத்தரவிட, பெருமூச்சுடன் தன் மேஜையில் அமர்ந்து வேலை செய்யத் தொடங்கினாள்.</p> <p>“அந்த ஆர்கனைஸர் நம்பருக்குக் கால் பண்ணு,” என்று ஆரவ் சொல்லவும், “ஓகே சார்,” என்று தன் செல்பேசியை எடுக்கப் பையைத் திறந்தாள்.</p> <p>உள்ளே இல்லை. பதற்றத்துடன் சிலமுறை தேடினாள். ஆனால் கிடைக்கவில்லை.</p> <p>“கடவுளே! கார்ல விட்டுட்டேன் போல,” என்று அவள் சத்தமாகச் சொல்லிவிட,</p> <p>“என்ன?” என்று கேட்டான் ஆரவ்.</p> <p>“சாரி சார், போனை மறந்து வச்சிட்டேன்.” என்றதும் அவன் கண்கள் கோபமாக விரிந்தன.</p> <p> “ஒரே நிமிஷம் உங்க போனை கொடுக்க முடியுமா?”</p> <p>“வாட்” என்று கடுப்பான போதும் தன் கைப்பேசியைத் திறந்து அவளிடம் கொடுத்தான்.</p> <p>கார்த்திக்கிடம் நேரடியாகப் பேச தைரியம் இல்லாததால், அவள் தன் தமையனுக்கு அழைத்துத் தகவலைச் சொன்னாள்.</p> <p> “ரொம்ப அவசரம் அண்ணா… ப்ளீஸ்.”</p> <p>“நான் சொல்றேன், போனை வை,” என்றவன் சொல்ல, அவள் தவிப்புடன் நின்றாள். அவளின் அந்தப் பரிதவிப்பைக் கண்ணாடிக்கு அந்தப் பக்கமிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆரவிற்கும் கொஞ்சம் பாவமாகிவிட்டது.</p> <p>அதேநேரம் கார் ஓட்டிக்கொண்டிருந்த கார்த்திக், இந்திரனிடமிருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினான்.</p> <p>“யாத்ரா போன் கார்ல இருக்காம்… கொண்டு போய் கொஞ்சம் கொடுத்துடுறியா… ஆபீஸ்ல ரொம்ப அவசரமாம்…” என்றான் இந்திரன்.</p> <p>அந்த ஒரு வரியிலேயே கார்த்திக்கின் உள்ளுக்குள் தேங்கிக் கிடந்த மொத்த கோபமும் வெடித்தது.</p> <p>“காலையில உன் தங்கச்சிக்கு ஃப்ரீயா டிரைவர் வேலை பார்த்தது பத்தாதுன்னு... இப்போ நான் அவளுக்கு டெலிவரி பாய் வேலை வேற செய்யணுமா? முடியாது!” என்று கறாராகச் சொன்னவன், இந்திரன் அடுத்து பேச வாய்ப்புக் கூட தராமல் அழைப்பைத் துண்டித்தான்.</p> <p>மீண்டும் மீண்டும் இந்திரன் அழைத்தான். ஆனால், கார்த்திக் அதை எடுக்கவே இல்லை.</p> <p>அந்த நேரம்… பின்பக்க இருக்கையிலிருந்து யாத்ராவின் செல்பேசி அலறியது.</p> <p>மிகுந்த கடுப்புடன் காரை ஓட்டியபடியே பின்னால் திரும்பிப் பார்த்தான். சீட்டின் கீழே போன் சற்றே சரிந்து கிடந்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, கையை நீட்டி அதை எடுத்தவன்… அதன் திரையைப் பார்த்து அதிசயித்தான்.</p> <p>மழையின் மெல்லிய சாரலில் நனைந்தபடி நின்ற அவர்களின் 'செல்ஃபி' அந்த ஸ்கிரீனில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.</p> <p>அந்த நாள் அப்படியே அவன் கண் முன்னே விரிந்தது. கொட்டும் மழையில் குளிர்ச்சி படர்ந்த அவளது கையை அவன் இறுக்கமாகப் பற்றி, தன் நெஞ்சோடு அணைத்தாற்போல் பின்னோக்கி இழுத்ததும், “போ கார்த்திக்” என்றவள் வெட்கத்துடன் விலகியதும்...</p> <p>அவனால் என்றுமே மறக்க முடியாத காட்சிகள்... ஆனால் அவளால்... என்று யோசித்துக் கொண்டே அந்த படத்தை பார்த்திருந்தவன் கண்கள் நனைந்தன.</p> <p> ‘பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டு எதுக்குடி இந்த போட்டோவை ஸ்க்ரீன் சேவரா வச்சிருக்க…? நீ என்ன நினைக்குற, என்ன பண்றன்னு ஒண்ணுமே புரியலையேடி எனக்கு?!’ அந்தப் போனை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு புலம்பினான்.</p> <p>அவனுக்குள் கேட்க முடியாத ஆயிரம் கேள்விகள் மின்னலாய் வெட்டின. அந்த நொடி அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தவிப்பு உண்டாக, ஸ்டீயரிங்கை மின்னல் வேகத்தில் திருப்பினான்.</p> <p>கார் மீண்டும் யாத்ராவின் அலுவலகத்தை நோக்கிப் பாய்ந்தது.</p> <p>இன்னும் திறக்கப்படாத அலுவலகம்; அங்கே பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை. ஆதலால் கார்த்திக் நேராக உள்ளே வந்துவிட்டான். அவன் கையில் அவளது அலைபேசி.</p> <p>அதே சமயம் நேற்று இரவிலிருந்து வந்த மன அழுத்தம்… தூக்கமின்மை… அவசரம்… அனைத்தும் சேர்ந்து யாத்ராவைத் தள்ளின. தலை சுற்றியது; உடல் தளர்ந்தது. நிற்கத் திராணி இல்லாமல் விழுந்து விடப் போன அவளை, “ஹேய்… கேர்ஃபுல்…” என்று தோளைப் பிடித்துத் தாங்கிக் கொண்டான் ஆரவ்.</p> <p>மயக்கத்திலிருந்த யாத்ரா, தன் நிலையை உணராமல் கண்களை மூடியபடி அவனது தோள்களில் சாய்ந்து நின்றாள்.</p> <p>அதே நேரம்… கண்ணாடிச் சுவருக்கு அந்தப் பக்கமிருந்து இந்தக்காட்சியைப் பார்த்த கார்த்திக்கிற்கு நெஞ்சை அடைத்தது. அவளைப் பிரிந்தபோது உண்டான வலியை விட, இது பலமடங்கு அதிகமாக வலித்தது. சல்லடை சல்லடையாக அவன் இதயத்தை துளைத்தது.</p> <p>அப்போது அவனுள் எஞ்சியிருந்த காதலும் வேரோடு சாய்ந்துவிட, அதற்கு மேல் அங்கே நிற்கத் துளியும் விருப்பமில்லாமல், அருகே இருந்த காலி மேசையின் மீது அவள் போனைத் தூக்கி வீசிவிட்டு அகன்றான்.</p></blockquote><br> Cancel “மதிப்புகுரியவள்” புத்தம் புது நாவல்… புது களம்… வாசித்து மகிழுங்கள். எனது நூல்களை புத்தகமாக வாங்க 9444462284 பிரியா நிலையத்தை தொடர்பு கொள்ளுங்கள். நன்றி – மோனிஷா