You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

அடுப்படி - மோனிஷா

Quote

அடுப்படி - மோனிஷா

 

 

 

 

 

 

 

 

“நான் அந்த பார்ஃம்ஸ் எல்லாம் அன்னைக்கே செக் பண்ணி கையெழுத்து போட்டேன்... லீவ் முடிஞ்சு வந்ததும் பரோஸஸ் பண்ணிடலாம்” என்று சொல்லும் போதே டம் டமால் என்று வீட்டின் வாயிலில் வெடிக்கும் தீபாவளி பட்டாசு சத்தம் சமையலறைக்குள் தெறித்தது.

“பசங்க பட்டாசு வெடிக்கிறாங்க ரீது... ஒன்னும் கேட்கல... நான் அப்புறம் பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்த தீபா அந்த செல்பேசியை அருகே இருந்த குளிர்சாதனப்பெட்டி மீது வைக்க மீண்டும் டமார் என்று பெரிய சத்தம். தீபாவிற்கு திக்கென்றானது.

“டேய்... எழில்... மனோ... பார்த்து பத்திரம்டா” என்று மகன்கள் இருவரையும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து கண்டிக்க,

“ஓகே ஓகே மா” என்று அவர்களும் அவசர கெதியில் பதில் குரல் கொடுத்துவிட்டு ஓடிவிட்டனர்.  

அடுப்பில் எண்ணெய் தகதகவென காய்ந்துவிட்டிருந்தது. இனி வேலையை தொடங்க வேண்டியதுதான்.  

முறுக்கு குழாயில் மாவை அழுத்தி சுழற்றி ஜல்லி கரண்டிகளில் பிழிந்து அதனை அப்படியே சூடான எண்ணெயில் போட்டாள்.

புஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் அவை பொரிந்து மேலெழும்பியது.

வெளியே லக்ஷ்மி வெடி சிதறும் சத்தம் காதை கிழிக்க, மீண்டும் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். இருவரும் மாற்றி மாற்றி பரபரப்பாக ஓடி ஓடி பட்டாசு வெடிப்பதை பார்க்க பதட்டம் உண்டானது.  

“ஏங்க... கொஞ்சம் பசங்களோட போய் நில்லுங்களேன்... என்னங்க” தீபா திரும்ப திரும்ப அழைத்தும் பதிலில்லை.

“என்னங்க” என்றவள் குரல் கொடுத்தபடி வெளியே வர, மும்முரமாக டிவியில் ஐக்கியமாகி இருந்தான் அவளின் கணவன் ராஜு.

“ம்க்கும்... ரொம்ப முக்கியம் டிவி” என்று கடுப்பில் அவள் முறுக்கு குழாயை அழுத்தி பிழிய எதிர்பாராவிதமாக அது சொடக்கென்று உடைந்துவிட்டது.

“அட கடவுளே... இப்ப என்ன பண்ணுவேன்” என்று அடுப்பை அணைத்துவிட்டு வெளியே வந்தவள் டிவியை அணைத்துவிட்டாள்.  

“ஏன் டி ஆப் பண்ண... படம் நல்லா இருந்துச்சு” 

“நான் அங்கே எண்ணெய் கடாயில வெந்துட்டு இருக்கேன்... நீங்க இங்கே புது படம் பார்த்துட்டு இருக்கீங்களாக்கும்” என்று ஏறியவள்,

“பாருங்க... முறுக்கு குழாய் உடைஞ்சிருச்சு... இப்ப நான் எப்படி முறுக்கு சுடுறது... எல்லாம் உங்களாலதான்” என்றாள்.

“அது உடைஞ்சதுக்கு நான் என்னடி பண்ணுவேன்?”

“கூப்பிட கூப்பிட குரல் கொடுத்தாதானே”

“சரி இப்போ என்ன பண்றது... வேணா போய் புதுசு வாங்கிட்டு வரவா”

“நீங்க வாங்கிட்டு வந்த புது முறுக்கு குழாய்த்தான் இது... அம்புட்டு லட்சணமா வாங்கிட்டு வந்திருக்கீங்க... இரண்டு தடவை போடுறதுக்குள்ள பொடக்குன்னு உடைஞ்சுடுச்சு... எனக்கு புதுசு எல்லாம் வேண்டாம்... மேலே பரண் மேல எங்க அம்மாவோட பழைய சாமான் மூட்டைல கட்டி வைச்சிருக்கு... அதுல கண்டிப்பா முறுக்கு பிழியற குழாய் ஒன்னு இருக்கும்... அதை எடுத்து கொடுங்க”

“சரி எடுத்து தரேன்... வரேன்” என்று அலுத்து கொண்டே மர ஸ்டூல் போட்டு மேலே ஏறிவிட்டு,

“இந்த பச்சை கோணியா?” என்று கேட்டு சிரமப்பட்டு அதனை கீழே இறக்கினான்.

“பா... என்னடி இது... இந்த கனம் கனக்குது”

“அம்மாவும் ஆயாவும் சேர்ந்து பலகார கடை வைச்சிருந்தாங்க... அந்த பாத்திரம்தான் எல்லாம்” என்றவள் அந்த கோணியின் தூசை தட்டி அதன் கட்டை பிரித்தாள்.

வாணலிகள், கரண்டிகள் என பெரிய பெரிய பாத்திரங்களாக இருந்தன. எல்லாமே கறுத்து அழுக்கு படிந்திருந்தன.

“இது உள்ள கண்டிப்பா ஒரு முறுக்கு குழாய் இருக்கணுமே” அவள் சமான்களை குடைந்து தேடினாள். சில நிமிடங்களில் பெரிய முறுக்கு குழாய் தட்டுப்பட்டது.

“பா... கிடைச்சிருச்சு” என்று அதனை எடுக்கும் போது மூட்டையிலிருந்து கருத்து போன ஒரு சிறிய செம்பு குடம் வெளியே வந்து விழுந்தது.

தீபா அதனை கையிலெடுத்து உற்று பார்த்தாள். அந்த குடத்திலிருந்து கணீரென்று ஒரு குரல் கேட்டது.

‘இந்த குடத்துல கொஞ்சம் கொஞ்சமா காசு போட்டு வைச்சு இருக்கேன்... எல்லாம் உம்ம படிப்புக்காகதான்... என்னை மாதிரியும் உங்க அம்மா மாதிரியும் நீயும் அடுப்படில கிடந்து வேவ கூடாது’  அடி ஆழத்திலிருந்து கேட்ட ஆயாவின் குரல் அவளை உலுக்கிவிட்டன.

விழிகளில் நீர் திரண்டது. குடம் விழுந்த சத்தம் கேட்டு திரும்பி வந்த ராஜு,

“தீபா என்னாச்சு?” என்று கேட்க அவள் பதிலின்றி அமர்ந்திருந்தாள்.

அந்த குடத்துடன் தன் கடந்த காலத்திற்குள் அவள் சென்றிருந்தாள். ஆயாவிற்கு பதினெட்டு வயதிருக்கும் போது தாத்தா இறந்து போய்விட தன்னுடைய ஒரே மகளை காப்பாற்ற அவர் பலகாரம் சுட்டு விற்கும் வேலையில் இறங்கினார்.

எப்படியோ வயிற்றை கட்டி வாயை கட்டி அம்மாவை நல்லபடியாக வளர்த்து வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார். ஆனால் யாரின் துரதிஷ்டமோ? அப்பாவிற்கு குடிப்பது சீட்டாடுதல் போன்ற பழக்கங்கள் இருந்தன என்பது தாமதமாகவே தெரிய வந்தது. அப்பா குடித்துவிட்டு அம்மாவை அடித்து கொடுமைப்படுத்திய காரணத்தால் ஆயா அம்மாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.

அதன் பின் அம்மாவின் பிழைப்பிற்கும் அதே பலகார கடை என்றானது. இருவருமாக சேர்ந்துதான் அவளை படிக்க வைத்து ஆளாக்கியது. ஆயாவின் விருப்பத்திற்கு ஏற்றார் போல அவளும் நன்றாக படித்து இன்று தனியார் வங்கியில் பணியில் இருக்கிறாள். ஆயா சொன்ன வார்த்தை மீண்டும் தீபாவின் நினைவில் தட்டியது.

 படித்து விட்டேன். ஆனால் எல்லாம் மாறி போய்விட்டதா?  

“தீபா தீபா....” என்று அவள் கணவன் தோளை உலுக்கி, “என்னடி...  அந்த குடத்துல என்ன இருக்கு... அதை ஏன் அப்படி உத்து பார்த்துட்டு இருக்க” என்று கேட்க தீபா தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு நிமிர்ந்தாள்.

“என்ன கேட்டீங்க... இந்த குடத்துல என்ன இருக்குனா?” என்றவள் அவனை ஆழ்ந்து பார்த்து, “இதுல என் ஆயா இருக்கு” என்று சொல்ல, “ஆயாவா?” என்றவன் புரியாமல் விழிக்க, தீபா மீண்டும் அந்த குடத்தை கோணியின் உள்ளே வைத்து கட்டிவிட்டு,

“இதை மேல எடுத்து வைங்க... எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று முறுக்கு குழாயை எடுத்து கொண்டு முறுக்கு சுடும் வேலையை தொடர்ந்தாள்.  

ஓவியம் - சித்ரா ரங்கராஜன் 

Please leave your comments in the reply box 

 

You cannot copy content