You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. ஆனால் எப்படியும் கூறி தான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. இதுவரை நான் படித்தவற்றில் இருந்து இது சற்று வித்தியாசமாக இருக்கிறது. வெவ்வேறு இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒன்றாக இணைப்பது என்பது மிக கடினமான ஒன்று. கதையின் முதல் பக்கத்தில் ஏதேச்சையாக வரும் கதாபாத்திரங்கள் தான் கதையின் முக்கிய அங்கமாக இருக்க போகிறது என்று எத்தனை பேருக்கு தெரியும். எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் அவனை பர்மா வரை கொண்டு சென்றது. பட்டாளத்தில் நண்பனான ஒருவனின் மனைவி தான் அவனுக்கு கடைசி வரை ஒரு உறவாக வரப் போகிறாள் என்பது அவனுக்கு அப்போது தெரியாது.

போரிலிருந்து தப்பி பிழைத்து தாயகம் திரும்புகையில் நடந்த நண்பனின் மரணம் அவன் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியது. போரால் பெற்றோரை இழந்த ஒரு பச்சிளம் குழந்தை தான் பின்னாளில் அவன் பிறந்த ஊரை தேடி வரப்போகிறான் என்பதை அவன் அறியவில்லை. அவனும், நண்பனின் மனைவியும், போர்க்களத்தில் கிடைத்த குழந்தையும் ஒரு குடும்பமாக புது வாழ்வை தொடங்கினார்கள்‌. பப்பா-மம்மா என்று அந்த குழந்தை அவர்களை சுற்றி சுற்றி வந்தது. பப்பாவின் கடந்தகாலத்தை அறிந்த ஒருவனாய் அந்த குழந்தை இருந்தது.

பப்பா-மம்மா வின் மறைவுக்குப் பின்னர் இத்தனை வருடங்கள் கழித்து அவன் அந்த ஊரையும், அந்த வீட்டையும் தேடிக் கொண்டு வந்தான். அந்த‌ ஊரில் அவனுக்கு ஏற்பட்ட நட்பும், உறவும், பப்பாவின் சொந்தங்களும் அவனை அந்த மண்ணோடு பிணைத்துக் கொண்டது. இதில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒவ்வொரு கருத்தை சுமக்கிறது. ஒவ்வொருவரின் குணாதிசயங்களும், இயற்கையாக இருக்கும் பண்புகளும், சுழ்நிலைக்கேற்ப அவர் எடுக்கும் முடிவுகளும் எங்கோ ஒரு ஓரத்தில் அவனுக்கு பப்பாவை நினைவுப்படுத்தியது.

கடைசி வரை பப்பாவின் கடந்தகாலத்தை பற்றி அவனுக்கு தெரிந்த ரகசியம் வேறு யாருக்கும் தெரிய கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருந்தான். பப்பாவின் நினைவாக அவர் வாழ்ந்த வீட்டையும், ஊரையும் அப்படியே விட்டுவிட்டு போக அவனுக்கு மனமில்லை. புதுப்பித்தான், வீட்டோடு சேர்த்து உறவுகளையும் புதுப்பித்தான். இதில் வரும் மனிதர்களுள் "பேபி" மட்டும் தனித்து விளங்கியவளாக, ஏதோ ஆழமான சிந்தனையை சுமந்தவளாக இருந்தாள். அவனுக்கு மட்டும் தான் "பேபி" யின் மொழிகள் புரிந்திருந்தது. இத்தனை நாளாக அவன் பப்பாவின் மகனாக வாழ்ந்ததற்கான அர்த்தத்தை தேடி அந்த ஊருக்கு வந்தான். கடைசியில் சபாபதியின் மகனாக, அவர் அடையாளங்களை சுமந்தபடி, அவர் வாழ்ந்த வீட்டில், தூரத்தில் ஓடி மறையும் பேபியை பார்த்தபடி நின்றான் ஹென்றி.

REVIEW BY VAISHNAVI

You cannot copy content