You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

மதிப்புக்குரியவள் - அத்தியாயம் 6

Quote

அத்தியாயம் – 6

போர்வைக்குள் முடங்கிக்கொண்ட அஜயிடமிருந்து மெல்லிய குறட்டையொலி கேட்டது. ரஞ்சனுக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து அமர்ந்தவன், பால்கனி கதவைத் திறந்த சத்தமில்லாமல் வெளியே வந்தான்.

பனிச்சாரல் வீசியது. வெள்ளை வெள்ளையாக மேகக் கூட்டங்கள் மலை முகட்டைத் தொட்டபடி நகர்ந்தன. குளிரில் தேகமெல்லாம் சிலிர்த்துக் கொண்டது.

அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி போர்வையைத் தன் மீது சுற்றிக் கொண்டான்.

கவிதாவை நாளை சந்திக்கப் போவதை நினைத்து ஒரு பக்கம் உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தாலும் மறுபக்கம் படபடப்பாகவும் இருந்தது.

‘இந்த மூன்று வருடக் காலகட்டத்தில் அவள் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்கள் வந்திருக்கும். அஜய் சொன்னது போல வேறு யாராவது அவள் வாழ்வில் வந்திருந்தால் என்ன செய்வது?’

இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப அவன் மூளையை குடைந்தது. ஒரு வருட காலம்தான் என்றாலும் அவளுடன் வாழ்ந்த நாட்களை அவனால் மறக்கமுடியவில்லை.

இன்னும் கேட்டால் அவன் வாழ்வின் அழகான நாட்கள் என்றால் அவை  மட்டும்தான்.

அதனாலேயே அவள் நினைவுகளை அவனால் மறக்கவும் முடியவில்லை. கடக்கவும் முடியவில்லை.

அவளுக்கு அப்படி இருக்குமோ? ஏக்கம், காதல், தவிப்பு என்று அவன் உள்ளம் உணர்வதை எல்லாம் அவள் உள்ளமும் உணருமோ?   

அவளுடன் வாழ்ந்த நாள்களை அவன் எப்படி நினைத்து நினைத்து மறுகுகிறானோ அப்படி அவளும் நினைப்பாளா? உருகுவாளா? இல்லை தான் மட்டும்தான் இப்படி எல்லாம் உணர்கிறோமா?

அவளுக்கும் தன் மீது ஈர்ப்போ காதலோ வரவில்லையா?

திருமணத்திற்குப் பிறகு நடந்த விஷயங்களை எல்லாம் ஒவ்வொரு நாளாக அவனுக்குள் காட்சிப்படுத்தினான். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவள் தன்னிடம் ஈர்க்கப்பட்டிருப்பாளா? கணவனாக உணர்ந்திருப்பாளா?

அவன் உள்ளத்தின் கேள்விகளின் பதிலை எல்லாம் அவளுடனான அவனது நினைவுகளில் புகுந்து தேடினான்.

*

பிறந்ததிலிருந்தே ரஞ்சன் வாழ்வில் எதுவும் ஆசைப்பட்டபடி நடக்கவில்லை. நடந்ததில்லை. அப்படியே நடப்பது போலத் தெரிந்தாலும் இறுதியாக ஏதாவது ஒரு இடையூறு வந்து, அந்த விஷயம் தடைப்பட்டுவிடும்.

உதாரணத்திற்கு அவனுடைய கணக்கு டீச்சர் லீலாவதி. அவன் பிரச்னைகளை ஓரளவு புரிந்து கொண்டு, அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தவர்.

ஆனால் அடுத்த இரண்டு மாதத்தில் அப்பாவிற்கு வேலை மாற்றலானது. அவ்வளவுதான். அந்த உறவும் முடிந்து போனது.  இப்படியாக அடிக்கடி நடக்கும் இடமாற்றங்கள் அவன் வாழ்க்கையை நிறையவே பாதித்தன. நிரந்தர நண்பர்கள் என்று யாருமே அவனுக்கு இல்லாமல் போனார்கள். அவனுடைய ஆசை, விருப்பம், கவலை என்று எந்த உணர்வுகளையும் பகிர முடியாமல் போனது. அவன் தனித்திருந்தான்.

பிரகாஷ் தாத்தாவைச் சந்தித்த பிறகுதான் எல்லாம் மாறியது.  அவனுக்கும் மனம் விட்டுப் பேச ஒரு ஆள் கிடைத்தது. அடிக்கடி இருவரும் ரகசியமாகச் சந்தித்துக் கொண்டனர். எப்போது சந்தித்தாலும் அவர் கவிதாவின் புகழ் பாடாமல் இருந்ததில்லை.

‘இப்படியும் ஒரு பெண்ணா?’ என்று பேசி பேசி வியக்க வைப்பார். அவற்றை எல்லாம் அதிசயித்துக் கேட்டவனுக்கு ஒரு நாள் தானே  அவளை மணமுடிப்போம் என்று கற்பனை கூடச் செய்திருக்கவில்லை. ஆனால் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

இருவரும் கையெழுத்து போட, அவர்களது பதிவு திருமணம் நடந்தேறியது.

  ஆனால் அதனை ‘திருமணம்’ என்று சொல்ல முடியுமா? நம்முடைய சமூகத்தில் திருமணம் என்றால் தாலிதானே! பாரபட்சம் இல்லாமல் எல்லா மத, சாதி சடங்களிலும் தாலி உண்டு.

ஆனால் கவிதா, தாலி மாலை எல்லாம் வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டாள். வெறும் கையெழுத்துதான். அந்தக் கையெழுத்து அவன் வாழ்க்கையே தலைகீழாகப் புரட்டிப் போடப் போகிறது என்று அப்போது அவனுக்குத் தெரியாது.

பதிவு திருமணம் முடிந்ததும் சாட்சி கையெழுத்து போட்ட நண்பர்களுக்கு எல்லாம் நன்றி சொல்லிவிட்டு அவனிடம் வந்தாள். நேருக்கு நேராக அவள் நோக்க, அவனுக்கு பதற்றமாக இருந்தது.

 அவள், “போலாமா?” என்று கேட்டாள். அவள் முகத்தைப் பார்க்காமல் தலையை மட்டும் அசைத்தான். கருப்பு நிற காரின் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தாள். எதுவும் பேசாமல் அவனும் அமர்ந்து கொண்டான்.

அந்த கார் வேகமெடுத்தது. ஏனென்று தெரியாமல் அதே வேகத்தில் அவன் இதயமும் அடித்துக் கொண்டது.

அவள் பார்வையைத் திருப்பாமல், “உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று வினவினாள். அவன் திருதிருவென்று விழித்தான்.

“ப்ச் உன்னைத்தான் கேட்கிறேன்... தெரியுமா தெரியாதா?”

அவள் குரல் அதட்டலாக ஒலிக்கவும், அவன் குரல் தந்தியடித்தது. “என்ன... தெரியுமா தெரியாதா?”      

“அதான் என் வயசு... உன்னை விட அதிகம்னு தெரியுமா தெரியாதா?”

என்ன சொல்வது என்று ஒரு நொடி யோசித்தவன் பின்னர், “தெரியும்” என்றான் மெலிதாக.

“தெரியுமா?  தெரிஞ்சும் ஏன் ஒத்துக்கிட்ட?”

“அது... தாத்தா சொன்னாரு”

அவளுக்கு சர்ரென்று கோபம் ஏறிவிட்டது. காரை ஓரமாக நிறுத்தியவள் அவன் புறம் திரும்பி, “லூசாடா நீ” என்றாள்.

அவன் அதிர்வாக திரும்ப, “உண்மையில் நீ ஒரு லூசுதான்” என்றாள். கோபம் வந்தாலும் பேச முடியவில்லை. மீண்டும் காரை கிளப்பியவள், கடுப்புடன் புலம்பிக் கொண்டே வந்தாள்.

“ஐயோ! பிரண்ட்ஸ்கு எல்லாம் இந்த விஷயம் தெரிஞ்சா... கிண்டல் பண்ணுவாங்களே, அதுவும் அஜய்க்கு தெரிஞ்சுதுனா”

அவன் மெதுவாக, “அதெல்லாம் தெரியாது” என்று சொல்லவும் மீண்டும் கோபமாகத் திரும்பி, “அதெப்படி தெரியாம போகும்” என்றாள்.

“இல்..ல, நம்ம சொன்னா...தானே தெரியும்” திக்கித் திக்கி பேசினான்.

“ஒன்னும் சொல்ல தேவையில்லை. நம்ம அப்பாவி மூஞ்சியே காட்டி கொடுத்திரும். நீ என்னை விட சின்ன பையன்னு. நான்தான் முதலயே கவனிக்காம விட்டுட்டேன். அதுவும் நீ ஒற்ற கொம்பு மாதிரி உயரமா இருந்ததால என்னால அந்த மாதிரி யோசிக்க முடியல” என்று அவள் கடுகடுக்க,

“இப்போ என்ன பண்றது?” என்றவன் அப்பாவியாகக் கேட்கவும் அவள் பல்லைக் கடித்தபடி, “என்ன பண்றது, ஒண்ணுமே பண்ண முடியாது. எல்லாம் முடிஞ்சிருச்சு. தட்ஸ் ஆல் ஓவர்” என்றாள்.

அந்த நொடி தூரமாக எதையோ பார்த்தாள். “பைன் ஓகே, எனக்கு ஒரு டீ குடிச்சாதான் என் மூட் கொஞ்சம் பெட்டராகும்” என்று விட்டு காரை நிறுத்தினாள்.

“டீ குடிச்சுட்டு போலாம்”

“நான் டீ... எல்லாம் குடிக்க மாட்டேன்”

“ஓகே, காபி குடி”

“இல்ல நான் டீ காபி எதுவும் குடிக்க மாட்டேன்”

“சார், வேறேன்ன குடிப்பீங்க? போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ்... இப்படியா”

“இல்ல, பால்”

“எது பாலா?” என்று முகத்தை சுருக்கியவள் எரிச்சலுடன், “நீ என்ன எலிமன்டிரி ஸ்கூலை விட்டு வெளியே வரலயா? பைன், என்னத்தையோ குடி, எனக்கென்ன வந்துச்சு” என்று விட்டு காரிலிருந்து இறங்கினாள்.

அந்தத் தேநீரைப் பருகி முடித்ததும் அவள் ஒரு மாதிரி நிதான நிலைக்கு வத்திருந்தாள். அதன் பிறகு அவனை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. நேராக அவர்கள் கார் மருத்துவமனைக்குச் சென்றது.

 தாத்தாவைப் பார்த்து திருமண முடிந்த விவரங்களைக் கூறியவள், “நீங்க ரஞ்சன் வயசை பத்தி முன்னாடியே ஏன் சொல்லல?” என்று அவரையும் பிடித்து கொண்டாள்.

அவர் அமைதியாக அமர்ந்திருக்க, “அப்போ தெரிஞ்சுதான் என்கிட்ட மறைச்சு இருக்கீங்க” என்றாள். அதற்கும் அவரிடம் பதிலில்லை. 

“எங்க அம்மாகிட்டயும் நீங்க இதை பத்தி சொல்லலதானே?” என்று கேட்கவும் தொண்டடையை செருமி கொண்டு, “இல்ல சொல்லல” என்றார்.  

“சொல்லி இருந்தா இந்த கல்யாணத்தை நடக்கவே விட்டிருக்க மாட்டாங்க”

“நீ ஒன்னும் உங்க அம்மா மாதிரி யோசிக்குற ஆள் இல்லயே. அதுவும்  இல்லாம, இப்போ இதெல்லாம் சகஜம்தானே கவி”

“சகஜம்னு நினைச்சு இருந்தா என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம்தானே” என்று அவள் திருப்பி கேட்கவும், பிரகாஷிற்கு பயங்கரமாக இருமல் வந்துவிட்டது. உடனடியாக ரஞ்சன் தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அவர் குடித்து ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

அதற்கு மேல் கவிதா எதுவும் கேட்கவில்லை. இது பற்றிப் பேசி பயனில்லை என்று முடிவுக்கு வந்தவள், “சரி தாத்தா, நான் போயிட்டு நாளைக்கு காலையில் வரேன்” என்று எழுந்து கொண்டாள்.

“நீ வர வேணாம் கவி, நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கலாம். நானே வீட்டுக்கு வந்துடுறேன்”

“ஓகே” என்றவள் எழுந்துவிட்டு ரஞ்சனை பார்க்க, “நான் இங்கிருந்து தாத்தாவை பாத்துக்கிறேன்” என்றான்.

உடனே பிரகாஷ், “என்னை பார்த்துக்கதான் சண்முகம் இருக்கானே” என, “இல்ல தாத்தா, அவரை அனுப்பிடுவோம், நான் இருந்து உங்களை பார்த்துக்கிறேன்” என்றான் ரஞ்சன்.

“வேணாம் ரஞ்சு”

“இல்ல தாத்தா நான் இருக்கேன்” என்று ரஞ்சன் பிடிவாதமாக கூற,

 “அவர்தான் இருக்கேன்னு சொல்றாரு இல்ல, இருக்கட்டும் விடுங்க, நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்று விட்டு கவிதா கிளம்பினாள்.

அவள் வெளியே சென்றவுடன், “அறிவு இருக்காடா உனக்கு” என்று தாத்தா முறைக்க, “அவங்க கூட தனியா போகவே எனக்கு பயமா இருக்கு தாத்தா. முறைக்குறாங்க, கேள்வி மேல் கேட்குறாங்க” என்று ரஞ்சன் கூற, ‘உன்னைய வைச்சுக்கிட்டு’ என்று பிரகாஷ் தலையிலடித்து கொண்டார்.

அடுத்த நாள் மாலை மருத்துவமனையிலிருந்து பிரகாஷை அழைத்துக் கொண்டு ரஞ்சன் வீட்டிற்கு வந்திருந்தான்.

“எப்படி இருக்கீங்க ஐயா. உடம்பு இப்போ பரவாயில்லயா?” என்று கவியின் அம்மா காமாட்சி விசாரிக்க, “எண்ணெய், கொழுப்பான ஐட்டம்ல குறைச்சுக்க் சொல்லி இருக்காங்க. மத்தபடி ஒன்னும் இல்ல” என்றார்.

“அவ்வளவுதானே, நான் பார்த்துக்கிறேங்க ஐயா”

“அதெல்லாம் எதுவும் நீ பார்த்துக்க வேண்டாம் காமாட்சி, சமையலுக்கு வேற ஆள் போட சொல்லி இருக்கேன்”

“என்னய்யா சொல்றீங்க?” காமாட்சி அதிர,  

“உன் பொண்ணு இப்போ என் பேரனோட பொண்டாட்டி, இந்த வீட்டோட எஜமானி” என்றதும் காமாட்சியின் முகம் வாட்டமானது.

“அவ இந்த வீட்டுக்கு என்னவா வேணா இருந்துட்டு போகட்டும். ஆனா நான் எப்பவும் போல இந்த வீட்டோட சமையலகாரியாவே இருந்துட்டு போறேன். வேற யாருக்கும் அந்த வேலையை கொடுத்துடாதீங்க” என்று காமாட்சி கெஞ்சலாக கேட்டார். பிரகாஷிற்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

“அவங்க முடிவை மாத்த முடியாது. விட்டிருங்க.” என்றபடி கவிதா உள்ளே வந்தாள். மகளை பார்த்ததுமே காமாட்சி முகம் கோபமாக மாறியது. உடனடியாக சமையலறைக்கு நகர்ந்துவிட்டார்.

கவிதா சோபாவில் வந்து அமர, “நீ உங்க அம்மாவை கன்வினஸ் பண்ணுவன்னு பாத்தா. நீயும் இப்படி பேசுற” என்று கேட்டார் பிரகாஷ்.  

“அவங்கள எல்லாம் மாத்த முடியாது. விடுங்க, உங்ககிட்ட சில ஆபிஸ் மேட்டர்ஸ் பேசணும்” என்றவள் அலுவலகம் சார்ந்த விஷயங்களைப் பேசத் துவங்கியதுமே,

“நான் உள்ளே இருக்கேன் தாத்தா” என்று ரஞ்சன் கழன்று கொள்ளப் பார்த்தான்.

“ஆபிஸ் விஷயம் பேசும் போது நீ இங்க இருக்கணும். இனிமே இந்த பொறுப்பை எல்லாம் நீதான் பார்த்துக்கணும்” என்று பிரகாஷ் சொல்ல, கவிதா ஏளனமாக உதட்டை வளைத்ததை ரஞ்சன் மட்டும் கவனித்தான்.

அதன்பின் பிரகாஷ், “உட்காருடா” என்று இழுத்து பிடித்து அமர வைக்க, அவன் மௌனமாக அமர்ந்து கொண்டான்.

அவர்கள் உரையாடல் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் நீண்டது. கவிதா சொன்ன எதுவும் ரஞ்சனுக்கு பிடிபடவில்லை.     

அவள் ஒரு வழியாகப் பேசி முடித்து, “சரிங்க தாத்தா, நீங்க ரெஸ்ட் எடுங்க மிச்சத்தை காலையில பேசிக்கலாம்” என்று எழுந்து கொள்ள, “இன்னும் இரண்டு வாரத்துல ரிசாப்ஷன் இருக்கு. உனக்கு தெரியும் இல்ல?” என்று கேட்டார் பிரகாஷ்.  

“தெரியுமே, அதான் யாரோ உங்க பிரண்டு ஈவென்ட் மேனஜ்மென்ட் பண்றாரு. அவர்கிட்ட பேச போறேனு சொன்னீங்களே”

“பேசிட்டேன், அது சம்பந்தமாதான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்”

“ம்ம்ம் சொல்லுங்க”

“இல்ல பேனர், இன்விட்டேஷன்ல எல்லாம் உங்க போட்டோ போடணுமா,  உன்னையும் ரஞ்சனையும் வைச்சு போட்டோ ஷுட் பண்ணனும்னு சொன்னான். அதான் நீ எப்போ பீரியா இருப்பனு”

“நாளைக்கு நான் ப்ரீதான். பெருசா வொர்க் இல்ல. வர சொல்லுங்க. எடுத்துக்கலாம்”

“இல்ல போட்டோ இங்க எடுக்க போறதில்ல”

“அப்புறம்”

“நம்ம ஈஸிஆர் பங்களால வைச்சுக்கலாம்னு. அங்கே லொகேஷன் நல்லா இருக்கும்”

யோசித்தவள் பின்னர், “ஓகே வைச்சுக்கலாம்” என்று தோளைக் குலுக்கி சொல்லிவிட்டு உள்ளே சென்ற கணம், “ஐயோ தாத்தா இந்த போட்டோ ஷூட் எல்லாம் வேண்டாம். ப்ளீஸ் தாத்தா வேண்டாம்” என்று ரஞ்சன் தாத்தா கையை பிடித்துக் கெஞ்சினான்.

“அவளே சரின்னு சொல்லிட்டு போறா, உனக்கு என்னடா”

“எனக்கு போட்டோ பேஸ் கிடையாது தாத்தா. எந்த போட்டோலயும் என் முகம் நல்லாவே இருக்காது. அதுவும் இல்லாம போட்டோவுக்கு எல்லாம் போஸ் கொடுக்கிறது எனக்கு சுத்தமா வராது” என்று ரஞ்சன் பரிதாபமாக கூற, “அதெல்லாம் போட்டோகிராபர் பார்த்துக்குவாரு. நீ டிரஸ் பண்ணிட்டு போய் நின்னா மட்டும் போதும்” என்று சுலபமாக சொல்லிவிட்டார். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content