You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

வெண்மதி வெண்மதியே நில்லு - கா தீரன்

Quote

வெண்மதி வெண்மதியே நில்லு…

புத்தகத்தின் தலைப்பை படித்ததில் இருந்து எனக்குள் ஒரு ஆர்வம். அப்படி இந்த புத்தகத்தில் என்ன தான் இருக்கிறது? படித்து தான் பார்த்துவிடுவோமே என்று வாசிக்க தொடங்கினேன். எதார்த்தமான கதைக்களம், எளிமையான சொல்லாடல் என்பதால் கதையோடு பயணிப்பது சுலபமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது. புத்தகத்தில் இருக்கும் ஓவியங்கள் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். அத்தனை அழகான ஓவியங்கள் அவை. நாம் வாழும் வாழ்க்கையை யாரோ ஒருவர் அழகாக வரைந்து காட்சிப்படுத்தியிருந்தால் எப்படி இருக்கும்! அப்படி தான் இருந்தது அந்த ஓவியங்கள். சரி கதைக்கு வருவோம்...

இது ஒரு அழகான காதல் கதை. ஆனால் வழக்கமான காதல் கதைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானது. காதல் எங்கு எப்போது யாருக்கு யார் மீது வரும் என்பது யாருக்கும் தெரியாது. தெரிந்துக் கொள்ளவும் முடியாது. ஒருவேளை தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாமோ என்னவோ! சில பேருக்கு அது சுகம். சில பேருக்கு அது வலி. யாருக்கு எது என்று கணிக்க முடியாது. ஆனால் எல்லோர் வாழ்க்கையிலும் இந்த காதல் சுகமாகவோ வலியாகவோ வந்தே தீரும். பிரியமானவர்களின் பிரிவும் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தரும். பிடித்தவர்கள் இருந்தாலும் பிரிந்தாலும் வாழ்க்கை யாருக்காகவும் நிற்க போவதில்லை. நகர்ந்துக் கொண்டே தான் இருக்கும்...

வல்லவனும் வெண்மதியும் இதை தான் சொல்கிறார்கள். வல்லவனும் வெண்மதியும் எப்படி சந்தித்தார்கள் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை பற்றியெல்லாம் தெரிந்துக் கொள்ள இந்த புத்தகங்களின் பக்கங்களை கண்டிப்பாக புரட்ட வேண்டும். வல்லவனுக்கும் வெண்மதிக்கும் இடையில் இருந்த காதல் சுகமா இல்லை வலியா! வலியாக இருந்திருந்தால் எப்படி எதிர்க்கொண்டார்கள் இப்படி பல கேள்விகளுடன் தான் என் வாசிப்பை தொடர்ந்தேன். என் கேள்விக்களுக்கான பதில்களை கடைசி பக்கங்களில் கண்டறிந்தேன். புத்தகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி இறுதியில் கூறியிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்க்கைக்கும் புத்தகங்களுக்கும் ஒரு புரியாத பந்தம் இருக்கிறது. அதை தான் அந்த கடைசி பக்க வரிகள் நமக்கு உணர்த்தும். "வெண்மதி வெண்மதியே நில்லு" எனக்கு சொல்லாமல் சொல்லிய இரண்டு விஷயங்கள்...

கடந்து போறது தான வாழ்க்கை…
வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை கடந்துப் போகும் பக்குவத்தை புத்தகங்கள் நமக்கு கொடுக்கும்…

ஒரு வித்தியாசமான காதல் கதை படிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தைப் படிக்கலாம்...

Book: வெண்மதி வெண்மதியே நில்லு
Author: கா.தீரன்

You cannot copy content