You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Amara - Episode 19

19

பாலமுருகனின் கைப்பேசிக்கு ஜெயிடமிருந்து அழைப்பு வந்தது.

“என்ன ஜெய்… விசாரிச்சிட்டுயா? தயாவுக்கு இந்த விஷயத்துல ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா?”

“காலையிலதான் அந்த ஃபோர்ஜரி கேஸ் முடிஞ்சு ஃப்ரீயானேன்… முடிஞ்சதும் முதல் வேலையா நானும் இன்ஸ்பெக்டர் ரவியும் அந்த தயா ஏரியா பக்கம் விசாரிக்கலாம்னு போனோம்… ஆனா அங்கே...” என்றவன் இழுக்க,

“என்னாச்சு ஜெய்?” என்று பதட்டமாகக் கேட்டார்.

“நாங்க போறதுக்குக் கொஞ்சம் முன்னாடி தேவா போய் அந்த தயாவை சாத்து சாத்துன்னு சாத்தி விசாரிச்சிருக்கான்” என, அவர் அதிர்ச்சியானார்.

“என்ன சொல்ற ஜெய்?”

“உண்மையாதான் சார்… தயாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு தெரிஞ்சதும்தான்… அந்த தேவா அவனை உயிரோடவே விட்டுட்டு போனானாம்” என்றான் ஜெய்.

“அப்படியா?” என்று வியப்பான பாலமுருகனுக்கு தன் வீட்டிற்கு வந்த போது தேவா மனநிலை சரியில்லாமல் இருந்தது நினைவுக்கு வந்தது. ஒரு வேளை அவனுக்கு சரியாகி இருக்குமோ என்று யோசித்தபடி மௌனமாக இருக்க,

“சார்” என்று ஜெய் அழைத்தான்.

“ஆ…சொல்லு ஜெய்”

“இப்போ என்ன பண்ண போறோம்?”

“தெரியல… எதுக்கும் ஆல்வின்கிட்ட இருந்து ரிப்ளை ஏதாவது வருதா பார்த்துட்டுச் சொல்றேன்”

“ஓகே சார்”

பாலமுருகன் இணைப்பைத் துண்டித்துவிட்டு ஹரீஷின் அலுவலக அறை நோக்கி நடந்தார்.

அந்தப் பிரச்சனைகள் நடந்து முடிந்த பிறகு வீட்டில் யாரும் சரியாக முகம் பார்த்துப் பேசி கொள்ளவில்லை. ஒருவித இறுக்கமான சூழல் நிலுவியது.

அதுவும் கீதா அமிர்தாவை மருமகளாக ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்று முடிவாக சொல்லிவிட்டார். அதற்கு பிறகு ஹரீஷ் வீட்டில் சாப்பிடுவதைக் கூட நிறுத்திவிட்டிருந்தான். அதிக நேரம் வீட்டில் இருப்பதையும் தவிர்த்தான்.

இதற்கிடையில் ஹரீஷ் நேற்று தன் தந்தையிடம் ஆல்வினின் புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டான். அவர் யோசித்துவிட்டு இல்லையென்றதும் மறுவார்த்தை பேசாமல் வந்துவிட்டான்.

இந்த ஆல்வின் அமரா பிரச்சனையில் என்னதான் நடக்கிறது என்று பாலமுருகனால் எந்தவொரு யூகத்திற்கும் வர முடியவில்லை.

நல்ல வேளையாக ஹரீஷ் வீட்டில் இருக்கவே அவர் அவனின் அலுலவக அறை கதவைத் தட்டி, “ஹரீஷ்” என்று அழைக்க,

அவன் மெல்ல நிமிர்ந்து பார்த்துவிட்டு, “உள்ளே வாங்க பா” என்றான். இருவரும் ஒரு மாதிரி இறுக்கமான பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

அவர் அவன் அருகே வந்து நின்று, “தேவாவுக்குக் குணமாயிடுச்சா ஹரீஷ்” என்று நேரடியாக விஷயத்திற்கு வர,

“ஹ்ம்ம்…ஹீ இஸ் ஓகே நவ்… முந்தா நாள் கொஞ்சம் நார்மலா பேசுனான்… அமிர்தாவை அமி இல்லனு தெரிஞ்சுக்கிட்டான்”என்று அவர் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லும் நோக்கில் பேசியவன் மீண்டும் லேப்டாப்பில் தலையை நுழைத்துக் கொள்ள,

“ஹரீஷ்” என்று அழைத்தார்.

இன்னும் என்ன என்பது போல அவன் அலட்சியமாக நிமிர, “உனக்கு அமிர்தா… ரைட் சாய்ஸ்தான் ஹரீஷ்… அந்தப் பொண்ணோட பேச்சு… நேர்மை… தைரியம்… எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு” என்றவர் சொல்ல,  

அவன் ஆச்சரியத்துடன் எழுந்து நின்று, “நிஜமா சொல்றீங்களா பா” என்று கேட்டான்.

“எஸ்… ஆனாலும் நீ உங்க அம்மா கன்வின்ஸ் ஆகுற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணு”

“அம்மா மேல நான் கொஞ்சம் கோபமா இருக்கேன்தான்… ஆனா அதுக்காக அவங்க சம்மதம் இல்லாம நான் எதுவும் செய்யமாட்டேன்பா” என்றான்.

“குட்” என்றபடி அவனை மெச்சுதலாகப் பார்த்தவர், “சரி… நீ ஏதோ முக்கியமா வேலை பார்த்திட்டு இருந்த போல… கன்டினியூ” என்று சொல்ல,

“தேங்க்ஸ் பா” என்றான்.

அவர் அந்த அறை வாசல் வரை சென்றுவிட்டு மீண்டும் திரும்பி, “ஆ… ஹரீஷ்… எனக்கு அமிர்தாவையும் தேவாவையும் மீட் பண்ணி பேசணும்… ஆல்வின் விஷயமா?” என்றவர் நிறுத்தி,

“ஆனா உங்க அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்… அரேஞ் பண்ணு” என, அவனும் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.

அவர் வெளியே சென்றதும் ஹரீஷிற்கு எழுந்து ஒரு குத்தாட்டம் போட வேண்டும் போல சந்தோஷம் பொங்கியது. உடனடியாக அமிர்தாவை நேரில் சந்தித்து இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்று புறப்பட்டுவிட்டான்.

அவர்கள் தங்கியிருந்த பங்களாவின் பால்கனியில் நின்று கொண்டு கடலை வெறித்தபடி இருந்தான் தேவா. பொங்கிப் பெருகும் அந்த அலைகளின் சத்தம் அவன் மனதிற்குள் அழுத்திக் கொண்டிருந்த சோகத்தை மட்டுப்படுத்தியது போலிருந்தது. 

அன்று காலைதான் அவன் தயாவைத் தேடிச் சென்றான். அமிர்தா வேண்டாமென்று தடுத்த போதும் எந்தப் பிரச்சனையுமின்றி திரும்பி வந்துவிடுவதாக உறுதி கூறிவிட்டுச் சென்றான்.

அவனுக்கு யாரை எப்படி ஸகெட்ச் போட்டுத் தூக்குவது என்று நன்றாகத் தெரியும். சரக்கை மாற்றுவது முதல் பெரிய அரசியல் தலைகள் ரவுடிகளைக் கடத்துவது வரை அவன் ஒரு திட்டமிடல் செய்து தந்தால் அது பிசகவே பிசகாது. 

அந்தளவு மிக நுணுக்கமாக ஆராய்ந்து திட்டமிட்டு செயலாற்றுவதுதான் தேவாவின் ஸ்டைல். அதனால்தான் தயா அவனை தன் வலதுகரமாக வைத்திருந்தான்.

அந்த வகையில் தேவாவிற்கு தயா எங்கே செல்வான் எப்படி செல்வான் எந்த இடத்தில் தன் படையுடன் இருப்பான் எங்கே தனியாக இருப்பான் என்பதெல்லாம் அத்துப்படி. அதற்கேற்றார் போல அவனைச் சரக்கு குடோனில் தனியாக இருக்கும் போது தேடிக் கண்டுபிடித்து, துவைத்து எடுத்துவிட்டான்.

“எனக்கும் இது எதுக்கும் சம்பந்தம் இல்ல தேவா” அவனோ காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கதற,

தேவா நம்பாமல் அவன் கை விரல்களை முறிக்க “தேவா வலிக்குது வலிக்குது” என்று துடித்தவன்,

“சத்தியமா நான் இல்ல தேவா… நான் வேற பிரச்சனைல மாட்டிக்கினேன்… நீ கமிஷனர் வூட்டுல கீறன்னு தெரிஞ்சதும் சரக்கு இருக்க இடத்தை எங்கே போட்டுக் குடுத்துடபோறியோன்னு பயந்து அதை இடம் மாத்த போய்… என் கெட்ட நேரம்… வண்டி சரக்கோட கவுந்து போலீஸ்கிட்ட மாட்டிச்கிச்சு… அதான் நான் தலைமறைவாகிட்டேன்… இப்பதான் பிரச்சனை கொஞ்சம் சரியாகி நான் வெளியேவே தலை காட்டுறேன்… சத்தியமா நான் சொல்றது உண்மை.” என்று வெலவெலத்துச் சொல்ல, ஒரு நொடி தேவா தயங்கி நின்றான்.

முன்னமே அவன் நண்பன் மாஸிடம் கேட்ட போதும் அவனும் இதைதான் சொன்னான். ஒரு வகையில் இதில் தயாவின் கைங்கரியம் எதுவும் இல்லையென்று தெளியவும் அவனை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து செல்ல பார்த்தவன் மீண்டும் திரும்பி எச்சரிக்கையுடன்,

“நான் அடிச்சதை மனசுல வைச்சிக்குன்னு ஏதாச்சும் எனக்கு எதிரா பண்ணணும்னு நினைச்ச… இதுவரைக்கும் உன் இரகசியம் எதையும் நான் சொல்லல… சொன்னேனா உன் சமாராஜ்ஜியமே காலி… பார்த்துக்கோ” என்று மிரட்டிவிட்டு நகர்ந்தான். தயா கதிகலங்கிப் போனான். ஏற்கனவே தேவா இல்லாமல் அவன் தொழில் சரியாகப் போகவில்லை. இதில் இப்படியொரு மிரட்டலை அவன் எதிர்கொள்ள தயாராக இல்லை என்று அவன் முகத்தில் படர்ந்த பயரேகையே காட்டிக் கொடுத்தது.

தேவா இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த சமயம் அமிர்தா, “தேவா” என்றபடி அருகில் வந்து நின்றாள்.

இந்த இரண்டு நாட்களாக அவனைப் பேசிப் பேசி சகஜ நிலைக்கு அவள் கொண்டு வர முயன்றாலும் அவனால் அது அத்தனை சுலபமாக முடியவில்லை. ஆனால் அமிர்தா விடாமல் அவனுக்குத் தைரியமும் நம்பிக்கையும் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் நிமிர்ந்து அவள் முகம் பார்த்த போது கள்ளங்கபடமில்லாமல் அவள் தந்த புன்னகை ஒரு நொடி அமியைப் பார்த்தது போன்றதொரு உணர்வில் அவனைத் திளைக்க செய்ய, சட்டென்று தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

அமிர்தாவோ அவன் கரத்தின் மீது கைப் பதித்து, “கவலைபடாதே தேவா… கண்டிப்பா அமியைக் கண்டுபிடிச்சிடலாம்” என்று அவனுக்கு ஆறுதல் கூற,

தன் கரம் பற்றிய அவளின் மிருதுவான விரல்களைப் பார்த்தவனுக்கு அமியின் தீண்டல் உணர்வில் செறிந்த காதலும் மோகமும் ஒரு சேர சுரந்த உணர்வு.

மெதுவாக தன் கரத்தை விலக்கிக் கொண்டவன், “என்னான்ட இருந்து நீங்க கொஞ்சம் தள்ளி நின்னே பழகுங்க மேடம்” என,

மறுகணமே அவள், “என்னை மேடம்னு கூப்பிடாதே… அமிர்தான்னு கூப்பிடுன்னு சொல்லி இருக்கேன் இல்ல” என்று கண்டிப்புடன் கூற,

“நான் முயற்சி பண்ணிப் பார்த்தேன்… ஆனா எனக்கு அப்படி கூப்பிட வரல மேடம்” என்றவன் தயக்கத்துடன் தெரிவிக்க,

அவனை ஏறஇறங்க ஒரு பார்வை பார்த்தவள், “அது சரி… நான் எதுக்கு உன்கிட்ட இருந்து தள்ளி நின்னு பழகணும்னு சொன்னே?” என்று கேட்டாள்.

“அது வந்து” என்று அவன் தயக்கத்துடன் தடுமாறியபடி, “உங்களுக்கும் அமிக்கும் நிறைய வித்தியாசம் கீது… நீங்க பேசுற ஸ்டைலு உங்க நிறம் நீங்க போட்டுன்னுகீற ட்ரஸ்னு… அதேசமயம் நிறைய ஒத்துமையும் கீது… அதுவும் நீங்க பார்க்கும் போது சிரிக்கும் போது அப்படியே எனக்கு அமி நியாபகம் வருது… அது ஒரு மாதிரி சங்கடமா கீது” என்று சொல்லிவிட்டு தலை கவிழ்ந்து கொள்ள, அவள் மெல்லிய புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.

“எனக்கு உன் ஃபீலிங்க்ஸ் புரியுது தேவா… நீ உன் மனைவியை ரொம்ப ரொம்ப ஆழமா மிஸ் பண்ற… இதெல்லாம் அதோட ஸிம்டம்ஸ்தான்” என்று தெளிவுபடுத்தியவள்.

“நான் உனக்கு காபி எடுத்துட்டு வரேன்… ரிலாக்ஸ்” என்றவன் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் செல்ல அவன் வியப்புடன் அவள் செல்வதையே பார்த்திருந்தான்.

சில நிமிடங்களில் காபியுடன் வந்து, “இந்தா எடுத்துக்கோ” என, அவள் முகத்தை அவன் கேள்வியாகப் பார்த்தான்.

“ம்ம்ம்… குடி” என்று அந்த காபியை அவன் கையில் வைக்க அவன் அதனைக் குடிக்காமல் உற்றுப் பார்த்தபடியே இருந்தான்.

“இப்படியே காபியை உத்துப் பார்த்துட்டு இருந்தா அது ஆறிப் போயிடும்… அப்புறம் சத்தியமா அதைக் குடிக்க முடியாது… நான் போடுற காபியை சாதாரணமாகவே குடிக்க முடியாது… இதுல நீ அதை ஆற வைச்சு குடிச்சா கன்றாவியாயிருக்கும்” என்றவள் சொல்ல அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

அமைதியாக அந்த காபியைப் பருக, “காபியைக் குடிச்சிட்டு உங்க இரண்டு பேரோட லவ் ஸ்டோரிய சொல்லேன் கேட்கலாம்” என்று கேட்க,

“லவ் ஸ்டோரியா?” என்று வியப்பானான்.

“ம்ம்ம்… எஸ்… எஸ்… அமியை நீ மீட் பண்ணதுல இருந்து மேரேஜ் பண்ண வரைக்கும்” என்று கேட்க அவன் சங்கடமாகப் பார்த்தான்.

“என்கிட்ட சொல்ல கூடாதா தேவா” என்றவள் கொஞ்சம் முகம் சுணங்கிக் கேட்ட நொடி,

“இல்ல சொல்றேன்” என்று அவன் ஆரம்பிக்க வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

“ஜஸ்ட மினிட்” என்று எழுந்து சென்று பார்க்க வாயிலில் ஹரீஷ் வந்திருந்தான்.

“ஏ ஹரீஷ்… வா வா” என்று அவனை உற்சாகமாக வரவேற்று அவள் உள்ளே அழைத்து வர, அவன் தனக்கு எதிரே நின்றிருந்த தேவாவை எரிச்சலுடன் பார்த்தபடி நுழைந்தான்.

தேவா அந்த நொடியே அங்கிருந்து செல்லவும்,

“தேவா இரு… எங்கே போற?” என்றவள் அழைக்கும் போது அவன் உள்ளே நகர்ந்துவிட்டான். தன்னை அவனுக்குப் பிடிக்கவில்லை என்று தேவா ஓரளவு புரிந்து கொண்டிருந்தான். 

“அவன் போகட்டும் விடு…. நீ வந்து உட்காரு… வா… நான் உன்கிட்ட ஒரு ஹாப்பியான நியூஸ் சொல்லலாம்னு வந்திருக்கேன்” என்று ஹரீஷ் உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே ஃசோபாவில் அமர,

“என்ன அது ஹாப்பியான நியூஸ்?” என்றவள் அவன் முகம் பார்க்க,

“சொல்றேன்… நீ இப்படி வந்து உட்காரு” என்றவன் அவள் கரத்தைப் பிடித்து இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான்.

“ஹரீஷ்” என்றவள் விலகிப் போக அவன் விடாமல் அவளை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு,

“எங்க அப்பா உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு… கிட்டத்தட்ட அவர் நம்ம மேரேஜ்க்கு சம்மதம் சொன்ன மாதிரி” என்றான்.

“நிஜமா சொல்றியா ஹரீஷ்” என்றவள் அப்போது அவன் அணைப்பை மறந்து வியப்புடன் திரும்ப,

“ம்ம்ம்” என்று ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.

அந்தக் கணத்தில் பிரகாசமாக அவள் முகம் ஒளிர்ந்ததில் இரசனையாக அவளை நோக்கினான். அவள் கண்களில் மின்னிய காதல் அவனை மதிமயங்க செய்திட தன் மடியிலிருந்தவளின் இடையினை வளைத்துப் பிடித்து மற்றொரு கரத்தில் அவள் பின்னங்கழுத்தின் முடி கற்றைகளுக்குள் விரல்களை நுழைத்து அவள் செவ்விதழ்களில் தம் உதடுகளை இணைத்துக் கொண்டான்.

அவன் அணைப்பை உணர்வதற்கு முன்னதாக அவன் உதடுகள் அவளுடன் சங்கமிக்க அவளும் தன்னை மறந்து அவன் கரங்களுக்குள் நெகிழப் பார்த்தவள் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, “விடு ஹரீஷ்” என்று அவன் பிடியிலிருந்து விலகி வந்தாள்.

“அமிர்து” என்றவன் கொஞ்சலும் கெஞ்சலாக நெருங்க,

“ப்ச்… உங்க அம்மா சம்மதம் சொன்னாங்களா? அதுக்குள்ள என்னடா உனக்கு அவசரம்?” என்றபடி தன் கரத்தைக் குறுக்கே வைத்து மறித்தாள்.

“எல்லாம் சொல்லிடுவாங்க” என்றவன் மீண்டும் அவளை நெருங்கவும்,

“டேய்… தேவா உள்ளே இருக்கான்” என்று தடுத்துவிட்டுத் தள்ளிவந்து நின்று கொள்ள,

“அவனை எதுக்குடி நீ வீட்டோட வைச்சு இருக்க? அனுப்ப வேண்டியதுதானே?” என்று ஹரீஷ் வெடுக்கென்று கேட்ட மறுகணம் அவள் கோபத்துடன்,

“ஷட் அப் ஹரீஷ்… உன்கிட்ட இப்படி பேசாதேன்னு ஏற்கனவே நான் வார்ன் பண்ணி இருக்கேன்” என்று காட்டமாகக் கத்த,

“அவன் யாரு உனக்கு?” என்று ஹரீஷ் பதிலுக்குக் கூச்சலிட, அடுத்த சில நிமிஷங்கள் இருவரும் தாறுமாறாக வார்த்தைகளை வீசிக் கொண்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹரீஷ் தன்னுடைய கடைசி அஸ்திரமாக, “உனக்கு நான் முக்கியமா, அவன் முக்கியமாடி?” என்று வினவ, அமிர்தா அமைதியாக நின்றாள்.

“இந்த மௌனத்துக்கு என்ன அர்த்தம்” என்றவன் மீண்டும் வினவ,

“உன் மனசுக்கு என்ன தோணுதோ அதையே நீ அர்த்தமா வைச்சுக்கோ” என்றதும் அவன் முகம் விழுந்துவிட்டது.

“அப்போ… நான் உனக்கு முக்கியம் இல்ல” என்றவன் குரல் கனத்த வேதனையுடன் கேட்க, அவள் அமைதி காத்தாள். அவளின் கோபமான வார்த்தைகளை விட, அந்த அமைதி அவனைக் கொன்றது.

அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கே நின்றால் தனக்கு மரியாதை இல்லையென்று ஹரீஷ் வெளியேறிவிட்டான். அவர்களின் உரையாடல்களின் கடைசி சில வாக்கியங்கள் தேவாவின் காதில் விழ அவன் கவலையுடன் அமிர்தாவின் முன்னே வந்து நின்று,

“என்னால உங்களுக்குள்ள இன்னாத்துக்குப் பிரச்சனை… நான் இங்கிருந்து போயிடுறேன் மேடம்” என்றதும் அவனை ஆழ்ந்து பார்த்து,

“நீ எங்கே போவ? இல்ல எப்படி உன் மனைவி அமராவைத் தேடுவ தேவா?” என்று கேட்டாள். அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலிலில்லை.

“நம்முடைய ரோஷமோ கோபமோ இங்கே இப்போ முக்கியம் இல்ல தேவா… காரியம்தான் முக்கியம்… அமராவைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுதான் முக்கியம்… அதுவுமில்லாம ஹரீஷ் பேசறதை எல்லாம் நீ சீரியஸா எடுத்துக்காதே… அவனோட கோபமெல்லாம் இந்தத் தெருவைத் தாண்டுற வரைக்கும் கூட தாங்காது… நான் ஒரே ஒரு கால் பண்ணேனா கிளம்பி வந்துடுவான்… ஸோ ப்ரீயா விடு”

”நம்ம இப்போதைக்கு அமராவைத் தேடுற வேலையைப் பார்ப்போம்… அதுக்கு எனக்கு முதல ஆல்வினோட ஃபோட்டோ வேணும்… அதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு யோசி” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

அமிர்தா செல்வதைப் பெருமூச்சுடன் பார்த்திருந்தவன் கடைசியாக அவள் குறிப்பிட்ட ஆல்வின் படத்தைப் பற்றிய நினைவு வர, “மேடம் மேடம்… கமிஷனர் சார் வூட்டு வாசல சிசிடிவி கேமரா ஒன்னு கீது” என்றவன் பரபரப்புடன் அவளை அழைத்துச் சொல்ல,

“நிஜமாவா தேவா?” என்று கேட்டாள்.

“முத தபா போன போதே… வாசல்ல நான் பார்த்தேன்” என்றதும் அவள் உற்சாகத்துடன்,

“நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா ஆல்வினோட ஃபுட்டேஜ் அதுல ரெகார்ட் ஆகி இருக்கும்” என்றவள் ஹரீஷுக்கு முயற்சி செய்ய அவன் அழைப்பை ஏற்கவில்லை.

“ஹரீஷ் ஃபோனை எடுக்கல… நான் மெஸெஜ் போட்டு விடுறேன்… அவனே பார்த்ததும் கூப்பிடுவான்” என்றவள் தேவாவிடம் தெரிவிக்க, அவள் சொன்னது போலவே ஹரீஷ் அந்தத் தகவலைப் பார்த்துவிட்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஆல்வின் புகைப்படத்தை அந்தக் கண்காணிப்பு கேமராவிலிருந்து எடுத்து அமிர்தாவுக்கு அனுப்பி வைத்துவிட்டான்.

அதனைத் திறந்த பார்த்தவளின் முகம் கடினப்பட்டது. கோபத்தில் தாடை இறுகி உதடுகள் துடித்தன.

வெகுநேரம் அந்தப் படத்தைப் பார்த்தபடி சிலையென அமர்ந்துவிட்டவளை, “இன்னா மேடமாச்சு… எதனாச்சும் பிரச்சனையா?” என்று தேவா விசாரிக்க அவள் தன் செல்பேசியிலிருந்த அந்தப் படத்தைக் காட்டினாள்.

அதனைப் பார்த்த நொடி அவன் அவர்தான் ஆல்வின் என்று உறுதிப்படுத்த, அவள் கண்களில் உஷ்ணமேறியது.

akila.l and lalithamani.g have reacted to this post.
akila.llalithamani.g

You cannot copy content