You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Amara - Episode 25

25

மாநில அரசின் உதவியுடனும் அங்கீகாரத்துடனும் இயங்கும் ‘அமரஜோதி’ என்ற ஆதரவற்ற இல்லத்தில் வளர்ந்தவர்கள்தான் அமுதாவும் சாராவும்.

சாராவின் பத்தாவது வயதில் அவளின் பெற்றோர் சாலை விபத்தில் இறந்துவிட, அவளுடைய உறவினர்கள் யாரும் அவளைப் பார்த்து கொள்ள முன்வரவில்லை. ஆதலால் அவளின் சித்தப்பா இங்கே கொண்டு வந்து அவளைச் சேர்ப்பித்துவிட்டார்.

அந்த நொடியே சாரா நொறுங்கிப் போய்விட்டாள்.

பெற்றோர்களின் இழப்பு உறவினர்களின் நிராகரிப்பு இரண்டையும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் மனதளவில் தவித்துப் போனாள். இத்தகைய மனநிலையில் அவள் அவதியுற்ற போதுதான் அவளுக்கு அமுதாவின் நட்பு கிடைத்தது.

தினமும் இரவு அழுது கொண்டிருந்த சாராவை சமாதானப்படுத்தி ஆதரவாகப் பேசி அவளைத் தேற்றி இயல்பு நிலைக்குக் கொண்டு வந்திருந்தாள் அங்கேயே வளர்ந்த பெண் அமுதா.

அமுதா பிறந்த போதே பெற்றோரால் தூக்கியெறியப்பட்ட ஆதரவற்ற ஜீவன். ஆதரவற்ற இரு பெண்களும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக தோள் கொடுத்துக் கொண்டதன் விளைவுதான் அவர்களுக்கு இடையில் மலர்ந்த அழகான நட்பு. 

அமுதாவின் ஆர்வம் அறிவியல் என்றால் சாராவுக்கு முழுக்க முழுக்க தமிழ் இலக்கியம்.

“வாழ்க்கையில எதையாச்சும் பெருசா டிஸ்கவர் பண்ணணும்… சாதிக்கனும்” என்ற அமுதா மொழிய,

“உலகத்தை எக்ஸ்ப்ளோர் பண்ணனும் செல்லம்… அணு அணுவா வாழ்க்கையை இரசிச்சு வாழனும்” என்று ஏட்டிக்குப் போட்டியாகப் பேசுவாள் சாரா.

இருவரும் வெவ்வேறான விருப்பங்கள் சிந்தனைகள் கொண்டவர்களாக இருப்பினும் அவர்களின் தோழமை ஆழமானதாக இருந்தது.

அத்தகைய இவர்களின் நட்பின் பயணம் ஒரு நாள் முடிவுக்கு வந்தது.

சாரா தான் காதலித்த இளைஞனுடன் மும்பைக்குப் புறப்பட ஆயத்தமாக, அமுதா நொறுங்கிப் போனாள்.

தோழி கண்ணீரில் கரைவதைப் பார்த்த சாரா, “என்ன அம்முக்குட்டி… நாம எல்லோரும் ஏதோவொரு சந்தரப்பத்துல இப்படியொரு பிரிவைச் சந்திச்சுதானே ஆகணும்… நீயும் கூட அமெரிக்கால இருக்க ஜெனிடிக் ரிசர்ச் செனட்ர்ல் சேரணும்னு சொல்லிட்டு இருந்ததானே” என்று கூற,

“ஓ! நான் அப்படி சொன்னதுக்குதான்… என்னைப் பழி வாங்க நீ முந்திக்கிட்டியா?” என்று அமுதா விசும்பிக் கொண்டே கேட்க,

“சத்தியமா இல்ல அம்மு குட்டி” என்று சாரா செல்லமாகத் தோழியின் கன்னம் கிள்ளினாள்.

“போடி” என்று அவள் கையைக் கோபமாக அமுதா தட்டிவிட,  

சாரா முகத்தைச் சுருக்கிக் கொண்டு, “என்ன இப்போ… நான் போக வேண்டாமா?” என்று இறங்கிய குரலில் கேட்கவும் அமுதாவின் முகம் பிரகாசமானது.

“ஆமான்டி போகாதடி” என்றவள் தோழியின் கைகளைப் பற்றிக் கெஞ்சத் தொடங்க,

“விளையாடாதே அம்மு… கிஷோர் ஸ்டேஷன்ல எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பான்… நான் போகலனா அப்செட் ஆகிடுவான்” என்று சாரா கூற மீண்டும் அமுதாவின் முகம் வாடியது.

“அப்படினா அவ்வளவுதானா? இதோட முடிஞ்சுதா நம்முடைய ஃப்ரண்ட்ஷிப்”

“அப்படி எல்லாம் இல்ல அம்மு… நான் கிஷோர் வீட்டுக்குப் போறதே அவங்க அம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்ணி எங்க கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கதான்… இல்லாட்டி அவ அத்தைப் பொண்ணு யாரோ மாயாவோ ஸ்ரேயாவோ…  அவளைப் பிடிச்சு அவனுக்குக் கட்டி வைச்சுருவாங்க”

“அவங்க வீட்டுல கன்வின்ஸ் ஆகிடுவாங்களா?” அமுதா கவலையுடன் கேட்க,

“கிஷோர் அக்கா ரொம்ப நல்லவங்க… என்கிட்ட அவங்க ஃபோன்ல  பேசுனாங்க… நீ கிளம்பி வா… உங்க இரண்டு பேருக்கும் அம்மா அப்பாக்கிட்ட பேசி கல்யாணத்தை முடிவு பண்றது என் பொறுப்புன்னு சொன்னாங்க… ஸோ ஒன்னும் பிரச்சனை இல்ல.”

”எப்படியும் கன்வின்ஸ் பண்ணிடுவோம்… அப்புறம் மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணதும் உன்னையும் வந்து கூட்டிட்டுப் போறேன்” என, அமுதாவின் முகம் யோசனையாக மாறியது.

சாரா தன் தோழியின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “சொந்த பந்தம்னு ஒரு பெரிய குடும்பத்துல வாழணும்கிறது என்னோட கனவுன்னு உனக்கு தெரியும்ல அம்மு… இப்போ அந்தக் கனவு நடக்கப் போகுதுன்னு நானே சந்தோஷத்துல இருக்கேன்… நீ என்னடானா” என்று இழுக்கவும் அமுதா தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு,

“நீ நினைச்சபடியே எல்லாம் நடக்கணும்… ஆல் தி பெஸ்ட்” என்று தோழியைக் கட்டிக் கொள்ள,

“உனக்கும் ஆல் தி பெஸ்ட்… நீ நினைச்ச மாதிரி அமெரிக்கா போகணும்… இதோ இந்தப் பணத்தை வைச்சுக்கோ” என்று சில பணக்கட்டுக்களை அவளிடம் கொடுத்தாள்.

அமுதா அதிர்வுடன் அதனைப் பார்க்கவும் சாரா மேலும், “என் பாட்டி தாத்தா வீட்டை வித்ததுல நான் சண்டைப் போட்டு வாங்குன என்னோட பங்கு… நாலு லட்சம்… அதுல இரண்டு லட்சம் உனக்கு” என்றாள்.

அமுதா நெகிழ்ச்சியுடன் கண்கள் கலங்கிய போதும் அந்தப் பணத்தை வாங்க மறுத்து, “இல்ல சாரா… இது உன்னோட பணம்… உனக்கு தேவைப்படும்” என்று கூற,

“என்னோட பணமா… என்னைக்காவது என்னோட பொருள் உன்னோட பொருள்னு தனித்தனியா இருந்திருக்கா… டிரஸ்ல தொடங்கி நம்ம சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் எல்லாத்தையும் இதுநாள் வரை ஷேர் பண்ணிட்டு இருந்திருக்கோம்தானே… அப்புறம் என்ன? இது மட்டும் என் பணம் உன் பணம்னு… இது நம்ம பணம்… வாங்கிக்கோ” என்றவள் அந்தப் பணக்கட்டை அமுதாவின் கையில் திணிக்க,

“ப்ளீஸ் சாரா…. வேண்டாம் சாரா” என்று அவளின் மறுப்பை சாரா பொருட்படுத்தாமல் அதனை அவள் கையில் திணித்தாள்.

“நான் உன்னோட ஃப்ரண்டுனா நீ இந்தப் பணத்தை வாங்கித்தான் ஆகணும்” என்று கட்டாயப்படுத்த அமுதா மறுக்க முடியாமல் தவிப்புடன் அவளை ஏறிட்டாள்.

“சரி சரி கிஷோர் ஸ்டேஷன்ல வெயிட் பண்ணுவான்… நான் கிளம்பணும்… டைமாச்சு” என்று சாரா பரபரக்கவும் அமுதா அவளைக் கட்டியணைத்து வழியனுப்பி வைத்தாள்.

அன்றிலிருந்து அந்தத் தோழிகளின் பாதைகள் வெவ்வேறு திசையில் பிரிந்துவிட்டன.

ஊருக்கு சென்றதும் நான் வந்து சேர்ந்துவிட்டேன். இடம் வசதியாக இருக்கிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். என்று ஒன்றிரண்டு முறை தொலைப்பேசியில் இருவரும் பேசிக் கொண்டனர். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு தொலைப்பேசி தொடர்பும் அவர்களுக்கு இடையில் அறுந்து போனது.

இந்தியாவில் பெரிதாக செல்பேசிகள் பிரபலமடையாத சூழல் என்பதால் இருவரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட, திருமணத்திற்கு அழைக்கிறேன் என்று சொன்ன தோழி அதன் பின் தன்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை என்று கவலையில் ஆழ்ந்தாள். 

இப்படியாக ஒவ்வொரு நாளும் தோழியின் அழைப்பிற்காகக் காத்திருந்த அமுதா ஒரு நிலைக்கு மேல் அவள் தன் கல்யாண வாழ்க்கையில் மும்முரமாகி இருக்க கூடும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டுவிட்டாள்.

அதன் பின் அவள் தன் முழு கவனத்தைப் படிப்பில் செலுத்த தொடங்கினாள். தேர்வுகளைச் சிறப்பாக எழுதி தன் கல்லூரியிலேயே சிறந்த மாணவியாகத் தேர்வானவளுக்கு நல்ல சம்பளத்துடன் பெங்களூரில் வேலை கிடைத்தது.

இருப்பினும் அவள் படித்தப் படிப்பிற்கு இந்தியாவில் பெரிதாக வாய்ப்புக்கள் இல்லை என்பதால் கனடாவில் உள்ள மரபணு ஆய்வு கூடத்திற்கு வேலைக்காக முயன்று கொண்டிருந்தாள்.

அந்த வேலை கிடைக்கும் வரை தன்னுடைய பெங்களூர் வேலையை அவள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கலாம் என்று முடிவெடுத்திருந்த போது அந்த மரபணு ஆராய்ச்சி கூடத்தின் தலைவர் ஸ்டீவ் மனித குல வரலாற்றின் தொன்மையை அறிந்து கொள்ள ஆதிவாசிகளின் ஜீன்களை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

அந்தச் செய்திதான் அமுதாவின் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்று சொல்ல வேண்டும். அவளும் தன் பங்கிற்கு ஆதிவாசிகளின் மரபணுக்கள் பற்றி ஆராய்ந்து அதனைப் பற்றிய  ப்ரொஜெக்ட் ஒன்றை தயாரித்து அனுப்பி வைக்க வேண்டுமென்று தீர்மானித்து அந்தமான் தீவிற்குப் பயணித்தாள்.

 அங்கே வசிக்கும் ஆதிவாசிக் கூட்டங்களைப் பற்றி அவள் நிறையவே கேள்விப்பட்டிருந்ததால் அவர்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தாள்.

அந்தமான் தீவிற்கு ஆதிவாசி இனத்தினரைத் தேடிச் சென்றவளுக்கு அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டுவதே அசாத்தியமான காரியமாக இருந்தது. அவள் தன்னால் முடிந்தளவிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாள். ஆனால் பலன்தான் கிட்டவில்லை. வேறு வழியின்றி திரும்பிச் சென்றுவிடலாம் என்று அவள் தன் நம்பிக்கையை இழந்த சமயம் அங்கிருந்த மீனவன் ஒருவன் அவளை ஆதிவாசிகள் வசிக்கும் தனித்தீவிற்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னான்.

அதற்கான ஒரு பெரிய தொகையை தரும்படி அவளிடம் பேரம் பேச அவள் அப்படியொரு அரிய வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை. தன் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை விற்று உடனடியாக அவனுக்கான பணத்தை ஏற்பாடு செய்து தந்திருந்தாள்.

விடியற் காலை பொழுதில் அவர்கள் படகு தள்ளாடிக் கொண்டே அந்தத் தனித்தீவை நோக்கி வர அவள் கண்களை அவளாலயே நம்ப முடியவில்லை.

அந்தக் காலைப்பொழுதின் அழகில் கடலுக்கு நடுவில் ஒரு பச்சை சொர்க்கத்தைப் பார்த்தது போன்ற உணர்வை அவ்விடம் அவளுக்குத் தோற்றுவித்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

அத்தீவின் அருகில் கடல் நீரோ கண்ணாடிப் போல பளபளத்தது. இயற்கையின் அழகிற்கு இந்த உலகில் வேறெதுவும் ஈடு இணையில்லை என்று எண்ணிக் கொண்டவளுக்கு அனிச்சையாகத் தன் தோழியின் சிந்தனை வந்து குதித்தது.

இப்போது மட்டும் சாரா தன்னுடன் இருந்திருந்தால் அழகாய் ஒரு கவிதைப் புனைந்து கூறியிருப்பாள். இவ்விதமாக மனதிற்குள் ஆச்சரியத்தில் மிதந்து கொண்டிருந்தவளை அந்த மீனவன் தன் கரகரப்பான குரலால் பேசி எதார்த்தத்திற்கு இழுத்து வந்தான்.

“ஏதாச்சும் அம்பு மாதிரி பறந்து வந்தா… உடனே தலையைக் குனிஞ்சிருங்கமா… மேலே பட்டுச்சு… நேரா மேலோகம்தான்… எல்லாம் விஷம் தடவின அம்பு” என்று எச்சரிக்கை விடுக்க அந்தக் கணமே அவள் கற்பனை உணர்வெல்லாம் வடிந்து பயவுணர்வு பற்றிக் கொண்டது.

எனினும் அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தரைத் தொட்ட அந்தப் படகலிருந்து தன் கால் தடத்தை அத்தீவிற்குள் பதித்தாள்.

“சரி சீக்கிரம் போயிட்டு வந்துருங்கமா… நான் அந்தாண்ட பக்கமா படகை நிறுத்திட்டுக் காத்திருக்கேன்” என,

“அப்போ நீங்க என் கூட வரலையா அண்ணா?” என்று படபடப்புடன் கேட்டாள்.

“கூட்டிட்டு வந்து வுடுறதுக்கு மட்டும்தான் காசு வாங்கினேன்… கூட வரேன்னு நான் எப்போ சொன்னேன்? அதெல்லாம் வேலைக்கு ஆகாது… நீங்க போயிட்டு வாங்க.”

”அதோ ஒரு தென்னை மரம் வளைஞ்ச மாதிரி நிற்குதே அதுதான் அடையாளம்… அங்கேதான் அவங்க எல்லாம் இருப்பாங்க.”

”தூரமா இருந்தே பார்த்து ஃபோட்டோ எடுத்துட்டு வந்துருங்க” என்று சொல்ல,

“வாட்? தூரமா இருந்து பார்க்கவா? நான் என் ரிசர்ச்க்காக வந்திருக்கேன்… நான் அவங்களோட ஜீன்களைப் பத்தின தகவல்களைச் சேகரிக்கனும்” என்றாள்.

“அப்போ திரும்பி நீங்க உயிரோட வர்றது கஷ்டம்தான்” என்றவன் சர்வசாதாரணமாகச் சொல்ல அவனை முறைத்துப் பார்த்தவள்,

“நான் போயிட்டு பத்திரமா திரும்பி வருவேன்” என்று உறுதியாகக் கூற அவன் எள்ளி நகையாடி,

 “சரி சரி… பொழுதோட திரும்பி வந்தா கூட்டிட்டுப் போவேன்… இல்லையா நான் கிளம்பிப் போயிட்டே இருப்பேன்” என்று அசட்டையாகச் சொல்லிவிட்டுப் படகைக் கொண்டு சென்று மறைவாக நிறுத்திவிட அவள் பதட்டத்துடன் அந்தக் காட்டுப் பகுதிக்குள் நடந்தாள்.

எந்தத் தைரியத்தில் தான் இப்படியொரு அடர்ந்த காட்டிற்குள் செல்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை.

ஆரம்பித்த இடத்திலிருந்து சில மரங்களுக்கு அடையாளம் வைத்து கொண்டே நடந்தவள் அந்த வளைந்த தென்னை மரத்தை நெருங்க நெருங்க உள்ளுர நடுங்கிக் கொண்டிருந்தாள்.

இந்த மாதிரியான அடர்ந்த காட்டுக்குள் பயணித்த அனுபவம் எல்லாம் அவளுக்குக் கிடையாது. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும் திக் திக்கென்றுதான் இருந்தது.

இருப்பினும் அந்த ஆதிவாசிக் கூட்டத்தை எப்படியாவது பார்த்து பேசிவிட வேண்டுமென்ற ஏதோ ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை அவளுக்கு. அப்போது சரலென்று ஒரு அம்பு அவள் தோளை உரசிக் கொண்டு சென்று அருகிலிருந்த மரத்தில் சொருகியது.

அமுதாவிற்கு இதயமே நின்றுவிட்ட உணர்வு. அடுத்த கணமே அவளது வலது காதை உரசியபடி மற்றொரு அம்பு பின்னோடு இருந்த மரத்தில் சொருகிக் கொள்ளவும் அமுதா நடுங்கிவிட்டாள்.

யார் இந்த அம்புகளை எய்தினார்கள் எனச் சுற்றும் முற்றும் தேடலாய் பார்க்க அவள் கண்களுக்கு எந்தவொரு மனித பிறவியும் புலப்படவில்லை. வெகுநேரம் சுற்றும் முற்றும் தேடியவள் ஒரு மெல்லிய சத்தம் எழும்ப, அந்தத் திசை நோக்கி குனிந்தவளுக்கு ஒரு அழகான ஆச்சரியம் காத்திருந்தது.

ஒரு ஆதிவாசி சிறுமி மிடுக்காக நின்று கொண்டு அவள் கைக்கு அடக்கமாக சிறிய வில் ஒன்றைக் கைகளில் பிடித்திருந்தாள். அவளுக்கு அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு வயதுதான் இருக்கும் என்று யூகித்த அமுதா அதிசயித்துப் போனாள்.

அப்போது அவ்விருவரின் விழிகளும் நேரெதிராகச் சந்தித்துக் கொண்டன.

மேலும் அமுதா மண்டியிட்டு அந்தச் சின்னவளைப் பார்த்துப் புன்னகை புரிய அவளோ முறைத்தபடியே நின்றாள். அமுதா அப்போது தன் பின்பக்கத்திலிருந்த பையிலிருந்து பிஸ்கெட் பாக்கெட் ஒன்றை எடுத்து நீட்டினாள்.

ஆனால் அந்த சிறுமியின் முகம் கொஞ்சமும் இளகவில்லை. அவள் கொடுத்ததை வாங்கவும் முற்படவில்லை.

அந்தச் சமயத்தில் படபடவென அமுதாவைச் சுற்றிக் கொண்ட அந்த ஆதிவாசிக் கூட்டம் மொத்தமும் அவளுக்கு நேரெதிராக அம்பைப் பிடித்தபடி நிற்க அதிர்ச்சியுடன் விழித்தவளுக்கு அப்போதைக்குத் தப்பிக்கும் உபாயம் எதுவும் தோன்றவில்லை.

‘அந்த ஆள் அப்பவே சொன்னான்… நம்ம கேட்டோமா?’ என்று தனக்குத்தானே மனதிற்குள் புலம்பியபடி அவர்களை எல்லாம் தலையைச் சுற்றிப் பார்க்க எல்லோர் முகமும் இறுகிய நிலையில் இருந்தன.

கட்டுடல் மேனியுடன் இலைத் தழைகளாலான அரைகுறை உடைகளில் நின்ற அவர்களின் அத்தனை கண்களும் அவளையே மொய்த்தன. பார்க்க கொஞ்சம் பயங்கரமானவர்கள் போலிருந்தது அவர்கள் தோற்றமும் பார்வையும்.

அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. தப்பி ஓடுவதற்கு கூட எந்தவித சாத்திய கூறுகளும் இல்லை.

‘இன்னையோட நம்ம விதி முடிய போகுதா?’அவள் அஞ்சி கொண்டிருக்கும் போதுதான் அந்தச் சிறு பெண் அவள் முன்னே வந்து நின்று தன் கூட்டத்தினரிடம் ஏதோ புது மாதிரியான மொழியில் பேசினாள்.

அடுத்த நொடியே அவர்கள் அனைவரும் அவளை நோக்கி நிறுத்தியிருந்த தங்கள் அம்பை கீழ் இறக்கிவிட அமுதாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.

நன்றியுடன் அந்தச் சிறு பெண்ணைப் பார்த்து அமுதா புன்னகைக்க அவளோ அமைதியுடன் பார்த்தாள். துறுதுறுவென்ற அவள் விழிகளுக்கு இவளின் நன்றி புரிந்ததோ தெரியாது. ஆனால் அவளுக்கு எதனலோ அமுதாவைப் பிடித்துப் போயிருந்தது.  

அன்று அமுதாவின் விதி முடியாமல் அவள் காப்பாற்றியதன் விளைவாக தன் வாழ்க்கையே சீர்குலைய போகும் என்பதை அந்தச் சின்னவள் அப்போது அறிந்திருக்க நியாயமில்லை.

விதியின் முடிவுகள் விசித்திரமானவை. சில நேரங்களில் விபரீதமானவையும்.

lalithamani.g has reacted to this post.
lalithamani.g

You cannot copy content