You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Aval Draupathi Alla- 13

13

பதட்டம்

வீரா அந்த பங்களாவின் கேட்டைத் தாண்டும் போதே அவளுக்கு மனமெல்லாம் கிடுகிடுத்தது. பதட்டத்தில் உள்ளூர அவள் இதயத்துடிப்பு ஊருக்கே கேட்குமளவுக்குத் துடிக்க, 'பயப்படாதே வீரா... ஆல் இஸ் வெல் சொல்லு... ஆல் இஸ் வெல்... ஆல் இஸ் வெல்' என்று தன் நெஞ்சை இடது கரத்தால் நீவியபடியே உள்ளே நுழைந்தாள்.

லேசாய் மனம் அமைதிபெற்றதாக அவளுக்கு அவளே நினைத்துக் கொண்டிருக்க, அடுத்த பிரச்சனையாக  பசி அவள் வயிற்றைக் கிள்ளியது.

புறப்படும் போதே நதியா, "சாப்பிட்டு போக்கா" என்று சொன்னாள். ஆனால் அவள்தான் கேட்காமல்,

"போடி! நான் கீற டென்ஷன்ல எனக்கு சோறெல்லாம் உள்ளே இறங்காது" என்று சொல்லி அவசர அவசரமாய் அவர்களைப் பள்ளிக்கு வழியனுப்பிவிட்டு புறப்பட்டு வந்திருந்தாள்.

ஆனால் இப்போது பார்த்து அவள் வயிறு பசிக்க,  தன்னைத்தானே நொந்து கொள்வதைத்  தவிர்த்து அப்போதைக்கு வேறெதவும் அவளால் செய்ய முடியவில்லை. விழிகள் மங்கி செவியெல்லாம் அடைத்துவிடும் போலிருக்க,

அந்த நொடி வெகுதூரத்தில் இருந்து, "வீரா" என்று யாரோ ஓர் குரல் அழைத்தது. குரல் வந்த திசை நோக்கி அவள் திரும்ப,

வாழை இலையில் உணவு பண்டங்களோடு மங்களகரமாய் ஒரு பெண் நின்றிருந்தார். அது வேறு யாருமில்லை! தெய்வானைதான்!

அவர் வீரா என்று சத்தியமாக அழைக்கவில்லை. காக்காவைதான் பாசமாய் கூவி அழைத்து அந்த உணவுபண்டங்களை தோட்டத்திலிருந்த கல்லின் மீது வைத்துவிட்டு செல்ல,

அதனைப் பார்த்ததும் வீராவின் மனமோ அப்போது விவகாரமாய் யோசித்தது.

'ஆபத்துக்கு பாவமில்ல வீரா... எத்தனை கதையிலதான் காக்காவே வடையை சுடும்... இன்னைக்கு நாம காக்காவோட வடையை சுட்டுக்குவோம்' என்று காக்காவிற்கு முன்னதாக வீரா அந்த வடையை அபேஸ் பண்ணியவள்,

யாரும் அந்த கண்கொள்ளா காட்சியைப் பார்க்கவில்லை என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அதனை துரிதமாய் சாப்பிட்டும் முடித்துவிட்டாள். சுற்றுமுற்றும் பார்த்தவள் தலையை நிமிர்த்தி மேலே பார்க்காமல்  விட்டுவிட்டாள்.

அங்கேதானே அவள் விதியை மாற்ற போகும் நாயகன் அவளின் செய்கையைப் பார்த்து வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருந்தான். ஆனால் வீரா அது தெரியாமல்,

'சரியான கஞ்ச பிசினாரி மாமி... இன்னொரு வடை வைச்சிருக்கலாமில்ல'  என்று வடையையும் சாப்பிட்டுவிட்டு தெய்வானையையும் மனதிற்குள் திட்டிக் கொண்டே வீட்டிற்குள்ளே நுழைந்தவளுக்கு,

முதலில் அவள் பார்வை போன திசை அங்கிருந்த சாரதியின் போட்டோ மீதுதான். சற்றுநேரம் மெய்மறந்து அதனைப் பார்த்தவள் சுதாரித்துக் கொண்டு,

'ம்ஹும்... இனிமே அந்த போட்டோகீற பக்கமே திரும்பக் கூடாதுப்பா" என்று மனதில் எண்ணிக் கொண்டு பார்வையைத் திருப்ப,

உயிரும் உருவுமாய் நிஜ ரூபமாகவே சாரதி படிக்கெட்டில் இறங்கி வந்து கொண்டிருந்தான். ஆனால் இம்முறை அவன் கையில் ஸ்டிக் இல்லை!

ஃபார்மல் ஷர்ட் பேன்டில் நிமிர்வாய் தன் ஒற்றைக் கையை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு அலட்டிக் கொள்ளாமல் நடந்து வந்தவன்,"வா வீரா" என்றபடி அவளைப் பார்த்து புன்னகைக்க,

அவளின் ஹார்மோன்கள் எல்லாம் அதிதீவிரமாய் வேலை செய்யத் தொடங்கின.

'இன்னாத்துக்கு இந்த ஆளப் பார்த்தா நமக்கு இன்னான்னுவோ பண்ணுது... வீரா நீ சரியில்ல' என்று மனதிற்குள்  கடிந்து கொண்டவள் அவன் மீதான பார்வையை சிரமப்பட்டு பிரித்தெடுக்க அவனோ அவள் முன்னே வந்து நின்று,

"வா வீரா... சாப்பிடு" என்று இயல்பாக அழைத்துக் கொண்டே டைனிங் டேபிளில் சென்றமர்ந்து,

"வீராவுக்கும் டிபன் வைச்சு கொடு முத்து" என்று சமையல்காரன் முத்துவிடம் பணித்தான்.

"இல்ல சார்... நான் சாப்பிட்டேன்" என்று வீரா தயங்கியபடி சொல்ல,

"எது? காக்காவுக்கு வைச்ச வடையவா?!" என்றவன் தீவிரமான முகப்பாவனையோடு கேட்க இவனுக்கு எப்படி தெரியும் என்று அவள் புருவங்களை உயர்த்தி, "உங்களுக்கு எப்படி?" என்று அசட்டுதன்மையாய் கேட்க அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "ஹ்ம்ம்... அந்த காக்கா சொல்லுச்சு" என்றான்.

அவள் பேந்த பேந்த விழிக்க அவன்  சாப்பிட்டுக் கொண்டே, "உன் மூஞ்சியை பார்த்தாலே தெரியுது... நீ பசில இருக்கேன்னு... ஒழுங்கா சாப்பிடு" என்று கட்டளையாய் அவன் உரைக்க, அதெப்படி தான் பசியில் இருப்பதை இவன் கண்டுகொண்டான் என்று எண்ணியபடி அவளும் சாப்பிட அமர்ந்தாள்.

பசியின் கொடுமையை நன்கறிந்தவன் அவன்! அப்படிப்பட்டவனுக்கு பிறரின் பசியை உணரமுடியாமல் போகுமா?!, "வீரா கிளம்பலாமா?" என்றவள் சாப்பிட்டு முடித்து கைகளை அலம்பிக் கொண்டிருந்த போதே கேட்க,

"தோ வந்துட்டேன் ஸார்" என்று தன் கரத்தை துடைத்துக் கொண்டு அவன் பின்னே அவள் வர, "இந்தா கார் சாவி" என்று முன்னே நடந்து கொண்டே பின்னே அவளிடம் அதனைத் தூக்கிப் போட்டான்.

கவனமாய் இருந்தால் அதை அவள் பிடித்திருப்பாள் தான். ஆனால் அவளிருந்த தடுமாற்றத்தில் அதனைத் தவறவிட, அவளை திரும்பிப் பார்த்து

"ஒரு கேட்ச் கூட பிடிக்க முடியாதா உன்னால?!" என்று கேட்டு அலட்சியமாய் தலையசைத்துவிட்டு சென்றான்.

'நான் என்ன தோனி மாதிரி விக்கட் கீப்பரா... கேட்ச் பிடிக்க' என்று  புலம்பிக் கொண்டே கீழே கிடந்த சாவியை குனிந்து அவள் எடுக்கப் போக திரும்பி அவளை உருத்து பார்த்தவன்,

"இப்போ ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு" என்றான்.

"நான் இன்னா சார் சொல்லப் போறேன்... ஒண்ணியும் இல்லயே" என்றவள் சமாளித்துவிட்டு மூச்சை இழுத்துவிட்டுக் கொள்ள,

"சரி போய் காரை ஸ்டார்ட் பண்ணு... ஆபீசுக்கு டைமாகுது" என்றபடி வாட்ச்சைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

முன்னேறி நடந்தவள் தோட்டத்தின் ஓரமாய் அமைந்த ஷெட்டில் இருந்த காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டு, வாழ்கையிலேயே முதல்முறையாய் அவள் குலதெய்வம் வீராமாக்காளியை வேண்டிக் கொண்டாள்.

நம் மீதான நம்பிக்கை குன்றும் போது இயல்பாகவே இறைவன் மீதான நம்பிக்கை பெருகும் இல்லையா?! அதே நிலைமையில்தான் அப்போது வீராவும் இருந்தாள். வாழ்கையில் வரிசையாய் சில விஷயங்கள் அவளையும் மீறி நடந்ததினால் ஏற்பட்ட அச்சம்!

"வீரா கம்" என்று தன் வாட்சைக் காட்டி நேரமாகிறதென அவன் செய்கை செய்ய அவள் அவசரகதியில் சாவியை நுழைத்து காரை இயக்க முற்பட, அப்போது பார்த்து அந்த கார் ஸ்டார்ட் ஆக மாட்டேன் என வீம்பு பிடித்தது.

'என்னை பேஜார் பண்ணாதே... ஸ்டார்ட் ஆயிடு' என்று பதட்டத்திலும் நடுக்கத்திலும் அவள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய,

அவன் பொறமையிழந்து கார் அருகில் கோபமாய் முன்னேறி வர, நல்ல வேளையாக அவன் வருவதற்குள்ளாக அதுவே ஸ்டார்ட்டானது. அவனுக்கு பயந்தே ஸ்டார்ட்டாகிவிட்டது போலும்!

அவள் பெருமூச்செறிந்து கொண்டு காரை நகர்த்தி வந்து அவன் அருகில் நிறுத்த ஏறி அமர்ந்தவன், "இன்னும் ஆஃப் அன் ஹார்ல் ஆபிஸ்ல இருக்கணும்" என்றவன் மீண்டும், "ஆமா... உனக்கு வழி தெரியுமா?!" என்று கேட்டான்.

"ம்ஹும்" என்றவள் மறுப்பாகத் தலையசைக்க,

"ஒகே! இந்த ஒரு தடவை நான் சொல்றேன்... பட் நெக்ஸ்ட் டைம்ல இருந்து நீயே கரெக்ட்டா ஃபாலோ பண்ணிக்கனும்... காட் இட்" என்றான் அழுத்தமாக!

"சரி சார்" என்று பவ்வியமாக அவள்  தலையசைக்க,

"முதல்ல ஸீட் பெல்ட் போடு" என்றபடி அவளைக் கூர்ந்து பார்த்து உரைத்தான். அவள் குழப்பமாய் அதனைத் தேடி கண்டுகொண்டு அதனை இழுத்து மாட்ட சிரமப்பட அன்று அதுவும்  அவள் கைக்கு உட்பட மாட்டேன் என்று அடம்பிடித்து அவளை எரிச்சலப்படுத்தியது,

"என்ன பண்ற வீரா?" என்று சாரதி கடுப்பாகித் தானே அவள் முன்னே எம்பி வந்து சீட் பெல்ட்டை போட்டு விட எத்தனிக்கும் போது அவன் கரம் ஏடாகூடாமாய் அவள் மீது பட,

'அய்யோ' என்றவள் பதறிக் கொண்டு இருக்கையின் பின்னோடு சாய்ந்து மூச்சை உள்ளிழுத்துக் கொண்டாள்.

அவள் இதய துடிப்பு படபடவென அடிக்க, சாரதியோ சற்றும் அவள் பதட்டத்தை உணராதவனாய்  சீட்பெல்டை போட்டுவிட்ட பின்னே நகர்ந்தான்.

அவஸ்த்தையில் அமர்ந்திருந்தவள், அவன் விலகிய நொடியே இறுக்கமாய் இழுத்துப் பிடித்திருந்த தன் தேகத்தை மெல்ல தளர்த்திக் கொண்டு மூச்சை இழுத்துவிட்டாள்.

"என்ன பார்த்துட்டிருக்க? டைமாச்சு... கிளம்பு" என்றவன் டென்ஷனாக சொல்லி அவளை முறைத்துப் பார்க்க,

"தோ சார்... கிளம்பிட்டேன்" என்று படபடப்போடு காரை இயக்க ஆரம்பித்தாள்.

அதற்குப் பிறகு அவனிடம் சிலபல திட்டுகள், முறைப்புகளுக்கு இடையில் எப்படியோ எந்தவித சேதாரமும் இல்லாமல் காரை எடுத்து வந்து அலுவலகத்தில் விட்டு பெருமூச்செறிந்து  தன்னைத்தானே அவள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள,

அவன் விரைவாய் இறங்கிவிட்ட, "மேலே தர்ட் ப்ஃளோர்(Third floor).. ஆபீசுக்கு வா" என்று இறுக்கமான பார்வையோடு சொல்லிவிட்டு அகன்றான்.

'இன்னாத்துக்கு கூப்புடுறான்... நம்ம வண்டி ஓட்டிக்கின்ன இலட்சணத்தைப் பார்த்து... காண்டாகி வேலையை விட்டு போன்னு சொல்லப் போறானோ' என்று தானே கற்பனை செய்து கொண்டவள்,

சிரத்தையே இல்லாமல் நடந்து சென்று மூன்றாவது மாடியிலிருந்த விசாலமான அவனின் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அப்போது, "வீரா இங்க" என்று  கணேஷ் அவளை அழைத்து கைகாண்பிக்க, அவன் முன்னே சென்று நின்று, "சார் கூப்பிட்டாரு?" என்றாள்.

"இந்த ஃபோனை சார் உன் கிட்ட கொடுக்க சொன்னாரு" என்று ஒரு செல்பேசியை அவளிடம் அவன் நீட்ட அதனை திருப்பி பார்த்தவள் வியப்போடு,

 "இன்னாத்துக்கு சார் இதை என்னான்ட கொடுக்க சொன்னாரு" என்று வினவினாள்.

"அவர் எப்போ உனக்கு கால் பண்ணாலும்  நீ காரை எடுக்க ரெடியா இருக்கணும்... அதுக்குதான் இது" என்க, "ஓ!!" என்று புருவத்தை நெறித்தவள்,

"ஆமா சார்! நீங்கதான் சாரதி சாரோட எல்லாமேவா" என்று கேட்டாள்.

" எல்லாமேன்னா?!"

"நாங்க வந்தன்னைக்கும் நீங்கதானே சார் கூட இருந்தீங்க... அதான் கேட்டான்" என்று வீரா கேள்வி எழுப்ப,

"நான் சாருக்கு பிஏ அவ்வளவுதான்" என்றான் கணேஷ்.

"அது சரி... சாருக்கு பொண்டாட்டி பிள்ளைங்க எல்லாம் இல்லையா?!" என்றவள் ரகசியமாய் அவனிடம் தலையைத் தாழ்த்தி கேட்க,

"சாருக்கு இப்படியெல்லாம் பெர்ஸ்னலா கேள்வி கேட்டா பிடிக்காது" என்று கணேஷ் அழுத்திச் சொன்னான்.

"அவருகிட்டதானே கேட்கக் கூடாது... உங்களான்ட கேட்கலாம் இல்ல"

"தேவையில்லாததெல்லாம் பேசினா சாருக்குப் பிடிக்காது... புரிஞ்சுக்கோ... வேலைன்னா வேலை மட்டும்தான்" இறுக்கமாகவே கணேஷ் கூற, முகத்தைத் திருப்பி அலுப்பு தட்ட, 'ஜாடிக்கேத்த மூடிதான்' என்று வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டாள்.

அதற்குள் அவள் கையிலிருந்து செல்பேசி அழைக்க, அவள் பதட்டமாய் அதனைப் பார்க்க, "சார்தான் ஃபோன் பண்றாரு... எடுத்து பேசு" என்றான் கணேஷ்.

அவள் அந்த அழைப்பை ஏற்று காதில் வைக்கவும், "கேபினுக்கு வா வீரா" என்று பளிச்சென்று எதிர்புறத்தில் சாரதி சொல்ல அவள் விழிகளை அகல விரித்தாள்.

"அதோ... சாரோட கேபின்" என்று கணேஷ் அவள் கேட்பதற்கு முன்னதாகவே கை காண்பித்தான்.

வீரா பதட்டத்தோடே அறை கதவைத் திறந்து, "சார்" என்றழைக்கவும் "ஹ்ம்ம் உள்ளே வா" என்றான் தீவிரமாய் லேப்டாப்பில் பார்வையை பதித்தபடியே!

அவள் லேசான படபடப்போடு எதிரே வந்து நின்று அந்த அறையை சுற்றிப் பார்வையை சுழற்ற, "உட்காரு வீரா" என்றவன் கூறிவிட்டு இருக்கையில் சாய்வாய் அமர்ந்து கொள்ள, "பரவாயில்ல சார்... இருக்கட்டும்" என்றாள்.

"எனக்கு இந்த மாதிரி பாஃர்மலிட்டீஸெல்லாம் பிடிக்காது... உட்காரு" என்றவன் சொல்ல தயக்கத்தோடு அவள் அமர்ந்து கொள்ள, அவன் மௌன நிலையில் சில நொடிகள்  தேடலாய் அவளை அலசிப் பார்க்க அவன் விழிகளைப் பார்த்து மிரட்சியுற்றவள்,

"சார்" என்று அழைத்து அவன் சிந்தனையை தடைப்படுத்தினாள்.

அவன் அந்த நொடி நிமிர்ந்து அமர்ந்தவன்,

"ஓகே... ஹ்ம்... இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே... ஸோ நீ நெர்வஸா இருக்க... ஐ அன்டர்ஸ்டான்ட்... அதனால இன்னைக்கு நீ ட்ரைவ் பண்ணும் போது செஞ்ச தப்பையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல... பட் நாட் ஆல்வேஸ்... திரும்பியும் இந்த தப்பெல்லாம் ரிப்பீட் ஆக கூடாது" என்றவன் அழுத்தம் திருத்தமாய் சொல்ல,

"ஒகே சார்" என்று தலையசைத்தாள். அவன் மேலும்,

"யூனிபாஃர்ம் ரெடியாயிடும்... ஸோ இனிமே நீ யூனிபாஃர்ம்லதான் வரணும்" என்க, மீண்டும்

"ஒகே சார்" என்றாள்.

"இந்த ஃபோனை நீ பெர்ஸனலா யூஸ் பண்ணிக்கலாம்... ஆனா நான் கால் பண்ணா... பிஸியாவோ அட்டென்ட் பண்ணாமலோ இருக்கக் கூடாது"

"அதெப்படி சார்... எப்பையாச்சும்" என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் பார்வை கூர்மையாய் மாற,

"இல்ல இல்ல... மிஸ்ஸாவம அட்டென்ட் பண்ணிடுறேன்" என்று தலையசைத்து ஆமோதித்தாள்.

"அன்ட் கார் ஓட்டுறது முக்கியமில்ல... கரெக்ட்டா மெயின்டெயின் பண்ணிக்கனும்... ரொம்ப முக்கியமான நேரத்தில ஏதாச்சும் மக்கர் பண்ணுச்சு" என்றவன் சொல்லி முறைக்க எச்சிலை விழுங்கிக் கொண்டு,

"அப்படியெல்லாம் ஆகாது சார்... நான் பார்த்துக்கிறேன்" என்றாள் முந்திக் கொண்டு!

"குட்" என்றான். அவன் அதோடு நிறுத்தாமல் மேலே  பேசிக் கொண்டே போக கடுப்பானவள், 'ரொம்ப பேசுறானே முடியலயே... வீரா கன்ட்ரோல்' என்று மனதில் அவனை வசைப்பாடி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இறுதியாக அவன் சொல்ல வேண்டியதெல்லாம் முடித்து "புரிஞ்சுதா" என்றவன் கேட்க, 'சீ++ ஜாவா மேமுங்களே பரவாயில்ல’  என்றவள் வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டாள்.

"இப்ப நீ என்ன சொன்ன?" என்றவன் அவள் முகத்தைக் கூர்ந்து பார்க்க, "புரிஞ்சிதுன்னு சொன்னேன் சார்" என்று வேகமாய் தலையசைத்தாள்.

"சரி கிளம்பு" என்றவன் சொல்லவும் பெரிதாய் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு எழுந்து அவள் வெளியேற பார்க்க,

"வீரா ஒரு நிமிஷம்" என்றான். 'இன்னும் என்ன டா?' உள்ளுக்குள்ளேயே கடுப்படித்தவள் எரிச்சலோடு திரும்பி, "சொல்லுங்க சார்" என்றாள்.

"ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில நீ என் உயிரை காப்பாத்தியிருக்க... அதுக்காக உன் மேல எனக்கு மரியாதை இருக்கு... ஆனா அந்த சலுகையை நீ வேலையில் எதிர்பார்க்கக் கூடாது" என்றவன் தீர்க்கமாய் சொல்ல,

'நான் கேட்டேனா?' என்று உள்ளூர பொறுமிக் கொண்டாலும் "ஒகே சார்" என்றவள் மீண்டும் அலுத்துக் கொண்டு தலையசைக்க, "சரி போ" என்றான் அவன்!

"அவ்வளவுதானா சார்... இல்ல... வேற எதானாச்சும் மிச்சம் மீதி இருந்துச்சுன்னா..  அதையும் சொல்லிடுங்க... கேட்டுக்கின்னு போயிடுறேன்" என்று பவ்வியமாக கேட்டாலும் அவளின் சுயரூபம் லேசாய் எட்டிப் பார்த்துவிட,

அவளை ஏற இறங்கப் பார்த்தவன், "என்ன நக்கலா?" என்று கேட்டு இறுக்கமாய் பார்த்தான்.

"சேச்சே! சீரியஸாதான் சாரே கேட்டுக்கினே" என்றாள் வீரா. அவள் வார்த்தைகள் நக்கல் தொனியில்  எதிரொலித்தாலும் முகத்தில் அதற்கான பிரதிபலிப்பே இல்லை!

அவளை அழுத்தமாய் பார்வையிட்டவன், "வேறு ஏதாச்சும் சொல்றதுக்கு இருந்தா... நானே கூப்பிடுறேன்... இப்ப நீ கிளம்பு" என்றான்.

"சரி சார்" என்று சிறுநகைப்போடு சொல்லிவிட்டு அவள் அகன்றாள்.

அவள் சென்ற மாத்திரத்தில் அவன் முகம்  யோசனைக்குறியோடு மாற எழுந்து நின்று பேக்கெட்டில் கை நுழைத்து குழப்பமாய் அறைக்குள்ளேயே நடந்தவன், 'என்னவோ இவன் கிட்ட  ஒட்டாம நிற்குதே!... சம்திங் பிஃஷி அபௌட் ஹிம்... வாட் இஸ் இட்? வாட் இஸ் இட்?'

 விரல்களைச் சொடுக்கியபடி தனக்குத்தானே கேட்டுக் கொண்டு சிந்தித்தவனுக்கு அப்போதைக்கு அது என்னவென்று பிடிபடவில்லை! ஆனால் எப்போதுமே அது சாத்தியமுமில்லையே!

 

akila.l has reacted to this post.
akila.l

You cannot copy content