You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 42

Quote

42

வன்மம்

பனியை விலக்கிக் கொண்டு ஆதவனின் வருகையால் வீராவின் மனம் விழிப்படைந்தாலும் அவளால் தம் விழிகளை திறக்க முடியவில்லை. வெகுநேரம் உறங்கிவிட்டது போல் ஓர் இறுக்கமான உணர்வு! தலை பாரமாய் விண்விண்ணென்று வலிக்க நேற்று உண்டான காயத்தினால் ஏற்பட்ட வலி போலும் என்று எண்ணிக்கொண்டாள்.

தோன்றிய அதே சமயம் கதகதப்பாய் ஓர் கரம் அவள் தேகத்தை அரவணைப்பாய் அணைத்துக் கொண்டிருந்தது. மிருதுவாய் அதே நேரம் கொஞ்சம் அழுத்தமாய்! முயன்று மெல்ல தம் விழிகளை மலர்த்தினாள்.

இருள் கவ்வியிருந்தாலும் மனதிற்கு ஒருவாறு நிம்மதியாய் இருந்தது. மனம் லேசானது. பெருமூச்செறிந்து கொண்டவள் கணவனின் முகத்தைப் பெருமிதமாய் பார்த்தாள். 

அவளின் கருவிழிகள் இரண்டும் அவன் மீதே லயித்திருக்க... சீரான இடைவெளியில் வந்த அவனின் மூச்சுக் காற்று அவன் உறக்கத்தின் ஆழத்தை சொல்லியது. இன்னும் நெருக்கமாய் அவன் அணைப்பிற்குள் தன்னை கிடத்திக் கொண்டவள் எட்டிச் சென்று அவனின் அடர்ந்த கேசத்தைக் கோதிவிட்டு அவன் நெற்றிப் பொட்டில் பட்டும் படாமல் தன் இதழ்களைப் பதித்தாள். 

"கொடுக்குறதுதான் கொடுக்குற...ஒரு இரண்டு இன்ச் கீழே கொடுக்கலாம் இல்ல" என்றவன் தூக்க நிலையிலேயே விழிகளைத் திறவாமல் சொல்ல, "அப்போ நீ தூங்கின்னிலையா!" என்று அதிர்ச்சியாய் கேட்டாள்.

 விழிகளைத் திறந்து அவள் பிடியை இறுக்கியவன், "ம்ஹும்" என்றவன் மேலும், "இப்ப நார்மலாயிட்டியா?" என்று கேட்டு அவள் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தான்.

"ஹ்ம்ம்" என்றவள் மேலும் கீழுமாய் தலையசைக்க,

"அப்போ நான் கேட்டதைக் கொடுக்குறது" என்றவன் பார்வையால் வினவியதை அவள் மௌனமாய் மறுக்க,

"அப்போ நான் கொடுக்கறேன்" என்றவன் சொல்லி முடித்து  அவன் செய்கையை அவள் உணர்ந்து கொள்ளும் முன்னரே தன் தோளின் மீது சாய்ந்திருந்தவளை அதிரடியாய் தனக்கு கீழ் தள்ளி விட்டு அவள் உதடுகளோடு வெகுநேரம் உறவாட,

அந்த முத்தம் அவள் வேதனைகளை மறக்கடித்து மொத்தமாய் அவளை அவன் வசப்படுத்தியது. திகட்ட திகட்ட அவளை இன்ப உணர்வில் திளைக்க வைத்தவன் தன் காதலின் மூலமாக அவள் காயங்களை மறக்கடித்தான் என்றே சொல்ல வேண்டும். 

திருமணத்திற்கு ஒரு நாளே இருந்தது. அந்த நாளுக்காக அவள் எத்தனை எதிர்பார்ப்போடு காத்திருந்தாள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கத்தரித்திருந்த அவள் கேசம் வளர்ந்து கழுத்து புறத்தில் வளைந்து அவள் தோளைத்  தீண்ட... ஏக்கமாய் அதனைத் தொட்டு பார்த்தாள். 

அப்போது அவசரமாய் அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்த சாரதி அவள் கண்ணாடி பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் முகத்தில் படிந்திருந்த ஏக்கத்தையும் கவனித்தான்.  ஓசைபடாமல் அவள் பின்னோடு வந்து அவளை அணைத்துப் பிடித்து,

 "என்னாச்சு? மேடம் டல்லா இருக்கீங்க... மேரேஜ் டென்ஷனா?!" என்று கேட்டு அவள் காதோரம் உரசினான். 

"ப்ச் அதில்ல" என்றாள் சலிப்பாக!

"பின்ன எது?"

"அது... முடி இன்னும் கொஞ்சம் நீட்டா இருந்தா... நாளைக்கு ஜடை வைச்சின்னு இருக்கலாம்" என்றவள் ஏமாற்றத்தோடு சொல்ல, ஓர் சராசரி பெண்ணின் ஆசைகள் யாவும் மீண்டும் அவளுக்குள் மொட்டுவிட ஆரம்பித்திருந்தன. 

"இந்த ஹேர் ஸ்டைலையே...நீ செம்ம கார்ஜியஸா இருக்க டார்லிங்... அன்ட் மோரோவர் இந்த ஸ்டைல் இன்னும் உன்னை யூனிக்கா காட்டுது" என்றவன் சொல்லிக் கொண்டே அவன் கரங்கள் அவளிடம் அத்துமீற அவன் தீண்டலில் அவள் தனைமறந்து நெகிழ ஆரம்பித்தாள். ஆனால் அவர்களின் சந்தோஷத்தைக் குலைக்கும் விதமாய் அவன் பேசி அலறியது. 

அவள் கடுப்பாக அவனை முறைத்துப் பார்க்க அவன் அசடு வழிந்தபடி தன் பேசியை எடுத்து சுருக்கமாய் பேசியவன்,

 "சாரி... கொஞ்சம் வேலை இருக்கு... சீக்கிரம் போயிட்டு வந்துடறேன்" என்றதும் அவள் பதிலின்றி கையெடுத்துக் கும்பிட்டு வாசல் புறம் காண்பிக்க, 

"ஓகே... ஆனா ... ஈவனிங் சீக்கிரம் வந்துடறேன்" என்றவன் சொல்ல அதிர்ந்து பார்த்தவள்,

"வேண்டவே வேண்டாம்... நீ லேட்டாவே வா தெய்வமே!" என்று மீண்டும் பெரிய கும்பிடாய் போட்டவள் பிரயத்தனப்பட்டு அவனை அலுவலகத்திற்கு ஒரு வழியாய் அனுப்பி வைத்தாள். 

அவன் சென்ற சில நொடிகளில் அவள் உடலில் படர்ந்த சோர்வு அவள் மனதையும் சோர்வடைய செய்ய அந்த களைப்பின் காரணம் அவளுக்குப் பிடிபடாமல் இல்லை. அவள் உடலில் மாதம் மாதம் உண்டாகும் சுழற்சிதானே! மாதவிடாய்.

நாட்குறிப்பில் வேகமாய் ஆராய்ந்து பார்த்தவள், "இன்னும் ஒரு வாரம் இருக்கே" என்று யோசிக்க, இயற்கையாய் ஏற்படும் நம் உடலின் செயல்பாடுகளுக்கு நேரத்தையும் காலத்தையும் நாம் விதிப்பதும் கணிப்பதும் முடிகிற காரியமா என்ன?  

ஆனால் அது இன்று பார்த்து வர வேண்டுமா? என்று சலித்துக் கொண்டவளின் கவலையும் தவிப்பும்  நாளை கோவிலில் ஏற்பாடு செய்யபட்டிருக்கும் திருமணம்தான். குழப்பத்தில் உழன்றவள் என்ன செய்வதென்று புரியாமல் யோசனையோடு அறைக்குள் அடைந்து கிடக்க,

தெய்வானை அவளிடம் திருமணத்தின் ஏற்பாடுகளை பற்றி பேச வந்து அவளின் பிரச்சனையை அறிந்து கொண்டார். "இப்ப நான் என்ன பண்றது மாமி?" என்றவள் தவிப்புற கேட்க,

"இதுக்கு போய் எதுக்குடி இவ்வளவு கவலைப் படுற... எல்லா பொம்மனாட்டிக்கும் வர்றதுதானேடி" என்க, அதிர்ச்சியாய் ஒரு பார்வை பார்த்தவள்,

"புரியாம பேசாதீங்க... நாளைக்கு கோவில்ல கல்யாணம்" என்றாள்.

"தவிர்க்க முடியாத சூழ்நிலைல என்னடி பண்ண முடியும்... நானும் ரெண்டு பொண்ணுகளுக்கு அம்மா"

"இல்ல மாமி... எனக்கு யோசனையா இருக்கு... பேசாம தள்ளி வைச்சிடலமா"

"அபசகுனமா பேசாதே... நல்ல காரியத்தை போய் தள்ளி வைப்பாளா... அதெல்லாம் ஒண்ணுமில்ல" 

"தீட்டில்லையா மாமி"

"வீரமாக்காளி கோவில்லதானேடி கல்யாணம்"

"ஹ்ம்ம்" 

"அப்புறம்... தாய்க்கு மக எப்படி டி தீட்டாவா... அசடு" என்று அவள் தலையில் நங்கென்று கொட்ட வீராவிற்கு தெய்வானையின் வார்த்தைகள் வியப்பாய் இருந்த அதே நேரம் மனதிற்கு நிம்மதியாகவும் இருந்தது. 

சாரதியுடன் நடக்கப் போகும் அந்த திருமணத்திற்காக அவள் மலையளவு ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தாள். அதில் ஓர் சிறு தடங்கல் வருவதைக் கூட அவள் விரும்பவில்லை. உடல் சோர்வையும் தாண்டி மனதளவில் நடக்கப் போகும் அவள் திருமண நாளைக் குறித்து உற்சாகத்தில் திளைத்திருந்தாள். 

அப்போது வீட்டின் முகப்பறையில் இருந்த தொலைப்பேசி ஒலிக்க அதனை எடுத்துப் பேசிய முத்து பதட்டமாய் வீராவை அழைத்தான்.

அப்போது அந்த தொலைபேசியில் வீராவிடம் பேசிய நபர் சொன்ன  தகவலைக் கேட்டு அவள் உடலெல்லாம் நடுக்கமுற்றது. தாறுமாறாய் பதட்டமேற படபடப்போடு தெய்வானையிடம் விஷயத்தைத் தெரிவிக்க, அவருமே பதட்டமடைந்தார்.

வீரா உடனே சாரதிக்கு அழைத்து, "நதி சைக்கிள்ல போகும் போது ஆக்ஸிடென்ட்டாயிடுச்சாம்" என்று  சொல்லி முடிக்கும் போதே, "எங்கே எப்போ?" என்று பதறினான் சாரதி.

விவரத்தை உரைத்தவள், "நான் போறேன்... நீயும் வந்திருய்யா" என்று உரைத்துவிட்டு அவன் பதிலுரையை கேட்கக் கூட பொறுமையில்லாமல் அழைப்பைத் துண்டித்தாள். தெய்வானை தானும் வருவதாக சொல்ல வீரா மறுத்துவிட்டு விரைவாய் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அவள் சென்ற சில நிமிடங்களில் அதிகாரிகள் சிலர் காரில் சாரதியின் வீட்டிற்குள் நுழைய தெய்வானை அவர்களை யாரென்று புரியாமல் மிரட்சியடைந்தாள். அதே சமயம் சாரதி தன் அலுவலகத்தில் இருந்து புறப்பட எத்தனிக்க, அங்கேயும் நுழைந்த அதிகாரிகள் உடனடியாக சாரதியைத் தடுத்து நிறுத்தி,

"வீ ஆர் ப்ஃரம் ஐடி டிபார்ட்மெண்ட்" என்று தெரிவிக்க,  அவர்களின் அடையாள அட்டைகளை வாங்கி சோதித்தவன் பின் பதட்டம் குறையாமல்,

"என் சிஸ்டர் இன் லா க்கு ஆக்ஸிடெண்டாயிடுச்சு... நான் இப்போ போயே ஆகணும்" என்றான் படபடப்போடு!

அந்த அதிகாரிகள் அவனை சந்தேகப் பார்வையோடு அளவெடுத்தனர்.

அவன் மேலும், "உங்களுக்குத் தேவையான எல்லா டீடைல்ஸ் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் என் ஸ்டாஃப்ஸ் கொடுப்பாங்க... புரிஞ்சுக்கோங்க... நான் போகணும்... போயே ஆகணும்... இட்ஸ் ஆன் எமர்ஜென்சி ஸிச்சுவேஷன்" என்றவன் சொல்ல,

"இது எமர்ஜென்சி ஸிச்சுவேஷனா இல்லையான்னு நாங்க டிசைட் பண்றோம் மிஸ்டர்.சாரதி" என்றவர்கள் துரிதமாய் சாரதி சொன்ன விவரங்களைக் கேட்டு அங்கிருந்தபடி அவற்றின் உண்மை நிலவரத்தை விசாரித்தனர். 

சாரதிக்கோ அங்கே இருப்புக் கொள்ளவில்லை. அவன் பொறுமை தகர்ந்து கொண்டிருக்க அவர்கள் பேசி முடித்து, "எங்களையெல்லாம் பார்த்தா எப்படி தெரியாது... எமர்ஜென்சி ஸிச்சுவேஷன்... அது இதுன்னு நீங்க பொய் சொன்னா அப்படியே நாங்க நம்பிடுவோமா?" என்று அந்த நபர் இடித்துரைக்க, "பொய்யா?" என்று அதிர்ந்தான் சாரதி.

"எஸ்... உங்க சிஸ்டர் இன் லா நதியா... ஸ்கூல்ல சேஃபாதான் இருக்காங்க" என்றனர். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் குழப்பமாய் யோசித்திருக்க,

"எங்க டைம்மை வேஸ்ட் பண்ணாம...  நீங்க எங்களுக்கு கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணிங்கன்னா நல்லா இருக்கும்" என்று சொல்ல சாரதியின் முகம் இருளடர்ந்து போனது. 

அவன் சிந்தனை அவர்களிடத்தில் இல்லை. வீரா ஏன் அப்படிச் சொன்னாள் ? யார் எதற்காக இப்படி ஒரு பொய்யான தகவலை அவளிடம் சொல்லி இருப்பார்கள் என்று யோசித்தவனுக்கு அப்போதே நினைவு வந்தது... அம்மு நதியாவின் ஐடி கார்டுகள் மற்றும் பள்ளியில் கொடுக்கப்பட்ட விவரங்களில் அவனுடைய கைப்பேசி எண்கள் பதிவாகியிருந்தது. அம்மு மயங்கிய போது கூட அவனைத்தானே அவர்கள் அழைத்தார்கள்.  அப்படியெனில்.... 

அவன் மனம் யூகித்த கற்பனைகள் யாவும் பயங்கரமாய் இருக்க, பூமி அவன் காலுக்கு கீழே நழுவியது போன்ற உணர்வு!

 உடனடியாய் சாரதி தன் பேசியை எடுத்து வீராவிற்கு அழைக்க எண்ணிய போது, அந்த அதிகாரிகள் அதனைப் பறித்துக் கொண்டனர்.

"சாரி... ரைய்ட் முடியிற வரைக்கும் நீங்க யாரையும் கான்டாக்ட் பண்ண அனுமதி இல்லை" என்றவர்கள் அழுத்தமாய் சொல்லி முடிக்க, அவன் நிலைகுலைந்து போனான். அந்த நொடி அவனின் பலம் மொத்தம் முடக்கப்பட்டிருக்க, வீராவிற்கு ஏதோ  ஆபத்து என்று அவன் மனம் அடித்துக் கொண்டது. 

*******

அரவிந்தின் பெசன்ட் நகர் பீச் ஹவுஸ். முகப்பறையில் அரவிந்தும் சரத்தும் டிவியில் பரபரப்பாய் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தி சேனலை ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாரதி டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் சோதனை!

ஆதலால் சாரதி டெக்ஸ்டைல்ஸ் இன்று மூடப்பட்டது. இதனைப் பார்த்து இருவரின் முகமும் பிரகாசித்துக் கொண்டிருக்க, அரவிந்தின் முகத்தில் பழி தீர்த்துக் கொண்ட ஓர் வன்மமான புன்னகை!

"மாமா...  நீங்க ரியலி கிரேட்" என்று அரவிந்த் சந்தோஷத்தில் சரத்திற்கு பாராட்டு மடல் வாசிக்க,

"இப்பவே முழுசா சந்தோஷப்படாதே அரவிந்த்... இதில்ல நம்ம அவனுக்கு வைச்ச செக்" என்றான் சரத்.

அப்போது, "வீரா" என்று சொல்லிய அரவிந்தின் விழி பேசிய மொழி படுபயங்கரமாய் இருந்தது. அவன் வேகமாய் தன் பேசியை எடுத்து, "எங்கடா இருக்கீங்க?"  என்று ஆவல் ததும்பக் கேட்கவும்,

"அய்யோ சார்! இவளை எங்களால கண்ட்ரோல் பண்ணவே முடியல" என்று படபடப்போடு எதிர்புறத்தில் பதிலளித்தான் ஒருவன்.

வீராவோ உச்சஸ்தாயியில், "என்னை விடுங்கடா" என்று கத்தி கலாட்டா செய்து கொண்டிருந்தாள். அவள் குரல் தெள்ளத்தெளிவாய் அரவிந்த் காதிலும் விழுந்தது.

அவனுக்குப் பதட்டம் தொற்றிக் கொள்ள, "மயக்க மருந்தை அடிக்க வேண்டியதுதானே" என்று  படபடப்போடு கேட்க,

"எங்கே சார் விட்டாதானே... ஆளு ரொம்ப ஷார்ப்பா இருக்கு" என்றான் அந்த அடியாள்.

அரவிந்திற்கு பிபி எகிற...  அந்த நபர் மேலும், "எப்படியோ வண்டில தூக்கிப் போட்டுட்டோம்... ஆனா எப்படி கொண்டு வந்து சேர்க்க போறோம்னு தெரியல" என்று புலம்பித் தீர்த்தான்.

"நீங்கெல்லாம் ரவுடிங்கன்னு சொல்லிக்க அசிங்கமா இல்ல... ஒத்த பொண்ணைத் தூக்க... இவ்வளவு சீனா" என்று அரவிந்த் சொல்லும் போதே,

"பொண்ணா சார் இவ...  பேய்... ரொம்ப ராங்கித்தனம் பண்றா... பேசாம கார்ல இருந்து வெளியே உருட்டிவிட்டுடலாமான்னு இருக்கு" என்றவன் சொன்னதுதான் தாமதம்.

"டே டே... அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க... அவ எனக்கு முழுசா வேணும்" என்று அரிவிந்த் அவசரகதியில் சொல்ல,

"பின்ன என்ன சார்... சிட்டில பட்ட பகல்ல... வேண்டாம்னு சொன்னேன்... நீங்கதான் இந்த டைம்ல..." என்றவன் அச்சத்தில் குரல் நடுங்க சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

அரவிந்த் நிறுத்தி, "ஃபோனை  ஸ்பீக்கர்ல போடு... நான் அவகிட்ட பேசறேன்" என்றான் அழுத்தமாக!

அந்த அடியாளும் அரவிந்த் சொன்னது போலவே செய்ய, "ஏ வீரா" என்று அரவிந்த் மிரட்டலாய் அழைத்தான். ஒரு நொடி ஷாக்கடித்தது போல் வீரா அமைதியாகி பின் மீண்டவள் தன் குரலை உயர்த்தி,

"ஏ பக்கி... இந்த பூசணிக்கா மண்டையனுங்கல நீதான் அனுப்பிக்கினியா?!"  என்றாள்.

"ஆமான்டி  நான்தான்... ஒழுங்கா இப்ப நீ வாயை மூடிட்டு வரல... உன் தங்கச்சிங்க கற்புக்கு நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்" என்றவன் சொல்லி முடிக்கும் போதே அவள் ரத்த நாளங்களெல்லாம் வெடித்துச் சிதறியது போலிருந்தது.

"என் தங்கச்சிங்க... உன்கிட்ட இருக்காங்களா?!" என்றவள் அதிர்ச்சியுற அவள் குரலில் ஸ்ருதி இறங்கி நடுங்க,

"ஆமான்டி... என்கிட்டதான் இருக்காங்க" என்றான்.

அவள் யோசனைக்குறியோடு அப்படியே மௌனமாகினாள். அவன் சொன்னதை நம்ப முடியாமல் அவள் குழப்பமாய் அமர்ந்திருக்க,

"நீ அமைதியா வந்தா உன் தங்கச்சிங்களுக்கு எந்த சேதாரமும் இல்ல" என்றான் அவன் மேலும் சொல்ல  எரிமலையாய் அவளுக்குள் கோபம் பொங்கினாலும் அவன் சொன்ன வார்த்தைக்கு மறுவார்த்தை பேசாமல் அவள் சிலையாய் சமைந்துவிட்டாள்.

 அவள் பலத்தை நொறுக்கும் ஆயுதம்... அவள் தங்கைகள் என்பதை அரவிந்த் தெரிந்தே அதனை சரியான சமயத்தில் கையாண்டான்.

வீரா அப்போதைக்கு அவன் சொன்னதில் இருக்கும் உண்மையைக் கூட ஆராய விழையவில்லை. அவளைப் பொறுத்தவரை பொய்யாகக் கூட தன் தங்கைகளுக்கு தவறாக எதுவும் நேர்ந்துவிடுவதை அவள் விரும்பவில்லை. ஆதலால் கட்டுமஸ்தாய் அவளைச் சூழ்ந்திருந்த அடியாட்களிடம் எந்தவித எதிர்ப்புமே தெரிவிக்காமல் அமைதியாக வந்தாள்.

கார் அரவிந்த் பீச் ஹவுஸிற்குள் நுழைய அவள் பார்வை அந்த வீட்டை நோட்டமிட்டது. என்ன நிகழப் போகிறது? அம்முவும் நதியாவும் எங்கே இருக்கிறார்கள்?

இவ்வாறாக ஆயிரமாயிரம் கேள்விகள் அவள் மனதை வலம் வர... அச்சத்தில் அவள் கரங்கள் சில்லிட்டுக் கொண்டிருந்தன.

உள்ளூர உதறலெடுத்தாலும் அதை அவள் காட்டிக் கொள்ளாமல் அழுத்தமான மௌனத்தைக் கடைப்பிடிக்க, அவள் மனநிலையை வெளியே இருந்து பார்ப்பவர்களால் நிச்சயம் கணிக்க முடியாது.

வீராவை அந்த அடியாட்கள் உள்ளே அழைத்து வந்ததுமே, "ஐம் வெயிட்டிங் பாஃர் திஸ் மொமென்ட் டார்லிங்" என்றான் அரவிந்த் முகம் பிரகாசிக்க!

"என் தங்கச்சிங்க எங்கடா?" என்று வீரா அந்த ஆட்களின் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு அரவிந்த் சட்டை காலரைப் பிடிக்க, அந்த அடியாட்களோ அவள் இரு கரத்தைப் பிடித்து பின்னோடு இழுத்தனர்.

அரவிந்த் கேலியாய், "ச்ச்சோ... நான் சொன்னதை அப்படியே நம்பிட்டியா செல்லம்" என்று சொல்லி சிரித்தான்.

அவள் தன் முட்டாள்தனத்தை உணர்ந்த அதே நேரம் அரவிந்த் மீதான கோபத்தோடு "டே... உன்னை" என்றவள் வெறியாகி அந்த ஆட்களின் பிடியிலிருந்து விலகத் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அரவிந்த் கண்ணசைவில் அவளை விடச் சொல்லி தன் ஆட்களிடம் கட்டளை விதிக்க... அவள் விடுபட்ட மறுகணமே அவனைத் தாக்க வந்தாள். அரவிந்த் அவள் முகவாயை அழுத்திப் பிடித்து தடுத்தபடி,

"ஆள் முன்னை விட இப்ப...  செமயா இருக்க" என்றான்.

"செருப்பு பிஞ்சுடும்... பொறுக்கி நாயே" என்றவள் அவன் கரத்தைத் தள்ளிவிட்டு பின்னோடு நகர, சரத் அவள் தலை முடியை அழுந்த பற்றிக் கொண்டான்.

"ஆ வலிக்குது" என்றவள் கதற,

"ரொம்ப பத்தினி வேஷம் போடாதடி... அந்த சாரதி கூட தாலி கட்டாமலே குடும்ப நடத்திட்டிருக்கவதானே நீ" என்று  சரத் கேட்க,

"அது என் இஷ்டம்... நீ யாருடா அதைக் கேட்க... விடுறா என்னை" என்று அவள் சரத்தின் பிடியிலிருந்து விலக முடியாமல் பெரும்பாடுப்பட்டுக் கொண்டிருந்தாள்.

சரத் மேலும், "என் மச்சானுக்கு என்னடி குறை... அந்த சாரதி... அவன் கால் தூசு பெறுவானாடி... போயும் போயும் அவன் கால்ல விழுந்திருக்கிறதுக்கு பதிலா என் மச்சான் கால்ல விழுந்திருந்தா... உன்னை மகாராணி கணக்கா வைச்சிட்டு இருந்திருப்பான்" என்று சொல்லி அவள் முடியை விடுத்து அவளை வேகமாய் முன்னே தள்ளிவிட அவள் தடுமாறி,

"அம்ம்ம்ம்ம்ம்ம்மா" என்று கத்திக் கொண்டு அரவிந்தின் காலடியில் வீழ்ந்தாள். வீழ்ந்த வேகத்தில் அடிவயிற்றைப் பிடித்து கொண்டு வலிதாங்காமல் அவள் அவதியுற,

அவள் வலியில் துடித்துக் கொண்டிருப்பதை அரவிந்த் சற்றும் பொருட்படுத்தாமல் அவள் முடியைக் கொத்தாய் பற்றித் தூக்கினான்.

"அய்யோ வலிக்குது... விடுறா" என்றவள் கதறிக் கொண்டே  அவன் கரத்தில் அடிக்க,

"உன்னை எவ்வளவு உயர்வான இடத்தில வைச்சிருந்தேன்... அசிங்கப்படுத்திட்டியே டி... அப்படி என்னடி அந்த கேடு கெட்டவன் கிட்ட பிடிச்சிருக்கு உனக்கு...?!" என்றவன் பிடி இன்னும் இறுக்கமானது.

"அவரைப் பத்தி ஏதாவது சொன்ன... உன்னை கொன்னுடுவேன்டா" என்று அந்நிலையிலும் சீற்றமாய் கத்தினாள்.

"கொன்னுடுவியா... எங்கே கொல்லுடி பார்ப்போம்" என்றவன் கேட்கும் போது அவன் கரம் அவள் முடியை விடவில்லை. அவளாலும் அந்த நொடி அவனிடம் போராட முடியவில்லை.

"ஏன்டா இப்படி என்னை படுத்துற... நான் என்ன மாதிரி நிலைமையில இருக்கேன் தெரியுமா?!" என்றவள்  தன் குரலைத் தாழ்த்தி அவதியோடு வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.

அவளை யோசனையாய் ஏறஇறங்கப் பார்த்தவன், "ப்ரக்னன்ட்டா இருக்கியா... எத்தனை மாசம்?" என்று எகத்தாளமாய் கேட்டு அவள் வயிற்றில் கை வைத்தான்.

வீராவின் கோபம் உச்சத்தைத் தொட அந்த நொடி அரவிந்த் முகத்தில் காரி உமிழ்ந்து,

"த்தூ... ஒரு நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவனாடா நீ... அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும்... இப்படி நடந்துக்கற" என்று ஆக்ரோஷமாய் கேட்க,

அரவிந்திற்கு வெறியேறி அவனின் கோபம் பன்மடங்கு பெருகியது.

வீராவின் தலைமுடியை உதறி வேகமாய் அவளைத் தள்ளிவிட ... அவளோ அங்கிருந்த கண்ணாடி டீபாயில் சென்று வயிற்றில் மோதி வலி தாங்காமல் அப்படியே துவண்டு அதன் மீதே சாய்ந்தாள்.

அரவிந்த் உள்ளத்தில் இருந்த பழிவுணர்வு தீஜ்வாலையாய் அவன் விழிகளில் மின்ன,

"அன்னைக்கு உன் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி என்னை அவமானப்படுத்துன போதே உன்னை தூக்கியிருக்கணும்டி.... தப்பு பண்ணிட்டேன்" என்றவன் வெறியோடு கத்த,

அவள் வலியோடு நிமிர்ந்து, "சத்தியமா...  அன்னைக்கு நான் உன்னை அவமானப்படுத்த அப்படி செய்யல... அவங்க அல்லாம்தான் நான் சொல்ல சொல்லக் கேட்காம அப்படி பண்ணானுங்க" என்றவள் முடிந்த வரை தன்னிலையை விளக்கினாள். ஆனால் அதைக் கேட்கும் மனநிலையில் அவனில்லை.

"ஓ! அவனுங்கதான் செஞ்சாங்க... நீ அப்பாவி... அப்படிதானே?" என்று அரவிந்த் கோபமாக கேட்க சரத் அப்போது,

"சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ணாதே அரவிந்த்... உனக்கு இவதானே வேணும்... தூக்கிட்டுப் போய் ஆசை தீர அனுபவிச்சுக்கோ... அப்புறம் நம்மாளுங்க கிட்ட கொடுத்துடு... அவனுங்களும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திட்டு போகட்டும்" என்றவன் குரூரமாய் உரைத்தான்.

அரவிந்த் முகம் சுளித்து, "சீ... இவளைப் போய் நான் தொட்டா எனக்குதான் அசிங்கம்... அந்த சாரதியோட எச்சை இவ" என்றான்.

"அப்புறம் எதுக்குடா இவளை இவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கிட்டு வர வைச்ச" என்று சரத் கடுப்பானான்.

அரவிந்த் சிரித்தபடி, "ஆமா தூக்கிட்டு வர வைச்சேன்... ஏன்னா?!”

“என்னை வேணான்னு சொன்ன இவளையும்... நான் விரும்பினேன்னு தெரிஞ்சுக்கிட்டும்... இவளை கட்டிக்கிட்ட அவனையும்... அசிங்கப்படுத்த... அணுஅணுவா துடிக்க வைக்க... எப்படி மீடியால  எங்க அப்பாவோட பேரை நாரடிச்சானோ... அதே போல அவன்  பேர் நாரடிக்க"

"புரியலயே?" சரத் குழப்பமாய் கேட்க,

"நான் மட்டும் பார்க்கணும்னு நினைச்ச இவ உடம்பு... எப்போ எனக்கில்லாம போச்சோ... அதுக்கு இனிமே மதிப்பில்லாம போகணும்... எல்லா சோஷியல் மீடியாலயும் இவளோட நிர்வாண படம்தான் வரணும்" அரவிந்த் வன்மமாய் பதிலுரைத்தான்.

 சரத்தின் விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்தன. அவனே இதை எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே வலியில் தாங்க முடியாமல் அவதியுற்றவளுக்கு அவனின் அந்த வார்த்தைகள் இடியை இறக்கியது.

அவள் முகம் சிவக்க அவனை முறைத்து அருவருக்கத்தக்க பார்வை பார்க்க, "என்னடி முறைக்கிற?... நீதானடி செட்டில் பண்ண சொன்ன... அதான் அவன் செஞ்சதுக்கெல்லாம் மொத்தமா செட்டில் பண்ணிடலாம்னு... அதுவும் உன் மூலமா" என்றவன் சரத்திடம் திரும்ப,

"எப்படி மாமா என் ப்ளான்?" என்று வினவினான்.

"செம மச்சான்... அந்த சாரதிக்கு இது சரியான தண்டனைதான்" என்றான்.

"வேண்டாம்.... இது அவருக்கு மட்டும் தெரிஞ்சது" என்றபடி வீரா எழ முயன்று முடியாமல் மீண்டும் தரையில் சரிந்துவிட சரத் அவளைப் பார்த்து,

"தெரிஞ்சாலும் உன் சாரதியால இப்போதைக்கு ஒண்ணும் கிழிக்க முடியாதுடி... நீ வேணா கையை மேலே தூக்கி...... மேல இருக்க தி கிரேட் லாட் பார்த்தசாரதியைக் கூப்பிடு... அவர் வேணா... உன் மேல இரக்கப்பட்டுப் புடவை கிடவை அனுப்ப சான்ஸ் உண்டு" என்று எள்ளிநகைத்தபடி உரைக்க, அரவிந்த் இதைக் கேட்டு பயங்கரமாய் சிரித்தான்.

அப்போதைக்கு அவளுக்கு உதவிக்கரம் நீட்ட எந்தப் பகவானும் இல்லை. அதே நேரம் உதவிகளை எதிர்பார்த்து நிற்க அவளும் திரௌபதி இல்லை.

சாரதியின் அலுவலகம்!

அந்த இடத்தைத் தலை கீழாய் திருப்பிப் போட்டது போல எல்லாமே அலங்கோலமாய் கிடந்தன. அங்கிருந்த கோப்பைகள் யாவும் தரையில் மற்றும் மேஜையில் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

சாரதி சொன்ன எந்தக் காரணத்தையும் அந்த அதிகாரிகள் ஏற்கும் நிலையில் இல்லை. நம்பவும் இல்லை. அவர்களை மீறி அவனாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும் அவனுக்கு கத்திமுனையில் நிற்பது போல் இருந்தது. அவன் தேகத்தின் இரத்த நாளங்களில் செங்குருதிக்கு பதிலாக செந்நீர் பாய்ந்து ஓடுவது போலிருக்க எதுவும் செய்ய முடியாமல் இப்படி இயலாமையோடு அங்கே நிற்பதற்கு செத்தே போய்விடலாம் என்று தோன்றியது. கிட்டத்தட்ட பாதி உயிராகத்தான் அங்கே இருந்தான். தன் உயிருக்கு உயிரானவளைக் காக்கும் உபாயம் தெரியாமல்...

அந்த நொடி அவன் மூளை வீரா என்ற பெயரை மட்டுமே ஓயாமல் ஜபித்துக் கொண்டிருந்தது. அவன் உதடுகளோ, 'ஆல் இஸ் வெல்' என்று ஓதியபடி கிடந்தன.

அவனின் நிலைமை புரியாமல் அந்த அதிகாரிகள் தங்கள் சோதனைகளில் படுதீவிரமாய் இருந்தனர். அதோடு அவர்கள் குடைந்து குடைந்து கேள்விகள் எழுப்ப அனைத்திற்கும் கணேஷ் பொறுமையாய் பதிலளித்து அதற்கான ஆவணங்களைக்  காண்பித்து விளக்கமளித்துக் கொண்டிருந்தான்.

இறுதியாய் அந்த அதிகாரிகள் தங்கள் சோதனைகளை முடித்து சாரதியின் முன்னே வந்து சில கேள்விகளை எழுப்ப, அதற்கும் கணேஷ் தான் பதில் சொல்ல முன் வந்தான்.

“இதுக்கு உங்க பாஸ்தான் பதில் சொல்லணும்” என்று அந்த அதிகாரிகள் சாரதியின் பதிலை எதிர்நோக்க... அவன் கோபக்கனலோடு,

"சாரி... நீங்க கேட்கிற எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியாது... சொல்லவும் மாட்டேன்... உங்களால முடிஞ்சதைப் பார்த்துக்கோங்க" என்றான் தீர்க்கமாக!

"என்ன பேசறீங்க மிஸ்டர் சாரதி?" அந்த அதிகாரிகள் உச்சபட்சமாய் அதிர,

"வேற என்ன சொல்லணும்... நீங்க கேட்கறதுக்கெல்லாம் நான் பொறுமையா உட்கார்ந்து பதில் சொல்லிட்டிருக்கவா... புல் ஷிட்" என்று தன் மேஜையில் மீதிருந்த பைஃல்களை எல்லாவற்றையும் தாறுமாறாய் தூக்கி வீசியவன்,

"என் வொய்ஃபுக்கு பிரச்சனைன்னு சொல்றேன்... அதை காதுல வாங்காம... என்னை வெளியவும் போக விடாம...  இது என்ன... அது என்னன்னு... இடியாட்டிக்கா" என்று பேசும் போதே அவன் உடலும் வார்த்தைகளும் நடுக்கமுற்றது.

"சார் கொஞ்சம் பொறுமையா" என்று கணேஷ் சாரதியிடம் சொல்ல முற்படும் போதே, "நான்சென்ஸ்... வீராவுக்கு ஏதோ பிரச்சனைன்னு சொல்லிட்டிருக்கேன்... என்னடா பொறுமையா" என்று கேட்டு கணேஷை கோபமாய் அறைந்துவிட்டான்.

"மிஸ்டர். சாரதி... நீங்க ரொம்ப ஓவரா போறீங்க... நாங்க கேட்கறதுக்கெல்லாம் சரியா ஆன்ஸர் பண்ணலன்னா" என்று அந்த அதிகாரிகளில் மேலானவர் ஒருவர் சொல்ல,

"பண்ணலன்னா...  என்ன சார் பண்ணுவீங்க.... என் பணம் சொத்து  அக்கௌன்ட்ஸ் எல்லாத்தையும் சீஸ் பண்ணுவீங்களா... கோஅஹெட்... டூ இட்...  வேணும்னா என் கடையை கூட சீல் வைச்சுக்கோங்க... ஐ டோன்ட் கேர்... எனக்கு என் வொய்ஃபோட சேஃப்டியைத் தவிர வேறெதுவும்... வேறெதுவும் இப்போ முக்கியமில்லை" என்று கத்திவிட்டு அப்படியே இருக்கையில் மீண்டும் அமர்ந்து கொண்டான்.

அவனவன் விதைத்ததை அவனவன் அறுவடை செய்தே தீர வேண்டும்.

You cannot copy content