You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 44

Quote

44

மணக்கோலம்

இருவரின் மனநிலையுமே எரிமலைக் குழம்பாய் தகித்துக் கொண்டிருக்க... எந்தக் காரணம் கொண்டும் சாரதி... தங்களின் திருமண ஏற்பாட்டை மட்டும் தள்ளிப்போட ஒப்புக்கொள்ளவில்லை.

தன்நெஞ்சு அறியத் தவறு செய்யும் போதே... பக்காவாக வியூகம் அமைப்பவன் தவறே செய்யாத வீராவை காப்பதற்காக தனது மொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி இருந்தான்.

ஏற்கனவே மாதவிடாய் காரணமாக அவள் உதிரப்போக்கில் இருந்தது... மற்றும் கண்ணாடியினால் கிழிக்கப்பட்டு அதிக இரத்தம் வெளியேறியது இதையெல்லாம் காரணம் காட்டி மருத்துவர்களிடம் அவளுக்கு இன்னும் மருத்துவ உதவி தேவை என்று அவளை மருத்தவமனையில் அனுமதிக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டான். வேறுவழியின்றி காவல்துறை  அதிகாரிகளும் இதற்குச் சம்மதித்தனர்.

 கிடைத்த அந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி தன் வழக்கறிஞர் மூலமாக  அவளுக்கு ஜாமீனும் வாங்கியிருந்தான். அதாவது வீராவைக் கடத்தியது... அவளைக் கன்னத்தில் அறைந்தது... உடலில் காயங்கள் ஏற்படுத்தும் வகையில் தாக்கியது... அவளது தன்மானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவளை ஆபாச காணொளி எடுக்க முயன்றது என இதுபோன்ற சூழலில் தற்காத்துக் கொள்ள அவள் முயலும் பொழுது எதிர்பாராத விதமாக நடந்த கொலை என்பதாகச் சொல்லி இது இபிகோ தற்காப்புக் கொலை சட்டம்... தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்ற ரீதியில் அவளுடைய ஜாமீன் மனு பெறப்பட்டது.

மேலும் அரவிந்திற்கும் சாரதிக்கும் உள்ள தொழில் முறை காழ்ப்புணர்ச்சியே வீராவை கடத்தியதற்கு காரணம் என்பதை விளக்கும் ஆவணங்கள்... வீராவின் மருத்துவ அறிக்கை... வீரா சாரதியின் சட்டப்பூர்வமான மனைவி என்பதைப் பறைசாற்றும் அவர்களுடைய திருமண பதிவு சன்றிதழ்... அனைத்தும் சான்றாக அளிக்கப்பட... விசாரணையை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் நீதிபதிக்கு... ஜாமீன் அளிப்பதில் எந்தத் தயக்கமும் இல்லை.

  மருத்துவமனைக்குள் நுழைந்தவள்... பின் மணப்பெண் கோலத்தில்தான் வெளியே வந்தாள். ஒரு நொடி கூட வீரா போலீஸ் காவலில் இருக்கும் நிலை உருவாகாமல் பார்த்துக் கொண்டான் சாரதி!

**********

செங்குன்றம்... வீராமாகாளியம்மன் கோவில்... பெண்மையின் வீர சொரூபத்தைப் பறைசாற்றும் விதமாய் வீரமாகாளியம்மன்  சிம்மத்தின் மீது கம்பீரமாய் வீற்று அருள்பாலித்துக் கொண்டிருந்தாள்.

 வீராவின் குலதெய்வமான வீரமாகாளி முன்னிலையில் சாரதியின் குடும்ப முறைப்படி திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கணேஷிற்கு துணையாக சுகுமாரும் இருந்து திருமணத்திற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டான். மற்றொரு புறம் தெய்வானை வீராவை தயார் செய்து கொண்டிருந்தார்.

அவள் வலது கரத்திலிருந்த காயத்தால் தெய்வானை ஓர் தாய் ஸ்தானத்தில் நின்று அவளின் அலங்காரம் முதற்கொண்டு அனைத்தையும் பார்த்து பார்த்துச் செய்தார்.

அடர் சிவப்பு ஒன்பது கஜம் புடவையை மடிசார் பாணியில் உடுத்திக் கொண்டு நீளமில்லாத காரணத்தால் கூந்தலைச் சிறிதாக முடித்து அதில் உச்சிப் பூ பொருத்தி மல்லிகை சரத்தை சுற்றியிருக்க... கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து வியப்புற்றவள்,

“இன்னா மாமி இது கொண்டை... புது ஸ்டைலா இருக்கு” என்று ஆச்சர்யத்தோடு வினவினாள்.

“நம்ம சம்பிரதாயப்படி கல்யாண பொண்ணுக்கு இப்படிதான்டி கொண்டை போடுவா?” என்று பதிலுரைத்தார் தெய்வானை!

“ஓ! அப்போ ஜடை கிடை எல்லாம் கிடையாதா?” வீரா இவ்விதம் கேட்கவும் சிரித்துக் கொண்டு வந்து நின்றனர் அவளின் இரு சகோதிரிகள்.

“இப்ப எதுக்குடி சிரிக்கிறீங்க?” என்று வீரா கடுப்பாக,

“இல்ல... ஜடை போடறதுக்கு அங்க எங்க முடி இருக்குன்னு யோசிச்சோம்... சிரிச்சோம்” என்று நதி சிரித்துக் கொண்டே பதிலளிக்க அம்மு வேறு தன் பங்கிற்கு,  “யக்கோவ்! கொண்டை போட்டு சும்மா மடிசார் கட்டிக்கிட்டு அப்படியே ஐயராத்து மாமியாட்டமே கீற” என்றாள்.

“அடிங்க... நானே இதைக் கட்டிகிட்டு கடுப்புல உட்கார்ந்துடிருக்கேன்... இவளுங்க வேற... போங்கடி இங்க இருந்து” என்று வீரா அவர்களை விரட்ட, இருவரும் முறுவலித்துக் கொண்டே அங்கிருந்து திருமண சடங்குகள் நடக்கும் இடத்திற்கு வந்திருந்தனர்.

அங்கே சாரதி பஞ்சகச்சம் அணிந்து அங்கவஸ்திரம் தரித்து நிமிர்வான பார்வையோடும் தெளிவான மனநிலையைப் பிரதிபலிக்கும் முகத்தோடும் அமர்ந்திருந்தான். அவன் கூரிய விழிகளோ  தன்னவளின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்க, ஒரு வழியாய் வீராவும் தம் அலங்காரங்களை முடித்து மணக்கோலத்தில் அவ்விடம் வந்து சேர்ந்தாள்.

 அவளின் சௌந்தரியத்தை பன்மடங்கு கூட்டியிருந்த அந்த உடையலங்காரங்களைப் பார்த்தவனின் விழிகள் சில நொடிகள் இமைக்கவும் மறந்து போயின. அவளையே குறிவைத்துப் பார்த்திருந்த அவன் பார்வையின் தாக்கத்தில் அவள் உதடுகள் மலர... அவள் சிரமோ நாணத்தில் தானாகவே தரைதாழ்ந்து கொண்டது.

வெட்கத்தில் சிவந்த அவள் முகத்தைக் கண்டவனின் முகமோ  குறும்புத்தனத்தில் மின்ன, ஒருவரை ஒருவர் தீண்டாமலே  அவர்களுக்குள் காதல் பரிமாற்றம் நிகழ்ந்தது. இந்தத் திருமணம் ஏற்பாடு வெறும் சம்பிரதாயத்திற்காகவே எனினும் அவர்களுக்குள் இந்தச் சடங்குகள் யாவும் ஓர் புத்துணர்வை புகுத்திய அதே நேரம்  அவர்களின் பிரச்சனைகளையும் மறக்கடித்திருந்தது.

அந்த திருமண விழாவில் அவர்களுக்கு ரொம்பவும் நெருக்கமானவர்கள் மட்டுமே வருகை தந்திருக்க, அப்போது வயது முதிர்ந்த ஓர் பெண் வீல் சேரில் நுழைய எல்லோர் பார்வையும் அவர் புறம் திரும்பியது சாரதியும் வியப்பாய் அவரைப் பார்த்து, “யார் அவங்க?” என்று கேட்க, 

வீரா சற்றுத் தயங்கிவிட்டு பின் மெலிதான குரலில், “உங்க அம்மா” என்றாள். அவன் அதிர்ச்சி கலந்த கோபத்தோடு அவளை நோக்க,

“கோச்சுக்காத ய்யா... உன்னை பார்க்கணும்னு கேட்டாங்க... எங்க நீ... வீட்டுக்கு வர சொன்னா கோபப்படுவியோன்னுதான்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவன் தேடலாய் சுற்றும் முற்றும் பார்த்து கணேஷை அழைத்தான்.

வீரா உடனே, “ப்ளீஸ் அனுப்பிடாதய்யா... நம்ம கல்யாணத்த பார்த்துட்டு அவங்களே கொஞ்ச நேரத்துல போயிடுவாங்க” என்றவள்  அவன் கரத்தை அழுந்தப் பற்றி, “எனக்காக” என்று கெஞ்சலாய் இறங்கிய தொனியில் கேட்க அவளை ஆழமாய் ஓர் பார்வை பார்த்தவன் பின் அந்த வார்த்தையை மீறி எதுவும் செய்ய முடியாமல் அமைதி காத்தான்.

அதன் பின்னர் அவர்களின் திருமண சடங்குகள் இனிதே அரங்கேறத் தொடங்கியது. எத்தனையோ மோசமான பிரச்சனைக்கு இடையில் இந்த திருமணம் நிகழ்கிறது எனினும் அவற்றையெல்லாம் கடந்து அவர்கள் மனதில் ஓர் ஆழமான இன்பவூற்று சுரக்க, சாரதி தன்னவளின் கழுத்தில் மாங்கல்ய நாண் பூட்டி அவர்களின் அழகான உறவிற்கு இன்னும் அழகாய் ஓர் வடிவம் தந்திருந்தான்.

அந்த திருமண விழா நிறைவாய் முடிந்திருக்கச் சாரதியின் தாய் கிறிஸ்டீனா, “சாரதி” என்று அவனை வாழ்த்த அழைப்பு விடுக்க அவனோ தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். அவர் விழிகள்  கலங்க அவனை ஏக்கமாய் பார்க்கவும்... வீரா அவனிடம், “யோவ்... பாவம் ய்யா ரொம்ப உடம்பு முடியாம வந்திருக்காங்க... இரண்டொரு வார்த்தை பேசேன்” என்றாள்.

அவளைக் கோபமாய் முறைத்தவன் சட்டென்று கிறிஸ்டினாவின் புறம் திரும்பி, “நீங்க என் கல்யாணத்துக்கு வந்தததுக்கு ரொம்ப சந்தோஷம்” என்று அவரை நோக்கி தம் கரங்கள் குவித்து கடுப்பாய் பேசினான். அவர் முகம் இன்னும் வாடிப் போனது. அதோடு வீராவின் புறம் திரும்பியவன்,

 “பேசிட்டேன்... போதுமா... இல்ல.. கால்ல... எதாச்சும் விழணுமா... சொல்லு... அதையும் செஞ்சுடறேன்” என்று சொல்லி அவளிடம் பார்வையாலேயே வெறுப்பை உமிழ்ந்தான். வீரா அதற்கு மேல் பேசமால் மௌனமாகிட கிறிஸ்டீனா ஆதங்கத்தோடு அவனிடம் பேசத் தொடங்கினார்.

“நீ ஏன்... சாரதி என் கால்ல விழணும்... உனக்கு நான் செஞ்ச அநியாயத்துக்கு நான்தான் உன் கால்ல விழணும்” என்று அவர் வருத்தப்பட்டு சொல்லி தன் விழிநீரைத் துடைக்க இந்த காட்சியை எட்டி நின்று பார்த்துக் கொண்டிருந்த சாரங்கபாணி அவரை நெருங்கி,

“என்ன நீங்க... இப்படி நல்ல நாள் அதுவுமா கண்ணை கசக்கிண்டு... விடுங்கோ... எல்லாம் சரியாயிடும்” என்று ஆறுதல் கூறினார். அப்போது தெய்வானையும் தன் கணவனோடு இணைந்து அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்ற ... அப்போதும் சாரதி தன்னிலையில் இருந்து கிஞ்சிற்றும் இறங்கி வரவில்லை.

கிறிஸ்டீனா வேதனையோடு அவனை நோக்கி,“சரி சாரதி... நீ என்னை மன்னிக்கலனாலும் பரவாயில்ல... என்னோட மொத்த சொத்தையும் உன் பேர்ல மாத்திட்டேன்... அதை மட்டுமாச்சும் மறுக்காம ஏத்துக்கோ” என்று சில பத்திரங்களை அவனிடம் நீட்ட அதனை அவன் பெற்றுவிடக் கூடாதே என்று வீரா மனதளவில் எண்ணிக் கொண்டு தவிப்பாய் அவனைப் பார்த்தாள்.

அவன் அப்போது கிறிஸ்டீனாவிடம், “எனக்கு இந்த சொத்தெல்லாம் வேண்டாம்... இதை உங்களுக்கு அப்புறம் ஏதாச்சும் ஆதரவற்ற குழுந்தைங்க இருக்குற ஆசிரமத்துக்குச் சேர்ற மாதிரி எழுதி வைச்சிடுங்க... நான் இதை வருத்தத்துலையோ கோபத்துலையோ சொல்லல... மனசார சொல்றேன்” என்றான். இதைக் கேட்ட மறுகணம் வீரா உட்பட எல்லோருமே வியப்பில் ஆழ்ந்தனர்.

கிறிஸ்டீனாவின் முகம் அவன் வார்த்தைகளைக் கேட்டு பூரிப்படைய, “ஆகட்டும் சாரதி... உனக்கு அதான் விருப்பம்னா நான் அப்படியே செஞ்சுடறேன்” என்றார்.

“ரொம்ப சந்தோஷம்” என்று சொல்லி சாரதி கிறிஸ்டீனாவிடம் தன் இறுக்கத்தைத் தளர்த்து இயல்பாய் புன்னகைக்க... கணவனின் இந்த மாற்றத்தைப் பார்த்த வீராவிற்கு மெய்சிலிர்த்தது.

  திருமண சடங்குகள் இனிதே முடிந்து அவர்கள் புறப்பட்டிருந்த சமயம் பத்திரிக்கை நிருபர்கள் அவர்களைக் கோவிலைவிட்டு வெளியேற விடாமல் சூழ்ந்து கொள்ள, கணேஷும் சுகுமாரும் அவர்களைத் தடுத்து பார்த்துத் தோல்வியுற்றனர்.

அந்த சந்தர்ப்பத்தில் ஓர் நிருபர் உள்ளே புகுந்து, “உங்க மனைவிக்கும் அரவிந்துக்கும் தொடர்பிருந்துதாமே... அது உண்மையா?!” என்ற கேள்வியைக் கேட்க வீராவின் முகம் இருளடர்ந்து போக அவள் பேசுவதற்கு முன்னதாக சாரதி முன்னேவந்து,

“அப்படியெல்லாம் இல்ல... நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு எதையாச்சும் கிளப்பி விடாதீங்க” என்று கடிந்துரைத்தான்.

“நீங்க இல்லன்னு சொல்றீங்க... ஆனா விசாரிச்சதுல” என்று மற்றொரு நிருபர் தன் பங்குக்குக் கேட்க அவன் உள்ளம் கொதித்தது. வீரா எதவும் பேச வேண்டாம் என தன் கணவனிடம் கண் ஜாடை காட்ட அந்த நிருபர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கேள்விக்கணைகளைத் தொடுத்த வண்ணம் இருந்தனர்.

சாரதியின் கோபம் தம் எல்லையை மீற அவர்களை நோக்கி தன் குரலை உயர்த்தி, “இனாஃப்... எனக்கு என் மனைவியைப் பத்தி நல்லா  தெரியும்... நீங்க என்ன வேணா விசாரிச்சு என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க... ஐ டோன்ட் கேர்... அதனால எல்லாம்  என் மனைவியோட புனிதம் கெட்டும் போயிடாது... அன்ட் உங்க சந்தேகத்துக்காக எல்லாம் என் மனைவியை  என்னால தீக்குளிக்க வைக்கவும் முடியாது... காட் இட்” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு, “வா வீரா போலாம்” என்று அவளைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

******************

ஒரு வருடம் கழித்து... அன்று வீராவின் வழக்கு விசாரணைத் தீர்ப்பு...

 அந்த வழக்கின் முக்கிய ஆதாரமாய் எடுத்துக் கொள்ளப்பட்டது சரத்தின் செல்பேசியில் பதிவாகியிருந்த காணொளி. அரவிந்தை பிரச்சினையில் சிக்க வைத்து அவன் சொத்தை அபகரிக்கும் நோக்கில் சரத்  ஆரம்பம் முதலே அன்று நடந்தவற்றை தன் செல்பேசியில் வீடியோ எடுத்திருந்தான்... அதுவும்  அரவிந்திற்கே தெரியமால்... அவன் நோக்கமே அரவிந்தை பிரச்சனையில் மாட்டிவிட்டு அவன் சொத்தை அபகரித்துக் கொள்வதுதான். ஆதலாலேயே அன்று அரவிந்தைத் தூண்டிவிட்டு அவன் மட்டும் ஒதுங்கியே நின்றான். ஆனால் சரத் அரவிந்திற்காக வெட்டிய குழியில் தானே வீழ்வோம் என்று சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டான். அதுதான் விதியின் விளையாட்டு!

அரவிந்த் வீராவைக் கடத்தியது, அவளிடம் தன் வஞ்சமான எண்ணத்தை சொன்னது, அதோடு அவளை அவமானப்படுத்த முற்பட்டது என்று எல்லாமே தெள்ளத்தெளிவாய் அந்தக் காணொளியில் காட்சி படுத்தப்பட்டிருக்க, வீராவிற்கு அது சாதகமான சாட்சியாக மாறியது.

அதே நேரம் தங்கள் மகனின் கேவலமான நடவடிக்கையைப் பார்த்த சாரதாவும் நாராயணசுவாமியும் அதிர்ந்து போயினர். அதன் பிறகு அவர்கள் வீராவிற்கு எதிராக இந்த வழக்கை நடத்த விருப்பப்படவில்லை. அதுவும் சரத்தால்தான் தன் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்ய முனைந்தான் என்று அவர்களுக்கு அவன் மீது கோபமும் வெறுப்பும் ஏகபோகமாய் வளர்ந்திருக்க, அவனுக்கு ஆதரவாகவும் அவர்கள் நிற்க விரும்பவில்லை. இதில் சரத்தின் பெற்றோர்கள் மட்டும் அவனைக் காப்பாற்ற இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தியதில் இந்த வழக்கின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு அது ஒரு வழியாக இன்று முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக எல்லோரும் படுஆர்வமாய் காத்திருந்தனர்.

வீராவை விடுதலை செய்வதில் எந்தத் தங்குதடையும் இருக்காது என்று முன்னமே தெரிந்த கதைதான். ஆனால் சாரதிக்கு தண்டனைக் கிடைத்துவிடுமோ என்பதே வீராவின் பெரும் கவலையாய் இருக்க... அந்த வழக்கை விசாரித்த பெண் நீதிபதி அந்த நீண்ட நெடிய தீர்ப்பை வாசிக்கத்  துவங்கினார்.

அவரின் தீர்ப்பில் வீரா தன்னை தற்காத்துக் கொள்ளவே இந்தக் கொலையை செய்ய நேரிட்டது என பதிவு செய்து இபிகோ 97 முதல் 104 வரை உள்ள சட்ட பிரிவுகள் கீழ் அவளை விடுதலை செய்தார்.  அதேநேரம் சரத் மீது அரவிந்தை குற்றம் செய்யத் தூண்டியது... அவனுக்கு உடந்தையாய் இருந்தது... வீராவைக் கடத்தியது மற்றும் அவளிடம் அவதூறாக பேசியது... தாக்கியது போன்ற பலதரப்பட்ட செக்ஷன்களில் சாரதியின் வழக்கறிஞர்  திறம்பட வாதாடி அதனை நிரூபித்ததில் அவனுக்கு பத்துவருட கால கடுங்காவல் தண்டனை மற்றும் ஓர் பெரும் தொகை அபராதமாக வழங்கப்பட்டது. இறுதியாய் சாரதி சரத்தை தாக்கியதாக பதிவான வழக்கில் அது தற்செயலாக நடந்தது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்ட அந்த நீதிபதி அவனுக்கு எந்தவித தண்டனையும் வழங்கவில்லை.

இதற்குப் பின்னணியில் சாரதியின் புத்திசாலித்தனம் அடங்கியிருந்தது. அரவிந்த் சரத்தின் தூண்டுதலின் பெயரிலே வருமான வரி சோதனை நிகழ்ந்ததைக் கண்டறிந்தவன் மேலும் அந்த அதிகாரிகளிடம் இத்தனை குற்றங்களும் தன் வார்த்தையை நம்பாததின் விளைவாகவே நடந்தேறின என அவர்களுக்கு எதிராக வழக்கைத் திருப்பிவிடுவதாக மிரட்டினான். அதன் பிறகு சாரதியின் சாமர்த்தியத்தால் அவனுக்கு எதிராகக் காவல்துறையே எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க முன்வரவில்லை.

baminikani has reacted to this post.
baminikani

You cannot copy content