You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Aval Draupathi Alla - 4

Quote

4

எத்தனுக்கு எத்தன்

அந்த பிரமாண்டமான பங்களாவின் வாசலில் தங்க நிற பலகையில் சாரதி இல்லம் என்று பொறிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது.

ஆடம்பரத்தையும் அழகையும் ஒரு சேரக் கலந்திருந்த அந்த பங்களாவிற்குள் கருப்பு நிற ஆடி கார் படுவேகமாய் நுழையப் பார்க்க, செக்யூரிட்டி பதறிக் கொண்டு கதவை திறந்தான்.

அந்த காரைப் பார்க்கும் போதே தோட்டக்காரன், வேலைக்காரன், காவல்காரன் என எல்லோரின் முகத்திலும் அச்ச ரேகை படரும். பார்த்தால் என்ன? சத்தம் கேட்டாலே போதும்.

நேற்று காலை சென்றவன் இன்று காலைதான் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் முடித்துவிட்டு வந்த வேலைகள் அப்படி!

காரை நிறுத்திவிட்டு படபடவென  வீட்டின் வாயிலை நோக்கி நடந்தவன், உள்நுழையாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.

வீடு முழுக்க ஒரே புகைமூட்டமாய் இருக்க, "வாட் தி ஹெல்?" என்று குரலை உயர்த்தி அவன் சத்தமிட,

"வந்துட்டியா பார்த்தா... உனக்காகதான்  சித்தி பூஜை ஏற்பாடு பண்ணிருக்கா... போ... போய் சட்டுபுட்டுன்னு ஸ்நானம் பண்ணிட்டு வா" என்றார் சாரங்கபாணி, சாரதியின் சித்தப்பா!

அந்த நொடி அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"யாரைக் கேட்டு என் வீட்ல இதெல்லாம் பண்ணிகிட்டிருக்கீங்க?" முகத்திலறைந்தது போல் அவன் கேள்வி எழுப்ப மடிசார் அணிந்து கொண்டு அவன் முன்னே வந்து நின்ற தெய்வானை,

"கோபப்படாத பார்த்தா? உன் நல்லதுக்காகதான் இந்த பூஜையெல்லாம்... நீ சிம்மராசி இல்லயோ... உனக்கு இன்னைக்கு சனிபெயர்ச்சி... அதான் நம்ம ஆத்துலயே பூஜை ஏற்பாடு பண்ணியிருக்கேன்... எல்லாம் உன் ஷேமத்துக்காகதான்" என்று மூச்சுவிடாமல் அவர் பேசி முடிக்க, அவரை ஏற இறங்கப் பார்த்து எகத்தாளமாய் சிரித்தான் சாரதி!

"ஹ்ம்ம்... என் ஷேமத்துக்கு?!"  என்று கேட்டவன் தன் சித்தியைக் குத்தும் பார்வையோடு,

"நான் பசியா கிடந்த போது ஒரு வாய் சாப்பாடு போட்டிருப்பீங்கள?! இன்னைக்கு மட்டும் என்ன ஷேமம்... ஓமன்னு?!" தீவிரமான முகபாவத்தோடு அவன் கேட்கவும் தெய்வானை அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் நின்றார்.

"உங்க இரண்டு பேருக்கும் ஒண்ணு சொல்றேன்... நல்லா கேட்டுக்கோங்க... நம்ம பழைய வீட்டோட சொத்து எனக்கு அவசரத்துக்கு தேவைபட்டுச்சு... நீங்க அதை என் பேருக்கு மாத்திக் கொடுத்தீங்க... அந்த ஒரே ஒரு காரணத்துக்காக தான் உங்க இரண்டு பேரையும் இங்கே தங்க வைச்சிருக்கேன்... மத்தபடி இது என் வீடு... இங்க எது செய்றதா இருந்தாலும் என்னைக் கேட்டுதான் பண்ணனும்... ரைட்" என்று அழுத்தமாய் உரைத்தவன்,

அதற்கு மேல் அங்கே நிற்காமல் மாடிக்கு சுழலாக செல்லும் படிக்கெட்டில் ஏறிக் கொண்டே, "நான் கீழே வர்றதுக்குள்ள இந்த நான்சென்ஸ் எல்லாத்தையும் க்ளியர் பண்ணியிருக்கணும்" என்று எச்சரிக்கையாய் சொல்லிவிட்டு அறைக்குள் செல்லப் போனவன் மீண்டும் திரும்பிவந்து,

"அன்ட் ஒன் மோர் திங்... இந்த பார்த்தான்னு கூப்பிடுறதை இத்தோடு நிறுத்திக்கோங்க... ஐம் ஜஸ்ட் சாரதி" என்று சொல்லிவிட்டு அகன்றான்.

பார்த்தசாரதி என்ற அவன் முழுப் பெயரை எப்போதோ சாரதி என்று மாற்றி பார்த்தாவை சிறு சுவடு கூட இல்லாமல் துடைத்துவிட்டிருந்தான். முதல் பாதி பெயரை மட்டுமல்ல... அவனின் மோசமான முந்தைய வாழ்க்கையைக் கூடதான்!

பார்த்தசாரதி... ரங்கநாதன் கிரிஸ்டினாவுக்கும் பிறந்த ஒரே மகன்.

வேற்று ஜாதி, மதம், இனம், ஸ்டேட்டேஸ் என எந்தவித ஒப்புமையும்  இல்லாத ஜோடி! கல்லூரியில் படிக்கும் போது மனம் ஒத்து காதலித்தவர்கள்.

திருமணத்திற்கு இருவீட்டார் பக்கமும் பயங்கர எதிர்ப்பு! ஆதலால் இருவரும் குடும்பத்தைப் பிரிந்து வந்து கலப்பு திருமணம் செய்து கொண்டு இன்பகரமாய் இல்லறத்தைத் தொடங்கினர்.

ஆனால் தனிக்குடித்தனத்தில் வாழ ஆரம்பிக்கும் போதுதான் இல்லறம் மெல்ல கசந்து வாழ்க்கையின் நிதர்சனம் புரிய ஆரம்பித்தது. அதுவும் கிரிஸ்ட்டினா பணக்கார வீட்டுப் பெண்!  பணத்தின் தேவையும் அதன் முக்கியத்துவமும் புரியும் போது அவர்களின் காதல் தொலைந்து போக, ஒருவரை ஒருவர் அனுசரித்துக் கொள்ள முடியாமல் நிகழ்ந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்டது பார்த்தசாரதி!

ஒரு நிலைக்கு மேல் அந்த உறவைத் தாக்குபிடிக்க முடியாமல் சாரதியின் ஐந்துவயதில் இருவரும் பிரிந்தனர். கிரிஸ்ட்டினா குழந்தையைக் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றுவிட,

ரங்கநாதன் மனைவியைப் பிரிந்த துக்கத்தில் உடைந்து போய் வாழப் பிடிக்காமல், மகனை தன் தம்பி சாரங்கபாணியிடம் ஓப்படைத்துவிட்டு துறவறம் பூண்டார். பொறுப்பை தட்டிக் கழிக்க இப்படியும் ஒரு வழி!

சாரங்கபாணியோ கோவிலில் அர்ச்சகராய் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் மனைவி தெய்வானை!

சாரதி தன் தமையன் மகன் என்ற பாசத்தில் அவர் வீட்டுக்கு அழைத்து வர, அங்கே தெய்வானை அவனை படுகேவலமாக நடத்தினாள். தீண்டத்தகாதவன் போல! வேற்று ஜாதி பெண்ணுக்குப் பிறந்தவனாம்!

இரு மகள்களுக்கும் பருப்பு நெய் குழைத்து சாதம் ஊட்டியவர் அவனுக்கு அதன் மிச்சத்தைக் கூட கொடுத்தது கிடையாது. பல நேரங்களில் கோவிலிலேயே உண்டு உறங்கியவனுக்கு, மகாபாரத உபநிடதங்களும் கீதாஉபதேசங்களும் அத்துபடி!

நல்லது கெட்டது என்பது நாம் பார்க்கும் பார்வையில்தானே இருக்கிறது. அதில் சொல்லப்பட்ட வேதாந்தங்கள் மூலமாய் அவன் கற்றுகொண்ட சூட்சமங்கள் அவனின் வெற்றி பாதைக்கு வழி வகுத்தன.

காலை சித்தப்பாவோடு கோவிலில் வேலை! ஏதோ கிடைக்கும் ஒரு தொன்னை பிரசாதத்தோடு அரசு பள்ளிக்கு சென்று படித்தவனுக்கு வாழ்க்கை தன் பங்குக்கு சில பல மோசமான பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. அதுதான் பணம் ஈட்டுவது! அதுவே முதல் முக்கியக் குறிக்கோள்!

அங்கே தன் பயணத்தைத் தொடங்கியவன் பசி பிணி பார்க்காமல் ஓடி ஓடி உழைத்தான். பணம் மட்டுமே பிரதானம் என்று கிடைத்த வேலைகளை எல்லாம் இரவு பகல் பாராமல் செய்தான். பத்தாவதுக்கு மேல் படிக்க முடியாமல் வேலை வேலையென ஓடியவனுக்கு பாடசாலையை விட அனுபவ பாடம் நிரம்பக் கிடைத்தது.

இருபது இருபத்தைந்து வயது வரை ருசியாய் சாப்பிட்டதில்லை. சரியாய் உறங்கியதில்லை. அந்தந்த வயசுக்கு உண்டான எந்தவித இன்பதுன்பங்களையும் அனுபவத்ததில்லை.

வெற்றியை எட்டிப்பிடிக்கும் போது கூண்டில் அடைப்பட்ட சிங்கம் வெளியே விடப்பட்டது போல அவனும் அவன் உணர்வுகளும் சுதந்திரம் பெற, அனுபவிக்காதது எல்லாவற்றையும் கொஞ்சம் வெறித்தனமாய் ருசி பார்த்தான். ஆனால் குடும்பத்தின் மீது எந்தவித பற்றுதலோ ஆசையோ கிடையாது.

இப்படியானவன் சில மாதங்கள் முன்பு பாரம்பரியமாய் திருவல்லிகேணியில் இருந்த தன் தாத்தாவின் வீட்டின் மதிப்பை சிற்சில தேவைகளுக்காக கணக்கு போட்டவன், அங்கேயிருந்த சித்தி சித்தப்பாவிடம் பேசி தன் பெயருக்கு அதனை மாற்றிக் கொண்டான். அதன் விளைவாகதான் அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

அவன் பேசிவிட்டு சென்ற பின் தெய்வானையின் முகமெல்லாம் அவமானத்தில் சிவக்க சாரங்கபாணி அவரிடம், "நோக்கு இதெல்லாம் தேவையா?! வேண்டாம் வேண்டான்னு சொன்னேன்... நான் சொல்றதைக் கேட்காம நம்ம ஆத்த மொத்தமா அவன் பேருக்கு  மாற்றிக் கொடுக்க சொல்லிட்ட" என்று அவர் நொடித்துக் கொண்டு சொல்ல,

"புரியாம பேசாதேள்... இப்படி ஒரு வீட்டை விட்டு அந்த ஓட்டு வீட்டுல நாம ஏன் கஷ்டப்படணும்? இன்னைக்கு நம்மள அவன் அவமானப்படுத்தினாலும் நாளபின்ன அவன் நம்ம பேச்சைக் கேட்டு நடக்காமலா போயிடப் போறான்... என்னதான் இருந்தாலும் அவன் உங்க அண்ணன் பையன்... ரத்த பந்தம் விட்டு போயிடுமா என்ன?" என்று தெய்வானை சொல்லிக் கொண்டே அந்த இடத்தை சுத்தம் செய்ய,

"ஆமா... ஆமா... காசு பணம் வந்ததும் அவன் என் அண்ணன் பையன்னு நோக்கு தெரியுதாக்கும்?!" என்று மனைவியைக் குத்தலாய் கேட்க,

"மூடுங்க வாயை... அவனே மறந்தாலும் நீங்களே ஞாபகப்படுத்திருவேள் போலிருக்கே" என்று உரைத்தவர் சற்று குரலை தாழ்த்தி, 

"இப்ப பார்த்தா... இருக்கிற நிலைமைக்கு நாம அவன் கூடவே ஓட்டிகிட்டோம்னு வைச்சுக்கோங்க... நாள பின்ன இந்த சொத்தில நமக்கும் பங்கு வராதோ?! அதுவும் இல்லாம நம்ம இரண்டு பொண்ணுங்களுக்கும் மருமகன்களுக்கும் அரிசி பருப்புன்னு தேவையானதெல்லாம் கொடுத்தனுப்பலாம்" என்க,

"சரியான அல்பம்டி நீ" என்று தலையில் அடித்துக் கொண்டார் சாரங்கபாணி.

"பின்ன... உங்க ஆரத்தி தட்டுல விழுற அஞ்சுக்கும் பத்துக்கும்ல வாயைக் கட்டி வயித்தைக் கட்டி குடும்பம் நடத்தினவளாச்சே! அல்பமாதான் இருப்பேன்"

"அப்படி வாழ்ந்தாலும் சத்த கௌரவத்தோடு இருந்தோம்"

"ம்க்கும்... அந்த கௌரவத்தை தூக்கி அடுப்பில போடுங்கோ... அதையெல்லாம் வைச்சுக்கிட்டு ஒரு பொடலங்காய்க்கும் பிரோயஜனம் இல்ல" என்றார்.

தெய்வானையின் இந்த பணத்தாசையைதான் சாரதி பயன்படுத்திக் கொண்டான். அங்கேயும் அவன் செய்தது வியாபாரம்தான். ஒரு ரூபாய் செலவில்லாமல் அவன் நினைத்ததை முடித்து அந்த வீட்டை வாங்கிக் கொண்டான்.

சாரதி குளித்து முடித்து நேராய் அந்த இடம் சுத்தம் செய்திருப்பதை பார்வையால் அளந்து கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்த மறுநொடி சமையல்காரன் முத்து உணவு பரிமாற வர,

"நீ போ நான் பரிமாறேன்" என்று பொறுப்பாய் முன்னே வந்து நின்றார் தெய்வானை!

முத்து தயக்கத்தோடு யோசிக்க, சாரதி புன்னகைத்து அவனைப் போக சொல்லி தலையசைக்க ஆர்வமாய் பரிமாற முன்வந்த தெய்வானை சட்டென்று மூக்கை பொத்திக் கொண்டு, "இதென்ன கன்றாவி... உவேக்... ஒரே  மாமிசமா இருக்கு" என்று ஒதுங்கினார். சாரதி சத்தமாய் சிரிக்க சாரங்கபாணி முகத்தை சுளித்துக் கொண்டு,

"மாமிசம் சாப்பிடறதெல்லாம் பாவம் டா" என்க,

"சொந்த அண்ணன் பையனை வேலைகாரன் மாதிரி நடத்துனீங்களே... அதெல்லாம் பாவம் இல்ல... மாமிசம் சாப்பிடறதுதான் பாவம்... அப்படிதானே?!" என்று கேட்டவன் தானே உணவை பரிமாறிக் கொண்டு சாப்பிடத் தொடங்க,

"நீ பேசுறது நோக்கே நியாயமா படுதா... நீதானே எங்களக் கூடவே தங்கிக்க சொல்லி கூப்பிட்டு... இப்படியெல்லாம் சேச்சே" முகத்தைத் திருப்பினார் சாரங்கபாணி!

"தங்ககிக்க சொல்லி மட்டும்தான் கூப்பிட்டேன்... மத்தபடி இங்கே இருக்கிற சலுகையெல்லாம் அனுபவிக்க சொல்லி இல்ல... உங்களுக்கு தேவையானதெல்லாம் நீங்களேதான் செஞ்சுக்கணும்... சமையல் உட்பட!" என்றவன் சொல்ல இருவரும் அதிர்ச்சியாய் நின்றனர். அவன் சாப்பிட்டு முடித்து கைகழுவிவிட்டுச் செல்ல பார்க்க,

தெய்வானை கோபம் கொப்பளிக்க, "கடன்காரா! நாங்க தங்கியிருந்த வீட்டை அப்படியே உன் பேருக்கு மாத்திக் கொடுத்தோமே" என்று ஆவேசமாய் கத்தினார்.

"உங்களை யாரு நான் கேட்டதும் மாத்திக் கொடுக்க சொன்னது" என்று திரும்பி அவர்களை அவன் எகத்தாளமாய் கேட்க இருவரின் முகத்திலும் ஈயாடவில்லை.

அவன் மேலும், "ராமய்யாவை அவுட் ஹவுஸ் க்ளீன் பண்ண சொல்லிருக்கேன்... நீங்க இரண்டு பேரும் வசதியா அங்கே தங்கிக்கலாம்... அப்புறம் அந்த பழைய வீட்ல இருந்த தட்டு முட்டு சாமானெல்லாம் பத்திரமா எடுத்துட்டு வந்து அங்கே வைக்க சொல்லிட்டேன்... இதுக்கு மேல வேறெதாச்சும் செய்யணுமா?!" என்று கேட்டவனை,

தெய்வானை முறைத்து, "அடப்பாவி!" என்று பொருமினார்.

"என்ன சித்தி? நீங்க எனக்கு எவ்வளவு செஞ்சிருக்கீங்க... நான் இது கூட செய்யலன்னா எப்படி?!" என்றவன் கேட்டுவிட்டு அவன் பார்த்த பார்வையில் இருவருக்கும் மேலே பேசுவதற்கு வார்த்தையே வரவில்லை.

இங்கேயும் அவனுக்கு இரண்டு மடங்கு லாபம். வீட்டையும் பறித்துக் கொண்டு தன் பழியையும் தீர்த்துக் கொண்டான்.  அவன்தான் எத்தனுக்கும் எத்தனாயிற்றே! இது தெரியாமல் தெய்வானை வேறு ஏதேதோ கணக்கு போட்டு வைத்திருந்தார்.

சாரதியின் அலுவலகம்...

ரௌத்திரமாய் அரவிந்த் காத்திருக்க, உள்ளே நுழைந்த சாரதி அவனைப் பார்த்த நொடி, "ஏ அரவிந்த்! எப்படி இருக்க? உள்ளே வா பேசுவோம்" என்று அவனை அழைத்துவிட்டு தன் அறைக்குள் செல்ல,

"மனுஷனாடா நீ?" என்று கோபம் கொப்பளிக்க அறைக்குள் வந்தபடியே கேட்டான் அரவிந்த்!

"ஹைபோதட்டிக்கல் க்வஸ்டின்... நீ வேறெதாச்சும் கேளேன்... நான் பதில் சொல்றேன்" சாரதி தன் இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டு பதிலுரைக்க, அரவிந்தின் முகத்தில் அத்தனை எரிச்சல் அதோடு சொல்லவொண்ணா வேதனை குடிகொண்டிருந்தது.

"நீ அப்பாக்கிட்ட வேலை செஞ்சுகிட்டிருந்த போது கூட... உன்னை நான் ஒரு அண்ணன் ஸ்தானத்துலதான் பார்த்தேன்" என்று அரவிந்த் பொறும,

"சொல்லவேயில்ல... அண்ணனா... எப்படி? சொத்துல எல்லாம் பங்குண்டா?!" என்று எள்ளலாய் கேட்டான் சாரதி!

அரவிந்தின் விழிகளில் கனலேறியது. தன் தந்தையை மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் பார்த்தவன் அப்போதே தன் தவறை உணர்ந்தான்.

அதுவும் சாரதா நடந்தவற்றை விளக்கமாய் சொல்ல அவனால் ஒரளவுக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை கணிக்க முடிந்தது. அந்த நொடியே ஆக்ரோஷமாய் சாரதியைப் பார்க்க வந்தவனுக்கு அவனின் எகத்தாளமான பேச்சு இன்னும் கோபத்தைத் தூண்டியது.

அவன் கோபம் பொங்க சாரதியைத் தாக்க வர, பின்னோடு நின்றிருந்த சாரதியின் செகரட்ரி அவனைத் தடுத்து பிடித்துக் கொண்டான்.

"எங்க அப்பாவை அசிங்கப்படுத்தின  உன்னை கொன்னாதான்டா என் ஆத்திரம் தீரும்" என்று  அரவிந்த் திமிறிக் கொண்டு சாரதியை அடிக்க முன்னேற,

"இப்ப எதுக்கு நீ ஓவரா சீன் போட்டுட்டிருக்க... உங்க அப்பா எனக்கு செஞ்சதை நான் திருப்பி செஞ்சேன்... அதோடு எல்லா முடிஞ்சு போச்சு... வீணா திரும்பியும் என்னை சீண்டாதே... அப்புறம் நான் வேறெதாச்சும் ஏடாகூடமா பண்ணிடுவேன்" என்று சாரதி அமைதியாகவே பதிலுரைத்தான்.

அரவிந்த் தன் கரத்தை விடுவித்துக் கொண்டு, "பார்க்கலாம்! யார் யாரை செய்றான்னு" என்றான். சாரதி அலட்சியமாய் புன்னகைக்க அரவிந்த் தன் பார்வையினாலேயே அனலைக் கக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.  சாரதியின் முகம் யோசனைகுறியோடு மாறியது.

"ரொம்ப சூடா இருக்கானே... இவனை எதுக்கும் நம்மாளுங்க மூலமா வாட்ச் பண்ண சொல்லு கணேஷ்" என்று தன் செகரெட்ரியிடம் கூற, "ஒகே சார்" என்றான் அவன்.

எல்லா நல்லவனுக்குள்ளும் ஓர் கெட்டவன் இருப்பான். எல்லா கெட்டவனுக்குள்ளும் ஓர் நல்லவன் இருப்பான். சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல அந்தந்த ரூபங்கள் வெளிப்படும்.

You cannot copy content