You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

En Iniya Pynthamizhe - 32

Quote

32

அரசன் தன் தமக்கை தந்த இயற்கை விவசாயம் குறித்த புத்தகத்தை முழுவதுமாகப் படித்து முடித்திருந்தான்.

அந்தப் புத்தகம் அவன் எண்ணங்களில் புதுவிதமான மாற்றங்களைப் புகுத்தியிருந்தது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருந்தது.

அதுநாள் வரை அவனுக்கு விவசாயத்தில் பெரியளவில் ஈடுபாடு இல்லை. அதற்கு முக்கிய காரணம் அவன் தந்தை மதுசூதனன்தான். அவர் பிடிவாதமாக தங்கள் பிள்ளைகளுக்கு விவசாயம் வேண்டாமென்று சொல்லி வளர்த்திருந்த காரணத்தால் அரசனின் எண்ணமும் வேளாண்மை சார்ந்து செல்லவே இல்லை.

அன்று அவன் தமக்கை அமிர்தக்கரைசல் தயாரிக்கும் போது கூட அதனை ஒரு அசூயை உணர்வோடுதான் பார்த்திருந்தான்.

ஆனால் அந்த எண்ணமெல்லாம் முற்றிலும் மாறி வேளாண்மையின் அவசியம் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. அதற்கு மற்றொரு காரணம் அவனின் அக்கா மாமா இருவரும் இயற்கை வேளாண்மையில் காட்டும் முனைப்பு!

அவன் தன் பள்ளிப் படிப்போடு சேர்த்து சந்திராவுடன் விவசாயம் பணிகளைக் கற்று கொள்வதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினான். ஆனால் இது மதுசூதனனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

"நீயும் அவங்களை மாதிரி வீணா போகப் போறியாக்கும்" என்ற அவரின் கோபம் பெரிதாக அவனின் விவசாய ஆர்வத்தைப் பாதித்துவிடவில்லை.

அவரின் கோபத்தை ஒரு பொருட்டாகக் கூட அவன் கருதாதது ஒரு புறமென்றால் அவரிடமே சென்று,

"நம்மளும் அக்கா மாமா மாதிரி நம்ம நிலத்தில் இயற்கை விவசாயம் பண்ணினா என்னங்க ஐயா? மொத்தமா அஞ்சு ஏக்கர்ல இரண்டு இரண்டு ஏக்கராவா மாத்தலாங்களே" என்றான்.

"உனக்கு இதை பத்தியெல்லாம் என்ன தெரியும்? படிக்குற வேலையை மட்டும் பாரு... விவசாயத்தை நான் பார்த்துக்கிறேன்... உனக்கு அது வேண்டாம்" என்று சொல்லிவிட்டார்.

"எல்லோரும் விவசாயத்தை வுட்டு போயிட்டா யாருதாங்க புறவு விவசாயம் பார்க்குறது... விவசாயம்தான் நம்ம நாட்டோட முதுகெலும்பு... அதுவே முறிஞ்சிட்டா நம்ம நாடு நிமிர்ந்து நிற்க முடியுமுங்களா? சாப்பாட்டுக்காக நம்ம அயல் நாட்டுல கையேந்தறதை விட மோசமான விஷயம் எதுவும் இல்லைங்க" என்றவனின் வாதத்தை அவர்கள் ஏற்க தயாராக இல்லை. வாக்குவாதத்திற்கு வேண்டுமானால் அவன் சொல்வது நன்றாக இருக்கலாம். ஆனால் எதார்த்தத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லை.

உணவு உற்பத்தியின் அவசியத்தை இந்த தேசமே கண்டுகொள்ளாமல் கார் உற்பத்தி செல்ஃபோன் உற்பத்தி என்று ஆடம்பர தேவைகளின் பின்னே ஓடும் போது தாங்கள் மட்டும் ஏன் வெயிலிலும் மழையிலும் காய்ந்து நலிந்து யாருக்காக உணவு உற்பத்திச் செய்ய வேண்டும். எதற்காக விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டும்?

இந்தக் கோபமும் விரக்தியும்தான் மதுசூதனன் போன்ற ஒவ்வொரு விவசாயிக்கும்!

அன்று அவருக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியதில் கோபத்தில் மகனை அடித்துவிட்டார்.

இதனால் அரசன் கோபமாக தன் அக்கா வீட்டிற்குச் சென்றுவிட, தமிழ்தான் அவனுக்கு நிதானமாகப் பேசிப் புரிய வைத்தாள்.

"அவங்க கோபத்துலயும் நியாயம் இருக்கு அரசா... அதுவுமில்லாமல் நீ இப்போ இதெல்லாம் பேசறது சரியில்ல... நீ முதல ப்ளஸ் டூ எக்ஸாம்ஸ் ஒழுங்கா எழுதி முடி... புறவு இதை பத்தியெல்லாம் பேசிக்கலாம்" என்று புத்தி சொல்லி அவனை வீட்டிற்கு அனுப்பிவைத்தாள்.

மகன் வீட்டிற்கு திரும்பிய பிறகு அது பற்றிய வாக்குவாதத்தை அவர்கள் தொடரவில்லை. என்னதான் இருந்தாலும் அவன் அவர்களுக்கு ஒரே ஆண் வாரிசு இல்லையா?

அவனும் அப்போதைக்கு தன் படிப்பில் கவனம் செலுத்தினான். அதேநேரம் விவசாயத்தின் மீதான ஆர்வமும் அவனுக்குக் குன்றிவிடவில்லை.

தமிழும் சந்திரனும் இயற்கை வேளாண்மைக்கு மாறி ஒன்றரை வருடங்கள் கடந்திருந்தன. இந்த ஒன்றரை வருடத்தில் ராகி, சாமை, வரகு, கம்பு போன்ற சிறுதானியவகைகளைக் கலப்பு பயிர்களாக அவர்கள் தங்கள் நிலத்தில் பயிரிட்டனர்.

இவற்றோடு மழை காலத்தில் உயிர் வேலி அமைக்கும் பணியையும் சந்திரன் செவ்வனே செய்து முடித்தான்.

இந்த முயற்சிகள் அனைத்திலும் காமராஜ் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து நிறைய சுலபமான வழிமுறைகளைச் சொல்லி தந்திருந்தான். அவர்களுக்கு வேண்டிய நாட்டு ரக விதைகள் மற்றும் மரக்கன்றுகள் என்று அனைத்தையும் கொடுத்து உதவினான்.

பூச்சிக் கொல்லிகளும் ரசாயன உரங்கள் இல்லாமலே ஓரளவுக்கு அவர்கள் நிலம் விளைச்சல் தந்தது. அவர்கள் மண்ணுக்கு தந்த ஊட்டங்களான அமிர்த கரைசல், ஜீவாமிர்தமும் நல்ல பலனைக் கொடுத்தது. பெரிதாக லாபம் பார்க்கா முடியாவிட்டாலும் நஷ்டமும் இல்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் பணம் செலவான போதும் இயற்கை வேளாண்மை முறையில் அவர்கள் உழைப்பே பிரதானமாகத் தேவைப்பட்டது.

சந்திரன் எப்போதும் உடல் உழைப்பிற்கு அஞ்சுபவன் இல்லை. ஆதலால் இயற்கை முறையை தன் நிலத்தில் அவன் திறம்பட செயல்படுத்தினான். அதுவும் அவன் உயிருக்குயிரான மனைவியின் துணை இருக்கும் போது அவன் இரட்டிப்பு பலத்தோடுச் செயல்பட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமல்லாது பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவர்களின் இரண்டு ஏக்கர் நிலத்தைச் சுற்றி அங்காங்கே சோற்றுக் கற்றாழையை நட்டு வைத்தனர்.

சோற்றுக் கற்றாழையைப் பொறுத்தவரை அதனை நட்டு வைத்தாலே போதும். எவ்வித காண்காணிப்பும் அதற்கு தேவையில்லை.

அவர்கள் நிலத்தைச் சுற்றிலும் செழித்து வளர்ந்திருந்த கற்றாழையைப் பார்த்தவளுக்கு முடி நீளமாக வளர அதன் பயன்பாட்டைப் பற்றி படித்தது ஏதோ ஒரு புத்தகத்தில் நினைவுக்கு வந்தது.

எப்போதும் பெண்களுக்கு தங்கள் முடியைப் பராமரிப்பதில் அலாதி பிரியம்தான். அதற்கு தமிழ் மட்டும் என்ன விதிவிலக்கா?

அவள் சோற்றுக் கற்றாழையின் மூலம் இயற்கை முறையில் ஒரு ஷாம்பூவை தயாரித்து பயன்படுத்திப் பார்த்தாள். அது நன்றாக இருக்கவும் தன் தங்கைக்கும் அம்முறையில் ஒன்றை செய்துக் கொடுத்திருந்தாள்.

செல்விக்கு அந்த ஷாம்பூ மிகவும் பிடித்துப் போக இதனை தயாரித்து விற்றால் என்ன என்று தமக்கையிடம் யோசனை சொன்னாள். செழிப்பாக தங்கள் நிலத்தில் வளர்த்திருந்த சோற்றுக் கற்றாழையைப் பார்த்தவளுக்கு தங்கையின் யோசனையைச் செயல்படுத்திப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.

சுற்றிப் படர்ந்திருந்த சோற்றுக் கற்றாழையை வெட்டி அதன் மூலம் அவள் ஷாம்பூ தயாரிக்க,

"இதை எப்படி ஊர்காரவுங்க கிட்ட சேர்க்கிறது... வாங்குவாங்களா?" என்று சந்திரனுக்கு சந்தேகம் உதித்தது.

"பேசாம ஒரு சாம்பில் பாட்டில் எல்லோருக்கும் ப்ரீயா கொடுத்து பார்ப்போம்" என்ற அரசன் தன் யோசனையைச் சொல்ல, ஒரு சிறு முயற்சியாகதான் தமிழும் தன் உறவுக்காரர்களுக்கு எல்லாம் சென்றுக் கொடுத்தாள்.

செல்வியும் தான் வேலைப் பார்க்கும் பள்ளியில் ஆசிரியர்களிடம் இது பற்றி கூறியிருந்தாள். முதல் மூன்று மாதத்தில் அவர்கள் எதிர்பார்த்தளவுக்கு யாரும் வாங்கவில்லை. ஆனால் அடுத்த வந்த இரண்டு மாதங்களில் தமிழ் தயாரித்து வைத்த பாட்டில்கள் அனைத்துமே விற்று போனது.

தன் தோட்டத்தில் விளைந்த கற்றாழை மூலமாக இயற்கை முறையில் செய்ததால் தயாரிக்க அதிக செலவும் இல்லை. ஆதலால் உற்பத்திக்கு ஆகும் செலவு, தேவைப்படும் பொருட்கள், செலவழிக்கும் நேரம் இவற்றைக் கணக்கிட்டு மிகவும் நியாயமான விலைக்கு விற்றாள்.

ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாக வாங்குபவர்களை விட கூடுதலாக வாடிக்கையாளர்கள் அதிகரித்து கொண்டே போனதில் ஒரு சிறியளவிலான வருமானத்தை அதன் மூலமாகவும் அவர்கள் பெற முடிந்தது.

அன்று செல்வியும் இந்த விஷயத்துக்காக தன் தமக்கையின் வீடு தேடி வந்தாள்.

"அக்கா... நான் என் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் மீட் பண்ணேன்... நம்ம ஷாம்பூ பாட்டிலைப் பத்தி சொன்னேன்... என் முடியைக் கூட காண்பிச்சேன்... ஒரு அஞ்சு பேர் நாளைக்கே வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டாங்க"

"அஞ்சா?" என்று தமிழ் அதிர்ச்சியாக,

"என்னங்க க்கா... இல்லையா?" என்று செல்வி கேட்கவும்,

"இல்ல டி... இப்பதான் பரிமளம் சித்தி கடைசியா இருந்த இரண்டு பாட்டிலையும் வாங்கிட்டுப் போயிட்டாங்க... இதுக்கு புறவு அடுத்த மாசம்தான் திரும்ப போடணும்" என்றாள்.

"என்னங்க க்கா... இப்படி சொல்றீங்க? நான் எம்புட்டு நம்பிக்கையா சொல்லி போட்டு வந்தேனுங்க" என்று செல்வி முகம் சுருக்க,

"என்னைய கேட்காம உன்னை யாரு சொல்ல சொன்னது... புதுசா அஞ்சு பேருக்கு செய்யணும்னா டவுனுக்குப் போய் புது பாட்டில் வாங்கணும்... அதுவும் இல்லாம தேவையான பொருள் எல்லாம் தீர்த்து போச்சு" என்றாள்.

"அப்ப முடியாதுங்களா?"

"ம்ச்... அடுத்த மாசம் தர்றேன்னு சொல்லு" என்றவள் சொல்லவும் செல்வி மனம் சமாதானமாகவில்லை.

"அடுத்த மாசம் கொஞ்சம் அதிகமா செய்யுங்க க்கா"

"இல்ல செல்வி... லாபம் வருதுன்னு அதிகமா செய்ய ஆரம்பிச்சா குவாலிட்டில காம்பிரமைஸ் பண்ண வேண்டி வந்துடும்... புதுசா புதுசா பாட்டில் வாங்கி நிறைய செஞ்சு வைக்க எனக்கு தெரியாதா?

எதுக்கு பழைய பாட்டில வாங்கி நிரப்பிக் கொடுக்கிறேன்... ப்ளஸ்டிக் உபயோகத்தைக் குறைக்கிறதும் முக்கியம்...

அதுவுமில்லாம ஒரு செடில இருந்து நமக்கு தேவையான அளவுதான் வெட்டி எடுக்கோணோம்... அளவுக்கு அதிகமா வெட்டி செடியவே நம்ம அழிச்சிடக் கூடாது

இயற்கையில இருந்து நம்ம எவ்வளவு எடுக்குறோமோ அவ்வளவுக்கு நம்ம இயற்கைக்குத் திருப்பிக் கொடுக்கோணோம்... அப்பத்தான் நமக்கு புறவு வர சந்ததிகளுக்கும் நம்ம அனுபவிச்ச இந்த இயற்கையோட வளங்கள் மிச்சம் இருக்கும்... என்னைய கேட்டா தேவைக்கு அதிகமா நமக்கு எதுவுமே வேண்டாம்" என்று தன் தமக்கைச் சொன்னதைக் கன்னத்தில் கை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த செல்வி,

" ஆமா எங்க இருந்துங்க க்கா உங்களுக்கு இம்புட்டு ஞானோதாயம் பிறந்துச்சு?" என்றவள் கேலி செய்ய,

"என்னடி நக்கலா? வகுந்து போடுவேன்" என்று சொல்லவும்,

"கோவிச்சுக்காதீங்க க்கா" என்று தமக்கையை தாஜா செய்து கழுத்தைக் கட்டிக் கொள்ள,

"சரி சரி கோவிச்சுக்களை… வுடு… வேலை கிடக்கு" என்று அவளைத் தள்ளி நிறுத்தினாள்.

"ஆமா மாமா எங்கங்க?"

"பின்னாடி இருந்த வாழை மரத்துல வாழைத் தாரை வெட்டி எடுத்துக்கிட்டு விற்க போனாங்க... அட... இதோ வந்துட்டாங்க"

"நூறு ஆயுசு மாமா உங்களுக்கு" என்று செல்வி முகமலர்சசியோடு சொல்லவும்,

"அப்போ என்ற மச்சானுக்கு" என்று கேட்டு கொண்டே அரசனையும் உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.

"அவனைப் பத்தி இங்க யாரு நினைச்சா?" என்று செல்வி கடுப்பாகக் கூறும் போது,

"பார்த்தீங்களா மாமா? என்னை பத்தி நினைக்க கூட இங்கே யாருமே இல்லை" என்றவன் பரிதாபமாக உரைக்க,

"அவங்களை வுடுறா... நான் இருக்கேன்ல உனக்கு" என்றவன் மச்சானை சமாதானம் செய்ய, தமிழ் கணவனை முறைத்தபடி அவன் முன்னே வந்து நின்றாள்.

"சந்தைக்கு எதுக்கு தம்பியைக் கூட்டிக்கிட்டுப் போன... அவனுக்கு ஃபைனல் எக்ஸாம் வேற வருது உன் கூட ஊரு சுத்திட்டு இருந்தா அவன் எப்படி எக்ஸாம் எழுதுவான்" என்று பொறுமினாள்.

"மாமாவைத் திட்டாதீங்க க்கா... நான்தான் கூட வருவேன்னு வம்படியா அடம் பிடிச்சு போனேனுங்க"

"மாமாவைச் சொன்னா மச்சானுக்குக் கோபம் வருது... மச்சானைச் சொன்னா மாமனுக்குக் கோபம் வருது... உங்க பாச பிணைப்பு தாங்க முடியலடா சாமீ" என்று கடுப்பாகத் தலையிலடித்துக் கொண்டவள்,

"சரி சரி கை கால் அலம்பிட்டு வாங்க... சாப்பிடலாம்" என்றவள் எல்லோருக்கும் உணவு பரிமாறினாள்.

உண்டு முடித்து பொழுது சாயும் வரை பேசிவிட்டுதான் இருவரும் வீட்டிற்கே புறப்பட்டனர்.

சந்திரன் ஓய்வாகத் திண்ணையில் வந்து அமர்ந்து ஏதோ ஆழ்ந்த யோசனையிலிருந்தான். தமிழ் அவன் அருகே வந்து அமர்ந்ததையும் அவன் கவனிக்கவில்லை.

"சந்திரா" என்று அவள் அழைக்கவுமே அவள் புறம் திரும்பினான்.

"நான் உன்கிட்ட ஒரு விசயம் சொன்னா நீ கோவிச்சுக்க கூடாது" என்றவள் பீடிகையோட ஆரம்பிக்கவும்,

"நான் ஏன் டி உன்கிட்ட கோவிச்சுக்க போறேன்... சொல்லு" என்றான் மிதமான புன்னகையோடு!

"நீ இனிமே தம்பியை அழைச்சுக்கிட்டு எங்கேயும் போகாதே சந்திரா"

"நான் அவனை அழைச்சிக்கிட்டுப் போகலடி... அவன்தான் கூட வருவேன்னு கிளம்பி வந்தானாக்கும்"

"எனக்குப் புரியுது... ஆனா அவனே இனிமே கூட வருவேன்னு சொன்னா கூட கூட்டிக்கிட்டுப் போகாதே"

"ஏன்?" அவன் அதிர்ச்சியாகக் கேட்க,

"இல்ல" என்று சற்று நேரம் தயங்கி,

"தம்பி உன் கூட வர்றது அம்மாவுக்கும் ஐயாவுக்கும் பிடிக்கல... அதுவும் அவன் ஐயாகிட்ட விவசாய படிப்பு படிக்கப் போறேன்னு சொல்லிட்டானாம்... அதுல இருந்து அவங்க செம கடுப்புல இருக்காங்க... என்கிட்ட சண்டை கூட போட்டாங்க"

"இது எப்போ?"

"அன்னைக்கு கருப்பன் கோவிலுக்குப் போயிருந்தேன் இல்ல... அங்கன என்னைப் பார்த்துட்டு ரொம்ப கோபமா பேசிட்டாங்க"

"என்ன சொன்னாவுங்க?"

"நீதான் எங்க பேச்சைக் கேட்காம வீணா போயிட்டேனா… ஏன் தம்பியோட வாழ்க்கையையும் கெடுக்கப் பார்க்குற… உனக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்... நீ ஒரு சுயநலவாதி அப்படி இப்படின்னு ரொம்ப திட்டிட்டாங்க" என்றவள் கணவன் தோள் சாய்ந்து அழவும் அவன் பதறியபடி,

"என்ன தமிழு நீ... அவங்க என்ன நம்மள புதுசாவா பேசறாங்க... இதெல்லாம் நமக்கு ஓரளவு பழகிப் போனதுதானே… இதுக்கு போய் அழுவியா" என்று அவள் கன்னம் தாங்கி கண்ணீரைத் துடைத்தான்.

"ஆனாலும் தம்பி வாழ்க்கையைக் கெடுக்கிறேன்னு சொன்னதைதான் தாங்கவே முடியல... அதுவும் அவன் அக்ரி படிக்கிறேன்னு சொன்னது என்ன அம்புட்டு பெரிய கொலைக் குத்தமா?" என்றவள் கேட்கவும் அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

வேளாண்மை நம் தேசத்தின் முதுகெலும்பு என்பதெல்லாம் பாடப்புத்தகத்தில்தான்... வேளாண்மையையும் விவசாயியையும் இங்கே யார் மதிக்கிறார்கள்.

அவர்கள் கோபத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

விவசாயம் மதிக்கப்படும் ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவதில்லை. அரசாங்கம் அவர்களுக்குச் சலுகைகள் வழங்கிய போதும் அங்கீகாரம் வழங்கவில்லை. அந்தச் சலுகைகளும் கூட ஒரு வகையில் கண்துடைப்புகள்தான்.

இது பற்றியெல்லாம் நிறையவே அவர்கள் பேசி ஓய்ந்துவிட்டனர்.

தமிழ் மீண்டும் சந்திரன் முகத்தை நிமிர்ந்து பார்த்து, "நான் வீணா போயிட்டேன்... நாசமா போயிட்டேன்னு சொல்றாவுங்களே... அது எந்த வகையிலன்னு எனக்கு புரியல.

ஏன்? காசு பணம் நிறைய சம்பாதிச்சாதான் நாம நல்ல வாழ்க்கையை வாழுறோம்னு அர்த்தமா என்ன?

மனசுக்கு நிறைவா சந்தோஷமா வாழ்ந்தா வீணா போயிட்டோம்னு அர்த்தமா?!" என்றவள் சொன்னதைக் கேட்டு சந்திரன் மிதமாகப் புன்னகைத்து,

"அப்படிதானோ என்னவோ?" என்றான்.

"முன்ன நான் கூட ரவி அண்ணனை பார்த்து இப்படி வாழ்ந்தாதான் வாழ்க்கைன்னு ஒரு காலத்துல நினைச்சேன்.

பணத்து பின்னாடி ஒடிக்கிட்டே இருக்க ஒரு வாழ்க்கை... கார் ஈ எம் ஐ, ஹவுஸ் ஈ எம் ஐ கட்டி ஆடம்பரமா ஒரு வாழ்க்கையை வாழோணோம்னு நினைக்கிற யாரும் ஆரோக்கியமா வாழறோமான்னு யோசிக்கிறாங்களான்னு தெரியல?

பணத்தோட சேர்த்து நாற்பது வயசுலயே சுகர், பிபி, ஹார்ட் ப்ராப்ளம்ன்னு எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா…

கடைசியா ஏன் ஓடுறோம் எதுக்கு ஓடுறோம்னு தெரியாம ஓடி ஓடி ஒய்ஞ்சி போகும் போது கூட மிச்சமா இருக்கிறது என்னவோ சுகரும் பிபியும் மட்டும்தான்.

இதெல்லாம் விட கொடூரமான விஷயம் … திடீர்னு கேன்சர்னு ஒரு நோய் சுனாமி மாதிரி அம்புட்டு நாளா அவங்க கஷ்டப்பட்டு உழைச்சு சேர்த்த காசை வாரி சுருட்டிட்டுப் போயிடுது

இதுக்காகவா இப்படி ஒரு ஓட்டம்?

நிறுத்தி நிதானிச்சு யாருமே நம்ம வாழ்க்கைக்கு உண்மையிலேயே எது தேவைன்னு யோசிக்க மாட்டுறாங்க" என்றவள் சொல்வதை அமைதியாக அவள் தோள்களை வளைத்தபடிக் கேட்டிருந்தவன்,

"அதெல்லாம் சரிதான்... ஆனா இப்போ நம்ம வாழுற வாழ்க்கையில நீ சந்தோஷமா இருக்கியா?" என்று கேட்க

"உனக்குத் தெரியாதா?" என்று நிமிர்ந்து வாஞ்சையாக அவன் முகம் பார்த்தாள்.

"தெரியும்... ஆனா நீ சொல்லிக் கேட்குறதுல எனக்கு ஒரு தனி சந்தோஷம்டி" என்றான்.

"பச்சை பசலன்னு வயக்காட்டுக்கு நடுவுல ஒரு சின்ன வூடு… சிலு சிலுன்னு எப்பவும் காத்து… ஆடு மாடு கோழிங்க… அப்புறம் நீ” என்றவள் சொல்லவும்,

“எது?” என்றவன் முறைக்க,

அவன் முறைப்பைச் சற்றும் பொருட்படுத்தாமல், “நான் இங்கன ரொம்ப நிறைவா சந்தோஷமா வாழுறேன்டா எம்.சி.ஆருருருஊஊஊஊ" என்று அந்த இடமே அதிருமளவுக்கு சத்தமாகக் கத்தினாள்.

“எதுக்குடி இம்புட்டுச் சத்தமா?” என்றவன் வார்த்தையைப் பொருட்படுத்தாமல்,

"இயற்கையோட வாழ ஒரு தனிக் கொடுப்பனை வேணும்… கூடவே நம்மள உசிருக்கு உசிருக்கா நேசிக்குறவங்களும் இருந்துட்டாங்கன்னு வை… சொல்லவே வேணாம்… அது இன்னும் பெரிய கொடுப்பனை… அந்த வகையில நான் பெரிய அதிர்ஷட்டகாரி மாமா" என்றாள்.

அவளின் மாமா என்ற அழைப்பு எப்போதும் வந்துவிடாது. அவள் அபிரிமிதமான காதலில் திளைக்கும் போதுதான் அந்த வார்த்தை அவள் உதட்டை எட்டும்.

அந்தளவு பொங்கிப் பெருகிய சந்தோஷ உணர்வோடு அவனைப் பார்த்தவள் இழுத்து அணைத்து அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தாள்.

அவன் அதிர்வோடு அவளைப் பார்த்து, "அடியேய்... இன்னும் இருட்ட கூட இல்லடி... யாராச்சும் வயக்காட்டுல இருந்து பார்த்துட்டு இருக்க போறாவுங்க" என்க,

"பார்க்கட்டுமே" என்றவள் மேலும் அவனுடைய மற்றொரு கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டாள்.

அந்த மாலை வேளையில் தங்கள் கூட்டிற்குப் படையெடுத்துக் கொண்டிருந்த பறவை கூட்டங்கள் ஒரு நொடி வியந்து பார்த்துவிட்டுச் சென்றன.

அந்த தருணம் இன்னும் இன்னும் அழகாக மாறியிருந்தது.

மெல்ல இருள் சூழத் தொடங்க, "என்ற பெஞ்சாதியா இது?” என்று கிறக்கமாக அவள் முகம் பார்த்தவன் அப்போது தந்த இதழ் முத்தம் அவள் பெண்மையின் உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் சென்றது. கண்களை மூடி தன்னையும் மறந்து அவள் அவன் அணைப்பிற்குள் மூழ்கிப் போனாள்.

இருவரும் அந்த காதல் மயக்கத்திலிருந்து மெல்ல இயல்பு நிலைக்கு மீண்டு வந்திருந்தனர். அந்த நொடி தன் முகத்தில் தெரிந்த களிப்பும் ஆனந்தமும் தன்னவன் முகத்தில் இல்லாததை அவள் ஒருவாறு உணர்ந்தாள்.

அவன் முகத்தில் தெரிந்த கலக்கத்தைக் கண்டு,

"என்ன சந்திரா? நீ ஏதோ போல இருக்க" என்று கேட்க,

"இல்லையே... நல்லாதான் இருக்கேன்... இன்னும் கேட்டா சந்தோஷமா இருக்கேன்" என்று அவன் உதட்டில் தெரிந்த புன்னகை அவன் விழிகளை எட்டியதாகத் தெரியவில்லை.

"பொய் சொல்லாதே சந்திரா... என்னாச்சுன்னு சொல்லு? வாழைத் தார் நீ நினைச்ச விலைக்குப் போகலயா?! அந்த வருத்தமா?"

"விலையைப் பத்தி இல்ல" என்றவன் இழுக்க,

"புறவு என்ன?" என்று அழுத்தமாக வினவினாள்.

"அது கடையில… அண்ணாச்சி நான் கொடுத்த வாழையை எடைப்போட்டுட்டு உள்ளே எடுத்துட்டுப் போனாங்க… காசைக் கொடுக்க நேரமாகுதேன்னு நான் உள்ளுர போனேன்

அங்கன ஒரு பெரிய டிரம் தண்ணில வாழைக் குலையைப் போட்டு முக்கி எடுத்தாங்க… நான் அது என்னங்கண்ணான்னு கேட்டேன்…

அப்போ ஒரு பாட்டிலைக் காண்பிச்சாங்க… அம்பது லிட்டர் தண்ணில நூறு மில்லி அந்த மருந்தை ஊத்தி வாழைக் குலையை முக்கி எடுத்தா அஞ்சு மணி நேரத்துல பழுத்துடுமாம்… அந்த நூறு மில்லி பாட்டிலோட விலை மூன்னுத்தி பத்து ரூபாவாம்…

கிட்டத்தட்ட நான்கு டன் வாழை காய் வரை பழுக்க வைக்க முடியுமாம்… அந்த ட்ரம்ல முக்கி எடுத்து வண்டில ஏத்தி வெளியூர் வியாபாரிங்க கிட்ட கொண்டு போறதுக்குள்ள காய் பழுத்துடும்னு சொன்னாரு” அவன் சொன்னதைக் கேட்டு அவள் விழிகள் அசையவில்லை.

பாதிக்கும் மேல் அவன் பேசுவதெல்லாம் ஏதோ கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் இருந்தது அவளுக்கு.

“தமிழு” என்றவன் அழைக்கவும் அவன் புறம் திரும்பியவள்,

“நிசமாவா சொல்ற?” என்றவள் அவனை அதிர்ச்சியோடு ஏறிட்டாள்.

“உம்ம்ம்” என்றவன் உயிர்ப்பே இல்லாமல் தலையசைத்துவிட்டு,

“நம்ம என்னதான் களைக் கொல்லி எல்லாம் அடிக்காம இயற்கை முறையில விளைவிச்சாலும் வியாபாரிங்க அதை விசமா மாத்தித்தான் கொண்டு போய் சேர்க்குறாங்க தமிழு” என்றவன் அவநம்பிக்கை நிரம்பிய குரலோடு,

“இங்க வியாபாரிங்க இல்லாம விவசாயம் இல்ல… இயற்கை விவசாயம் செய்றோம்னு சொன்னதும் ஊர்காரவுங்க நம்மல பார்த்து ஏன் கேலி செஞ்சு சிரிச்சாங்கன்னு இப்போ புரியுது” என்று சொல்லி முடிக்கும் போது அவன் குரல் உடைந்து விழிகளில் நீர் திரண்டது.

தங்கள் உழைப்பெல்லாம் மொத்தமும் விரயம்தான் என்ற ஒரு உழவனின் வலியைதான் அவன் விழிகள் பிரதிபலித்தன.

தமிழ் எதுவும் பேசாமல் கணவனின் வாரத்தைகளைக் கேட்டு அப்படியே கல்லாகச் சமைந்திருந்தாள்.

ஒரு வேளைப் புயலடித்து அந்த வாழை குலைப் பாழாகப் போயிருந்தால் கூட இத்தனை வலியாக இருந்திருக்காது. ஆனால் எந்தக் காரணத்திற்காக அவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறினார்களோ அதன் ஆணிவேரே அடிவாங்கியதைதான் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

indra.karthikeyan and shiyamala.sothy have reacted to this post.
indra.karthikeyanshiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content