You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Iru Thruvangal - Episode 4

4

இதயம் பிளவுற்றது

விடியலுக்கு வெகு நேரத்திற்குப் பிறகே அவள் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டாள். அவள் பெட்டியை பிரித்துப் பொருட்களை எடுத்து வைத்தாள். அவற்றோடு அவள் கைப்பையில் இருந்த பாஸ்போர்ட் மற்றும் வேறு சில பொருட்களை எடுத்து வைக்கும் போது எதிர்பாராமல் ஒரு ஃபோட்டோ தவறி விழுந்தது.

அந்த ஃபோட்டோவை பார்த்தவுடன் சொல்ல முடியாத சில நினைவுகளுக்குள் சிக்கிக் கொண்டாள். அதே நேரத்தில் வனிதா அறைக்குள் நுழைந்ததினால் அந்த நினைவிலிருந்து மீண்டவளாய் ஃபோட்டோவை எடுத்து உடனே மறைத்து வைத்தாள்.

அக்காவின் செயலை கவனித்த போதும், அதைப் பொருட்படுத்தாமல் காலை உணவு உண்ண அழைத்தாள் வனிதா.

விந்தியாவிற்கு அன்று நாள் முழுவதும் வனிதாவின் மகள் சிந்துவுடன் விளையாடியபடியே பொழுது கழிந்தது.

இரவு உணவுக்குப்பின் விந்தியா வனிதாவை அழைத்தாள்.

“வனிதா... நீ எப்போ உன் வீட்டிற்குப் போகப் போற?” வனிதா பதில் சொல்லாமல் அதிர்ச்சியானாள்.

“என்னடி... ஏதாவது பிரச்சனையா?” இதற்கும் வனிதா மெளனமாகவே நின்றாள்.

“பேசமாட்டியா? அப்போ ஏதோ பிரச்சனை...” இப்படி விந்தியா கணித்துவிட்டு அவள் தம்பி வருணை அழைத்தாள். வருணும் மாதவியும் ஒன்றாகவே வந்து நின்றனர்.

“வருண்... வனிதா எப்போ அத்தை வீட்டிலிருந்து வந்தா?” உடனே வருண் பதில் பேசாமல் மாதவியின் பக்கம் திரும்பினான்.

“வருண்... நான் உன்னைக் கேட்டேன். நீ இங்க என்னைப் பாத்து பதில் சொல்லு” என்று அதட்டினாள் விந்தியா.

“அவ எங்க வந்தா? அவ ரொம்ப நாளா இங்கதான் இருக்கா... கிட்டதட்ட ஒரு மாசம் இருக்கும்” என்றான் வருண் வனிதாவை பார்த்தபடி.

இதைக் கேட்ட மாத்திரத்தில் விந்தியா அதிர்ச்சி அடைந்தாள்.

“என்னம்மா இதெல்லாம்?” என்று மாதவியை நோக்கினாள்.

“என்னை ஏன் கேட்கிற? உன் தங்கச்சிய கேளு... மூன்று வருஷத்தில் முப்பது சண்டை. நானும் எத்தனை தடவைனு சமாதானம் பண்ணுவேன்? சொல்லு. அண்ணி முன்னாடி போய் நிக்கவே அவமானமா இருக்கு விந்தியா. அதனாலதான் இந்தத் தடவை அவளே போகட்டும்னு விட்டுட்டேன்” என்று தன் நிலையை எடுத்துரைத்தாள் மாதவி.

அதற்குள் வனிதா தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள்.

“நிறுத்துடி... எதனால பிரச்சனை?”என்று விந்தியாவின் கேள்விக்கு வருண் பதில் உரைத்தான்.

“எல்லாம் மாமியார் மருமக சண்டைதான்...” விந்தியா லேசாக நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“இது எல்லா வீடுகளிலும் நடக்கிறதுதான். காலையில் முதல் வேலையா... வருண் நீ போய் வனிதாவை கொண்டு போய் வீட்டில் விட்டுட்டு வந்துடு” என்றாள் விந்தியா.

“என்னால முடியாது...” என்று வருண் மறுத்தான்.

“ஏன் உனக்கு என்ன பிரச்சனை?”

“சிவா மாமா கிட்ட மாட்டிக்கிட்டா செத்தேன். நான் இந்த ஆட்டத்திற்கு வரல” என்று வருண் தப்பிக் கொண்டான்.

“அவன் என்ன கரடியா சிங்கமா? இவன் ஏன் இப்படி ஓடுறான்?”

“அவரோட கோபம் அந்த மாதிரி...” என்றாள் வனிதா.

“ம்... சரி அப்படின்னா நாளைக்கு விடிந்ததும் பாப்பாவை கூட்டிட்டு நீயே புறப்படு “என்று விந்தியா சொல்ல, “அக்கா...” என்று இழுத்தாள்.

“நான் என்னடி பண்றது?”

இந்தச் சமயத்தில் மாதவி அவளின் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.

“விந்தும்மா… எனக்கு ஒரு யோசனை. நீ பேசாம அத்தை மாமாவை பார்க்கிற சாக்கில், பேசி வனிதாவை விட்டுட்டு வந்துடு. உன்னைப் பாத்தா அவங்க எதுவும் பேச மாட்டாங்க” என்ற மாதவியின் யோசனை கேட்ட விந்தியாவிற்கு இதயமே இரண்டாய்ப் பிளவுற்றது போலிருந்தது.

விந்தியா எதுவும் பேசாமல் அவள் அறைக்குள் வந்தாள்.

“எனக்கு இதெல்லாம் தேவையா?” என்று சொல்லி தனக்குத் தானே தலையிலடித்துக் கொண்டாள்.

சிவாவை மீண்டும் நேரடியாகப் பார்க்க தைரியம் இல்லாமல் தப்பியது… இனியும் முடியுமா?

“நீ என்றுமே என் கண் முன்னே வராதே” என்று அவன் சொன்ன வார்த்தையை நினைவுப்படுத்திக் கொண்டாள்.

என்ன செய்வது என்று விந்தியா தீவிரமாய் யோசித்த பின்பு, ‘வேறு வழியில்லை. என்னதான் நடந்துவிடும் பார்த்துவிடலாம்’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டு வனிதாவை அழைத்துச் செல்ல அவள் முடிவெடுத்தாள்.

shanbagavalli has reacted to this post.
shanbagavalli

You cannot copy content