You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Iru Thruvangal - prefinal

46

நீதிபதி தீர்ப்பு

நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட கேத்ரீனின் லேப்டாப்பில் இருந்த ஆதாரங்கள் முழுவதையும் ஷபானா தெளிவாகப் பிரித்துக் காண்பித்தாள். அதில் எம். விடி லிக்கர் பாஃக்டரியில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்கள் உடலுக்குக் கேடானது என்பதற்கான ஆதாரங்களும்… கேத்ரீனை வித்யாதரன் மிரட்டியதற்கான வீடியோ ஒன்றும் பதிவாகியிருந்தது.

இவற்றை எல்லாவற்றையும் விவரமாய் படித்துப் பார்த்து தெரிந்து கொண்ட பின்னர், நீதிபதி தான் வழக்கு சம்பந்தமாய் என்ன சொல்ல வேண்டும் என்பதைத் தெளிவாய் எழுதி கொண்டார்.

பின்னர் எல்லோரையும் பார்த்து கேத்ரீன் வழக்கின் விசாரணையைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

“கேத்ரீனின் வழக்கு ஆரம்பக் கட்டத்தில் விபத்து எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் வேறு சில முக்கியக் காரணங்களுக்காக இதை கொலை வழக்கென தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இதன் விசாரணையின் இறுதிக்கட்டத்தில் ஹோட்டல் அதிபரின் மகன் ஆதித்தியாவை கொலை குற்றவாளி என ஆஜர்படுத்தியது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற பலதரப்பட்ட விசாரணையினாலும், ஆதித்தியாவிற்காக வாதாடிய வக்கீல் சுபாவின் வாதத் திறமையினாலும் ஆதித்தியா கொலை குற்றவாளி அல்ல என்பது தெள்ளத் தெளிவாய் நிரூபணமானது.

அதுமட்டுமின்றி… நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற அசம்பாவிதத்தில், மனோஜின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைத்ததைப் பார்க்கும் போது அவர் நிச்சயம் கொலை குற்றவாளியாய் இருக்க முடியாது என முடிவு செய்து அவரை இந்த நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.

மேலும் இந்த வழக்கின் போக்கு பெரிய பெரிய திருப்பங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் தன் வாதத் திறமையால் வக்கீல் சுபா தெளிவுபடுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி மனோஜ் தான்தான் கேத்ரீனின் சுயநினைவு இல்லாத போது கற்பழித்ததாக ஒத்து கொண்டிருக்கிறார்.

மேலும் கேத்ரீனின் கொலைக்குத் தானும் உடந்தை என வாக்குமூலமும் தந்திருக்கிறார். அவரின் சாட்சியும் சமர்ப்பிக்கப்பட்ட கண்கானிப்பு கேமராக்களில் பதிவான ஆதாரங்கள் யாவும் சமுத்திரன்தான் கொலையாளி என நமக்கு தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறது.

கேத்ரீனின் கொலைக்குப் பிண்ணனியில் முக்கியக் காரணமாக தற்போது மத்திய அமைச்சராய் பதிவியில் இருக்கும் வித்யாதரன் எனக் கேத்ரீனின் லேப்டாப்பில் உள்ள ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எம். வி. டி லிக்கர் பாஃக்டரியின் உண்மையான நிறுவனரும் வித்யாதரன்தான் என கிடைத்த ஆதாரங்களின் மூலமாக நமக்கு வெட்ட வெளிச்சமாகிறது.

அதுவல்லாது அங்கே உற்பத்தியாகும் மதுபானம் உடல் நலத்திற்கு கேடானது என்ற சுபாவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட இந்த நீதிமன்றம் அதைப் பற்றிய உண்மை தன்மையை ஆராய்ந்து விளக்கமளிக்குமாறு அது சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிடுகிறது.

அதுவரை அந்த நிறுவனத்தின் மதுபானத்திற்கான விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கிறேன். மேலும் கொலைக்கு உடந்தையாய் இருந்த மனோஜையும், மற்றும் கொலை குற்றவாளி சமுத்திரனையும் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன்.

முக்கியக் குற்றவாளி எனக் கருதப்படும் அமைச்சர் பதவியிலிருக்கும் வித்யாதரனை உடனடியாகக் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இந்தக் குற்றங்கள் நிரூபிக்கபட்டுத் தீர்ப்பு வழங்கும் வரை வித்யாதரனின் பதவி மற்றும் சொத்துக்களை இந்த நீதிமன்றம் முடக்கி வைக்கிறது.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை திசை திருப்பிய குற்றத்திற்காகவும், தன் பதவியைத் தவறாய் பயன்படுத்திய குற்றத்திற்காகவும் அசிஸ்டன்ட் கமிஷனர் வேணு மகாதேவனின் மீது விசாரணை நடத்தும்படி காவல் துறைக்கு உத்தரவிடுகிறேன்.

வக்கீல் சுபா திறமையோடு வாதாடி இந்த வழக்கின் விசாரணையை இத்தனை துரிதமாய் முடித்ததிற்காக இந்த நீதிமன்றம் அவரைப் பாராட்டுகிறது. மேலும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சிவாவின் திறமையான விசாரணையைப் பாராட்டி காவல்துறை அவருக்குப் பதவி உயர்வு வழங்க இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கின்றது.

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும் 28ம் தேதி நடைபெறும். அன்று இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியாய்க் கருதப்படும் வித்யாதரன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கான விளக்கத்தை அளித்த பின்னர், இந்த வழக்கில் சமிர்க்கப்பட்ட ஆதாரங்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து… கேத்ரீன் கொலை வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படும். இத்துடன் இந்த நீதிமன்றம் கலைகிறது” என்று சொல்லி நீதிபதி அவர் எழுதிய வைத்திருந்த பக்கங்களை எடுத்து வைத்துவிட்டு எழுந்து சென்றார்.

நீதிபதியின் வாசிப்பை கேட்ட சுபாவின் மனதிலிருந்த இறுக்கம் ஒருவாறு தளர்ந்தது.

அவளுக்கு ஆதித்தியாவை பற்றிய கவலை அதிகரிக்கத் தன் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவளை சமுத்திரன் கோபத்தோடு பார்த்தான்.

கான்ஸ்டபிள்ஸ் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்து வர அவன் சுபாவின் அருகில் வந்ததும், “நீ என்ன பெரிய பொது நலவாதியா?” என்று கேட்டான் கோபத்தோடு.

“நான் பொதுநலவாதி எல்லாம் இல்ல... ஆனா உன்னை மாதிரி ஊரையே சுடுகாடாய் மாத்திட்டு தான் மட்டுமே வாழணும்னு நினைக்கிற சுயநலவாதி இல்ல” என்றாள்.

அங்கே வந்த சிவா அவளைப் பார்த்து, “இவன்கிட்ட எதுக்குமா நீ பேசிட்டிருக்க... சீக்கிரம் புறப்படு” என்றான்.

சமுத்திரனின் முகத்தில் கோபம் தெறிக்க, “இவன் இருக்கிற தைரியத்திலதான் நீ என்னைச் சிக்க வைச்சிட்ட இல்ல... இவன்தான் உன் கூட கடைசி வரைக்கும் துணைக்கு வரப் போறானா?” என்றதும் சிவாவிற்குக் கோபம் வர தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தான்.

“ரொம்ப பேசற நீ... இப்ப நான் உன்னைச் சுடறேன்... யார் உன் கூட துணைக்கு வரான்னு பாக்கலாமா?”

சுபா உடனே, “அண்ணா விடுங்க... நீங்க சுடற அளவுக்குக் கூட இவனுக்கெல்லாம் தகுதி இல்ல”என்றாள்.

சமுத்தினின் முகம் கறுத்துப் போக, சிவா நெற்றியில் வைத்த துப்பாக்கியை எடுத்து உள்ளே வைத்தான்.

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளூத்துவோம். படிச்சிருக்கியா? ஜெயிலுக்குப் போய் படிச்சு தெரிஞ்சிக்கோ” என்றான் சிவா.

பின்னர்,  “இவனை இழுத்திட்டு போங்க” என்று கான்ஸ்டபிளிடம் சொன்னான்.

சமுத்திரன் நகர்ந்த பிறகு சுபா கண்கள் கலங்க, “ஆதி அண்ணாவுக்கு எப்படி இருக்கோ தெரியல”

“ஆதித்தியா கூட விந்தியா இருக்கும் போது அவனுக்கு ஒண்ணும் ஆகாது. சாவித்ரி புருஷனுக்காக எமன்கிட்ட போராடினா... ஆனா எமனே வந்து விந்தியாக்கிட்ட போராடினாலும் ஒண்ணும் நடக்காது” என்றதும் சுபாவின் சோகம் படர்ந்திருந்த முகத்தின் லேசாய் புன்னகை மலர்ந்தது.

You cannot copy content