You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

IrumunaiKathi - Final Episode

Quote

36

நிறைவு

சிம்மவாசல். இராஜராஜேஸ்வரியின் கம்பீரமான கோபுரத்தின் மேலுள்ள கலசம் காலை சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டுப் பொன்னாய் மின்னிக் கொண்டிருந்தது. கோவிலைச் சுற்றிலும் தென்னை மரங்கள் தூண்களாக இடவல புறங்களில் நின்றிருக்க, அதன் வாயிலில் உள்ள பூச்செடிகளில் பூக்கள் பல வண்ணங்களில் சிரித்துக் கொண்டிருந்தன.

அதோடு கோவிலின் பின்புறம் அமைந்த அகண்ட ஆழி காலை கதிரவனின் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பிரதிபலிக்க, அடடா என்னே! இந்த இயற்கையின் அழகு என்று அவற்றை எல்லாம் கண்டு என் உள்ளம் சிலாகிக்கிறது.

அதேநேரம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்த கடலலையோசையின் தாளகெதியோடு நாதஸ்வரமும் மேளச் சத்தமும் கலந்து ஒலிக்க, கோவிலுக்குள் நாம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டேன். பூமாலைத் தோரணங்கள் கோவிலின் உள்கோபுரம் முழுக்க அலங்கரிக்கப்பட்டு கண்களுக்கு விருந்தாகிய அதேநேரம் அவற்றின் வாசம் என் நாசிகளில் புகுந்து மயக்கம் கொள்ளவும் செய்கிறது.

இராஜராஜேஸ்வரி கருவறையில் சர்வ அலங்காரங்களோடு கிரீடம் தரித்திருந்த அழகையும் கம்பீரத்தையும் பார்க்க இரு விழிகள் நிச்சயம் போததாது. பார்த்து கொண்டே இருக்க மனம் ஆவல் கொள்ள, அவளைக் கண்கொட்டாமல் ரசித்தபடி நான் உள்ளே நுழைந்தேன்.

வாயிலின் சற்றுத் தள்ளி வரவேற்பு வேலையை தன் அன்னையோடு நின்று திறம்பட செய்து கொண்டிருந்தான் முகில். பட்டு வேட்டிச் சட்டையில் அவனும் கதாநாயகன் போல்தான் இருந்தான். ஆனால் அவனுக்கு நாயகிதான் யாரும் கிட்டவில்லை.

“எதுக்கு சும்மா இருக்கிறவனை உசுபேத்திறீங்க? சீக்கிரம் உள்ள போங்க ஆத்தரே… நேரமாயிடுச்சு” என்று அவன் என்னைப் பார்த்து அலுத்துக் கொள்ள,

“விடு முகில் … அடுத்து எழுத போற பார்ட்ல வேணா உனக்கு ஒரு நல்ல ஹீரோயினா பார்த்து செட் பண்ணிடுறேன்” என்றேன்.

“வேண்டாவே வேண்டாம்” என்று அவன் என்னைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு உள்ளே போகச் சொன்னான்.

“வந்தவங்க கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசு முகில்” என்று தேவி எனக்காகப் பரிந்து கொண்டு அவர் மகனை முறைக்க, நாம் புன்னகைப் புரிந்துவிட்டு வரவேற்பு தட்டிலிருந்த சந்தனத்தை நெற்றியில் வைத்துக் கொண்டு ரோஜா மலர்களைத் தலையில் சூடிக் கொண்டேன்.

கடைசியாகக் கற்கண்டைக் கை நிறைய அள்ளி வாயில் போட்டுக் கொண்டு அந்த இனிமையான தருணத்தை அனுபவித்தபடி உள்ளே செல்ல, ரகு பரபரப்பாய் மாங்கல்ய தட்டை வந்தவர்களிடம் நீட்டி ஆசிர்வாதம் பெற்று அட்சதையைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

நானும் என் பங்கிற்கு அந்த மாங்கல்யத்தைப் பக்தியோடு தொட்டு வணங்கிவிட்டு அட்சதையை எடுத்துக் கொண்டேன். பின் நான் இருக்கையில் அமர எண்ணிய போது என் பார்வையில் தென்பட்டான் இவான் ஸ்மித்.

கோபியர் கூட்டம் சூழ கண்ணனைப் போல இவானைச் சுற்றிலும் இளம் பெண்கள் கூட்டம். அவன் உயரத்திற்கு எத்தனை பேர் சுற்றி நின்றாலும் அவனை மறைக்க முடியாது.

“ஹாய் இவான்!” என்று நான் பழக்க தோஷத்தில் கைக் காட்ட அவன் என்னைப் பார்த்த மாத்திரத்தில் கோபமாகி, அந்த கோபியர் கூட்டத்தை விலக்கிவிட்டு பாய்ந்து கொண்டு என்னிடம் வந்தான்.

“வெய்ட் வெய்ட்… ஒய் டென்ஷன்?” என்று நாம் அவன் உயரத்தைப் பார்த்து அச்சத்தோடு விலகி நிற்க,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல” என்று அவனின் ஆங்கிலத்தில் கேட்க, நான் திருதிருவென்று விழித்துவிட்டு, “நோ… இவ்வளவு பாஸ்ட்டா பேசுனா எனக்கு சத்தியமா புரியாது” என்றேன்.

“ஓகே… நான் தமிழ்லயே கேட்கிறேன்… எனக்கு தமிழச்சி மாறியே ஒரு ஹீரோயின் வேணும்…” என்று அவன் சட்டமாய் சொல்ல, ‘அடப்பாவி… இவன் அடங்கமாட்டான் போலயே’ என்று வெளிவந்த மைன்ட் வாய்சை உள்ளே சைலன்ட் மோடில் போட்டுக் கொண்டேன்.

அவன் முறைப்பாய் என்னைப் பார்த்துவிட்டு, “முடியுமா முடியாதா?” என்று மீண்டும் கேட்க, “பெட்டர்மாஸ் லைட்டேதான் வேணுமா? வேற இந்த ஜீரோ வால்ட்ஸ்… ட்யுப் லைட்… இதெல்லாம் போட்டா உங்களுக்கு பல்பு எரியாதா?” என்று படபடத்துக் கொண்டே கேட்டேன்.

“வாட்?” என்று அவன் புரியாமல் பார்க்க வேறுவழியின்றி அவனைச் சமாளிக்க, “ஓகே ஓகே… ஒரே மாறி உலகத்தில ஏழு பேர் இருப்பாங்களாம்… அப்படி யாரையாச்சும் தேடிப் பிடிக்க ட்ரை பண்றேன் பாஸ்” என்றதும் அவன் முகம் கொஞ்சம் சமாதான நிலைக்கு வந்தது.

“சீக்கிரம் தேடிப் பிடிங்க… ஐ கான்ட் வெய்ட்” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு அவன் மீண்டும் அந்த கோபியர்கள் கூட்டதில் சென்று ஐக்கியமாகிவிட, “தப்பிச்சேன் டா சாமி” என்று பெருமூச்சுவிட்டு காலியாக இருந்த முன்இருக்கையில் சென்று அமர்ந்தேன்.

என் பார்வை மேடையில் இருக்க, முதலில் விழிகள் சென்று நின்றது மாலையும் கழுத்துமாய் இருந்த மணமக்களிடம்தான். சிம்மாவின் கம்பீரத்திற்கும் மிடுக்குக்கும் அந்தப் பட்டு வேட்டிச் சட்டை மிகப் பொருத்தம். மதியழகி உண்மையில் அழகு பதுமைதான். அதுவும் கல்யாணக் கோலத்தில் பார்க்க அவள் அத்தனை சௌந்தர்யமாக இருந்தாள்.

ஆனால் தலைநிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் விழிகள் நாணமெனும் பெண்மையின் மொழிப் பேசிக் கொண்டிருந்தது. சிம்மவிற்கோ அந்த முழு நிலவு எப்போது தன் முழு முகத்தை காட்டும் என்றிருந்தது.

இந்த அழகான காட்சிகளுக்கு இடையில் சம்பந்தமே இல்லாமல் தலையை நுழைத்தார் அமைச்சர் விக்ரம் அவர்கள்.

“ஏன் தங்கச்சி? என் ஃபிரெண்ட் முகம் என்ன அவ்வளவு கர்ண கொடுரமாவா இருக்கு… நிமிர்ந்தே பார்க்க மாட்டுற” என்று அவன் கேட்ட நொடி, “என்ன ண்ணா நீங்க… அவரைப் போய்” என்று பதறிக் கொண்டு நிமிர்ந்தாள் மதியழகி.

முழு மதியின் தரிசனம் கிட்டிய சந்தோஷத்தில் சிம்மா அவள் முகத்தைப் பார்த்து குறும்புத்தனமாகப் புன்னகை செய்ய விக்ரம் அப்போது, “எப்படி மச்சான் என் இராஜ தந்திரம்” என்று சொல்லி மெச்சுதலாய் தன் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.

“நண்பேன் டா” என்று புன்னகைத்தான் சிம்மா! மதிக்கு அவர்களின் தந்திரம் புரிந்து மீண்டும் நாணத்தில் தலை கவிழ்ந்து முகம் மலர்ந்தாள்.

அப்போது தமிழச்சி அங்கே வந்து, “விக்ரம்” என்றழைக்க, நிமிர்ந்தவன் சிவப்பு வண்ணப் பட்டுப் புடவையில் அழகாய் நின்று கொண்டிருந்த தன் நாயகியை காதல் ரசம் சொட்ட பார்த்தான்.

அவள் கடுப்பாகி, “பார்த்தது போதும்… டேடை காணோம்… ஃபோன் பண்ணா கூட எடுக்கல… வெளிய யாருகிட்டயாச்சும் பேசிட்டு இருக்காறோ என்னவோ… பாதப் பூஜைக்கு… டைமாச்சு கூட்டிட்டு வா” என்றாள் .

“அப்பாவைக் கூட்டிட்டு வரவா… ஒரு அமைச்சனை இப்படி எடுபிடி வேலை வாங்குறது கொஞ்சம் கூட நல்லா இல்ல… இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்”

“ஐயோ! முடியல இவன் கூட” என்று அவள் கடுப்பாய் தலையில் அடித்துக் கொண்டு, “சரி விடு… நான் இவான் கிட்ட சொல்லிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே, “இவான்” என்று அழைத்தாள்.

“ஏய் ஏய்… கூல்… நானே போறேன்” என்று அவன் அவள் கரத்தைப் பிடித்துத் தடுத்துவிட்டு அங்கிருந்து வீரேந்திரனை அழைத்து வரச் சென்றான். அதன் பின் தமிழச்சிப் பொறுப்பாய் ஐயருக்குத் தேவையானவற்றை எல்லாம் எடுத்துக் கொடுத்து கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் பாதப் பூஜை சடங்கு தொடங்க, ஜோடி சமையதறாய் விரேந்திரனும் அவரின் சரிபாதியுமான செந்தமிழ் நிற்க மதியும் சிம்மாவும் அவர்கள் பாதம் கழுவிப் பூஜை செய்தனர். அதேபோல் ரவிக்கும் அருந்ததிக்கும் அவர்கள் செய்து முடிக்கவும் ஐயர் மாங்கலய தாரணம் செய்ய நாழியானது என்ற கூவத் தொடங்கினார்.

அதேநேரம் மணமகனின் சகோதரி விளக்கு எடுக்க வேண்டும்.

“மாசமா இருக்கும் போது விளக்கு எடுக்கக் கூடாது” என்று சொந்தத்தில் ஒரு பெண் சொல்ல, செந்தமிழும் தமிழச்சியும் என்ன செய்வதென்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“தமிழச்சி மாசமா இருக்காளா? நமக்கு தெரியாம இது எப்ப நடந்தது” என்று யோசித்து கொண்டிருந்த நான் பிறகு அவர்கள் அந்த விளக்கு எடுக்கும் சடங்கை எப்படி பூர்த்திச் செய்ய போகிறார்கள் என்று ஆர்வமாய் பார்த்திருந்தேன்.

செந்தமிழ் வீர் உறவு முறையில் வேறு சிம்மாவிற்கு நெருக்கமான தங்கை முறை யாரும் இல்லை.

செந்தமிழ் யோசித்துவிட்டு பின் அந்த நொடியே கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கைக் காட்டி வரச் சொல்லி அழைத்தார்.

யாரந்த பெண் என்று நான் திரும்பி பார்க்க, “அட! நம்ம ஜெசிக்கா… சும்மா சொல்லக் கூடாது… பட்டுப் புடவையெல்லாம் கட்டி நம்மூர் பொண்ணு மாறியே இருக்காங்க” என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஜெஸ்சி அந்தச் சடங்கை செய்வதில் ஆர்வமானாள்.

சிம்மாவிற்கும் ஜெஸ்சி அந்தச் சடங்கை செய்வதில் முழு ஆனந்தம். சிறப்பாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே, “எங்க நம்ம இன்னொரு முக்கியமான ஜோடியைக் காணோம்” என்று யோசனையில் நான் என் பார்வையைச் சுழற்ற,

ஆஹா! அவர்களும் முதல் வரிசையில்தான் அமர்ந்திருந்தார்கள். நம் ஆதர்ஷ தம்பதிகளான ஆதியும் விஷ்வாவும்! குன்றாத காதலும் மனநிறைவும் அவர்கள் முகத்தில் திண்ணமாய் பிரதிபலித்தது.

தாலிக் கட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்த்த கெட்டி மேளச் சத்தம் காதில் ஒலிக்கப் புது மணத்தம்பதிகளை எழுந்து நின்று அட்சதைப் போட்டு ஆசிர்வதிக்க நான் எண்ணிய போது அருகிலிருந்த முதியவர் அவரை எழுப்பிவிட சொல்லி உதவி கேட்க, இத்தனை நேரம் அவரை கவனிக்காமல் போனோமே!

மகேந்திர பூபதி. அவர் என் உதவியோடு எழுந்து நின்று தன் பெயரன் பேத்தி சிறப்பாக தங்கள் இல்லற வாழ்வைத் தொடங்க அட்சதைத் தூவி வாழ்த்தினார். நானும்தான்.

சிம்மா மதியின் கழுத்தில் மாங்கல்யம் கட்ட கெட்டி மேளச் சத்தம் அந்த இடத்தை முழுவதுமாய் நிரப்பியது. அவன் அவளை தன் அணைப்பில் கொண்டு வந்து நெற்றியில் குங்குமமிட பெண்ணவள் மனம் காதலன்… கணவனாக மாறிய அந்தத் தருணத்தில் சொல்லிலடங்கா இன்பத்தில் மூழ்கித் திளைத்தது.

“கங்க்ராட்ஸ் அழகி! கங்க்ராட்ஸ் டா ண்ணா!” என்று தமிழ்ச்சி பின்னிருந்து வாழ்த்த, அவர்கள் இருவரும் அவளைப் பார்த்து நன்றி சொல்லி முகம் மலர்ந்தனர்.

அப்போது ஜெஸ்சி, “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்று தன் வாழ்த்தைத் தீந்தமிழில் திருவள்ளுவத்தில் தெரிவிக்க சிம்மா வியப்போடு,

“ஓ! திருக்குறளையும் கரைச்சு குடிச்சுட்டியா?” என்று கேட்டான்.

“எஸ்…” என்றவள் கெத்தாகச் சொல்ல, “பாவம் நந்து!” என்று சொல்லி சிம்மா தன் நண்பனின் பரிதாப நிலையை எண்ணி உள்ளுர சிரித்துக் கொண்டான்.

சடங்குகள் முடிவடைய வாழ்த்துப் படலம் தொடங்கியது. ஒவ்வொருவராக மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்க வாஷிங்டனில் பார்த்த நம்முடைய நண்பர்களும் சிம்மாவை வாழ்த்த வந்திருந்தனர்

“வாங்க வாங்க… இராமநாதன் சார்… அஜீஷ்… தேஜா… எழில் நீங்களுமா?” என்று சிம்மா ஆச்சரய்மாக,

“நண்பரோட திருமணத்திற்கு பங்கேற்காமல் எப்படி?” என்றார் எழில் புன்னகையோடு!

“அதானே” என்று அஜீஷ் சொல்ல, “நன்றி சகோ” என்று பூரித்தான் சிம்மா!

இராமநாதன் தங்கள் கையிலிருந்த புத்தகங்களைப் பரிசாக வழங்கிவிட்டு, “விஜயன் மட்டும் வர முடியல… ஆனா உங்களுக்காகப் பரிசு அனுப்பியிருக்காரு” என்றார்.

அந்தப் பரிசை பெற்றுக் கொண்ட சிம்மா, “உங்க எல்லோரையும் பார்த்ததில ரொம்ப சந்தோசம்” என்க, அஜீஷ் முன்னே சென்று நின்று “ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமே” என்றான்.

இராமநாதன் சிம்மாவின் தோள் மீது கைப்போட்டு பெருமிதமாய், “தமிழன் டா!” என்று சொல்ல மதி உட்பட எல்லோரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

வாழ்த்து படலங்கள் நிறைவு பெறும் தருவாயில் நாமும் சென்று அந்த அழகிய தம்பதியை வாழ்த்த எண்ணி அருகில் செல்ல, சிம்மாவின் முகம் மலர்ந்து, “வாங்க வாங்க… உங்க நாவல் இருமுனைக் கத்தி முடிஞ்சுதா?” என்று கேட்க,

“இன்னையோடு இருமுனைக் கத்தியை முடிச்சிடலாம்… ஆனா அதோட அடுத்தப் பாகத்தில உங்களை மட்டுமே பிரத்யேக ஹீரோவா வைச்சு” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது,

“ஐயோ! வேண்டாம்” என்று மதி பதறினாள்.

சிம்மா மனைவியை அதிர்ச்சியாகப் பார்க்க, மதி வேகமாய் என் கரத்தைப் பற்றி தனியே அழைத்து வந்தாள்.

நான் என்னவென்று புரியாமல் பார்க்க, “அக்கா… ப்ளீஸ் எனக்கு இந்த ட்விஸ்ட் அன் டர்ன்ஸ் எல்லாம் சத்தியமா தாங்க முடியாது… அதுவும் பாம்ப் ப்ளேஸ்ட் ஆக்சிடன்ட் கொலை கொள்ளைன்னு ஐயோ! எனக்கு சொல்லும் போதே ஹார்ட் பீட் எகிறுது… அதுவும் இல்லாம இருந்து இருந்து இப்பதான் நான் அவர் கூட கஷ்டப்பட்டுச் சேர்ந்திருக்கேன்… அதுல மண்ணள்ளிப் போட்டுறாதீங்க” என்று கெஞ்சினாள்.

“அப்படி எல்லாம் ஆகாது” என்று நான் தன்னிலை விளக்கம் கொடுக்க,

“ஆன வரைக்கும் போதும்… இப்படியே முற்றும் போட்டுடுங்க” என்று இறங்கிக் கேட்டவளை பார்த்து ஒரு பெருமூச்சோடு சரியென்று தலையசைத்தேன். சிம்மாவோ என்னிடம் பேசிவிட்டு அருகில் வந்து நின்ற மதியிடம், “என்ன சொன்ன?” என்று கேட்க,

“ஒன்னும் இல்ல… சும்மா ஒரு சின்ன மேட்டர்” என்று அவள் தலையை குனிந்தபடி சொல்ல, சிம்மா என்னைப் பார்த்தான். நான் நல்ல பிள்ளையாக அவர்களை வாழ்த்திவிட்டு விடைபெற்றுக் கொண்டேன்.

திருமணம் வைபவம் நிறைவாக முடிவடைந்தது.

          அன்று இரவு வானில் சந்திரன் உதயமாக, தமிழச்சியின் வீடு வெறிச்சோடிக் காட்சியளித்தது. ஆள் அரவமே இல்லை. எங்கும் சின்ன சத்தம் கூட இல்லை. தனிமையில் மதியழகி அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து யாருமில்லாததைக் கண்டு அச்சமுற்றாள்.

          திருமணம் முடிந்து வீடு வந்து சேர்ந்ததும் சோர்வில் அவள் உறங்கி இப்போதுதான் விழித்தெழுந்தாள். எழுந்து பார்த்தால் யாரையும் காணவில்லை. அதற்குள் எல்லோரும் எங்கே போனார்கள் என்று தேடியவள் வேகமாய் தன் அறைக்குச் சென்று பேசியை எடுத்து அழைப்பு விடுத்தாள்.

          சில நொடி நிசப்தத்திற்கு பின்,

“உன்னை காணாத நான் இங்கு நான் இல்லையே…

விதையில்லாமல் வேர் இல்லையே” என்ற பாடலின் ஒலி கேட்க, சிம்மா அவள் முன்னே வந்து நின்றான்.

“பரவாயில்ல மதி… வேற யாருக்கும் கால் பண்ணாம எனக்கே கால் பண்ணிட்ட...” என்று அவன் சொல்ல,

அவள் புரியாமல் அவனைப் பார்க்க, அவன் அறைக்குள் வந்து கதவை மூடினான். அவன் செய்கையில் அவள் முகம் சிவக்க, “எல்லோரும் எங்க?” என்று படபடப்பாய் கேட்டாள்.

“நம்மக்கான ப்ரைவசியை நமக்காகக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க” என்று சொல்லிக் கொண்டே அவளை நெருங்கி வர, “என்ன?” என்று அதிர்ச்சியாகக் கேட்டு அவனைத் தயக்கமாய் பார்த்தாள்.

          அவன் பதில் சொல்லாமல் மேலும் அவளை நெருங்கி வந்தான். காலையில் கட்டியிருந்த மஞ்சள் வண்ணப் பட்டுப் புடவை லேசாக கசங்கியிருக்க மல்லிகைச் சரம் வாடியிருந்தது. இருப்பினும் கூட அவள் அழகில் எதுவும் குறையவில்லை.

          பேரழகியாகதான் திகழ்ந்தாள். அதுவும் அவன் நெற்றியில் இட்ட குங்குமமும் கட்டிய மஞ்சள் தாலியும் அவளுக்குப் புதுவிதமான அழகைக் கொடுத்திருந்தது.

          அவளை ரசனையாகப் பார்த்துக் கொண்டே முன்னே வர அவள் தலைகவிழ்ந்து அவன் வருகையை விரும்பியவளாகவே நின்றிருந்தாள். பெண்மையும் நாணத்தையும் தாண்டி அவன் மீதான காதல் அவளைப் பித்துப் பிடிக்க வைத்திருந்தது.

அவன் மிருதுவாக அவள் இடையைப் பற்றி இழுத்தணைக்க அவள் நாணத்தில் தன் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள்.

          “நான் இன்னும் ஒன்னுமே பண்ணல… அதுக்குள்ள வெட்கமா?” என்றவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவன் முகம் பார்க்க வைத்தான். அந்தப் பார்வையில் ஒரு விண்ணப்பம் இருந்தது.

அவள் யோசனையாய் பார்க்க, “நான் கேட்டதை மறந்திட்டியா மதி” என்றான்.

“என்ன கேட்டீங்க?” என்றவள் குழப்பமாக, “அந்தப் பாட்டுக்கு நீ ஆடறதை நான் பார்க்கணும்னு சொன்னேனே” என்றவன் சொல்லி தன் புருவத்தை ஏற்றினான்.       

மீண்டும் அவள் நாணம் அவளைப் பற்றிக் கொண்டது. அவளுக்கு மனதெல்லாம் ஏதோ செய்ய, “இன்னைக்கு வேண்டாமே” என்றாள் கெஞ்சுதலாய்.

“ப்ளீஸ்… எனக்காக ஆடமாட்டியா?” என்று அவன் ஏக்கத்தோடு அவள் முகம் பார்த்து கேட்க, அவளால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை.

“சரி ஆடுறேன்” என்றவள் சொன்ன போதும் அவன் தன் அணைப்பை விடாமல் அவளையே கிறக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் தவிப்போடு, “என்னை நீங்க விட்டாதானே போய் ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு வந்து ஆட முடியும்” என்றவள் சொல்ல,

“ஆமா இல்ல” என்றவன் அசடு வழிந்து, அவளைவிட்டு நகர்ந்து தன் அறையின் பின் வாசல் புறமாய் சென்று நிலவை ரசித்துக் கொண்டிருந்தான். அவன் மதி வரும் வரை அவனுக்கு அந்த வானின் மதிதான் துணை.

மௌனமாய் தன் இல்லற வாழ்வின் கனவுகளோடு அவன் மிதந்து கொண்டிருக்க, மதியின் கொலுசு சத்தம் அவன் ஹார்மோன்களை எல்லாம் தட்டி எழுப்பிவிட்டது.

ஆசையாய் அவன் திரும்ப அவள் ஒரு மெல்லிய பொன்நிற கரையோடு கூடிய ஒரு சிவப்பு நிற காட்டன் புடவையில் நின்றிருந்தாள். திருத்தமான முகத்தின் மத்தியில் குங்கும நிறப் பொட்டு அவனைக் கட்டி இழுத்தது. அவளின் கரிசல் கூந்தல்கள் காற்றோடு சரசம் புரிந்து கொண்டிருந்தன.

மல்லிகை சரம் அவள் தோளில் தவழ்ந்து விளையாடியது. பார்க்க அவள் உயிருடன் வண்ணம் தீட்டிய ஓவியமாகதான் அவனுக்குத் தெரிந்தாள். காதலும் மோகமும் சேர்ந்து அவனைப் பாடாய் படுத்தத் தொடங்கியது.

இதுவரை ஒரு ஓவியனாக அவன் அரை நிர்வாண வடிவத்திலிருந்த பல விதமான பெண் சிற்பங்களை ஊடுருவிப் பார்த்து வரைந்திருக்கிறான். அப்போதெல்லாம் அந்த அழகின் சொரூபம் அவன் மனதை சலனப்படுத்தியதில்லை. ஆண்மைத் தலைத்தூக்கியதும் இல்லை.

ஆனால் முதல்முறையாக ஒரு ஆணாக அவன் கண்ணியம் தம் கட்டுபாடுகளைத் தளர்த்திக் கொள்ள, அவன் விழிகள் அவளின் பெண்மையை இன்னும் ஆழமாய் ஊடுருவிப் பார்க்க விழைந்தது. அதை அவள் உணராது முழுவதுமாய் நடனமாடும் மனநிலையில் இருந்தாள்.

அவள் அவனிடம் தலையசைத்து ஆடவா என்று அனுமதி கேட்க ஏக்கப் பெருமூச்சொன்றை வெளிவிட்டு தலையசைத்தான்.

அவள் அந்தப் பாடலை ஒலிக்க விட்ட மறுகணம் அவளின் செவ்விதழ்கள் அந்த வரிகளை உச்சரித்தன. அவளின் பாதங்கள் பூமியின் மீது தாளங்கள் வாசித்தன. அவள் விழிகள் பாவங்களால் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தன. அந்தப் பாடலும் அதற்கான அவளின் நடனமும் அவனைப் போதை கொள்ளச் செய்தது.

தக தக தக

தின தின தின

நக நக நக

திக்கிட தான தான தான

திக்கிட திக்கிட தகின தான

தாக்குடு தான

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே

விதை இல்லாமல் வேரில்லையே

……………………………………………

 

………………..

அவ்வாறு நோக்கினாள்

எவ்வாறு நாணுவேன்

கண்ணாடி முன்நின்று

பார்த்து கொண்டேன்

ஒன்றாக செய்திட

ஒரு நூறு நாடகம்

ஒத்திகைகள் செய்து

எதிர்பார்த்து இருந்தேன்

எதிர் பாராமலே…. அவன்

எதிர் பாராமலே அவன்

ஓஓஓ பின்னிருந்து வந்து எனை

பம்பரமாய் சுழற்றி விட்டு

உலகுண்ட பெரு வாயில் எந்தன்

வாயோடு வாய் பதித்தான்

அந்த வரி முடியும் போது அவன் கரம் அவள் இடையைத் தனக்குள் சிறையிட்டு அவள் இதழ்களுக்குள் தன் இதழ்களைப் பாய்ச்சி இருந்தது. அவள் நடனம் நின்று போக பாடல் மட்டும் நிற்காமல் ஒலித்து கொண்டிருந்தது.

இங்கு பூலோகம் என்று

ஒரு பொருள் உள்ளதை

இந்த பூங்கோதை மறந்தாளாடி

அவன் தீண்டலில் அவள் உலகமே மறந்து போனாள் என்பதுதான் உண்மை. சிம்மாவும் அவள் பெண்மையோடு கூடி அவன் கண்டிராத புது உலகைக் கண்டான். அவனும் அவளும் மட்டுமே வாழும் உலகம் அது.

அன்று அவளின் ஓவியத்திற்கு வஸ்திரம் தரித்த அவன் விரல்கள் இன்று முற்றிலும் நேர்மாறான வேலையை செய்து கொண்டிருந்தது. அவனின் ஒவ்வொரு செய்கையிலும் அவளின் பெண்மை நெகிழ நாணம் அவிழ்ந்தது.

காமத்துப்பாலும் அகத்திணையும் அடி முதல் நுனி வரை கற்றாலும் அது நடைமுறைப்படுத்தும் போது அவை வெறும் ஆரம்ப நிலை மட்டுமே என்பதைப் புரிந்து கொண்ட சிம்மாவிற்கு காதலையும் களவியலையும் இன்னும் ஆழ்ந்து கற்க பேரவா உண்டானது.       

இவ்வாறாக அவர்களின் கற்றலும் காதலும் கரை காணாமல் சென்றுக் கொண்டிருக்க, இனிதே தொடங்கியது அவர்களின் இல்லறம்!

*

இன்னும் கதை முடியல… ஒரு முக்கியமான நபரைப் பார்க்காமல் எப்படி?

கமலக்கண்ணனிடம் அந்தச் சோழர் காலத்து நடராஜர் சிலை வருவதற்கு முன்னதாக அந்தச் சிலை ஒரு கடத்தல் பொருள்கள் விற்கும் தரகனிடம் கிடைத்தது என்பது முன்னமே சொல்லப்பட்டது. ஆனால் அந்தச் சிலை கிடைத்தன் பின்னணி இதோ.

தஞ்சை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த நடராஜன் வெளிப்பட்டான். அதாவது பூமிக்கு அடியிலிருந்து!

அம்பலத்தரசன் முடிவெடுத்துவிட்டால் யார் அவனை மறைக்க இயலும்? தரிசனம் தரவேண்டும் என்று யாதுமானவன் அன்றே முடிவெடுத்துவிட்டான்.

You cannot copy content