You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 2

Quote

2

யாத்ரா தியேட்டரை விட்டு வெளியே வந்த போது அவளது உடல் கோபத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளது தோழி ஸ்வேதா, நிலைமை மோசமாவதைத் தவிர்க்க அவளை அங்கிருந்து வேகமாக இழுத்து வந்தாள். ஆனாலும் யாத்ராவின் உள்ளம் அடங்கவில்லை.

“நீ மட்டும் என்னை இழுத்துட்டு வரலன்னா இன்னும் இரண்டு செவுலு மேலயே கொடுத்திருப்பேன்டி” என்று ஆத்திரத்துடன் சொன்னாள் யாத்ரா.

“அப்புறம் அங்க பெரிய கூட்டம் கூடியிருக்கும்... விஷயம் போலீஸ் வரைக்கும் போயிருக்கும். தேவையில்லாத பிரச்னையாகி இருக்கும் யாத்ரா,” என்று ஸ்வேதா அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

“ஆகட்டும்... தப்பு செஞ்சவன் அவன்தானே? அவன் தானே அசிங்கப்பட்டு இருப்பான்,” என்று யாத்ரா விடாமல் வாதிட்டாள்.

ஆனால் ஸ்வேதாவின் பதில் வேறாக இருந்தது. “அவனுக்கு எந்த அசிங்கமும் இல்ல யாத்ரா... அசிங்கம் நமக்குதான். ஏன்னா உலகம் அப்படித்தான் பார்க்கும்.”

 “என்னடி சொல்ல வர்ற?”

“நீ பாட்டுக்கு தியேட்டர்ல விசலடிக்குறதும் ஆடுறதுமா இருந்த... ‘அதான் அந்தப் பொண்ணு மேல கை வைச்சுட்டான்’னு உன் மேல தான் பழியைச் சொல்லுவாங்க,” என்று ஸ்வேதா சொன்ன யதார்த்தத்தை யாத்ராவால் ஏற்க முடியவில்லை.

“அப்போ இதெல்லாம் என் தப்பா?” குரலில் வேதனையும் அதிர்ச்சியும் கலந்து கேட்டாள்.

“அப்படிதான் இந்த உலகம் சொல்லும்”

அப்போது அவர்கள் புக் செய்த ஆட்டோ வந்துவிட இருவரும் அமர்ந்தனர். யாத்ராவின் கோபம் இன்னும் அடங்கியபாடில்லை.

 “எனக்கு புரியல... எத்தனையோ பசங்க தியேட்டர்ல விசலடிக்குறாங்க... தனக்கு பிடிச்ச ஹீரோக்காக ஜாலியா எழுந்து நின்னு கொண்டாடுறாங்க. அவனுங்களுக்கு இந்த மாதிரி பிரச்னையே இல்லையே? அதையே போல நானும் எனக்கு பிடிச்ச ஹீரோ படத்தை சந்தோஷமா விசலடிச்சு பார்த்த மட்டும் தப்பா? எனக்குப் பிடிச்ச ஹீரோவை நான் ரசிக்கக் கூடக் கூடாதா?”

“ஆனா அவனுங்களுக்கு இந்த மாதிரிப் பிரச்னையே வராது” என்ற ஸ்வேதாவின் வாதம் யாத்ராவை எரிச்சல்ப்படுத்தியது. அவள் பதில் பேசுவதற்குள் தன் அலைபேசியை எடுத்து யூடியூப் திறந்து காட்டினாள்.

 “இது நீ கொண்டாடுற ஹீரோ இன்னைக்கு காலையில பட ப்ரோமோஷனுக்காக சொன்ன  கருத்து?” என்று அதனை  யாத்ராவிடம் நீட்டினாள்.

அதில் அமரேஷ் மிக வசீகரமாகச் சிரித்துக்கொண்டே பேசினான்: ‘இன்னைக்கு பெண்கள் ஃப்ரீடம் பத்தி நிறைய பேசுறாங்க... அது சந்தோஷம்தான். ஆனா ஒன்னு, அந்த ஃப்ரீடம்க்கு ஒரு லிமிட் தெரியணும். எல்லை மீறுற சுதந்திரம் என்னைக்குமே ஆபத்துதான்’

வீடியோவை நிறுத்திய ஸ்வேதா, “இதை நான் சொல்லல... உன் ஆளு அமரேஷ் தான் சொல்லி இருக்காரு. இப்போ புரியுதா?” என்றாள்.

யாத்ரா அந்த வீடியோவைப் பார்த்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள். ஆனாலும் அவள் தன் கருத்தில் உறுதியாக இருந்தாள்.

“எனக்கு அமரேஷை பிடிக்கும்தான்.... சினிமா ஹீரோவா அவரோட ஆக்டிங், டான்ஸ் எல்லாத்தையும் நான் ரசிக்குறேன்... ஆனா அதுக்காக அவர் சொல்ற கருத்தை எல்லாம் ஆதரிக்குறேனு அர்த்தம் கிடையாது,” என்று தீர்க்கமாக சொன்னவள் அவள் இறங்க வேண்டிய இடம் வரவும்,

“சரி ஸ்வேதா பை அப்புறம் பார்க்கலாம்.. நீ பார்த்து போ” என்று கூறிவிட்டுத் தன் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைந்தாள்.

வீட்டு வாசலில் கதவு பூட்டி இருந்ததைப் பார்த்தவள், “அண்ணன் இந்நேரத்து வந்திருக்குமே” என்று யோசித்துக் கொண்டே, தன்னிடமிருந்த சாவியை எடுத்துத் திறந்து உள்ளே வந்தாள்.

உடைகளை மாற்றிவிட்டுப் படுக்கையில் விழுந்தாள். ஆனால் உறக்கமே வரவில்லை. படம் பார்த்த சந்தோஷமெல்லாம் அந்த ஒரு நொடியில் மொத்தமாக நாசமாகிவிட்டது.

தன்னுடைய விருப்பமில்லாமல் ஒரு அந்நியன் தன் உடலின் மீது கை வைத்ததை நினைக்க நினைக்க அவ்வளவு அருவருப்பாக இருந்தது. அந்த உணர்வை கடப்பது அவளுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. கண்களை மூடினால் அந்த மாஸ்க் போட்ட முகம் தான் மீண்டும் மீண்டும் வந்து அவளை அச்சுறுத்தியது.

“அவன் மாஸ்க்கை உருவி இருக்க வேண்டும். அவன் முகத்திரையை கிழித்திருக்க வேண்டும்’ என்று அவள் உள்ளம் பொறுமிக் கொண்டே ஒரு நிலைக்கு மேல் ஓய்ந்து உறங்கியும் போனது.

தாமதமாக வந்த இந்திரன், தங்கை ஆழ்ந்து உறங்குவதைப் பார்த்துவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

அலைபேசியில் ‘Reached Home’ என்ற குறுந்தகவல் ஒன்றை அனுப்ப,

உடனடியாக மறுமுனையில் இருந்து “நானும் வீட்டு பக்கத்துல வந்துட்டேன்” என்று பதில் வந்தது.

அந்தப் பதில் அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகையைப் பூக்கச் செய்தது.

அதே மனநிலையுடன் தன் வீட்டு வாசலுக்கு வந்து நின்ற சௌந்தர்யா, “இப்பதான் வர்றியா நீ?” என்ற கார்த்திக்கின் அதட்டலில் பயந்து போனாள்.

 “அது வந்து அண்ணா... ஆபிஸ்ல கொஞ்சம் வொர்க்,” என்று மெதுவாக இழுத்தாள்.

அதற்கு மேல் அவன் எதுவும் கேட்கவில்லை. கேட்டைப் பூட்டிவிட்டு அவன் உள்ளே வர, அங்கே அவர்கள் அம்மா தேன்மொழியும் மகளை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார்.

“ஆபிஸ் வேலைன்னா கூட ஒரு போன் பண்ண மாட்டியா? ஒரு பொண்ணு இவ்வளவு நேரம் வெளிய இருக்கிறது சரியா?” என்று அவர் அடுக்கிக் கொண்டே போக,

“சிக்னல் சரி இல்லம்மா” என்ற சௌந்தர்யாவின் பதற்றத்துடன் பதில் கூறவும் கார்த்திக், “சரி விடும்மா” என்று அம்மாவை அமைதிப்படுத்தினான்.

பின் தங்கையிடம், “ஆமா சாப்பிட்டியா?” என்று கேட்டான்.

“சாப்பிட்டேன்” என்று சொல்லிவிட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என அறைக்குள் புகுந்துவிட்டாள் சௌந்தர்யா.

“இவளுக்கும் சீக்கிரம் ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைச்சுரணும் கார்த்திக்” என்று தேன்மொழி கவலைப்பட, கார்த்திக் சிரித்துக் கொண்டே,

“இப்படிதான் அக்காங்களுக்கும் சொன்னீங்க... அப்புறம் நீங்களே இவ்வளவு சீக்கிரம் கட்டி வைச்சு இருக்க கூடாதுன்னு பீல் பண்ணிட்டு இருந்தீங்க” என்றான்.

“உன் அக்காங்க கதை எல்லாம் வேறடா... இவ வேற... சொல் பேச்சே கேட்க கூடாதுங்கறதுல தெளிவா இருக்கா” என்று தேன்மொழி சொல்ல, கார்த்திக் தன் தங்கையை விட்டுக்கொடுக்காமல் பேசினான்.

“சௌந்தர்யா அப்படி எல்லாம் இல்லம்மா. நம்ம வீட்டு பொண்ண நம்ம நம்பாம வேற யார் நம்புவா?”

“அப்படி நம்பித்தான் சதாசிவம் பொண்ணு நிச்சயம் பண்ற அன்னைக்கு ஓடி போச்சு” என்று தேன்மொழி பழைய கதையை இழுக்க,

“நீங்க ரொம்ப யோசிக்குறீங்க... முதல வந்து படுங்க,” என்று அவரை அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தான் கார்த்திக்.

வெளியே வந்த கார்த்திக்கிற்குச் சௌந்தர்யாவின் அறையில் ஏதோ பேச்சுக்குரல் கேட்டது.

கதவருகே சென்று நின்றவன், “சௌந்தர்யா” என்று அழைக்க, “என்ன அண்ணா?” என்று உள்ளிருந்து பதில் வந்தது.

“யார் கூட பேசிட்டு இருக்க?” என்று கார்த்திக் கேட்க,

“இல்ல யார் கூடவும் இல்லையே... படுத்துட்டேனே,” என்று அவள் அவசரமாகப் பதிலளித்தாள்.

கார்த்திக் அங்கிருந்து நகர்ந்ததும், “நான் நாளைக்கு பேசுறேன் வையுங்க” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் சௌந்தர்யா.

அந்த ஐடி அலுவலகத்தில் சௌந்தர்யா வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகிறது. இந்திரன் அங்கே மூன்று வருடமாகப் பணிபுரிகிறான். கடந்த மாதம்தான் ஒரே டீமில் அவர்கள் இணைந்தனர். வேலை சம்பந்தமாகத் தொடங்கிய அந்த நட்பு, இன்று டீம் லஞ்சின் போது காதலாக மாறியிருந்தது. இந்திரன் தன் காதலைச் சொல்ல, சௌந்தர்யாவும் சம்மதித்திருந்தாள். அந்த நினைவுகள் அவளைக் காதல் உலகில் மிதக்கச் செய்தன.

ஆனால், பக்கத்து அறையில் படுத்திருந்த கார்த்திக்கின் உலகமோ இன்னும் அந்த சினிமா அரங்கில் நடந்த சம்பவத்தில் நின்றது. அமரேஷ் செய்த காரியத்தை அவனால் ஏற்கவே முடியவில்லை.

சக நடிகைகளை கூட அவன் சில நேரங்களில் மட்டரகமாக கிண்டல் செய்வது உண்டுதான். ஆனால் பொது இடத்தில் ஒரு பெண்ணை அநாகரிகமாக இப்படி தொட்டது அவனை அதிர்ச்சியடைய வைத்தது.

‘அவள் ஒரு சாமான்ய பெண் என்பதாலா அல்லது ரசிகை என்ற உரிமையா?’ அவனுக்குப் புரியவில்லை.

எப்படி யோசித்தாலும் அவனுக்குத் தன் அமரேஷ் மீது கோபம்தான் வந்தது. அந்த இடத்தில் தன் தங்கை இருந்திருந்தால் அவனைச் சும்மா விட்டிருப்போமா என்று நினைக்கும்போது அவனுக்கு தன் மீதே வெறுப்பு உண்டானது.

ஆனால் இது எல்லாவற்றையும் தாண்டி அவன் மனதிற்கு ஆறுதலாக இருந்தது அந்தப் பெண்ணின் செயல் தான். கொஞ்சமும் யோசிக்காமல் அவள் அமரேஷை அறைந்தது அவனுக்குள் ஒரு நிம்மதியைத் தந்தது.

அமரேஷ் மீது அவள் கொண்ட அந்தத் தீவிரமான அபிமானத்தைப் பார்த்து ஆரம்பத்தில் அவன் எரிச்சலடைந்தான்.

“விவரம் தெரியாத அப்பாவிப் பெண்” என்று கூட அவளைத் தவறாக நினைத்தான்.

ஆனால் அவள் உடனடியாகத் தனக்கு நிகழ்ந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்ட அந்த கணம், அவள் மீது கார்த்திக்கிற்குப் பெரும் மரியாதை வந்தது.

அந்தப் பெண் யாரென்று தெரியாமலேயே அவளது துணிச்சலை அவன் மெச்சினான். அந்தச் சம்பவமும் அந்த முகமும் அவன் ஆழ்மனதிற்குள் புதைந்து போனது.

You cannot copy content