You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 23

Quote

23

பெருமழை நின்று கொஞ்ச நேரம்தான் ஆகியிருந்தது. தார்ச் சாலைகளில் இன்னும் ஈரப்பதம் காயாமல் அப்படியே கிடக்க, காற்றில் குளிர்ந்த ஈரப்பசை கலந்திருந்தது.

யாத்ராவும் தேன்மொழியும் வந்த ஆட்டோ, அந்த காவல் நிலைய வளாகத்தின் முன்னே வந்து நின்றது. இருவரும் இறங்கினர். தேன்மொழி அழுது கொண்டே வந்தார். யாத்ராவினுள் ஓர் அசாதாரணப் பதற்றம்.

இருவருமே தயக்கத்துடனே அந்த காவல் நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தனர். உள்ளே ஒரு குழப்பமான உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. ஒருபுறம் ஒரு காவலர் யாரையோ சத்தமாக அதட்டிக்கொண்டிருந்தார். இன்னொரு மேஜை அருகே இருவர் ஆக்ரோஷமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மேஜை எங்கும் சிதறிக்கிடக்கும் காகிதக் குவியல்கள், அலறும் கைப்பேசிகள், அதட்டல் குரல்கள் என்ற அந்த ஒட்டுமொத்த சத்தங்களுக்கு நடுவே யாத்ராவின் கண்கள் ஒரே ஒரு முகத்தை மட்டும்தான் தேடின.

கார்த்திக்!

சில நொடிகள் கண்கள் அலைபாய்ந்த பிறகு, அவன் கண்ணில் பட்டான். ஓரமாகப் போடப்பட்டிருந்த மரபெஞ்சில் அவன் அமர்ந்திருந்த அந்தக் காட்சியைக் பார்த்தவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்.

திடீரென்று சுற்றிலும் கேட்ட சத்தங்கள் எல்லாம் அணைந்துவிட்டது போலிருந்தது. அவளின் உலகமே நின்று போனது போன்ற ஒரு பிரமை.

அதேநேரம் மகனை கண்டுவிட்ட தேன்மொழி, “கார்த்திக்...” என்று அழுது கொண்டே அருகே ஓடினார்.

அவர் குரல் கேட்டு அவன் தன் தலையைத் தூக்கினான். அந்தப் பார்வையில் அவமானம், வெட்கம், பயம் என எல்லாமே ஒன்றாகக் கலந்திருந்தது.

“கார்த்திக்...” தேன்மொழியின் குரல் மீண்டும் உடைந்து நடுங்கியது.

அந்த நேரம் பக்கத்து மேஜையில் இருந்த கான்ஸ்டபிள் கத்தினான், “ம்மா... இங்க சத்தமா அழக்கூடாது! ஸ்டேஷன் இது, சும்மா ஒண்ணுமில்லாததுக்கு எல்லாம் ஒப்பாரி வச்சுட்டு இருக்காதீங்க.”

அந்த வசை... அவரது அழுகையை அப்படியே வெட்டியது. மறுகணமே தேன்மொழி தன் புடவைத் தலைப்பால் வாயை மூடிக்கொண்டார். ஆனால், கண்களிலிருந்து வழியும் நீர் நின்றபாடில்லை.

அந்த நொடி முன்னே வந்து நின்ற யாத்ராவும், “கார்த்திக், என்ன இது...?” என்று கேட்டாள். அப்போதும் அவள் கண்களிலும் கண்ணீர் அணை உடைய, “அம்மாதான் விவரம் இல்லாம அழுறாங்கன்னா நீயுமா...?” என்றான் அவன்.

“இல்ல, நீ இப்படி...” அவளால் பேச முடியவில்லை.

மீண்டும் அதே கான்ஸ்டபிள், “இங்கேயெல்லாம் நிற்கக் கூடாது, அப்படி போங்க,” என்றான்.

“ஆனா இவர் என் ஹஸ்பெண்ட்,” என்று யாத்ரா பேச ஆரம்பிக்கும் போதே, “இன்ஸ்பெக்டர் வருவாரு, அவர்கிட்ட பேசிக்கோங்க.. இப்போ அந்த பக்கமா போங்க” என்று அவர்களை அங்கிருந்து நிர்தாட்சண்யமாக விரட்டினான்.

இருவரும் ஒதுங்கி நிற்க, தேன்மொழி மட்டும் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தார்.

“அழாதீங்க அத்தை, இன்ஸ்பெக்டர் வந்ததும் என்னன்னு கேட்போம்,” என்று அவள் சொன்ன சமாதானத்தை எல்லாம் அவர் காதில் வாங்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவர்கள் அங்கேயே காத்திருக்க நேரிட்டது. அவள் தேன்மொழியை உட்காரச் சொல்லியும் அவர் அமரவில்லை. அதற்கு மேல் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

இன்ஸ்பெக்டர் வந்ததுமே அவர்களை உள்ளே அழைத்து வர சொன்னார்.

 “கார்த்திக்கேயன் உங்களுக்கு என்ன வேணும்” என்று விசாரித்து அறிந்து கொண்ட பின், “அவர் மேல ப்ராபர்ட்டி ஃப்ராடு கேஸ் கொடுத்திருக்காங்க” என்று விவரத்தை சொல்ல,

“என்ன, பிராடு கேஸா...?” என்று யாத்ரா அதிர்ந்துவிட்டாள்.

 “என் பையன் அந்த மாதிரி எல்லாம் எதுவும் பண்ண மாட்டான்,” என்று தேன்மொழி அழ ஆரம்பித்துவிட்டார்.

“அத்தை ப்ளீஸ்,” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டவள், இன்ஸ்பெக்டரைப் பார்த்து, “இந்த கேஸ் யார் கொடுத்தது?” என்று கேட்டாள்.

“ஆக்டர் அமரேஷ்,” என்றதும் யாத்ராவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. இது அமரேஷின் பழிவாங்கும் திட்டம் என்பது அவளுக்குத் புரிந்துவிட,

“சார், அந்த ஆளே ஒரு கிரிமினல்... அவன் சொன்னான்னு என் ஹஸ்பெண்ட்டை நீங்க அரெஸ்ட் பண்ணி இருக்கீங்களா?” என்று பொங்கினாள்.

“ஆதாரம் இல்லாம ஒன்னும் அரெஸ்ட் பண்ணல” என்றவர் அவளிடம் ஸ்கை வியூ டாக்குமெண்ட்டுகளை எடுத்துக் காட்ட, அவள் வாயடைத்துப் போனாள்.

தேன்மொழிக்கு விஷயம் புரியவில்லை. ஆய்வாளர் மேலும் தொடர்ந்தார், “சட்டப்படி இது பெரிய அஃபென்ஸ்” என்று முடித்தார்.

“என் பையன் எந்தத் தப்பும் செஞ்சிருக்க மாட்டான், அவனை விட்டுடுங்க சார்,” என்று தேன்மொழி அந்த ஆய்வாளரிடம் கெஞ்ச, “என்னால எதுவும் பண்ண முடியாதும்மா... கேஸ் ஃபைல் பண்ணியாச்சு. நீங்க முதல்ல ஒரு லாயர்கிட்ட பேசுங்க” என்று அறிவுறுத்தினார்.

தேன்மொழி மீண்டும் கலங்கிப் போக, யாத்ரா அமைதியாக அவர் சொன்னதை எல்லாம் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

அவர் பேசி முடித்த பின், “கார்த்திக்கிட்ட பேசலாமா நாங்க?” என்றவள் தயக்கத்துடன் வினவினாள். அவர் அனுமதி கொடுக்க, இருவரும் கார்த்திக்கிடம் வந்தனர்.

“என்னடா என்னென்னமோ சொல்றாங்க...?” என்று தேன்மொழி மகனிடம் அழுகையுடன் கேட்க, “ஒன்னும் இல்லம்மா... நீங்க பதற்றப்படாதீங்க,” என்று அம்மாவை அணைத்துப் பிடித்துக் கொண்டவன் பார்வை யாத்ராவை நோக்கியது.

அவள் எதுவும் பேசாமல் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவைச் சமாதானம் செய்தவன், “ம்மா, நீங்க போய் உட்காருங்க. நான் லாயர் டீடைல்ஸ் எல்லாம் யாத்ராகிட்ட கொடுக்கிறேன்,” என்று சொல்ல, அவர் அங்கிருந்து நகர்ந்ததும் அவன் அவளை பார்த்து,

“எக்ஸாம் நல்லா எழுதுனியா?” என்று கேட்க, அவள் கடுப்பாகிவிட்டாள்.

“உன்னைத்தான் கேட்குறேன்”

“இப்போ அது முக்கியம் இல்ல கார்த்திக்... அந்த பிராபர்டடி பிராடு கேஸ்... அது அண்ணாவுக்கு நீ வாங்கி தந்த அந்த பிளாட்டா” என்று நேராக கேட்டாள்.

“ம்ம்” என்று அவன் தலையை குனிந்து கொண்டு ஆமோதிக்க, “கடவுளே” என்ற தலையில் கை வைத்துக் கொண்டாள்.

 “அந்த அமரேஷ் எதுடான்னு காத்திருக்கான்... நீ என்னடான்னா இப்படியொரு வேலையை பண்ணி வைச்சு இருக்க” என்று அவள் படபடக்க,

“நான் ஜாக்கிரதையாதான் இருந்தேன்” என்றான் அவன்.

“அப்போ இந்த கேஸ்...?”

“இதை நிரூபிக்க முடியாது...” என்றவன் உறுதியாக சொல்ல, அவள் குரல் உடைந்தது.

“அந்த அமரேஷ் சுலபத்துல விட்டுருவான் நினைக்குறியா?” என்றவள் கேள்வி அவனுக்கு நேற்றைய இரவை நினைவுப்படுத்தியது.

இப்போதும் அவனுக்கு தன்னை பற்றிய பயம் இல்லை. அவள்தான்...

நினைக்கும் போதே நெஞ்சம் அடித்துக் கொண்டது. அவளை தவிப்புடன் ஏறிட்டவன், “சாரி உன்னை நான் இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கக் கூடாது,” என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை... நீ முதல லாயர் டீடைல்ஸ் கொடு” என்று கேட்க,

“பெரிய அக்கா மாமாவுக்கு தெரிஞ்ச லாயர் ஒருத்தர் இருக்காரு... அவர்கிட்ட பேசுனா போதும்... எல்லாம் பார்த்துக்குவாரு” என்றவன் நிறுத்திவிட்டு பின் மீண்டும்

“அப்புறம் ட்ரிப் முடிஞ்சு வர வரைக்கும் இந்திரனுக்கு எதுவும் தெரிய வேண்டாம்” என்று வரிசையாக அவன் அடுக்கியதை எல்லாம் சோர்வுடன் கேட்டிருந்தவள்,

“அவ்வளவுதானா?” என்றாள்.

 “தயவு செஞ்சு அம்மாவுக்கும் இந்த ப்ளாட் விஷயம் மட்டும் தெரியாம பார்த்துக்கோ யாத்ரா” என்று இறங்கிய குரலில் சொல்ல, அவள் ஒரு மாதிரி சோர்வுடன் தலையசைத்தாள்.

அவள் முகத்தில் படர்ந்த வேதனையை உணர்ந்த போதும் அவளுக்கு எப்படி சமாதானம் சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை .

அதேநேரம் அந்த ஸ்டேஷன் சூழலை நோக்கியவன் மெல்லிய குரலில், “அம்மாவைக் கூட்டிட்டுப் கிளம்பு, அப்புறம் நீயும் அம்மாவும் கோர்ட்டுக்கு ஸ்டேஷனுக்கு எல்லாம் அலைய வேண்டாம்... எல்லாம் வக்கீல் பார்த்துக்குவாரு” என்றான்.

ஆனால் அவள் அசையாமல் அங்கேயே நிற்க,

“ஜாமீன் கிடைச்சுடும்... நான் வந்துடுவேன், நீ போ” என்றான்.

அப்போதும் அவள் நகரவில்லை. குற்றவுணர்வுடன் அவனை நோக்கிய அவளது விழி விளிம்பைத் தாண்டி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.  

“ஐம் சாரி கார்த்திக் இதெல்லாம் என்னாலதா...” என்று சொல்லும் போதே வார்த்தைகள் அவள் தொண்டையில் சிக்கி நின்றன.

 “என்ன நீ, பக்கம் பக்கமா எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு நீயே இப்படி பேசுற”

“முடியல கார்த்திக்” என்றவள் குரல் உடைந்த கணத்தில் யாரும் கவனிக்காத விதமாக அவன் விரல்கள் எட்டி அவள் விரல் நுனியை பிடித்துக் கொண்டன.

“இது எதுவும் உன் தப்பு இல்ல” என்ற அவன் வார்த்தை அவளை நெகிழ்த்த அவனது அந்த பிடி அவள் மனதை சற்று ஆசுவாசப்படுத்தியது.

 அவர்களுக்கு இடையில் சஞ்சரித்த அந்தப் பெரும் மௌனத்தில்... அவர்களது விரல்கள் மட்டும் பேசிக் கொண்டிருந்தன.

அந்த நேரம் ஒரு கான்ஸ்டபிளின் குரல், “ம்மா... டைம் ஆகுது.”

அந்த மௌனத்தை அது தகர்த்தெறிய அவள் விரலை விட்டவன், ‘போ’ என்று கண்ணசைத்தான்.

அவனை ஏக்கமாக திரும்பி பார்த்தபடியே அவள் செல்ல, கார்த்திக் விழிகளும் அவளையே பார்த்தபடி இருந்தன.  

இந்தச் சிறு பிரிவைக் கூடக் கடக்க முடியாமல் தவிக்கும் அவர்களுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை, இந்த நாள்தான் அவர்கள் உறவின் மிக நீண்ட, வலியான பிரிவிற்குத் தொடக்கப் புள்ளியாக அமையப் போகிறது என்று!

 

You cannot copy content