You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 39

Quote

39

யாத்ராவின் விரலில் இரத்தம் கசிவதைக் கண்ட அடுத்த கணமே, காபிக் கப்பை மேடை மீது வைத்த கார்த்திக், "யாத்ரா!" என்ற பதற்றக் குரலோடு அவளருகே பாய்ந்து வந்தான். அவளது கையைத் தன் கரங்களால் பற்றி இழுத்தான்.

"அறிவு இருக்கா உனக்கு? எங்கே பராக்கு பார்த்துட்டு கத்தியை வச்சுக் கையை வெட்டிக்கிற?" என்று அதட்டியபடியே, எவ்வித யோசனையுமின்றி அவளது இரத்தக் கசிவுள்ள அந்த விரலைத் தன் உதடுகளுக்குள் வைத்து மென்மையாக உறிஞ்சினான்.

இரத்தத்தைத் தன் உதடுகளால் அவன் உள்வாங்கியதில், விரலின் வலியைத் தாண்டியும் அவளது உணர்வுகளை தூண்ட, "விடு கார்த்திக்... நான் பார்த்துக்கிறேன்..." என்று தன் கையை அவனிடமிருந்து உருவ முயன்றாள். ஆனால், அவன் விடுவதாக இல்லை.

“கார்த்திக்...” என்றவள் சற்றே அழுத்தமாக அழைக்கவும்தான் அவன் தன் செயல் உணர்ந்து, மெதுவாக அவளது விரலை வெளியே எடுத்தான்.

இரத்தக் கசிவு நின்றிருக்க, அவள் உடனடியாகத் தண்ணீர்க் குழாயைத் திறந்து ஓடும் குளிர்ந்த நீரில் கையை வைத்தாள். அவள் அதன் பின் முதலுதவிப் பெட்டியை எடுத்து கட்டுப்போட எத்தனிக்க, "இப்படி கொடு..." என்று அதனை அவளிடமிருந்து பிடுங்கிக் கொண்டான் கார்த்திக்.

“நான் போட்டுக்கிறேன் கார்த்திக்,” என்றவள் சொல்வதை அவன் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. அவளது காயம்பட்ட விரலைத் துடைத்து, அதில் மென்மையாக மருந்தைத் தடவிக் கட்டினான். அவன் மருந்தைத் தடவும் ஒவ்வொரு முறையும் அவளது விரலில் லேசாக ஊதினான். அதன் பின் மருந்து தடவி முடித்து, ஒரு சிறிய துணியால் அவளது விரலைச் சுற்றிக் கட்டும்போது அவனது மனம் அப்படியே நெகிழ்ந்து போனது.

அவன் நிமிர்ந்து, “வலிக்குதா?” என்று கேட்டதற்குப் பதிலேதும் சொல்லாமல், கலங்கிய விழிகளுடன் அவனையே வெறித்துப் பார்த்தாள் யாத்ரா. அவனும் அவளது காயம்பட்ட விரல்களைத் தன் கட்டை விரலால் மெதுவாக வருடித் கொடுத்தபடி இருக்க, அவளையே பார்த்தான்.

இரு விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்தன. பட்டென்று அவள் உள்ளுணர்வு உசுப்பவும் அவசரமாக தன் கையை அவன் பிடியிலிருந்து உருவிக் கொண்டாள்.

“தேங்க்ஸ் கட்டுப்போட்டதுக்கு,” என்று அவனது முகம் பார்க்காமலே சொல்லிவிட்டு, மீண்டும் அந்த எலுமிச்சம்பழத்தை எடுக்கப் போக, “கத்தியைக் கொடு,” என்று அதனை அவனே நறுக்கி, கிரீன் டீயில் பிழிந்து அவளிடம் நீட்டினான்.

“தேங்க்ஸ்,” என்று வாங்கிக் கொண்டவள், “ஹாலில் போய் குடிக்கலாம்,” என்று சொல்ல, இருவரும் வரவேற்பறையில் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்தனர்.

யாத்ரா தேநீரைப் பருகிக் கொண்டிருக்க, கார்த்திக் தான் குடித்து முடித்த காபிக் கப்பை கீழே வைத்தான். அவளது முகத்தையே வெறித்துக் கொண்டிருந்த அவனது கண்கள் மௌனத்தைக் கலைத்தன. “டிவோர்ஸ் கண்டிஷன் பத்திப் பேசுவோமா?” என்று நேரடியாகவே ஆரம்பித்தான்.

“என்ன கண்டிஷன்?” அவளது புருவங்கள் நெறிய, “சொல்றேன்.... ஆனா அன்னைக்கு வெறும் கோபத்துல டிவோர்ஸ் வேணும்னு கேட்டியா, இல்ல சீரியஸா கேட்டியா?” என்றான்.

அவள் தன் மனதிலிருந்த தயக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், “சீரியஸாத்தான் கேட்டேன்,” என, கார்த்திக் “அப்போ கண்டிஷன் டிஸ்கஸ் பண்ணுவோம்,” என்றான்.

“என்ன கண்டிஷன்... நீங்களும் நானும் சைன் போட்டா டிவோர்ஸ் கிடைக்கப் போகுது,” என்றவள் சாதாரணமாகச் சொல்ல, “நான் சைன் போடுறதுக்குத்தான் இந்த கண்டிஷனே,” என்று அவன் பீடிகை போட்டுப் பேச, அவளது முகம் யோசனையாக மாறியது.

அவன் தொடர்ந்து, “கல்யாணம் ஆகி நம்ம ஒரு பத்து நாள் கூட முழுசாச் சேர்ந்து வாழல யாத்ரா...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஆனா...” என்று அவள் இடையில் ஏதோ பேச வர, “நான் முழுசாப் பேசி முடிச்சுடுறேன்,” என்றதும் அவள் தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

அவன் மீண்டும் ஆரம்பித்தான். “என்ன நேரமோ... கேஸ், கோர்ட், ஜெயில்னு நம்ம கல்யாண வாழ்க்கை நம்ம நினைச்சபடி அமையல... அதுக்கு அப்புறம் என்னை நீ பிரியணும்னு சொன்ன உன் முடிவை மதிச்சு, நானும் இவ்வளவு நாள் பிரிஞ்சுதான் இருந்தேன். ஒருவேளை அன்னைக்கு நீ கார்ல சொன்ன மாதிரி நம்ம டிவோர்ஸ் பண்ணிட்டா இந்தப்பிரிவு நிரந்தரமாகிடும்... இதுதான் நம்ம தலைவிதின்னா யாராலையும் மாத்த முடியாது,” என்றவன் சற்றே நிறுத்தி அவளைப் பார்க்கவும், “பைனலா டிவோர்ஸ் கொடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க,” என்றாள் யாத்ரா.

“ஆமா, முடிவு செஞ்சிட்டேன்... ஆனா அதுக்கு முதல்ல நான் சொன்னதை நீ செய்யணும்,” என அவள் குழப்பத்துடன், “என்னது?” என்றாள்.

“உன் கூட வாழவே முடியலங்குற ஏக்கத்தோடவே இந்த உறவை முறிச்சுக்க நான் விரும்பல,” என்றான் கார்த்திக்.

“நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்கு புரியல...”

“அடுத்த மூணு நாள் நீயும் நானும் புருஷன் பொண்டாட்டியா ஒரே வீட்டுல வாழணும்,” என்றதும் அவள் அதிர்வுடன், “வாட்!” என்றாள்.

“டென்ஷன் ஆகாத... உடம்பால இல்ல, மனசாலதான் கேட்குறேன்... கணவன் மனைவியா மூணு நாள்,” என்று அவன் கேட்ட மறுகணமே, “அதெல்லாம் முடியாது,” என்று உடனடியாக மறுத்தாள் யாத்ரா.

“ஏன் முடியாது?”

“டிவோர்ஸ் முடிவான பிறகு... இதெல்லாம் எதுக்கு... இது இன்னும் புதுசா குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.”

“நீ உன் முடிவுல அப்போ உறுதியா இல்லையா?”

“நான் உறுதியாத்தான் இருக்கேன்.”

“அப்போ இந்த மூணு நாள்ல உன் மனசு மாறிடுமோன்னு பயப்படுறியா?”

“அப்படி ஒண்ணும் இல்ல.”

“அப்புறம் என்ன... மூணு நாள் கழிச்சு மொத்தமா முடிச்சுக்கலாம்னு சொல்றேன்,” என்றவன் சொல்ல, அவளுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அவள் தயக்கத்துடன் அமர்ந்திருக்க, “யாத்ரா...” என்று அவனது குரல் மெதுவாக அழைத்தது. அவள் நிமிர்ந்து அவனை நேராகப் பார்க்கவும், “நம்ம உறவுக்கு ஒரு நியாயமான கிளோஸர் கேட்குறேன்... ப்ளீஸ் ஒத்துக்கோ,” என, அவள் தன் கைகளை ஒன்றோடொன்று பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அவள் மௌனத்தை ஆழந்து பார்த்தவன்,

“சரி, நாளைக்குக் காலையில வர்றேன்... உன் முடிவைச் சொல்லு,” என்று விட்டு எழுந்து கொள்ள, அவளும் எழுந்து நின்றுகொண்டு, “நாளைக்கேன்னா எப்படி கார்த்திக்?” என்றாள் தயக்கத்துடன்.

“என்னை பிரியணும்னு சொல்லும்போது என்கிட்ட நீ குறைந்தபட்சம் கருத்துக்கூட கேட்கல யாத்ரா... உன் முடிவை என் மேல திணிச்சுட்டு, நீ பாட்டுக்குக் காணாம போயிட்ட,” என்று அவன் கேட்ட கேள்வியில், அவள் குற்ற உணர்ச்சியோடு தலை குனிந்தாள்.

“எனக்கு உன் கூட இந்த மூணு நாள் வேணும்.”

அவள் தவிப்புடன் அவனை ஏறிட்டு, “மூணு நாள்ல என்ன பண்ணிட முடியும் கார்த்திக்?” என்றாள். அவன் மிதமான நகைப்புடன் அவளை பார்த்து,

“உன் கையைப் பிடிச்சுக்கிட்டு நிறைய ஊர் சுத்தணும், படம் பார்க்கணும்... ஒண்ணா சமைக்கணும், சாப்பிடணும்... டின்னருக்கு வெளியே போகணும்... மழையில நனைஞ்சுக்கிட்டே வீட்டுக்கு வரணும்... அப்புறம் நீ என் தலையைத் துவட்டி விடணும்... டயர்ட்ல ஒருத்தர் மேல ஒருத்தர் சாய்ஞ்சு படுத்து தூங்கிடணும்... காலையில எழுந்திருக்கும் போது உன் முகத்தைப் பார்த்துக்கிட்டே எழுந்திருக்கணும்... ஒண்ணா காபி குடிக்கணும்... இப்படி நிறைய இருக்கு,” என்று தன் ஆசைகளையும் ஏக்கங்களையும் அடுக்கியதை கேட்ட யாத்ராவின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழுக்கி வந்து விழுந்தது.

ஒரு சாதாரணக் கணவன் மனைவியின் அன்றாடப் பக்கங்களில் இருக்கும் இந்த மிக எளிய சந்தோஷங்கள் கூடத் தங்களின் மூன்று வருடத் திருமண வாழ்க்கையில் வாய்க்காமல் போய்விட்டதே என்ற நிதர்சனம் அவளைத் துளைத்தது.

“உன்னைக் கஷ்டப்படுத்த நான் இப்படியொரு விஷயத்தைக் கேட்கல யாத்ரா... என் மனசை ஆறுதல் படுத்திக்கக் கேட்குறேன்... அப்புறம் நான் சொன்ன மாதிரி, உன் அனுமதி இல்லாமல் உன்னை நான் தொட மாட்டேன்,” என்று அவன் உறுதி கொடுத்துவிட்டு வெளியேற,

அவனை அனுப்பிவிட்டுத் தாழ்ப்பாள் போட்டு கதவை மூடியவளுக்கு, இன்று அவனுடைய பேச்சு ரொம்ப மென்மையாக இருந்ததை உணர முடிந்தது. முக்கியமாக, அவனிடம் எப்போதும் இருக்கும் அதிகாரத் தொனியும் இல்லை.

அவள் அப்படியே படுக்கையில் வந்து சாய்ந்தாள். அவன் சொன்னதை பற்றி யோசித்துப் பார்த்தாள்.

 ‘பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்தவள் நான். குறைந்தது அவனிடம் ஒரு வார்த்தை கூடக் கலந்தாலோசிக்காமல், என் முடிவை அவன் மேல் திணித்துவிட்டுப் பிரிந்து வந்தவளும் நான்தான். அப்படி இருக்க, அவனது மனக் காயங்களுக்கு மருந்தாக, இந்த உறவை ஒரு சுமுகமான முடிவுக்குக் கொண்டு வர அவன் கேட்கும் இந்த மூன்று நாள் ஆயுள் மிகச் சிறிய ஒன்றுதான்’ என்று அவளது உள்ளம் அவனுக்கு வக்காலத்து வாங்கியது.

அதுவும் அவன் தன் ஈகோவைத் தூக்கி எறிந்துவிட்டு ஆரவ்விற்காக நிகிதாவிடம் பேசிய அந்தப் பெருந்தன்மையே அவனது காதலின் ஆழத்திற்குச் சான்றாக அவளுக்குத் தெரிந்தது. அவனது தவிப்பிற்குத் தார்மீக ரீதியாகத் தான் கடமைப்பட்டிருப்பதாக அவளது அகம் உருகியது.

ஆனால், ஒன்று மட்டும் அவளுக்கு புரியவில்லை... மூன்று வருடப் பிரிவையும் ஏக்கத்தையும், வெறும் மூன்றே நாட்களில் நிறைவு செய்துவிட முடியுமா?

You cannot copy content