You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kadhalum Kabadamum - Episode 6

Quote

6

சென்னையின் மையப் பகுதியில் கம்பீரமாக நின்றிருந்தது அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல். அதன் உயரமான கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பால், சென்னை மாநகரம் ஒரு பரபரப்பான எறும்புக் கூட்டத்தைப் போல ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால், அந்த ‘ஸ்யூட்’ அறைக்குள் நிலவிய சூழ்நிலை முற்றிலும் வேறானது.

அறையின் ஒருபுறம் ஒரு புதிய ரியல் எஸ்டேட் பிராண்டின் நிர்வாகிகள். மறுபுறம், கார்த்திக். அவனிடம் எந்த அவசரமும் இல்லை. சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.

நிர்வாகிகள் மெதுவாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். “சார்... இந்த ப்ராஜெக்ட்டை நாங்க அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும், அதுக்காகத் தான் அமரேஷ் சாரை அப்ரோச் பண்ணியிருக்கோம். லக்ஷரி செக்மென்ட்ல ஒரு பிராண்ட் எஸ்டாப்ளிஷ் ஆகணும்னா, அமரேஷ் சார் உள்ள வந்தா அதுக்கு இன்ஸ்டன்ட் ரீச் கிடைக்கும்...”

கார்த்திக் எதுவும் பேசவில்லை. ஒரு ஸ்கேனரைப் போல அவன் பார்வை அவர்களை அளவெடுத்தது. ஒரு சில நொடிகள் மௌனம் நீடித்தது. பிறகு, மெதுவாக முன்னோக்கிச் சாய்ந்தான் கார்த்திக்.

“புது பிராண்டை நம்பி எல்லாம் சார் அவ்வளவு சீக்கிரம் விளம்பரம் பண்ண மாட்டாரு,” அவன் குரல் தீர்க்கமாக ஒலித்தது.

நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கவலையுடன் பார்த்துக் கொண்டனர். அதிலொருவன், “நீங்க நினைச்சா முடியும்” எனச் சொல்ல, கார்த்திக்கின் முகம் யோசனையாக மாறியது.

“சார்... பட்ஜெட், ரெம்யூனரேஷன் எல்லாமே பிளெக்சிபிள் தான்,” என்று மேலும் சொல்ல, “வெறும் நம்பர்ஸ் மட்டும் பத்தாது,” என்று அவன் குரல் இறுக்கமாக ஒலித்தது.

“சார்... உங்க எதிர்பார்ப்பு என்ன?” என்று ஒருவன் மிகவும் கவனமாகக் கேட்டான்.

அந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவன் போல, கார்த்திக் மீண்டும் ஒரு கணம் மௌனம் காத்தான். பிறகு, எதார்த்தமான தொனியில் ஆனால் அழுத்தமாகச் சொன்னான்: “உங்களோட ப்ராஜெக்ட்ல... சில பிரீமியம் யூனிட்ஸ் இருக்கும் இல்லையா?”

அவர்கள் உடனே தலையசைத்தனர். “ஆமா சார்... டாப் ப்ளோர் வில்லாக்கள், ஸ்கை அபார்ட்மெண்ட்ஸ் இருக்கு.”

“ம்ம்...” மீண்டும் ஒரு சிறிய இடைவெளி. பிறகு அவன் சொன்னான், “அதுல ஒரு ஸ்பேஸ்...”

அந்த நிர்வாகிகளின் முகத்தில் அதிர்ச்சி மின்னலாய் வந்து மறைந்தது. அடுத்த நொடியே அந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டனர். அறையில் நிசப்தம் நிலவியது. அவன் ‘டிமாண்ட்’ செய்யவில்லை. ஆனால், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த பேரம் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“நிச்சயமாக சார்... அதை நாம பேசி முடிவெடுக்கலாம்,” என்றான் ஒருவன்.

கார்த்திக் உடனே, “பேப்பர் ஒர்க்... எல்லாம் முடிஞ்சாதான் டேட்ஸ் கிடைக்கும்,” என்று சுருக்கமாக அந்த உரையாடலை அங்கேயே முடித்து வைத்தான்.

சிறிது நேரம் கழித்து...

அவன் அமரேஷை வந்து பங்களாவில் சந்தித்து விவரங்களைக் கூறினான்.

“புது பிராண்டா?” என்று அவன் தயக்கமாக பார்த்தான்.

“நான் கம்ப்ளீட்டா விசாரிச்சுட்டேன் சார், இட்ஸ் சேஃப்.”

“உனக்கு ஓகேனா எனக்கும் ஓகேதான்,” கார்த்திக் தலையசைத்தான்.

“அப்போ பண்ணிடலாம்,” என்று சொல்லி அமரேஷ் சிரித்தான். அந்தச் சிரிப்பில் கார்த்திக் மீதான ஆழமான நம்பிக்கை. மனதினோரத்தில் எட்டிப்பார்த்த குற்றவுணர்வை கார்த்திக் அவசரமாக உள்ளே தள்ளிக் கொண்டான். அமரேஷுக்குத் தெரியாமல் அவன் செய்யும் முதல் பேரம் இது.

தங்கை சௌந்தர்யாவின் கல்யாணத்தை எப்படி முடிப்பது என்று அவன் குழம்பிக் கொண்டிருந்த நிலையில் அதுவாகத் தேடி வந்த வாய்ப்பு இது. உபயோகித்துக் கொண்டான்.

அம்மாவை வேறு எப்படியும் அவனால் சம்மதிக்க வைக்கவும் முடியாது. அடுத்த வாரமே இந்திரனின் பெயரில் அந்த குடியிருப்பை வாங்குவதற்கான ஒப்பந்தத்தையும் தயார் செய்துவிட்டு அவனையும் அழைத்து விவரங்களைக் கூறினான்.

“இல்ல, நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன். எனக்கு வரதட்சணை வாங்குறதுலயே விருப்பம் இல்ல.. இதுல இவ்வளவு காஸ்ட்லி அபார்ட்மெண்ட்... முடியவே முடியாது,” என்று உறுதியுடன் மறுத்தான் இந்திரன்.

“சொந்த வீடு இல்லனா எங்க அம்மா உங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க.”

“அதுக்காக நீங்க எங்களுக்கு வீடு வாங்கித் தரணுமா? என்னை என்ன அந்தளவு வக்கிலாத்தவனு நினைச்சீங்களா?”

“நான் அப்படி நினைச்சிருந்தா உங்களுக்கு என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதைப் பத்தி நான் யோசிச்சுக் கூட இருக்க மாட்டேன்.”

“கொஞ்சம் டைம் கொடுங்க கார்த்திக், நானே ஹோம் லோன் போட்டுப் புது வீடு வாங்கிடுறேன்.”

“இந்த வீட்டையே நீங்க ஹோம் லோன் போட்டு வாங்குனதா நினைச்சுக்கோங்க.”

“ஆனா நீங்க காட்டுற இந்த ப்ளாட் என் தகுதிக்கு ரொம்ப அதிகம்.”

“உங்க தகுதியை நீங்களே ஏன் குறைச்சு எடை போட்டுக்குறீங்க?”

“இல்ல, இதுக்கு என் மனசாட்சி இடம் கொடுக்கல... நான் ஒத்துக்க மாட்டேன்.”

“அப்படினா என் தங்கச்சியை மறந்துடுங்க.”

“கார்த்திக்!”

“இந்திரன், எனக்கு உங்க குடும்பத்தை ரொம்பப் பிடிச்சிருக்கு... என் தங்கச்சி உங்க வீட்டுல வாழணும்னு நான் ஆசைப்படுறேன்... அப்புறம் நீங்க நினைக்குற மாதிரி இது வரதட்சணை கிடையாது... உங்க கல்யாணம் நல்லபடியா நடக்க ஒரு சின்ன ஏற்பாடு.”

அவனை யோசனையாகப் பார்த்த இந்திரன், “எங்க அம்மா அப்பா இதுக்குக் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க,” என்றான்.

“உண்மையைச் சொல்லாதீங்க. நீங்களே ஹோம் லோன் போட்டு வாங்குன மாதிரி சொல்லுங்க.”

“நம்ப மாட்டாங்க கார்த்திக்.”

“உங்க காதல் உங்களுக்கு வேணும்னா ஏதாவது சொல்லி நம்ப வைங்க,” என்று கார்த்திக் முடிவாகச் சொல்ல, இந்திரன் முகத்தில் அப்போதும் தெளிவு இல்லை.

ஆனால் கார்த்திக் அதை பற்றி எல்லாம் யோசிக்கவில்லை. அடுத்த நாளே தங்களின் குடும்ப ஜோசியர் சிவாவைச் சந்தித்துப் பேசினான்.

“எனக்காக இதைப்பண்ணுங்க ஜோசியரே.”

“ஆனா கார்த்திக், அம்மா உனக்குத்தான் பொண்ணு பார்க்கச் சொல்லி இருந்தாங்க,” என்று சொன்ன நொடியே அவன் மனம் யாத்ராவிடம் சென்று நின்றது.

அன்று ஏற்காட்டில் காலை குளித்துக் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் அவள் தேநீருடன் அவன் அறைக்கு வந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததுமே அந்த விடியல் இன்னும் அழகாகிவிட்டதாகத் தோன்றியது.

“நான் நேத்து வைச்ச பெட்ல ஜெயிச்சுட்டேன், சோ என் அண்ணனுக்கு உங்க தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்,” என்று அவள் திமிராகச் சொல்ல,

 அவன் கொஞ்சமும் யோசிக்காமல், “பெட்ல நீ ஜெயிச்சதுக்கு நான்தான் காரணம்,” என்றான் கம்பீரமாக.

“என்ன?”

“நீ என்னை லவ் பண்றன்னு சொன்னதாலதான் உங்க அம்மா அப்பா உடனே ஒத்துக்கிட்டாங்க.”

அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

“என்னை மாதிரி அழகான, அறிவான மாப்பிள்ளையா வர்றதை எந்த அம்மா அப்பாதான் வேண்டாம்னு சொல்லுவாங்க?” என்றவன் 'அழகு அறிவு' என்பதை அழுத்திச் சொல்ல, அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தன.

“ஓ நீங்க அப்படி வரீங்க!”

“ஆமா பின்ன, என் இடத்துல வேற எவனாச்சும் வத்தலும் தொத்தலுமா ஒருத்தன் இருந்தான்னு வையு... காதலும் வேணாம் ஒன்னும் வேணாம்னு உன் காது மேலயே போட்டு இருப்பாங்க.”

“இப்போ கடைசியா என்ன சொல்ல வர்றீங்க... உங்க தங்கச்சிய என் அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பீங்களா மாட்டீங்களா?”

“கண்டிப்பா பண்ணிக் கொடுக்கிறேன்... ஆனா ஒரு கண்டிஷன்.”

“என்ன?”

“நேத்து நீ ஒரு பொய் சொன்னியே, அதை உண்மையாக்கிடு,” என்றதும் அவள் யோசனையுடன், “என்ன பொய்...” என்று கேட்டுவிட்டு, புரிந்ததும் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“என்ன, உண்மையாக்கிடலாமா?” என்றவன் கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டாள். காரில் கிளம்பும் போது இந்திரன் மட்டுமே வந்தான்.

“உங்க சிஸ்டர் வரலையா?” என்றவன் மெதுவாகக் கேட்க, “இல்ல, அவ இரண்டு நாள் கழிச்சு வர்றேன்னு சொல்லிட்டா,” என்றான் இந்திரன்.

தன்னைப் பார்க்க விருப்பமில்லாமல்தான் அவள் வரவில்லை என்று அவனுக்குத் தெரியும். ஆனால் இந்தத் திருமணம் முடிவாகிவிட்டால் இது போல அவள் தன்னிடம் ஓடி ஒளிய முடியாது என்று நினைத்துக் கொண்டே ரியர் வியூ மிரரை நோக்கினான்.

“இது எதுவும் பிரச்சனையாகிடாதே” என்ற ஜோசியரின் கேள்வியில் அவள் நினைவிலிருந்து மீண்டு வந்தவன்,

“எதுவும் வராது நான் பார்த்துக்கிறேன்,” என்று அவர் கையில் பணத்தைக் கொடுத்து வீட்டில் இறக்கிவிட்டான்.

கார் சென்னையின் இருள் சூழ்ந்த சாலைகளில் மௌனமாகத் தவழ்ந்தது. யாத்ராவைப் பற்றிய அவன் நினைவுகளுடன்...

எல்லாம் தங்கையின் காதலுக்காக என்று சொல்லிக் கொண்டாலும், அவன் மனம் ஒரு ஓரத்தில் இதையெல்லாம் அவனுக்காகவும்தான் செய்தது.

You cannot copy content