You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 11

Quote

11

படுக்கை அறையின் மேஜையிலிருந்த டிஜிட்டல் கடிகாரம் 1: 03 என்று காட்டியது.

அதனைப் பார்த்த ரெஜினா கண்களை மூடிக் கொண்டு உறங்க முயற்சித்த போதும் அவள் மூளை பாட்டுக்கு ஏதேதோ யோசித்தது. நிக்கைப் பற்றி யோசிக்கக் கூடாது என்று நினைத்தாலும் அவள் நினைவில் முதலில் வந்து குதித்தது அவன்தான்.

முதல் முறையாக நிக் அவளை முத்தமிட நெருங்கிய போது திடமாக அவனைத் தடுக்க முடிந்த தன்னால் ஏன் ஆனந்தனைத் தடுக்க முடியவில்லை என்று யோசித்தாள்.

மூன்று வருடங்களுக்கு மேலாக அவர்களின் நிறுவனத்தின் ஊழியனாக ஆனந்தனை அவளுக்குத் தெரிந்திருந்தாலும் திருமணப் பேச்சிற்குப் பிறகுதான் அவனுடன் அவள் பேசியது. அதுவும் அதிகபட்சம் இரண்டு முறைதான் பேசி இருப்பாள்.

ஆனால் உடனடியாக திருமணம் முடித்தவுடனே அவனுடன் அவள் உடலுறவு கொண்டுவிட்டது அவளுக்கே விசித்திரமாக இருந்தது. ஒரு வேளை தன்னுடைய உடலின் பலவீனங்கள் அதற்கு காரணமாக இருக்கலாம்.

அதேநேரம் ஆனந்தன் அவளின் சம்மதத்தைக் கேட்டுத்தான் கூடினானா என்றால் அதுவும் இல்லை. காலம் காலமாகப் போற்றிப் பாதுக்காக்கப்படும் புனிதமான திருமணச் சடங்கு, தாலி கட்டிய மனைவியைப் பலாத்காரம் செய்யும் முழு உரிமையைக் கொடுக்கும் போது அவன் ஏன் தன்னிடம் சம்மதம் கேட்கப் போகிறான்.

படுத்திருந்தபடியே கழுத்திற்குக் கீழாகக் தொங்கிக் கொண்டிருக்கும் மஞ்சள் தாலியைக் கையிலெடுத்துப் பார்த்தாள். அவள் உடல் மீது உரிமை கொண்டாட ஆனந்தனுக்குக் கொடுக்கப்படும் லைசன்ஸ் இது.

இங்கே மதங்களுக்கும் சாதிகளுக்கும் ஏற்றார் போல தாலியின் வடிவங்கள் மாறினாலும் அதன் மூலமாக பெண்களின் மீதாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அடக்குமுறைகள் எங்கேயும் மாறுவதில்லை.

அந்தத் தாலியைக் கடுப்புடன் கழற்றி எடுத்து அருகே இருந்த மேஜை மீது எட்டி வைத்துவிட்டாள். பிறகு ஆனந்தன் கையை மெல்ல அவன் உறக்கம் கலையாமல் விலக்கிவிட்டு அவள் உறங்க முயற்சித்தாள்.

அரை மணிநேரத்திற்கு பிறகு அவளின் முயற்சி பலித்தது. உறங்கிப் போனவள் எத்தனை மணிநேரம் உறங்கினால் என்று அவளுக்கே தெரியவில்லை. கண்களைத் திறந்து போது சுளீரென்று வெயில் முகத்தில் அடித்தது. திரைசீலைகள் விலக்கப்பட்டிருந்தன.

படுக்கையில் ஆனந்தன் இல்லாததைப் பார்த்தாள். அறை கதவும் மூடியிருக்க மெதுவாக எழுந்து தன் சக்கர நாற்காலியை இழுத்துப் பிடித்து அதன் மீது அமர்ந்தாள்.

பின் தன் காலை கடன்களை முடித்து முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வர, “பரவாயில்ல மேடம் இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க” என்று எள்ளியபடி சோஃபாவில் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தான். 

“டீ குடிக்கிறீயா... எனக்கு?” என்று முகத்தைத் துண்டால் துடைத்துக் கொண்டே அவள் கேட்க,

“கிட்ட வந்து ஒரு கிஸ் கொடு... போட்டு எடுத்துட்டு வரேன்” என்றான்.

“அப்படி ஒன்னும் நீ போட்டுத் தர வேண்டாம்” என்றவள் வெளியே செல்லப் போக,

“டார்லிங்... ஹியர் இஸ் யுவர் க்ரீன் டீ” என்றவன் கப்பை உயர்த்திக் காட்டினான்.

“போட்டு வைச்சுட்டீயா?” என்று கேட்டுக் கொண்டே அவனை நோக்கி சக்கர நாற்காலியை நகர்த்தி வர,

“ஃபர்ஸ்ட் கிஸ் அப்புறம் டீ” என்று தன் கன்னத்தைத் திருப்பிக் காட்டினான்.

“முடியாது” என்றவள் தீர்க்கமாக மறுக்க, 

“முடியாதா... சரி அப்போ நான் கொடுக்கிறேன்” என்று எட்டி அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க,

“காலையிலேயே படுத்தாதே ஆனந்த்... டீயைக் கொடு” என்றபடி கன்னத்தைத் துடைத்துக் கொண்டவள் அவன் தந்த தேநீர் கோப்பையை வாங்கிக் கொண்டாள்.

அவள் அதனைக் குடித்துக் கொண்டிருக்கும் போது, “தாலியை எதுக்குக் கழற்றி வைச்ச?” என்று கேட்ட நொடி அவளுக்குப் பொறையேறியது. திரும்பி அவள் மேஜயைப் பார்க்க அது அவன் கையில் இருந்தது.

ஏதோ ஒரு குழப்பத்தில் அதனைக் கழற்றி வைத்துவிட்டாள். ஆனால் இரவு யோசித்ததை எல்லாம் விடிந்த பிறகு எண்ணிப் பார்த்தால் எல்லாமே அபத்தமாகத் தெரிந்தது.

தாலியைப் பற்றிக் கேட்ட ஆனந்தின் பார்வை கூர்மையாக மாற அவள் சட்டென்று அலட்சியத்துடன் தேநீரைப் பருகியபடி, “குத்துச்சு கழற்றி வைச்சுட்டேன்” என்றாள்.

“நீ கழற்றி வைச்சுக்கோ இல்ல பீரோல பூட்டிக் கூட வைச்சுக்கோ... ஆனா எங்க அம்மா வந்தா மறக்காம போட்டுக்கோ... இல்லனா அதுக்கு ஒரு லெக்ச்சர் அடிப்பாங்க... அதுவும் உனக்கு இல்ல... எனக்கு” என, 

அவள் மெல்லிய புன்னகையுடன், “அம்மா வரும் போது போட்டுக்கிறேன்... ஆனா உனக்கு ஒன்னும் இதுல பிரச்சனை இல்லைதானே” என்று கேட்க,

“நோ நாட் அட் ஆல்” என்றவன் எழுந்து சென்று,

“சமையல்காரங்ககிட்ட ஏதாவது டிஃபன் ரெடி பண்ண சொல்லுவோமா.. இல்ல நம்மளே சிம்பிளா ஏதாவது பண்ணிக்கலாமா?” என்று கேட்டான்.

“குக்கைச் செய்ய சொல்லிடுங்க... நான் மாடிக்கு போய் சன்ரைஸ் பார்க்கப் போறேன்” என்றாள்.

“சன்ரைஸாகி ரொம்ப நேரமாச்சுங்க மேடம்?” என்றவன் கிண்டலாகச் சொன்ன போதும், 

“பரவாயில்ல” என்று அவள் மின்தூக்கியில் ஏறிவிட்டு, 

“நீயும் மேல வர்றீயா?” என்று அவனிடம் கேட்டாள்.

“நம்ம அதை மாடிக்குப் போய் பார்க்கணுமா என்ன…? நேரா போய் பார்ப்போம்” என, 

“அதெல்லாம் வேண்டாம்... மேல இருந்தே வியூ நல்லா இருக்கும்” என்றாள்.

“கம்மான் ரெஜி” என்றவன் அவள் அனுமதி கூட கேட்காமல் கார் சாவியை எடுத்து கொண்டு வந்தான்.

“வேண்டாம் ஆனந்த்... மேலிருந்து பார்க்கவே நல்லா இருக்கும்” என்று அவள் சொல்லச் சொல்லச் கேட்காமல் அவளைப் பக்கத்திலிருந்த கடலுக்கு காரில் அழைத்துச் சென்றான்.

பக்கத்துத் தெரு சந்தில் நுழைந்ததும் கடல் பாதை வந்துவிட அங்கே காரை நிறுத்தி அவளை தன் கரங்களில் தூக்கிக் கொண்டான்.

“நீ சொல்லச் சொல்லக் கேட்க மாட்டியா?” என,

“கேட்க மாட்டேன்” என்றவன் அவளை கடற்கரையில் மணலில் அமர வைத்தான்.

எட்டித் தொடும் தூரத்தில் அவளின் மெல்லிய கால் பாதங்களை அலை தொட்டுச் சென்ற போது அவள் கால்கள் உணர்வு பெற்றது போன்றதொரு பிரமை.

இது போன்ற மணல் தரைகளில் அமர்ந்ததும் அலைகளின் சத்தத்தை மிக அருகில் கேட்டதும் எல்லாம் அவள் பூர்வ ஜென்ம ஞாபகங்களைப் போல நினைவில் ஏதோ ஒரு மூலைக்குள் முடங்கி இருந்தன.

ஆனால் அதெல்லாம் மீண்டும் உண்மையாகும் என்று அவள் யோசிக்கவில்லை. இயற்கை அவள் மனதிற்கு ஏதோ ஒரு வகையில் அமைதியையும் தெளிவையும் கொடுத்தது.

ஆனந்தனின் கழுத்தைக் கட்டிக் கன்னத்தில் முத்தம் பதித்து, “தேங்க் யூ” என,

“பார்றா கேட்காமலே கிடைக்குது” என்று விட்டு அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “ஸ்மைல்” என்று அவன் செல்பேசியில் இருவருமாக நெருக்கமாக இணைந்திருப்பது போல பல செல்ஃபிகளை எடுத்தான்.

இருவரும் அன்றைய காலை வேளையை சந்தோஷமாக கழித்துவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்ப, அவர்களுக்கான உணவு சூடாகத் தயாராகி மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது.

“வாவ்... எனக்குப் பசிக்குது சாப்பிடலாம்” என்று சொன்ன ஆனந்தனிடம்,

“உஹும்... எனக்குக் குளிக்கணும்... ஒரே ஸ்வெட்டா, டர்டியா இருக்கு” என்றவள் அறைக்குள் சென்று உதவியாளர் கீதாவிற்கு அழைத்தாள். சமையல், பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அவுட் ஹவுஸ்களில் அறைகளும் அவற்றிற்கு ஏற்ற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

மதி சிகிச்சை முடித்து வந்ததும் அவளுக்கு மட்டும் அவர்கள் பங்களாவிற்குள் தங்குவதற்கு தனி அறை ஒதுக்கி வைத்திருந்தாள் ரெஜினா. உதவிக்கு யாரும் இல்லாத பட்சத்தில் மதிதான் அவளுடன் வந்து தங்குவாள். மதி இல்லாத சமயங்களில் கீதா.

கீதாவிற்கு அவள் தன் செல்பேசியில் அழைத்துக் கொண்டிருக்கும் போது, “நான் கீதாவை வர வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்று கூறினான் ஆனந்த்.

“ஏன் ஆனந்த்?” என்றவள் அதிர்ச்சியுடன் திரும்ப,

“இன்னைக்கு பூரா உனக்கு எல்லாமே நான்தான் செய்வேன்” என,

“நோ வே” என்ற சொன்ன போது, “நம்ம குளிக்கலாம் பேபி” என்றபடி அருகில் வந்து அவள் சக்கர நாற்காலியின் இருபுறம் கை வைத்து நின்றான்.

அவன் தோளில் அடித்தவள், “நீ ரொம்ப ஓவரா போற” என்றாள்.

“இதுவே ஓவரா... நான் இதை விட பெரிய பெரிய ப்ளான் எல்லாம் வைச்சு இருக்கேன்... ஓவர் ஓவரா” என்று கூறிக் கொண்டே அவளைக் குளியலறைக்குள் தூக்கிச் சென்றுவிட அவனைக் கைகளால் குத்தினாள். ஆனால் அவன் அசரவே இல்லை.

இருவரும் கலவையாக சண்டை, காதல், காமம் என்று அனைத்தையும் செய்தனர். அதேநேரம் அவனுடன் இருக்கும் ஒவ்வொரு கணத்தையும் ரெஜினா உணர்வுப்பூர்வமாக இரசிக்கவும் செய்தாள்.

நேற்றைய இரவின் கூடுதலில் இருந்த மனவருத்தங்கள் எதுவும் அப்போது இல்லை. நிறைவாய் சந்தோஷமாக உணர்ந்தாள். அதன் பிரதிபலிப்பாக முகம் கூடுதல் பளபளப்பாக இருப்பதைக் கண்ணாடியில் பார்த்து இரசித்து மகிழ்ந்தாள்.

ஒரு வருடம் முழுக்க படுக்கையிலேயே கழித்து இரண்டு வருடமாக சக்கர நாற்காலியிலேயே ஊர்ந்து ஊர்ந்து சென்றவளின் உணர்வுகள் எல்லாம் மொத்தமாகச் செத்து மடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் போது ஆனந்த் மீண்டும் அவள் உலகத்தைச் சந்தோஷமானதாகவும் உணர்வுபூர்வமாகவும் மாற்றி இருந்தான்.

உடல், மனது அத்தனையும் புதுப்பித்துக் கொள்ளும் ஓர் அற்புதமான உணர்வு காமம். அந்த உணர்வை அணுஅணுவாக அவள் அனுபவிக்க செய்தான்.

அந்த மோசமான விபத்திற்குப் பிறகு தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அதிருப்தியும் குறையும் அவள் முகத்தில் பிரதிபலிப்பதை உணர்ந்திருக்கிறாள். ஆனால் இன்று ஒரே நாளில் முற்றிலும் நேர்மாறாக அவள் முகம் நிறைவான பொலிவைக் கொண்டிருந்தது.

மேஜை மீதிருந்த தாலியை எடுத்து அணிந்து கொண்டவள் தன் தலைமுடியைத் துவட்டியபடி, “ஆனந்த் அந்த ஹேர் ட்ரய்ர் எடுத்துக் கொடு” என்று கேட்க, 

அதனை எடுத்துக் கொடுத்தவன், “ஏதாச்சும் ஹெல்....ப் பண்ணனுமா பேபி” என்று ஒரு விதமாய் கேட்க,

“வேண்டவே வேண்டாம்... நீ இது வரைக்கும் செஞ்ச ஹெல்பே போதும்” என்றாள்.

தன் டீ ஷர்டை அணிந்தபடி, “சீக்கிரமா வா எனக்கு பசிக்குது” என,

“இவ்வளவு நேரமா பசிக்கலயா... இப்பதான் சாருக்கு பசிக்குதாக்கும்” என்றவள் தன் தலை முடிகளைக் காய வைத்துக் கொண்டே கூற,

“இவ்வளவு நேரமா வேற பசி... அது தீர்ந்து போச்சு... இப்போ வேற பசி” என்றவன் கையை வயிற்றில் வைத்து காண்பிக்க அங்கிருந்த ஸ்கின் லோஷன் பாட்டில் அவன் பக்கம் பறந்து வந்தது.

“இந்த மாதிரி கையில கிடைச்சது எல்லாம் தூக்கிப் போடாதே... எங்கயாச்சும் ஏடாகுடமா பட்டிர போகுது” என்றவன் சொல்ல, 

“அப்படியா?” என்றவள் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொள்ள,

“அம்மா தாயே நான் போறேன்... போய் எல்லாத்தையும் சூடு பண்ணி வைக்கிறேன்” என்றவன் அறை வாசலுக்குச் செல்லும் போது அவன் கைப்பேசி ரீங்காரமிட்டது. திரும்பி வந்து அதனை எடுத்துப் பேசிக் கொண்டே வெளியே சென்றவன் அவள் வருவதற்குள் ஆறிப் போயிருந்த உணவுகளை ஓவனில் வைத்து சூடு பண்ணி எடுத்து வைத்திருந்தான்.

ஆனால் உண்டு முடிக்கும் வரை அவன் முகத்தில் ஒருவிதமான இறுக்கம் குடியிருந்தது. அதனை சாப்பிடும் போதே கவனித்தவள், “ஃபோன்ல யாரு?” என்று கேட்க,

“சாப்பிட்டு முடி அப்புறமா பேசலாம்” என்றான்.

அவள் சாப்பிட்டு முடித்துக் கைக் கழுவ அவனும் சாப்பிட்டு எழுந்து கைக் கழுவிக் கொண்டே, “நாம பீச்ல எடுத்து செல்ஃபிஸ் எல்லாம் உங்க அப்பாவுக்கு அனுப்பினியா?” என்று கேட்டான் கடினமான குரலில்.

“ஆமா சிலது அனுப்பினேன்” என, அவளை முறைத்து பார்த்தவன்,

“இனிமே என்னைக் கேட்காம இப்படி பண்ணாதே” என்றான்.

“ஏன்? இதுல என்ன இருக்கு? நம்ம சந்தோஷமா இருக்குறதைப் பார்த்தா டேடியும் சந்தோஷம்தானே பாடுவாரு”

“உங்க டேடி சந்தோசம் படல... ஏன் தனியா இந்த நேரத்துல பீச்சுக்குப் போனீங்க... அதுவும் உன்னை ஏன் தூக்கிட்டுப் போனன்னு கேட்குறாரு... அதுவும் அப்படி போறதா இருந்தா நான் நம்ம பாடிகாட்ஸ் கூடக் கூட்டிட்டுப் போயிருக்கணுமாம்?” என்றவன் கடுகடுப்புடன் பேச,

“டேடா இப்படி எல்லாம் பேசுனாரு” என்றவள் நம்ப முடியாமல் கேட்க,

“நான் நேத்தே சொன்னேன் இல்ல... உங்க டேட் உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாலும் இப்பவும் அவர் என்னை முழுசா நம்பல” என்றான்.

“அப்படி எல்லாம் இல்ல ஆனந்த்... அவரு நம்ம சேஃப்டிக்காக அப்படி சொல்லி இருப்பாரு”

“நம்ம இல்ல... உன் சேஃப்டி” என்றவன் வேகமாக டைனிங் அறை வழியாக வெளியே செல்லும் பின்புறம் கதவைத் திறந்து தோட்டத்திற்குச் சென்றுவிட்டான்.

“ஆனந்த்... லிஸன் டூ மீ” என்றபடி தன் சக்கர நாற்காலியில் அவனைப் பின்தொடர்ந்து வந்தவள், “நான் டேட்கிட்ட பேசுறேன் அவர் புரிஞ்சிப்பாரு” என அவள் புறம் திரும்பியவன்,

“வேண்டாம்... அது எனக்கும் ஜஸ்டினு சாருக்கும் இடையில தேவை இல்லாத மிஸ்அன்டிர்ஸ்டான்டிங்கை உருவாக்கிடலாம்” என்றான். 

அவன் சொன்னதைக் கேட்ட போது ஜஸ்டின் முன்னமே இப்படியொரு நிலை உருவாகும் என்று கணித்தது நினைவுக்கு வர, “அன்னைக்கு நாம இந்த வீட்டுக்கு வந்திருந்தோம் இல்ல... அப்போ என்கிட்ட டேட் ஒன்னு சொன்னாரு... ஒரே வீட்டுல நீயும் டேடும் தங்குனா... அவருக்கும் உனக்கும் இடையில இதே போல மிஸ்அன்டர்ஸ்டான்டிங் வரும்னு கெஸ் பண்ணாரு... தெரியுமா? இப்போ என்னடானா அவர் சொன்னபடியே நடக்குது” என,

அவன் ஏளனமாக உதட்டை வளைத்து, “பாம்பின் கால் பாம்பு அறியும்னு சொல்வாங்கனு தெரியுமா? இதுவும் அப்படித்தான்... பெரும்பாலான ஆண்கள் எல்லா ரிலேஷன்ஷிப்லயும் டாமினேடிங்கா இருக்கணும்னு நினைப்பாங்க.”

”முக்கியமா தனக்கு நெருக்கமான பெண்களுக்குத் தான்தான் முதலிடத்துல இருக்கணும்னு ஒரு ஈகோ... அவரும் நானும் ஒரே இடத்துல ஒன்னா இருந்தா உனக்கான அந்த பிரயாரிட்டி பிரச்சனையாகலாம்”

“வாட்?”

“தட்ஸ் ட்ரூ” என்றவன் சொல்ல,

“அப்படினா இது ஆம்பளைங்க பிரச்சனை... இனிமே நான் இதுல தலையிட மாட்டான்பா... நீங்க இரண்டு பேரும் எப்படியோ போங்க” என்றவள் தன் சக்கர நாற்காலியைத் திருப்பிக் கொண்டு செல்ல,

“ஏய் ஏய் நில்லு” என்று அவள் முன்னே சென்று நிறுத்தியவன்,

“நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணனும்” என்றான் இறங்கிய குரலில்.

“பிராமிஸா…? என்ன பிராமிஸ்?” என்றவள் புரியாமல் கேட்க,

“நம்ம இரண்டு பேர் உறவுக்குள்ள உங்க டேட் எப்பவும் வர கூடாது... முக்கியமா அவருக்காக நீ என்னை விட்டுக் கொடுக்கக் கூடாது” என்றான்.

“நீ ரொம்ப இடியாட்டிக்கா பேசுற ஆனந்த்... டேட் ஏன் நம்ம உறவுக்குள்ள வரணும்?” என்றவள் கேட்க,

“ஒரு வேளை வந்தா?” என்றவன் நிறுத்த,

“என் டேடைப் பத்தி எனக்குத் தெரியும்... அவர் அந்த மாதிரி வர மாட்டாரு... நீ இனிமே என்கிட்ட இந்த மாதிரி இடியாட்டிக்கா பேசாத.” என்றாள்.

“அப்போ நீ எனக்கு பிராமிஸ் பண்ண மாட்ட” என்றவன் கேட்க அவள் எரிச்சலுடன், “நெவர்” என்று விட்டு வீட்டிற்குள் திரும்பிச் சென்றுவிட அவன் முகம் சுருங்கிவிட்டது.

 அவன் மறைத்து வைத்திருக்கும் உண்மையை ஒரு வேளை ரெஜினாவிடம் சொன்னால் அவள் புரிந்து கொள்வாளா? எத்தனை நாளைக்கு இந்த உண்மையை மறைக்க முடியும்?

ஆனால் அவளுக்காய் தெரிவதற்கு முன்பாக நாமாக சொல்லிவிடுவதுதான் நல்லது என்று எண்ணிக் கொண்டான்.

shanbagavalli and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
shanbagavallibhavanya lakshmi.nagarajan
Quote

Enna photo adhu? Madhi enge?

Quote

Super ma 

You cannot copy content