You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 12

Quote

12

ரெஜினா மினுமினுக்கும் அந்த பிங்க் நிற சுடிதாரை அணிந்து கொண்டாள். அவளின் உதவியாளர் கீதா துப்பட்டாவை மடித்து சரி செய்து கொடுக்க அதனை ஒரு பக்கமாகப் போட்டுப் பின் செய்தாள்.

கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள கீதா, “ஓகே வா மேடம்?” என்று கேட்க, “யா குட்” என்றவள் மேலும், “வெளியே போய் கொஞ்சம் ஆனந்த்தை வரச் சொன்னேனு சொல்லு” என,

கீதா வெளியே சென்று ஆனந்தனிடம் தெரிவிக்க,

“கிளம்பியாச்சா... போலாமா?” என்று அவன் கேட்டு கொண்டே உள்ளே வந்தான்.

“டூ மினிட்ஸ்” என்றவள் தன் கையிலிருந்து பெரிய நகை பெட்டியைத் திறந்து அதில் வரிசையாக இருந்த சிறிய நெக்லஸ்களைக் காண்பித்து,

“இதுல எதைப் போட?” என்று கேட்டாள்.

அவன் தன் பின்னே மறைத்து வைத்திருந்த ஒரு நகைப்பெட்டியைத் திறந்து காட்டி, “இதைப் போட்டுக்கோ” என்றான். 

ஹார்ட்டின் குறியுடன் இருந்த அந்த பென்டன்ட் சையினைப் பார்த்து, “செமையா இருக்கு ஆனந்த்” என்றவள் சொல்லி விட்டு அவள் அதனை வாங்கித் தொட்டுப் பார்த்தாள்.

“போட்டுக்கோ ரெஜி” என, 

அவள் அதிலிருந்து ஹார்ட்டின் குறியிலிருந்து காதணியை எடுத்து அணிந்து கொண்டாள்.  

“சயினை நான் போட்டு விடுறேன்” என்றவன் அவள் கூந்தலை விலக்கி கழுத்தில் அதனை அணிவித்து விட்டு அப்படியே அவளைப் பின்புறம் அணைத்துக் கட்டிக் கொண்டு, “எப்படி இருக்கு?” என,

அவள் கழுத்தில் தொங்கும் அந்த இதய சின்னத்தைப் பார்த்து, “வாவ் செம... ஆமா எப்போ வாங்குன?” என்று கேட்க,

“ஷ்யாம்க்கு பர்த்டே கிஃப்டா பிரேஸ்லட் வாங்குனேன் இல்ல... அப்போ பார்த்தேன்... ரொம்ப பிடிச்சு போச்சு... வாங்கிட்டேன்.” என்றான்.

“எனக்கும் பிடிச்சிருக்கு... இட்ஸ் சிம்பிள் அன் நீட்” என்று சொல்ல,

“அப்போ ஒரு கிஸ்” என்று அவளைப் பின்னிருந்து அணைத்தபடியே கன்னத்தைத் காட்ட, 

“எல்லாத்தையும் லஞ்சமா கேட்குற நீ” என்று முறைத்தாள்.

“எனக்கு உரிமையானதைதானே கேக்குறேன்... கொடு” என்றவன் அதிகாரமாகச் சொல்ல,

“லிப்ஸ்டிக் போட்டிருக்கேன்... அப்படியே பதிஞ்சிடும்” என,

“பரவாயில்ல துடைச்சுக்கலாம்” என்றவன் அவளை அணைப்பிலிருந்து விடவில்லை.

“சரியான பிடிவாதக்காரன்டா” என்றவள் தன் இதழ்களால் அவன் கன்னத்தில் முத்தமிட, 

அவனும் பதிலுக்கு தம் கரங்களால் அவள் கன்னங்களின் இருபுறமும் பிடித்து தலையின் உச்சியில் முத்தமிட்டுவிட்டு, “ஓகே ரைட் கிளம்பலாம்” என்றான். 

அவள் தன் கைகடிகாரத்தைக் கட்டிக் கொண்டு பின்னே சென்றபடி, “ஆனந்த் ஃபோனை எடுத்துக்கிட்டியா…? கிஃப்ட் பாக்ஸ் எடுத்துக்கிட்டியா?” என்றவள் ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திக் கொண்டே வெளியே வந்து, “பெட் ரூம் டோரை லாக் பண்ணிடு” என்று விட்டு வாயிலுக்குச் செல்ல, அவன் கதவை எல்லாம் பூட்டிவிட்டு வந்து அவளை காரில் தூக்கி அமர்த்தினான்.

அவன் காரை இயக்கிக் கொண்டிருக்கும் போது, “நான் டேட் கிட்ட கேட்குறேன் கிளம்பிட்டாரான்னு” என்றவள் தன் கைப்பேசி எடுத்து பேசும் போது,

“டேட் நீங்க எங்க இருக்கீங்க... எப்போ வர்றீங்க?” என்றவள் கேட்க,

“ஆஃபிஸ்லதான் இருக்கேன்... எங்க வரணும்?” என்றவர் பதிலுக்குக் கேட்க,

“என்ன டேடி மறந்துட்டீங்களா?” என்று அவள் மீண்டும் கேட்டாள்.

“என்ன மறந்துட்டேன்” என்றவர் தெரியாதது போல கேட்க செல்பேசியின் வாய் புறத்தை மூடிக் கொண்டு,

“என்ன ஆனந்த்... அவரு தெரியாத மாதிரி பேசுறாரு... டேடிக்கு ஃபங்கஷன் பத்தி சொன்னீயா?” என்றதும், 

அவன் யோசனையுடன் பார்த்து, “அது நான் பேசல... ஆனா வினோ சொல்லி இருப்பான்னு நினைச்சேன்” என்றதும் அவனைக் கோபமாகப் பார்த்தவள், 

மீண்டும் தன் செல்பேசியைக் காதில் வைக்க, “என்னாச்சு ரெஜி?” என்றார்.

“இல்ல லாஸ்ட் டைம் பேசும் போது வீட்டுக்கு வரேன்னு சொன்னீங்க இல்ல... அதான் இன்னைக்கு வரீங்கன்னு நினைச்சு கேட்டேன்” என,

“இல்லையேடா... நான் நாளைக்குதன் வரேன்னு சொன்னேன்” என்றார்.

“ஆமா நான்தான் மறந்து கேட்டுட்டேன்” என்றவள் அலைப்பேசியை அணைத்துவிட்டு ஆனந்தைப் பார்க்க அவன் காரை நிறுத்திவிட்டு தன் அலைபேசியின் மூலம் தங்கைக்கு அழைத்துப் பேசினான்.

“ரெஜியோட அப்பாவுக்குச் சொன்னியா?” என்று சீறலாகக் கேட்டவன் அதன் பின் கன்னாபின்னாவென்று திட்டத் தொடங்க,

“ஆனந்த் வேண்டாம்... விடுங்க” என்றவள் அவனைத் தடுத்துவிட்டு, “பங்க்ஷன் நேரத்துல எதுக்குப் பிரச்சனை விட்டுட்டுங்க” என்றாள்.

“அவ எப்படி உங்க அப்பாவுக்கு சொல்ல மறப்ப... இது மறந்த மாதிரி தெரியல... வேணும்டே பண்ணி இருக்கா... என்னை அவமானப்படுத்தணும்னே பண்ணி இருக்கா” என்றவன் கொதிப்புடன் பேச,

“அப்படி எல்லாம் இருக்காது... தெரியாம மறந்திருப்பாங்க... விடு ஆனந்த் போலாம்” என்றாள். அவன் கார் ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தபடி, “சாரி ரெஜி... நானாச்சும் சொல்லி இருக்கணும்... உண்மையில் எனக்கு தெரியாது... இப்ப சொன்னாலும் அது மரியாதையா இருக்காது” என்று தவிப்புடன் கூற,

“பரவாயில்ல... நம்ம மட்டும் போயிட்டு வரலாம் ஆனந்த்... டேட்கிட்ட இதைப் பத்திச் சொல்லிக்க வேண்டாம்” என்று அவள் சொன்னதும், 

“சாரி ரெஜி” என்றான் மீண்டும்.

“சரி லேட்டாகுது போலாம்” என்றவள் அவனை சாமதானப்படுத்திவிட்டாலும் உள்ளுர அவர்கள் செய்தது அவளுக்கும் தாள முடியாத கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

வினோவின் மகன் ஷ்யாமின் முதல் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனந்த் அவளிடம், “கிஃப்ட்டை கொடுத்துட்டு நம்ம உடனே கிளம்பிடுவோம்” என்று சொல்ல,

“அப்படி எல்லாம் எதுவும் பண்ண வேண்டாம் ஆனந்த்... நமக்கு கல்யாண ஆனதும் உங்க வீட்டுல நடக்கிற முதல் ஃபங்கஷன்... இதுல எதுவும் பிரச்சனை பண்ணிக்க வேண்டாம்” என்றவன் அவளைத் தூக்கிச் சக்கர நாற்காலியில் அமர வைத்து விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான்.

அங்கே ஆனந்தின் சொந்த பந்தங்கள் குவிந்திருந்த போதும் யாரும் ரெஜினாவிடம் ஒட்டுதலுடன் பேசவோ நடந்து கொள்ளவோ இல்லை. ஆனந்தின் பெற்றோரிடம் அவளாக சென்று விசாரித்த போதும் அவர்கள் ஏதோ மூன்றாவது மனுஷியை நடத்தியது போலத்தான் அவளை நடத்தினார்கள்.

இதற்கிடையில் பலரின் பார்வையிலும் பேச்சிலும் ஒரு விதமான குத்தல் தென்பட்டது. ஆனந்த் விழா மேடையிலிருந்த ஷ்யாமிடம் வாழ்த்துக் கூறிவிட்டுப் பரிசுகளைக் கொடுத்துவிட்டு இறங்க, “அண்ணா ஃபோட்டோ” என்று வினோ சொல்ல, அவன் எதுவும் பேசாமல் இறங்கிவிட்டான்.

நேராக மனைவியிடம், “சாப்பிட்டுக் கிளம்பவோம்” என, இருவரும் உணவு பரிமாறும் இடத்திற்குச் சென்றார்கள். உணவு பஃபே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரெஜினாவிற்கு உணவைப் பெற்றுக் கொடுத்துவிட்டு ஆனந்தும் உண்டு கொண்டிருக்க உறவினர்கள் சிலர் அவனைத் தேடி வந்து பேசினார்கள்,

ரெஜினா தனித்துவிடப்பட பின்னிருந்து யாரோ அவளை பற்றிப் பேசுவது கேட்டது.  

“நல்ல காசுக்காரி... அதான் நடக்க முடியலன்னாலும் ஆனந்த் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்”

அந்த வார்த்தைகள் அவளை ஆழமாகக் குத்த அதன் பிறகு அவளால் அங்கே இருக்க முடியவில்லை. அந்தத் தட்டை ஓரமாக வைத்தவள் தன் கைகளைத் துடைத்துக் கொண்டு ஆனந்திடம், “நாம கிளம்பலாம் ஆனந்த்” என்றாள்.

“அம்மா அப்பா கேப்லதான் வந்தாங்களாம்... போகும் போது அவங்கள வீட்டுல டிராப் பண்ணிட்டு போயிடலாம் ரெஜி” என,

“சரி” என்றவள் ஓரமாக வந்து அமைதியாக அவர்கள் வரும் வரை காத்திருந்தாள். ஆனந்த் தன்னிடம் காட்டும் பரிவையும் அன்பையும் அவர்கள் குடும்பத்தினரும் தன்னிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று யோசித்தாள்.

அப்போது மேடை மீதேறிய இளம் பெண் ஒருத்தி வினோவிடம் கட்டியணைத்து நெருக்கமாகப் பேசிவிட்டு குழந்தைக்கும் பரிசுகளைத் தந்து வாழ்த்தினாள். பின் அந்த இளம் பெண் ரெஜியை நோக்கி வந்து அவள் முன்னே வந்து நின்றாள்.

அவள் புரியாமல் திகைக்க, “ஹாய்... நீங்க ஆனந்த் வொய்ஃப் ரெஜினா... இல்ல” என்று கேட்க,

“ஆமா” என்றவள் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்க்க, “நான் அர்ச்சனா” என்று கைக் கொடுத்தாள்.

அவள் மேலும், “என்னைப் பத்தி ஆனந்த் உங்ககிட்ட சொல்லி இருக்காரா?” என,

“இல்லையே... நீங்க அவரோட ரிலேட்டிவா?” என்று கேட்டாள் ரெஜினா.  

“நான் அவரோட எக்ஸ் லவர்” என்றாள்.

ரெஜினா புருவத்தைச் சுருக்க, “மிஸ்டர் ஆனந்த் என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொன்னாரு... திடீர்னு உங்க அப்பா அவர்கிட்ட சம்பந்தம் பேசுனதும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு” என்று நிறுத்தியவள்,

“பணத்துக்காக மனுஷங்க எப்படி எல்லாமா மாறாங்க” என்று உதட்டைச் சுழிக்க,

“இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க அர்ச்சனா... இப்போ இதெல்லாம் சொல்றதால யாருக்கு என்ன லாபம்?” என்று ரெஜினா அழுத்தமாகக் கேட்க,

“என்னைப் பணத்துக்காக விட்டுட்டுப் போனவன்... உங்களை விட பணக்கார பொண்ணு வந்தா உங்களையும் விட்டுட்டுப் போக மாட்டானா என்ன? அதான் சொல்றேன்... அவன்கிட்ட கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க” என்றாள்.

“உங்க அக்கறைக்கு தேங்க்ஸ்” என்றவள் சொல்லும் போது ஆனந்த் அங்கே வந்திருந்தான். அர்ச்சனா ரெஜினாவிடம் பேசுவதைப் பார்த்து, ‘இவ எங்கே இங்க வந்தா’ என்று தலையிலடித்துக் கொள்ள,

“ஹாய் ஆனந்த்” என்றவள் நேராக அவனிடம் வந்து, “என்னைப் பத்தி உன் வொய்ஃப் கிட்ட சொல்லலையாமே” என,

“ரெஜினாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டியா?” என்று பரபரப்புடன் கேட்டுக் கொண்டே அவன் பார்வை ரெஜினாவைப் பார்த்தது. அவள் திரும்பி அமர்ந்திருந்தால் அவள் முக உணர்வுகளை அவனால் பார்க்க முடியவில்லை.

அர்ச்சனா ஏளனமாக உதட்டைச் சுழித்து, “ஆமா சொல்லிட்டேன்... ஆனா இவ்வளவு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தும்... அப்படியே பாறாங்கல்லு மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கா உன் பொண்டாட்டி... பணக்காரங்களுக்கே உரித்தான திமிரும் தெனவாட்டும் அவகிட்ட இருக்கு” என,

“ஷட் அப்” என்று ஆனந்த் அடிக்குரலில் சிறினான்.

“பிபி ஏறது இல்ல உனக்கு... நீ செஞ்ச காரியத்துக்கு எனக்கு எப்படிடா இருந்திருக்கும்” என்றவள் கூற,

“இத பாரு நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறனு சொன்னது உண்மைதான்... ஆனா உன்னை எந்தக் காலத்திலும் நான் லவ் பண்ணல... நல்ல வேளையா கல்யாணமும் பண்ணல” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டு அவன் நேராக ரெஜினாவிடம் வர, அவள் முகம் எந்தவித உணர்வுகளையும் காட்டவில்லை.  

“உங்க அம்மா அப்பா வராங்களா... நாம கிளம்பலாமா?” என்று சாதாரணமாகப் பேசினாள். 

அவனுக்கு உள்ளுர படபடப்பாக இருந்தது. சுற்றி இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து அவள் தன் கோபத்தைக் காட்டாமல் இருக்கிறாளோ என்று எண்ணியவனுக்கு அச்சவுணர்வு அதிகரித்தது. இருப்பினும் அவனும் தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல், “நான் அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்துடுறேன்” என்றவன் அதன் பின் தன் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

சாலையைப் பார்த்துக் கொண்டே ஓட்டினாலும் அவ்வப்போது ரெஜினாவின் முகப்பாவனையை அவன் திரும்பிப் பார்த்து அளக்க, அவள் எதுவும் பேசாமல் மௌனமாக வந்தாள்.

தங்களின் அடுக்குமாடி குடியிருப்பின் கீழிருந்து கார் நிறுத்தத்தில்  நிறுத்திவிட்டு, “பார்த்து போங்க... நாங்க கிளம்புறோம்” என,

“ஏன் நம்ம வீட்டுக்கு நீயும் உன் பொண்டாட்டியும் வர மாட்டீங்களா... கல்யாணம் ஆகிட்டு இன்னும் ஒரு தடவை கூட வரல... அக்கம் பக்கம் வீட்டுல எல்லாம் புள்ளையும் மருமகளும் ஏன் இந்த வீட்டுக்கு ஒரு தடவ கூட வந்து போகலன்னு கேட்குறாங்க” என்று பானுமதி புலம்பலாகக் கூற,

“இப்போ லேட்டாயிடுச்சு மா... இன்னொரு டைம் ரெஜினாவை கூட்டிட்டு வரேன்” என,

“பரவாயில்ல ஆனந்த் போயிட்டு வரலாம்” என்றாள் ரெஜினா.

அவளையும் தன் அம்மா அப்பாவையும் மாறி மாறி பார்த்தவன் பின் வேறு வழி இல்லாமல் அவளை இறக்கி ஐந்தாவது மாடியிலிருந்த தங்கள் குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றான். அவர்கள் முதல் முதலாக வீட்டிற்கு வருவதால் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே வரவேற்றார் பானுமதி.

“எதுக்குமா இதெல்லாம்?” என்று ஆனந்த் சலித்துக் கொள்ள,

“இதெல்லாம் சம்பிரதாயம்... வாங்க” என்று அழைத்தவர் தண்ணீர் எடுத்து வந்து தர, ஆனந்திற்கு இருப்பு கொள்ளவில்லை. ஆனால் ரெஜினா பொறுமையாக வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.

இறுதியாக அவனுடைய அறைக்கு வந்து, “இதுதான் உன்னோட ரூமா?” என்று உள்ளே நுழைந்து அவனுடைய பரிசுகள் பொருட்கள் அனைத்தையும் காட்டினான்.  

அறையிலிருந்த கப்போர்ட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருப்பதைப் பார்த்து, “நிறைய புக்ஸ் படிப்பியா ஆனந்த்” என்று கேட்க, அவனுக்கு உள்ளுர தடதடத்தது. இவள் என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாள். என்ன யோசிக்கிறாள் என்று அவனால் யூகிக்க முடியவில்லை.

“ஆனந்த் என்னாச்சு உன்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்” என,

“என்ன கேட்ட?” என்றவன் புரியாமல் விழிக்க,

“புக்ஸ் எல்லாம் படிப்பியா?” என்றாள். 

“காலேஜ் டைம்ல படிச்சிட்டு இருந்தேன்... அப்புறம் டைம் கிடைக்கல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது,

“ஆனந்து” என்று பானுமதியின் குரல் கேட்டது.

“அம்மா கூப்பிடுறாங்க... என்னனு கேட்டு வரேன்” என்றவன் செல்ல,  

“முதல் முதலா வந்திருக்கீங்க... கொஞ்சம் இனிப்பாச்சு சாப்பிடுங்க” என்று தட்டில் இருவருக்கும் இனிப்பு பலகாரம் வைத்துக் கொடுத்தார்.

அதேநேரம் ரெஜினா அவன் அலமாரியிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுக்கப் போக அதிலிருந்து ஒரு புகைப்படம் தவறி அவள் மடியில் விழுந்தது.

அதனை எடுத்து உற்று பார்த்தவள் முகம் யோசனையாக மாறியது.

ஆனந்த் அறைக்குள் வருவதை அறிந்ததும் அந்தப் படத்தைத் தன்னுடைய சக்கர நாற்காலியின் ஓரமாக சொருகி வைத்துவிட்டாள்.

Quote

Waiting for next ud sis 

Quote

Super ma 

You cannot copy content