You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kalyanam@ - Episode 6

Quote

6

காலையிலிருந்து அந்த வீடே பரபரத்துக் கொண்டிருந்தது.

பானுமதி பரபரப்பாகப் பைகளில் பூ, பழங்களை உள்ளே வைத்துக் கொண்டே, “தேவி அந்தத் தட்டை எல்லாம் எடுத்துப் பைல வைய்ம்மா” என்று பணிக்க,

“சரிங்க அண்ணி” என்றவளும் அங்கிருந்து தட்டுக்களை எடுத்துப் பையில் நுழைத்துக் கொண்டிருந்தாள்.

ஜஸ்டினிடம் எப்படியோ இறங்கி வந்து ஆன்ந்த் பெற்றோர்கள்  திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தனர். ‘அப்பாடா’ என்றவன் நிம்மதியடையும் போது ரெஜினாவைப் பார்க்க வேண்டும் என்று  கேட்டார்கள்.

சரி என்று  ஜஸ்டினிடம் பேசி அவரது வீட்டிலேயே தன் பெற்றோர் ரெஜினாவைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான்.

அன்று அந்தச் சந்திப்பிற்காக வீட்டில் படையெடுக்கும் உறவினர் கூட்டத்தைப் பார்க்கையில் ஆனந்திற்குப் பதட்டமேறியது. ‘நாம என்ன சொன்னா இவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க…? சும்மா போய் பார்க்குறதுக்கு எதுக்கு இத்தனை பேரு?’ என்று புலம்பிக் கொண்டே அம்மாவை அறைக்குள் இழுத்து வந்து, “ம்மா என்னம்மா நடக்குது இங்க?” என்று கேட்டான்.

“டேய் பொண்ணு வீட்டுக்குப் போகும் போது பூ, பழமெல்லாம் கொண்டு போக வேணாமாடா? அதான் எடுத்து வைச்சுட்டு இருக்கேன்” என்றார் அவர்.

 தலையிலடித்துக் கொண்டவன், “அத சொல்லல... ஏன் பெரிம்மா, சித்தி, அத்தைங்கள எல்லாம் கூப்பிட்டு வைச்சு இருக்கீங்க... நம்ம மட்டும் போனா போதாதா?” என்று கடுப்புடன் கேட்டான்.

“டேய்... இவங்கள எல்லாம் கூப்பிடாம எப்படிடா…? எல்லோரும் அந்தப் பொண்ண பார்க்க வேணாமா?”

“ஏன் நீங்களும் அப்பாவும் பார்த்தா போதாதா?”

“அதெப்படிடா…? உங்க பெரிம்மா, பெரிப்பாகிட்ட பொண்ண கூடக் காட்டாம... நேரா போய் பையனுக்குக் கல்யாணம்னு இன்விட்டேஷன் கொடுத்தா என்னடா நினைப்பாங்க... அது மரியாதையா இருக்குமாடா?”

“அதுக்குப் பெரிம்மா, பெரிப்பாவை மட்டும் கூப்பிட்டிருக்கலாம் இல்ல.” என்றவன் கேட்டுப் பல்லைக் கடிக்க,

“டேய் பெரிம்மாவைக் கூப்பிட்டா உங்க அத்தைக்கு, சித்திக்குத் தெரியாம போகுமாடா? அப்புறம் அவங்க வந்து ஏன் எங்களைக் கூப்பிடலன்னு கேட்டா?” என்றவர் சொன்ன காரணத்தைக் கேட்டு அவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

“ஐயோ ம்மா... நான் ஜஸ்டின் சார்கிட்ட நீங்க மட்டும்தான் வருவீங்கனு சொல்லி இருக்கேன்”

“இத பாரு ஆனந்து... சொந்தகாரங்களோட போய் பொண்ணுப் பார்க்குறது, கை நனைக்குறது எல்லாம் நம்மாளுங்களோட வழக்கம்... நீ வேற மதத்துப் பொண்ண கட்டிக்கிட்ட போறங்குறதுக்காக நம்ம குடும்பப் பழக்கத்தை எல்லாம் வுட்டுக் கொடுக்க முடியாது, ஆமா…”

”அதுவும் உன்னைக் கட்டிக்கப் போற பொண்ணுக்கு நடக்க முடியாதுன்னு கல்யாணம் மண்டபத்துல பார்த்து தெரிஞ்சுக்கிட்டா எல்லோரும் என்ன பேசுவாங்க…? அப்புறம் அங்கேயே வைச்சு ஏதாச்சும் கதை கட்டி விட்டுட மாட்டாங்களா…?” 

”அதனால இப்பவே பொண்ண கூட்டிட்டுப் போய் காண்பிச்சிட்டா பிரச்சனை இருக்காது இல்ல.” என்று அடாவடியாகப் பேசிய அம்மாவை அவன் கோபமாக முறைக்க,

“பானு க்கா” என்று ஒரு குரல் கேட்டு, “கிரிஜா வந்துட்டியா? உன்னைதான் எதிர்பார்த்துக் காத்திட்டு இருக்கேன்” என்று இவர் முகப்பறைச் செல்ல அவனும் பின்னோடு வந்தான்.

வினோதினி தன் கணவனுடன் அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள். தமையனைப் பார்த்த கணமே அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள அவளைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் பாலாவிடம் சென்று,

“வாங்க பாலா... டேய் ஷ்யாம் குட்டி” என்று அவர்களை வரவேற்றான்.

வினோ அவனைக் கடுப்பாகப் பார்த்துவிட்டு உள்ளே செல்ல அவர்களைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த மற்றொரு குடும்பத்தைப் பார்த்து ஆனந்தன் முகம் மாறியது.

அவன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க பானுமதி உள்ளிருந்து வந்து, “வாங்க அண்ணா... வா ஜமுனா... டேய் அருணு... எப்படி இருக்க... உட்காருங்க... நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன்” என்று விசாரித்துப் பேசிவிட்டு உள்ளே செல்ல,

அவர்கள் பார்வை ஆனந்த் புறம் திரும்பியது.

“எப்படி இருக்க ஆனந்து?” என்று ஜமுனா விசாரிக்க, உடன் நின்ற அவர் மகன் அருண் அவனை வெறுப்புடன் பார்த்தான்.

அவர்கள் குடும்பத்தைப் பார்க்கவே அவனுக்குச் சங்கடமாக இருந்தது. “நல்லா இருக்கேன் ஆன்ட்டி... உள்ளே கொஞ்சம் வேலை இருக்கு வந்துடுறேன்” என்று கழன்று கொண்டவன் நேராக சமையலறையில் தேநீர் போட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம்,  “ம்ம்மா.. . சொந்தகாரங்கள எல்லாம் கூப்பிட்ட சரி... ஜமுனா ஆன்ட்டியும் சண்முகம் அங்கிளையும் ஏன் ம்மா கூப்பிட்ட” என்றவன் எரிச்சலுடன் கேட்டான்.

“டேய் என்னடா இப்படி பேசுற…? அவங்கதானடா உன்னை வளர்த்தவங்க... நீ குழந்தைல இருந்து ஆன்ட்டி வீட்டுலதான் கிடையா கிடப்ப... நான் கூப்பிட்டா கூட வரமாட்ட... இப்போ என்னடானா அவங்க எதுக்கு வந்திருக்காங்கன்னு கேட்குற?”

”உனக்குப் பெத்தவங்க நாங்கதான் முக்கியமில்லாத போயிட்டோம்... உன்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தவங்க மேல இருந்த பாசம் கூட போச்சா…?”

”பாரு அவங்களுக்கு உன் மேல எவ்வளவு பாசம் இருந்தா நான் கூப்பிட்டதும் வருவாங்க” என்று பேசிக் கொண்டே வடிக்கட்டியில் தேநீரை வடிகட்டி எடுத்துச் சென்றார்.

‘கடவுளே! இவங்க எதுவும் பிரச்சனையை இழுத்து விடாம விடமாட்டங்க போலவே’ என்றவன் புலம்பிக் கொண்டே வாசலுக்கு வர,

“அருணு... இந்தா நீயும் டீ எடுத்துக்கோ” என்று பானு அவர்களை அமர வைத்து தேநீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.  

“வேணா ஆன்ட்டி... நான் அம்மா அப்பாவை விட்டுட்டு போலாம்தன் வந்தேன்” என்று கூறிக் கொண்டே அங்கே வந்த ஆனந்த்தைப் பார்த்து, “எப்படி இருக்க ஆனந்த்?” என்று கேட்டவன் பார்வை படுகுத்தலாக அவன் மீது விழுந்தது.

‘இவன் வேற பிரச்சனை பண்ணாம போ மாட்டான் போல... உனக்கு நேரம் சரி இல்லடா ஆனந்து’ என்று மனதிற்குள் புலம்பி கொண்டாலும்,

“நல்லா இருக்கேன் அருண்... நீ எப்படி இருக்க?” என்று கேட்க,

“நல்லா இருக்கேன்... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்... தனியா வாயேன்” என்று ஆனந்த் தோள் மீது கைப் போட்டு அறைக்குள் அழைத்து வந்துவிட்டான்.

ஆனந்த் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் திரும்பி, “நானே உனக்கிட்ட பேசிப் புரிய வைக்கணும்னு நினைச்சேன்” என்று கூறவும்,

“பொறுக்கி நாயே... என் தங்கச்சியை ஏமாத்திட்ட இல்லடா நீ” என்றவன் சட்டை காலரை இழுத்துப் பிடித்துக் கொண்டு நின்றான் அருண்.

“கொஞ்சம் பொறுமையா பேசலாம்” என்று ஆனந்த் சொல்ல, 

“உன்னை மாதிரி பொறுக்கிக் கிட்ட எல்லாம் என்னடா பொறுமை வேண்டி கிடக்கு... பணத்தைப் பார்த்ததும் மனசு மாறிட்ட இல்ல” என்றவன் எரிச்சலுடன் மொழிய,

“நீ பாட்டுக்கு லூசு மாறி உளறிட்டு இருக்காத... முதல சட்டைல இருந்து கையை எடு” என்று ஆனந்தும் பதிலுக்குச் சீறினான்.

“யாருடா லூசு? நீ என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்குறன்னு சொல்லி அனுப்பின எல்லாம் மெசேஜூம் என்கிட்ட இருக்கு... அந்த ஸ்க்ரீன் ஷார்ட் எல்லாத்தையும் வெளியே இருக்க எல்லார்க்கிட்டையும் காட்டட்டுமா?” என்றவன் மிரட்ட,

“என்ன மிரட்டுறியா? போய் காட்டிக்கோ போ... நான் அர்ச்சனாவை ஏமாத்த எல்லாம் இல்ல... இரண்டு பேரும் ஃபிரண்ட்ஸாதான் பழகினோம்... ஆனா அவளாதான் லவ் பண்றேனு சொன்னா... நான் பண்ணல.”

”பட் ஒரு டைம்ல நானும் அவ லவ்வை ஒத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன்தான்” என்று விளக்கமாகக் கூற,

“சொல்லிட்டுப் பணத்தைப் பார்த்ததும் மனசு மாறிட்ட...  அப்படிதானேடா ஃபிராடு” என்று அருண் எகிற ஆனந்தின் கண்களும் சீற்றத்தைக் கக்கின.

“ஃபிராடு அது இதுன்னு சொன்ன?” என்று எச்சரிக்க,

“என்னடா பண்ணுவ?” என்று அருண் ஆனந்த் சட்டையைப் பிடித்தபடி சுவரில் தள்ளி இடித்து, “இதையே நான் உன் தங்கச்சிக்குப் பண்ணி இருந்தா நீ சும்மா இருப்பியாடா நீ?” என்று கேட்டான்.

ஆனந்தும் ஆவேசமாகி அருணை இழுத்துப் பிடித்துத் தள்ள, அவன் படுக்கையில் விழுந்தான். உள்ளே இவர்கள் செய்யும் அடிதடிகளின் சத்தம் மெலிதாக வெளியே கேட்க,

“ஆனந்து என்னடா சத்தம்?” என்று கேட்டார் பானு.

“ஒன்னும் இல்லமா.” என்றவன் அருணிடம்,

“நான் அர்ச்சனாவை ஏமாத்தணும்னு எல்லாம் நினைக்கல... நான் அவளுக்கு என் நிலைமையை டீடைலா சொல்லிப் புரிய வைச்சுட்டேன்... நீதான் தேவை இல்லாம உள்ள புகுந்து குழப்பம் பண்ணிட்டு இருக்க.” குரலைத் தாழ்த்திப் பேசினாலும் அழுத்தமாக எச்சிரிக்கும் தொனியில் கூறினான்.

அருண் அலட்சியமாக உதட்டை வளைத்து, “நான் ஏன்டா பிரச்சனை பண்ண போறேன்... நான் எந்தப் பிரச்சனையும் பண்ண மாட்டேன்... நீ ஏதோ ஹேண்டிகேப்ட் பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறியாமே... அதுவும் நடக்க முடியாத பொண்ண.”

”பண்ணிக்கோ சந்தோஷமா பண்ணிக்கோ... உன்னை மாதிரி மட்டமான கேரக்டருக்கு எல்லாம் அர்ச்சனா வொர்த் இல்லடா... அந்த ஹேண்டிகேப்ட் பொண்ணுதான் சரியா இருக்கும்” என்று சொன்ன அருண் தன் சட்டையை சரி செய்து கொண்டு எழுந்து அறை கதவைத் திறந்து வெளியேறிவிட்டான்.  

ஆனந்தின் முகம் வெளிறிப் போனது. அருண் பேசிய வார்த்தைகளை இயல்பாக அவனால் கடக்க முடியவில்லை. அது அவன் மனதின் அடி ஆழம் வரை சென்று அறுத்தது.

அருண் பேசிய வார்த்தைகளை அவனை மோசமான மனநிலைக்குத் தள்ளிய போதும் வேறு வழியில்லாமல் ஒரு வண்டியை ஏற்பாடு செய்து சொந்தபந்தங்களை அழைத்துக் கொண்டு ஜஸ்டின் வீட்டிற்குச் சென்றான்.

அங்கே ஜஸ்டின் யாரையும் அழைக்கவில்லை. அவருடைய நெருங்கிய நண்பன் தாமஸையும் அவர் மனைவியையும் அழைத்திருந்தார்.

ரெஜினா தங்க நிற சரிகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஊதா நிற சுடிதாரை அணிந்து ஒப்பனைகள் செய்து கொண்டிருக்க சாராவும் தாமஸும் அவளைப் பார்க்க அறைக்கு வந்தனர்.

“வாட் ஆ சர்ப்ரைஸ்... சாரா ஆன்ட்டி... தாம்ஸ் ஆங்கிள்” என,

“யு ஆர் கார்ஜியஸ்” என்று புகழ்ந்தபடி சாரா ரெஜினாவின் கழுத்தை அன்புடன் கட்டிக் கொண்டார். தாமஸ் அவளை விசாரித்துப் பேசிவிட்டு வெளியே சென்று நண்பனுடன் ஐக்கியமாகிவிட,

“நீங்க வர போறீங்கனு டேட் சொல்லவே இல்ல... ஜானும் வந்திருக்கானா... வெளியே இருக்கானா?” என்று ரெஜினா ஆர்வமாக சாராவிடம் விசாரித்தாள்.

“இல்ல டியர்... அவனுக்குக் கொஞ்சம் வேலை... பெங்களூர் போயிருக்கான்.” என்று கூற,

“என் மேல அவனுக்குக் கோபமா ஆன்ட்டி? அவன் கொஞ்சம் நாளா என்கிட்ட பேசவே இல்ல.” என்றவள் கவலையுடன் கேட்க,

“ஐயோ... நீ அவன் மேல கோபமா இருக்கியோன்னு அவன் நினைச்சுட்டு இருக்கான்” என்றவர் சொல்ல,

“நான் ஏன் ஆன்ட்டி அவன் மேல கோபப்பட போறேன்... அவன்கிட்ட நான் சாதாரணமாதான் கேட்டேன்... அவன் நோ சொன்னதுல எனக்கு எந்தவிதமான ஹார்ட் ஃபீலிங்க்ஸ் இல்ல” என்றாள்.

“எனக்கு தெரியும்... ஸ்டில் அவனுக்கு உன்னை நேர்ல பார்க்கக் கொஞ்சம் சங்கடமா இருக்கு... உன் மனசைக் கஷ்டப்படுத்திட்டோமோனு”

“ச்சே ச்சே அதெல்லாம் இல்ல”

“ப்ச் ஆனா எனக்கும் அங்கிளுக்கும் நீ எங்க வீட்டுக்கு வரனும்னுதான் ஆசை... முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நாங்க ஜான்கிட்ட பேசி இருப்போம்”

“அவனோட டெசிஷன்ல எந்த தப்பும் இல்ல... அவனை நீங்க ஃபோர்ஸ் பண்ணி சம்மதிக்க வைச்சா எப்படி சரியா இருக்கும்... சொல்லுங்க?”

“யூ ஆர் ரைட்” என்றவர் மேலும், “உனக்கு ஆனந்தைக் கல்யாணம் பண்ணிக்குறதுல முழு சம்மதமா…? இல்ல இது வெறும் ஜஸ்டினோட முடிவா?” என்று கேட்டார்.

“ஆக்சுவலி இது டேட் டெசிஷன்தான்... பட் நானும் ஆனந்தும் பேசுனோம்... பேசுன பிறகு எனக்கும் அவரைப் பிடிச்சு இருந்துச்சு... ஹி இஸ் ஸ்மார்ட் க்ளேவர்... அன்ட் ஆல்ஸோ ஹேன்ஸம்” என்றதும்,

“ஓ மை டியர் ரெஜி... யூ ஆர் ப்ளஷிங்” என்று அவள் கன்னத்தைக் கிள்ளினார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆனந்தின் வீட்டிலிருந்து வந்துவிட்டதாகச் சொல்லிவிட்டுச் சென்றாள் கீதா.

“வாவ் வந்துட்டாங்க... உன் ட்ரஸ்ஸிங் எல்லாம் முடிஞ்சிருச்சா?” என்று சாரா கேட்க,

“ஆல்மோஸ்ட்” என்றவள் கூறிவிட்டு அழகான சரிகை வேலைபாடுகள் கொண்ட துப்பட்டாவைக் கழுத்தில் படரவிட்டபடி , “ஆமா மதி எங்க? ரொம்ப நேரமா ஆளையே காணோம்?” என்று விசாரிக்க,

“தெரியல மேடம்.” என்றாள் கீதா.

“மதி எங்கன்னு போய் பார்த்துட்டு வா” என்றவள் முகம் யோசனையாகக் கூற,

“மதி வந்துருவா. நீ கூலா இரு” என்றார் சாரா.  

‘எங்க போயிட்டா?’ என்று ரெஜினா யோசித்திருக்கும் போது முகப்பறையில் அதிக சலசலப்பு சத்தம் கேட்டது.

சாரா எட்டிப் பார்த்துவிட்டு, “என்ன இத்தன பேர் வந்திருக்காங்க…? சும்மா பார்மலிட்டிக்கு பார்க்குறதுக்கு இத்தன பேரா?” என்று கேட்க,

“ஆனந்தோட அப்பா அம்மா மட்டும்தான் வர்றதா டேட் சொன்னாரு” என,

“இங்க வந்து பாரு... ஒரு பட்டாளமே வந்திருக்கு” என்றார்.

அறையிலிருந்து மெதுவாக எட்டிப் பார்த்த ரெஜினாவிற்கு அந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் படபடப்பானது. அவள் வாழ்க்கை சக்கர நாற்காலியைச் சார்ந்திருக்க ஆரம்பித்த பின் அதிகம் பழக்கமில்லாத கூட்டங்களில் அவள் செல்வதை முற்றிலுமாக தவிர்த்திருந்தாள். ரொம்பவும் பழகிய சில நண்பர்கள் வந்து பார்ப்பதைக் கூட அவள் விரும்பியது இல்லை.

பள்ளித் தாளாளராகப் பொறுப்பேற்ற போதும் விழாக்கள் போன்றவற்றில் அவள் தலை காட்டுவது இல்லை. எல்லோரும் அவளைப் பாவமாகவும் பரிதாபமாகவும் பார்ப்பதை அவள் விரும்பவில்லை.

அவளுக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையும் உடைந்துவிடுவது போலிருக்கும்.

அப்போது அனுமதி கேட்டு அறைக்குள் வந்த கீதா, “மதி மேடம்... ஸ்கூலுக்குப் போயிருக்காங்களாம்” என,

“என்கிட்ட சொல்லாம போயிட்டாளா?” என்று ரெஜி அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“சார்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்காங்களாம்.” என்று கீதா சொல்ல,

 தன்னிடம் ஏன் சொல்லாமல் போனால் என்று ரெஜினாவுக்கு மதி மீது கோபம் உண்டான போதும் இது போன்ற புது மனிதர்கள் முன்னே நிற்பதில் அவளுக்கும் தன்னைப் போல சங்கடங்கள் இருக்கலாம் என்று யூகித்துக் கொண்டாள்.

தன்னைப் பாவமாகப் பார்ப்பவர்கள் அத்தகைய பாவம் பரிதாபத்தைக் கூட அவளுக்குப் பார்ப்பதில்லை. அசூயை உணர்வுடன்தான் அவளைப் பார்க்கவும் ஒதுக்கவும் செய்கிறார்கள் என்று மதிக்காக யோசித்து அவள்  கவலைப்பட்டாள்.

ஆனாலும் அவள் சொல்லாமல் போனதை ஏற்க முடியவில்லை.

ரெஜினா இப்படி தீவிரமாக மதியைப் பற்றி யோசிக்கும் போது, “வா ரெஜி... நாம போகலாம்” என்று சாரா அழைக்க, அவள் கொஞ்சம் பதட்டத்துடனே சென்றாள்.

சக்கர நாற்காலியில் ரெஜினா அவர்கள் முன்னே வந்ததும் அவர்கள் எல்லோர் முகத்திலும் வியப்பு, பரிதாபம் என இருவேறு உணர்வுகளும் ஒரே நேரத்தில் உண்டானது.

‘அச்சோ பாவம்... பார்க்க அழகா இலட்சணமா இருக்கு... இந்தப் பொண்ணுக்கு போய் இப்படியொரு நிலைமையா?’ என்றவர்கள் குரலைத் தாழ்த்தி பேசினாலும் அது ரெஜி காதில் விழாமல் இல்லை.

பலரின் உணர்வுகளை அவர்கள் முகங்கள் மூலமாகப் படித்துக் கொண்டவள் இறுதியாக ஆனந்தைப் பார்க்க அவன் தன்னை விடவும் பலமடங்கு அதிகப் பதட்டத்துடன் இருப்பது அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.

அன்று தன்னிடம் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசிய ஆனந்தா இது? என்று சந்தேகமும் வந்தது. அதேநேரம் அவள் தன் பார்ப்பதை உணர்ந்து அவனுமே அவளை நிமிர்ந்து பார்க்க, அவள் உடனே உதடுகள் பிரித்துப் புன்னகைத்தாள். 

அந்த ஒரு புன்னகையில் அவனுக்குள் இருந்த குழப்பமும் தவிப்பும் வடிந்துவிட்டது .

அப்போது அவர்கள் கூட்டத்திலிருந்தப் பெண், “பொண்ணு ரொம்ப அழகா இருக்கு.” என்று சத்தமாகவே சொல்ல,

“பொட்டு வைச்சு இருந்தா இன்னும் அழகா இருக்கும்.” என்று மற்றொரு குரல் கேட்க ஆனந்தின் முகம் கடுப்பாக மாறியது.

 “ஏன் வினோ? நீ உன் பர்ஸ்ல பொட்டு வைச்சு இருப்ப இல்ல” என்று பானுமதி கேட்க, “ஆ இருக்குமா” என்றவள் ஒரு தங்க நிற ஸ்டிக்கர் பொட்டுக்கள் உள்ள அட்டையை எடுத்துக் கொடுக்க,

பானுமதி எழுந்து வந்த ரெஜிக்கு அந்தத் தங்க நிறப் பொட்டை வைத்துவிட்டு, “இலட்சணமா இருக்கு” என்று திருஷ்டிக் கழிக்க,

‘இவங்க அடங்கவே மாட்டாங்களா?’ என்று ஆனந்த் எண்ணிக் கொண்ட போதும் ரெஜினா அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். பெரும்பாலும் அவள் பொட்டு வைத்து கொள்வதில்லை என்றாலும் உடைக்கு ஏற்றார் போல எப்போதாவது விருப்பப்படும் போது வைத்துக் கொள்வாள்.

அவர் பொட்டை ஒட்டியதும், “தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று ரெஜினா புன்னகைத்துக் கூற, மகளின் முகபாவனைகளில் எந்தவித பதட்டமும் கவலையும் இல்லாததில் ஜஸ்டின் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்தார்.

ஆனால் அதற்குள் ஆனந்தின் பெரியம்மா, “பொண்ணுக்கு நடக்க முடியாது சரி... ஆனா குழந்தைப் பெத்துக்கிறது இதுல எல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்ல இல்ல” என்று கேட்டு விட,

ஜஸ்டின் அதிர்ந்துவிட்டார். ஆன்ந்தும் அதே அளவுக்கு அதிர்ச்சியாகி, “என்ன பெரிம்மா?” என்று கேட்கும் போதே,

“என்ன இப்படி அநாகரிகமா பேசுறீங்க?” என்று சாரா நேரடியாக அவர்களை நோக்கி வார்த்தையை வீசினார்.

“சாரா அமைதியா இரு” என்று தாமஸ் மனைவியை அடக்க,

“அக்கா கேட்டதுல என்ன தப்பு? எங்களுக்கு இருக்குறது ஒரே புள்ள... அவனுக்கு ஒரு வாரிசு வேணும்னு நாங்க ஆசைப்படக் கூடாதா?” என்று அவர்கள் கூட்டத்தில் மற்றொரு குரல் ஒலிக்க,

“எங்கள் புள்ளயோட நல்லது, கெட்டதைப் பத்தி நாங்களும் யோசிக்கணும் இல்ல” என்றார் பானுமதி,

“ம்மா கொஞ்சம் அமைதியா இருக்கியா?”ஆனந்தின் குரல் டென்ஷனாக ஒலிக்க,

“என்னடா அவங்க தப்பா கேட்டுட்டாங்க... உன் நல்லதுக்காகதானே பேசுறாங்க” என்று ஈஸ்வரனும் அவர்களைப் போலவே பேச ஆனந்திற்கு இவர்களை எப்படி கட்டுப்படுத்துவது என்றே தெரியவில்லை.

இப்படியொரு உரையாடல் இங்கே இப்படி தொடங்கப்படும் என்று ஜஸ்டின் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று என்ன பதில் சொல்வது என்றும் புரியாமல் திகைப்பில் இருந்தவர் மெல்ல ஒருவாறு அந்தத் திகைப்பிலிருந்து மீண்டு,

“இல்ல ரெஜினாவுக்கு நடந்த ஆக்ஸிடென்ட்” என்று விளக்கம் கூற ஆரம்பிக்க,

“டேடி ப்ளீஸ் ஸ்டாப்” என்று அவரை நிறுத்திய ரெஜினா, “நான் பேசுறேன்” என்றாள்.

அவருக்குத் தூக்கி வாரி போட்டது. அவ்வளவுதான். மகள் இந்தக் கல்யாணத்தை வேண்டாமென்று சொல்லப் போகிறாள் என்று எண்ணிப் பதட்டமுறும் போது,  

“நீங்க கேட்ட கேள்வி எல்லாம் எனக்கும் ஆனந்துக்குமான பெர்ஸ்னல் மேட்டர்... ஒரு வேளை இதே கேள்வியை ஆனந்த் என்கிட்ட கேட்டா நான் அவருக்குப் பதில் சொல்லிக்கிறேன்” என்றவள் பார்வை நேராக ஆனந்தைக் குற்றம் சாட்டியது போலப் பார்த்தது.

அவனுக்கு உண்மையில் அவள் பார்வையையும் அந்தச் சூழ்நிலையையும் எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.

ரெஜினா மேலும், “மற்றபடி மேரேஜ் அரேஞ்ச்மென்ட் பத்திப் பேசணும்னா பேசுங்க... ஐம் சாரி நான் இப்போ என் ரூமுக்குப் போறேன்” என்று விட்டு தன் சக்கர நாற்காலியுடன் அறைக்குள் விரைந்துவிட்டாள்.

shanbagavalli, kothai.suresh and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
shanbagavallikothai.sureshbhavanya lakshmi.nagarajan
Quote

Nam makkal eppothum ippadithan aduthavar andharangathai pattri pesuvadey avargalin velai 

Quote

Super ma 

You cannot copy content