You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Kannadi Thundugal - Episode 6

Quote

6

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் போது எப்படி எதிர் நீச்சலடிப்பதில் பயனில்லையோ அதேபோல வாழ்க்கை எனும் வெள்ளம் நம்மை அடித்துச் செல்லும் போது அதன் ஓட்டத்திலேயே போய்விடுவதே நலம்.

பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த தீபிகாவின் உடலும் மனமும் அப்போது சோர்ந்து போயிருந்தது. கண்களைச் சுழற்றிக் கொண்டு உறக்கம் வந்தது.

அப்படியே சாய்ந்தபடி உறங்கிப் போனவள் சட்டென்று விழிப்பு வரவும், தான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அடுத்த நிறுத்தம்தான் அவள் இறங்க வேண்டியது.

இருக்கையிலிருந்து மெல்ல எழுந்து வெளியே வந்த போது அதே இருக்கையில் அமர வந்த அவள் தங்கை நந்திகாவைக் கண்டு திகைப்படைந்தாள்.

எட்டு மாதம் கழித்து இன்றுதான் மீண்டும் அக்காவும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். ஆனால் நிறைய முறை தங்கையிடம் பேச தீபிகா முயன்ற போதும் அவள் அழைப்பை ஏற்கவில்லை.

ஒருமுறை தன் சான்றிதழ்களும் தன்னுடைய சில புத்தகங்களும் வேண்டுமென்று தீபிகா குறுந்தகவல் அனுப்பவும் அதற்கு மட்டும், ‘கொரியர் அனுப்புறேன்... அட்ரெஸ் அனுப்பு’ என்று பதில் போட்டவள், அதே போல அனுப்பியும் வைத்தாள்.

‘தேங்க்ஸ் நந்து’ என்று அனுப்பிய போது அதற்கு சரி என்று கூட ஒரு பதில் போடவில்லை. தங்கையின் கோபத்திலிருக்கும் நியாயம் புரிந்த போதும் மனம் வலிக்கத்தான் செய்தது.  

பேருந்து நிற்கவும் தீபிகா எதுவும் பேசாமல் இறங்கி முன்னே நடக்க, “அக்கா அக்கா” என்று அழைத்துக் கொண்டே நந்திகா பின்னோடு ஓடி வந்து, “எப்படி இருக்க க்கா?” என்று கேட்கவும் அவளுக்கு ஆச்சரியமானது.

முதலில் நம்ப முடியாமல் அவளை பார்த்தவள் பின், “ம்ம்ம் நல்லா இருக்கேன் நந்து” என்று தலையை அசைத்தாள்.  

“சாரி க்கா உன்கிட்ட பேசணும்னு தோனும்... ஆனா வீட்டுல அம்மா அப்பா...” என்றவள் தயக்கத்துடன் நிறுத்த,

“பரவாயில்ல நந்து” என்றவள் சொல்லும் போதே நந்திகா குனிந்து தீபிகாவின் பெருத்திருந்த வயிற்றை நோக்கிவிட்டு,

“எத்தனை மாசம் க்கா?” என்று கண்ணீர் நிறைந்த விழிகளுடன் விசாரித்தாள்.

“ஆறு மாசம்”

தமக்கையின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “உடம்பை நல்லா பார்த்துக்கோ க்கா” என்றவள் அக்கறையுடன் கூறிய போது தீபிகா கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

ஒருவாறு தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவள், “பார்த்துக்கிறேன் நந்து... நீ எங்கேயோ கிளம்பிட்டு இருந்த... போ... டைமாவது... நானும் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்” என்று  சொல்லிவிட்டுத் தன் பாதையில் திரும்பி நடந்தாள்.

தங்கையிடம் நிறைய பேச வேண்டுமென்று மனம் துடித்தப் போதும் அவளிடம் தன் வேதனையை எல்லாம் கொட்டி அழுதுவிடப் போகிறோம் என்ற பயத்தில்தான் நழுவிக் கொண்டாள்.

இந்த எட்டு மாத காலத் திருமண வாழ்க்கை அவளுக்கு நிறைய நிறைய ஏமாற்றங்களையும் அவமானங்களையும் தாங்குவதற்குக் கற்றுத் தந்திருந்த அதேநேரம் உணர்வுகளையும் வலிகளையும் கட்டுப்படுத்திக் கொள்ளவும் ஓரளவு கற்றுத் தந்திருக்கிறது.

விவேக்கைத் தவிர காளிமுத்து உட்பட அந்த வீட்டில் உள்ள எல்லோருமே அவளிடம் அன்பாகவும் அனுசுரனையாகவும் நடந்து கொண்டனர்.

வெட்டியாக ஊர் சுற்றவும் வீணாகப் பொழுதைப் போக்குவதை மட்டும்தான் அவன் தன் வேலையாக வைத்திருந்தான். காதலிக்கும் போது இரசித்து சிலாகிக்கிற விஷயங்கள் எல்லாம் திருமணத்திற்குப் பிறகு முட்டாள்தனங்களாகவும் பொறுப்பற்றத்தனங்களாகவும் தெரிய தொடங்கிவிடுகின்றன. உண்மையில் அப்போதுதான் வாழ்வின் எதார்த்தம் பிடிபடுகிறது.

ஒருமுறை பீரோவில் களைந்திருந்த துணிமணிகளை அவள் அடுக்கிய போது அதிலிருந்து அவனின் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களைப் பார்த்து அதிர்ந்தாள்.

அவன் பத்துக்கும் மேற்பட்ட பாடங்களில் அரியர் வைத்திருந்தான். அதனைக் கண்டு அதிர்ச்சியும் கோபமுமானவள் அவனிடம் அதற்காக சண்டையிட்ட போது இருவருக்கும் இடையிலும் வாக்குவாதம் முற்றியது. அன்று மீண்டும் ஒருமுறை அவளை அடித்துக் கீழே தள்ளிவிட்டான்.

அன்றலிருந்து அவனிடம் இருந்து தனக்கான எதிர்பார்ப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டுவிட்டாள். அதிகம் பேசுவதையும் நிறுத்திவிட்டாள். அவள் என்னதான் அவனிடமிருந்து ஒதுங்கி ஒதுங்கிப் போன போதும் அவனது உடல் தேவைக்கு அவள் தேவையாக இருந்தாள்.

நிறைய எதிர்ப்புகளைக் காட்டிய போதும் அவனது உடல் வலிமையில் அவள் மீண்டும் மீண்டும் தோற்றுதான் போனாள். ஆதலால் வேறு வழியின்றி பிடித்தும் பிடிக்காமலும் அவனைச் சகித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டாள்.

இவ்வாறாக யோசித்துக் கொண்டே நடந்து சென்றவள், “கீரை வாங்கிக்கோங்க மா” என்று குரல் கேட்டு தன் சிந்தனைகள் களைந்து திரும்பினாள். பலகை மீது பரப்பி வைக்கப்பட்டிருந்த அந்தப் பசுமையான கீரைக் கட்டுக்களைப் பார்த்து,

“பார்க்க ப்ரஷா இருக்கு க்கா” என,  

“ஆமா ம்மா... இப்போதான் வந்துது... சிறுகீரை, பருப்பு கீரை, மந்தாக்களி கீரை... எல்லாம் பிரஷா கீதுமா” என்றாள்.

அந்தக் கீரைக்கட்டுக்களை ஆராய்ந்து கொண்டே, “பாலாக்கீரை இல்லையா க்கா” என்று விசாரிக்க,

“இருக்கு ம்மா” என்று அடியிலிருந்து பாலாக்கீரைக் கட்டை எடுத்துக் காட்டினாள். அவற்றை பார்த்து எடுத்து நிமிர்ந்து காசைக் கொடுக்கும் போதுதான் கீரைக்காரம்மா நெற்றியிலிருந்த காயத்தைப் பார்த்தாள்.

“என்ன க்கா ஆச்சு... என்ன அடி... திரும்பியும் உங்க புருசன் அடிச்சிட்டானா?”

“ஆமா ம்மா குடிச்சிட்டு வந்து... அடிச்சு கீழே தள்ளிவுட்டான்... என் நல்ல நேரம் எலும்பு கிலும்பு உடைல... இல்லனா... பொழப்பே கெட்டுப் போயிருக்கும்” என்று தன் நிலையை வருத்ததுடன் புலம்ப,

“இப்படி அடியும் உதையும் வாங்கிட்டு அந்தாளை ஏன் க்கா நீங்க  சகிச்சுக்குன்னு வாழணும்” என்று கேட்டாள் தீபிகா.

“என்னம்மா பண்றது... இப்படியொரு குடிகாரனை என் தலையில கட்டி வைச்சுட்டாங்க... காலத்துக்கும் பழுதுன்னு என் தலையில எழுதி வைச்சு இருக்கு... உங்களை மாதிரி கொஞ்ச நஞ்சம் படிப்பு இருந்தாலாச்சும் தனியா வந்து வாழ்க்கையை நடத்திடலாம்” என்று அந்தப் பெண்மணி கடைசியாகச் சொன்ன வார்த்தை வீடு வரும் வரை அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

பெண்களில் படித்தவர் படிக்காதவர் என்ற பேதமெல்லாம் இல்லை. அவர்கள் பெண்கள். அவ்வளவுதான். அந்தக் கீரைக்கார அம்மாவை விடவும் அவள் வாழ்க்கை ரொம்பவும் மோசமாக இருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.

   இவ்வாறாக யோசித்தபடி அவள் வீட்டிற்குள் நுழைய, “கீரை வாங்கிட்டு வந்திருக்கீங்களா?” என்று பணியாள் மேரி கேட்க,

“ஆமா  க்கா... நாளைக்குக் கீரை செஞ்சிக்கலாம்” என்றாள்.  

“சரிங்க மா” என்று அந்தக் கீரைக்கட்டை வாங்கிக் கொள்ள,

“என் வீட்டுகாரர் வந்தாராக்கா?” என்று விசாரித்தாள்.  

“இல்லமா... ஐயா மட்டும் மதியம் வந்து சாப்பிட்டுப் போனாரு” என்று கூற, அவள் பெருமூச்செறிந்தாள். இரண்டு நாளாக அவன் வீட்டுப் பக்கமே வரவில்லை. அவன் செல்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. எங்கே போனான் என்ன ஆனான் என்று ஒன்றும் தெரியவில்லை.  கணவனைப் பற்றி யோசித்தபடி அறைக்குள் வந்தாள்.

தன் தோள் பையை ஓரமாக வைத்துவிட்டு அப்படியே படுக்கையில் சாய்ந்துவிட்டவள் பெருத்திருந்த தன் வயிற்றைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். ஒவ்வொரு முறை அவ்விதமாக அவள் தொட்டுப் பார்க்கும் போதும்  எதிர்காலத்தைப் பற்றிய பயம் அவள் மனதை இறுக்கிப் பிடிக்கும்.

 ஒரு பக்கம் மனவேதனை என்றால் மற்றொரு பக்கம் உடல் வேதனை. கண்களை மூடி ஓய்ந்து அவள் படுத்திருக்கும் போது மேரி வந்து எட்டி பார்த்து, “ம்மா” என்று அழைக்க,

“ம்ம் சொல்லுங்க க்கா” என்று விட்டு எழுந்து கொள்ள,

“கீரையை ஆய்ஞ்சி பிரிட்ஜில வைச்சிட்டேன் மா” என்று தயங்கித் தயங்கிப் பேசியவள் மேலும், “பையனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும்னு காலைல சொன்னேனே மா” என்று சொல்ல,

“ஆமா சொன்னீங்க இல்ல... சரி கூட்டிட்டுப் போயிட்டு வாங்க க்கா... நைட்டு சமையலை நான் பார்த்துக்கிறேன்” என்று கூற, மேரி புறபட்டுப் போய்விட்டாள்.

தீபிகாவிற்குப் பின்முதுகும் இடையும் சேர்ந்து வலியில் வெட்டியது. காலிலிருந்து அடிபாதம் வரை குடைந்தது.

இந்த வலியுடன் எப்படி வேலை செய்யப் போகிறோம் என்ற ஆயாசத்துடன் படுத்திருந்தவள் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டுப் பின்  சமையலறைக்கு எழுந்து சென்று என்னவெல்லாம் இருக்கிறது என்று திறந்து பார்த்தாள்.

கொஞ்சம் குழம்பும் சாதமும் மட்டுமே மீதம் இருந்தது. இரவு மாமா அத்தை யாரும் சாதம் சாப்பிட மாட்டார்கள். சில நொடிகள் யோசித்தவள் சப்பாத்தி குருமா செய்யலாம் என்று எண்ணி, அதற்குத் தேவையான வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது விக்னேஷ் வந்தான்.

அவன் உடை மாற்றி வரவும், “சாப்பாடு போடட்டுமா விக்கி” என்று கேட்க,

“இல்ல அண்ணி... காபி கொடுங்க” என்றபடி சோஃபாவில் அமர்ந்தான். அவள் காபியைக் கொண்டு வந்து தந்துவிட்டு,

“மேக்ஸ் எக்ஸாம் எப்படி பண்ண?” என்று கேட்க,

“நல்லா பண்ணேன் அண்ணி... எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரிதான் வந்துது... நாளைக்கு கம்பூயூட்டர் சைன்ஸ் எக்ஸாம் இருக்கு... அதுவும் நீங்கதான் சொல்லித் தரணும்” என்றான்.

“கொஞ்சம் சமையல் வேலை எல்லாம் இருக்கு விக்கி... முடிச்சிட்டு வந்துடுறேன்”

“மேரி அக்கா இல்லயா?”

“அவங்க பையனை ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போகணுமாம்... அதான் சீக்கிரம் கிளம்பிட்டாங்க... நான் நைட்டுக்கு சப்பாத்தியும் குருமாவும் செய்றேன்... உனக்கு ஓகே வா?”

“எனக்கு எதுனாலும் ஓகே அண்ணி” என்று சொல்ல அவள்  சமையலறைக்குச் சென்று தன் பணிகளை ஆரம்பிக்க, வனிதா அலைபேசியில் அழைத்தாள்.

இணைப்பை ஏற்றுப் பேசிய விக்னேஷ் பின் சமையலறைக்கு வந்து, “அக்கா உங்க கிட்ட பேசுணுமா அண்ணி?” என்று கொடுக்கவும்,

“சொல்லுங்க கா” என்றாள் தீபிகா.  

“ஆமா... நீ ஏன் சமைச்சிட்டு இருக்க... மேரி எங்கே?”

“அவங்க பையனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும்னு சொன்னாங்க க்கா... அதான்”

“மாசத்துக்கு நாலு தடவை அவங்க இப்படிதான் ஏதாவது காரணம் சொல்றாங்க... நீயும் அனுப்பி விட்டுடுற”

“பாவம் க்கா”

“என்ன பாவம்... இந்த உடம்பை வைச்சிட்டு காலேஜ்ல இருந்து வந்து உன்னால எப்படி வேலை செய்ய முடியும்? சீக்கிரம் போகணும்கிறவங்க நைட்டு சமையலை முடிச்சிட்டுப் போக வேண்டியதுதானே?”

“பரவாயில்ல க்கா விடுங்க”

“என்னத்த பரவாயில்ல... டாக்டர் நீ ரொம்ப வீக்கா இருக்கன்னு சொல்லி இருக்காங்க... சமைக்கிறேன்னு சும்மா உடம்பை ஸ்ட்ரைன் பண்ணிக்காத... விக்னேஷ அனுப்பி விடு... அவன் ஒட்டல இருந்து வாங்கிட்டு வருவேன்.”

“சப்பாத்திதான் க்கா செய்றேன்... ஒன்னும் கஷ்டம் இல்ல”

“நீ சொல் பேச்சே கேட்க மாட்ட இல்ல... பேசாம நான்தான் வீட்டுக்கு வந்து உன்னைப் பார்த்துக்கணும் போல” என்று வனிதா கூறிய போது தீபிகாவின் முகம் மலர்ந்தது.

“வாங்க க்கா... எனக்கும் உங்களைப் பார்க்கணும் போல இருக்கு”

“வர்றேன்... வர்றேன்... வந்து உன் புருஷனையும் ரெண்டு வாங்கு வாங்குலாம்னு இருக்கேன்” என்றதும் தீபிகாவின் குரல் மௌனமாகிவிட்டது.

“தீபா”

“ம்ம்ம்” என்றவள் குரல் கமறியது.

“அப்பாவுக்கும் விவேக்குக்கும் சண்டையாமே... இரண்டு நாளா அவன் வீட்டுக்கு கூட வரலைன்னு விக்கி சொன்னான்”

அவள் மீண்டும் மௌனத்தில் அமிழ்ந்துவிட, “தீபா... என்ன நடந்துச்சு... என்கிட்ட சொல்லு” என்று அழுத்திக் கேட்டாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா”

“தீபா” என்று வனிதாவின் குரல் மிரட்டலாக ஒலிக்கவும் அவள் மெதுவாகப் பேசினாள்.

“ஆமா க்கா மாமாவுக்கும் அவருக்கும் பெரிய பிரச்சனையாயிடுச்சு”  

“என்ன பிரச்சனை?”

“மாமா கூட அவரும் ஆஃபிஸ்க்கு போயிட்டு இருந்தாரு க்கா...  ஒழுங்காதான் போயிட்டு இருந்தாரு... திடீர்னு போன வாரத்துல இருந்து திரும்பியும் பழையபடி ஒழுங்கா வேலைக்குப் போகல போல... மாமா முந்தா நேத்து நைட்டு ஆஃபிஸ்ல இருந்து லோட் ஏத்தி அனுப்பிட்டு வான்னு சொல்லி இருக்காரு... இவர் போகவே இல்ல... அதனால மாமாவுக்கு செம கோபம்... வீட்டுல இரண்டு பேருக்கும் பெரிய சண்டை ஆகிடுச்சு... கன்னாபின்னான்னு பேசிக்கிட்டாங்க.”

”அந்தக் கோபத்துல மாமா அவர்கிட்ட இருந்த கார்ட் அவரோட  பைக் சாவி எல்லாம் புடுங்கி வைச்சிட்டு வீட்டை விட்டுப் போன்னுட்டாரு... இவரும் ரோஷமா இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டேன்னு கோச்சிட்டுப் போயிட்டாரு”

“இவ்வளவு பிரச்சனைனு நான் நினைக்கலயே... அப்பா கூட என்கிட்ட சொல்லல”

“உங்களுக்கு தேவை இல்லாத டென்ஷன் எதுக்குன்னுதான் சொல்லி இருக்க மாட்டாரு”

“அவன் உனக்குக் கூட ஃபோன் பண்ணலயா தீபா?”

“யாரு... அவரு... எனக்கு ஃபோன் பண்ணுவாரா?”

“அப்பாவுக்கும் இவ்வளவு கோபம் ஆகாது” என்று வனிதா வருத்தப்பட,

“மாமா மேல எந்தத் தப்பும் இல்லக்கா... உங்க தம்பி செஞ்சதுதான் சரியில்ல” என்றாள்.

“அவன் ஏன்தான் இப்படி பொறுப்பில்லாம இருக்கானோ... நீ இப்படி இருக்கும் போதாவது அவனுக்குப் பொறுப்பு வர வேண்டாமா?” தீபிகாவின் முகத்தில் ஒரு அலட்சிய  நகைப்பு எட்டிப் பார்த்தது.

“சரி தீபா... நீ உடம்பைப் பார்த்துக்கோ... நான் அவன்கிட்ட பேச முடியுதான்னு பார்க்கிறேன்... ஒரு வேளை அவன் வீட்டுக்கு வந்தான்னா எனக்கு நீ ஃபோன் பண்ணு”

“ம்ம்ம் சரி க்கா” என்று அழைப்பைத் துண்டித்தவள், அதன் பின் சமைப்பதில் மும்முரமாகிவிட்டாள். விவேக்கைப் பற்றி யோசித்துக் கவலைப்படுவது வீணென்று அவளுக்குத் தோன்றியது.

கஜலக்ஷ்மிக்கு இரவு உணவைக் கொடுத்துவிட்டு அவளும் விக்னேஷும் சேர்ந்து அமர்ந்து உண்டனர். அதன் பின் விக்கிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது காளிமுத்து அலைபேசியில் அழைத்து,

“நான் வீட்டுக்கு வரல ம்மா... கொஞ்சம் லோட் அனுப்ப வேண்டி இருக்கு... நீங்க சாப்பிட்டு படுங்க” என்று விட்டு இணைப்பைத் துண்டித்தார். இது எப்போதும் இயல்புதான் என்று நினைத்துக் கொண்டவள் சமைத்த உணவை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு சமையலறையைச் சுத்தம் செய்தாள்.

அதன் பின் வெகுநேரம் விக்கிக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தபடி தானும் படித்துக் கொண்டிருந்தவள் நேரத்தைப் பார்த்துவிட்டு, “மணி பன்னண்டு ஆகிடுச்சு விக்கி... காலைல ஸ்கூலுக்குப் போகணும் இல்ல... போய் படு” என்று அவனை அனுப்பிவிட்டு, அவளும் தன் அறையில் வந்து படுத்தாள்.

அவளுக்கு உடலின் ஒவ்வொரு பாகமும் வலித்தது. வெகுநேரம் புரண்டு புரண்டு படுத்தவள் ரொம்பவும் சிரமப்பட்டு உறங்கிப் போக, காலிங் பெல் அடித்து ஒரு நொடியில் அவள் உறக்கத்தைக் களைத்துவிட்டது.

எழுந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு வேளை மாமா வந்துவிட்டாரோ என்று எண்ணி, அவள் எழுந்து கதவைத் திறக்க எதிரே விவேக் நின்றிருந்தான்.

தூக்கக் கலக்கத்தில் இருந்தவளுக்கு அவனைப் பார்த்ததும் மொத்தமாகத் தூக்கம் களைந்துவிட்டது. அவன் முகமே சரியில்லை. ஒரு நொடி அவனைக் கண்டு திகைப்புற்றவள் அவனை உள்ளே விட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, “சாப்பிடுறீங்களா?” என்று கேட்டாள்.

“வேண்டாம்” என்றவன் நேராக அறைக்குள் சென்று அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருக்க ஒரு நொடி குழப்பமாக அவனை ஏறிட்டவள், அதன் பின் வந்து படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

“இரண்டு நாளா ஒருத்தன் வீட்டுக்கே வரல... அதைப் பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாம நிம்மதியா இருக்க இல்ல நீ?”

“எதுவா இருந்தாலும் காலைல பேசு... எனக்கு டயர்டா இருக்கு தூங்கணும்” என்றவள் தன் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.

“என்னை வீட்டை விட்டுத் துரத்திட்டு என் வீட்டுல என் ரூம்லயே சொகுசா படுத்து நீ மட்டும் தூங்குறியாடி” என்றவன் ஆக்ரோஷமாக அவள் போர்வையை இழுத்துவிட அவள் சலிப்புடன் எழுந்து.  

“உன்கிட்ட சண்டை போட எல்லாம் என் உடம்புல தெம்பு இல்ல... நான் அத்தை ரூம்ல போய் படுத்துக்கிறேன்” என்று செல்ல,

“நில்லுடி” என்றவள் கரத்தை அழுத்திப் பிடித்து நிறுத்தினான்.

“என்ன பிரச்சனை உனக்கு?”

“எங்க அப்பன் என்னை வீட்டை விட்டு துரத்துறான்... நீ அப்படியே கல்லு மாதிரி நின்னு பார்த்துட்டு இருக்கியாடி?”

“வேற என்ன நான் பண்ணனும்... நீ செஞ்ச தப்புக்குதான் அவர் உன்னை வெளியே போன்னே சொன்னாரு”

“ஓ! அப்போ நான் வீட்டை விட்டுப் போனது உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்ல... அப்படிதானே?”

“உண்மையைச் சொல்லணும்னா... ஆமா வருத்தம் இல்ல” என்றவள் அவன் முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டுத் தன் தலையணையையும் போர்வையும் எடுத்துக் கொண்டு செல்ல எத்தனித்தாள். அவன் சீற்றத்துடன்,  

“நான் மட்டும் இல்லனா நீ நடுரோட்ல நின்றிப்படி... *****” என்று இறுதியாகச் சொன்ன இழிவான வார்த்தையில் அதிர்ந்து திரும்பிய தீபிகா,

“இந்த மாதிரி எல்லாம் அசிங்கமா பேசுன அவ்வளவுதான்” என்றவள் எச்சிரிக்கையாக நிறுத்தினாள்.

“ஆமான்டி அப்படிதான்டி பேசுவேன்” என்றவன் திரும்பத் திரும்ப அதே வார்த்தையைச் சொல்லவும் அவளது கோபம் உச்சத்தைத் தொட்டது. அவள் கையிலிருந்தவற்றை எல்லாம் அவன் முகத்தில் விசறி அடித்து,

“உன்னை நம்பி வந்த பாவத்துக்கு நீ இதுவும் பேச... இதுக்கும் மேலயும் பேசுவடா நாயே... இப்பவே மாமாவுக்கு ஃபோன் பண்றேன்... அவர் வந்து உன் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளப் போறாரு” என்றவள் தன் செல்பேசியை எடுக்க,

“என்னை அவரு கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுவாரா... உன்னை நான் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறன்டி” என்றவன் ஆவேசமாக அவள் பின்னங்கழுத்தை அழுத்திப் பிடித்து இழுத்து வந்து வாயிற் கதவைத் திறந்து,

“போடி வெளியே” என்று தள்ளிவிட, அங்கிருந்த படிக்கட்டிலிருந்து தடுமாறி அப்படியே குப்புற தரையில் விழுந்துவிட்டாள்.

“அம்ம்ம்ம்ம்மா” என்று அவள் வலியால் அலற, அவனோ அவளது வலியையும் வேதனையும் பொருட்படுத்தாமல் வாயிற் கதவை மூடிவிட்டுச் சென்றுவிட்டான். அவளால் எழ முடியவில்லை.

உயிரை உருக்கிப் போடுமளவுக்கு வலி எடுத்தது. வெறிச்சோடி இருண்டு போயிருந்த அந்தத் தெருவில் அவள் மட்டும்  தனியாகத் துடித்து அழுது கதறிக் கொண்டிருக்க, அவள் உறுப்பு வழியாக இரத்தம் கசிந்து வெளியேறி உடை மொத்தமாகச் சிவப்பாக மாறியிருந்தது.

Quote

Super ma 

You cannot copy content