You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam Kondenadi - 1

Quote

கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி

1

பொறாமை தீ

அந்த சமையலறை ஒரே அமளிதுமளிப் பட்டுக் கொண்டிருந்தது. அவ்வப்போது கலகலவென பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டதில்  டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த ரஞ்சனும் மோகனும் லேசாய் கலக்கமடைந்தனர்.

"அப்படி என்னதா ண்ணா அவ பண்ணிட்டிருக்கா?" மோகன் கொஞ்சம் அஞ்சிய தோரணையில் தன் தமையன் ரஞ்சனிடம் வினவ,

"தெரியலயேடா... ஏதோ சைனீஸ் டிஷ்... குங்ப்ஃவூ பாண்டான்னு... சொல்லிட்டுப் போனாளே" என்றான் ரஞ்சன்.

"யோவ் அண்ணா... அது பாண்டா லாம் இல்ல... குங் பஃவ்னு ஏதோ..." என்று மோகன் யோசித்த மேனிக்கு மேலே பார்க்க,

"நோ லா... அது பேர் குங் பஃவ் சிக்கன்" என்று சொல்லியபடி வெளியே வந்து நின்றாள் ஷிவானி. அவள் கரத்தில் அவள் சொன்ன பெயருடைய அந்த உணவு பண்டமிருக்க, மோகனும் ரஞ்சனும் அதனைப் பார்த்து தங்கள் பார்வைகளை அகல விரித்தனர். வாயையும் சேர்த்தே!

அந்த உணவை பார்வையாலேயும் வாசனையாலுமே பாதி விழுங்கிவிட்டான் மோகன். அவள் அதனை டேபிள் மீது வைத்த மாத்திரத்தில் மோகன் சாப்பிடும் ஆவலில் அதனைத் தன்புறம் இழுக்க,

"இரு மோக்... இன்னும் சூப் ரெடியாகல... அதான் பஃர்ஸ்ட்"  என்று சொல்லி அவனிடம் இருந்து அவள் அந்த உணவை தள்ளிவைக்க, வாயில் ஊறிய உமிழ் நீரை விழுங்கியபடி, "என்ன ஷிவ்வ்வ்வா ?" என்று சலிபுற்றான்  மோகன்.

"இதோ... ஜஸ்ட் பைஃவ் மினிட்ஸ்ல... ரெடியாகிடும்" என்றவள் மீண்டும் சமையலறைக்குள் புகுந்து கொள்ள,

"ம்ம்க்கும்... இப்படிதான் அஞ்சு மணிநேரமா சொல்லிட்டிருக்கா" என்று மோகன் அலுத்துக் கொண்டுவிட்டு, அவள் வருகிறாளா என எட்டிப் பார்த்தபடி மெல்ல அந்த குங் பஃவ் சிக்கனை தன்னருகில் இழுத்தான்.

ரஞ்சன் உடனே, "ஷிவானினினினி" என்று ராகமாய் அவளை அழைக்க,

"யா கம்மிங் கம்மிங்" என்று உள்ளுருந்தபடியே குரல் கொடுத்தாள் ஷிவானி.

மோகன் தன் கரத்தை சடாரென மடக்கி உள்ளே வைத்துக் கொண்டு தன் தமையனை முறைத்தபடி, "யூ டூ ப்ரூட்டஸ்" என்றான்.

"அவதான் வரேன்னு சொன்னால்ல... அதுக்குள்ள என்னடா அவசரம்"

 "அட போடாங்... அவ எப்போ வந்து... நான் எப்போ சாப்பிட்டு" சலிப்போடு மோகன் சமையலறைக்குள் எட்டிப் பார்க்க உள்ளிருந்து வாசனை மட்டும்தான் வந்தது. அவள் வரக் காணோம்.

அவர்கள் இருவரும் இப்போது இருப்பது மலேசியாவில் உள்ள செலங்கூர் மாநிலத்தில் இருக்கும் சுபங்ஜெயா! அங்கிருக்கும் வீடுகள் யாவும் கண்ணாடி மாளிகைகள் போல பளபளக்க, அது வசதியானவர்கள் வசிப்பிடம்  என்பது அதன் ஆடம்பரத்தை பார்க்கும் போதே விளங்கிற்று.

அவர்கள் இப்போது இருக்கும் ஷிவானி வீடும் கூட அத்தகைய வசதி படைத்தவர்களின் குடியிருப்புதான். வீட்டின் பொருட்கள் எல்லாம் ஆடம்பரமாகவும் அதிநவீனமாகவும் காட்சியளிக்க, அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தாலே ஒரு நாள் முடிந்துவிடும் போல.

அத்தனை விசாலமாய் பரந்துவிரிந்திருந்தது அந்த வீட்டின் கட்டமைப்பு. அதற்கேற்றாற் போல் அந்த வீட்டின் பராமரிப்பிற்கு என்றே  நிறைய வேலையாட்கள் இருந்தனர். அதோடு சமையலுக்கென்றும் ஆட்கள் தனியே இருக்க, ஷிவானி அவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு தானே சமைக்கிறாள்  எனில் அதற்கு ஒரே காரணம்... சமையல் கலை மீதான அவளின் ஆர்வம். வெறி என்றும் சொல்லலாம். அதுதான் அவள் படிக்கும் படிப்பும் கூட. எல்லா வகையான சமையல்களும் நன்கறிந்தவள்.

அதுவும் சைனீஸ் குஸைன் அவளுக்கு ரொம்பவும் விருப்பமான ஒன்று. அதனால்தான் சென்னையில் இருந்து வந்திருக்கும் தன் அத்தை மகன்கள் இருவரையும் சோதனை எலியாய் வைத்துத் தன் சாதனையை காட்ட முனைந்துக் கொண்டிருந்தாள்.

ஷிவானியின் தந்தை சபரி... தாய் வேதவள்ளி. சபரி பங்குசந்தை தொழிலில் பெரும் வல்லமை படைத்தவர். எந்த பங்குகளை எப்போது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் என துல்லியமாய் கணக்கிட்டு சொல்வது அவருடைய சிறப்பு. அதுவே மலேசியாவில் அவரின் இத்தகைய வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் காரணமும் கூட.

பிழைக்க வந்த இடத்தில் பெரும் தொழில் ஜாம்பவனாக மாறுவதெல்லாம் சாதாரணமான விஷயமா என்ன?

மோகனும் ரஞ்சனும் சபரியின் சொந்த அக்கா நளினியின் மகன்கள். நளினியின் கணவர் அரவிந்தன் சென்னையில் உள்ள பெரிய நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகராய் இருக்கிறார்.

கிட்டதட்ட சபரி தன் தமக்கையை விட்டு தன் நண்பனின் உதவியோடு மலேசியாவிற்கு வந்து பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன.  தன் திறமையால் பேரும் புகழும் ஈட்டியவர் நாளடைவில் அங்கேயே நிரந்தரமாய் குடிபெயர்ந்துவிட்டார்.

அவ்வப்போது நளினி குடும்பம் மலேசியாவிற்கு வருவதும் சபரி குடும்பமும் அத்தி பூத்தது போல சென்னையை எட்டி பார்த்து விட்டு வருவதும் நடக்கும். அப்படி வருகை தந்ததன் விளைவாகவே ரஞ்சனும் மோகனும் அவளிடம் இப்போது சிக்கி கொண்டனர்.

ஷிவானி வாயில் நுழையாத மாதிரியான பெயர்களோடு வகைவகையாய் பன்னாட்டு உணவு பண்டங்களை எடுத்து வந்து அந்த டைனிங் டேபிள் முழவதையும் நிறைத்தாள்.

அதோடு அவற்றை எல்லாம் ஒன்றொன்றாய் அவர்களிடம் காண்பித்து, "இது மலேசியன் பேஃவரட் புஃட் நாஸி லெமாக்(nasilemak)...  இதெல்லாம் சைனீஸ்... ஸ்டீம் போட்(steam boat) ... சஃவ் மெயின்(chao main)" என்றவள் சொல்லிக் கொண்டே போக,

மோகன் வயிற்றைப் பிடித்து கொண்டு, "அய்யோ சிவா போதும்... பசிக்குது... எனக்கு பேரெல்லாம் வேணாம்... சோறுதான் வேணும்" என்று அவன் வெளிப்படையாய் கேட்டு விட,

அவள் சிரித்துவிட்டு, "இதோ ஓன் மினிட்" என்று மீண்டும் உள்ளே ஓடினாள்.

"டேய் மோகன்... கொஞ்சமாச்சும் டீஸன்ட்டா நடந்துக்கோ" ரஞ்சன் தம்பியை பார்த்து முறைக்க, "அட போங்கப்பா... சாப்பாட்டுல என்ன டீஸ்ன்ஸி ? பசி வந்தா பத்தும் பறந்திரும்... இன்னும் கொஞ்சம் விட்டா நான் சுருண்டு விழுந்திருவேன் பார்த்துக்கோ" என்றவன் புலம்பித் தீர்க்கும் போது ஷிவானி வெளியே வந்தாள்.

ஏதோ ஓரு வித்தியாசமான பெயரைச் சொல்லி அவள் எடுத்து வந்த சூப்பை அவர்கள் முன்னிலையில் வைக்க, காத்திருந்து காத்திருந்து மோகனின் பசியெல்லாம் எப்போதோ காற்றோடு பறந்துப் போயிருந்தது. சூப்பை பருகினாலாவது பசி மீண்டும் பிரவேசம் செய்கிறதா என்றெண்ணி அவசர அவசரமாய் தன் கரங்களை சூடேற்றிக் கொண்டு அந்த சூப்பை ஸ்பூனில் பருக, அப்படியே ஸ்தம்பித்துப் போய்விட்டான் மோகன்.

உலகம் இரண்டாய் பிளவுற்றது. அவன் நாவிற்கும் தொண்டைக்கும் பெரும் போர் மூள ஆரம்பித்தது. நாக்கு அதை உள்ளே தள்ள பார்க்க, அவன் தொண்டைக் குழி அதனை வெளியே தள்ள முயன்று கொண்டிருந்தது.

ரஞ்சனோ புன்னகையோடு, "எக்சலன்ட் சிவா" என்று பாராட்ட மோகன் வாயைத் திறவ முடியாமல், "ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்" என்று ஊமை பாஷையில் அவளை மெச்சினான்.

வேறுவழி! வருங்கால மனைவி ஆயிற்றே... பிடிக்கவில்லை எனினும் பாராட்டிவிட வேண்டியதுதான்.

"ரியலி" என்றவள் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்காத குறை. அவள் முகத்தில் அத்தனை பரவசம்.

"தேங்க்ஸ் லா" என்று சொன்னவள் இன்னும் ஆர்வமாய் அவள் சமைத்து வைத்த உணவுகளை அவர்கள் இருவர் தட்டிலும் பரிமாற, மோகன் பரிதாபமாய் ரஞ்சனைப் பார்க்க, அவனோ சமிஞ்சையால் சாப்பிடச் சொல்லி தம்பியை மிரட்டினான்.

ஷிவானி அவர்களைப் பார்த்து, "என்ன லா?!... பார்த்துட்டே இருக்கீங்க... சாப்பிடுங்க" என்க, "இதோ சாப்பிடுறோம்" என்று ரஞ்சன் உரைக்கும் போது அவளின் கைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்க, "ஜஸ்ட எ மினிட்" என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

மோகன் வேகமாய் எழுந்து வாஷ்பேஷினில் அந்த சூப்பை உமிழ்ந்துவிட்டு, "என்ன கன்றாவி இது?!" என்றான். "டேய் அதான் சொன்னா இல்ல... போர்க்னு"

மோகன் சகிக்காமல், "உவேக்... என்னால முடியாதுப்பா" என்றான்.

"டே இதெல்லாம் சைனிஸ் டிஷ் டா... அப்படிதான் இருக்கும்" என்று ரஞ்சன் சற்றும் மனம் தளராமல் அந்த சூப்பைக் குடித்து முழுவதுமாய் முடித்தான். அவனுக்கு எதையும் தாங்கும் இதயம் போல. ஆனால் மோகனால் முடியவில்லையே!

"ஒழுங்கா வந்து சாப்பிடற" என்று ரஞ்சன் மிரட்டல் தொனியில் தன்  தம்பியை அழைக்க, அவன் அந்த உணவு பண்டங்களை எல்லாம் மலைப்பாய் பார்த்தபடி, "இதையெல்லாம் சாப்பிட்டா சேகர் செத்திருவான்" என்றான்.

"யாரு லா சேகர்?" என்று கேட்டபடி ஷிவானி அவர்கள் உரையாடலுக்குள் நுழைய ரஞ்சன் உடனே, "அது... எங்க பக்கத்து வீட்டில இருக்கிற டாக் நேம்" என்று சொல்லிச் சமாளிக்க மோகன் அவனை முறைப்பாய் பார்த்தான்.

"இருங்க... என் ப்ரண்ட் வந்திருக்கான்... உங்களுக்கு அவனை இன்ட்ரோ பண்றேன்" என்று சொன்னவள் அவசரமாய் வாசல் புறம் சென்று, அப்படியே மைதா மாவில் பிசைந்து வைத்த ஓர் சைனா மேட் ஆடவனோடு வந்து நின்றாள். அவனோ அவளோடு அத்தனை நெருக்கமாய் உரசிக் கொண்டு வர, மோகனுக்கு பொறாமை தீ உள்ளூர படர ஆரம்பித்தது.

ஷிவானி பேரழகி என்று விவரிக்க முடியாவிட்டாலும் அவள் அழகுதான். அதுவும் அவளின் அந்த மாநிறமே பார்ப்பவர்களை வசீகரிக்க வைத்திடும். மலேசியாவிலேயே வசித்தாலும் அவள் முகமும் நிறமும் அவள் அக்மார்க் தமிழ் பெண் என்பதைக் காட்டி கொடுத்துவிட,  அவளின் ஆடைகள்தாம் அவளை வேற்று நாட்டு பெண்ணாக காண்பித்துக் கொண்டிருந்தது.

ஸ்லீவ்லஸ் டைட் டாப்ஸும்... முட்டிக்கு மேல் தெரியும் ஷாட்ஸ் என அவள் உடை சற்று விரசமாய் இருந்தாலும் அவளின் ஒல்லியான உயரமான தேகத்திற்கு அவை ஒன்றும் அந்தளவிற்கு  ஆபாசமாய் தெரியவில்லை.அவையெல்லாம் தாண்டி அவளின் குழந்தைத்தனமான பேச்சிலும் சிரிப்பிலும் அவளிடம் பருவப் பெண் என்ற சாயலே படரவில்லை என்பதுதான் உண்மை.

மோகனுக்கு ஷிவானியிடம் என்ன பிடித்ததெல்லாம் தெரியாது. ஆனால் அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற அவா. ஏனெனில் ரஞ்சன் அவளை விட ஐந்து வயது பெரியவன். மோகனுக்குதான் அவளுடன் ஓத்த வயது. அதுமட்டுமின்றி ரஞ்சனின் திருமணம் ஆறுமாதங்கள் முன்னர் நடந்தேறிய போது, அடுத்து ஷிவானி மோகன் திருமணம் என உறவினர்கள் தெரியாமல் தவறவிட்ட வார்த்தை அவனின் ஆசைத் தீயை அதீதமாய் ஏற்றிவிட்டது.

அதனால்தான் அந்த சைனாக்காரன் அவளருகில் அத்தனை நெருக்கமாய் வர... அவனால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் தம்பியின் முகம் சுணங்கிப் போவதை ரஞ்சனும் ஒருவாறு கவனிக்க அவள் அப்போது அவர்கள் இருவரிடமும்,

"(he is chiang kevin) ஹீ இஸ் சியாங் கெவின்... என்னோட கிளாஸ் மேட்... அன் மை க்ளோஸ் ப்ரண்ட் டூ" என்று அவன் தோள் மீதுக் கை போட்டு அறிமுகம் செய்தாள். அந்த நொடி மோகன் மனதில் பொறாமை தீ காட்டுத் தீ கணக்காய் பரவிக் கொண்டிருந்தது.

அவள் சியாங் கெவினிடம், "திஸ் இஸ் மோகன்... ரஞ்சன்... மை ரிலேட்டிவ்ஸ்... ப்ஃரம் இந்தியா" என்று அறிமுகம் செய்ய, அந்த சைனாக்காரனும் அவர்களுடன் ஆர்வமாய் கைகுலுக்கினான்.

பின் கெவினின் பார்வை டைனிங் டேபிளில் நிறைந்திருந்த உணவு பண்டங்களைப் பார்த்து, "வாவ்வ்வ்வ்... ஷிவு... யூ மேட் ஆல் திஸ்" என்று வியப்புறக் கேட்க, "எஸ் கெவின்... கம்... ஜாயின் வித் ஹஸ்" என்று சொல்லி அவனையும் அவர்களோடு உணவு உண்ண அமர வைத்தாள். அவள் மூவருக்கும் பரிமாற அந்த உணவுகளை சுவைப் பார்த்த கெவினோ அவள் சமையலைப் பாராட்ட அவள் கரத்தை பற்றி சைனா பாஷையில் ஏதோ சொல்ல, அவள் அவன் தோளில் தட்டி வெட்கப்பட்டாள். அது ஏதோ அவர்களுக்கு மட்டும் புரியும் ரகசிய சம்பாஷணை போல!

ரஞ்சன் அப்போது மோகன் காதோடு, "நீயும் ஏதாவது பாராட்டேன் டா... பாரு அந்த சைனா மேட் எப்படி அவகிட்ட ஸ்கோர் பண்றான்" என்க,

அதே கவலைதான் மோகனுக்கும் அப்போது! ஆனால் அவன் பாராட்டும் நிலைமையில் இல்லை. அவன் வாயை திறக்க போய் அவன் சிரமப்பட்டு உள்ளே தள்ளிய உணவெல்லாம் வெளியே வந்து விழுந்துவிட்டால்... அறை வேக்காடாய் மோகனின் வயிற்றுக்குள் சென்ற உணவெல்லாம் உள்ளே சென்று வெந்து தீய்ந்துக் கொண்டிருந்தது.

அவனின் கவலைக்கு ஏற்றாற் போலத்தான் கெவினும் ஷிவானியும் அத்தனை நெருக்கமாய் பேசிக் கொண்டிருக்க,

ரஞ்சன் அப்போது, "ஏழாம் அறிவு படத்தில வந்த டோங் லீ மாதிரியே இருக்கான் இல்லடா இவன்" என்று மோகனின் காதோடு உரைக்க, "ரொம்ப முக்கியமாக்கும்" என்றவன் தன் தமையனை பார்த்து மிகுந்த எரிச்சலானான்.

ரஞ்சன் புன்னகை ததும்ப, "இந்த டோங்க் லீதான் உனக்கு வில்லன் போல!" என்று சொல்லி வாய்க்குள் சிரிக்க அதற்கு மேல் முடியாமல் எழுந்து கை அலம்பிக் கொண்டான் மோகன்.

"என்ன மோக்?... போதுமா... இன்னும் நாஸி லெமாக்... இருக்கே" என்று ஷிவானி சொல்ல,

"எனக்குப் போதும்... நீ உன் ப்ரெண்டு கியாங் செவினை கவனி" என்று குத்தலாய் பதிலுரைத்தான் மோகன். அவளோ, "மோக்... அது கியாங் செவின் இல்ல... சியாங் கெவின்" என்றாள். அவனோ அழுத்தமாய்  அவளை முறைத்துவிட்டு அங்கிருந்து அகல, அவனின் எண்ணம் என்னவென்று அவளால் யூகிக்கவும் முடியவில்லை.

ஆனால் ரஞ்சன் தன் தம்பியின் வேதனையைப் புரிந்து சில நிமிடங்களில் அவன் பின்னோடு வந்து நின்று, "அந்த சைனா மேட் ஜஸ்ட் அவளோட ப்ரெண்டு டா" என்று தெளிவுப்படுத்த மோகனுக்கோ  அவன் வார்த்தையை ஏற்க முடியவில்லை. அதுவும் அவள் அவனோடு  இயைந்து கொண்டு நிற்பதைப் பார்த்தால் அது வெறும் நட்பு ரீதியான உறவென்று அவனால் நம்பமுடிவில்லை.

அதுவும் சிறு வயதிலிருந்து ஷிவானிதான் அவனுக்கென்று பேசி வைத்திருக்க, புதிதாய் எங்கிருந்து முளைத்தான் இந்தச்  சைனாக்காரன் என்று உள்ளூர அவன் பொறுமினான்.

மோகன் மனதில் எரியும் தீ கட்டுப்படுத்த முடியாத நிலையில் வளர்ந்து கொண்டே இருந்தது. அதுவே இனி ஷிவானி வாழ்வில் நடைபெறப் போகும்  விபரீதங்களுக்கு  மூலகாரணியாக அமையப் போகிறது.

உண்மையிலேயே மோகனுக்கு வில்லனாய் வரப் போகிறவன் கெவின் அல்லவே! அவன் தமிழ் நாட்டில் நெல்லை நகரத்தில் அல்லவா வசித்து வருகிறான். சற்றும் அவளின் பழக்கவழக்கங்களுக்கு சம்பந்தமில்லாமல்!

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content