You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 16

Quote

16

எதிரிக் கூடாரம்

குருவிற்கு தான் செய்தது தவறென்று தெரியும். அதே நேரம் அவனாலும் அவளிடத்தில் தன் கண்ணியத்தைக் காத்து கொள்ள முடியவில்லை.

அவளை வாரி அணைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவனின் உள்ளூர இருந்த ஆசையை கொஞ்சம் வஞ்சமாய் தீர்த்துக் கொண்டுவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் இப்பொழுது யோசித்துப் பார்த்தால் தான் செய்த காரியத்தால் அவளின் மனநிலை என்னவாக இருக்கும் என்று கவலையாய் இருந்தது. அதோடு தான் இல்லாத நேரத்தில் அவள் இதை மனதில் வைத்துக் கொண்டு புறப்படத் தயாராகிவிட்டால்... விடக்கூடாதே?!

இப்படியான சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனிடம் சுப்பு, "ஏம்ல குரு... என்னல ஆச்சு உனக்கு? எப்ப வந்தாலும்... இது சரியில்ல, அது குறை, இதை நொட்டைன்னு குத்தம் சொல்லிக்கிட்டே திரிவே... இன்னைக்கு என்னவோ உன் திருவாயை திறக்கவே மாட்டிகிறீக" என்று கேட்டு வைக்க குருவிற்கே தன் செய்கைகள் புதிதாகத்தான் இருந்தது.

ஆனால் என்ன செய்ய? அவளின்றி ஒரு அணுவும் அசைய மாட்டேன் என்றது அவனுக்கு. சுப்புவின் கேள்விக்குப் பெரிதாக பதில் உரைக்காமல்,

"உன் சோலிய பாருவே" என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தான்.

"நீ என்னமோ சரியலில்ல... அதுவும் மலேசியாகாரக வந்ததில இருந்து" என்று சொல்லி முடிப்பதற்கு முன்னதாக,

"நீயுமா ல" என்று சலித்தான் குரு. "அப்போ அதான் விஷயமா?"

"சரியான நசைல நீ... சத்த நேரம் சும்மா இருக்க மாட்டீகளா?" என்று தன் அறை நோக்கி விறுவிறுவென நடந்தவன் மீண்டும் அதே வேகத்தில் திரும்பி வந்து சுப்பு முன்னிலையில் நின்றான்.

"என்னல... போன வேகத்தில திரும்ப வர... எதையாச்சும் மறந்திட்டியா?"

அப்போது குருவின் விழிகள் சுப்புவை கூர்மையாய் அளவெடுத்தபடி, "உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்" என்றவன் சொல்ல

"நேத்து கணக்கெல்லாம் எழுதி உன் மேசை மேல காலையில வைச்சிட்டேன்ல" என்று சுப்பு பதிலுரைத்தான்.

"அது இல்லவே"

"பின்ன"

"சமீபத்தில ஐஸ்ஸை நீ பார்த்துப் பேசினியோ?!" இந்த கேள்வியைக் கேட்ட மாத்திரத்தில் சுப்புவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

"அட நீ வேற... அந்த புள்ளைய நான் பார்த்தே ரொம்ப நாளாச்சு"

"அப்படியா... ஆனா அவ நேத்து உன்னை பார்த்ததா சொன்னாளே... நீ கூட அவகிட்ட ஏதோ சொன்னதா?" என்று குரு போட்டு வாங்க,

'சரியான ஓட்டவாயி... போட்டுக் கொடுத்திட்டாளே' என்று மனதில் எண்ணியவன் எப்படி தன் நண்பனை சமாளிப்பதென தீவிரமாய் யோசிக்க, அப்போதைக்கு தப்பிக்கும் உபாயம் ஒன்றும் அவன் மூளைக்கு எட்டவில்லை.

குரு அவனைக் கூர்ந்து பார்த்து, "என்னல திருவிழால காணாம போனவ மாறி முழிக்குத... அப்போ நீதான் ஐஸ்கிட்ட நான் ஷிவானியை பைக்ல கூட்டிட்டு போன விசயத்தை போட்டுக் கொடுத்திருக்க" என்க,

"அதெல்லாம் நான் ஒண்ணும் சொல்லலவே... வேறு யாராச்சும் நீங்க ஒண்ணா போனதைப் பார்த்து அவகிட்ட சொல்லியிருப்பாங்க"

"பைக்ல போனதை... வேற யாராச்சும் பார்த்து சொல்லியிருக்கலாம்... ஆனா அல்வா விஷயத்தை" குரு தன் ஒற்றை புருவத்தை ஏற்றி அவனை ஆழமாய் பார்க்க,

"அது... நம்ம மெஸ்ல வேலை செய்றவங்க யாராச்சும்" என்று சமாளிக்க முற்பட குரு உக்கிரமானான்.

"அடிங்க... கூடவே இருந்து குழி பறிக்குதீகளா?"

"நான் போய் அப்படி செய்வனா குரு... உன் அக்கா மவ புளுகியிருப்பா... அதை போய் நம்பிட்டு"

"என் அக்கா மவளுகளுக்கு வாய் நீளம்தான்... ஆனா பொய்யெல்லாம் சொல்ல மாட்டாக... நீதான் ஏதோ கோக்கு மாக்கு வேலையைப் பார்த்திருக்க" என்று சொல்ல சுப்பு எச்சிலை விழுங்கிக் கொண்டான்.

குரு மேலும், "ஆமா... நீ எதுக்குல ஐஸ்கிட்ட இதெல்லாம் சொன்ன... உனக்கு எதுக்குல இந்த வேண்டாத வேலை?!" என்றவன் சந்தேகமாய் கேள்வி எழுப்ப, "அது" என்று பதில் சொல்ல முடியாமல் திணறினான் சுப்பு.

"என்னல ஐஸுக்கு... ரூட் ஏதாவது போடுதீகளோ?!" என்று கேட்ட நொடி அசடு வழிந்தான் சுப்பு.

"ஓ...இதான் சேதியா" என்றவன் ஏற்ற இறக்கமாய் ஒரு பார்வை பார்க்க சுப்பு திக்கித் திணறி,

"ஐஸுக்கு கூட என்னைய பிடிக்கும்ல... நீ வேணா கேட்டு பாரேன்"

"யாரு... அவளுக்கு... உன்னைய பிடிக்கும்... கேட்கிறவன் கேனப்  பயலா இருந்தா எலி ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொல்வீங்கடா"

"அம்புட்டு அக்கா பொண்ணு வைச்சிருக்க... அதுல ஒண்ண நான் பார்க்கக் கூடாதோ?!"

"பார்ப்பீக பார்ப்பீக... ஊறாம்புட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னானா... யாருகிட்ட... சங்கை அறுத்துப்புடுவேன்... உம்மை சோலியை மட்டும் பார்த்துப்புட்டு போற வழியைப் பாரும்" என்று குரு மிரட்ட சுப்புவின் முகம் வாடியது.

அவனிடமிருந்து இப்படிதான் பதில் வருமென்று சுப்புவுக்கு நன்றாக தெரியும். அவன் உயிர் தோழன் என்பதால் வாய் வார்த்தையோடு விட்டுவிட்டான். வேறு யாராவது இருந்தால் வாயால் பேசியிருக்க மாட்டான்.

எந்த அக்கா மகளுக்கு பிரச்சனையென்றாலும் பாதுகாப்பு அரணாய் குருவே முதல் ஆளாய் நிற்பான். அதனாலேயே என்னவோ அவர்கள் எல்லோருக்குமே குருவின் மீது தனி ஈர்ப்பு.

ஆனால் குருவோ ஈர்க்கப்பட்டது ஷிவானியிடம் மட்டும்தான். மற்ற எல்லா அக்கா மகளையும் உறவென்று பார்த்தாலும் ஷிவானியின் மீது மட்டுமே அவன் மனம் அதீத உரிமையைக் கொண்டுவிட்டது.

ஆனால் அந்த உரிமையில் அவன் ஷிவானியிடம் நடந்து கொண்ட விதம் அவள் மனதை வெகுவாய் காயப்படுத்தியிருந்தது. நொடி நேரத்தில் அவன் செய்த அந்த காதல் தாக்குதலை அவள் எதிர்பார்க்கவில்லை. மென்மையான கன்னங்களை முத்தத்தோடு வருடிய அவன் மீசை ரோமம் அவளுக்குள் ஏற்படுத்திய அந்த சொல்லவொண்ணாத உணர்வுகளை எங்கனம் யாரிடம் விவரிப்பாள்.

கண்ணீரும் கோபமும் ஒரே நேரத்தில் அவளை மூழ்கடிக்க, முதலில் அதற்கு பலியானது அவளின் கைப்பேசிதான். அவள் அதனை தூக்கியெறிய அது இரண்டு துண்டாய் தரையில் கிடந்தது.

அவள் படுக்கையின் மீது சம்மேளம் போட்டு தலையை அழுந்த பிடித்துக் கொண்டாள். அதே நேரம் மகளின் பேசியோடு இணைய முடியாத தவிப்பில் மனைவியை அழைத்தார் சபரி.

"வாணிம்மா எங்கே? ஏன் அவ போஃன் ஸ்விட்ச்ட் ஆஃபல் இருக்கு" என்று மனைவியிடம் சற்று இறுக்கமான தோரணையில் கேட்க,

வேதாவிற்கு பதட்டமானது. எங்கே அவள் எல்லாவற்றையும் தன் தந்தையிடம் வத்தி வைத்து விடுவாளோ?!

அதே நேரம் அவள்  போஃனை ஊர் பூராவும் தேடிக் கொண்டிருந்தாளே!என்று யோசனையில் இருக்க, "வேதா" என்ற சபரியின் அழைப்பு அவரை மீட்டெடுத்தது.

"அவ குளிக்க போயிருக்காங்க... போஃன்ல சார்ஜ் இல்ல அதான் ஸ்விட்ச்ட் ஆஃப் ஆயிடுச்சு" என்று அந்த நேரத்திற்கு வாயில் வந்த பொய்யை சொல்லி சமாளித்துவிட்டார்.

"சரி அவ வந்ததும் கால் பண்ண சொல்லு... அவ போஃனை ஆன் பண்ணி வை"

"சொல்றேங்க... நீங்க சாப்பிட்டீங்களா?!"

"நான் சாப்பிட்டா உனக்கென்ன சாப்பிடாட்டிதான் உனக்கென்ன... போஃனை வை"

"ஏன் இப்போ கோபப்படுறீங்க?"

"கோபப்படாம... நீ பாட்டுக்கு சொன்னதே போதும்னு போயிட்ட... ஓரே நாள்ல இந்த இருபது வருஷ வாழ்க்கையை ஒண்ணுமில்லாம மாத்திட்ட இல்ல"

"ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க... நானும் வாணிம்மாவும் ஒருவாரத்தில வந்திர மாட்டோமா?"

"ஒரு வாரம்... சுலபமா சொல்லிட்ட... இந்த இரண்டு நாள்ல எனக்கு இங்க பைத்தியமே பிடிக்குது"

"புரியுது... உங்க பொண்ணை பார்க்காம உங்களுக்கு கஷ்டமாயிருக்கு"

"அதென்ன பொண்ண பார்க்காம... உன்னைய பார்க்காமலும்தான்... எனக்கு இங்க எந்த வேலையும் ஓடல... ஆனா நீ மட்டும்  என்னை விட்டு சந்தோஷமா இருக்க இல்ல" என்று கேட்க வேதாவிற்கு திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டிய உணர்வுதான். என்ன பேசுவதென்று புரியாமல் அவர் மௌனமாய் இருக்க,

"ஏன் வேதா? உனக்கு என்னை பிரிஞ்சி கஷ்டமாவே இல்லயா?!" என்றவர் இறங்கிய தொனியில் குரலைத் தாழ்த்திக் கேட்க வேதாவிற்கு ஆச்சர்யமும் சந்தோஷமும் ஒரு சேரப் பொங்கியது.

அதே நேரம் இந்த அக்கறை தன்னை இங்கிருந்து புறப்பட்டு வர வைக்கும் யுக்தியோ என்று மெல்ல சுதாரித்துக் கொண்டவர்,

"அவ்வளவு கஷ்டமா இருந்தா நீங்களும் இங்க வந்து இருக்கலாம்ல" என்று சொல்ல, அடுத்த நொடியே மேலே பேசாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டார் சபரி.

'அதானே பார்த்தேன்... இந்த மனுஷனாவது இறங்கி வர்றதாவது' என்று மனதிற்குள் எண்ணி சலித்துக் கொண்டார் வேதா.

அதற்கு பிறகாய் வேதா மகளைத் தேடி கொண்டு அறைக்கு போக அங்கே அவள் போஃன் இரண்டு துண்டாய் உடைந்திருந்தது. அதிர்ச்சியோடு அதனை கையிலெடுத்தவர்,

"என்னடி வேலை பண்ணி வைச்சிருக்க? இப்படி தூக்கி போட்டு உடைக்கிற பழக்கத்தை நீ எப்பதான் நிறுத்த போற" என்று வினவியவர்

அவள் பேசி துண்டுகளை இணைத்து அதற்கு உயிர் கொடுக்க முயற்சி செய்ய அது ஆனாக மாட்டேன் என்று அடம்பிடித்தது.

"ஏ வாணிம்மா உன் போஃன் வொர்க் ஆகலடி" என்று பதட்டமாய் உரைக்க, "போய் தொலையுது விடும்மா" என்றாள்.

"போய் தொலையுதா... ஏன் சொல்லமாட்ட... எல்லாம் உங்க அப்பா எக்கசக்கம்மா சம்பாத்திக்கிறாரு இல்ல... அந்த திமிரு" என்று அவர் புலம்ப, "மீ ப்ளீஸ்... நீயும் மத்தவங்களை போல என்னை இரிடேட் பண்ணாதே"

"வேற யாருடி உன்னை இரிடேட் பண்ணது" என்றவர் குழப்பமாய் கேட்கவும்

"உன் அருமை தம்பி இல்ல" என்று கோப ஆவேசமாய்  ஆரம்பித்தவள் அடுத்த வார்த்தையை எப்படி சொல்வதென திக்கித் திணறியபடி தடுமாற

வேதா அவள் முகத்தை உற்றுப் பார்த்து, "திரும்பியும் உன்னைத் திட்டிட்டான்...  அதானே?!" என்று அவரே தீர்மானித்துக் கொண்டு ஒரு கேள்வியை கேட்டார்.

ஷிவானி ஆமென்றும் தலை அசைக்க முடியாமல் இல்லையென்றும் சொல்ல முடியாமல் இருபுறமும் குழப்பமாய் தலையசைக்க

வேதா புரியாத பார்வையோடு, "என்னடி ஆச்சு உனக்கு?... ஏன்டி இப்படி பேயறைஞ்ச மாதிரி உட்கார்ந்திட்டிருக்க" என்றார்.

"நீ வேற மீ... அது ஒண்ணுதான் இன்னும் நடக்கல" என்று அலுத்துக் கொண்டாள் ஷிவானி.

"இப்பதானடி விடிஞ்சிது... அதுக்குள்ள என்னடி நடந்துச்சு"

அதுதான் ஷிவானியின் கவலையும். நாளின் தொடக்கமே இப்படியென்றால் போகப்போக இந்த நாள் எப்படியிருக்குமோ என்று அச்சமாய் இருந்தது. 

அவளின் முகப்பாவனையைப் பார்த்து துணுக்குற்ற வேதா, "நீ ஏதோ குழப்பத்தில இருக்க வாணி... பேசாம போய் குளிச்சிட்டு வா... அப்பதான் உடம்பும் மனசும் தெளிவாகும்... மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்று சொல்லியவர், அவள் குளித்துவிட்டு அணிந்து கொள்ள வேண்டிய உடையை பெட்டியில் இருந்து எடுத்துவைத்தார்.

ஷிவானியும் அவர் சொன்னதை ஏற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குப் போக அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கே ராகினி அவள் தங்கைகள் மற்றும் ஐஸ்ஸும் கூடிப் பேசி சிரித்துக் கொண்டிருக்க, அவர்கள் எல்லோரும் இவளின் வருகையைப் பார்த்ததும் ஓரே நேரத்தில் அமைதியாயினர்.

அவர்கள் கூர்மையாய் இவளை அளவெடுத்தபடிப் பார்க்க ஷிவானிக்கு தனியாய் எதிரி கூடாரத்தில் மாட்டிக் கொண்டது போல இருந்தது. அவர்களைப் பார்த்தும் பார்க்காமல் கடந்து சென்றவள் குளித்து முடித்து வர, தங்கம் விதவிதமாய் காலை உணவை தயாரித்துக் கொடுத்து அவளைத் திணறடித்தார். சாப்பிடும் ஆர்வத்தில் ஷிவானியும் நடந்தேறிய நிகழ்வுகளை ஒருவாறு மறந்துவிட்டாள்.

ஆனால் அதோடு எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதென்றால் அதுதான் இல்லை.ராகினியும் ஐஸ்ஸும் கூட்டணி போட்டு தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருக்க ஷிவானி தூரமாய் நின்று அவர்கள் சிரித்துப் பேசி சண்டையிட்டு விளையாடுவதை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதுவரையில் அவள் வாழ்க்கையில் கிடைக்கபெறாத ஒன்று அத்தகைய சகோதரத்துவம்தான்.

அவளின் ஏக்கப்பார்வையைக் கவனித்திருந்த கனகமோ, "ஷிவானியையும் விளையாட்டில சேர்த்துக்கோங்க" என்று தன் மகள்களிடம் சொல்ல,

"இல்ல சித்தி... நான் இந்த கேம் விளையாடினதில்ல" என்று முன்ஜாக்கிரதையாய் ஒதுங்கிக் கொண்டாள் ஷிவானி.

"அதென்ன பெரிய கம்ப சூத்திரமா... தாயக்கட்டையை உருட்டிறதுதானே... போய் கலந்துக்க" என்று தங்கம் தன் பங்குக்கு அவளை மாட்டிவிட, ராகினியையும் அவள் தங்கைகளையும் பார்க்கப் பார்க்க ஷிவானிக்கு அச்சமாய் இருந்தது.

"வேண்டாம் ஆச்சி" என்றவள் நழுவிக் கொள்ள,

"அக்காவுக்கு எங்க கூட விளையாட விருப்பமில்லை போல" என்று ராகினி சொல்லி அவளை வம்பிற்கு இழுத்தாள்.

"அப்படி எல்லாம் இல்ல ராகினி" ஷிவானி சமாளிக்க,

"அப்போ வாங்க விளையாடுவோம்" அவர்கள் எல்லாம் கோரஸாய் அழைக்க ஷிவானிக்கு ஒன்று மட்டும் புரிந்தது. தன்னை இவர்கள் வைச்சு செய்யப் போகிறார்கள் என்று.

தானே வலிய போய் தலையைக் கொடுப்பானே என்று, "இல்ல எனக்கு இன்டிரஸ்ட் இல்ல... நீங்கெல்லாம் கன்டின்யூ பண்ணுங்க" என்றாள் ஷிவானி.

ராகினி உடனே அங்கிருந்த வேதாவைப் பார்த்து, "பாருங்க பெரிம்மா... அக்கா எங்க கூட விளையாட வர மாட்டிறாங்க... அவங்களைப் பார்க்கதானே காலேஜ் ஸ்கூலெல்லாம் லீவ் போட்டு நாங்கெல்லாம் இங்க வந்திருக்கோம்" என்று வாய் கூசாமல் ஒரு பொய்யை அள்ளிவிட

வேதா ஷிவானியைப் பார்த்து,"போடி பிள்ளைங்க ஆசையா கூப்பிடிறாங்க இல்ல" என்றவர் சொல்ல, "மீ" என்று குரலை தாழ்த்தி கெஞ்சியவளை மிரட்டலாய் பார்த்தார் வேதா.

'ஷிவானி... உனக்கு நேரமே சரியில்லை' என்று எண்ணிக் கொண்டவள் அவர்கள் இடையில் அமர எல்லோர் முகத்தில் ஒளிர்ந்த இயந்திரத்தனமான சிரிப்பு அவளைக் கடுப்பேற்றியது.

"அஞ்சு பேர் இருந்தா செட்டு போட முடியாதே... முருகன் இருந்தாலாவது பரவாயில்ல" என்று ராகினி தங்கை விஷாலினி சொல்ல,

"அப்ப நான் போயிடிறேன்... நீங்க விளையாடுங்க" என்று ஷிவானி விட்டால் போதும் என்று எழுந்து கொள்ள முற்பட

ராகினி உடனே, "இருங்க க்கா அதுக்கு ஒரு வழியிருக்கு" என்றாள்.

"என்ன?"

"நீங்களும் நானும் மட்டும் விளையாடலாம்... செட்டு போடாம ஒண்டிக்கு ஒண்டி" என்றுரைத்து ஐஸ்ஸைப் பார்த்து கண்ணடிக்க,

"சரி நாங்கெல்லாம் வேடிக்கை பார்க்கிறோம்" என்றனர் ஐஸும் மற்ற இரு தங்கைகளும்

"எனக்கு இந்த கேம் தனியா விளையாட தெரியாது... பார்த்திருக்கேன் கேள்விப்பட்டிருகேன் முன்ன பின்னே விளையாடினதில்ல"

"ஏன்க்கா இதெல்லாம் பெரிய இந்த கேமா... தாயம் போட்டு காயை வெளியே கொண்டு வரணும்... மலையில நின்னா சேஃப்... வெளியே வந்தா வெட்டு... அப்புறம் காயைக் கொண்டு உள்ளே சேர்த்துட்டா பழம்... ஸோ ஸிம்பிள்" என்றாள் ராகினி.

ஷிவானிக்குதான் அந்த ஆட்டத்தின் வரைப்படத்தைப் பார்க்க மலைப்பாய் இருந்தது. அதே நேரம் அவர்கள் மனதில் என்ன வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற யோசனையில் அவள் இருக்க,

"ஸ்டார்ட் பண்ணலாமா க்கா" என்று ராகினி கேட்க, "ஒகே" என்று நம்பிக்கையின்மையோடு தலையசைத்தாள் ஷிவானி.

ஐஸ் இடைபுகுந்து, "கேம்ல தோத்துட்டா நீங்க  நாளைக்கே இங்கிருந்து கிளம்பிடனும்... இது நமக்குள்ள மட்டும்தான்... ஸீக்ரெட் டீல்..." என்க,

ராகினி சிரித்தபடி "உங்களுக்கு தோத்திருவோம்னு பயமா இருந்தா சொல்லிடுங்க க்கா... நாம இந்த கேமை விளையாட வேண்டாம்... கால் ஆஃப் பண்ணிடலாம்" என்று சொல்லி எள்ளலாய் புன்னகையித்தாள்.

ஷிவானி அவர்கள் அனைவரையும் ஒரு முறை பார்வையைச் சுழற்றி நிதானமாய் பார்த்துவிட்டு,

"சரி... நான் உங்க டீலுக்கு ஒத்துக்கிறேன்... இஃப் அட் ஆல்... நான் ஜெய்ச்சிட்டா... நான் சொல்றதை நீங்க எல்லோரும் கேட்கனும்... டீலா" என்றவள் கேட்டு புன்னகையாய் புருவத்தை ஏற்றி இறக்க அவர்கள் எல்லோருமே ஒரு நொடி ஸ்தம்பித்தனர்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

Quote

Super ma 

You cannot copy content