You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 3

Quote

3

கானல் நீர்

சபரி அதிரடியாய் வீட்டினுள் நுழைந்தவர் சீற்றத்தோடு சோபாவில் அமர்ந்து கொள்ள, அவர் முகமோ கடுகடுவெனப் பொரிந்து கொண்டிருந்தது.

வேதவள்ளி தன் கணவனின் முகப்பாவனையை கவனித்து, "என்னங்க ஆச்சு ? ஏன் என்னவோ போல இருக்கீங்க ?அண்ணி மோகனெல்லாம் ப்ளைட் ஏறிட்டாங்க இல்ல" என்று கேட்க,

அந்த நொடியே கோபமாய் தன் மனைவியை அவர் ஏறிட்டுப் பார்க்க வேதவள்ளி மிரட்சியாக, "என்னங்க ஆச்சு?" என்றவர் மீண்டும் அழுத்திக் கேட்டார்.

"யாரோ சைனாக்காரனை வாணி லவ் பன்றாளாமே... உனக்குத் தெரியுமா?!" இதனை கேட்ட மறுகணமே வேதவள்ளி அதிர்ச்சியில் உறைந்துவிட,

சபரி மேலும், "அவ யார் கூட பழகுறா...  பேசுறான்னு எல்லாம் நீ ஒண்ணும் கவனிக்கிறதில்லையா?" என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டு அவரைத் திணறடித்தார்.

வேதவள்ளியால் கணவன் சொன்னவற்றை நம்ப முடியவில்லை. அதற்குச் சாத்தியமில்லையே என்றது அவர்  உள்மனம். இன்னும் மகளின் நடவடிக்கையில் அந்தப் பத்து வயதின் துருதுருப்பைத்தான் அவர் பார்த்துக் கொண்டிருக்க, அவளிடம் அதற்கான முதிர்ச்சியோ அல்லது மாற்றமோ தென்பட்ட அறிகுறிகளே இல்லையே என்றவர்  எண்ணிமிட்டார்.

சபரி அப்போது தன் மனைவியைப் பார்த்து, "ஏன் இப்படி அமைதியா இருக்க? உனக்கு அப்போ இந்த விஷயம் முன்னாடியே தெரியுமோ?!" என்று அடுத்த கேள்வியை இடியாய் அவர் தலையில் இறக்க,

"அய்யோ... என்னங்க இப்படிக் கேட்கிறீங்க? வாணி போய் லவ்வெல்லாம்... சேச்சே" என்று மறுத்தார் வேதா.

மனைவியைக் குழப்பமாய் ஏறிட்டவர், "சரி... போய் வாணியைக் கூட்டிட்டு வா" என்க,

வேதவள்ளி துணுக்குற்று, "அவசரப்படாம கொஞ்சம் பொறுமையா" என்று சொல்லும் போதே,

"பொறுமையான்னா... எப்போ? அந்த சைனாக்காரனை அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பிறகு பேசச் சொல்றியா?!" என்று கேட்டுவிட, வேதவள்ளி முகம் தொங்கிப் போனது.

அவர் அந்த நொடியே மகளை அழைக்கச் செல்ல, வாணி வழக்கப்படி சமையலறையை அதகளப்படுத்திக் கொண்டிருந்தாள்.

"வாணி" என்று வேதா அழைக்க,

"குக் பண்ணிட்டிருக்கேன் மீ... அப்புறம் வர்றேன்" என்றதும்,

"ஆமா... பெரிய குக்... சீ வாடி" என்று அவள் கையை தரதரவென பிடித்து இழுத்துக் கொண்டு வர,

"கையை விடு... மீ... தீஞ்சுட போகுது... அப்புறம் எல்லாம் வீணாயிடும்"

"ஆமா... இல்லன்னாலும் அது வீணாகத்தான் போகுது" என்று மகளின் காதில் கேட்காதவாறு குரலைத் தாழ்த்தி சொல்லியபடி அவளை அழைத்துக் கொண்டு வந்து கணவன் முன்னிலையில் நிறுத்த,

ஷிவானி கோபமாக, "இப்ப என்னதான் மீ வேணும் உனக்கு" என்று கையை உதறினாள்.

வேதவள்ளி தன் கணவனின் முகத்தைப் பார்க்க அவர் எப்படி இந்த விஷயத்தை மகளிடம் கேட்பதென யோசனையாய் அமர்ந்திருந்தார்.

ஷிவானி தன் தந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள் அவர் அருகாமையில் அமர்ந்து, "டென்ஷனா இருக்கீங்களா டேட்?... ஏதாச்சும் நீங்க இன்வஸ்ட் பண்ண கம்பெனியோட ஷேர்ஸ் டவுனாயிடுச்சா?!" என்றவள் அக்கறையாக விசாரிக்க, அந்த நொடி மகளின் மீதிருந்த கோபமெல்லாம் அவருக்கு சரலென்று இறங்கியிருந்தது.

அவள் தன் தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டு, "லீவ் இட்... நான் ஒரு இட்டேலியன் மேக்ரோனி சூப் ட்ரை பண்ணியிருக்கேன்... நீங்க அதை ட்ரை பண்ணுங்க... உங்க டென்ஷனெல்லாம் பறந்திடும்" என்றவள் சொல்லி எழுந்து கொள்ள, வேதா தலையிலடித்துக் கொண்டார்.

சபரிக்குப் பழைய கவலை போய் அவள் சூப்பைக் குடிக்க வேண்டுமா என்று புது கவலை எழ, "வாணிம்மா நில்லு" என்றார்.

அவள் கேட்காமல் சென்றுவிட அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஷிவானி சொன்னது போல ஒரு நொடியில் திரும்பியவள் கைகளில் ஏந்தியிருந்த சூப்பை தந்தையின் முன்னிலையில் வைக்க அதனைப் பார்க்கும்போது அவருக்குக் கதிகலங்கியது.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கிறேன் என்று ஆரம்பித்தவள் இப்படிதான் புதிது புதிதாய் எதையாவது செய்து உயிரை எடுத்துக்கொண்டிருந்தாள்.

இப்போது சூப்பைப் பார்த்தவர் பரிதாபமாய் தன் மனைவியை நிமிர்ந்து பார்த்தார்.

அதற்குள் ஷிவானியின் கைப்பேசி அழைக்க அவள், "யா கெவின்..." என்றபடி தன் பேசியை எடுத்துக் காதில் வைத்தபடி நகர்ந்து செல்லப் பார்க்க,

மகள் சொன்ன பேரை உள்வாங்கியவருக்கு மீண்டும் கோபம் தலையெடுக்க,

"யாருகிட்ட பேசுற வாணி ?" என்று கேட்டார்.

அவள் பேசியை தன் கரத்தில் மூடிக் கொண்டு, "ப்ரண்ட் கிட்ட" என்க,

"ப்ரண்டுன்னா... அந்த சைனாக்காரனா?" என்றவர் கேட்க அவர் முகத்திலிருந்த கோபத்தை அப்போதே ஷிவானி ஆழமாய் கண்டு கொண்டாள்.

அந்தக் கணம் சபரி அவளை நெருங்கி அவள் பேசியை பறித்துக் கொண்டு அதனை அணைத்து வைக்க, "டேட்" என்றவள் அதிர்ச்சியாகும் போதே, "அந்த கியாங் செவினை நீ லவ் பண்றியாமே?" என்றவர் வெளிப்படையாகவே கேட்டு விட்டார்.

அவள் யோசனை எதுவுமின்றி அந்த நொடியே கலீரென்று சிரித்துவிட்டாள். வேதவள்ளி அவள் செய்கையைக் கண்டு அதிர்ச்சியுற சபரியோ அடங்கா  கோபத்தோடு மகளை முறைத்தார்.

அவளோ அவர்களின் உணர்வுகள் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் சிரித்துக் கொண்டே, "டேட்... அவன் பேர் கியாங் செவின் இல்ல... சியாங் கெவின்" என்று அந்த சூழலின் தீவிரம் புரியாமல் நண்பனின் பெயரை திருத்தம் செய்தாள் ஷிவானி.

சபரி உக்கிரத்தோடு, "நான் அவனை லவ் பண்றியான்னு கேட்டது உன் காதுல ஏறல... அவன் பேரைத் தப்பா சொன்னதுதான் பெருசா போச்சா?" என்றவர் கேட்டதும் ஷிவானியின் முகம் மொத்தமாய் களையிழந்து போனது.

உண்மையிலயே தன் தந்தை அப்படிக் கேட்டதை அவள் சரியாக உணராமலே அவ்விதம் பேசிவிட, இப்போது ஆழ்ந்த பார்வையோடு தன் தந்தையைப் பார்த்து,

"நான் கெவினை லவ் பண்றேன்னு அந்த மோக் உங்க கிட்ட சொன்னானா?" என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

"யாரு சொன்னா என்ன? நீ அந்த சைனாக்காரனை லவ் பண்றியா இல்லையா?"

"அந்த மோக்தான் லூசு மாதிரி இப்படி என்னைக் கேட்டான்னா நீங்களுமா டேட்?!" என்று எரிச்சலாய் கேட்டபடி அவள் தலைமீது கை வைத்துக் கொள்ள,

சபரி சற்று நிதானித்து, "அப்போ நீ அந்த சைனாக்காரனை லவ் பண்ணலயா?" என்று கேட்டார்.  ஷிவானிக்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

"என்ன சும்மா சும்மா... சைனாக்காரன் சைனாக்காரன்னு சொல்றீங்க... இங்க சைனீஸ் இண்டியன்ஸ் மலாய்ஸ்னு எல்லோரும் ஓண்ணா ஒரே மாதிரிதான் இருக்கோம்... ஓரே மாதிரிதான் பழகிறோம்... இப்படியெல்லாம் பிரிச்சுப் பேசுற வேலை வைச்சுக்காதீங்க... நல்லா கேட்டுக்கோங்க... ஹிஸ் நேம் இஸ் சியாங் கெவின்... மை க்ளோஸ் ப்ரெண்ட்... அவ்வளவுதான்" என்றவள் கோபமாய் பொரிந்துத் தள்ளிவிட்டு அவசரத்தில் கையில் கிடைத்த பூஜாடி ஒன்றை எடுத்துக் கீழே தள்ளி நொறுக்கிவிட்டுப் போனாள்.

கோபம் தன் அளவைக் கடக்கும்போது இது அவள் வழக்கமாய் பின்பற்றும் யுக்தி. எதிரே இருப்பவர்களை உடைக்க முடியாத நிலையில் கையில் கிடைத்தவற்றை துவம்சம் செய்துவிடுவாள். அதோடு அல்லாது அவள் அறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்ள, சபரி குற்றவுணர்வில் சோபாவின் மீது சரிந்தார். இப்போது கோபப்படுவது வேதவள்ளியின் முறையானது.

"உங்க அக்கா பையன் ஏதோ சொன்னா... உங்களுக்கு கொஞ்சமாச்சும் மூளை வேண்டாம்... அப்படியே வந்து வாணிகட்ட எகிற்றீங்க" என்க,

அவர் அப்போதும் தன் தவற்றை முழுதாய் ஏற்காமல், "நான்தான் எகிறினேன் சரி... நீயாச்சும்  சொல்லியிருக்கலாம் இல்ல"என்றார்.

"நான்தான் சொன்னேனே, பொறுமையா பேசிக்கலாம்னு"

அந்த நொடி  சபரி மனைவிக்கு  பதில் பேச முடியாமல் திக்கி நிற்க, அப்போது ஷிவானியின் அறைக்குள் இருந்து பொருட்கள் எல்லாம் தாறுமாறாய் உடையும் சத்தம் கேட்டது.

வேதா தன் கணவனை முறைப்பாய் பார்த்து, "போய் ஒழுங்கா உங்க பொண்ணை சமாதானப் படுத்துங்க... இல்லாட்டி இருக்குற பொருளெல்லாம் உடைச்சிட்டுதான் மறுவேலை பார்ப்பா" என்க, மிரட்சியடைந்த சபரி தன் மகளின் அறைக் கதவைத் தட்டி, "வாணி ம்மா சாரிடா" என்று கெஞ்ச ஆரம்பித்தார்.

அவளோ மொத்தத்தையும் உடைத்துவிட்டுதான் கதவைத் திறப்பேன் என்பதில் அதிதீவிரமாய் இருக்க, கடைசி கடைசியாய் சபரி அந்தப் பிரம்மாஸ்த்திரத்தை கையிலெடுத்தார்.

"நீ செஞ்ச அந்த இட்டேலியன் சூப்... அது பேர் என்ன ? ரொம்ப நல்லா இருக்கு வாணிம்மா" என்று அவர் சொல்லவும்தான் அவள் கதவையே திறந்தாள்.

அந்த சூப்பை அவர் கரத்தில் ஏந்திக் கொண்டு நிற்க, அவள் அந்தக் காட்சியைப் பார்த்து தன் இறுக்கம் தளர்ந்த நிலையில்,

"அது இட்டேலியன் மேக்ரோனி சூப் டேட்" என்றாள். அவள் கோபம் இறங்கியிருக்க, சபரி ஒருவாறு தன் செல்ல மகளைச் சமாதானப்படுத்திவிட்டார். எல்லாம் அந்த சூப்பின் மாயம்.

வேதாவிற்கு அப்பா மகளின் பிணைப்பைப் பார்க்க, ஆனந்தமாகவும் அதே நேரம் ஏக்கமாகவும் இருந்தது. தன் விழியோரம் கசிந்த நீரை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டார். அன்று இரவு படுக்கைமீது தலைசாய்த்திருந்த கணவனிடம்,

"நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா?" என்று ஆரம்பிக்க, "என்ன?" என்றார்.

வேதா தயக்கத்தோடு, "ஏன்... வாணி லவ் பண்றானதும்... அவ்வளவு டென்ஷனானீங்க... நாம கூட லவ் மேரேஜ்தானே?!" என்றவர் கேட்ட நொடி சபரி எழுந்தமர்ந்து,

"வாய மூடு வேதா... உன் பொண்ணு காதுல விழப் போகுது" என்று சொல்லி திறந்திருந்தக் கதவை எட்டிப்பார்த்தார். அவர்கள் காதல் திருமணம் என்ற விஷயத்தைச் சொன்னால் மகளும் காதலித்து விடுவாளோ, அதுவும் சைனா மலேசியன் என்று எவனையாவது காதலித்து விட்டாள் எனில்,

அந்த அச்சத்தில்தான் அந்த உண்மையை இன்று வரையில் மகளிடம் இருவரும் மறைத்து வைத்திருந்தனர்.

வேதா தன் கணவரின் பயம் புரிந்து, "அவ எப்பவோ போய் படுத்துட்டா" என்று சொல்ல, சபரி பெரூமுச்செறிந்தார்.

அப்போது வேதா தன் கணவனிடம், "ஏன் இவ்வளவு பயம் உங்களுக்கு ?... என்னை நீங்க என் அப்பாகிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டு வந்த மாதிரி... உங்க பொண்ணும் காதலிச்சா பிரிஞ்சு போயிடுவாளோன்னுதானே பயப்படுறீங்க" என்றவர் கேட்டுக் கூர்மையாகப் பார்க்க,

அவருக்கு கோபம் பொங்கியது.

வேகமாய் கதவைத் தாளிட்டவர், "நானாடி உங்க அப்பன்கிட்ட இருந்து உன்னைப் பிரிச்சுக் கூட்டிட்டு வந்தேன்... உன் மனசைத் தொட்டு சொல்லு" என்க,

"ஆமாம்... இதை வேற மனசை வேற தொட்டு சொல்லணுமாக்கும்" என்று வேதா வாய்குள்ளேயே முனகினார்.

சபரி எரிச்சலோடு, "வேண்டாம் வேதா... பழசையெல்லாம் கிளறாதே" என்று எச்சரிக்க,

"நானும் அதேதான் சொல்றேன்... ஏன் இன்னும் நீங்க பழசையே பேசிட்டிருக்கீங்க... பதினேழு பதினெட்டு வருஷமாச்சு... இன்னமும் அப்படியே இருந்தா எப்படி? ஒரே ஒருதரம் ஷிவானியைக் கூட்டிட்டு நாம போய் அவங்களைப் பார்த்துட்டு வந்திரலாமே" என்று இறங்கிய தொனியில் கண்ணீர் மல்க அவர் கேட்க,

"நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னதுதான்... என்னை அவமானப்படுத்தின அந்த வீட்டுக்கு நான் எந்த காலத்துலயும் வர மாட்டேன்... உனக்கு வேணா டிக்கெட் புக் பண்ணி தர்றேன்... நீ போய்ப் பார்த்துட்டு வா" என்று சொல்லிவிட்டு படுத்துக் கொண்டார்.

"இப்படியே பேசினா எப்படிதாங்க?"

"உன்னைதான் போய்ப் பார்த்துட்டு வான்னு சொல்லிட்டேன் இல்ல... அப்புறம் என்ன?"

வேதவள்ளி ஏக்கப் பெருமூச்சொன்றை வெளிவிட்டு, "அப்படின்னா நான் ஷிவானியை கூட்டிட்டுபோய் பார்த்துட்டு வர்றேன்" என்றார்.

"அதெல்லாம் என் பொண்ணு வரமாட்டா" என்றவர் திட்டவட்டமாய் சொல்ல,

"அதென்ன உங்க பொண்ணு... அவ எனக்கும் பொண்ணுதான்"

"ஓ... சரி... அவ உங்க அப்பா வீட்டுக்கு வரேன்னு சொன்னா கூட்டிட்டு போ... ஆனா அவ வரமாட்டா வேதா... என்னை அவமானப்படுத்தின அந்த வீட்டுக்கு நிச்சயம் வரமாட்டா" என்றவர் அழுத்திச் சொல்ல வேதா கோபம் பொங்க,

"நீங்களும் ஒரு பொம்பளைப் பிள்ளைக்கு அப்பா... அதை மனசுல வைச்சுக்கிட்டு பேசுங்க" என்றார்.

"என்னடி சாபம் விடுறியா?" என்றவர் முகத்தில் லேசான பதட்டம் தெரிய, "சாபம் எல்லாம் விடல.. சொன்னேன்" என்று முகத்தை திருப்பி கொண்டார் வேதா.

"என் பொண்ணை எப்படி என் கூடவே வைச்சுக்கணும்னு எனக்குத் தெரியும்... நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்காது" என்று சபரி அழுத்தமான நம்பிக்கையோடு சொல்லிவிட்டு சற்று நேரத்தில் கண்ணயர்ந்துவிட வேதாவிற்கு ஒரு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை.

மனதளவில் அவர் ரொம்பவும் நொறுங்கிப் போயிருந்தார். பழகிப் போன விஷயம்தான் எனினும் ஒவ்வொரு முறையும் அதன் வலி ஆழமாய் மனதை ரணப்படுத்தியதே!

சபரி அவருக்கு எல்லா வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்திருக்கிறார். கணவனாய் எந்தக் குறையும் வைக்கவில்லைதான் ... எனினும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் இறங்கி வரத் தயாராக இல்லை.

அருகிலேயே இருந்தாலாவது இந்தப் பூசல்கள் சமாதானமாகி இருக்கும். ஆனால் இப்படி வெவ்வேறு நாட்டில் இருக்க, அதற்கும் வாய்ப்பில்லாமல் போனது.

இதில் ஷிவானிக்கோ அப்பாதான் எல்லாம். அவர் வார்த்தைக்கு இன்றுவரையில் மறுபேச்சே கிடையாது. அதே போல அவளின் தேவை எதற்கும் சபரி மறுப்புத் தெரிவித்ததில்லை. அந்தளவுக்கு மகளுக்குச் செல்லம் கொடுத்து அவர் வசம் வைத்திருக்க, வேதாவின் பேச்சிற்கு அந்த வீட்டில் கொஞ்சம் மதிப்புக் குறைவுதான்.

அதுவும் அல்லாது ஆரம்பத்திலிருந்தே ஷிவானியிடம் சபரி அவள் தாத்தாவினைப் பற்றிய குறைகளை மட்டுமே சொல்லியிருக்க அவள் மனதிலும் அந்த எண்ணம் ஆழப் பதிந்து போனது. அதற்கு மறுப்பாய் வேதா எது சொன்னாலும் அது எடுபடுவதுமில்லை.

இதற்கிடையில் வேதாவிற்கு அவர் பிறந்தவீட்டாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை இன்றளவிலும் வெறும் கானல் நீர்தான்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content