You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 4

Quote

4

நெருக்கமானவள்

சபரிக்கு தன் மகள் அந்த சைனாக்காரனை காதலிக்கவில்லை என்பது அப்போதைக்கு நிம்மதியாக இருந்தாலும் அது நிரந்தரமான ஒன்றல்ல என்றவர் மூளை எச்சரிக்க,

அன்றிலிருந்து ஷிவானியின் ஆண் நண்பர்கள் வீட்டிற்கு வந்தாலே குபீரென்று ஒரு சந்தேகத் தீ அவர் மனதில் பற்றிக் கொள்வதை அவரால் தடுக்க முடியவில்லை. அதுவும் அவர் பார்த்துப் பார்த்து பாசத்தைக் கொட்டி வளர்த்த மகளை எங்கிருந்தாவது ஒருவன் வந்து அபகரித்துக் கொண்டு போய்விடுவானோ என்ற பயம்.

போதாக் குறைக்கு மனைவிக்கு தான் செய்த அநியாயம் உள்ளூர குற்றவுணர்வாய் மறைந்துகிடக்க அது...  வரும் காலங்களில் தனக்கே திருப்பி நேர்ந்துவிட்டால் என்ற அச்சமும் அவருக்கு இருக்கவே செய்தது. மடியில் கணம் இருப்பவனுக்குத்தானே வழியில் பயம் இருக்கும். அப்படிதான் சபரியின் நிலைமையும்.

ஷிவானியின் மீது அவர் கொண்டிருந்த பாச உணர்வெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை விட்டுக் கொடுத்துவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வாய் மாறியிருந்தது. மாதங்கள் உருண்டோடிவிடச் சபரியின் கவலை இன்னும் அதிகமாய் வளர்ந்துவிட்டது.

அதே நேரம் மகளுக்கு இத்தனை சீக்கிரத்தில் திருமணம் செய்விக்கவும் அவர் மனம் ஓப்புக் கொள்ளவில்லை. ஆதலால் மோகன், ஷிவானி உறவைத் தீர்மானிக்கும் வகையில் ஓர் நிச்சயம் போல் செய்துவிடலாம் என்று முடிவெடுத்தவர் அதனைக் குறித்து தன் தமக்கையிடம் கேட்க அவருக்கோ பேரானந்தம்.

இந்த விஷயம் மோகனுக்கும் தெரிய வர, அவன் அளவில்லா சந்தோஷத்தில் மூழ்கித் திளைத்தான். அதே நேரம் சபரி தன் மனைவியிடம் இது பற்றித் தெரிவிக்க அவருக்குப் பெரிதாய் உடன்பாடில்லை.

அதே நேரம் மறுப்புத் தெரிவித்தால் வீணான மனச் சஞ்சலங்கள்தானென ஒப்புகொண்டுவிட, சபரி அப்போது இன்னொரு விஷயமும் தெரிவித்தார்.

"வாணிகிட்ட நிச்சயத்தை பத்தி இப்போ எதுவும் சொல்லிக்க வேண்டாம்... ஊருக்குப் போன பிறகு சொல்லிக்கலாம்" என்க,

வேதாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.

"என்னங்க பேசுறீங்க? அவகிட்ட சொல்லாம எப்படி?"

"அங்கே போய்தானே ஏற்பாடெல்லாம் பண்ணப் போறோம்... அங்கே போய் சொல்லிக்கிட்டா போச்சு... நீ பாட்டுக்கு எதையாச்சும் உளறி வைக்காதே"

"வாணியோட சம்மதம் வேண்டாமா?"

"அதெல்லாம் என் பொண்ணை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும்" என்றவர் அழுத்திச் சொல்ல, வேதாவிற்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை. இது எப்படிப் பார்த்தாலும் அவர் மனதிற்கு சரியாகப் படவில்லை.

அவர் பதிலின்றி மௌனமாய் இருக்கச் சபரி அப்போது தன் மனைவியிடம், "அப்புறம் இன்னொரு விஷயம்... நிச்சியதார்த்தம் நம்ம ஊர்லதான் நடக்கப் போகுது" என்றவர் சொல்ல கணவரின் அந்த வார்த்தையைக் கேட்டு வியப்பானவர்,

"அப்படின்னா எங்க வீட்டில இருக்கிறவங்களையும்" என்று தயங்கியபடிக் கேட்கவும் தன் மனைவியை முறைத்துப் பார்த்தவர் பின்னர் சற்று யோசித்து,

"ஆகட்டும்... நீ வேணா போய் கூப்பிட்டுக்கோ... ஆனா நான் அவங்களைக் கூப்பிட வரமாட்டேனாக்கும்" என்றார்.

இந்த வார்த்தைகள் வேதாவிற்கு உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் இந்தளவுக்கு இறங்கி வந்து தன் பிறந்த வீட்டாரை தன் கணவனே அழைக்கச் சொல்லிய பின் அவருக்கு வேறென்ன வேண்டும். இத்தனை வருடங்கள் கழித்துத் தன் குடும்பத்தாரைப் பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் அவர் சொல்லிலடங்கா ஆனந்தத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்தார்.

சபரி குடும்பத்தார் மலேசியாவிலிருந்து புறப்பட்டுத் தமிழகத்தை வந்தடைந்தனர். அதுவும் அவர்களின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு.

மோகனின் தாய் நளினி, சபரி இருவருக்குமே சொந்த ஊர் குற்றாலம். இருவருமே சிறு வயதில் தாயைப் பறிகொடுத்து தந்தையின் ஆதரவில் வளர்ந்தவர்கள்.

நளினியை மணமுடித்துக் கொடுத்த இரண்டு வருடத்தில் அவரின் தந்தை இறந்துவிடத் தனியே நின்ற தன் தம்பி சபரியை அவர் தன்னோடே நெல்லையில் தங்க வைத்துக் கவனித்து கொண்டார்.

அங்கேதான் அவருக்கு வேதவள்ளியின் மீது காதல் மலர்ந்தது. நிறைய சண்டை சச்சரவுகளுக்கிடையில் இருவீட்டாரின் சம்மதம் பெற்றுத் திருமணமும் நிகழ்ந்தது.

அந்தச் சமயம்தான் நளினியின் கணவர் அரவிந்தனுக்கு சென்னையில் பெரிய நிறுவனத்தில் வேலைக் கிடைக்க, எல்லோருமே அங்கே இடம்பெயர்ந்தனர்.

அதற்குப் பிறகே சபரி மலேசியாவிற்கு பயணப்பட்டுவிட, கிட்டதட்ட பதினெட்டு பதினேழு வருடங்கள் கழித்து மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பியிருப்பது வேதா, சபரி இருவருக்குமே வார்த்தைகளால் விவரிக்க முடியாதளவுக்கு ஆனந்தம்தான்.

அவர்கள் எல்லோருமே குற்றாலத்தில் வீடெடுத்துத் தங்கியிருந்தனர். அரவிந்தனுக்கு திருநெல்வேலி நகரத்தில் சொந்த வீடு இருப்பினும் சபரிக்கும் நளினிக்கும் அது பிறந்த ஊராயிற்றே. அதன் நினைவாக அங்கே இரண்டு நாள் சுற்றுலாவாக வந்திருந்தனர்.

அதே நேரம் அத்தகைய சந்தோஷமான சூழலில் ஷிவானியிடம் பேசி நிச்சயத்திற்கான சம்மதத்தைப் பெற்றுவிடலாம் என்றும் எண்ணமிட்டிருந்தனர்.

அதற்கேற்றாற் போல் இயற்கை கொஞ்சும் அந்த இடத்தின் வனப்பும், அங்கே குடும்பமாய் எல்லோரும் ஒன்றாய் தங்கியிருப்பதும் ஷிவானிக்கு ரொம்பவும் குதூகலமாய் இருந்தது.

அந்தச் சூழ்நிலையை அவள் வெகுவாய் ரசித்திருக்க, ரஞ்சனின் மனைவிதான் அவளிடம் இப்போதைக்குச் சிக்கி தவித்துக்கொண்டிருந்தாள்.

சங்கீதாவிற்கு இப்போழுது ஏழு மாதம். அவளின் பெரிய வயிற்றில் ஷிவானி காது கொடுத்துக் கேட்டபடி, "என்ன லா? பாப்பா அசையவே மாட்டேங்குது" என்றவள் வருத்தமுற,

"புரிஞ்சுக்கோ ஷிவா... பாப்பா எப்பவுமே அசையாது... அப்பப்போதான் அசையும்" என்று சங்கீதா தெளிவுபடுத்த,

"அந்த அப்பப்போ எப்போ லா?" என்றவள் தலையை நிமிர்த்திக் கேட்க,

"என்னால முடியல ஷிவா... ப்ளீஸ் விட்டுடு" என்று சங்கீதா கெஞ்சாத குறையாக சொல்லிக் கொண்டிருக்கும் போது ரஞ்சன் அறைக்குள் நுழைந்தபடி,

"என்ன நடக்குது இங்கே?" என்று கேட்டான்.

ஷிவானி அவனைப் பார்த்து, "ஹ்ம்ம்... உன் பேபி ரொம்ப லேஸி... இட்ஸ் நாட் அட் ஆல் மூவிங்" என்றதும் ரஞ்சன், "அப்படியா என்ன?" என்று தன் மனைவியைப் பார்த்து கேள்வி எழுப்ப, ஷிவானி கவலையோடு, "ஹ்ம்ம்" என்றாள்.

அப்போது மோகன் அவர்கள் பின்னோடு வந்து,

"சித்தி...  எங்க நமக்கும் சூப் செஞ்சி கொடுத்திடப் போறாளோன்னு பயபுள்ள கமுக்கமா இருக்கு போல" என்று சொல்ல, அதைக் கேட்ட நொடி ஷிவானியின் விழிகள் கோபத்தில் அகல விரிந்தன.

அவனிடம் அவள் பேசுவதையே நிறுத்தியிருக்க இப்போது அவன் சொன்ன வார்த்தை அவளின் கோபத்தை இன்னும் ஏற்றியிருந்தது.

ரஞ்சன் தன் தம்பியைப் பார்த்து, 'ஏன்டா' என்று சமிஞ்சையால் வினவ,

மோகன் அப்போது ஷிவானியிடம், "கோபமா வருது இல்ல... ப்ளீஸ் என்னைத் திட்டவாச்சும் செய்" என்று கேட்க,

அவள் அப்போது ரஞ்சனைப் பார்த்து, "நான் அவன்கிட்ட பேச மாட்டேன் லா" என்று தீர்க்கமாகத் தெரிவித்தாள்.

மோகன் பரிதாபமாய் தன் அண்ணனைப் பார்க்க, "பாவம் ஷிவா... அவன் ஏதோ தெரியாம பண்ணிட்டான்... பேசு" என்று ரஞ்சன் தம்பிக்காகப் பரிந்து கொண்டு வர,

"முடியாது லா... அவன் என்னை பத்தியும் கெவின் பத்தியும் டேட்கிட்ட தப்புத் தப்பா சொல்லியிருக்கான்... ஐ வோன்ட் பஃர்கிவ் (Forgive) ஹிம் அட் ஹால்" என்றவள்சீற்றதோடு உரைக்க, மூவருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது.

இவள் இப்படி முறுக்கிக் கொண்டிருந்தால் நிச்சயத்திற்கு எப்படி இவளைச் சம்மதிக்க வைப்பதென்று மோகன் கலக்கமடைந்தான்.

"நான் செஞ்சது பெரிய தப்புதான்... நீ அதுக்காக எனக்கு என்ன பனிஷ்மென்ட் வேணா கொடு...நான் ஏத்துக்குறேன்... பட் ப்ளீஸ் பேசிடு" என்று மோகன் அவளிடம் கெஞ்சி நிற்க ரஞ்சன் நமட்டுச் சிரிப்போடு,

"நீ பேசாம அந்த சைனீஸ் சூப்பை அவனுக்கு செஞ்சி கொடுத்திரு ஷிவா... அதுதான் அவனுக்கு சரியான பனிஷ்மென்ட்" என்றான்.

"ஏன்டா உனக்கு இந்த கொலைவெறி?" என்று மோகன் அதிர்ச்சியாக, ஷிவானி அப்போது இருவரையும் உச்சபட்ச கோபத்தோடு முறைத்து பார்த்தாள்.

"இரண்டு பேரும் சேர்ந்து என் குக்கிங்கைப் பத்தி கிண்டல் பண்றீங்களா லா" என்று கேட்தோடு அல்லாமல் அந்த அறை சுற்றிலும் அவர்களை அடிக்க ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடினாள்.

சங்கீதா உடனே அந்த அறையிலிருந்த குடையை எடுத்துக் கொடுக்க, ரஞ்சனும் மோகனும் மிரட்சியடைந்து அந்த அறையைச் சுற்றி சுற்றி ஓட, ஷிவானி அவர்களை விடாமல் துரத்தினாள்.

அந்த இடமே அதகளப்பட்டுக் கொண்டிருக்க, அந்த காட்சியைப் பார்த்து சங்கீதா சிரித்து சிரித்து களிப்புற்றாள். சட்டென்று சிரிப்பை நிறுத்தியவள், "ஷிவானி" என்று கத்தி அழைத்து வயிற்றைத் தொட்டு காண்பிக்க,

அவளும் ஓடிச் சென்று தன் கரத்தை சங்கீதா வயிற்றில் வைக்க ஏதோ எம்பிய உணர்வு. அவள்சிலாகிப்போடு, "வாவ்!! சூப்பர் லா" என்று வியப்படைந்தாள். அவள் முகமெல்லாம் அத்தனை பூரிப்பு.

அப்போது மோகனும் ரஞ்சனும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொண்டு, "ஸாரி ஷிவா" என்று ஒரு சேர மன்னிப்பு கோரவும் ஷிவானியின் மனமிறங்கியது.

இருவரும் கெஞ்சலான பார்வையோடு அவளையேப் பார்க்க, அவள் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு

"சரி ஒகே" என்றவள் மேலும் அவர்களிடம்"ஆனா ஒண்ணு"  என்று நிறுத்தி, "இனிமே உங்க இரண்டு பேருக்கும் நான் குக் பண்ணியே தர மாட்டேன்" என்றாள். அவள் சொன்னதுதான் தாமதம்.

ரஞ்சனும் மோகனும் முகமலர, "ஐ ஜாலி" என்று சொல்லி இருவரும் சந்தோஷத்தில் கட்டியணைத்துக் கொண்டனர். அவர்களின் சந்தோஷத்தைப் பார்த்தவளுக்கு மீண்டும் கோபம் சரமாரியாய் ஏற அந்தக் குடையை எடுத்து அவர்கள் இருவரையும் பாரபட்சமின்றி மொத்தினாள்.

கொஞ்சம் கலகலப்பாகவும் கொஞ்சம் கலாட்டாவாகவும் அவர்களின் சம்பாஷணை முடிவுற மோகன் இதுதான் வாய்ப்பென்று ஷிவானியைத் தனியே அழைத்துவந்து, "வீட்டிலயே இருந்து ரொம்ப போரடிக்குது... நம்ம பேசாம ஒரு லாங் டிரைவ் போயிட்டு வருவோமா?" என்றவன் ஆவல் ததும்ப கேட்டான்.

"எனக்கு ஒண்ணும் போரடிக்கல... நீ வேணா போயிட்டு வா" என்றாள்.

"நான் மட்டும்... தனியா" என்று சொல்லிச் சலிப்புற்றவன்,

சட்டென்று ஏதோ யோசனை உதிக்க, "இங்க பக்கத்தில ஒரு சூப்பர் மெஸ் இருக்கு... நீ அந்த மாதிரி சாப்பிட்டிருக்கவே மாட்ட... செம டேஸ்ட்" என்க,

அவள் யோசனைக்குறியோடு அவனைப் பார்த்தவள், "நிஜமாவா லா" என்று சந்தேகமாய் கேட்டாள்.

"ஆமா சிவா" என்றவன் உறுதிப்படுத்த, "அப்படின்னா போலாம்" என்று சம்மதித்தாள்.

'அதானே பார்த்தேன்' என்று அவன் தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டு எரிச்சலடைய

ஷிவானி புன்னகை ததும்ப, "நான் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு... அப்படியே எல்லோரையும் கிளம்பச் சொல்றேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

"எல்லோரையுமா? அய்யோ ஷிவா" என்றவன் அதிர்ச்சியாய் அழைக்கும் போதே அவள் சென்று விட, அவன் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்து கொண்டான்.

உடை மாற்றிக் கொண்டு வந்தவள், "யாரும் வரமாட்டேங்குறாங்க. மோக்... கேட்டா டயர்டா இருக்கு... வேலை இருக்குன்னு சொல்றாங்க... பேசாம நம்ம மட்டும் போவோம்" என்றவள் வருத்தமுறச் சொல்ல மோகனின் முகம் பிரகாசமானது.

'எல்லோருக்கும் என் மனசு புரியுது... உனக்கு மட்டும் புரிய மாட்டேங்குது ஷிவா' என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே காரைத் திறந்து ஏறியவன்,"நம்ம முதல்ல பாஃல்ஸுக்கு போவோமே" என்றான்.

"நீ ஏதோ ரெஸ்டாரென்ட் போலாம்தானே கூப்பிட்ட" என்று அவள் குழப்பமாய் கேட்க "பெட்டர்மாக்ஸ் லைட்டேதான் வேணுமா?!" என்று கேட்டு கடுப்பானான் மோகன்.

"என்னது ?" என்று கேட்டு ஷிவானி அவனை புரியாமல் பார்க்க

"இல்ல... ரெஸ்டாரென்ட்டுக்கே போலாம்னு சொன்னேன்" என்று வேறுவழியின்றி மோகன் காரை இயக்கி அவளை வெகுதூரம் அழைத்து வந்திருந்தான்.

"என்ன லா?... பக்கத்திலன்னு சொல்லிட்டு இவ்வளவு தூரம் டிரைவ் பண்ணிட்டு வந்துட்ட"

"இதோ வந்திருச்சு" என்று காரை ஓரங்கட்டினான் மோகன்.

சிவசு மெஸ் என்று அந்த உணவகத்தின் பெயர் பலகையைப் பார்த்தவள், "இதுவா லா" என்று சந்தேகமாய் கேட்க,

"ஆமா ஷிவா... நெல்லையில ரொம்ப பேஃம்ஸ்... வெஜிட்டேரியன்தான்... ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்... ப்ரெண்ட்ஸோட வந்திருக்கேன்... அப்புறம் நிறைய பேர் சொல்லியும் கேள்விப் பட்டிருக்கேன்" என்று சொல்லியபடி அவளை உள்ளே அழைத்துக் கொண்டு வர,

அவளும் அந்த இடத்தைச் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு வந்தாள்.

அது ரொம்பவும் பெரியதாக இல்லையெனினும் அந்த உணவகத்தின் அமைப்பு சிற்சில மாற்றங்களுடன் கூடிய பழைய மச்சில் வீடுபோல் காட்சியளித்தது.

அந்த உணவகத்தின் நீளமான உள்ளமைப்பு அத்தனை நேர்த்தியாய் அமைக்கப்பட்டிருக்க வழி நெடுக நின்ற வண்ணமயமான தூண்கள் அவளை வியப்பில் ஆழ்த்தின.

இருவரும் அங்கிருந்த இருக்கைகளில் அமர, அவையோ மூங்கில்களால் வடிவமைக்கப்பட்டவையாக இருந்தன. கொஞ்சம் அடைப்பாக இருந்தாலும் சூரிய வெளிச்சம் உள்நுழையுமாறு சாளரங்கள் நிறைய இருக்க, மேல்தளத்தில் ஆங்காங்கே கண்ணாடிகள் பதிக்கப்பட்டு வெளிவெளிச்சம் நுழைய வழி செய்யப்பட்டிருந்தன.

"நைஸ் ப்ளேஸ்" என்றவள் வியப்புற்றிருக்கும் போதே,

மோகன் அவர்கள் சாப்பிடுவதற்காக உணவை ஆர்டர் செய்தான்.

அதோடு அவன் ஷிவானியை கேலியாய் பார்த்து, "இங்க சூப்பெல்லாம் கிடைக்காது... பரவாயில்லையா?!" என்று கேட்டு வைக்க

அவள் கோபம் பொங்க அங்கிருந்த தண்ணீர் கிளாஸை அவன் முகத்தில் ஊற்ற எத்தனிக்கவும், "அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன்... அதை கீழே வை" என்று சரணடைந்தான்.

அதற்குப் பிறகு இருவருக்கும் சுடச்சுட வாழை இலையில் உணவு பரிமாறப்பட, ஷிவானியோ வெகுஆர்வமாய் அந்த உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினாள்.

பாயசம் அப்பளம் தேங்காய் பால் சொதி கூட்டு பொரியல் என மெய்மறந்து உண்டு கொண்டிருந்தவளை மோகன் ஆச்சர்யமாய் பார்த்தான்.

'இவளுக்கு சமைக்கத் தெரியுதோ இல்லயோ...  நல்லா சாப்பிடத் தெரியுது' என்று நினைத்து கொண்டவன்,

"அந்த இலையை மட்டும் மிச்சம் வைச்சிரு ஷிவானி" என்று சொல்ல அப்போதுதான் அவனை அவள் நிமிர்ந்து பார்த்தாள். அதுவும் சீற்றத்தோடு...

அவனோ சிரித்தபடி, "அதெப்படி ஷிவா... சைனீஸ் மலேசியன் இண்டியன்னு எல்லாத்தையும் வெளுத்து வாங்குற... நீ ஒரு இன்டர்நேஷனல் பெர்மிட்" என்று சொல்லவும் அவனை மூச்சிறைக்கக் கோபமாய் பார்த்தவள்,

"போடா... நான் போறேன்" என்றபடி எழுந்து கொண்டாள்.

"வேறவழி... இதுக்கு மேல சாப்பிட உன் இலையில ஒண்ணும் இல்லை" என்று சொல்லவும் கை அலம்ப சென்றவள் அடங்கா கோபத்தோடு மீண்டும் மோகனின் புறம் திரும்ப,

அப்போது பின்னே நடந்து வந்த உயரமான ஆடவன் மீது மோதி நின்றாள். அதுவும் அவளின் கரத்திலிருந்த சாப்பாடெல்லாம் அவனின் வெள்ளை சட்டையில் பட்டுக் கரையானது.

"ஷிட்" என்று அவள் தவற்றை எண்ணி முகம் சுணங்க,

மோகனும் வாட்டசாட்டமாய் நின்ற அந்த ஆடவனைப் பார்த்து மிரட்சியடைந்தான்.

ஷிவானி, "ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி" என்று உரைத்து அவசரமாக மோகன் மேல் பேக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து அந்த ஆடவனின் சட்டையை துடைத்துவிட, "அடிப்பாவி... என் கர்சீஃப்" என்று மோகன் கடுப்பானான்.

அந்த ஆடவன் அவளிடம் கைகாட்டி, "இருக்கட்டும் பரவாயில்ல" என்று உணர்ச்சியற்ற முகத்தோடு சொல்லி விலகி செல்ல, அவள் மீண்டும்

"சாரி" என்றாள். "ஹ்ம்ம்" என்று சொல்லியபடி அவன் சென்றுவிட, பின்னர் ஷிவானியும் மோகனும் கை அலம்பச் சென்றனர்.

அப்போது மோகன் தன் சிரிப்பை அடக்க முடியாமல்,

"ஏன் ஷிவா ? அவர் ஷர்ட் ஒய்ட்டா இருக்கவும் டிஷ்யூன்னு நினைச்சி துடைச்சிட்டியோ ?" என்று கேட்க, "உன்னை" என்று ஷிவானி கை அலம்பிய தன் கரத்திலிருந்த தண்ணீரை அவன் முகத்தில் வீச அது மீண்டும் பின்னோடு வந்த அதே ஆடவன் மீது தெறித்தது.

இப்போது அந்த ஆடவனின் பார்வை கொஞ்சம் உக்கிரமாய் மாற, ஷிவானியும் மோகனும் அசட்டுத்தனமான முகபாவனையோடு அங்கிருந்து வாய் பேசாமல் அகன்றுவிட்டனர்.

அங்கிருந்து நடந்தவர்கள் வாயை மூடிக் கொண்டு தங்களின் செயலை எண்ணி சிரித்துக் கொண்டே வாசல்புறம் வர,

ஷிவானி அப்போது மோகனை சைகையால் நிற்கச் சொல்லிவிட்டு கல்லாவில் அமர்ந்திருப்பவனிடம் சென்று,

"சாப்பாடு ரொம்ப எக்ஸலெண்ட் டேஸ்ட்... நோ வர்ட்ஸ்... அவ்வளவு நல்லா இருந்துச்சு"  என்றாள். அதோடு நிறுத்தாமல் அவள் மேலும் ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து ஓர் பாராட்டுரையை வாசிக்க அவனோ திருதிருவென்று விழித்தான்.

அப்போது அவள் பின்னோடு ஒலித்த ஓர் குரல், "என்னல விஷயம்?!" என்று கல்லாவில் அமர்ந்திருப்பவனிடம்  வினவ,

"நீங்க அவரைதான் பாராட்டனணும்... அவருதாங்க மெஸ் ஓனர்" என்று கல்லாவில் அமர்ந்திருந்தவன் ஷிவானியிடம் சாக்ஷாத் அதே ஆடவனைக் கை காண்பிக்க அவள் வியப்படைந்து சற்று நேரம் மௌனமாய் அவனைப் பார்க்க, அவனுமே அவளையே பார்த்தபடி நின்றான்.

மோகன் பின்னோடு நின்றபடி, "போயிடலாம் வா" என்று மெலிதாக அழைக்க,

அவளோ அவன் சொல்வதை கவனியாமல் கம்பீரமாய் அவள் முன்னே நின்றிருந்த ஆடவனிடம், "புஃட் ரொம்ப டேஸ்டா இருந்துச்சு... அதான் சொல்லிட்டிருந்தேன்" என்றாள்.

அவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவன்,

"ஓ... அதுக்கு உபகாரமாதான் கையை கழுவாம என் சட்டையில துடைச்சிகளோ?" என்றவன் கேட்டு இறுக்காமாய் பார்த்தான்.

அவள் பதறித்துடித்து, "நோ நோ... அது அன்எக்ஸ்பெக்டடா நடந்திடுச்சு" என்றாள்.

"அப்போ அங்கனே என் மேல தண்ணி தெளிச்சது... அதுவும் அன்.. எக்ஸ்.. பெக்ட.. டோ?" என்றவன்  தன்  மீசையை நீவிவிட்டபடி கேட்டு அவளை முறைக்க, "எஸ் லா" என்றவள் சற்றும் அசராமல் அவனைப் பார்த்து தோள்களை குலுக்கினாள்.

அவளின் அந்த சைகையிலிருந்த வெகுளித்தனத்தையும் தைரியத்தையும் ரசித்தவன் தன்னையறியாமல் புன்னகைத்துவிட, இந்தக் காட்சியை பார்த்திருந்த மோகனுக்கு உள்ளூர படபடப்பானது.

அதுவும் அந்த ஆடவனின் உயரமும் கம்பீரமான தோற்றமும் அவ்வப்போது அவன் நீவி கொடுக்கும் அவனின் அருவா மீசையும் பார்த்தவனுக்கு அச்சம் தொற்றிக் கொண்டது.

அதற்கு மேல் மோகனுக்கு அங்கே நிற்க விருப்பமின்றி ஷிவானியின் கரத்தைப் பற்றி, "வா போகலாம்" என்று அவளை இழுத்துக் கொண்டு வெளியேறினான்.

அவள் சென்ற திசையையே அந்த ஆடவனின் விழிகள் ஏமாற்றமாய் பார்த்திருக்க, அசரீரியாய் ஓர் குரல் அவள் உனக்கு ரொம்பவும் நெருக்கமானவள் என்று தெரிவித்தது. அது எங்கனம் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.

அப்போது கல்லாவில் அமர்ந்திருந்த அவனின் நெருங்கிய நண்பன்  சுப்பிரமணியம் என்கிற சுப்பு,

"என்ன ல?..அங்கனையே பார்த்திட்டிருக்க?" என்று  கேட்க,

அவன் யோசனைகுறியோடு,  "அதில்ல... அவைங்கல பார்த்தா ரொம்ப தெரிஞ்சவைங்க மாதிரி தோணுது... அதுவும் அந்த புள்ளைய நான் எங்கனய்ய்ய்யோ பார்த்திருக்கேனோன்னு" என்றவன் சந்தேகமாய் சொல்லிக் கொண்டிருக்க,

"அப்படியாம்ல தோணுது" நமட்டுச் சிரிப்போடு சுப்பு கேட்டான். அந்த ஆடவன் அப்போதும் அவள் சென்ற திசையை பார்த்து யோசித்தபடியே,

"ஹ்ம்ம்" என்க,

" இது மட்டும் உன் அக்கா மவளுங்களுக்கு தெரிஞ்சிது... உன்னை வைச்சி வகுந்திருவாளுங்க ல... வகுந்து" என்று சுப்பு மிரட்டலாய் உரைத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட நொடியே தன் நண்பனின் புறம் பார்வையை திருப்பினான் குரு.

சிவகுரு. அதுதான் அந்த ஆடவனின் முழு பெயர். அவன் தன் நண்பனிடம்,

"ஏன் பக்கி? எங்க சுத்தினாலும் கடைசியா எங்க அக்கா மவளுங்கிட்டயே வந்து நிக்க... என்ன ல?... பொறாமையால பொங்குதியோ?!" என்று கேட்டு கோபமாய் முறைக்கலானான்.

சுப்பு அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் குனிந்தபடி,

"பின்ன... இவனுக்கு மட்டும் ஒண்ணுக்கு நாலு... சைஸ் வாரியா இருக்கு... இங்கன நமக்கு அப்படி ஒண்ணு கூடத் தேறலயே" என்று வாய்க்குள் முனகினான்.

குரு அவன் வாயசைப்பையும்  முகபாவனையையும் கூர்ந்து கவனித்தபடி, "என்ன வே... ஒண்ணுங்கிற நாலுங்கிற...என்ன ல சொல்லுதே?"  என்று சந்தேகமாய் கேள்வி எழுப்ப,

சுப்பு சற்றுத் தடுமாறியபடி, "அது... கல்லால்ல இருக்க சில்லறையை கணக்கு பண்ணுதோம்" என்று சமாளிப்பாக உரைத்தான்.

குரு அவன் எண்ணத்தை ஒருவாறு யூகித்து,

"அந்த கணக்கை மட்ட்ட்டும் பண்ணுவே... இல்ல கண்ணை நோண்டிபுடுவேனாக்கும்" என்று தன் நண்பனென்றும் பாராமல் அழுத்தமாய் எச்சரித்துவிட்டு அகன்றுவிட, சுப்பு ஏக்கப் பெருமூச்சொன்றை இழுத்து வெளியேவிட்டான்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content