You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Konjam vanjam kondenadi - 6

Quote

6

மனச்சுமை

அந்த வீட்டின் முகப்பறையில் அரவிந்தன் தெளிவற்ற நிலையில் அமர்ந்திருக்க நளினி அவரிடம், "என்னங்க இது புது குழப்பம் ?" என்று மெலிதான குரலில் வினவினார்.

அரவிந்தன் பதில் பேசாமல் யோசனையோடு சபரியைப் பார்க்க, அவரோ அடங்கா கோபத்தோடு இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார். யாருக்குமே இந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வதென்றே புரியவில்லை.

ரஞ்சன், சங்கீதா, மோகன் என்று மூவரும் அங்கேதான் இருந்தனர். அவர்களுக்கும் ஓரளவுக்கு விஷயம் பிடிபட்டது. இந்த விஷயம் மோகனுக்கு அதீத ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதுவும் குருவைப் பற்றி தான் மரியாதையின்றி பேசிய போது ஷிவானிக்கு ஏற்பட்ட கோபம் இயல்பானதல்ல என்பது இப்போது புரிந்தது.

தான்ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே. அது எத்தனை உண்மை என்று எண்ணிமிட்டுக் கொண்டான். ஆனால் நடந்தேறிய நிகழ்வைப் பற்றி இந்த நொடி வரை அறியாதவள் ஷிவானிதான்.

சபரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க அரவிந்தன் அவரைப் பொறுமையோடு அணுகி, "வேதாவைப் போய் சமாதானப்படுத்து சபரி" என்றார்.

தன் மாமனின் வார்த்தைக்கு மறுபேச்சே பேசமாட்டார் சபரி. அந்தளவுக்கு மரியாதை. விருப்பமில்லையெனினும் அவர் சொன்ன வார்த்தைக்காகத் தன் அறைக்குச் சென்றார்.

அப்போது ஷிவானி, "ஏன் மீ... இப்படி அழுதுகிட்டிருக்கீங்க?... என்ன மீ ஆச்சு?" என்று அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டு கொண்டிருக்க,

"நீ போ வாணிம்மா... நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்" என்றார் சபரி இறுக்கமானப் பார்வையோடு!

ஷிவானி குழப்பமுற தன் தந்தையை ஏறிட்டு, "என்னதான் நடந்துச்சு? வந்துட்டு போனவர் யாரு டேட்?" என்று கேள்வி எழுப்ப,

வேதா அந்த நொடியே தன் அழுகையை விழுங்கிக் கொண்டு,  "பதில் சொல்லுங்க... உங்க பொண்ணு கேட்கிறா இல்ல" என்று கேட்டுத் தன் கணவனை உக்கிரமாய் நோக்கினார்.

அழுது சிவந்திருந்த அந்த விழிகளில் எவ்வளவு வலியும் வேதனையும் இருந்ததோ அந்தளவுக்கு கோபமும் இருந்தது.

ஷிவானி இருவரையும் மாறி மாறி பார்க்க, சபரிக்கும் கோபம் தலைதூக்கியது. அவர் அதனைத் தன் மகள் முன்னிலையில் காட்டிக் கொள்ள விரும்பாமல், "வாணிம்மா நீ போ" என்றார்.

"நீ இங்கேயே இரு... எதுவாயிருந்தாலும் உன் டேட் உன் முன்னாடியே பேசட்டும்" என்று வேதா சொல்ல யார் சொல்வதைக் கேட்பதென்று புரியாமல் ஷிவானி ரொம்பவும் சங்கடமாய் உணர்ந்தாள்.

சபரி சிரமப்பட்டு தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவர், "வேண்டாம் வேதா... இந்த விஷயத்தைப் பத்தி பேசினா நமக்குள்ள தேவையில்லாம பிரச்சனைதான் வளரும்" என்று அமர்த்தலாகவே உரைக்க,

"முடியாது... எனக்கு இந்த விஷயத்தைப் பத்தி இப்பவே பேசணும்" என்று வேதா கோபமாய் உரைத்தார்.

"இரண்டு பேரும் எந்த விஷயத்தைப் பத்தி பேசிகிட்டிருக்கீங்க" என்று ஷிவானி இருவரிமும் பொதுப்படையாகக் கேள்வி எழுப்ப, சபரிக்கு கோபம் பொங்கியது.

அவர் தன் மனைவியிடம், "வேதா விட்டுடு... அப்புறம் பேசிக்கலாம்" என்று பல்லைக் கடித்து கொண்டு சொல்ல, "விட்டுடவா...  இது வரைக்கும் நான் உங்களுக்காக விட்டதெல்லாம் பத்தலயா? இன்னும் என்கிட்ட என்னங்க இருக்கு விடறதுக்கு?" என்றவர் தாளமுடியாமல் முகத்தை புதைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, ஷிவானியின் மனம் ரொம்ப இளகியது.

"ப்ளீஸ் மீ... அழாதீங்க" என்றவளின் விழியிலும் நீர் எட்டிப் பார்க்க, சபரிக்கு அந்த நொடி கோபத்தை விட்டொழித்தேத் தீர வேண்டிய கட்டாயம் நேரிட்டது.

"சரி... இப்போ என்னதான் பண்ணனும்ங்கிற" என்றவர் மனைவியிடம் இறங்க,கணவனை ஒரு சில நொடிகள் ஆச்சர்யமாய் பார்த்தவள் பின் சற்று தெளிவுபெற்று,

"நாம எல்லோருமா போய் ஷிவானி நிச்சியதார்த்தத்துக்கு எங்க குடும்பத்தில இருக்கிறவங்களை மரியாதையா அழைக்கணும்" என்று அழுத்தமாய் வேதா சொல்லி முடித்த மறுகணம்,

சபரி அவரை எரிப்பது போல் பார்த்தார்.  அப்போது ஷிவானி,

"ஆமாப்பா... நானே சொல்லணும்னு நினைச்சேன்... தாத்தா வீடு இங்கதானே இருக்கு... கூப்பிடுவோம்... எனக்கும் அவங்களை எல்லாம் பார்க்கணும் போல ஆசையா இருக்கு" என்றாள் ஆவல் ததும்பிய விழிகளோடு!

சபரி பொறுக்க முடியாமல், "என்ன பேசுற வாணி... அவங்க எல்லாம் சேர்ந்து அப்பாவை எப்படி அவமானப்படுத்தினாங்கன்னு உனக்கு நான் சொல்லி இருக்கேன் இல்ல... அதெல்லாம் நீ மறந்துட்டியா?" என்று கோபமாகக் கேட்கவும் ஷிவானி குற்றவுணர்வோடு தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

வேதா  கணவனைப் பார்த்து, "என் பொண்ணுகிட்ட இப்படி சொல்லிச் சொல்லியே என் குடும்பத்தோடு ஓட்ட விடாம பண்ணிட்டீங்க இல்ல" என்றவர் சீற்றத்தோடு வினவ,

"ஆமான்டி ஓட்ட விடாம பண்ணிட்டேன்... எனக்கு என் பொண்ணுக்கு அவங்க வேண்டாம்... நீ வேணா போய் ஓட்டிக்கோ" என்று வார்த்தைகளைக கடித்துத் துப்பினார் சபரி.

பிரச்சனை தீவிரமாகிக் கொண்டே போவதை ஷிவானி கண்டுகொண்டாலும் கையறு நிலையில் அவள் என்ன செய்வதென்று புரியாமல் விழிக்க,

வேதா தன் கணவனை நோக்கி, "என் குடும்பம் வேண்டாம்னா நானும் வேண்டாம்... உங்க பொண்ணோட நிச்சயதார்த்தத்தை நீங்களே நடத்திக்கோங்க" என்று சொன்ன மறுகணம் சபரியும் ஷிவானியும் அதிர்ந்தனர்.

"என்ன மீ?  இப்படியெல்லாம் சொல்றீங்க"

"வரலன்னா போடி... என் பொண்ணு நிச்சயதார்த்தத்தை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்" என்று அசாதாரணமாய் சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து அகன்றுவிட,

வேதா விரக்தியுற தன் மகளை நோக்கி, "பார்த்தியா வாணிம்மா... உங்க டேட்  என்னை எவ்வளவு சுலபமா தூக்கி எறிஞ்சிட்டாருன்னு...  அவருக்கு நான் முக்கியமே இல்லை... என் உணர்வுகளைப் பத்தி அவருக்கு கவலையே இல்லை...   ஆனா நான் மட்டும் அவர் மானம் கௌரவம் எல்லாத்தையும் சாகுற வரைக்கும் தூக்கிச் சுமக்கனும்... சே!... ஏன்டா பொம்பள ஜென்மமா பொறந்தோம்னு இருக்கு" என்று புலம்பி கொண்டே தலையில் அடித்துக் கொள்ள, இவர்கள் இடையில் நிகழ்ந்த சம்பாஷணையில் அதிகமாய் காயப்பட்டு நின்றது ஷிவானிதான்.

வேதனையோடு அவள் அந்த அறையை விட்டு வெளியேற, அப்போது சபரி நளினியிடமும் அரவிந்தனிடமும் தன் மனைவி சொன்னதைப் பாடமாய் படித்துக் கொண்டிருந்தார்.

ஷிவானி களையிழந்த முகத்தோடு அவர்கள் முன்னிலையில் வந்து நிற்க தன் மகள் கலங்கி நிற்பதைப் பார்த்தவர், "வாணிம்மா" என்று அழைத்தபடி ஷிவானியின் அருகாமையில் செல்ல,

அவள் உடனே தன் தந்தையின்  தோள் மீது சாய்ந்தபடி கண்ணீர் பெருக்க, அதனைப் பார்த்தவர் உள்ளம் கலங்கி போனார்.

"என்ன வாணிம்மா?" வேதனையோடு அவர் கேட்க,

அவள் கண்ணீரோடு, "ப்ளீஸ் டேட்... எனக்கு இந்த எங்கேஜ்மென்ட் வேண்டாம்... இந்த விஷயத்துக்காக நீங்க இரண்டு பேரும் இப்படி சண்டை போட்டுகிறதை என்னால பார்க்க முடியல... ப்ளீஸ் நாம மலேசியாவுக்கே போயிடலாம்" என்று தழுதழுத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தவளை அணைத்துப் பிடித்து அவர் அமைதியடைய செய்ய,

அவள் வெகுநேரம் தன் தந்தையிடம் அழுது, அழுது உணவு உண்ணாமல் கூட உறங்கிப் போயிருந்தாள். இன்னமும் குழந்தைத்தனம் மாறாமல் இருந்த ஷிவானியின் அந்தக் கண்ணீர் சபரியின் மனதைக் கரைத்திருந்தது.

அதே நேரம் அரவிந்தனும் சபரியிடம், "நாமெல்லாம் போய் வேதா வீட்டில இன்விடேஷன் வைச்சிட்டு வந்திருவோமே... அதுதான் முறையும் கூட" என்க,

சபரி ஆழமான யோசனையோடு, "அது மரியாதை தெரியாத குடும்பம் மாமா...  பார்த்தீங்க இல்ல... காலையில அவ தம்பி... நாமெல்லாம் இருக்கோம்னு மட்டு மரியாதை இல்லாம பேசிட்டுப் போனத" என்றதும் நளினி முந்திக் கொண்டு, "ஆமா ஆமா... கொஞ்சங் கூட மரியாதையே தெரியாதவன்" என்றார்.

"நீ வேற சும்மா ஏத்திவிடாதே" என்று அரவிந்தன் மனைவியை அடக்கிவிட்டு,

சபரியிடம் திரும்பி, "கொஞ்சம் அந்தத் தம்பி நிலைமையில இருந்து யோசிச்சிப் பாரு சபரி... அவன் இடத்தில நீயும் உன் இடத்தில நானும் இருந்தா உனக்கும் இதே கோபம் வந்திருக்கும்" என்றார்.

சபரி கர்ஜனையான பார்வையோடு திரும்பி, "அப்போ அவங்க பக்கம்தான் நியாயம் இருக்குன்னு சொல்றீங்களா? நான் என்னைக்காவது மரியாதை குறைவா உங்ககிட்ட நடந்திருப்பேனா மாமா... ஆனா அந்த குடும்பத்தில இருக்கவங்க நான் அந்த வீட்டோட மூத்த மருமகன்னு கூடப் பார்க்காம என்னை அவமானப்படுத்தினாங்க...

அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்... பிஸ்னஸ் பண்ண கொஞ்சம் பணம் கம்மியாயிருந்ததுன்னு கேட்டேன்... அதுக்கு பணத்துக்காகதான் என் பொண்ணை கல்யாணம் பண்ணிங்களான்னு அவங்க அப்பாரு கேட்டுட்டாரு... போதாக் குறைக்கு அவளோட சித்தப்பன் சித்தப்பன் மகன் அயித்த மகன்னு எல்லாம் என்னை அடிக்கக் கை ஓங்கிட்டு வந்தானுங்க... அதை எல்லாம் நான் எப்படி மறக்க...

வேதாவை  நான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிட்டேன்னு எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன விஷயத்தை ஊதிப் பெரிசாக்கி... எங்க உறவையே அத்துவிட்டுட்டு...

இப்ப வந்து அவன் தம்பி கேட்கிறான்... அப்படி என்ன அவங்க ஐயனும் ஆத்தாவும் செஞ்சுட்டாங்கன்னு... பொடி பையன்... நடந்ததெல்லாம் அவனுக்கு என்ன தெரியும்... வந்துட்டான் பெரிசா தாய்மாமனாம் தாய்மாமன்" என்றுரைக்கும் போதே அவர் முகம் அத்தனை உக்கிரமாய் மாறியிருந்தது.

அரவிந்தன் அவர் தோளைத் தொட்டு, "அப்ப என்ன பண்ணலாம் சபரி... நிச்சயத்துக்கான ஏற்பாடெல்லாம் நிறுத்திடலாமா?" என்று கேட்க,

நளினி பதறிக் கொண்டு, "என்னங்க பேசுறீங்க?" என்று அதிர சபரி அப்போது, "எதுக்கு நிறுத்தணும்?  அதெல்லாம் வேண்டாம்... அவங்களைப் போய் கூப்பிடணும் அவ்வளவுதானே...  கூப்பிட்டா போச்சு" என்றவர் சொல்ல அரவிந்தனுக்கும் நளினிக்கும் மனம் லேசாய் நிம்மதி பெற்றது.

இந்த விஷயத்தைக் குறித்து வேண்டா வெறுப்பாய்  மனைவிடம் சபரி சொல்ல வேதாவின் ஆதங்கமும் லேசாய் அடங்கியிருந்தது. அவர்கள் எல்லோரும் வேதாவின் குடும்பத்தை நிச்சயத்திற்கு அழைக்க புறப்பட்டனர். குரு அப்போதுதான் மெஸ்ஸிலிருந்து கிளம்பித் தன் வீட்டை அடைந்திருந்தான்.

பழமையை அப்படியே பறைசாற்றும்  மச்சு வீடு அது. மனசோர்வோடு அப்படியே வீட்டின் வெளித்திண்ணையில் அமர்ந்து கொண்டான் குரு.

சுப்புவும் அவன் உடனிருந்தான்.

"என்னல... நானும் காலையில இருந்து பார்க்குதேன்... என்னவோ போல இருக்க... ஏதாச்சும் பிரச்சனையா வே?" என்று கேட்க,

"ஏன்ல இப்படிக் கேள்வி கேட்டு என் உசுரை எடுக்க... கிளம்பு வே" என்று கோபமாகத் தன் நண்பனிடம் எகிறினான் குரு. அவன் மனமோ தன் தமக்கையை நேரில் பார்த்துவிட்டு வந்த நொடியிலிருந்து கொந்தளித்துக் கொண்டிருந்தது.

 அதுவும் ஓரே ஊரில் இருந்து கொண்டு அவர் தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் பண்ணுவதை அவனால் தாங்கவே முடியவல்லை. அவன் உள்ளமெல்லாம் பாறாங்கல்லை வைத்தது போல் அத்தனை பாரமாய் இருக்க, இவற்றோடு சேர்ந்து ஷிவானியின் நினைப்பு வேறு அவன் மனச்சுமையை அதிகப்படுத்தியதென்றே சொல்ல வேண்டும்.

சுப்பு தன் நண்பனை விடாமல் "அப்படி என்னதான்ல யோசிக்கிடுதே... என்கிட்ட சொல்லக் கூடாதா?" என்று தாழ்ந்த குரலில் கேட்க,

திண்ணையில் அமர்ந்திருந்த குருவின் பாட்டி வள்ளியம்மை, "என்னல இரண்டு பேரும் பொட்ட புள்ளையகளாட்டம் குசுகுசுன்னு பேசிக்கிடுதீக" என்றார்.

"ஓ... சத்தமா பேசிட்டா மட்டும் உம்ம காதில கேட்டிடுமோ?!" என்று எளக்காரமாய் வினவினான் சுப்பு. அப்போது குருவின் அப்பத்தா வள்ளியம்மையின் கரத்திலிருந்த  கொம்பு நேராய் சுப்பு நெற்றிக்குப் பாய, அவன் சாமர்த்தியமாய் விலகித் தப்பி கொண்டான்.

"ஏ கிழவி... இப்ப என்ன சொல்லிபுட்டாகன்னு என்னைய அடிக்க" என்று சுப்பு முறைத்துக் கொண்டு நிற்க,

குரு அப்போது நினைவுபெற்றவன், "என்னவே எங்க அப்பத்தாகிட்ட சலம்புத... உனக்கு வேற ஜோலி கீலி ஒண்ணும் இல்லையோ?! அதான் அப்பவே கிளம்புன்னு சொன்னோம்ல... கிளம்புவே"  என்று மிரட்டலாய் உரைத்துவிட்டு அவன் உள்ளே விறுவிறுவெனச் சென்றான்.

சுப்பு ஏக்க பார்வையொன்றை வாயிலின் புறம் வீசியபடி, போகலாமா வேண்டாமா என யோசித்திருக்க அவன் எதற்காக காத்துக்கிட்டிருந்தானோ அது நடந்தது. ஐஸ்வர்யா பள்ளிச் சீருடையில் துள்ளிக் கொண்டு ஓடி வந்தவள் நேராக வீட்டிற்குள் செல்ல பார்க்க,

சுப்பு அவளை வழிமறித்து, "என்ன ஐஸ்... எங்களை எல்லாம் கண்டுகிட மாட்டியா?!"என்றான்.

அவனை மேலும் கீழும் பார்வையால் அளவெடுத்தவள், "கண்டுகிட்டோம் போதுமா?! இப்ப வழியை விட்டு நகரும்" என்று கேட்க,

"கொஞ்சம் நஞ்சம் திமிரில்லடி உனக்கு"

"இப்ப வழியை விடறீகளா... இல்ல மாமனை கூப்பிடட்டுமா"

சட்டென்று வழியை விட்டு ஓதுங்கியவன், "வேண்டாம் தாயி... ஏற்கனவே சிங்கம் சிலிப்பிட்டிருக்கு... நீ வேற கூப்பிட்டு... அப்புறம் அது என் மேல வந்து பாயறதுக்கா?" என்று சொல்லியவன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட படபடவென ஜஸ்வர்யா வீட்டிற்குள் ஆர்வமாய் ஓடினாள்.

அந்த வீடு அகலமாய் அல்லாமல் நீளமாய் உள்ளே உள்ளே சென்று கொண்டிருக்க, ஓவ்வொரு நிலைப்படிகளை கடந்து சென்றவள் சுற்றும் முற்றும் தேடலாய் பார்த்து தேடிவிட்டுக் கடைசியாய் அடுப்பங்கறைக்குள் நுழைந்தாள்.

அங்கே குருவின் தாய் தங்கம் சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்க, "என்ன ஆச்சி? மாமாவை எங்கன தேடியும் காணோம்... எங்க போனாக?" என்று வினவினாள்.

அவர் அவளைத் திரும்பி ஓரு பார்வை பார்த்துவிட்டு, "நான் எங்கல அவனைப் பார்த்தேன்... அவன் வந்ததையே நான் பார்க்கலயே... ஆமா அவன் வந்துட்டான்னு உனக்கு யாருவே சொன்னது ?" என்று கேட்க,

"மாமாவோட புல்லட் சத்தம்தான் ஊரையே கூட்டும்ல... அதைக் கேட்டுட்டுதான் ஓடியாரேன்" என்றாள்.

"உனக்கு படிக்கிற சோலியெல்லாம் ஓண்ணும் இல்லையோ?"

"இப்ப படிச்சுக் கிழிச்சு என்னத்தை பண்ண... பேசாம எனக்கு மாமானைக் கட்டி வைச்சிரும்... நான் இங்கனயே இருந்து உனக்கு உதவியா எல்லா வேலையையும் பார்த்துகிடுவேன் இல்ல" என்று ஐஸ்வர்யா சாமர்த்தியமாய் பேசித் தன் பாட்டியின் தோளைக் கட்டி கொள்ள,

"அடிபோடி... இப்படியே எத்தனை பேருதான் சொல்வீக... பெரியவ மகளும் இதேதான் சொல்றா... நீயும் இதேதான் சொல்ற... நான் என்னடி அவனை கூறு போட்டாடி தரமுடியும்?"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது... மாமாவை எனக்குதான் கட்டி வைக்கணுமாக்கும்" என்றவள் பிடிவாதமாய் நிற்க, குரு அப்போது அவள் பின்னோடு நின்று தலையிலேயே நங்கென்று கொட்டு வைக்க அவள் அதிர்ந்து திரும்பினாள்.

"வயசுக்கு ஏத்த பேச்சாடி பேசிட்டிருக்க... வகுந்திருவேன் வகுந்து... உனக்கும் எனக்கும் பத்து வயசு வித்தியாசமாக்கும்... இன்னொரு தடவை கல்யாணம் அது இதுன்னு பேசிப் பாரு... உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடறேன்" என்று கோபம் பொங்க சொல்லியவன் அடுக்களையை விட்டு வெளியேறினான். அவள் தலையை தேய்த்துக் கொண்டே அவன் பின்னோடு வந்து,

"அப்போ என்னைக் கட்டிக்கிட மாட்டீகளா? அந்த ராகினியதான் கட்டுவீகளோ... அவளுக்கும் உங்களுக்கும் ஒன்பது வயசு வித்தியாசம் அது மட்டும் பரவாயில்லையோ?!" என்றவள் பொறுமிக் கொண்டே கேட்க,

"நான் எப்போடி ராகனிய கட்டிக்கிறேன்னு சொன்னேன்" என்றான்.

அவள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, "அப்போ என் வயசுதான் உங்களைத் தடுக்குதோ?" என்று கேட்க

"ஆமாண்டி... உன் வயசுதான் என்னைத் தடுக்குது" என்றான். அப்போது மகனுக்கு காபியோடு தங்கம் வந்து நிற்க,

ஐஸ்வர்யா அவரிடம், "ஏன் ஆச்சி... தாத்தாவுக்கும் உமக்கும் எம்புட்டு வயசு வித்தியாசம்" என்று கேட்க,

"அதென்னடி பத்து பன்னிரெண்டிருக்கும்" என்று இயல்பாய் சொல்லியவர் காபியை குருவிடம் வழங்கிவிட்டு உள்ளே செல்ல, குருவும் காபியோடு வந்து முற்றத்தில்  அமர்ந்து கொண்டு குடிக்கலானான்.

ஐஸ்வர்யா அவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, "ஏன் மாமா?... ஆச்சி சொன்னதைக் கேட்டீகளா... அவைங்களுக்குள்ள பத்து பன்னிரெண்டு வயசு வித்தியாசமாம்" என்க, "அதுக்கு" என்று கேட்டு அவளை முறைத்தான் குரு.

"என்னை கட்டிக்கிறது" என்று அவனிடம் கெஞ்சலாய் அவள் கேட்க குரு தலையைப் பிடித்துக் கொண்டான். அவள் ஓயாமல் பேசிக் கொண்டிருக்க பொறுமையிழந்தவன்,

"யம்மோவ்... இங்கன கொஞ்சம் வாயேன்.. உன் பேத்தி என்னை பேசியே கொல்லுதா" என்று கத்தலாய் அழைக்க, தங்கம் பதறி கொண்டு அவர்கள் முன்னிலையில் வந்து நின்று,

"ஏன்டி வந்ததும் வராததுமே அவன்கிட்ட வம்பு வளர்த்திட்டிருக்கவே... உன் வீட்டுக்குப் போடி" என்று அதட்டினார் தங்கம்.

"ஆ போறாங்க... போறாங்க... அம்மா சீனி கேட்டாக... கொடுங்க... வாங்கிட்டு போறேன்" என்று சொல்ல,

"உனக்கும் உங்க அம்மாவுக்கும் இதே பொழப்பா போச்சு" என்று அலுத்துக் கொண்டே தங்கம் சீனியை ஒரு குவளையில் எடுத்து வந்து பேத்தியின் கரத்தில் திணிக்க, "போயிட்டு வர்றேன் மாமா" என்றாள்.

"வராதே... அப்படியே போயிடு" என்றவன் சொல்லி முடிக்கும் போதே ஜஸ்வர்யா மீண்டும் திரும்பி வந்தாள். "மாமா" என்றவள் அழைக்க,

"நீ இன்னும் போலயாவே"

"யாரோ கார்ல வந்திருக்காக மாமா" என்று மூச்சிறைத்து கொண்டபடி சொல்ல அவன் வெளியே எட்டி பார்த்தபடி நடந்து வாயிலுக்குச் சென்றான்

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content