You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's Poove Un punnagayil - 33

Quote

அத்தியாயம்-33

 

               'மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு பேப்பர்ஸ் ரெடி பண்ணிடுங்க' என கௌசிக் அவனுடைய வழக்கறிஞரிடம் சொன்ன வார்த்தைகள் இரண்டு நாட்களாக மீண்டும் மீண்டும் அவளுடைய மூளைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க, அமைதியின்றி தவித்தாள் ஹாசினி.

               நிதானம் என்பதே கொஞ்சமும் இன்றி அவள் நடந்துகொண்டது எவ்வளவு தவறாகிப்போனது என இவ்வளவு தாமதமாகத்தானே தெரிகிறது.

               'தேவையில்லாத ஈகோவையெல்லாம் விட்டுவிட்டு நேராகப் போய் மன்னிப்புக் கேட்டால் கூட அவ்வளவு சுலபமாக இறங்கி வருவானா கௌசிக்?' என்ற கேள்வி எழ நெஞ்சுக்கூடு உலர்ந்துபோனது அவளுக்கு.

               சத்யா விட்டுக்கொடுத்தது போல் தன்னுடைய எதிர்காலத்தை அப்படியே மொத்தமாகத் தூக்கி எறிந்துவிட்டு ஒரு வெற்று வாழ்க்கையை ஓட்ட இயலுமா தன்னால்? அல்லது அப்பா சொன்னதுபோல புதியதாக வேறொரு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளத்தான் மனம் ஒப்புமா? நிச்சயம் முடியவே முடியாது என்றுதான் தோன்றியது!

               அவனில்லாத ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்க்கக்கூட அவ்வளவு திகிலாக இருந்தது. 'தவறுகளைச் செய்யும்போது இது ஏன் தனக்கு உரைக்கவேயில்லை? எது தன் கண்களை மறைத்தது?' என்ற மிகப்பெரிய கேள்வி எழ அதற்குக் காரணம் பாலாதான் என்ற பதிலும் பட்டெனக் கிடைத்தது. ஆனாலும், 'பாவம் அவ, கௌசிக்கை பத்தி புரிஞ்சிக்காம நம்ம நல்லதுக்கு சொல்றதா நினைச்சுதான் அப்படியெல்லாம் லூசுத்தனமா உளறிவெச்சிருப்பா. நமக்குத்தான் இதெல்லாம் புரியல' எனத் தானே அதற்கு ஒரு நியாயமும் கற்பித்துக்கொண்டாள் அவள்.

               'இதிலிருந்து மீண்டு வருவது எப்படி?' என தீவிரமாக யோசிக்கத் தொட்ங்கியவள், 'அம்மா அப்பாவை விட்டு நேர்ல போய் அவங்க வீட்டுல பர்ட்டிகுலரா அவனோட அப்பாகிட்ட பேசச் சொல்லலாம். பெரியவங்க சொன்னா மறுக்க முடியாம அவன் கட்டாயம் இறங்கி வந்துதான் ஆகணும். அப்பறம் கையை காலை பிடிச்சி கெஞ்சி கொஞ்சி ஹக் பண்ணி கிஸ் பண்ணி அவனை சமாதானப்படுத்திக்கலாம்' என அவள் சுலபவான ஒரு தீர்வை கண்டுபிடித்துவிட, சரியாக அதே நேரம் கதவைத் தட்டி, 'ஹசி, கொஞ்சம் வெளியில வா' என்றான் சத்யா.

               'அட... நம்ம சத்யா மாமாவை மறந்துட்டோமே! இவங்க கிட்ட சொன்னாலே போதுமே! அசால்ட்டா பேசியே அவனை கவுத்திடுவாங்களே' என ஒரு துள்ளலுடன் ஓடிவந்து கதவைத் திறந்தாள் அவள்.

               "ஹசி, சீக்கிரம் கிளம்பி வா, கொஞ்சம் வெளியில போகணும். உன் லைஃப் பத்தி பேசி இன்னைக்கே ரெண்டுல ஒண்ணு முடிவு பண்ணிடலாம்" என அவன் மொட்டையாகச் சொல்ல, "அட... மாமான்னா மாமாதான். நம்ம மனசுல நினைச்சதைக்கூட உடனே  செஞ்சிமுடிச்சிடுவாங்க போலிருக்கே' என்ற குதூகலத்துடன், 'இதோ, பைவ் மினிட்ஸ்ல ரெடி ஆகி வந்துடறேன்" என மறுபடியும் உள்ளே போனவள், ஒரு அரைமணி நேரத்தில் சுடிதார் அணிந்து கிளம்பிவந்தாள் லிப்ஸ்டிக் ஐ-லைனர் என தூக்கலான ஒப்பனையுடன்.

               'என்ன இவ, எங்க போறோம், என்ன எதுன்னு எந்த கேள்வியும் கேட்காம உடனே சரின்னு சொல்லிட்டு உள்ள போயிட்டா?' என குழப்பத்தில் உட்கார்ந்திருந்தவனுக்கு அவளைப் பார்த்ததும் 'ப்பா' என்றிருந்தது. அவள் இவ்வளவு சீக்கிரம் மனம் மாறக்கூடும் என அவன் கற்பனையில் கூட நினைக்கவில்லையே! அதனால் அவளுடைய இந்த உற்சாகத்தைப் பார்த்ததும் குழப்பம்தான் மேலும் அதிகரித்தது அவனுக்கு.

               முந்தைய இரவே அவனுடைய அக்கா அத்தானிடம் இந்த 'ஷாக் ட்ரீட்மெண்ட்' பற்றி தகவல் சொல்லிவிட்டான் அவன். இப்போதைக்கு அவள் கொஞ்சம் இறங்கி வந்தது போல் தோன்றினாலும், வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறாமல் இருக்க வேண்டுமே! இதற்கு ஒரு நிரந்தர தீர்வு தேவைதான் என்பதால் அவர்களுக்குமே இது சரியென்று பட, மறுத்து ஏதும் சொல்லவில்லை இருவரும்.

               ஹாசினியை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் நோக்கிப்போனான் சத்யா. எங்கே போகிறோம் ஏன் போகிறோம் என்பது தெரியாமல் போனாலும் தன் தாய் மாமன் தனக்கு நன்மையை மட்டுமே செய்வான் என்கிற நம்பிக்கையுடன் எந்த கேள்வியும் கேட்காமல் அவனுடன் சென்றாள் ஹாசினி.

               அன்று போல ஹோட்டல் மாதிரி ஏதாவது ஒரு பொது இடத்திற்கு பேச்சுவார்த்தைக்காக கௌசிக்கை வரச்சொல்லியிருக்கிறான் போலும் என்ற எண்ணத்தில் அவளிருக்க அவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் அவர்கள் பகுதியிலிருக்கும் அனைத்து மகளிர் காவல்நிலைய வளாகத்திற்குள் நுழைய பயத்தில் அப்படியே தூக்கிவாரிப் போட்டது ஹாசினிக்கு. அவளுடைய உடல் ஒரு குலுங்கு குலுங்கவும் சட்டென சத்யா அவளைத் திரும்பிப் பார்க்க அவளுடைய முகம் பேயறைந்தது போல் ஆகியிருந்தது.

               "எதுக்கு மாமா இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க" என அவள் பீதியுடன் கேட்க, "உன் டைவர்ஸ் பத்தி நம்ம கம்பெனி லாயர் கிட்ட பேசினோம் ஹசிம்மா. அவர்தான் அன்னைக்கு ரத்தம் வர அளவுக்கு கௌசிக் உன்னை அடிச்சான் இல்ல அதை மென்ஷன் பண்ணி ரிட்டன் கம்ப்ளைண்ட் ஒண்ணு பைல் பண்ணச் சொன்னார். டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ்ல புக் பண்ணி அவன உள்ள தள்ளிட்டோம்னா டைவர்ஸ் கிடைக்கறது ரொம்ப ஈஸி ஆகிடுமாம்" என அவன் சொல்லிக்கொண்டே போக முகத்தில் ஈ ஆடவில்லை ஹாசினிக்கு.

               "மாமா அன்னைக்கு அவன் என்னை அடிச்சதால ஒண்ணும் எனக்கு நெத்தியில காயம் படல. அதுக்கு முன்னாலயே மாடி படி ஏறி வீட்டுக்குள்ள வரும்போது தலை சுத்தி ஏதோ எட்ஜ்ல நல்லா இடிச்சிகிட்டேன்னு நினைக்கறேன்" என பயத்தில் அவள் தன்னை மறந்து உளறிவிட, வந்த ஆத்திரத்தில் பற்களைக் கடிக்க மட்டுமே முடிந்தது சத்யாவால்.

               பொறுமை காத்து சற்று நிதானித்தவன், "சரி விடு, இப்போதைக்கு நமக்கு டைவர்ஸ் கிடைக்கறதுதான் முக்கியம். இதை இப்படியே மெயின்டைன் பண்ணிக்கலாம்" என அலட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டு வேகமாகக் காவல் நிலையத்திற்குள் நுழைந்தான் சத்யா.

               தடுக்கும் வழி தெரியாமல், "எனக்கு டைவர்ஸ்லாம் வேணாம் மாமா. வாங்க வீட்டுக்கே போயிடலாம்" என கெஞ்சியவாறு அவனைப் பின்தொடர்ந்து ஓடினாள் அவள்.

               அதையெல்லாம் காதில் வாங்காமல் அங்கே இருந்த பெண் கான்ஸ்டபிளிடம் விசாரித்துவிட்டு சக்தியின் தோழி தமிழ்ச்செல்விக்கு முன்பாக அவன் போய் உட்கார, வேறு வழியில்லாமல் அவனுக்கு அருகில் வந்து நின்றாள் ஹாசினி. அவளுடைய இதயம் அதிவேகமாகத் துடிக்க உடல் பாட்டிற்கு தடதடத்துக்கொண்டே இருந்தது.

               அதற்குள் செல்வியிடம் அவன்  தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, கண்களில் கேலியுடன் ஹாசினியை பார்த்தவர், "கம்ப்ளைண்ட் ரெடி பண்ணி கொண்டுவந்திருக்கீங்களா?" எனக் கேட்கவும், தான் தயாராக வைத்திருந்த காகிதத்தை அவரிடம் நீட்டினான் சத்யா.

               "ஓகே சார், பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க, இவங்க ஹஸ்பண்டை இங்க வரவழைச்சு அவர்கிட்ட விசாரிச்சிட்டு தென் எப்.ஐ.ஆர் பைல் பண்ண சொல்றேன்" என அவர் சொல்லிக்கொண்டிருக்க, 'என்ன கௌசிக் மேல கம்ப்ளைண்ட் பண்றதா? அவன இங்க வரவழைச்சு விசாரணை பண்ணப்போறாங்களா?' என மனம் பதற, "ஐயோ, அதெல்லாம் வேண்டாம். மாமா, வாங்க நாம வீட்டுக்கு போயிடலாம்" என அவள் படபடக்க, "ப்ச்... உனக்கு ஒண்ணும் தெரியாது குட்டிமா. சும்மா இரு" என்றவன், "நீங்க அவனை இங்க வரச்சொல்லுங்க மேடம்" என ஹாசினியை இன்னும் அதிகம் அலறவைத்தான் சத்யா, சக்தியின் திட்டப்படி.

               ஒரு நிலையில் இல்லாமல் அவள் தவியாய் தவித்துக்கொண்டிருக்க ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே சக்தியுடன் அங்கே வந்துவிட்டான் கௌசிக்.

               சத்யாவுக்கு அருகில் காலியாக இருந்த இருக்கையில் வந்து சக்தி உட்கார, கௌசிக்குமே நிற்க வேண்டியதாக ஆகிப்போனது. சக்தியை நோக்கிப் பாய்ந்த பார்வைக்குக் கடிவாளமிட்டு சத்யா தன் கவனத்தை செல்வியிடம் திருப்ப, அவரை முன் பின் அறியாத பாவத்தில், "நான்தான் மிஸ்டர் கௌசிக்கோட லாயர்" என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் சக்தி. 'யப்பா, உலக நடிப்புடா சாமி' என வாய் பிளந்தான் சத்யா, கௌசிக்குமேதான்.

               'அடுத்து என்ன நடக்கப்போகிறதோ' என்ற பீதியில் நின்றிருந்தவளுக்கு கௌசிக்கைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

               அவள் பக்கம் திரும்பக்கூட இல்லை கௌசிக். காரணம் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்பது அவனுக்கு விளங்கவில்லை. மேலும் அவளுடைய முகத்தைப் பார்த்துவிட்டால் மொத்த நாடகத்தையும் சொதப்பிவிடுவோமோ என்ற பயம் வேறு சேர்ந்துகொண்டது அவனுக்கு. எல்லாம் காதல் படுத்தும் பாடுதான்! அவளிடம் அவன் கொண்ட அன்பும் ஒரு நீண்ட பிரிவும் அவளுடைய தவறுகளைக்கூட அவனை மன்னிக்கச் செய்தது என்றுதான் சொல்லவேண்டும்.

               "என்ன மிஸ்டர் கௌசிக் படிச்சவர்தான நீங்க, காட்டுமிராண்டி மாதிரி ரத்தம் வர அளவுக்கு உங்க பெண்டாட்டிய கை நீட்டி அடிச்சி வெச்சிருக்கீங்க? என செல்வி அவனை மிரட்டத்தொடங்க, "இங்க பாருங்க மேடம். அவர் ஒண்ணும் ரத்தம் வர அளவுக்கு அவங்கள அடிக்கல. அவங்க அன்னைக்கு வேற எங்கயோ அடி பட்டுட்டுதான் வீட்டுக்கே வந்தாங்க. வேணா அவங்க ஃப்ரெண்ட் பாலாவை கேட்டுப்பாருங்க" என அழகாக பாலாவை அதில் கோர்த்துவிட்டாள் சக்தி.

               "பாலான்னா யாருங்க அது? பையனா இல்ல பொண்ணா?" - செல்வி.

               "பாலா பொண்ணுதான், ஹாசினியோட பெஸ்ட் ஃப்ரெண்ட்ங்க மேடம்" - சத்யா.

               "அவங்க என்ன செஞ்சிட்டு இருக்காங்க? எந்த ஏரியால குடியிருக்காங்க" - செல்வி.

               "அவங்க ஒரு சிவில் இன்ஜினியர். &&& கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வேலை செய்யறாங்க. இங்கதான் சதானந்தபுரத்துல ஒரு பீஜில தங்கிட்டு இருக்காங்க. அவங்க பேரன்ட்ஸ் பெங்களூர்ல இருக்காங்கன்னு நினைக்கறேன்" - சத்யா.

               "அவங்க நம்பர் சொல்லுங்க"

               அவன் சொல்லச்சொல்ல அந்த எண்ணை தன் கைப்பேசியில் குறித்துக்கொண்டு அவளை அழைத்தார் தமிழ்ச்செல்வி.

               ஹாசினியிடம் யாரும் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. அது ஏன் என்று சிந்திக்கும் நிலையில் அவளும் இல்லை. இப்படியாக சில நிமிடங்களில் அங்கே வரவழைக்கப்பட்டாள் பாலா.

               ஹாசினியை குறித்த காவல்துறை விசாரணை  என்பதால் மிரண்டு போய் முதலில் அவள் அதையும் இதையும் சொல்லி மழுப்ப, 'ஜஸ்ட் ஒரு சின்ன விசாரணைக்குதான் உங்களை இங்க கூப்பிடறோம். நீங்க வரலன்னா நேர்ல விசாரிக்க  நீங்க தங்கியிருக்கற பீஜிக்கே ஒரு கான்ஸ்டபிளை அனுப்புவோம். அதுல உங்களுக்குப் பிரச்சனை எதுவும் இல்லன்னா நீங்க இப்ப இங்க வரவேண்டாம்" என செல்வி தன் பாணியில் அவளை நன்றாக மிரட்டவே வேறு வழி இல்லாமல் அங்கே வந்தாள் அவள்.

               தனியாக வரத் தயங்கி அவள் தருணை துணைக்கு அழைத்திருக்க, ஏதேதோ காரணம் சொல்லி அழகாகக் கழன்றுகொண்டான் அவன். அதில் ஒருவித எரிச்சல் மூண்டிருந்தது பாலாவுக்கு.

               அவள் உள்ளே நுழைந்ததும் முதல் கேள்வியே, "லாஸ்ட் மந் ஏதோ பர்த்டே பார்ட்டிக்கு போயிட்டு வந்தீங்களாமே, அன்னைக்கு மிஸஸ் ஹாசினிக்கு நெத்தியில எப்படி காயம் பட்டுது?" என்பதாகத்தான் இருந்தது.

               "பார்ட்டியா, எந்த பார்ட்டிக்கு போனத பத்தி கேட்கறீங்க மேடம்" என அவள் ஒன்றுமே தெரியாதது போலக்கேட்க, செல்வி ஹாசினியை பார்த்து 'நீயே சொல்' என்பதாக ஜாடை செய்யவும், "அது, தருண் பர்த்டே பார்ட்டிய பத்தி கேட்கறாங்க பாலா" என்றாள் அவள் தடுமாற்றத்துடன்.

               அடுத்து தருணை பற்றிய கேள்விகள் எழ, பாலாவே அவனைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அடுத்த நொடி, உடனே அங்கே வந்துசேருமாறு அவனுக்கும் அழைப்பு பறந்தது, மறுத்து எந்த ஒரு காரணமும் சொல்ல வழியே இல்லாத வகையில்.

               "சரி எப்படி அடிபட்டுது சொல்லுங்க?" - செல்வி.

               “மாடி படியில ஏறி வரும்போது தடுமாறி இடிச்சிகிட்டா" - பாலா.

               "ஏன் தடுமாறினாங்க? பார்ட்டில ட்ரிங்க் பண்ணியிருந்தாங்களா?" - செல்வி.

               "ஐயோ, இல்ல மேடம்" - ஹாசினி.

               "ஆமாம், நான் சொல்ல சொல்ல கேட்காம அன்னைக்கு இவ நிறைய ட்ரிங்க் பண்ணிட்டா மேடம்" என பாலா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, தலையில் இடியே விழுந்தது போலிருந்தது ஹாசினிக்கு.

               "ஐயோ, இல்ல மேடம். எனக்கு அந்த பழக்கமே கிடையாது" எனப் பதறினாள் அவள்.

               இதையெல்லாம் கேட்டுக்கொண்டு அடக்கப்பட்ட கோபத்துடன் சத்யா உட்கார்ந்திருக்க கௌசிக்கின் முகம் இருளடைந்து போனது.

               "ஹேய், நீ கல்யாணம் ஆண பொண்ணு, சீக்கிரம் கிளம்பு, லேட்டா போனா உங்க வீட்டுல கோவிச்சுக்க போறாங்கன்னு சொன்னதுக்கு, அவங்க யாரு என் மேல கோபப்பட? என்னை யாரும் எந்த கேள்வியும் கேட்க முடியாதுன்னு சொல்லிட்டு, நீதான அன்னைக்கு ட்ரிங்க் பண்ணிட்டே இருந்த?" என்றாள் பாலா அப்பாவிபோல.

               பின் பக்கமாகத் திரும்பி, 'உன் பிரெண்டோட லட்சணத்தை நீயே பார்' என்பதாக  சத்யா ஹாசினியை ஒரு ஏளனப் பார்வை பார்க்க, அவளுக்கு அந்த பாவையின் அர்த்தம் கூட புரியவில்லை, அழுகைதான் வந்தது.

               "இல்ல மாமா, அப்படியே தலை கீழ மாத்தி சொல்றா இவ. கௌசிக், ப்ளீஸ் நீ இதையெல்லாம் நம்பாத" என்றவள், "என்ன பாலா, நீ போய் இப்படி பேசற? அன்னைக்கு நான் எங்க ட்ரிங்க் பண்ணேன். லேட் ஆகுது. கௌசிக் ஆபிஸ்ல இருந்து வந்துட்டான்னா என் மேல கோபப்படுவான். வா சீக்கிரம் போகலாம்னு சொன்னதுக்கு நீதான ஒரு முக்கியமான கஸ்டமர் கால் பேசிட்டு இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுனு சொல்லி போன் பேசிட்டே லேட் ஆக்கின. டின்னர் சாப்டுட்டேன்னு சொன்னதை கூட கேட்காம நீதான 'எனக்கு பசிக்குது லைட்டா ஏதாவது சாப்பிடலாம்ன்னு சொல்லி ரெண்டு பேருக்கும் ஜூஸ் எடுத்துட்டு வந்த" என ஹாசினி அவளிடம் எகிற,

               "இல்ல மேடம் இவ பொய் சொல்றா. இவளுக்கு காலேஜ் டேஸ்ல இருந்தே  ட்ரிங்க் பண்ற பழக்கம் உண்டு. கல்யாணம் ஆனதுல இருந்து கஷ்டப்பட்டு குடிக்காம மெயின்டைன் பண்ணிட்டு இருந்தா. ஆனா அன்னைக்கு வீட்டுல ஏதோ சண்டை போலிருக்கு. அதனால நிறைய குடிச்சிட்டு வீட்டுக்கு போகவே பிடிக்கலன்னுதான் சொல்லிட்டே இருந்தா" என ஒரு மாதிரியான குரலில் சொன்ன பாலாவின் பார்வை ஒரு நொடி கௌசிக்கை தொட்டு மீண்டது.

               "என்னம்மா இதெல்லாம், இவங்க சொல்றதெல்லாம் நிஜம்தானா" என செல்வி ஹாசினியை அதட்ட, எப்பொழுதுமே வாழ்க்கையின் இலகுவான பக்ககங்களை மட்டுமே பார்த்தவளுக்கு இந்த இருண்ட பக்கம் மிக மிக புதியது.

               "இல்ல மேடம் இவதான் மேடம் பொய் சொல்றா. இவ இப்படியெல்லாம் பேசுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல" என்று அவருக்கு பதில் சொன்னவள், "ஏன் பாலா இப்படியெலாம் அபாண்டமா பேசற" என்றாள் பரிதாபமாக.

               சில நாட்களாகவே சரியாக சாப்பிடாமல் உறங்காமல் உடல்நிலையை அதிகம் கெடுத்துக்கொண்டாள் அவள். பயம், குற்ற உணர்ச்சி கோபம் என மன ஆரோக்கியமும் ஒரு நிலையில் இல்லாமல் போக, இளைத்து கண்களுக்குக் கீழே கருவளையம் சூழ்ந்து, அழுது அழுது, அவள் செய்துவந்த மேக்கப் வேறு கண்டபடி கலைந்துபோயிருக்க அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது கௌசிக்குக்கு.

               அவளுக்குக் குடிப் பழக்கமெல்லாம் இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அவள் வேறு அழுதபடியே இருக்கவும் அவனுடைய பார்வை அவளிடமே நிலைத்திருந்தது .

               ஏற்கனவே உடல் பலவீனப்பட்டுப்போயிருக்க உச்சபட்ச அதிர்ச்சியில் துவண்டுபோய் நிற்கக்கூட முடியாமல் அவள் தடுமாற, வேகமாக வந்தது அவளை தன் கை வளைவுக்குள் இருத்திக்கொண்டான் கௌசிக்.

               நேராக உட்கார்ந்திருந்ததால் 'சுத்தம்' என்பதாக செல்வி கடுப்புடன் அவனைப் பார்த்துவைக்க, அவருடைய பார்வையின் பொருள் புரியாமல் சத்யா சக்தி இருவரும் அனிச்சையாக பின்னால் திரும்பிப்பார்க்க, தானும் கடுப்பாகிப்போய், 'இவனெல்லாம் வேலைக்கே ஆகமாட்டான்' என சக்தி முணுமுணுத்த விதத்தில் மூண்ட சிரிப்பை அடக்கினான் சத்யா.

               இந்த காட்சியைப் பார்த்ததும் அதுவரை ஒரு அப்பாவி போர்வை போர்த்தியிருந்த பாலாவின் பார்வையில் உஷ்ணம் ஏறிப்போனது அங்கே இருந்த அனைவருக்குமே நன்றாகப் புலப்பட்டது.

               "என்ன, ஏன் பாலான்னு அப்பாவி மாதிரி என்னை கேள்வி கேட்கறியா? அவ்வளவு இன்னசன்ட்டாடி நீ?காலேஜ்ல படிக்கும்போது நாம எல்லாரும் சேர்ந்துபோய்தானே கௌசிக் கிட்ட டௌட் கேட்கறமாதிரி பேச்சு கொடுப்போம். எங்க எல்லாருக்குமே அவன் மேல ஒரு க்ரஷ் அதனாலதான் சும்மா இப்படி சான்ஸ் கிரியேட் பண்ணிட்டு போய் அவன் கிட்ட பேசறோம்னு உனக்கு தெரியாதா என்ன? அப்பல்லாம் என்னவோ அப்பாவி மாதிரி சீனை போட்டுட்டு, சான்ஸ் கிடைச்சதும் அழகா எங்க எல்லாரையும் கழட்டிவிட்டுட்டு நீ இவனை லவ் பண்ணியிருக்கல்ல.

               ஹோட்டல் சினிமா பர்சேஸ்னு எங்க போனாலும் நாம எல்லாரும் ஒண்ணாத்தானடி ஊரை சுத்துவோம். ஊமை கோட்டான் மாதிரி எப்படிடீ உன்னால மூணு வருஷம் இதை எங்க கிட்டயிருந்து மறைக்க முடிஞ்சுது? நல்லா ப்ளான் பண்ணி சீக்ரட்டா நிச்சயதார்த்தமெல்லாம் நடத்தி முடிச்சிட்டு நீ வந்து நல்லவ வேஷம் போட்டா, மத்தவளுங்க வேணா உன்னை நம்புவாளுங்க. நான் இல்ல" என அவள் உணர்ச்சிவசப்பட்டு தன்னை மறந்து கத்தத்தொடங்க 'இவளா இப்படி?' என கொஞ்சம் கூட நம்பமுடியவில்லை ஹாசினியால்.

               கௌசிக் ஏன் இவர்களுக்கெல்லாம் தங்கள் காதல் விவகாரம் தெரியவேண்டாம் என படித்துப் படித்து சொன்னான் என்பதும் சத்யா இவளைப் பற்றி எச்சரித்ததன் காரணமும் உச்சந்தலையில் ஆணி அடித்தது போல உரைத்தது அவளுக்கு. அதற்குள் சத்யா எழுந்து அவளைத் தான் அமர்ந்திருந்த இருக்கையில் உட்காரவைத்திருந்தான், அதிர்ச்சி வைத்தியம் நன்றாக வேலை செய்கிறது என்பது புரியவே.

               உடல் துவண்டிருந்தாலும் அவளது கண்கள் கனலை உமிழ பாலாவைப் பார்த்தவள், “அப்படின்னா, ‘ஹசின், எந்த சாக்கும் சொல்லாத. அட் எனி காஸ்... ஒரு நாள் எங்களுக்காக ஒதுக்கு. இனி இப்படி ஒரு சான்ஸ் நமக்கு கிடைக்கவே  கிடைக்காது ப்ளீஸ். முடிஞ்சா தருணையும் அன்னைக்கு நம்ம கூட ஜாயின் பண்ணிக்க சொல்றேன்’ன்னு அதையும் இதையும் பேசி கல்யாணத்துக்கு முன்னால தனியா மீட் பண்ணனும்னு சொல்லி என்னை கம்ப்பல் பண்ணது, அப்படியே என் மேல ரொம்ப அக்கறை பொங்கி வழியற மாதிரி  'நீ ரொம்ப அவசரப்பட்டுட்டியோன்னு தோணுது ஹசின். உங்க அப்பாவே ஒரு மாப்பிள்ளை பார்த்திருந்தால் நம்ம தருண் மாதிரி ஒரு பணக்கார வீட்டுப் பையனா பார்த்திருப்பார்? உனக்கு இந்த மிடில் க்ளாஸ் லைஃப்ல எல்லாம் செட் ஆகுமா. அதுல உன்னால கம்ஃபர்டபுளா இருக்க முடியுமான்னு நல்லா யோசி. அவன் ஒரு கன்சர்வேட்டிவ் டைப் வேற. உன்னை ஃப்ரீயாவே இருக்க விடமாட்டான்? இப்படி உன்னால பார்ட்டி பர்சேஸ்னு கன்டின்யூ பண்ண முடியாது. நல்லவேளை இன்னும் கல்யாணம் ஆகல. இப்ப கூட உனக்கு நிறைய டைம் இருக்கு. நல்லா யோசிச்சு டிசைட் பண்ணு’ன்னு நீ சொன்னதெல்லாம் என் மனசை கெடுத்து இவன் கூட என்னை நிம்மதியா வாழவிடாம செய்யத்தானா?’ என வெடித்தாள் ஹாசினி.

               உண்மைதான், பாலாவால் ஆனவரை பேசிப்பேசியே அவளை மூளைச் சலவை செய்திருக்க நல்லவேளையாக அது வேறு விதமாக வேலை செய்திருந்தது ஹாசினியிடம்.

               “அப்படிலாம் எதுவும் இல்ல, கௌசிக் ரொம்ப கேரிங். என்னால அவனேட ரொம்ப சந்தோஷமா வாழ முடியும். நீதான் அவன தப்பா புரிஞ்சிட்டு உளரிட்டு இருக்க” என அவளுக்கு புரியவைக்க முயன்று, பாலா தான் சொல்திலேயே நிலையாக இருக்கவும் அது முடியாமல் போக அதை நிரூபித்துக் காண்பிக்கும் ஒரு வேகம் உண்டானது ஹாசினிக்கு.

               "எது எப்படி இருந்தாலும் கௌசிக்க என் வழிக்குக் கொண்டு வந்திடுவேன்" என பாலாவிடம் அன்று சவால்விட்டுவிட்டு வந்தாள் ஹாசினி.

               ஆனாலும் கூட பாலா சொன்ன அனைத்தும் அவளுடைய மனதில் பதிந்துபோய் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பயம் உருவாகிப்போனது அவளுக்கு. திருமணம் முடியும் வரையிலும் கூட தான் செய்வது சரியா அல்லது தவறா என்கிற குழப்பம் அவளுடைய மனதை அரித்துக்கொண்டே இருந்தது. ஆனாலும் திருமணத்திற்காக அவளுடைய அப்பா ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யவே எந்தப் பிரச்சினை வந்தாலும் அவர் பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை உண்டாக மற்றதெல்லாம் பின்னுக்குப்போனது.  அனைத்தையும் மறந்து மிக மகிழ்ச்சியுடன் கௌசிக்குடனான திருமண வாழ்வில் அடி எடுத்து வைத்தாள் அவள்.

               ஆனால் எல்லா குடும்பங்களிலும் இருப்பது போல சிற்சில இடர்பாடுகள் அவளுடைய புகுந்த விட்டு வாழ்க்கையிலும் ஏற்பட, ஆரம்பகட்ட வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான் என்பதை உணராமல் அவளுடைய பயமும் குழப்பமும் கூடிப் போனது. அந்த நெருக்கடியில் அவள் கௌசிக்கை தன் விருப்பப்படியெல்லாம் வளைக்க தீவிரமாக முயல அது சில பல சிக்கல்களில் போய் முடிந்துவிட்டது.

               ஏற்கனவே பாலாவிடம் அவள் சவால்விட்டுவிட்ட காரணத்தால் அவளுடைய பிரச்சனைகளை வெளியில் சொல்லிக்கொள்ள அவளுடைய தன்மானம் இடங்கொடுக்காமல் போக 'அத்தை என்னை அப்படியே தாங்கறாங்க, மாமா என்ன அவங்க சொந்த மகளாவே நினைக்கறாங்க, பூஜா எனக்காக என்ன வேணாலும் செய்வா. கௌசிக் எனக்காக உயிரையும் கொடுப்பான்' என்று ஏகத்துக்கும் அவளிடம் அளந்துவிட்டாள், அது எரிகிற கொள்ளியில் எண்ணை வார்ப்பது போல அகப்போகிறது என்பதை அறியாமல்.

               "ப்ச்... நீதான் இவ்வளவு பெருமையா சொல்லிக்கற. ஆனா காலேஜ் டேஸ்லயிருந்தே கௌசிக்கு எங்களை பிடிக்காது. அவன் ஏன் உன் கூட அதிகமா டைம் ஸ்பென்ட் பண்றதில்லன்னு யோசி? நம்ம ப்ரெண்ட்ஸ் கொடுக்கற ஒரு பார்ட்டிக்கு கூட அவன் வரமாட்டேங்கறானே ஏன் தெரியுமா? எங்களையெல்லாம் அவனுக்கு பிடிக்கல அதனாலதான்" என இடக்கு மடக்காக பாலா சொல்ல, அலுவலகத்தில் அவனுடைய வேலை பளுவைப் பற்றி அவள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் நம்பாதவள் போல ஒவ்வொரு முறை அவளை நேரில் சந்திக்கும் போதும் இதையே மறுபடி மறுபடிப் பேசி தான் சொல்வதுதான் உண்மை என அழுத்தமாக பதிவு செய்தாள் பாலா.

               இதனால் சவிதா, ப்ரீத்தி, மேகலா, தருண் என மற்றவர்களுக்குமே அவள் சொல்வதுதான் சரி என்ற எண்ணம் தோன்றிவிட எல்லோருக்குமே ஹாசினியிடம் ஒரு வேற்றுமை உணர்வு உண்டாகிப்போய் அவர்களுடைய நடவடிக்கைகளிலும் அந்த வேறுபாடு அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்தது. அது  ஹாசினியை இன்னும் அதிகமாகத் தூண்டி விட்டு கௌசிக்கை வேலையை விடச் சொல்லும் அளவுக்கு அவளை வெறியுடன் நச்சரிக்கவும் வைத்தது.

               "ச்ச, உன் பேச்சை நம்பிதான் சவி, மேகா எல்லாரும் என்னை எனிமியா பார்க்க ஆரம்பிச்சாங்க. அந்த டென்ஷன்லதான்டீ நான் கௌசியை ரொம்பவே டார்ச்சர் பண்ணிட்டேன். அதுதான் என்னை இவ்வளவுதூரம் கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. போயும் போயும் உன்னை போய் நம்பினேன் பாரு, எனக்கு இது தேவைதான்" என்றவள் ஒரு நொடி திடுக்கிட்டு, "ஏய் உண்மையை சொல்லுடீ, இதுல தருணும் உனக்கு உடந்தைதான? அன்னைக்கு நான் குடிச்ச ஜூஸ்ல நீயும் அவனும் சேர்ந்துதான ட்ரக் கலந்து நான் ட்ரிங்க் பண்ண  மாதிரி செட் அப் பண்ணீங்க" என ஆற்றாமையில் சுற்றுப்புறம் மறந்து வெறிபிடித்தவள் போல கத்தத்தொடங்கினாள் ஹாசினி.

               'வாம்மா மின்னல், இதைத்தான நான் அன்னைக்கே சொன்னேன். ஆனா இது இப்பதான் உன் மண்டைக்குள்ள உரைக்குதா?' என்பதாக கௌசிக் அவளை கடுப்புடன் பார்க்க, "ஷூ, இது போலீஸ் ஸ்டேஷன். இப்படியெல்லாம் கத்தி கலாட்டா பண்ணக் கூடாது. எது சொல்றதுனாலும் நிதானமா சொல்லுங்க" என அவளை அதட்டி அமைதிப்படுத்திவிட்டு, "இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க பாலா?" என செல்வி கேட்ட தொனியில் சப்த நாடியும் ஒடுங்கிப்போனது பாலாவுக்கு.

               "ஐயோ, அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல மேடம், நான் சாதாரணமா சொன்னதையெல்லாம் கூட கொஞ்சம் சேர்த்து இவ ஓவரா பில்ட் அப் கொடுக்கறா" என பாலா உள்ளே போன குரலில் சொல்ல,

               "இப்ப உள்ளது உள்ளபடி நீயே சொல்லிட்டா, நாங்க இந்த பிரச்சனையை இதோட விட்டாலும் விட்டுடுவோம், இல்லனு வை, அன்னைக்கி பார்ட்டில நீ இவளுக்கு ஜூஸ்ல போதை மருந்து கலந்து கொடுத்ததை வெச்சு கேஸ் புக் பண்ணி உள்ள தள்ளி உன்னை கோர்ட்ல நிறுத்திடுவேன்" என அவர் மிரட்டிய மிரட்டலில் பாலா உள்ளுக்குள்ளே பூட்டிவைத்திருந்த ஹாசினியின்மேலான வன்மம் மொத்தமும் வெடித்து வெளியில் சிதறியது.

****************

You cannot copy content