You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's Poove Un Punnagayil - Final

Quote

அத்தியாயம்-37

சத்யாவை அங்கே பார்த்ததும் வியப்பும் மகிழ்ச்சியும் போட்டிப்போட அவனை நோக்கி ஓட்டமும் நடையுமாக வந்து, "ஆட்டோ பிடிச்சு போயிருப்பேனே சத்யா, உங்களுக்கு ஏன் வீண் சிரமம்" என அவள் சொன்னாலும் அதில், ‘இவன் இங்கே வந்து காத்திருப்பதே எனக்காகத்தானே!’ என்பதாக அப்படி ஒரு பெருமிதம் தொனிக்கவும், அவள் அதை ஒப்புக்காக மட்டுமே சொல்வது நன்றாகப் புரிந்தது அவனுக்கு.

      பதிலேதும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் சரிந்து கார் கதவை அவன் திறந்து  விட மறுத்து பேசாமல் உள்ளே உட்கார்ந்தவள், "உண்மையிலேயே உங்க வீட்டு பங்க்ஷன் எனக்கு ஒரு நல்ல ஃபீல் கொடுத்தது சத்யா" என்றாளவள்.

      "உஃப்... பங்க்ஷன் முடிஞ்சு எல்லாரையும் வழியனுப்பி மண்டபத்தை காலி பண்றதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டோம்" என சலித்தவன், "சாரி அதனாலதான் மார்னிங் என்னால உன்னை ட்ராப் பண்ண முடியல" என குறையாகச் சொல்லவும், "ச்சச்ச சத்யா, அதான் கோபாலை அனுப்பினீங்களே அதுவே எனக்கு போதும். மோர் ஓவர் நான் இதையெல்லாம் யார்கிட்டயும் எக்ஸ்பெக்ட் பண்றதும் இல்ல" என்றவள், "ஆனா எனக்கு வேற ஒரு ஹெல்ப் வேணுமே" என இழுக்க, "ப்ச்... என்ன சக்தி இது பார்மலா பேசிட்டு" என்றான் அவன் குற்றம்சாட்டும் குரலில்.

      என்ன சொல்வது என புரியாமல் அவள் மௌனம் காக்கவும், “சரி சொல்லு" என அவன் விட்டுக்கொடுக்க, "அது இல்ல, ஊர்ல இருக்கற வீட்டை தங்கச்சி பேருக்கே மாத்தி கொடுக்கச் சொல்லி அம்மாகிட்ட சொல்லிட்டேன். ஆனா அம்மாவை அவ கூட விட முடியாது. அவங்கள இங்கயே கூட்டிட்டு வந்துடலாம்னு இருக்கேன். அதனால எனக்கு அர்ஜண்டா வாடகைக்கு ஒரு வீடு வேணும். நல்ல ரெசிடென்ஷியல் ஏரியால ஒரு வீடு பார்த்து கொடுக்க முடியுமா?" என அவள் கேட்க அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன், "அந்த பெரிய கிச்சனோட இருக்கற வீட்டை ஒரு தடவ வந்து பார்க்கமாட்டியா சக்தி?" என்றான் அவன் ஒரு மாதிரியான குரலில்.

      "அதை பார்த்து நான் என்ன பண்ண போறேன் சொல்லுங்க. என்னால இப்ப வீடு வாங்க முடியாதுனு உங்களுக்கு நல்லாவே தெரியும் இல்ல?" என அவள் வருத்தத்துடன் சொல்ல, "சும்மா விண்டோ ஷாப்பிங் பண்ணுவாங்க இல்ல அந்த மாதிரி நினச்சு இப்ப என் கூட வந்து பாரு. அப்பறம் முடிவு பண்ணலாம்" என்றவன் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடாமல் பிடிவாதமாக தான் சொன்ன இடத்திற்கு  அவளை அழைத்துவந்தான்.

      சென்னையை விட்டு கொஞ்சம் தள்ளி, அடுக்குமாடி கட்டிடங்கள் பள்ளிக்கூடம் கடைகள் என எல்லா அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியிருந்தாலும் அதிக பரபரப்பில்லாமல் அமைதியுடன் இருந்தது சமீபமாக முன்னேறிக்கொண்டிருக்கும் அந்த குடியிருப்பு பகுதி.

      அங்கே இருக்கும் ஒரு தனி வீட்டின் அருகில் வாகனத்தை நிறுத்தி அவன் இறங்கவும் தானும் இறங்கி வந்தாள் சக்தி.

      அவனுடைய லேப்டாப் பேகிலிருந்து சாவிக்கொத்தை எடுத்தவன் காம்பவுண்ட் கேட்டை திறந்து அவளை முன்னே செல்லுமாறு ஜாடை செய்து வழி விட்டு நிற்க, உள்ளே நுழைந்தவள் அந்த வீட்டின் அமைப்பைப் பார்த்து அப்படியே நெகிழ்ந்துபோய் நின்றாள்.

      நான்கு மூலைகளிலும் தொங்கும் பூத்தொட்டிகளில் வண்ணமிகு மலர்கள் பூத்து குலுங்க ஒரு கார் நிறுத்தும் அளவுக்கு அகன்ற போட்டிக்கோவுடன் அந்த வீட்டின் முகப்புத்தோற்றமே அவ்வளவு கம்பீரமாக காட்சி அளித்தது.

      கண்ணுக்கு குளிர்ச்சியாக வீட்டைச் சுற்றிலும் ஏதேதோ செடி கொடிகள் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்தன.

      சூரியன் அஸ்தமனமாகி லேசாக இருள் கவிழத் தொடங்கியிருக்க வீட்டின் கதவைத் திறந்து மின்விளக்குகளை ஒளிரவைத்தவன், "உள்ள வா சக்தி" என அழைக்கவும், அங்கே வந்தவளின் முகம் இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு உணர்வைப் பிரதிபலிக்க, வீட்டைச் சுற்றி பார்வையைச் சுழலவிட்டாள் அவள்.

      வெண்மை நிறத்தில் டைல்ஸ் பளபளக்க எளிமையாக அமைக்கப்பட்டிருந்த முகப்பறையில் புத்தம்புதிய சோஃபாக்கள் போடப்பட்டிருந்தன.

      கண்ணாடிக் கதவுகள் போடப்பட்ட ஷோகேஸ் ஒன்று காலியாக இருந்தது.

      "ரெண்டு பெட்ரூம் இருக்கு சக்தி. இன்னும் பர்னிஷ் பண்ணல. குடிவந்த பிறகு உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கி போட்டுக்கலாம்" என்றவன் அவற்றையும் காண்பிக்க, அவள் கற்பனையில் உருவாக்கிவைத்திருக்கும் அவளுடைய இல்லம் அப்படியே உயிரோட்டமாக அவளுடைய கண்முன்னே விரிந்திருக்க வியப்பு தாங்கவில்லை அவளுக்கு.

      "வா உன்னோட ட்ரீம் கிச்சனை பார்க்கலாம்" என்றவன் அருகிலிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, உணவு மேசை மற்றும் ப்ரிட்ஜ் சகிதம் டைனிங் ஹாலும் அதை ஒட்டி ஓபன் கிச்சன் மாடலில் நல்ல விஸ்தாரமான நவீன வசதிகளுடனான சமையல் அறையும் பார்க்கவே அவ்வளவு அருமையாக இருந்தது.

      மேலும் மேலும் நெகிழ்ச்சியாகிப்போய் தொண்டை அடைத்ததில் பேச்சே வரவில்லை அவளுக்கு.

      "என்ன இப்படி ஒரு சைலன்ட் ரியாக்ஷன் கொடுக்கற? நீ அன்னைக்கு சொன்னியே அந்த மாதிரி ஸ்பேஷியஸ் கிச்சன், ஓரளவுக்கு உன் எக்ஸ்பெக்ட்டேஷனுக்கு மேட்ச் ஆகுதா?" என அவன் ஆவலுடன் கேட்க, கண்கள் குளமானது அவளுக்கு.

      "அற்புதமா இருக்கு சத்யா, ஆனா இப்ப இதை வாங்கற அளவுக்கு என் பைனான்ஷியல் சிச்சுவேஷன் இல்லையே" என அவன் ஏக்கத்துடன் சொல்ல, "இப்ப அதை பத்தி யாரு கேட்டாங்க" என்றவன்,

      "உனக்கு ஒண்ணு தெரியுமா சக்தி, இப்ப என்னை விட உன் நிலைமை எவ்வளவோ பெட்டர்” என அவன் சொல்ல, “வாட்?” என அவள் கேள்வியாய் அவனைப் பார்க்கவும், “என்ன இருந்தாலும் நீங்கலாம் ப்ரபஷனலி வெல் செட்டில்ட் மேடம். ஆனா நான் இப்ப ஒரு வெட்டி ஆபீஸர் தெரியுமா?" என அவன் வெகு சகஜமாகச் கேட்க, "என்ன, வேலையை விட்டுடீங்களா? ஏன் சத்யா, அது உங்க அத்தானோட கம்பனிதான?" என அதிர்ச்சியாய் கேட்டாள் சக்தி.

      "அதனாலதான் சக்தி விலகிக்கலாம்னு இருக்கேன்" என்றவன், "ஹாசினி இப்ப கம்பெனிக்கு வர ஆரம்பிச்சுட்டா. ஓரளவுக்கு நல்லாவே வேலை கத்துக்கறா. தென் சந்துவும் இப்பவே சைட் ஒர்க்ல எல்லாம் இன்டரஸ்டடா இருக்கான். ஸோ அவங்களுக்கு வழிவிட்டு விலகிக்கலாம்னு" என முடித்தான் அவன்.

      "அப்படின்னா இனிமேல் என்ன பண்ண போறீங்க" எனக் கேட்டாள் அவள் அக்கறை தொனிக்க.

      "எதுக்கு சக்தி" என அவன் புரியாதவன் போலக் கேட்க, "ஆங்... பூவாக்குதான்" என சாப்பிடுவதுபோல் அவள் ஜாடை செய்யவும், "பேசாம ஆவெரேஜ் மந்த்லி இன்கம் ஒரு சிக்ஸ்டி தவுசண்ட் இருக்கற மாதிரி ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன் சக்தி, நீ என்ன நினைக்கற" என வெகு இயல்பாகக் கேட்டான் சத்யா.

      அவன் தன்னை பற்றித்தான் சொல்கிறான் என்பதையே புரிந்துகொள்ளாமல் அவன் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்கிற கேள்வி மனதிற்குள் பெரிதாக எழ அவளுடைய மனம் வெகுவாக சுணங்கிப்போய் சுள்ளென கோபம் வந்தது சக்திக்கு.   

      அதை மறைத்துக்கொண்டு, "ஏன் சத்யா வெறும் சிக்ஸ்ட்டி தவுசண்ட் போதுமா? ஒரு ஒன் லேக், ஒன் பாயிண்ட் ஃபைவ் லேக்ன்னு சம்பாத்திக்கற பொண்ணா பார்த்து கரெக்ட் பண்ண வேண்டியதுதான?" என் அவள் எரிச்சலடைய, அவளுடைய மனநிலை அப்பட்டமாக வெளிப்படவும், "ப்ச், பேராசை பெரு நஷ்டம் சக்தி, எனக்கு இதுவே போதும்" என்றான் அவன் உள்ளம் குதூகலிக்க.

      "பரவாயில்ல சத்யா, இப்படி ஒரு முடிவை எடுத்ததும் இல்லாம அதை ஓப்பனா சொல்றீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க நீங்க” என அவள் மேலும் கிண்டலாகச் சொல்ல, 'வெக்கமே இல்லாமங்கற வார்த்தையை கஷ்டப்பட்டு அவாய்ட் பண்ணிட்ட போலிருக்கு" என்றான் அவன் அதே கிண்டலுடன்.

      “ப்ச், சொல்லமாட்டீங்க பின்ன?”  என அவள் அலுத்துக்கொள்ள,

      "இல்லையா பின்ன, நம்ம சோஷியல் செட்டப் அப்படித்தான இருக்கு? ஆண்கள்னா கட்டாயமா வேலைக்கு போயே ஆகணும். ஆனா பொண்ணுங்கன்னா மட்டும் வேலைக்கு போறதும் சம்பாதிக்கறதும் ஆப்ஷனல்தான். அப்படியே இருந்தாலும் தன்னைவிட படிப்போ வருமானமோ அந்தஸ்த்துலயோ ஒரு படி மேல இருக்கற பெண்ணை கட்டிக்கறதுல ஆம்பளைங்களுக்கு அப்படி ஒரு இன்ஃபீரியரிட்டி காம்ப்ளக்ஸ் சக்தி.

      பொண்ணுங்களும் இந்த செட்டப்பை விட்டு வெளியில வரமாட்டேங்கறீங்க. விலங்குகள்ல கூட பெண்கள்தான் ஃபுட் கேதரர்ஸாவும் இருக்கு தன் குட்டிகளையும் பராமரிக்குது. ஏன் மனுஷங்க மட்டும் இப்படி இருக்காங்களோ தெரியல!

நான் உரிமையா என் பெண்டாட்டியைப் பார்த்து நீ வேலைக்கு போ, நான் வீட்டை பார்த்துக்கறேன்னு சொன்னா அது உன் ஈபீகோ சட்டப்படி உலகமகா குத்தமா என்ன?” என அவன் கேட்டுக்கொண்டே போக, 'ஆங்' என அவனை பார்த்துவைத்தாள் அவள்.

      அசாதாரணமாக அவளை ஒரு பார்வை பார்த்தவன், "ஹேய், இப்ப கூட, 'நான்தான் வேலைக்கு போய் போதுமான அளவுக்கு சம்பாதிக்கறேனே, நீ சமையல் செஞ்சு வீட்டை பார்த்துக்கோ, நாம கல்யாணம் செஞ்சுக்கலாம், நான் உனக்கு வாழ்க்கை கொடுக்கறேன்’னு சொல்ல உனக்கு மனசு வருதா பாரு" என அப்பட்டமாக சொன்னவனை அதிர்ந்து பார்த்தாள் சக்தி.

      சட்டென தன்னை சமாளித்துக்கொண்டவள், "என்ன சத்யா கிண்டலா" என அவனை முறைத்து வைக்க, "ச்சச்ச... ஐம் வெரி சீரியஸ். இதுல இன்னும் ஒரு அட்வான்டேஜ் என்னன்னா, உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, வாங்க முடியலைன்னு நீ பீல் பண்ண இல்ல இந்த வீடு இதை வாங்க நீ டவுன் பேமெண்ட்டுக்கு பணம் அரேன்ஞ் பண்ண வேண்டாம். மூச்சு முட்ட ஈஎம்ஐ கட்ட வேணாம். என்னோட சேர்ந்து இந்த வீட்டை இலவச இணைப்புன்னு நினைச்சாலும் சரி, இல்ல இந்த வீட்டுக்கு நான் இலவச இணைப்புன்னு நினைச்சாலும் சரி, பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ ஆஃபர்னு வெச்சுக்கோ" என அவன் கொஞ்சம் கூட சிரிக்காமல் சொல்ல கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத்தான் அப்படி ஒரு சிரிப்பு பீரிட்டுக் கிளம்பியது.

      ஆனால் அந்த சிரிப்பு சில நொடிகள் கூட நீடிக்காமல் ஏதோ யோசனையில் அவளுடைய முகம் இருண்டு போக, "என்ன சொல்ல வரீங்க சத்யா? இந்த வீடு ப்ரீன்னு சொன்னா, என்னையும் எங்க அம்மா மாதிரி நினைக்கறீங்களா? எனக்கு, எனக்குன்னு ஒரு ஃபேமிலிங்கறது அப்படி ஒரு பெரிய ட்ரீம் சத்யா! எங்க அதுல தோத்துப்போயிடுவோங்கற ஒரு பயத்துலதான் நான் இன்னும் சிங்கிளாவே இருக்கேன்னு கூட சொல்லலாம். ப்ளீஸ் தயவு செய்து என் எமோஷன்ஸோட விளையாடாதீங்க!" என்றாள் அவள் வேதனையுடன்.

      அதில் பயத்துடன் கூடிய ஒருவித தாழ்வு மனப்பான்மையும் இயலாமையும் குற்ற உணர்ச்சியும் அவளிடம் அப்பட்டமாக வெளிப்பட,  உண்மையில் தன் தவறை உணர்ந்தவன், "சாரி சக்தி, நான் அப்படி சொல்ல வரல. எனக்கு உன் செல்ஃப் ரெஸ்பெக்ட் பத்தி நல்லாவே தெரியும். ஒரு சிலபேரை பார்த்தால் நம்ம அம்மா அப்பாவோட சாயல் இல்ல நமக்கு பிடிச்சவங்களோட ஏதோ ஒரு குணம், இல்லன்னா ஒரு மேனரிசம் இப்படி ஏதாவது ஒண்ணு நம்மள அட்ரேக்ட் பண்ணும். அவங்கள காரணமே இல்லாம நமக்கு ரொம்பே பிடிச்சு போகும். அது மாதிரிதான், எனக்கு உன்னைப் பார்த்ததும் எங்க அப்பாவோட ஞாபகம் வந்துது. அவர்கூட உன்னை மாதிரிதான் முன்ன பின்ன தெரியாதவங்க மேல கூட ரொம்ப கேரிங்கா இருப்பாரு. ஸோ, எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு. நீ என் கூட லைப் முழுக்க வந்தா ரொம்ப லக்கியா பீல் பண்ணுவேன் சக்தி. இதைத்தான் நான் முதல்ல சொல்லியிருக்கணும். இந்த வீட்டை உனக்கு காமிச்சு உன் ரியாக்ஷனை தெரிஞ்சுக்கற ஆசைல கொஞ்சம் ஓவரா போயிட்டேன்" என்று சொல்லிவிட்டு ஒரு நொடி யோசித்தவன், "எங்க அப்பா இறந்துபோன பிறகு எங்களுக்கு கொஞ்சம் அமௌன்ட் காம்பென்சேஷனா கிடைச்சுது. அத்தான் ஐடியா படி அதை வெச்சு இந்த ஏரியால இடம் வாங்கி போட்டோம். அதுல கொஞ்சம் பிளாட் போட்டு சேல் பண்ணி அக்காவுக்கு ஒரு ஷேர் கொடுத்துட்டு போனவருஷம்தான் இந்த வீட்டை நான் எனக்காக கட்டினேன். மத்தபடி கல்யாணம்னு ஒண்ணு நடந்தாதான் இங்க குடி வர பிளான். இல்லன்னா வாடகைக்கு விட்டுடலாம்னு இருக்கேன்.

      ஸோ, நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்றதுக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. அதிக எக்ஸ்பெக்ட்டேஷன்ஸ் இருந்து அது நிறைவேறாம போனா டிஸ்ஸப்பாயின்மெண்ட்ஸும் காயமும் அதே அளவுக்கு ஆழமா இருக்கும். அதனால  நான் எந்த எமோஷன்ஸையும் டீப்பா கொண்டுபோறதில்ல. இந்த ப்ரபோசல் உனக்கு பிடிக்கலன்னா ஒண்ணும் பிரச்சனை இல்ல. இப்ப இருக்கற மாதிரியே நல்ல ஃப்ரெண்ட்ஸா கன்டின்யூ பண்ணுவோம். மத்தபடி இப்போதைக்கு இந்த வீடு உனக்கு வாடகைக்குத்தான் வேணும்னாலும் கொடுக்கறேன். எப்ப முடியுமோ அப்ப இந்த வீட்டை வாங்கிக்கோ" என அவன் தெளிவாகச் சொன்னவன், "பை த வே, உன்ன மாதிரிதான் சக்தி, வைப் குழந்தை இப்படியெல்லாம் எனக்கே எனக்குன்னு ஒரு குடும்பம்ங்கறது எனக்கும் ஒரு பெரிய ட்ரீம்" என முடித்தான் ஏக்கமான குரலில்.

      சத்யாவை ஏற்கனவே அவளுக்கு மிகவும் பிடித்துப் போயிருக்க அவன் இப்படி வெளிப்படையாகப் பேசவும் தனக்கென்று ஒரு நட்புடனும் புரிதலுடனுமான இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை துணை, ஒரு இல்லம், ஒரு அழகான குடும்பம், ஒரு இயல்பான எதார்த்தமான இல்லற வாழ்க்கை என ஒரு அழகான கற்பனை மனதை முட்டிக்கொண்டு கிளம்ப, அவளுடைய மனம் மிகவும் நெகிழ்ந்துபோனது.

      உடனுக்குடன் பதில் சொல்லி அதை ஒப்புக்கொள்ளவும் அவ்வளவு பயமாக இருக்க எதற்கும் அவளுடைய சீனியரிடம் பேசிவிட்டு பதில் சொல்லலாம் என்ற முடிவுக்கு அவள் வந்திருக்க,  இறகைப் போல அவளுடைய உடலும் மனமும் லேசாகிப்போனது.

      நான்கையும் சிந்தித்தபடி வெளியில் வந்தவள் தளர்ந்துபோய் அப்படியே சோபாவில் சரிந்து அமர்ந்துவிட, "என்ன ஒரு பதிலையும் சொல்ல மாட்டேங்கறீங்க வக்கீல் மேடம்" என அவன் குழப்பத்துடன் கேட்க, "நான் காலைல உங்க கூட சாப்டதுதான் சத்யா. ரொம்ப பசிக்குது. எதையும் சிந்திக்க முடியல. எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் டைம் கொடுங்க. நான் உங்களுக்கு பதிலை நாளைக்கு சொல்றேன். ப்ளீஸ் நாம இப்ப கிளம்பலாமா" என்றாள் அவள் பரிதாபமாக.

      "ப்ச்... ஏன் சக்தி பசிக்குதுன்னு முன்னாலயே சொல்லல" என அவளை கடிந்துகொண்டவன் "இப்ப ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிடணும்னா குறைஞ்சது ஒன் ஹவராவது ஆகும்" என்றவாறு நேராக சமையலறை நோக்கிச்செல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் சுடச்சுட சேவையும் குருமாவும் அவளுக்கு முன்னால் இருந்தது.

      இருந்த பசிக்கு அது அப்படி ஒரு சுவையைக் கொடுக்க ரசித்து சாப்பிட்டுக்கொண்டே, "நிஜமாவே நீங்க சமைப்பீங்கன்னு நான் நினச்சு கூட பார்க்கல சத்யா அதுவும் இவ்வளவு டேஸ்ட்டியா! அதுவும் என்ன ஒரு நேர்த்தியோட சமையல் செய்யறீங்க! வாவ், சான்ஸே இல்ல! ரியலி யூ ஆர் இன்க்ரெடிபிள் சத்யா" என அவள் எக்கச்சக்கத்துக்கும் வியக்க,

      "இன்ஸ்டன்ட் சேவை, தோட்டத்துல இருந்த தக்காளி வெங்காயம் வெச்சு சிம்பிள் குருமா செஞ்சிருக்கேன், இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா, விதவிதமா சமைச்சு போட்டா என்ன சொல்லுவ சக்தி நீ" என அவன் புன்னகையுடன் கேட்க, "யூ ஆர் அமேசிங் சத்யா, ஐ லவ் யூன்னு சொல்லிடுவேன்' என விரிந்த புன்னகையுடன் தன்னை மறந்து சொன்னவள் அதை உணர்ந்து நாக்கை கடித்துக்கொள்ள, "ஒருநாள் டைம் கேட்டுட்டு உன் முடிவை இப்பவே சொன்ன பாரு! அதுக்காகவே விதவிதமா நிறைய ஐட்டம்ஸ் செஞ்சு அசத்தலாம் போல இருக்கே" என்றவனின் சிரிப்பு அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.

      அவன் முன்னே உட்கார்ந்திருந்தவளோ திகட்டத் திகட்ட அவன் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருக்கும் அன்பில் கரைந்து தன்னை தொலைத்துக்கொண்டிருந்தாள்.

      "ஏன் சக்தி, நான் வேலையை விட்டுட்டேன்ன்னு சொல்றேன், அதுக்கு நீ பெருசா எதுவும் ரியாக்ட் பண்ணலியே. நிஜமாவே உனக்கு அது ஓகேவா?" என அவன் ஆழமாக கேட்க , "அதான் நீங்களே சொன்னீங்களே சத்யா, என்னோட இன்கம் நமக்கு பத்தாதா என்ன? எனக்கு தேவை எந்த காலத்துலையும் என்னை காயப்படுத்தி பார்க்காத ஒரு வாழ்க்கைத்துணை மட்டும்தான், ஒரு ஏ.டீ.எம் மெஷின் இல்ல" என்ற அவளுடைய பதிலில் அப்படியே உருகிப்போனவன், "ஓல்ட் பில்டிங் டெமாலிஷிங் காண்ட்ராக்ட், ஜாக்கி போட்டு டவுன்ல இருக்கற பில்டிங்க தூக்கறது அப்பறம் ஜேசிபி மாதிரி எர்த் மூவர்ஸ்னு நிறைய பிசினஸ் பிளான் வெச்சிருக்கேன் சக்தி. என்னால சும்மா இருக்க முடியாது. ஆனாலும் வீட்டையும் பார்த்துப்பேன்' என அவன் நீண்ட விளக்கம் கொடுக்க, "நாம சேர்ந்தே வீட்டை பார்த்துக்கலாம் என்ன?!" என முடித்தாள் சக்தி ஆயிரம் கனவுகள் மனதில் விரிய.

      சாப்பிட்டு முடித்து நிறைந்த மனதுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் கிளம்ப, "ரொம்ப லேட் ஆயிடுச்சு சத்யா, பஸ் பிடிச்சு வெல்லூர் போக எப்படியும் எர்லி மார்னிங் ஆயிடும். அதுவும் தனியா. செம போர்" என புலம்பினாள் அவள்.

      "ஏன் பஸ் பிடிச்சி தனியா போகணும்?! நான்தான் உன்னை ட்ராப் பண்ணப்போறேனே!" என அவன் அலட்டிக்கொள்ளாமல் சொல்ல, "என்ன வேலூர் வரைக்கும் வரீங்களா?!" என ஒரு நொடி மலைத்தாலும் அன்று அவளுக்காக அங்கே ஓடிவந்தவன்தானே என்ற எண்ணம் தோன்ற அவனுடனான ஒரு நீண்ட பயணத்தை எண்ணி அவள் மனம் துள்ளித்தான் குதித்தது.

      அவள் அருகில் அமர்ந்திருக்க அவன் காரை கிளப்பி அவர்கள் வீடிருந்த வீதியிலிருந்து திரும்பவும், அதற்குமேல் அந்த வாகனத்தை செலுத்தவே முடியாது என்கிறவண்ணம் அந்த சாலை முழுவதும் போக்குவரத்துக்கு நெரிசலாக இருந்தது, ஊர்ந்து ஊர்ந்து சென்ற ஒரு திருமண ஊர்வலத்தால்.

      அங்கிருந்து கிளம்ப எப்படியும் சில நிமிடங்கள் பிடிக்கும் என்பதால் கார் என்ஜினை அணைத்துவிட்டு சத்யா சக்தியை பார்த்தபடி சரிந்து உட்கார, கைப்பேசியை குடைந்துகொண்டிருந்தவள் அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து அவஸ்தையுடன் 'என்ன?' என்பதாக புருவத்தை உயர்த்த, "இந்த புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு” என்றான் ரசனையுடன்.

      "அஆங்... இப்பதான் இது சாரோட கண்ணுக்கு தெரியுதா" என அவள் காட்டமாகக் கேட்ட விதமே காலையிலிருந்தே அவள் இதை அவனிடமிருந்து எதிர்பார்த்திருந்தாள் என்பதை சொல்லாமல் சொல்ல விரிந்த புன்னகையில் அவனுடைய முகத்தில் களையேறியது.

      அந்த சிரிப்பிலும், "இல்ல, பங்ஷனுக்கு எல்லாருக்கும் வெச்சு கொடுக்க அக்கா இருபது முப்பது சாரீ எடுத்துட்டு வந்திருந்தாங்க. இந்த புடவையை முதல்ல பார்த்தபோதே இது உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்னு உனக்காக இதை தனியா எடுத்துவெச்சு அக்கா கிட்ட சொல்லி கொடுக்க சொன்னதே நான்தான்" என அவன் சொன்ன பதிலிலும் ஆளை விழுங்கும் அவனது பார்வையிலும், அவள் முகம் சூடேறி அப்படியே சிவந்துபோனது.

      அதே நேரம், அலங்கார பதுமையாக வீற்றிருக்கும் மணமகளை ஏந்தி  இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி அவர்களைக் கடக்கவும், "இந்த கல்யாணத்தை எப்படி எப்படியெல்லாம் கொண்டாடறாங்க இல்ல சத்யா. இதுல இருக்கற அக்கறை உறவை பேணி காப்பாத்தறதுலையும் கொஞ்சம் அதிகமாவே இவங்க கிட்ட இருக்கனும் இல்ல. இதுக்கெல்லாம் முன்னால கணவன் மனைவி குழந்தைகள்னு ஒரு பொறுப்பான குடும்பம்ங்கறது எவ்வளவு முக்கியம்னு இவங்களுக்கு புரியவைக்கணும். முக்கியமா சிங்கிள் பேரண்ட் கிட்ட வளரும் குழந்தைகளோட மனவலியை. உண்மையில இன்னைக்கு உங்க வீட்டுல நடத்துது இல்ல அதுதான் 'நாங்க ஒரு அரை நூற்றாண்டு ஒருத்தர ஒருத்தர் விட்டுக்கொடுக்காம வாழ்ந்துட்டோம்'ங்கறத பிரகடனப்படுத்தற ஒரு பர்ஃபக்ட் கல்யாணம்" என அவள் சொல்ல, அவளுடைய கைமேல் தன் கையை வைத்து அழுத்தியவன், "ரொம்ப கரக்ட்" என்றான் அவளுடைய உணர்வுகளை உள்வாங்கியவனாக.

      லேசாக மழைத் தூர தொடங்கவும் காரின் கண்ணாடியை ஏற்றியவன், ஆடியோ சிஸ்டத்தை உயிர்ப்பிக்க, இசைத்து உயிரைக் கரைத்தது இளையராஜாவின் பாடல் ஒன்று.

காதலில் உருகும் பாடல் ஒன்று

கேட்கிறதா உன் காதினிலே

காதலில் உயிரை தேடி வந்து

கலந்திட வா என் ஜீவனிலே

உயிரினை தேடும் உயிர் இங்கே

ஜீவனை தேடும் ஜீவன் இங்கே

சேர்ந்திடவே உனையே ..ஓ

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என் உயிரில் கலந்தே அது பாடும்

சேர்ந்திடவே உன்னையே

ஏங்கிடுதே மனமே...

 

      அது அவன் ஆயிரம் முறை கேட்டுக்கேட்டு அவனுடைய ரத்தத்தில் ஊறிப்போன பாடலென்பதால், அதன் வரிகள் தந்த உணர்வில் தானும் சேர்ந்து அந்த பாட்டை முணுமுணுத்தவாறே, உயிரினை தேடும் உயிராக ஜீவனை தேடும் ஜீவனாக அந்தத் தேடலை தன் துணைக்கு உணர்த்தும் ஆவலுடன் அவனுடைய கரம் அவளுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொள்ள, காலம் முழுவதும் அவனுடன் பயணிக்கும் உறுதியுடன் அவளுடைய கரமும் அவனுடைய கரத்தை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டது இனி உன்னை நீங்கி என்னால் வாழவே இயலாது என்பதாக.

      அதீதமான கனவுகளையும் கற்பனைகளையும் வளர்த்துக்கொள்ளவோ நிதரிசனத்துக்குப் பொருந்தாத அதீத எதிர்பார்ப்புகளை ஒருவர் மீது ஒருவர் திணித்து ஒருவரை மற்றவர் காயப்படுத்தவோ அவசியமே இல்லாத நிலையில் இருக்கும் இந்த ஆணும் பெண்ணும் இதற்கு மேலும் நெருங்கி வர விரைவிலேயே மகிழ்ச்சி பொங்க திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து இனிய இல்லறத்தில் இருவரும் இன்பமாகக் கலந்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ சத்தியநாராயணன் சக்தி இருவரையும் வாழ்த்தி விடைபெறுவோம்.

நன்றி.

 

நட்புடன்,

கிருஷ்ணப்ரியா நாராயண்.

Quote

Nice story 

You cannot copy content