You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

KPN's Poovum Nanum Veru - 34

Quote

இதழ்-34

சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான் இருந்தான் அவன்.

அவனுடைய இந்த நிலை தீபனை வெகுவாக பாதித்திருப்பது நன்றாகவே விளங்கவும், அவனுடைய மனநிலையை ஓரளவுக்கு உணர்ந்தவளாக, "ப்ச்.. இதை ஒரு லெஸனா எடுத்துக்கோங்க மிஸ்டர் தீபன்! இனிமேலாவது இப்படி செய்யமாட்டீங்கன்னு நம்பறேன்!" என்றவள் அவன் எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் இறுகிப்போய் இருக்கவும், "டயர்டா தெரியறீங்க; நீங்களும் கொஞ்சம் தூங்குங்க! நான் போய் அம்மாவை பார்க்கறேன்!" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் வசுமித்ரா!

"மித்து!" என்ற தீபனின் மென்மையான அழைப்பில் அவள் அவனைத் திரும்பிப் பார்க்கவும், "உங்க அம்மா ஒரு அயர்ன் லேடி! அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது! பயப்படாத! உன்கூட நானும் இருக்கேன்!" என அவன் சொல்ல, அவனது அக்கறையான வார்த்தையில் அவளது கண்களில் வழிந்த கண்ணீரை அவளது துப்பட்டாவால் துடைத்துக்கொண்டே, தலையை அசைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் மித்ரா!

அவளது கண்ணீர் கண்டு தவித்த மனதுடன்; அவள் சென்றதும் மூடிக்கொண்ட கதவையே சில நிமிடங்கள் வெறித்தவண்ணம் இருந்தவன், பின் கட்டிலில் போய் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான் தீபன்!

அடுத்த நாள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ என்ற அச்சம் மேலோங்கத் தூக்கம் கூட வரவில்லை அவனுக்கு!

***

தன்னை மறந்து எப்பொழுது உறங்கினானோ; ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தீபனை "எஸ்கியூஸ் மீ!" என்ற ஒரு பெண்ணின் குரல் கலைக்க, சந்தோஷை பரிசோதிப்பதற்காக மருத்துவருடன் ஒரு செவிலியரும் அங்கே வந்திருந்தார்!

மணி காலை ஏழைத் தாண்டி இருப்பது தெரிந்தது.

அதேநேரம் சந்தோஷும் கண்விழித்திருந்தான்!

"சாரி!" என்றவாறே எழுத்து வந்த தீபன், அந்த மருத்துவர் அவனைப் பரிசோதித்து முடிக்கவும், "இப்ப எப்படி இருக்கார் டாக்டர்?" எனக் கேட்க,

"ஹி இஸ் அபசல்யூட்லி நார்மல்! டயட் ஃபுட் வரும்; அதைச் சாப்பிட கொடுங்க! நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்!" என்று சொல்லிவிட்டுப் போனார் அந்த மருத்துவர்.

"சாரிடா மாப்பள!" என வருத்தத்துடன் சந்தோஷுடைய கையை தீபன் பற்றிக்கொள்ள, "ப்ச்! விடு மச்சான்!" என்றவன், "உன் ஃபோன கொஞ்சம் குடு!" எனச் சொல்லிவிட்டு, "எனக்கு காஃபி சாப்பிடணும் போல இருக்கு! சாப்பிடலாமான்னு தெரிஞ்சிட்டு, அதுக்கு அரேஞ் பண்ணிட்டு வரியா?" என அவன் சொல்லவும், கைப்பேசியை அவனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றான் தீபன்.

அவன் சில நிமிடங்களில் திரும்ப, மனைவியைச் சமாதானப்படுத்தும் விதமாகப் பேசிக்கொண்டிருந்தான் சந்தோஷ்.

தீபனை பார்த்ததும், கட்டை விரலைத் தூக்கி 'சொல்லிட்டேன்!' என ஜாடை செய்தவன், "ப்ச்... எனக்கு ஒண்ணும் இல்ல! பங்க்ஷன் நல்லபடியா நடக்கும்! நான் சொன்ன மாதிரி எங்க அம்மா அப்பா; உங்க அம்மா அப்பா; எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி இங்க கூட்டிட்டு வர வேண்டியது உன்னோட பொறுப்பு!

மிச்சம் மீதி சண்டையை இங்கே வந்து கன்டின்யூ பண்ணுடீ என் செல்ல பொண்டாட்டி!" என கொஞ்சலாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

அதை பார்த்து புன்னகைத்துக்கொண்டான் தீபன்.

சில நிமிடங்களில் அங்கே இருந்த உணவு கூடத்திலிருந்து காஃபீ வர, இருவருமாக அதைப் பருகி முடித்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் அவர்கள் இருவரின் பெற்றோருடன் சரிகாவும் குழந்தையும் அங்கே வந்து சேர, அழுகையும் கோபமுமாக அந்த அறையே அமர்க்களப் பட்டது.

அவர்கள் யார் ஒருவரும் தீபனை ஒரு கேள்விகூட கேட்கவில்லை என்றாலும், அவர்களுடைய குற்றம் சாட்டும்  பார்வைகளில் மனதிற்குள் அருவறுத்துத்தான் போனான் தீபன்.

சூழ்நிலை காரணமாக எல்லோரும் அமைதியாகிவிட, தீபனின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அதில் திவ்யாபாரதி, "நான் இங்க வசுகூட ஹாஸ்பிடல்லதான் இருக்கேன்! உங்க அம்மாவும் சரிகாவும் இங்க வந்துட்டாங்களா?" என அவர் கேட்க, "ம்.. இங்கதான் இருக்காங்க" என்றான் தீபன்.

'அப்படினா சரி; உடனே அவங்களை அழைச்சிட்டு ஃபோர்த் ஃப்ளோர்ல ரூம் நம்பர் ஒன் நாட் சிக்ஸ்க்கு வா!

முக்கியமா பேசணும்!" என சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

"முக்கியமான விஷயம்! பாரதி மேடம் வர சொல்றாங்க!" என்று மட்டும் சொல்லிவிட்டு அவர்களுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் அருணா மற்றும் சரிகா இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கே சென்றான் தீபன்!

***

கதவைத் தட்டிவிட்டு அந்த அறைக்குள் மூவரும் நுழைய, திவ்யாபாரதியை பார்த்துவிட்டு அருணா புன்னகைக்க, "இப்ப சந்தோஷ் எப்படி இருக்கார்!" என்று கேட்டார் பாரதி.

"பரவாயில்லை மேடம்! நல்லா இருக்காரு" என்ற அருணாவின் பார்வை  அருகில் கட்டிலில் படுத்திருந்த நோயாளியான கலைவாணியிடம் செல்ல அவரை அடையாளம் காணாமல்  கொஞ்சம் பதட்டத்துடன், "ஐயோ! உங்க சொந்தக்காரங்களா? என்ன ஆச்சு இவங்களுக்கு?" என்று அவர் கேட்க,

"இவங்க யாருன்னு தெரியலையா தீபன் அம்மா?' என்று கேட்டார் பாரதி.

உடனே வாணியின் முகத்தைக் கூர்ந்து கவனித்துவிட்டு அருணாவின் முகம் கலவரத்தைக் காண்பிக்க, அவரது கையை பற்றிக்கொண்ட சரிகா, "ம்மா! மித்ரா அம்மா!" என்றாள் மெல்லிய குரலில்.

அப்பொழுது கையில் மருந்துகளுடன் ராகவனும் வசுமித்ராவும் அந்த அறைக்குள் நுழைய, அங்கே தீபனுடன் அருணாவையும் சரிகாவையும் பார்த்து அதிர்ந்து நின்றனர் இருவரும்.

அவர்களை அடையாளம் கண்டுகொண்ட அருணாவின் முகம் கோபத்தில் சிவந்துபோக, "தீபன்! எங்களை ஏன் இங்க கூட்டிட்டு வந்த" என அவர் கடுமையுடன் கேட்க,

"கொஞ்சம் இருங்க தீபன் அம்மா! கலைவாணி உங்க கிட்ட முக்கியமா பேசணும்னு சொன்னாங்க!

பதட்டப்படாம கொஞ்சம் காதுகொடுத்து கேளுங்க! அதுதான் எல்லாருக்கும் நல்லது!

இவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்! இவங்க உங்க கிட்ட பேசணும்னு சொன்னதால உங்களை இங்க வரச்சொன்னேன்!" என்றவர், "பேசிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க! இப்ப நான் கிளம்பறேன்!" என்று சொல்லவிட்டு அங்கிருந்து சென்றார் பாரதி.

அவருடைய கட்டளை போன்ற வார்த்தைகளை மறுக்க முடியாமல், அதுவும் நோயாளியாக இருப்பவரிடம் பகைமை பாராட்ட இயலாமல் அருணா கலைவாணியை நோக்கிப் போக, ஒரு நாற்காலியை அவர் படுத்திருந்த கட்டிலின் அருகே கொண்டுவந்து போட்டாள் மித்ரா!

அருணா அனிச்சையாக அதில் உட்கார,  சரிகா அங்கே இருக்கும் கௌச்சில் உட்கார்ந்தாள். அம்மாவுக்கு அருகில் வந்து நின்றான் தீபன்!

கலைவாணி அருணாவிடம் எதோ கேட்க அவரது குளறலான பேச்சு அருணாவுக்கு புரியவில்லை என்பதை உணர்ந்து,  "நல்லா இருக்கீங்களான்னு கேக்கறா!" என்றார் ராகவன்.

"ம்! நல்லா இருக்கோம்!" என்றவர், "எதோ பேசணும்னு சொன்னீங்களாமே!" என அருணா சற்று கடுகடுப்பாகக் கேட்க, சில நொடிகள் மௌனம் காத்தவர் மறுபடியும் எதோ சொல்ல, அதுவும் அவருக்குப் புரியாமல் போகவும்,  "எங்க வசு உங்க மகனோட கையை பிடிச்சிட்டு போற மாதிரி வீடியோ டீவீல வந்துது இல்ல! அதைப் பத்தி சொல்றா" என்ற ராகவன், "நானே சொல்றேன்!" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு,

"பொதுவா வசு எல்லார் கிட்டயுமே ஒரு எல்லையோடதான் பழகுவா! ஆனா உங்க மகனோட அவளை அப்படிப் பார்க்கவும்தான் எங்களுக்கே ஒரு விஷயம் புரிஞ்சது" எனத் தடுமாறியவர் மகளுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே, "அவளுக்கு கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது தீபனோடதான்!

இல்லன்னா அவ காலம் முழுக்க இப்படியே இருந்துருவா!

இது நல்லதுக்கு இல்லன்னு தெரிஞ்சும் அவளுக்கு உங்க மகன் பேர்ல இப்படி ஒரு ஈடுபாடு ஏன் வந்ததுன்னே புரியல!" என்றார்.

"அப்பா!' என வசுமித்ரா இடை புக, "குறுக்க நீ எதுவும் பேசாதே!' எனக் கடினமாக ஒலித்தது கலைவாணியின் குரல்.

உடனே அவள் மௌனமாகிவிட, "வசந்த் செஞ்ச பாவத்துக்கு அவ நிறையவே கஷ்ட பட்டுட்டா!

அவன் செஞ்ச தப்புக்கெல்லாம் இவ தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கா!

நாங்க ரெண்டு பேருமே ஆரோக்யமானவங்க இல்ல!

எங்க காலத்துக்கு பிறகு எங்க மக தனியா நிக்க கூடாது!

இனிமேலாவது அவ விரும்பற வாழ்க்கையை சந்தோஷமாவும் நிம்மதியவும் அவ வாழணும்னு நினைக்கிறோம்!

அதனாலதான் ஒரு முக்கியமான உண்மையை உங்க கிட்ட சொல்லலாம்னு நினைக்கறேன்!" என்று வாணி சொல்ல, ராகவன் அதை விளக்க முற்படவும், "இல்ல அவங்க பேசறதே புரியுது!" என்றவர், 'மேற்கொண்டு என்ன சொல்லப் போகிறார்' என வாணியைப் பார்க்க,

"நாம நல்லவிதமாதான் நம்ம பிள்ளைகளை வளர்க்கணும்னு நினைக்கிறோம்!

அதுவும் எங்களை மாதிரி நடுத்தர வர்க்கத்து மக்கள் சமுதாயத்துக்கு அஞ்சி; அக்கம்பக்கத்து மனுஷங்களோட பேச்சுக்கு அஞ்சி; ஊர் உலகத்துக்காகவே வாழறவங்க!" என வாணி சொல்ல, "இப்ப என்ன சொல்லவறீங்க" என அருணா சுவாரசியம் இல்லாமல் கேட்கவும், "சொல்றேன் சரிகா அம்மா!" என்றவர், “ஸ்கூல்ல படிக்கற வரைக்கும் வசந்த் ரொம்ப நல்ல பிள்ளையாகத்தான் இருந்தான்!

அவன் எல்லா விஷயங்களையும் ஒளிமறைவு இல்லாம என் கிட்ட வந்து சொல்லுவான்!

ஆனா வயசு கூட கூட அவன்கிட்ட ஒரு ஒதுக்கம் தெரிஞ்சுது!

அவனோட வயசு கூட காரணமா இருக்கலாம் போக போக சரியா போயிடும்னு எடுத்துகிட்டோம்!" என்று வாணி சொல்ல  தீபனிடம் கூட அதே அனுபவம் ஏற்பட்டிருக்கவும் அவர் சொல்வதும் சரி எனப் பட்டது அருணாவுக்கு.

அதை உணர்ந்துகொண்டதுக்குச் சான்றாகத் தலையை அசைத்தார் அவர்.

ஆனால் ஒரு 'ம்' கொட்ட கூட தோன்றாமல் வாணி சொல்வதை மற்றவர்கள் கவனிக்க,

"நான் வேலை செஞ்சிட்டு இருந்த சமயம் உங்க எதிர்கால லட்சியம் என்ன?'ன்னு கேட்டதுக்கு, என் பள்ளிக்கூடத்துல எட்டாவது படிக்கற மாணவன் ஒருத்தன்; அவன் ரொம்ப புத்திசாலியும் கூட! ‘சாராய பாக்ட்டரி ஆரம்பிக்க போறேன்'ன்னு சொன்னான்!

விவசாயம் செய்யற குடும்பத்துல இருந்து வந்த ஒரு பையன் அப்படிச் சொல்லவும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது. 'எவ்வளவோ நல்ல தொழில்கள் இருக்கும்போது ஏன் இப்படி சொல்ற! இது சமுதாயத்தைக் கெடுக்கும் தொழில் இல்லையா?'ன்னு நான் கேட்டதுக்கு, "இப்ப எல்லா தொழிலும் நலிஞ்சி போச்சு!

விவசாயம் செய்யவே முடியல!

நம்ம சேலம் உருக்கு ஆலையையே சிக் இண்டஸ்ட்ரின்னு சொல்லிக்கறாங்க!

ஆனா குடும்பத்துக்கு ஒருத்தர் கட்டாயம் சாராயம் குடிக்கறாங்க இல்ல!

நம்ம அரசாங்கமே அதை நம்பித்தான் இருக்கு! இந்த சமுதாயத்தைப் பத்தி இந்த அரசாங்கமே கவலை படலதானே! நமக்கு என்ன வந்தது!

அந்த வியாபாரம் செஞ்சா பெரிய பணக்காரன் ஆகிடலாம்; அது போறாதா?!'ன்னு அவன் பதில் சொன்னான்!

இவ்வளவு சின்ன பையன் மனசுல இப்படி ஒரு விபரீத எண்ணம் உருவாகியிருக்கேன்னு அன்னைக்கு எனக்கு அதிர்ச்சியா இருந்தது.

ஆனா அது எவ்வளவு உண்மைன்னு போக போக எனக்கு புரிஞ்சுது!

முதல் போதை எல்லா மீடியலையும் வர விளம்பரம்!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்ல கூட நல்லதையா அதிகம் காமிக்காறங்க!

ஆனா குடும்பம் முழுக்க அதைத்தானே பார்த்துட்டு இருக்காங்க!

அது ஆடம்பர வாழ்க்கை வாழுற ஆசையையும் எதிர்மறையான எண்ணங்களையும் அதிகமா தூண்டி விட்டுடுது!

பணம் சம்பாதிக்க எந்த எல்லை வரைக்கும் போகலாம்; தப்பில்லன்னு நினைக்க வைக்குது!

செல் போன்; இன்டர்நெட் இதெல்லாம் எல்லா வக்கிரங்களையும் நம்ம கைக்குள்ள கொண்டுவந்து கொடுத்துடுது!

அன்னப் பட்சி மாதிரி கெடுதலை விட்டுட்டு நல்லதை மட்டும் எடுத்துக்கறவங்க சில பேர் இருந்தா; அதில் இருக்கும் கெடுதலை தேடி போறவங்க எண்ணிக்கை கூடிட்டே போகுது!

அப்படி வக்கிர எண்ணங்கள் நிறைஞ்ச ஒருத்தன் தனியா இருந்தாலே ஆபத்து! அப்படிப்பட்டவங்க ஒரு குழுவா சேர்ந்தா?

அதுதான் வசந்த் விஷயத்துல நடந்தது.

ஒரு பதினஞ்சு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் அப்படி க்ரூப்பா ஃபார்ம் ஆக நடைமுறை சாத்தியக்கூறுகள் ரொம்ப கம்மி!

ஆனா இப்ப! அது ரொம்பவே சுலபம்! சோஷியல் மீடியா எல்லாமும் ஒருவகைல இதுக்கு காரணம்!

பணம், அதிகாரம் எல்லாம் படைச்சவனுக்கு; கீழ இறங்கி வேலை செய்ய வசந்த் மாதிரி பத்து பேர் வேணும்!

லேட்டஸ்ட் மாடல் பைக்! செல் போன்! போதை கூடவே செக்ஸ்! இதுக்கெல்லாம் அவங்களோட பணம் வசந்த் மாதிரி இருக்கறவனுக்கு தேவை!

ஒருத்தன ஒருத்தன் உபயோக படுத்திக்கறான்!

வீட்டுக்கு அடங்கலைன்னா ஊருக்கு அடங்குவான்! ஊருக்கு அடங்கலைன்னா உலகத்துக்கு அடங்குவான்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமா!

ஆனா இப்ப பசங்க வீட்டுக்குள்ள ஒழுங்கா இருந்தாலும் கூட ஊர் அதாவது சமுதாயம் அவங்கள கெடுக்குது!

மதுவைத் தடை செய்ய வேண்டிய அரசாங்கமே அதை விற்கும்போது ஒளிஞ்சு மறைஞ்சு குடிச்சிட்டு இருந்தவங்க எல்லாம் வெளிப்படையா குடிக்கறாங்க!

இதுல சின்னவங்க பெரியவங்க ஆம்பள பொம்பள எந்த வித்தியாசமும் இல்ல!

மத்த போதைப் பொருட்களும் சுலபமா; சரளமா புழக்கத்துல இருக்கு!

நல்ல மனநிலையில இருக்கும்போது கொலைக் குற்றமோ இல்ல ஒரு பாலியல் குற்றமோ செய்ய அஞ்சற மனசு, போதையில் இருக்கும் போது துணிஞ்சு அதை செய்து முடிச்சிடுது!

அதை தட்டி கேட்கவேண்டிய அரசாங்கமோ! அது கைக்குள் வெச்சிருக்கிற சட்டம் ஒழுங்கோ! எதுவும் நல்ல செயல்பாட்டுல இல்ல!

பணத்துக்கு பின்னால போய் ஒளிஞ்சிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கு!

பெரும்பாலான அரசாங்க அதிகாரிகள் லஞ்சம்கற புதைகுழிக்குள் புதைஞ்சுபோயிருக்காங்க!

கொலை செய்தால் கூட பண பலமும் பதவி பலமும் இருந்தால் போதும்! தண்டனையே இல்லாம தப்பிச்சிடலாம்!

சுதந்திர போராட்டத்துல ஜெயிலுக்கு போனவங்ககூட கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பாங்க!

ஆனா இப்ப குற்றம் செஞ்சுட்டு ஜெயிலுக்கு போறவன் கொஞ்சம் கூட கவலையே படறதில்ல!

மனசாட்சிக்குத்தான் பயப்படறதில்லனாலும் சட்டத்துக்கும் சமூகத்துக்கும் கூட யாரும் கொஞ்சமும் பயப்படறதில்ல!

அதனாலதான் இன்னைக்கு நம்ம ஊர் முழுக்க எங்க திரும்பினாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு பாலியல் வன்கொடுமைன்னு குற்றங்களா மலிஞ்சு போய் இருக்கு!

அடிப்படை காரணம் போதை! சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! எல்லாத்துக்கும் மேல லஞ்சம்!

இதுல தனித்தனியா ஒவ்வொரு குற்றவாளியா குறை சொல்லி பிரயோஜனம் இல்ல! ஒரு மிகப்பெரிய சமுதாய மாற்றம் தேவை!

ஒவ்வொருத்தருக்கும் சமூகப் பொறுப்பு இருக்கணும்!

இல்லன்னா வசந்த் மாதிரி வீட்டுக்கு ஒருத்தனோ ஒருத்தியோ உருவாயிடுவாங்க!” என மூச்சுவாங்கச் சொன்ன  வாணி, மனதில் குமுறும் வேதனையுடன் முன்பு நடந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.

***

தீபன் அவர்களுடைய வீட்டிற்கு வந்து கோபமாகச் சத்தம்போட்டுவிட்டுப் போன பிறகு, அவர்கள் குடும்பம் ஊரை விட்டுப் போன அன்று மதியம் ஓசை எழுப்பாமல் வீட்டிற்குள் நுழைந்தான் வசந்த்!

உறக்கம் இல்லாத காரணத்தாலோ என்னவோ அவனுடைய முகம் வீங்கி,கண்கள் சொருகி இருக்க! நடையில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது அவனிடம்!

அவனுடைய நடத்தையால் ஏதேதோ நடந்து முடிந்திருக்கும் நிலையில் மகனை நேரில் காணவும் செய்வதறியாமல் திகைத்து நின்றார் வாணி!

பின்னாலேயே ஒருவன் ஒரு பெட்டியைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போக, வாணி வாயிற்புறமாக எட்டிப்பார்க்கவும் ஒரு விலை உயர்ந்த வெளிநாட்டு கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது!

அவன் அடிமையாக மாறிப்போயிருக்கும் எதோ ஒரு பணக்காரனின் வாகனத்தில் அவன் வெளிப்படையாக வந்து இறங்கியிருக்கவும் அவருடைய உள்ளம் கொதித்தது.

அன்னை தன்னையே வெறித்துக்கொண்டிருப்பதைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் அவனது அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டான் வசந்த்.

மித்ரா பள்ளிக்குச் சென்றிருந்த நிலையில் அறைக்குள் ராகவன் உறங்கிக்கொண்டிருக்க, அவனிடம் என்ன கேட்பது என்ன பேசுவது என ஒன்றுமே புரியவில்லை வாணிக்கு!

கதவைத் தட்டி அவனை அழைத்து ஏதும் பேசும் மனநிலையில் இல்லாமல், உடலும் மனமும் தளர்ந்துபோக அப்படியே உட்கார்ந்திருந்தார் வாணி!

சில நிமிடங்கள் கடந்த நிலையில், "வசந்த் அம்மா! உள்ள வரலாமா?" என்ற குரலில் கலைந்தவர், கலங்கியிருந்த கண்களைத் துடைத்துக்கொண்டு பார்க்க அங்கே நின்றிருந்தார் நிரஞ்சனாவின் அம்மா!

அவரை அந்த நேரத்தில் அங்கே பார்க்கவும், திடுக்கிட்டவராக, "வா.. வாங்க.. நிரஞ்சனா அம்மா!" எனத் தடுமாற்றத்துடன் வாணி அவரை வரவேற்க,

"'நிரஞ்சனா அம்மா!' ஹும்.. என் மகளால அந்த பேரு மட்டும்தான் இன்னும் ஒட்டிட்டு இருக்கு!" என விரக்தியுடன் சொன்னவர், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, "இன்னைக்கு நிரூவோட பர்த்டே! அவ இல்லாம போனாலும் அவ ஞாபகமா கேசரி செஞ்சேன்!

உங்களுக்குத்தான் தெரியுமே என் மகளுக்கு கேசரின்னா ரொம்ப பிடிக்கும்னு" என்றவர் ஒரு எவர்சில்வர் டப்பாவை நீட்ட! அனிச்சை செயலாக அதை வாங்கிக்கொண்டார் கலைவாணி!

பாத்திரம் நல்ல சூடாக இருக்கவும் உடனே கொண்டுபோய் அந்த வரவேற்பறையின் ஒரு மூலையில் போடப்பட்டிருக்கும் சாப்பாடு மேசையில் அவர் அதை வைத்துவிட்டு வரவும், "என்ன அப்படியே வெச்சுடீங்க;  டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க வசந்த் அம்மா!" என அவர் வற்புறுத்துவது போல் சொல்ல, அவருக்காக ஒரே ஒரு ஸ்பூன் அந்த கேசரியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார் வாணி!

அதன் சுவையை உணரும் நிலையிலெல்லாம் அவர் இல்லை என்றாலும் "நல்லா இருக்கு நிரஞ்சனா அம்மா!" என்றார் அவர் வெள்ளந்தியாக.

நாள் கிழமை பண்டிகை சமயங்களில் இதுபோல் இனிப்புகள் மற்றும் பலகாரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளுவது எப்பொழுதுமே அங்கே வழக்கம்தான்.

சிறு வயது முதலே ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் புதிய உடை அணிந்து சாக்லேட் எடுத்துக்கொண்டு ஓடி வரும் அந்த பெண்ணின் முகம் அவர் கண்ணில் வந்து நின்றது.

அவளுடைய அகால மரணத்திற்கு தன் மகனே காரணமாக அமைந்தது எண்ணி அந்த தாயின் உள்ளம் கண்ணீர் வடித்தது.

அந்த பெண்மணியைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது வாணிக்கு. . நிரஞ்சனா அவர்களுடைய ஒரே மகள். அவளுடைய இறப்பை ஜீரணிக்க முடியாமல் அவரது கணவர் மனநலம் பிழன்று தன்னை மறந்த நிலையில் இருக்க, மேற்கொண்டு அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்ற கவலையில் ‘வசந்த் விவகாரம் அங்கே பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில் ஒன்றுமே நடக்காததுபோல்; ஒன்றுமே தெரியாதது போல் அவர் இப்படிச் செய்கிறாரே’ என மனதிற்குள் நெருடிய எண்ணமும் பின்னால் போனது.

அவரிடம் என்ன சொல்வது என்பது புரியாமல், 'தேங்க்ஸ் நிரஞ்சனா அம்மா!" என வாணி சொல்ல, "பரவாயில்ல வசந்த் அம்மா! நிறைய நெய் போட்டு செஞ்சிருக்கேன்! வீட்டுல எல்லாரும் சாப்பிடுங்க!

அப்பத்தான் என் மக ஆத்மா சாந்தி அடையும்! எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும்!" என்று சொல்லிவிட்டு ஒரு கசந்த புன்னகையுடன் அங்கிருந்து சென்றார் நிரஞ்சனாவின் அம்மா!

அவரது அந்த புன்சிரிப்பு வயிற்றில் ஏதோ ஒரு கலவரத்தைத் தோற்றுவிக்க உணவு மேசைக்கு அருகில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் போய் உட்கார்ந்துகொண்டார் வாணி!

அப்பொழுது குளித்து வேறு உடைக்கு மாறியவனாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த வசந்த் உணவு மேசை நோக்கி வந்து உட்கார்ந்து கொண்டு, "மா.. பயங்கர பசி! என்ன இருக்கு?" என்றவாறு அங்கே இருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்துவிட்டு, "ப்ச்.. வெறும் ரசம் செஞ்சு வெச்சிருக்கீங்க! ஸ்கூலுக்குத்தான் போகலியே; நல்ல சமையலா செஞ்சிருக்கக்கூடாது" என்று குற்ற உணர்ச்சியே கொஞ்சமும் இல்லாமல், இயல்பாகக் கேட்பதுபோல் கேட்க, "அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை தெரியுமா வசந்த்!" எனக் கடின குரலில் கேட்டார் வாணி.

"ம்.. கேள்வி பட்டேன்; இப்ப நல்லாத்தானே இருக்கார்!" என்றவன் நிரஞ்சனாவின் அம்மா கொண்டுவந்த டப்பாவைத் திறக்க, முந்திரிப் பருப்பு கண்களைப் பறிக்கச் சூடாக இருந்த அந்த கேசரியைப் பார்த்துவிட்டு, "வாவ்! இன்னைக்கு என்ன ஸ்பெஷல்!" என்றவாறு அதை தேக்கரண்டியில் எடுத்து வேகமாகச் சாப்பிடத் தொடங்கினான்!

"உன்னால செத்துப்போனாளே அந்த நிரஞ்சனா! அவளுக்கு பிறந்தநாளாம்!" என வாணி எகத்தாளமாகச் சொல்ல, அவன் வாயருகே சென்ற ஸ்பூன் அப்படியே நிற்க, "மா.. அவ அறிவுகெட்டுப்போய் தற்கொலை செஞ்சுக்கிட்டா! அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!" எனக் கொஞ்சமும் வெட்கமில்லாமல் சொல்லிவிட்டு அதனை மறுபடியும் சாப்பிடத் தொடங்கினான் வசந்த்!

அவனது நடவடிக்கைகளைப் பார்த்து வேதனையின் எல்லைக்கே சென்றவர், "உனக்குக் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையாடா? நம்ம வசுவையும் இப்படி செய்வியா வசந்த்! இல்ல என்னையும் கூடவா!" என வாணி மிக அழுத்தமாகக் கோபத்துடன் கேட்க, "மா.. நிறுத்துங்க!" என்று சொல்லிக்கொண்டே கையில் வைத்திருந்த தேக்கரண்டியை வேகமாக வீசி எறிந்தவன், "ஒரு மூணு மாசம் பொருத்துக்கங்க! அதுக்கு பிறகு நான் இங்க இருக்க மாட்டேன்!

சென்னைல இருக்கற  அவங்க அண்ணனோட கம்பெனில எனக்கு வேலைக்கு ஏற்பாடு செஞ்சிருக்கான் ஜவஹர்!

நான் என் படிப்பை முடிச்சாலும் முடிக்காம போனாலும் எனக்குப் பிரச்சினை இல்ல; வேலை கன்பார்ம்!

அதுக்கு பிறகு நீங்களே கூப்பிட்டாலும் நான் இங்க வர மாட்டேன்; நீங்க நிம்மதியா இருக்கலாம்!" என்று சொல்லிவிட்டு அறையை நோக்கிப் போனான் வசந்த்.

செய்கிற குற்றங்களை எல்லாம் செய்துவிட்டு சட்டத்திலிருந்தும் தப்பி கொஞ்சமும் வருந்தாமல் முழுமையாக தன முன் வந்து நிற்கும் மகனை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை கலைவாணியால்.

அவனை என்ன செய்வது எனப் புரியாமல், "டேய் பாவி; பஞ்சமா பாதகம் எல்லாத்தையும் செஞ்சிட்டு கொஞ்சம் கூட வருத்த படாம இருக்கியே; இது ரொம்ப கேவலம்;

அம்மா சொல்றேன் எல்லா தப்பையும் போலீஸ்ல போய் ஒப்புக்கோ;

அப்ரூவரா மாறினா குறைஞ்சபட்ச தண்டனையா கிடைக்கும்னு அப்பா சொல்றாங்க!

நீ திருந்தி நல்லபடியா திரும்பி வந்தா போதும்! நாங்க உனக்கு சப்போர்ட் பண்ணுவோம்!

இல்லன்னா நீ பண்ண பாவத்துக்கு நம்ம குடும்பமே விளங்காம போயிடும்!" என அவர் கண்ணீருடன் சொல்ல,

அவரை திரும்பி ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு, "என்ன நான் குற்றத்தை ஒத்துக்கணுமா!" என எகத்தாளமாகக் கேட்டவன்,

"ப்ச்.. நான் மட்டும் அப்படி செஞ்சேன்னு வெச்சுக்கோ; என்னை உயிரோட கொளுத்திடுவானுங்க;

ஏம்மா! தெரியாமத்தான் கேக்கறேனே இப்படியே மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்ந்துட்டு; இப்படியே செத்து போகணுமா என்ன?

உனக்கு இது பிடிச்சிருந்தா நீ இப்படியே இரு; எனக்கு வேணாம்!" என்று அவன் சீற்றமாகச் சொல்ல, "கலை! என்னம்மா சத்தம்!" என முனகலாக ராகவனின் குரல் கேட்கவும், அவனை நேரில் பார்த்தால் அவரது உடல் நிலை மேலும் மோசமாகக்கூடும் என்ற பயத்தில், "ஒண்ணும் இல்லைங்க!" என்றவாறு அவரை நோக்கிப் போனார் கலை.

கணவரிடம் ஏதோ சொல்லி அவரை சமாளித்தவர், 'அவன் செய்த பாவத்துக்கு கடவுள் அவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்!' என்ற வேதனையுடன், 'நடப்பது நடக்கட்டும்' என்ற எண்ணத்துக்கு வந்துவிட, அவரது வயிற்றில் வேறு எரிச்சலும் தலைச் சுற்றலுமாக இருக்கவே, அங்கேயே சோபாவில் படுத்துக்கொண்டார் கலைவாணி.

சிறப்பு வகுப்புகள் எல்லாம் முடிந்து மாலை தாமதமாக வசுமித்ரா பள்ளியிலிருந்து வீடு திரும்ப, அது வரையிலும் கூட அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை!

அவனது அறை உள்பக்கம் தாளிடப்பட்டிருப்பதைக் கவனித்து, "ம்மா! அண்ணா வந்துட்டாங்களா?" என மித்ரா அதிர்ச்சியுடன் கேட்க, "ஆமாம்! அண்ணனாம் அண்ணன்! அவனுக்கெல்லாம்  மரியாதை ஒரு கேடு!" என்றவர் "மதியானமே வந்துட்டான்!" என்று சொல்லிவிட்டு மனதில் ஏதோ எண்ணம் தோன்ற, "வசும்மா! என்னவோ சரியா படல!

இவ்வளவு நேரம் ஏன் அவன் உள்ளயே இருக்கான்!" எனப் பதறியவர் வேகமாகக் கதவைத் தட்ட, உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லை.

வெளியில் எங்கோ சென்றிருந்த மாரி அங்கே வர, ராகவனும் கட்டிலில் இருத்து இறங்கி மெதுவாக சுவரைப் பிடித்துக்கொண்டு நடந்தவாறு அங்கே வந்தார்.

நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படாமல் போக, எப்படியோ உடைத்து கதவைத் திறந்தார் மாரி.

கண்கள் திறந்திருக்க, வாயில் ரத்தம் வழிந்து உறைந்துபோயிருக்க, உடல் கோணி தரையில் சரிந்து இறந்த நிலையில் கிடந்தான் வசந்த்.

அங்கே இருந்த ஒவ்வொருவரும் அதிர்ச்சியில் மின்சாரம் தாக்கிய உணர்வில் பதறிப்போக, 'வசந்தா!' என்ற கூவலுடன் மயங்கிச் சரிந்தார் ராகவன்.

You cannot copy content