You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Meendum Uyirthezhu - final

Quote

48

திருமண வைபவம்

சரியாய் ஒரு வருடத்திற்கு பின்...

இருளைக் கிழித்துக் கொண்டு கதிரவன் இரவின் பிடியிலிருந்து பூமித்தேவதையை மீட்டெடுக்க, அந்தக் காலைப் பொழுதில் திருமண வைபவத்திற்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அப்படி ஒரு அலங்காரமும் ஆடம்பரமும் கொண்ட அந்தத் திருமணத்தை அந்த மாநகரமே இதுவரை கண்டதில்லை. ஒரு ராஜகுடும்பத்தின் விழா என்று சொன்னாலும் மிகையாகாது. அங்கே குழுமியிருந்த எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் அமைந்திருக்க, அங்கிருந்த கூட்டமெல்லாம் திருவிழாவென நடந்து கொண்டிருக்கும் அந்தத் திருமண வைபவத்தின் முக்கிய சடங்குகளுக்காக காத்திருந்தனர்.

 ஆனால் இப்படி ஒரு ஆடம்பரமான திருமணத்தைச் செய்து கொள்ள வேண்டும் என்று கனவுகளோடு இருந்த சூர்யா அப்போது மணமகள் அறையில் பெரிய ஆர்பார்ட்டமே நிகழ்த்திக் கொண்டிருந்தாள்.

"இந்தக் கல்யாணம் எனக்கு வேண்டாம்... வேண்டாம் வேண்டாம்... ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ ரம்யா" என்றாள்.

ரம்யா கோபமாக, "இவ்வளவு தூரம் வந்தப் பிறகு வேண்டாங்குற... பைத்தியமாடி உனக்கு" என்று கேட்க,

"நீ என்ன வேணா நினைச்சுக்கோ... எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்" என்றாள் பிடிவாதமாக.

"உன் ட்ரீம் மாதிரிதானே இந்த மேரேஜ் நடந்திட்டிருக்கு... அப்படி பார்த்தா யூ ஆர் ஸோ லக்கி" என்றாள்.

"என் ட்ரீம் மாதிரி இந்தக் கல்யாணம் நடக்கலாம்... ஆனா என் மனசு ஏத்துக்காத ஒருத்தனை எப்படி... லைஃப் லாங்... என்னால முடியாது... நான் ஒத்துக்கவே மாட்டேன்" என்றாள்.

ரம்யாவால் தன் தங்கையை சமாதானப்படுத்த முடியாமல் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டு தன் பேசி எடுத்து தன் கணவருக்கு அழைத்தாள். அறைக்குள் வேகமாய் வந்த அர்ஜுன் நேராய் ரம்யாவை நோக்கி வந்து,

"என்னாச்சு ரம்யா... ஏன் இவ்வளவு டென்ஷனாயிருக்க... உன்னை ஸ்டிரயின் பண்ணிக்கக் கூடாதுன்னு நான் சொல்லிருக்கேன் இல்ல" என்றான்.

ரம்யாவின் வயிற்றில் இப்போது ஐந்துமாத இரட்டை சிசு இருக்க அர்ஜுனிற்கு ஒரே பெரிய கவலை அவளைக் கவனமாய் பார்த்து கொள்வதுதான்.

ரம்யா அவன் அக்கறையில் சலிப்புற்று, "ஐயோ! ஐம் ஆல்ரைட் ஆர்ஜுன்... முதல உங்க திமிர் பிடிச்ச மச்சினிச்சி என்ன சொல்றான்னு கேளுங்க" என்றாள்.

"என்னாச்சு சூர்யா?" என்று அவனும் ஆர்வமாய் சூர்யா புறம் திரும்பிக் கேட்க,

"நீங்களாவது என்னைப் புரிஞ்சுக்கோங்க மாமா... எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்" என்று கெஞ்சினாள்.

அர்ஜுன் அதிர்ந்து, "என்ன விளையாடுறியா... அவந்திகா மேடம் எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு ஏற்பாடு பண்ணிருக்காங்க... நீ இப்ப போய் இப்படி சொல்றியேமா" என்றான்.

ரம்யா கோபத்தோடு, "அவ அடங்க மாட்டா... ரொம்ப திமிராயிடுச்சு அவளுக்கு... நீங்க வாங்க அவ யார் சொன்னா கேட்பாளோ... அவங்க வந்து பேசட்டும்" என்று அந்த அறையை விட்டு கோபமாய் வெளியேறியவளிடம் சூர்யா குரலை உயர்த்தி, "வேண்டாம் ரம்யா... ப்ளீஸ்" என்றாள்.

ரம்யா கவனிக்காமல் வெளியேறிய சில நிமடங்களில் அந்த அறைக்குள் மாப்பிள்ளை கோலத்தில் ஈஷ்வர் நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைந்த மறுகணமே அவள் அந்த அறையின் ஜன்னல் பக்கமாய் முகத்தைத் திருப்பியபடி நின்று கொண்டாள். அந்த நிராகரிப்பு அவனை எந்தளவுக்குக் காயப்படுத்தியது என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இவள் இன்று நேற்று அப்படி நடந்து கொள்ளவில்லை. ஒரு வருட காலமாய் இப்படிதான் நடந்து கொண்டிருந்தாள்.

அந்த மோசமான நிகழ்விற்குப் பிறகு அவன் வாழ்க்கை முற்றிலும் தலைகீழாய் மாறியிருந்தது.

விதி இப்படி ஒரு மோசமான விளையாட்டை அவர்கள் வாழ்வில் விளையாடிவிடும் என்று எண்ணியிருப்பார்களா என்ன? அப்படி என்ன கோபம் அந்தக் கடவுளுக்கு இவர்கள் மீதும் இவர்களின் காதல் மீதும்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சூர்யாவால் ஈஷ்வரின் ரூபத்தில் இருக்கும் அபிமன்யுவை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது அவளுக்கு மரணத்திற்கு நிகரான வேதனை. எந்தப் பெண்ணுக்கும் வாழ்வில் வந்துவிடக் கூடாத சோதனை.

அன்று நடந்த விபத்தில் அபிமன்யு ஈஷ்வர் இருவருமே உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றே எல்லா மருத்துவர்களும் கைவிரித்துவிட்டனர். ஆனால் இருவருமே அந்த ஜென்மத்திலும் நிறைவேறாத ஆசைகளோடு மரணிக்க தயாராகயில்லை.

அதிலும் அபிமன்யுவின் தேகம் முழுவதும் காயமுற்று காப்பாற்றவே முடியாது என்ற நிலையிலும் அவனை உயிருடன் வைத்திருந்தது அவனின் உறுதியான மனோதிடம்.

டாக்டர் வைத்தீஸ்வரனுக்கு மகனைக் காப்பாற்ற முடியாது என்று நன்றாகவே தெரிந்து போனது. ஈஷ்வரையாவது காப்பாற்றிவிட முடியுமா என்ற முயற்சியும் கிட்டதட்ட தோல்விதான். ஏற்கனவே ஒரு தடவை அவன் விபத்தில் சிக்கித் தலையில் காயப்பட்டிருந்ததினால், இம்முறை அவன் தலையில் உண்டான காயம் அவனை மூளைச்சாவடைய செய்திருந்தது.

ஆனால் இதயமும் மற்ற உறுப்புகளும் நன்றாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. மொத்தத்தில் இப்போது அவன் உயிருடன் இருக்கும் ஒரு பிணம்.

அப்போதுதான் வைத்தீஸ்வரனுக்கு ஒரு விபரீதமான யோசனை தோன்றிற்று. அதை அவர் அவந்திகாவிடம் சொல்ல மகனை மொத்தமாய் பறிகொடுக்க விரும்பாதவள் அந்த முயற்சிக்கு ஒப்புக் கொண்டார்.

உலகின் அத்தனை திறமையான மூளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரவழைக்கப்பட, இதுவரை நிகழாத அப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒருவன் உடலாகவும் இன்னொருவன் உயிராகவும் மாறிய அதிசயம் அது.

அந்த மரணப் போராட்டத்தில் மீண்டும் யார் உயிர்த்தெழுந்தனர் என்பதை சொல்வதற்கில்லை. ஆனால் ஈஷ்வரின் சிதைந்து போன நினைவுகள் அகற்றப்பட்டு அபிமன்யுவின் நினைவுகள் அவனுக்குள் புகுத்தப்பட்டன.

அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதே எனினும் ஈஷ்வராயிருக்கும் அபிமன்யு கண்விழிக்க நாட்கள் கடந்தன. கோமாவில் ஒரு மாத காலமாய் இருந்தவனுக்கு திடீரென்று நினைவு திரும்பியது.

அபிமன்யு தன் சிரம் துண்டிக்கப்பட்டு தரையில் வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கிறான். அந்த நொடி அதிர்ச்சியோடு அவன் கண்விழிக்க, அந்த மரண போராட்டத்தில் அபிமன்யு மீண்டும் உயிர்பெற்று எழுந்தான்.

அதாவது அபிமன்யுவின் சாம்பலில் இருந்து, ஈஷ்வரின் உடலுக்குள் மீண்டும் ஒரு பீனக்ஸ் பறவையாய் அபிமன்யு உயிர்த்தெழுந்த அதே சமயம், மீண்டும் அபிமன்யுவின் ஞாபகங்களைச் சுமந்தபடி ஈஷ்வரும் உயிர்த்தெழுந்தான்.

ஈஷ்வராய் அபிமன்யு விழித்தெழுந்த நொடி தான் பிழைத்துவிட்டோம் என அவன் ஆனந்தம் கொள்வதா, இல்லை தன் தேகத்தைத் தொலைத்துவிட்டதை எண்ணி வேதனைப்படுவதா? என்று பெரும் சிக்கலான மனநிலையில் மாட்டிக் கொண்டான்.

மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒருவனின் மனநிலையை மொத்தமாய் பாதிக்க கூடிய ஒன்று. ஒருவன் தான் வாழ்ந்த தேகத்திலிருந்து இன்னொருவனின் உடலோடு பொருந்திக் கொள்வது யாராயிருந்தாலும் அத்தனை சுலபமான காரியம் அல்ல.

ஆனால் அபிமன்யு அசாத்தியமானவான். அவன் மனோபலத்தோடு எதிர்கொண்டு அத்தகைய மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டான். அபியின் குடும்பத்தில் உள்ள எல்லோருமே மெல்ல மெல்ல அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள, அவந்திகாவிற்கும் அந்த மாறுதல் ஈஷ்வரின் இழப்பை முற்றிலுமாய் மறக்கடித்திருந்தது.

ஆனால் அபிமன்யுவால் சாத்தியப்படாத ஒன்று, அந்த மாற்றத்தை சூர்யாவை ஏற்க வைப்பது. எப்போது அவன் அந்த அறுவைச் சிகிச்சையில் ஈஷ்வராய் உயிர்த்தெழுந்தானோ அன்றிலிருந்து சூர்யா அவனிடம் பேச அல்ல, பார்க்க கூட தவிர்த்திருந்தாள்.

அந்த ஒரு வருடத்தில் பலமுறை அபிமன்யு முயன்றும் சூர்யா அவனைப் பார்த்து பேசவும் தயாராயில்லை. எல்லோருமே சேர்ந்து ஆறு மாதித்திற்கு முன்பு அர்ஜுன் ரம்யா திருமணத்தோடு சேர்த்து சூர்யா அபியின் திருமணத்தையும் ஏற்பாடு செய்ய, அவளோ முரண்டு பிடித்து அதனை நடக்கவிடாமல் தடுத்தும்விட்டாள்.

இறுதியாய் அர்ஜுனிற்கும் ரம்யாவிற்கும் மட்டும் திருமணம் நிகழ்ந்தது. ஆனால் அப்போதும் விடாமல் எல்லோரும் அவளைத் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்த அவள் தப்பித்துக் கொள்ளும் விதமாய் ஆறு மாத அவகாசம் கேட்டாள்.

இப்போது அந்த அவகாசம் முடிவுற்றிருந்தது. மீண்டும் அவர்களுக்களான திருமண ஏற்பாடுகள் நடைபெற, கத்தி முனையில் நிற்கும் நிலைமைதான் சூர்யாவிற்கு. அவள் முடிந்த வரையில் அந்தத் திருமணத்தை நிறுத்திவிடவே போராடினாள்.

ஈஷ்வரால் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை அவளால் மறக்கவே முடியவில்லை. அபிமன்யுவின் ஞாபகங்களைச் சுமந்து கொண்டிருந்தாலும் அது ஈஷ்வரின் உடம்புதானே. எப்படி அவளால் அத்தகைய ஒரு நிலைமையை ஏற்றுக் கொள்ள முடியும்.

அபிமன்யுவும் அவளின் நிலையைப் புரிந்து கொண்டு அவளை ஒருவாறு தொந்தரவு செய்யாமல் காத்திருந்தான். ஆனால் திருமண நடந்துவிட்டால் எல்லாமே பழகிப் போய்விடும் என்று அவன் நம்பியிருந்த நிலையில் இன்று மீண்டும் அவளின் பிடிவாதமும் நிராகரிப்பும் அவனின் அத்தனை நாள் பொறுமையைத் தூள் தூளாய் தகர்ந்திருந்தது.

அபிமன்யு அந்த அறைக் கதவை மூடிவிட்டு அவளை நெருங்கி வர சூர்யா தவிப்போடு, "ப்ளீஸ் அபி... ஸ்டே தேர்... எனக்கு அந்த முகத்தைக் கூட பார்க்க வேண்டாம்" என்றாள்.

அவன் அதற்கு மேல் முன்னேறி வராமல், "ஸோ நீ என் முகத்தை மட்டும்தான் பார்க்குற... என் மனசை இல்ல... அப்படிதானே?" என்று கோபமாகக் கேட்க

சூர்யா திரும்பாமலே, "அப்படி இல்ல அபி... நான் உங்களை எந்தளவுக்கு நேசிக்கிறேனோ... அதே அளவுக்கு அந்த ஈஷ்வரை வெறுக்கிறேன்... ஏன்னா அவன் அந்தளவுக்கு என்னை டார்ச்சர் பண்ணியிருக்கான்... நான் அந்த முகத்துல உங்களைப் பார்த்தா... அதெல்லாம்தான் எனக்கு ஞாபகத்துக்கும் வரும்... ஏன் உங்க மேலயே எனக்கு வெறுப்பு உண்டாயிடுமோன்னு பயமா இருக்கு...அதனாலதான் சொல்றேன்... ப்ளீஸ் இந்தக் கல்யாணம் வேண்டாம்..." என்றாள்.

"இதுக்காகவாடி நான் கஷ்டப்பட்டு அவ்வளவு வேதனையிலும் என் உயிரைப் பிடிச்சுட்டிருந்தேன்... இப்படி எல்லாம் நடக்கும்னு அப்பவே தெரிஞ்சுருந்தா நான் நிம்மதியா செத்திருப்பேன்ல... நீயும் நிம்மதியா இருந்திருப்ப" என்று அபி சீற்றத்தோடு உரைக்க,

சூர்யா பதறியபடி திரும்பியவள் அவனைப் பார்த்தும் பார்க்காமலும்,

"ப்ளீஸ் அபி... இவ்வளவு ஹார்ஷா பேசாதீங்க... எனக்கு கஷ்டமா இருக்கு" என்றாள்.

"நீ என்கிட்ட பேசறதும் அப்படிதான் இருக்கு சூர்யா... இல்ல தெரியாமதான் கேட்கிறேன்... திடீர்ன்னு எனக்கு ஒரு அக்ஸிடென்ட்ல முகமெல்லாம் சிதைஞ்சு போயிருந்தா என்ன பண்ணிருப்ப... விட்டுவிட்டுப் போயிடுவியா?!" என்று கேட்டான்.

"அதெப்படி அபி நான் அந்த மாதிரி உங்களை விட்டுவிட்டுப் போவேன்... நான் உங்களை உண்மையா நேசிக்கிறேன்" என்று அவள் உரைக்க,

அபி அவளிடம் "அப்போ அப்படி ஒரு விபத்து எனக்கு நடந்திடுச்சுன்னு நினைச்சுக்கோ... நான் இன்னைக்கு என்னையே மொத்தமாய் இழந்துட்டு வேறொருவனா நிக்கிறேன்னா... அது உனக்காகதான்" என்றான்.

"எனக்கு புரியுது அபி... பட் பிரச்சனை அதுமட்டுமில்ல... நீங்க சர்வைவ் ஆகிறதே ஈஷ்வரோட உடம்புக்குள்ள... அப்படி இருக்கும் போது எப்படி உங்களுக்கு நான் மனைவியா" என்றாள் தயக்கத்தோடு.

"ம்ம்ம்... அதான் உன் பிரச்சனைன்னா... ஃபைன்... உன் விருப்பமில்லாம நான் உன்னை நெருங்க கூட மாட்டேன்... எனக்கு வாழ்க்கை பூரா உன் காதல் மட்டும் இருந்தாலே போதும்... நத்திங் எல்ஸ்... என் மேல நம்பிக்கை இருந்தா நீ நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சு மணமேடையில் வந்து உட்காரு... இல்லன்னா உன்னைப் பொறுத்த வரைக்கும் இந்த அபிமன்யு செத்துட்டான்னு நினைச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு அபிமன்யு விறுவிறுவென வெளியேறினான்.

சூர்யா அவன் வார்த்தைகளைக் கேட்டு அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தமாய் அவளுக்கு தெரிந்தது அவன் கொண்ட காதல் மட்டுமே. அவளின் பிடிவாதம் அவனின் காதலின் முன் பொய்த்துப் போனது. ஆதலால் அவள் தன் வேதனைகளை ஒதுக்கி தள்ளிவிட்டு மணமேடையில் வந்து அமர்ந்தாள்.

திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டிருக்க, ரொம்பவும் வியப்புக்குரிய விஷயம் அவந்திகா இயல்பாக நின்றபடி எல்லோரையும் வரவேற்று விசாரித்து கொண்டிருந்தார். எத்தனையோ பெரிய ஆராய்ச்சியாளர்களால் முடியாத ஒன்றை அபிமன்யுவின் திறமை சாதித்து காட்டியிருந்தது.

சுந்தரும் சந்தியாவும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதும் மற்றொரு வியப்பு. அர்ஜுன் மனைவியைக் கவனித்து கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருக்க, இம்முறை நடப்பதெல்லாம் நன்மையாய் இருக்க வேண்டும் என்பதே அவனின் ஆழ் மனதின் கவலை.

சுகந்திக்கு மகன் எந்த உருவத்தில் இருந்தாலும் அவன் இருக்கிறான் என்பதே பெரிய ஆறுதல். வைத்தீஸ்வரன் செய்தது சாதாரண காரியமல்ல. சாத்தியமற்ற ஒன்றாய் மருத்துவ துறையில் கருதப்படும் பிரெயின் டிரான்ஸ்பிளேன்டேஷனை தன் மகனை வைத்தே செய்து காட்டிவிட்டார். அது மருத்துவ உலகின் மைல் கல். ஆனால் உண்மையென்னவெனில் அது எப்படி சாத்தியமானது என்பது அவருக்கு இன்னுமும் புரியாத புதிராகவே இருந்தது.

இதில் அவருடைய திறமையை விட அபிமன்யுவின் மனோபலமே அதிகம் பங்காற்றியதென்று அவர் நன்கறிந்திருந்தார்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அங்கே உள்ள இவர்களை தவிர மணமேடையில் அமர்ந்திருப்பது அபிமன்யுதான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் இந்த உலகைப் பொறுத்த வரை ஈஷ்வர்தேவ்தான். ஏனெனில் அவந்திகா அந்தப் பெரிய சமாராஜ்ஜித்தை நிர்வகிக்கும் ஈஷ்வர் தேவ் மரணித்துவிட்டான் என்பதை அறிவிக்க விரும்பவில்லை.

அவனின் இறப்பை அறிந்து கொண்டால் எதிராய் இருக்கும் பல நிறுவனங்களால் ரா க்ரூப் ஆஃப் கம்பெனிஸுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது அவரின் எண்ணம். அந்த உண்மை எப்போதும் ரகசியமாகவே இருக்க ஒருவிதத்தில் அபிமன்யுவும் சம்மதித்தான்.

அதற்காக அபிமன்யு அவர்களிடம் இனி ரா மெடிகல் ரிசர்ச் சென்டர், நோய்களை பாமர மக்களின் மீது செலுத்தி எந்தவித ஆராய்ச்சியும் செய்து அவர்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடாது எனவும் உறுதி பெற்றுக்கொண்டான்.

ஆனால் இன்று நிலைமையே வேறு. அபிமன்யுவின் திறமையைப் பார்த்து அவந்திகா அவனை தன் வாரிசாய் ஏற்று அந்த சாம்ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்.

திருமண சடங்குகள் எல்லாம் இனிதே நடைபெற, சூர்யாவால் மட்டும் அவற்றை விரும்பி முழுமையாய் ஏற்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் தவித்தாள். ஒருவகையில் இப்பிறவியில் சூர்யாவின் கனவு அரங்கேறிவிட்டது.

ஆனால் சூர்யாவும் அபிமன்யுவும் தங்கள் ஜென்மாந்திர காதல் விருட்சத்தைக் காப்பாற்றிக் கொள்ள, கனவிலும் சாத்தியமில்லாத பேரிழப்பை ஏற்றுக் கொள்ள நேரிட்டது பெரும் துயர்தான்.

49

மாயாஜால வித்தை

மும்பை மாநகரத்தில் அரண்மனை போன்றிருந்த அந்த வீட்டின் முகப்பறை வெறிச்சோடி இருந்தது. அதன் கீழ்தளத்தில் இருந்த விசாலமான அறையில் நுழைந்தால்,

இரவெல்லாம் விழித்துக் கொண்டிருந்ததிற்கு சான்றாய் அந்த மெழுகுவர்த்தி புகையைக் கிளப்பிக் கொண்டிருக்க பின்புற கதவின் வழியே விடியலை அறிவித்த கதிரவனோ, வானில் மங்கைகளின் நுதல்களை அலங்கரிக்கும் வட்டமான செந்நிற திலகமெனக் காட்சியளித்தான்.

அந்த கதிரவனுக்குத் துணையாய் அப்போது தோட்டத்தில் ஈஷ்வர்தேவ்வின் தோற்றத்தில் இருக்கும் அபிமன்யு உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தான். அவனின் மேனியின் கட்டுடல் வசீகரமாகவும் கம்பீரமாகவும் எல்லோரையும் ஈர்க்கவல்லதாய் இருக்க, ஒருவாறு அவன் தன் பயற்சிகளை முடித்து விட்டு அறையினுள் நுழைந்தான்.

அவனின் பார்வை அறையைச் சுற்றிலும் நோட்டமிட, சூர்யாவோ படுக்கையில் முழுவதுமாய் போர்வைக்குள் சுருண்டிருந்ததைக் கவனித்தான். அவன் பார்வை சுவரின் கடிகாரத்தின் புறம் திரும்ப, அது மணி ஆறு என்பதை அறிவித்தது.

அபிமன்யு குறும்புத்தனமான பார்வையோடு, 'ஒரு நாளாவது இயர்லி மார்னிங் எழுந்திருக்கிறாளா?... இன்னைக்கு உன்னை விடுறதா இல்ல... ஒரு வழி பண்றேன்' என்று தனக்குத்தானே சொல்லிவிட்டு அவளின் அருகில் நெருங்கியவன்,

"சூர்யா" என்று பலமுறை அழைத்தும் அவளிடம் பதில் இல்லை. அத்தனை ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இருக்க, இறுதியாய் முகத்திலிருந்த போர்வையை விலக்கி சூர்யா என்று காதில் கத்த,

"போடா இடியட்... நீ சீக்கிரமா எழுந்து எப்படியோ நாசமா போ... என்னை டிஸ்டர்ப் பண்ணாதே" என்று விழிகளை மூடியபடியே சொல்லிவிட்டு முகத்தை போர்வைக்குள் புகுத்திக் கொண்டாள்.

'நான் இடியட்டா? ' என்று அவன் கோபம் கொண்டபடி அருகிலிருந்த மேஜையின் மீதிருந்த தண்ணீரை அவள் முகத்தில் ஊற்ற, அவளோ துடிதுடித்து எழுந்தமர்ந்தாள். அவளின் விழிகள் கடிகாரத்தைப் பார்த்து விட்டு அதிர்ந்து போக அவனோ, "குட் மார்னிங்" என்று சொல்லி புன்னகைத்தான்.

அவனை எரித்து விடுவது போல் பார்த்து, "இட்ஸ் ஜஸ்ட் சிக்ஸ்... இவ்வளவு காலையில எழுப்பி விட்டுவிட்டு குட் மார்னிங்கா? கொஞ்சங்கூட உனக்கு மூளையே இல்லயா?" என்று கேட்க அவன் புன்னகையோடு,

"என்கிட்ட இப்போதைக்கு அது ஒன்னுதானே மிச்சம் இருக்கு" என்று சொல்லி மீண்டும் புன்னகைக்க,

"இருந்து என்ன யூஸ்?... போடா... ஐம் கோயிங் டூ ஸ்லீப்... தண்ணி கிண்ணி ஊத்துன... ஐ வில் கில் யூ ராஸ்கல்" என்று சொல்லி மீண்டும் படுத்துக் கொண்டாள்.

அபிமன்யு யோசனையோடு அவளைப் பார்த்தவன், 'தண்ணி ஊத்தக்கூடாதோ?' என்று சொல்லிவிட்டு அவளை நெருங்கிப் போர்வையை அவசரமாய் விலக்கிவிட்டுப் படுக்கையில் இருந்தவளை தம் கரங்களில் தூக்கி கொள்ள, "ஏ இடியட்... விடுடா" என்று கதறினாள். அவன் கரங்கள் அவளை விடுவதாகயில்லை.

"நான் தூங்கினா உனக்கு என்னடா போச்சு விடுடா?" என்றவளிடம்,

"சீக்கிரம் எழுந்திருச்சா ஆரோக்கியமா இருக்கலாம்னு சொல்லிருக்கேன் இல்ல" என்றான் அதிகாரமாக.

"நீயும் உன் ஆரோக்கியமும்... உன் சித்தா புராணத்தைக் கேட்டுக் கேட்டு என் காது புளிச்சு போச்சு... டோன்ட் அகையின்" என்றாள்

"அப்போ நான் சொல்றதை நீ கேட்க மாட்ட?" என்று அவன் அழுத்தமாய் கேட்க,

"நோ... கேட்க மாட்டான்" என்றாள் பிடிவாதமாக.

"அப்போ அனுபவி" என்று அவளைத் தூக்கிவந்து தடலாடியாய் அந்த நீச்சல் குளத்தில் போட்டுவிட அவள் சற்றும் அதை எதிர்பார்க்கவில்லை. அவளோ நொடி பொழுதில் மூச்சு முட்டி மேலே எழும்பி வந்தவள் ஆடை முழுவதும் நனைந்து நின்றாள்.

அவனோ அவளை பார்த்து குலுங்கி குலுங்கிச் சிரித்தான். அவனை வாயில் வந்த வார்த்தை எல்லாம் சொல்லி கடிந்து கொண்டவள் மேலும் எரிச்சல் மிகுதியால், "அந்த ஈஷ்வர் உடம்புல இருக்க இல்ல... உன்கிட்டயும் அந்த அரெகன்ஸ் இல்லாமலா இருக்கும்" என்றாள்.

"ஆமான்டி அரக்கென்ஸ்தான்... உன் வாழ்க்கையில ராமனும் நான்தான், ராவணனும் நான்தான்" என்றான்.

"அதென்னவோ உண்மைதான்டா... என் விதியை டிசைன் பண்ணவன் இருக்கான் பாரு... அவன் ஒரு ஸேடிஸ்ட்" என்றாள்.

“அப்படி பார்த்தா அந்த ஸேடிஸ்ட் நீதான்” என்று அபிமன்யு கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொல்ல,

"என்ன சொன்ன?" என்று முறைத்தாள் அவள்.

"ஆமாம்... அவன் அவனோட விதியை... அவன் அவனேதான் டிசைன் பண்ணிக்கிறான்... அப்படி பார்த்தா அந்த ஸேடிஸ்ட் நீதான்" என்று அவன் அவளையே சுட்டிக் காட்ட,

அவளோ மெல்ல நீச்சல்குளத்தில் இருந்து வெளியேறியபடி, "அப்போ அபிமன்யுவில் இருந்து ஈஷ்வரா மாறி இருக்கிற உங்க விதியை யார் சார் தீர்மானிச்சது" என்று கேட்டாள்.

"ம்ம்ம்... நானேதான்" என்றான்.

சூர்யா ஆடைகளை உதறிக் கொண்டபடி நின்றிருக்க அவன் மேலும், "நடந்தது பிரெயின் டிரான்ஸ்பிளேன்ட்டேஷன்னு நினைச்சியா... நோ... உண்மையில் நடந்தது வேற" என்று சொல்லி நிறுத்த அவள் அலட்சியமாய்,

"அப்படி என்ன சார் நடந்தது?!" என்று கேட்டாள்.

"உனக்கு மட்டும் அந்த சீக்ரெட் சொல்றேன்... கிட்ட வா" என்றான்.

"நோ... கிட்ட வந்தா நீ கடிச்சிருவ... அங்கிருந்தே சொல்லு " என்று அவள் கன்னத்தில் கை வைத்துக் கொள்ள,

"மாட்டேன் வாடி" என்று சொல்லி அவளை அருகில் இழுத்து காதோடு ஒரு விஷயத்தைச் சொல்ல, அப்படியே அவள் விழிகள் அகல விரிந்தன.

அவள் புருவங்கள் நெறிய அவனைப் பார்க்க, "என்ன புரிஞ்சுதா?" என்று கேட்டான்.

"சத்தியமா குழப்பமா இருக்கு... பட் இதெல்லாம் சாத்தியமா?" என்று கேட்டாள்.

"அபிமன்யுவால் எதுவும் சாத்தியம்..." என்றான் கர்வ புன்னகையோடு.

சூர்யா யோசனையோடு நிற்க அவன் அவளிடம், "அன்னைக்கு நடந்ததை நல்லா யோசிச்சு பாரு... எனக்கிருந்த கோபத்துக்கு அந்த ஈஷ்வரைக் குத்தி, நான் சாகடிச்சிருக்கணும்... பட் நான் அப்படி செய்யல... ஏன்னு யோசிச்சியா?" என்று கேட்டான்.

சூர்யா திகைப்போடு, "அதானே... ஏன்?" என்று கேட்க அபிமன்யு அவளை நோக்கி, “அதுதான் சூட்சுமம்..." என்று சொல்லி,

"பந்த காரண சைதில்யாத் ப்ரசாரஸம் வேத நாச்ச சித்தஸ்ய பரசரீரா வேச” என்று ஏதோ சில வித்தியசாமான அர்த்தம் புரியாத வார்த்தைகளாய் உரைக்க,

அவள் தலையைப் பிடித்துக் கொண்டு, "நிறுத்து அபி... நீ சொல்றது ஒன்னும் புரியல... உன் சீக்ரெட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்... தூக்கத்தைக் கலைச்சதில்லாம... காலங்காத்தால பைத்தியம் பிடிக்க வைக்கிற... போடா" என்று சொல்லி அவனை விட்டு விலகி முன்னேறி நடந்தாள்.

அவன் அவளைப் பின்புறம் வந்து தன் கரங்களால் பிணைத்தபடி, "கோசுக்காதடி... சும்மா கொஞ்சம் விளையாடினேன்" என்றான்.

அவள் அவன் புறம் திரும்பி கோபமாய் முறைக்க அபிமன்யு அவளிடம்,

"சாரிடி என் அழகி” என்று அவள் கன்னத்தைக் கிள்ளவும், “போடா” என்று அவள் முகத்தைத் திருப்பிப் கொண்டாள்.

“இன்னுமும் இந்த முகத்தைப் பார்க்க உனக்கு அருவருப்பா இருக்கா? போயும் போயும் இவனைப் போய் காதலிச்சோம்னு தோனுதா?” என்று அபி கேட்க அவள் அதிர்ந்து அவன் புறம் திரும்பி,

“நோ... நாட் அட் ஆல்” என்றவள் இடைவெளிவிட்டு, "இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னை மட்டுமே காதலிக்கணும்" என்று உரைத்த மறுகணம் அவன் இதழ்களில் மின்னல் கீற்றாய் ஒரு முத்தத்தைப் பதிக்க அவள் வெட்கமாய் அவன் மார்பில் அடைக்கலம் புகுந்து கொண்டாள்.

அவள் அவனை அணைத்து கொள்ள, "நிஜமாவே எனக்கு ஆச்சரியமா இருக்கு... எப்படிறா இந்த முகத்தைப் பார்த்துட்டு... காலம் முழுக்க வாழ்க்கையை ஓட்டப் போறேன்னு நினைச்சேன்... பட் மாயாஜால வித்தை மாதிரி என் மனசு முழுக்க இப்ப இந்த முகம்தான் இருக்கு... அப்படி என்னடா பண்ண?" என்று அவள் வியப்பாய் கேட்டு அவன் முகத்தை ஏறிட்டாள்,

"அதுக்கு ஒரு மருந்து இருக்கு... எல்லாத்துக்கும் அதுதான் காரணம்" என்றான்.

"என்ன மருந்து... அதை பத்தி நீ என்கிட்ட சொல்லவே இல்ல"

"காலம்ங்கிற மருந்துதான்... காலம் எல்லா காயங்களையும் ஆற்றும்... அதால மட்டும்தான் எல்லா ரணத்தையும் மறக்கடிச்சு நாம சந்திக்கிற எல்லா மோசமான நிகழ்வுகளையும் கடந்து மீண்டும் நம்மை இயல்பான நிலைக்குக் கொண்டு வரும்... அதெல்லாம் விட முக்கியமா... என்கிட்ட இன்னொரு மாய வித்தையும் இருக்கு" என்றான்.

"என்னது?" என்று கேட்டு அவள் புருவங்கள் நெறிய,

"நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வைச்சுருக்க காதல் சூர்யா... அது எல்லாத்தையும் சாத்தியப்படுத்தும்" என்றான்.

அவன் இவ்வாறு சொன்ன நொடி இருவரின் விழிகளும் ஒரு புள்ளியில் சங்கமித்தது. சூர்யாவிற்கும் அபிமன்யுவிற்கும் இடையில் இருந்த அவர்களின் காதல் கண்களில் இருந்த அல்ல, மனதிலிருந்து உருவானது. அவர்களின் அந்த ஜென்மாந்திர பந்தம் அவர்களை அப்படி வெகுநாட்கள் விலகி இருக்கவும் விடவில்லை.

அப்போது ரீங்காரமிட்ட கைப்பேசியின் ஒலியில் அவள் மீண்டபடி, "அபி ஃபோன் ரிங்காவுது" என்றாள்.

"ப்ச்... பரவாயில்ல விடு" என்றான்.

"முக்கியமான ஃபோனா இருக்க போகுது" என்று அவள் சொல்லிவிட்டு மறுகணம் தன் கைப்பேசியை எடுத்து பேசினாள்.

அவளின் முகம் பிரகாசமடைய அபியிடம், "அபி... அர்ஜுன் மாமாதான்... அக்காவுக்கு டெலிவரி ஆகிடுச்சாம்... அதுவும் இரட்டை ஆண் குழந்தைகளாம்" என்றாள்.

அபிமன்யு ஆனந்தத்தில் உற்சாகமடைய வெகுநேரம் இருவரும் கைப்பேசியில் அளவளாவினர். பின்னர் அபி உற்சாகத்தில் சூர்யாவை தன் கரத்தில் தூக்கிச் சுத்த, "ஐயோ! விடு அபி... தலை சுத்துது" என்று சொல்ல அவனோ , "முடியாது ... இன்னைக்குப் பூரா இந்த சந்தோஷத்தை நான் உன் கூட செலிபரேட் பண்ணனும்" என்று அவன் அவளைப் படுக்கையில் கிடத்தினான்.

“இன்னைக்குப் பூராவா... மீட்டிங் இருக்கு... கிளம்ப வேண்டாமா?” உரைக்க, “போஸ்ட் போன் பண்ணிடலாம்” என்று சொல்லி அவன் அவளை நெருங்கினான்.

அப்போது, “பாஸ்" என்று மதி கதவிற்கு வெளியே இருந்து குரல் கொடுக்க அவன் சலித்து கொண்ட நொடி சூர்யா புன்னகையோடு, "உன்னோட அசிஸ்டென்ட்" என்றாள்.

"அவனுக்கு நேரங்காலமே இல்லை" என்று முனங்கி விட்டு, "வெயிட் பண்ணு மதி... ஐம் கம்மிங்" என்றான்.

மதிக்கும் நடந்த மாற்றங்கள் எதுவும் தெரியாது. எந்தவித சந்தேகமும் அவனுக்குள் எழும்பவில்லை காரணம். அந்தளவுக்கு யூகிக்கும் புத்திசாலித்தனம் அவனிடம் இல்லை.

இருவருமே அலுவலகத்திற்கு அவசரம் அவசரமாய் தயாராக... நடை, உடை என அபிமன்யு ஈஷ்வர்தேவ்வாகவே முற்றிலுமாய் மாறி நின்றான். ஒவ்வொரு முறை அப்படி அவனை பார்க்கும் போது பழைய மோசமான நினைவுகள் தவிர்க்க முடியாமல் மேலெழும்பினாலும் அபிமன்யுவின் தேஜஸ் நிரம்பிய புன்னகை அந்த எண்ணங்களை ஒதுக்கிவிட்டது.

"ஓகே கிளம்பலாமா?" என்று அவன் கேட்க அவள் அவனை நெருங்கி "எத்தனை முறை இந்தத் தப்பை செய்வ?!" என்று சொல்லி அவன் வாட்ச்சை வலது கையிலிருந்து கழற்றி மாற்றிக் கட்டினாள்.

பின்னர் சூர்யா அவனிடம், "கேட்க மறந்திட்டேன்... டீ7 ரிசர்ச் பத்தின மேட்டெரெல்லாம் மதிகிட்ட கேட்டியா?" என்றாள்.

"ம்ம்ம்...கேட்டேன்... அந்த ஈஷ்வர் பயங்கரமா பிளான் பண்ணிருக்கான்... ஏதோ மனநல காப்பாகத்தோடு உதவியோடு டீ7 மருந்தை டெஸ்ட் செய்ய பிளான் பண்ணிருக்கான்?" என்றான் அபி.

"இஸ் இட்... பட் அப்படி எதுவும் அவன் பண்ணல இல்ல" என்று அவள் படபடப்போடு கேட்க,

"இல்ல... அதுக்குள்ளதான் அந்த இன்ஸிடென்ட் நடந்திருச்சே" என்றான்.

"எனி வே... எல்லாமே நல்லதுக்குதான்... பட் அந்த ஈஷ்வருக்கு இன்னும் மோசமான தண்டனை கிடைச்சிருக்கணும்... பாஸ்டட்" என்று சொன்னவளின் விழிகளில் அத்தனை வெறி இருந்தது.

அபிமன்யு சூர்யாவின் தோளில் தட்டி அவளை ஆசுவாசப்படுத்தியபடி,

"இதுவே அவனுக்குப் பெரிய தண்டனைதான் சூர்யா... உலகத்தையே அவன் கன்ட்ரோல்ல வைச்சிருக்கணும்னு நினைச்சான்... பட் இன்னைக்கு அவன் உடம்பையே அவனால கன்ட்ரோல் பண்ண முடியலேயே" என்றான்.

அபிமன்யு இன்று ஈஷ்வராய் இருக்க முக்கிய காரணம் அவன் ஆளுமையில் இருக்கும் மருத்துவ உலகை முடிந்தளவு மக்களின் நலனுக்காய் மாற்ற வேண்டும் என்று எண்ணத்தில்தான். அத்தகைய ஒன்றை இந்த உலகில் சாத்தியப்படுத்தும் விதமாய் சூர்யாவும் அபியும் ரொம்பவும் முயன்று கொண்டிருந்தனர்.

அதுமட்டுமின்றி சித்த மருத்துவத்தை உலக மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுவதாக அவந்திகா அபிமன்யுவிற்கு உறுதியளித்திருந்தார். ஏனெனில் சித்த மருத்துவத்தின் மூலமாக இப்போது அவருமே பயனடைந்து பழையபடி தன் சொந்த காலூன்றி நடந்து கொண்டிருந்தார்.

மருத்துவ துறையை வியாபாரமாக்கி அந்தக் கயிற்றால் இன்று உலகைப் பிணைத்து வைத்திருக்கும் பல ஜாம்பவான்ககளிடம் இருந்து நாம் மீள வேண்டுமெனில், நம்முடைய பழமையை நாம் தேடிக் கற்க வேண்டும்.

நம் முன்னோர்கள் நமக்காக படைத்த அற்புதமான சித்த மருத்துவத்தை உலகின் நலனுக்காகவும் வருங்கால சந்ததிகளின் ஆரோக்கியமான வாழ்விற்காகவும் மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். அதுவே இனி நம் ஆரோக்கியமான வாழ்விற்கும் வழி வகுக்கும்.

இந்த அண்டத்தில் நிற்காமல் சுழலும்... சூர்யன், பூமி, சந்தரனின் பிணைப்பை யாருமே பிரிக்க இயலாது. அவ்விதமே சூர்யா, அபிமன்யு, ஈஷ்வர் ஆகிய மூவருக்குள் ஏற்பட்ட பந்தத்தினால் உண்டான முடிச்சை மாற்றவோ பிரிக்கவோ முடியாது.

மீண்டும் உயிர்த்தெழுவின் பயணம் இங்கே முடிவுறுகிறது.

You cannot copy content