You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's AOA - 20

Quote

20

பூமியின் அழிவை மனிதன் நிர்மாணிக்க முடியாது. அவன் வித்திடும் அழிவுகள் அவனுக்கானதே!

எக்காரணம் பற்றியேனும் மனிதன் பூமியினின்று மறைந்து போக நேர்ந்தால் எங்கிருந்தேனும் மனிதனைக் காட்டிலும் முன்னேற்றமடைந்த உயிரினம் ஒரு புதிய தோற்றமாய் வளர்ந்து நமது இடத்தைப் பிடித்து கொள்ளும்.

சுனாமி வந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடந்த நிலையில், பழையபடி கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் இயங்க ஆரம்பித்துவிட்ட காரணத்தால் மீண்டும் சென்னை மாநகரம் வாகன நெரிசலில் தத்தளித்துக் கொண்டிருந்தது. என்ன நடந்தாலும் மக்கள் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவே செய்கின்றனர்.

மணி இரவு எட்டு. தெரு விளக்குகள் சென்னை சாலைகளை ஒளியூட்ட, அந்தக் கடுமையான வாகன நெரிசலுக்குள் ஊர்ந்து நகர்ந்தபடி சென்று  கொண்டிருந்தது அந்த மகிழுந்து!

அதனை இயக்கிக் கொண்டிருந்த சத்யாவின் முகத்தில் அத்தனை எரிச்சல். சலிப்போடு அவன் அருகாமையில் அமர்ந்திருந்த ஷெர்லியின் புறம் திரும்ப, அவள் எந்தவித உணர்சிகளுமற்று ஜன்னலின் புறம் திரும்பி வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள்.

கடப்பாக்கத்திலிருந்து புறப்பட்டு இத்தனை மணி நேரத்தில் இன்னும் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை. எழுதிய ஓவியம் போன்றிருந்த அவள் இதழ்கள் மௌன கோலம் பூண்டிருந்தன. கூர்ந்து பார்த்த போதுதான் அவள் கண்களில் தாரைத் தாரையாகக் கண்ணீர் வழிந்திருந்தது தெரிந்தது.

“ஷெர்லி” என்று சத்யா பதறியபடி அழைக்க, அவள் திரும்பி கூட பார்க்கவில்லை. அவள் கவனம் அங்கில்லை. பிரபாவைப் பற்றிய சிந்தனையில் அவதியுற்று கொண்டிருக்கிறாள் என்றளவு புரிந்தது.

இருப்பினும் பிரபாவை எண்ணி அவள் இந்தளவு உடைந்து போயிருப்பது அவனுக்கு சற்றே வியப்பாக இருந்தது. இருவரும் சந்தித்து பழகி முழுதாக இரண்டு மூன்று நாட்கள் கூட இருக்குமா என்பது சந்தேகம்தான்.

அதுவும் கடந்த மூன்று வாரங்களில் யாரும் எதிர்ப்பாராத நிகழ்வுகள் பல நடந்தேறிவிட்டன. முன்கூட்டியே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாதால் பெரிதாக உயிர் சேதம் இருக்கவில்லை. ஆனால் பாதிப்புகளும் பொருட்சேதங்களும் அபரிமிதமானதாக இருந்தன. இயற்கை மீண்டும் தனது அபாரசக்தியை நிருபித்துக் காட்டிவிட்டது. 

மீனவர்கள் பலரும் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து கடும் துயரத்திற்குள்ளாகினர். தங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கெல்லாம் நஷ்டஈடு வேண்டுமென்ற அவர்களின் நியாயமான கோரிக்கையை இன்னும் அரசாங்கம் பரிசீலனை செய்து கொண்டிருந்தது.

மத்திய அரசாங்கமோ ஏதோ பெயருக்கென்று ஒரு இழப்பீட்டு தொகையை அறிவித்துவிட்டு, மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல்,

நிலவுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்து ராக்கெட் அனுப்புவதிலும்,

ஏதாவதொரு அயல்நாட்டு நிறுவனத்துடன் கைக்கோர்த்து இன்னும் எங்கெல்லாம் அணுமின் நிலையம் திறக்கலாம் என்று விவாதிப்பதிலும்,

முக்கியமாக விவசாய பூமியைக் குடைந்து மீத்தேன் வாயு எடுக்கும் பணியிலும் மும்முரமாகியிருந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?

அரசாங்கம் என்பது மக்களுக்காக என்ற நிலை மாறி போய் கார்பரேட் நிறுவனங்களுக்காக என்றாகிப் போன பின் குடியாட்சி என்ற வார்த்தையே அபத்தம்தான்.

*****

ஷெர்லியும் சத்யாவும் வந்து கொண்டிருந்த கார் மீனம்பாக்கம் சென்னை விமான நிலையத்தை அடைய, அதன் வெளிவாயில் அந்த இருளிலும் ஜகஜ்ஜோதியாக மின்னியது.

சத்யா அங்கிருந்த வாகன நிறுத்தத்தில் தன் காரை நிறுத்திவிட்டு, “ஷெர்லி” என்று அழைத்தான்.

அவள் தான் வந்து சேர்ந்ததை கூட உணராமல் சிலையாகச் சமைந்திருந்தாள். “ஷெர்லி” என்று மீண்டும் அவன் அவள் தோளைத் தொட, அவள் விழிப்புற்று தன் கண்களில் இருந்த கண்ணீர் தடத்தை அவசரமாக அழித்து கொண்டிருந்தாள். இருப்பினும் பிரபாவின் நினைவுகளால் கொந்தளித்திருந்த தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வருவது அவளுக்கு மிகவும் சிரமமாகயிருந்தது.

“ஷெர்லி!” என்று சத்யா அவளிடம் பேசி சமாதானம் செய்ய முயல, அவள் அவன் சொல்ல வருவது எதையும் கேட்க விரும்பாமல் வேகமாக காரிலிருந்து இறங்கிவிட்டாள்.

சத்யா பிரபாவைப் பற்றி ஏதாவது பேசி விட்டால் உடைந்து விடுவோமோ என்ற அச்சம் அவளை ஆட்கொண்டது. அதனாலேயே அவள் அவனிடம் பேச கூட மறுத்தாள்.

பின் அவள் காரின் பின்புறமிருந்த தன் பெட்டியினை இறக்கிப் பிடியை உயர்த்தி பிடித்துக் கொண்டு, பேகை தம் தோள்களில் மாட்டிக் கொண்டாள்.

“ஷெர்லி! நானும் உன் கூட உள்ள வரேன்… பெட்டியை என்கிட்ட கொடு” என்று சத்யா கேட்க,

“நோ தேங்க்ஸ்… நான் பார்த்துக்கிறேன் சத்யா… அல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சு… நீ கிளம்பு” என்றாள்.

“இல்ல ஷெர்லி” என்றவன் பேச வர,

அவனைக் கையமர்த்திவிட்டு, “ப்ளீஸ் சத்யா… நீ கிளம்பு… நான் போயிக்கிறேன்” என்று திரும்பி நடந்தவள் ஏதோ நினைவு வந்தவளாக அவன் புறம் திரும்பி,

“மறக்காம உங்க பேமிலி மெம்பர்ஸ் எல்லோரையும் கூட்டிட்கிட்டு நீ ஒருநாள் கேலிபோர்னியா வரணும் உங்களை எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ண போறேன்… முக்கியமா ஹரியை” என்றவள் மேலே பேசாமல் நிறுத்தி கொள்ள சத்யாவிற்கு அவள் வலி நன்றாகவே புரிந்தது.

பிரபா என்ற பெயரை மட்டும் அவள் உச்சரிக்கவில்லை. ஆனால் அவள் எண்ணமெல்லாம் அவன் மட்டுமே நிறைந்திருந்தான். அதற்கு மேலாக அவள் அங்கே நிற்காமல் சத்யாவின் கண்களை விட்டு மறைந்துவிட்டாள்.

உடைபெடுக்கயிருந்த தன் உணர்வுகளை அவள் கட்டுக்குள் கொண்டுவர ரொம்பவும் பிரயாத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள். தன்னுடைய பரிதவிப்பை யாரிடமும் காட்டிக் கொள்ள அவள் விழையவில்லை.

விமான நிலையத்திற்குள் நுழைந்தவள் தன் பெட்டியை சோதனைக்கு உட்படுத்திவிட்டு அயல் நாட்டு பயணிகளுக்கான இம்மிகிரேஷேன் கவுண்டர் முன்பு வரிசையில் காத்திருந்தாள்.

அதேநேரம் தன் பேகிலிருந்து பாஸ்போர்ட் போன்ற சில முக்கிய ஆவணங்களைக் கைகளில் எடுக்கும் போது அவள் தாத்தா கிறிஸ்டோபரின் டிசேஸ்டர் ஃபைல் அவள் பார்வையில் விழுந்தது.

அந்த நொடி பிரபா அதனைப் படித்தது அவள் நினைவுக்கு வர, அப்படி என்னதான் அதிலிருக்கிறது என்ற யோசனை எழுந்தது.

வரிசையில் முன்னே வந்துவிட்ட போதும் அவள் கவனம் அங்கே இல்லாததை உணர்ந்த அந்த விமான ஊழியர், “எக்ஸ்க்யுஸ் மீ… யூர் பாஸ்போர்ட் ப்ளீஸ்” என்று கேட்கவுமே அவள் சுயநினைவு பெற்று அதனைக் கொடுத்து தன் சோதனைகள் முழுவதையும் முடித்துக் கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அவள் செல்ல வேண்டிய விமானத்திற்கான அழைப்பு வர நிறைய கால அவகாசம் இருப்பதை அங்கே வைக்கப்பட்டிருந்த ராட்சத திரைகளின் அறிவிப்புகள் மூலமாக தெரிந்து கொண்டவள், அப்படியே சாய்வாக அமர்ந்து கொண்டாள்.

எதை அவள் தவிர்க்கவும் மறக்கவும் அவசரமாகத் தப்பித்துக் கொண்டு வந்தாலோ, அது அவளுக்கு சாத்தியப்படவில்லை. அவள் நினைப்பெல்லாம் அவன் மட்டுமாகவே இருந்தான்.

‘பிரபஞ்சன்’

இனி ஒருபோதும் அவன் இயல்பு நிலைக்கு திரும்பவே மாட்டான் என்று தெரிந்த மறுகணமே அவசர அவசரமாக தான் செல்வதற்கு வேண்டிய விமான பயணச்சீட்டை ஏற்பாடு செய்து அங்கிருந்து புறபட்டுவிடும் முடிவை எடுத்தாள்.

அவள் தவிப்பை ஹரியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஷெர்லிக்கு ஹரியை அப்படி ஒரு நிலையில் தனியே தவிக்க விட்டு செல்வது குற்றவுணர்வாக இருந்த போதும் பிரபாவின் மரணத்தை எதிர்கொள்ளுமளவுக்கு அவளுக்கு துணிச்சல் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

அதனாலேயே அவள் அப்படி ஒரு முடிவை எடுத்தாள்.

குணபாலன் மூலமாக பிரபாவின் செயலின் ஆழத்தை விளங்கி கொண்ட ஹரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சுனாமி வந்து இரண்டு நாட்கள் கழிந்தது…

இரவு, பகல், வெயில், குளிர் என்று எந்தவொரு புறமாற்றங்களையும் பிரபாவின் தேகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அங்கிருந்த மீனவ மக்கள்தான் அவனுக்கு அரணாக நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவனை யாரும் நெருங்கவில்லை.

ஹரி பொறுமையிழந்து பிரபாவைக் கோபமாக உலுக்கி, “ஏன்டா இப்படி பண்ற? எழுந்திரு டா” என்று ஆவேசமாக கத்திவிட, அப்போது பிரபா உடலிலிருந்த உஷ்ணம் ஓரளவு தணிந்திருந்ததை உணர்ந்தார்.

பிரபா விழித்துக் கொள்ளவில்லை. அவர் உலுக்கியதில் அவன் அப்படியே மணலின் மீது சரிந்துவிட்டான். அங்கிருந்த அனைவரும் பதறியடித்து அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைச் சென்றனர்.

ஆனால் அதனால் எந்த உபயோகமும் இல்லையென்பது ஹரிக்கு நன்றாகத் தெரியும். பிரபஞ்சனின் நிலையில் மனதால் ரொம்பவும் காயப்பட்ட ஷெர்லியோ அவன் அனுமதிக்கப்பட்ட அறைக்கு எதிரே முகத்தை மூடி அழுது கொண்டிருந்தாள்.

பிரபாவின் உடல்நிலையைச் சோதித்த மருத்துவர்களுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. அவன் தேகத்தில் எந்தக் குறைப்பாடோ பிரச்சனையோ இருக்கவில்லை. இன்னும் கேட்டால் அவன் ரொம்பவும் ஆரோக்கியமாக இருப்பதாகவே அவர்களின் டெஸ்ட் ரிப்போர்ட்கள் அனைத்தும் தெரிவித்தன.

ஆனால் ஒரு மனிதனின் தேகத்திலுள்ள இயல்பான உஷ்ணத்தையும் விட அவன் தேக உஷ்ணம் அதிகமாக இருப்பதை அறிந்தவர்களுக்கு அதன் காரணம் புரியவில்லை. அந்த அசாதரணமான நிலையை நம்ப முடியாமல் மருத்துவர்கள் கிட்டத்தட்ட அரண்டு மிரண்டு போயிருந்தனர்.

அதைவிடவும் பெரிய ஆச்சர்யம் அவன் காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழ்வது. இரண்டு நாட்களாக வேறு எந்த ஆகாரமும் உட்கொள்ளாமல் அவன் உடலின் உறுப்புகள் சீராக செயல்பட்டு கொண்டிருந்தது. அதேநேரம் அவனை விழிக்க வைக்கும் அவர்கள் முயற்சிகள் யாவுமே தோல்வியிலேயே முடிந்தது.

அவன் சுயநினைவின்றி படுத்திருப்பது போல தெரிந்தாலும் அவன் இரு கைகளிலிருந்த விரல்கள் காட்டிக் கொண்டிருக்கும் ‘சின்’ முத்திரையை யாராலும் பிரிக்க முடியவில்லை.

இயல்பாக ஏதேனும் புதுப்புது நோய்களின் பெயர்களைக் கூறி நோயாளிகளையும் அவர்கள் உற்றார்களையும் குழப்பும் மருத்துவர்கள் கூட, பிரபா விஷயத்தில் அவர்களே முற்றிலுமாகக் குழம்பி நின்றனர்.

 ஹரி அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட முடிவெடுத்தார். ஷெர்லிக்கோ ஹரியின் எண்ணம் புரியவில்லை.

“பிரபாவுக்கு ட்ரீட்மெண்ட் பண்ண வேண்டாமா?” என்று அவள் கேட்க,

“எந்த ட்ரீட்மெண்ட்டும் அவனைக் குணப்படுத்த முடியாது ஷெர்லி… அவனா முழிச்சிக்கணும்… ஆனா அதற்கு வாய்ப்பு ரொம்ப குறைவு” என்றார்.

“என்ன சொல்றீங்க ஹரி?” என்றவள் புரியாமல் கேட்க, குணபாலன் வீட்டில் அவர் தெரிந்து கொண்ட விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டார்.

‘ஆரூட சமாதி:

உலகில் இருக்கும் அனைத்துப் பொருட்களும் என்னிடம் இருந்தே உண்டாயிற்று, நான்தான் அனைத்து பொருட்களிலும் நிறைந்திருக்கிறேன் என்பதாக உணர்வதுடன், தானே பிரம்மம், தானே அனைத்திற்கும் ஆதாரமானவன் என்ற உயரிய நிலையில் இருந்து கொண்டு, நீயே பிரம்மமாய் இருக்கும் நிலையான சஞ்சார சமாதியில் எல்லாம் மாயை என்பதை தெளிந்த பின்னர் மேலான தேவதைகள் முதல் வேறு எவரும் உன் முன்னால் வந்து நின்றாலும் அவற்றை காற்றைப் போல் நினைத்து அவை அனைத்துமே உன்னிடம் இருந்து தோன்றியதே என்ற உண்மையை உணர்ந்து மலை போல அசைந்து கொடுக்காது நீயே பிரம்மம் என்ற நிலையில் இருத்தல் ஆருட சமாதி எனப்படும். இதுவே இறுதி முடிவான நிலையும் ஆகும் என்கிறார் கொங்கணவர்.’

அவளுக்கு ஹரி சொல்வது ஒன்றையுமே விளங்கி கொள்ள முடியவில்லை. அவளிடம் விளக்கிய ஹரி மேலும், ஆருட சமாதி நிலைக்கு செல்பவர்கள் 21ம் நாள் முழுமையாக ஜீவசமாதி அடைந்து விடுவார்கள் என்று சொன்னது பேரிடியாக அவளைத் தாக்கியது. அதேநேரம் ஹரி சொன்னது போலவே ஒவ்வொரு நாள் கடந்து போகும் போதும் வியக்கும் விதமாக அவன் உடலின் உஷ்ணம் தணிந்து கொண்டே வந்தது. ஆனால் அவன் விழித்து கொள்ளவுமில்லை. சுயநினைவு பெறவுமில்லை. முதல் நாள் எப்படி இருந்தானோ அப்படியேதான் இருந்தான்.

சரியாக நாளையோடு 21ம் நாள்… அவன் கரங்களைத் தொட்ட போது  அவன் உடலின் வெப்பம் மொத்தமாக தணிந்துவிட்டு லேசாக சில்லிட்டும் போயிருந்தது. அந்த கணம் அவளின் தேகத்தின் குருதி மொத்தமும் வடிந்துவிட்டார் போன்று தோன்றியது. நல்ல வேளையாக நாளை தான் இந்த நாட்டிலேயே இருக்க மாட்டோம் என்பதே அவள் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

நாம் மனதார நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப் பக்கத்திலிருந்து பார்க்கும் வலி நிறைந்த நிமிடங்கள் வேறொன்றும் இருக்க முடியாது. அதை போன்ற வேதனை நிரம்பிய ஒரு தருணத்தை அவள் ஏற்கனவே அனுபவித்தும் இருக்கிறாள். மீண்டும் அத்தகைய மோசமான சூழ்நிலையை அவள் எதிர்கொள்ள விரும்பவில்லை.

விமானத்திற்காக காத்திருந்த ஷெர்லி இந்த எண்ணங்களை மனதில் போட்டு உழன்று கொண்டிருந்த நிலையில் அவள் விழிகளில் மீண்டும் கண்ணீர் திரையிட்டது.

சுற்றிலும் மக்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு தன் கண்ணீரை கட்டுக்குள் கொண்டு வர முயன்றவள், பிரபஞ்சனைச் சுற்றி வரும் தன் சிந்தனைகளை திசை மாற்ற எண்ணி அவள் தோள் பையிலிருந்த ‘டிசேஸ்டர்’ பைலை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

அவள் அதனைப் படிக்க ஆரம்பித்த கணத்திலிருந்து அவளுக்கு பல எதிர்ப்பாராத அதிர்ச்சிகள். தன் தாத்தா இறுதியாக அவர் கைப்பட எழுதிய அந்தக் கடிதத்தைப் பார்த்து திகைத்துப் போனாள். பின் அவள் அறியாமலே அந்தப் பக்கங்கள் அவளை உள்ளிழுத்துக் கொண்டன. எங்கே இருக்கிறோம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று மொத்தமாக மறந்து தன் தாத்தாவின் வாழ்க்கைக்குள் பயணிக்க தொடங்கியிருந்தாள்.

***

டிசேஸ்டர்- தொடர்ச்சி

(கிறிஸ்டோபர்)- யாரோ என் முகத்தில் தண்ணீரை ஊற்றினர். பதறிப் போய் யாரென்று விழித்துப் பார்த்தேன். அது அவளேதான்!

நான் மயக்கத்திலிருந்தேன் என்று எண்ணி கொண்டு என் முகத்தில் தண்ணீர் தெளித்தால் போலும். அவள் இப்போது என் முகத்தருகே குனிந்து பார்த்தாள். மயில்தோகை போல் விரிந்த அவள் இமைகளினுள் கருவிழிகளில் நான் என்னையே பார்த்தேன்.

அவை அத்தனை அழகான கண்கள். இயற்கையின் மீதான என் காதலும் ரசனையும் அவள் அழகின் முன்னே பின்வாங்கி கொண்டிருந்தன. அவள் அத்தனை அழகு!

அதேநேரம் அவள் விழிகள் காட்டிய படபடப்பு உணர்வு, அவள் என்னிடம் ஏதோ சொல்ல விழைகிறாள் என்று தோன்றிற்று. நான் அவளிடம் என்னவென்று கேட்டேன்.

அவள் பதில் பேசவில்லை. மௌனமாகவே பார்த்திருந்தாள். ஒருவேளை என் மொழி அவளுக்குப் புரியவில்லை போலும்…

 பின் எப்படி அவளிடம் உரையாடி என் நிலைமையைப் பற்றி கேட்டறிந்து கொள்வது என்று குழம்பினேன்.

ஆனால் மொழி ஒரு தடையில்லை என்பதை அவள் அடுத்தடுத்து செய்த செயல்கள் உணர்த்தின. நான் கேட்ட கேள்வியை என் முகபாவனை வழியாக அவள் புரிந்து கொண்டாள். அதேநேரம் அவள் மொழி எனக்கு புரியாது என்பதையும் அவள் உணர்ந்து கொண்டிருந்தாள்.

நான் கேட்ட கேள்விக்கான பதிலை மிகவும் புதுவிதமாக சொன்னாள். இல்லை! இல்லை! மிகவும் பழைய விதமாக…

ஓடிச் சென்று ஒரு பெரிய இலையை எடுத்து வந்து என்னருகில் இருந்த அணைந்த கங்குகளிலிருந்த கரித்துண்டுகளை எடுத்து ஏதோ ஓவியம் எழுதினாள். அதாவது அவள் சொல்ல நினைத்த செய்தியைச் சித்திரம் வழியாகத் தெரிவிக்க முனைந்தாள்.

அந்த நொடி எனக்கு ஐரோப்பிய குகைகளின் சுவர்களில் நான் பார்த்த சித்திரங்கள் நினைவுக்கு வந்தன. ஆதி காலத்து மனிதன் பேசும் திறனைக் கண்டறிவதற்கு முன்னதாக தங்கள் மனவோட்டங்களை சித்திரங்கள் மூலமாகத்தான் பரிமாறிக் கொண்டான். சுமார் 30,000 ஆண்டுகளுக்கு மிகவும் தொன்மை வாய்ந்த வண்ணச் சித்திரங்கள் அவையெல்லாம். 

இப்படி பயணித்து கொண்டிருந்த என் சிந்தனையை அவள் காட்டிய ஓவியம் நிறுத்தி கடிவாளமிட்டது. அவள் வரைந்து காண்பித்தது ஓர் நீண்ட நெடிய பாம்பின் வரைப்படம்.

சட்டென்று அவள் என்னிடம் சொல்ல வந்த செய்தி புரிந்து போனது. அந்த மலை மேல் ஏறுவதற்கு முன்னதாக அந்த கிராம மக்கள் எச்சரிக்கை செய்தனர். அபூர்வ வகையான ராஜநாகங்கள் அந்த மலையின் மீது வாசம் செய்வதாகவும், அப்படி அந்த மலையின் மீது யாராவது ஏற முயன்றால் அவர்களை ராஜ நாகங்கள் தீண்டி மரணிக்க வைப்பது நிச்சயம் என்றனர்.

ஆனால் அந்த வார்த்தைகளை அலட்சியம் செய்துவிட்டுதான் நான் மலையேறினேன். இப்போது அந்த முடிவு எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பது புரிந்து போனது.

ராஜ நாகம் பற்றி நான் படித்த விஷயங்களை நினைவுப்படுத்தி பார்த்தேன். பாம்பினத்திலையே மிகவும் புத்தி சாதுர்யமானது ராஜநாகம். தன் இனத்தையே உணவாக உட்கொள்ளும் இந்த வகை நாக இனங்கள் நம்மை கடித்தால், உடனே அந்த விஷம் நேரடியாக நம் நரம்பு மண்டலத்தைத் தாக்கி பக்கவாதம் உண்டாக செய்யும்.

மெல்ல கண்பார்வைக் குன்றி இதயத்தின் ரத்த குழாய்கள் சிதைந்து கோமா நிலைக்குச் சென்றுவிட நேரிட்டு, இறுதியாக மூச்சுத்திணறல் உண்டாகி மரணம் ஏற்படும்.

ஆக நான் இனி உயிர் பிழைக்க சாத்தியமே இல்லை. எனக்கு அந்த நொடி என் மரணம் நிகழ போகும் கொடூர காட்சி கண்முன்னே தெரிந்துவிட்டன.

நான் மரணிக்க போகிறேன் என்று ஆழமாக நம்ப தொடங்கினேன். என் கண்களில் துளிர்விட்ட அவநம்பிக்கையை உணர்ந்த அந்தக் கூர்மையான விழிகள் எனக்கு ஆறுதலும் தைரியமும் உரைத்தன.

அந்த மரண தருவாயிலும் நான் ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டேன். மன எண்ணங்களை புரிந்து கொள்ள மொழிகள் தேவையில்லை. நம் உணர்வுகள் போதுமானது என்று.

அவள் அதோடு நின்றுவிடவில்லை. அவள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு வெள்ளை உலோகம் போன்ற ஒன்றை என் கைகளில் இறுக்கமாக கட்டிவிட்டு மீண்டும் தைரியம் சொல்லும் விதமாக ஒரு பார்வைப் பார்த்தாள்.

காந்த சக்திக் கொண்ட அந்தப் பார்வை மரணத்தையும் வென்று என் உயிரை மீட்டெடுத்தது என்று சொன்னால் அது மிகையில்லை.

You cannot copy content