You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 1

Quote

வாடி என் தமிழச்சி

1

வானில் சூரியன் உக்கிரமாய் தகித்திருக்கும் உச்சி வேளை…

அந்தப் பிரமாண்ட விளையாட்டு திடலில் அரங்கன் பள்ளியின் விளையாட்டுக் கொண்டாட்டம் வெகு விமர்சையாய் நடைபெற்று கொண்டிருநந்து. அந்தத் திடலே மனித தலைகளால் நிரம்பியபடிக் காட்சியளித்தது. மாணவர்கள் ஆசிரியர்கள் என எல்லோரும் வியர்வையால் குளித்திருந்தனர்.

அந்தக் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்களில் ஒரு சாரார் போட்டிகளில் ஆர்வமாய் பங்கேற்று தங்கள் திறமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்க, அவர்களை உற்சாகப்படுத்தியபடி கேலரியில் மற்றொரு கூட்டம் ஆராவாரித்துக் கொண்டிருந்தது.

அதுவும் ஓட்டப்பந்தயம் நிகழும் போது எழும் சத்தம் அங்கே ஓடுபவர்களின் வேகத்தையும் வெற்றியையும் கூட தீர்மானித்தது.

போட்டிகளையும் வெற்றிகளையும் அந்தப் பெரிய திடலில் ஓர் ஓரமாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஆசிரியர் மகேந்திரன் தன் கம்பீர குரலால் அறிவித்துக் கொண்டிருந்தார். அந்த இடத்திலுள்ளவர்களை அவரது தமிழ் உச்சரிப்பு வெகுவாக கவர்ந்தது.

அனைத்து போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்பட்ட சில நொடிகளில் வெற்றி கோப்பையை யார் தட்டிச் செல்வது என்ற பூசலால் அரங்கத்தில் பெரும் குழப்பமே உண்டானது. நேதாஜி டீமும் ஜான்சி ராணி டீமும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தன.

சமாதானம் செய்ய வேண்டிய ஆசிரியர்களும் கூட மாணவர்களுடன் இணைந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இறுதியாக அந்த விழாவின் தலைமை குழுவினர் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இரு அணிக்கும் ஓட்டபந்தயம் ஒன்று நடத்துவது என முடிவெடுத்தனர்.

இரு அணியிலிருந்தும் ஒருவர் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். நேதாஜி அணியின் தலைவன் ரகு முன்னே வந்து நிற்க, ஜான்சி ராணி அணியிலிருந்து யாருமே அவனை எதிர்த்து பங்கேற்கத் தயாராக இல்லை.

ரகுவின் வேகத்திற்கு ஈடுகொடுப்பது சற்றே அசாத்தியமான காரியம் என்று எல்லோருக்கும் தெரியும். இப்போழுது உண்மையில் பிரச்சனை சுலபமாக முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த நிலையில் ஜான்சி ராணி அணியிலிருந்து செந்தமிழ் போட்டியில் கலந்து கொள்கிறேன் என முன்வந்து நின்றாள்.

ஆணுக்கு நிகராய் பெண் என்பதைத் தாண்டி இருவருமே ஓட்டப்பந்தயத்தில் வல்லமை பொருந்தியவர்கள் என அந்தப் பள்ளிக்கே தெரியும். ஆணுடன் பெண் போட்டியிடுவதா என்ற சர்ச்சைகளை அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாற்றியமைத்தார். அவர்கள் இருவருமே சரிசமமான பலம் கொண்டவர்கள் என்று உரைத்து போட்டிக்கு சம்மதம் உரைக்க, இருவரும் போட்டிக்குத் தயாராக களத்தில் இறங்கினர்.

அவ்வளவுதான். அந்த திடலே பெரும் கூச்சலும் ஆரவாரமுமாக மாறியது.

ஆயிரத்து இருநூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அறிவிக்கப்பட்டது. எல்லோருமே அந்தப் போட்டி நடக்கும் களத்தையே ஆர்வமாய் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர்.

ரகு மற்றும் செந்தமிழ் இருவரின் பார்வையும் ஒரு சேர மோதிக் கொள்ள, அவர்கள் இருவருக்குமே வெற்றியை ஈட்டுவது மட்டுமே குறிக்கோளாய் இருந்தது.

அந்த திடலில் அமைக்கப்பட்ட நீள்வட்டப்பாதையை இருமுறை வலம் வந்து யார் முதலில் போட்டியை முடிக்கிறார்களோ அந்த அணிக்கு வெற்றிக் கோப்பை என்று தீர்மானிக்கப்பட்டது.

உடற்கல்வி ஆசிரயர் குரலை உயர்த்தி, "ஆன் யுவர் மார்க்... கெட் செட்... கோ" என்றார்.

இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணம் சமமான வேகத்துடன் முதல் சுற்றை முடித்தனர்.

இறுதி சுற்று… தங்களின் முழு முயற்சியோடு ரகுவும் தமிழும் வேகமெடுக்க, சரிசமமாய் ஓடும் அவர்களில் யார் வெற்றியைத் தட்டி செல்வார்களோ என்ற படபடப்பில் எல்லோரும் ஓட்டபந்தய வீதியையே கூர்ந்து கவனித்திருந்தனர்.

அதுவல்லவா போட்டி என்றளவுக்கு அந்த இடமே கைத்தட்டல் ஒலியில் அதிர்ந்து கொண்டிருந்தது.

"தமிழச்சி தமிழச்சி தமிழச்சி" என்று பல குரல்கள் ஓங்கி ஒலித்த அதே நேரத்தில் இன்னொரு கூட்டம், "ரகு ரகு ரகு" என்று ஆரவாரித்தன.

அந்தப் போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரிக்க அதிகரிக்க, கடைசி சில விநாடிகள்…

அந்த விளையாட்டு திடலே வெற்றியை யார் வீழ்த்துவார்கள் என்ற பெரும் ஆவலில் இருக்க...

தொப்பென்று படுக்கையின் மீதிருந்து கீழே விழுந்தாள் செந்தமிழ். அவளின் கனவு கலைந்தது.

பெரும்பாலும் கனவு என்றால் புதுவிதமான அல்லது அர்த்தமில்லாத காட்சிகள் வரும். ஏன்… சிலருக்கு நடக்கப் போகும் நிகழ்வுகள் கூட கனவாய் வரும். ஆனால் அவளுக்கு எப்போதும் நடந்து முடிந்த நிகழ்வுகள் அப்படியே நடந்தது போலவே கனவாய் தோன்றுவது வழக்கம்.

கனவின் பாதியிலோ அல்லது முடிவிலோ இப்படி படுக்கையில் இருந்து வீழ்வதும் கூட வழக்கமான ஒன்றுதான். அதனாலேயே அவள் கட்டிலிலிருந்து விழுந்தால் அடிபடாத வண்ணம் தரையிலும் மெத்தை விரிக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியோடு தலையை உலுக்கிக் கொண்டவள், ‘உனக்கு இதே வேலையா போச்சு' என்று தனக்குத்தானே கடிந்து கொண்டாள். தோள்களில் சரிந்த முடியை வாரி கட்டியபடி எழுந்து அமர்ந்தவள்,

'நேத்து அந்த நியூஸ் படிச்சதோட தாக்கம்... அதான் ரகு ஞாபகம் வந்திடுச்சு போல’ என்று எண்ணிவிட்டு மேஜை மீதிருந்த தன் கைப்பேசியை எடுத்து ரகுவிற்கு அழைக்க,

"ஏடி தமிழச்சி... என்னடி திடீர்னு என் ஞாபகம்?” என்றான் அவன் உற்சாகம் பொங்க!

"இல்லடா... ஒரு கனவு கண்டேன்" என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பாக, எதிர்புறத்தில் அவன் பயங்கர சத்தத்துடன் சிரிக்க,

"சிரிக்காதடா" என்றவள் கோபமாக அதட்டினாள். ஆனால் அவன் சற்றும் பொருட்படுத்தாமல் ஆரதீர சிரித்து முடித்த பின்னர்,

"அடி கிடி ஒண்ணும் படலயே... ஆம்புலன்ஸ் ஏதாச்சும் அனுப்பட்டுமா?" என்று நக்கல் தொனியில் கேட்டான்.

"அதெல்லாம் சேஃப்பா லேண்டாயிட்டேன்" என்றவள் சொன்னதும்

மீண்டும் சிரித்தவன், "ஒரு ஏழு எட்டு வருஷம் முன்னாடி நடந்தது... இன்னுமாடி உனக்கு அந்த கனவு வருது" என்றான்.

"பின்ன... கனவிலயும் வந்து நீ என்னை டார்ச்சர் செய்ற"

"கனவிலயும் நான்தானே வின் பண்ணிருப்பேன்" என்றவன் குரலில் கர்வம் தொனிக்க,

"அதுக்குள்ள நான்தான் முழிச்சிட்டேனே" என்றவள் அசட்டையாகக் கூறினாள்.

"முழிச்சிட்டேன்னு சொல்லாதே... விழுந்தேட்டேன்னு சொல்லு"

"ஆமாம்... விழுந்துட்டேன்... பட் நீ வின் பண்ணிட்டேன்னு மட்டும் சொல்லாதே... பிஃராடு... நீ எப்படி வின் பண்ணேன்னு எனக்குதானே தெரியும்"

"எப்படியோ... ஜெய்ச்சிட்டேன் இல்ல"

"நேர்மையில்லாத வெற்றி எப்பவுமே நிலைக்காது"

"அன்னைக்கும் இதானடி சொன்ன... என்னாச்சு... ஷீல்டை நேதாஜி டீம்தானே வாங்குச்சு" என்றான் கர்வத்தோடு.

அப்போது அந்த நாள் அவள் கண் முன்னே நிழலாடியது. அந்த நிகழ்வின் தாக்கம் இப்போதும் காயப்படுத்த அவள் மௌனமானாள்.

"என்ன தமிழ்? ஸைலன்ட்டாயிட்ட... ஃபீலிங்ஸா?"

"இப்ப வரைக்கும் நீ என்கிட்ட ஸாரி கேட்டியாடா" என்றவள் அழுத்தமாக கூறவும் அவளின் கோபத்தை உணர்ந்தவனாக,

"இட்ஸ் ஜஸ்ட் அ கேம்... நல்லா யோசிச்சு பாரு... நீ தோற்றாலும் நீ என்கிட்ட தைரியமா போட்டிப் போட்டதுக்காகப் பெருமையா பேசுவாங்க... அதுவே நான் தோற்றா... பொம்பள புள்ளகிட்ட போய் தோற்றிட்டியேன்னு அவமானப்படுத்துவாங்க" என்றவன் எகத்தாளமாகப் பேசினான்.

"தப்பை நியாயப்படுத்திற... சரி போகட்டும் ... போனா போகுதுன்னு உன்னை நான் மன்னிச்சு விட்டுட்டேன்" என்றவள் அதன் பின், "நாம பார்த்தே ரொம்ப நாள் ஆயிடுச்சில்ல" என்றாள்.

"நான் இப்போ ஒரு கேஸ் விஷயமா சென்னைக்கு வர்றேன்... அப்போ மீட் பண்ணுவோம்"

"கேஸ்னா அந்த ஆர்க்கியலாஜிஸ்ட் கொலை கேஸ்தானே?!" என்று அவள் கேட்கவும்,

“ம்ம்ம்… ஆமா… உனக்கு எப்படி அதை பத்தி?” என்றவன் பதிலுக்குக் கேட்ட நொடியில்,

“நியூஸ் பேப்பர்ல பார்த்தேன்… அதுவுமில்லாம எங்க டிபார்ட்மென்ட்… எனக்கு தெரியாம இருக்குமா? அவரோட டெத் எங்க துறையைச் சார்ந்த எல்லோருக்குமே பெரிய அதிர்ச்சிதான்” என்றவள் மேலும், “கேஸ்ல ஏதாச்சும் க்ளூ கிடைச்சுதா ரகு?” என்று ஆர்வமாக வினவினாள்.

"உம்ஹும்... ஒரு சின்ன க்ளூ கூட கிடைக்கல... இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிய மேட்டர் இருக்கும் போல... பெர்ஸன்ல் ரீஸன் மாதிரி எதுவும் தெரியல" என்றவன்,

"எனக்கு இப்போ கொஞ்சம் முக்கியமா கிளம்பனும்… நான் சென்னை வந்தப் பிறகு உன்னை வந்து மீட் பண்றேன்... இதைப் பத்தி அப்போ டீடைல்லா பேசுவோம்" என,

"ஓகே ரகு... வந்ததும் மறக்காம மெஸேஜ் பண்ணு" என்றாள் அவளும்.

"கண்டிப்பா" என்று அவன் கூற, பேசியின் இணைப்பைத் துண்டித்தவள்

மீண்டும் மேஜை மீதிருந்த செய்தித்தாளைப் புரட்டி மறுமுறை அந்தச் செய்தியைப் படித்தாள். பின் மெல்ல முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து அன்றைய நாளுக்காக ஆயத்தமானாள்.

செந்தமிழ் குளித்து முடித்து தலையைத் துவட்டிவிட்டு தன்னுடைய வழக்கமான பாணியில் பேண்ட் ஷர்ட்டை உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கச்சிதமாய் அணிந்து கொண்டாள்.

தோள்களில் சரிந்த கூந்தலைத் அழுத்தி வாரி இறுக்கமாகப் பின்னிக் கொண்டாள். உடை மேற்கத்திய ரீதியில் இருந்தாலும் அவள் தமிழ் கலாச்சாரத்தின் அக்மார்க் பெண் என்று அவளே சொன்னால் ஒழிய யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அவளின் தோற்றத்தின் அழகைத் தாண்டித் திமிரும் தைரியமுமே திண்ணமாய் அவளிடம் பிரதிபலிக்கும். அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காதவள் என்றாலும் அழகை ரசிப்பவர்களுக்குப் பிரமிப்பில் ஆழ்த்தும் தேவதை அம்சம்தான் அவள்.

செந்தமிழ் தோற்றத்தையும் அழகையும் வர்ணிக்கும் அதேநேரம் அவளின் படுக்கை அறை குறித்த விவரத்தையும் நாம் இங்கே பதிவு செய்தே ஆக வேண்டும். அந்த அறை இயல்பான தோரணையில் காட்சியளிக்கவில்லை.

முற்றிலுமாய் வித்தியாசமாகவும் அத்தனை விசாலமாகவும் ஒரு வீட்டின் முகப்பறை என்று சொல்லுமளவுக்கு இருந்தது அவளது அறை. அங்கே நிரம்பியிருந்த பழமையான பொருட்களும் நூல்களும் அது ஒரு அருங்காட்சியகமோ அல்லது நூலகமாகமோ எனச் சந்தேகம் கொள்ளச் செய்தது. மேலும் உயரமாக நின்றிருந்த மர கப்போர்ட்களில் அடுக்கியிருந்த நூல்கள் பலவும் தமிழ் சார்ந்த இலக்கியங்களும் வரலாறுகளுமாகவே இருந்தன.

அந்தப் புத்தக அலமாரியின் எதிர்புறம் சுவரே தெரியாதளவுக்கு கோயில் கல்வெட்டுகள் சிற்பங்கள் மற்றும் பழமையான பொருட்களின் புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. இவையல்லாது அந்த விந்தையான அறையில் மற்றொரு சிறப்பம்சமும் இருந்தது.

கூர்மையான விழிகளும் தலைப்பாகையும் மீசையும் மட்டுமென சுவரில் கருமை நிறத்தில் தீட்டப்பட்டிருந்தது கம்பீரத்தின் மொத்த உருவமான மகாகவி பாரதியின் திருவுருவம். அந்த முகத்தோற்றம் அந்த அறையின் கம்பீரத்தை பன்மடங்கு கூட்டியது என்று சொன்னால் அது மிகையில்லை. தமிழின் மீதான அவளின் அதீத காதலையும் மோகத்தையும் அந்த அறை அழுத்தமாய் பறை சாற்றியது.

தமிழ் தயாராகி அறையை விட்டு வெளியேற அவளின் அந்தப் பிரமாண்டமான வீடு ஆளரவமின்றி காட்சியளித்தது. அவள் அழைத்த பின்னரே வேலையாட்கள் ஒவ்வொருவராய் எட்டிப் பார்த்தனர்.

"ரூமை க்ளீன் பண்ணிட்டு... லாக் பண்ணிடுங்க" என்று சொல்லி சாவியை நீட்டினாள்.

தலையசைத்து ஆமோதித்த அந்த பணியாள் அவளிடம் மெல்ல, "ம்மா… நீங்க எழுந்ததும் உங்ககிட்ட பேசினும்னு ரொம்ப நேரமா ஐயா காத்திட்டிருக்காரு" என்றான்.

இதைக் கேட்டு அவளின் முகம் முற்றிலுமாய் வெறுப்பாய் மாறியது. அவள் சலிப்போடு முகத்தைச் சுருக்க, "தமிழ்" என்று அவளின் தந்தை விக்ரமவர்மனின் அழைப்பு கேட்டு விருப்பமின்றி கீழே சென்றாள்

முகப்பறை சோபாவில் வாட்டசாட்டமாய் அவள் தந்தை விக்ரமவர்மன அமர்ந்திருந்தார்.

"வா தமிழ் உட்காரு.. நான் உன்கிட்ட பேசணும்" என்றவர் சொல்ல,

"இல்லப்பா… சாரி… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு... அவசரமா போகணும்… நாம அப்புறம் பேசலாமா?" என்று நாசூக்காய் தவிர்த்துவிட்டு அவள் செல்ல எத்தனித்தாள்.

"தமிழ் நில்லு" என்று குரலை உயர்த்தியபடி எழுந்தவர்,

"நீ இப்படிக் பிடிக்கொடுக்காமலே நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்... மாப்பிள்ளை வீட்ல எப்ப வந்து பார்க்கிறதுன்னு நச்சரிச்சிட்டே இருக்காங்க" என,

"எனக்கு விருப்பமில்லைன்னு முன்னாடியே சொல்லிட்டேன்ல... திரும்ப திரும்ப இதே கேள்வியையே நீங்க கேட்டா என் பதில் மாறிடுமா என்ன?" என்றவள் கடுகடுத்தாள்.

அப்போது பின்னோடு வந்த ஒரு பெண்மனியின் குரல், "அதான் வேண்டாங்கிறளே அப்புறம் ஏன் அவளைத் தொல்லை பண்றீங்க" என்றது.

தமிழின் கண்கள் வியப்பில் அகல விரிந்தன. 'சித்தி ஏன் இன்னைக்கு நமக்கு சாதகமா பேசிறாங்க' என்று அவள் குழம்ப,

விக்ரமவர்மன் அவரின் இரண்டாவது மனைவி விஜயாவை நோக்கி, "நீ உள்ளே போ... தேவையில்லாம இதுல தலையிடாதே" என்று உரைத்துவிட்டு மீண்டும் மகள் மீது பாய்ந்தார்.

"உன் விருப்பமிருந்தாலும் இல்லன்னாலும் இந்த கல்யாணம் நடக்கதான் போகுது... நீயே பேசாம உன் மனசை மாத்திக்கிற வழியை பாரு" என,

"என் விருப்பமில்லாம எதையாச்சும் செஞ்சீங்க... அப்புறம் ஏடாகூடாமா நான் எதையாச்சும் பண்ணிடுவேன் பார்த்துக்கோங்க" என்று அவள் வீம்பாகக் கூறிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து அகன்றாள்.

அவருக்கோ தன்னுடைய இக்கட்டான நிலைமையை எப்படி அவளுக்குப் புரிய வைத்து, இந்தத் திருமணத்தை நடத்தி முடிக்கப் போகிறோம் என்று உள்ளம் தவிப்புற்றது.

விஜயா அப்போது அறைக்குள் இருந்த தன் மகன் ரவிவர்மனிடம் ஏதோ ஓதிக் கொண்டிருந்தாள்.

"அந்தத் திமிரு பிடிச்சவளே கல்யாணம் வேணாங்கறா... இவருக்கு என்னடா திடீர்னு பொண்ணு மேல ரொம்ப அக்கறையாம்... இந்த சம்பந்தத்தை நம்ம தேவிக்குப் பார்த்திருக்கலாம்னு நான் எத்தனை தடவை சொன்னேன்... அந்த மனுஷன் காதிலேயே வாங்கிக்கலயே... என்னதான் இருந்தாலும் நான் அவருக்கு இரண்டாந்தாரம்தானே" என்று அவர் வருத்தப்பட்டார்.

ரவி அப்போது தன் உடையைக் கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொண்டிருந்தான். அவனின் உடையும் தோற்றமும் அவனது ஆடம்பரமான குணத்தைப் பிரதிபலிக்க, சாவகாசமாய் அம்மாவின் இரு பக்கத் தோள்களைப் பிடித்தபடி,

"நீங்க ஏன் இவ்வளவு வருத்தப்படறீங்க... அதுவும் நான் இருக்கும்போது... மாப்பிள்ளை வீட்டில இருந்து இந்தக் கல்யாணத்தை அவங்களே வேணான்னு சொல்வாங்க... அதுவும் இந்த மாதிரி பொண்ணு வேண்டவே வேண்டான்னு சொல்வாங்க… பாருங்க" என்றான்.

"எப்படிறா?" என்று விஜயா வியப்பாக, அப்போது ரவி தன் தாயை சூட்சமமாய் பார்த்தப் பார்வையில் அவன் ஏற்கனவே திட்டத்தை சாமர்த்தியமாய் செயல்படுத்திவிட்டான் என்று தோன்றியது.

அப்போதுதான் விஜயாவின் மனதில் கனலென எரிந்து கொண்டிருந்த பொறாமைத் தீ லேசாய் அடங்கியது.

தமிழ் காரில் புறப்பட்ட சில நொடிகளில், அவளின் தாத்தா சிம்மவர்மனைப் பற்றிய நினைவுகள் அவளை அலைக்கழிக்க தொடங்கின. அவரின் மறைவு வார்த்தைகளால் அவளுக்கு விவரிக்க முடியாத பேரிழப்பு.

அந்த மரணமே அவளுக்குத் தனிமையின் கொடுமையைப் புரிய வைத்தது. பிறந்ததும் தாயின் மரணம், உடனடியாக அப்பாவின் இரண்டாவது திருமணம் என மோசமான சூழ்நிலைகளில் இருந்து அவளுக்குப் பக்கபலமாகவும் எல்லா உறவாகவும் துணை நின்றது அவளின் தாத்தா சிம்மவர்மன்தான்.

அவர், "தமிழச்சி" என்று செல்லமாய் அழைப்பதை மனதிற்குள் எண்ணிப் பார்த்து கொள்ள, இப்போது அந்த ஞாபகங்கள் அவளுக்குள் வேதனையைப் புகுத்தி கண்கள் கலங்கச் செய்தது.

பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு, 'நான் உங்கள் தமிழச்சி பேசுகிறேன்' என்று சொன்னால் மட்டுமே போதும். எல்லோருமே வெற்றிக் கோப்பை யாருடையது என்பதைத் தீர்மானித்துவிடுவர். அதனாலேயே தமிழச்சி என்பது அவளின் பெயரையே மறக்கடித்து அவளின் தனி அடையாளமாய் மாறியிருந்தது.

சிம்மவர்மனின் தமிழ் பற்றுதான் அவளுக்குள்ளும் இப்போது மலையென வளர்ந்து நிற்கிறது. அவர் பழமையான ஓலைச்சுவடிகள் செப்பேடுகள் போன்றவற்றைச் சேகரித்து அவற்றினை எல்லோருக்கும் புரியும் வண்ணம் நூலாக வெளியிட்டவர்.

இராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும் சிம்மவர்மன் சொத்து, ஆடம்பரம் இதில் எல்லாம் நாட்டமில்லாதவர். தமிழின போராட்டம் போன்றவற்றில் முதலிடத்தில் நிற்கும் அவருக்கு மக்கள் செல்வாக்கும் அரசியல் பதவிகளும் தேடி வர, அவற்றை எல்லாம் துச்சமாக ஒதுக்கிவிட்டவர்.

ஆனால் செந்தமிழின் தந்தை விக்ரமவர்மன் அதை தன் வளர்ச்சிக்குச் சாதகமாக்கி அரிசியல் சாம்ராஜ்ஜியத்தில் புகுந்து அவருக்கென்று ஒரு பெயரை நிலைநாட்டிக் கொண்டார்.

இன்று அமைச்சர் பதவியிலிருந்து கொண்டு அரசியல் செல்வாக்கை சரியாய் பயன்படுத்திக் கொள்ளும் சூத்திரதாரி. அதுவும் தந்தையின் மரணத்திலும் அனுதாபத்தைச் சம்பாதித்து பெயரையும் புகழையும் அதிகரித்துக் கொண்டார்.

ஆனால் செந்தமிழிற்கு தந்தையின் சொத்து செல்வாக்கு அரசியல் பதவி என எதிலும் நாட்டமில்லை. அவளுடைய தாத்தா நடத்தி வந்த 'தமிழச்சி' என்ற பத்திரிக்கையை அவருக்குப் பிறகாய் அதேபோல ஏற்று நடத்துவதிலும் தொல்பொருள் மற்றும் கல்வெட்டியல் ஆராய்ச்சியில் மட்டுமே அவளின் ஆர்வம் மிகுந்திருந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நடந்த பல பூசல்களில் மனம் நொந்தே அவளின் தாத்தா மரணித்ததை இன்னும் அவளால் மறக்க இயலவில்லை.

அதற்குள் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தும் தந்தையின் மீது அவளுக்குள் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டது. மரணிக்கும் தருவாயில் அவளின் தாத்தா சிம்மவர்மன் சொன்னது இப்போதும் அழுத்தமாய் அவள் நினைவில் பதிந்திருந்தது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் நம்முடைய பாரம்பரிய அரண்மனையை விற்கக் கூடாதென்றும், அதேசமயத்தில் உன் தந்தைக் காட்டும் மாப்பிள்ளையை மட்டும் நீ திருமணம் செய்து கொள்ளவே கூடாதென்றும் சொல்லி இருந்தார்.

மணம்புரிபவன் உன் மனதிற்கு விருப்பமானவனாக இருக்க வேண்டுமென அவர் அத்தனைக் கண்டிப்பாய் உரைத்திருக்க, இப்போது தன் தந்தையின் எண்ணத்தை எப்படி முறியடிப்பது என்பதே அவளின் ஒரே குறிக்கோளாய் இருந்தது.

அப்போது அவளின் சிந்தனையைத் தடை செய்யும் விதமாய் வந்த கைப்பேசி அழைப்பை ஏற்றவளுக்கு கிடைத்த தகவல் கோபத்தை ஏற்படுத்தக் காரை உடனே அசிஸ்டென்ட் கமிஷன்ர் அலுவலகம் நோக்கித் திருப்பினாள்.

devi.sasikumar and shiyamala.sothy have reacted to this post.
devi.sasikumarshiyamala.sothy

You cannot copy content