You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 42

Quote

42

உள்ளத்தின் உணர்வுகள் பொங்கிக் கொண்டிருக்கையில் உதடுகள் பேச வார்த்தைகளின்றி ஊமையாய் கிடந்தன. ஆதலால் அந்த இடம் முழுக்க அலையோசையின் சத்தம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.

வீரேந்திரனின் விழிகள் கடலலைகளோடு சங்கமித்திருந்தாலும் அவன் மனம் அவளிடமே சங்கமிக்க தவித்திருந்தது. ஆனால் அவள் முகத்தைப் பார்க்க இயலாத குற்றவுணர்வு அவனுக்கு.

அவளுக்கு இக்கட்டான சூழ்நிலை வந்த போது அவள் தன் உயிரை கூட பொருட்படுத்தாமல் அரண்மனையையும் காப்பாற்றி தன்னையும் காப்பாற்றயிருக்கிறாள். ஆனால் தானோ காதலா கடமையா என்ற கேள்வியில், காதலைத் துச்சமாய் உதறிவிட்டுக் கடமையின் பக்கம் நின்றதை எண்ணும் போதே அவன் உள்ளம் வேதனையில் துடித்தது.

 

அவனின் செயலை நியாயப்படுத்த முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. மாறாய் அவளிடம் மன்னிப்பு கேட்பது மட்டுமே தீர்வு என்று எண்ணியவன் தயங்காமல் அதைச் செய்ய துணிந்தான்.

அவள் புறம் பார்வையைத் திருப்பியவனுக்கு அவள் உடைந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்க்க, இதயம் கனத்து போனது. தன்னை அவள் மன்னிக்க கூடுமா? என்று சந்தேகித்தபடியே அவளை நெருங்கி அமர்ந்தான்.

அவள் அந்தக் கணமே தாமதிக்காமல் எழுந்து நின்று கொள்ள, அவளை விலகிச் செல்லவிடாமல் அவள் கரத்தைப் பற்றி நிறுத்தியவன்,

"ஏ தமிழச்சி, சாரிடி... நான் உனக்கு தெரியாம அப்படி செஞ்சிருக்க கூடாதுதான்... உன்னை ஹார்ட் பண்ணனும்னு செய்யல... அந்த நேரத்தில... ஒரு சந்தேகத்திலதான் உன் கைரேகையை செக் பண்ணலாம்னு" என்று அவன் தன் பக்க நியாயத்தை சொல்ல,

"சரி... உங்க சந்தேகம் தெளிவாயிடுச்சா?" என்று கேட்டாள் அவள்.

அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? அவள் கரத்தை விடுவித்துவிட்டு அவன் மௌனமாய் அமர்ந்து விட்டான்.

"பதில் சொல்லுங்க வீர்" என்று திரும்பவும் அவள் அதே கேள்வியைக் கேட்கவும், அவனுக்குக் கோபமேறியது.

"என்னடி பதில் சொல்ல சொல்ற? உன் கைரேகை அந்தக் கத்தியில இருந்த கைரேகையோட மேட்சாயிடுச்சு" என்றவன் பதில் சொல்ல,

அவள் சற்றும் பதறாமல், "அப்புறம் ஏன் என்னை நீங்க இன்னும் அரெஸ்ட் பண்ணல?!" என்று கேட்டாள்.

"இப்ப என்ன உன் பிரச்சனை? நான் உன் கைரேகை செக் பண்ணதா... இல்ல அரெஸ்ட் பண்ணாம இருக்கிறதா" என்றவன் அடிக்குரலில் சீற,

"கைரேகை மேட்சான பிறகும் என்னை நீங்க அரெஸ்ட் பண்ணாம இருக்கிறது" என்றவள் வார்த்தை தீர்க்கமாய் வெளிவந்தது.

அவன் புருவங்கள் முடிச்சிட்டுக் கொள்ள, குழப்பமாய் பார்த்தவனை, "நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல வீர்" என்றாள்.

"எப்படி பண்ணிட்டேன்?!" என்றவன் புரியாமல் கேட்க,

"உங்களைப் பத்தி இந்த உலகம் என்ன பேசும்... கொஞ்சமாவது யோசிச்சீங்களா?!" என்றவள் பார்வையில் ஒரு விதமான நக்கல் தெரிந்தது.

அவன் அவள் சொல்வது விளங்காமல்,"என்ன பேசும்?" என்று கேள்வியோடுப் பார்க்க, "கடமை கண்ணியம் கட்டுபாடுன்னு இருந்த ஏசிபி இராஜவீரேந்திரபூபதியா இப்படின்னு பேசாதா?!" என்று கேலியாக உரைக்க, அவன் எரிச்சலடைந்தான்.

அவள் மேலும், "காதலுக்காக கடமையை விட்டு தந்திட்டீங்களே வீர்... இது கொஞ்சம் கூட நியாயமே இல்லை" என்றாள். அப்போது அவள் முகத்தில் எட்டிப் பார்த்த புன்னகை அவன் மனதைக் கொஞ்சம் நிம்மதியடைய செய்தது.

"அப்போ நீ கோபமா இல்லையா?" என்றவன் கேட்க,

"இருந்துச்சு... ஆனா உங்க இடத்துல இருந்து யோசிக்கும் போது நீங்க செஞ்சது தப்பில்லை... அதேநேரம் நீங்க உங்க கடமை கண்ணியம் கட்டுபாடுல இருந்து கொஞ்சம் தவறிட்டீங்களோன்னு கூடத் தோனுச்சு" எனவும் அவன் சட்டென்று மறுத்து,

"நான் ஒன்னும் என் கடமையை விட்டுத் தரல... லாஜிக்படி யோசிச்சா... நீ கொலைப் பண்ணிருக்க வாய்ப்பில்லைனு ஒரு மாதிரி கெஸ் பண்ணேன்" என்றான்.

"அதானே பார்த்தேன்" என்று அவனைக் கடுப்பாகப் பார்த்தவள்,

"ஆனாலும் ஒரு வகையில் கரெக்ட்டாதான் கெஸ் பண்ணி இருக்கீங்க... நான் அந்த தர்மாவைக் கொலை பண்ணல... ஆனா அதே டைம் அவன் என் கையால செத்து இருக்க வேண்டியவன்தான்... ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சுட்டான்" என்றாள்.

"கொலைப் பண்ணி இருப்பியா?" என்றவன் விழிகள் அந்த நொடி கோபத்தை உதிர்த்த அதேநேரம், "உன்னால நான் எவ்வளவு டென்ஷன் ஆனேன்னு தெரியுமாடி" என்று சீற்றத்துடன் அவளை நெருங்கி வரவும்,

"வேண்டாம் வீர்... என்ன கேட்கிறதா இருந்தாலும் அங்க நின்னே கேளுங்க... நான் பதில் சொல்றேன்" என்றாள்.

"ஏன்?"

"என்னால உங்க அனோகோன்டாகிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்த்தைபட முடியாது... ஸோ அந்த பார்டரை தாண்டி நானும் வர மாட்டேன்... நீங்களும் வரக்கூடாது... பேச்சு பேச்சாவே இருக்கட்டும்" என்று அச்சப் பார்வையோடு குறும்புத்தனம் இழையோட உரைத்தவளை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

அவளை இழுத்து அணைக்க கைகள் பரபரத்தாலும் அந்த எண்ணத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன் தன் கைகளைக் கட்டியபடி,

"சரி கிட்ட வரல... இப்ப சொல்லு... உனக்கும் அந்தத் தர்மாவுக்கும் என்ன பிரச்சனை?" என்று விசாரிக்க, நடந்தவற்றை அவள் அவனுக்கு விளக்க ஆரம்பித்தாள்.

"அவன் ஒரு சரியான கிரிம்னல் வீர். நம்ம ஊரோட பழமையான சிலைகள் எல்லாம் வெளிநாட்டுக்குக் கடத்திட்டிருக்கான்... இந்த மாதிரி எத்தனையோ சிலைகள் கடத்தப்பட்டிருக்கு... காணாம போயிருக்குன்னு தகவல் கிடைச்சது...

ஸோ அதை பத்தி நானும் ஆதியும் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணும் போது இது ஒரு பெரிய கடத்தல் நெட்வொர்க்கோட வேலைன்னும் அதுக்கு கைக்கூலியா இருக்கிறது இந்த தர்மான்னு தெரிய வந்தது... இதை பத்தி காஞ்சிபுரத்தில இருக்கிற கமிஷ்னர்கிட்ட கம்பிளைன்ட் கொடுத்தோம்" என்று சொல்லவும்,

"கம்பிளைன்ட் கொடுத்தீங்களா?!" என்று அவன் வியப்பாகக் கேட்டான்.

"ஆமாம்... கொடுத்தோம்... பட் நாங்க கஷ்டப்பட்டுச் சேகரிச்ச எல்லா தகவலையும் அந்த தர்மாகிட்டயே கொடுத்திட்டான் அந்த கமிஷ்னர்"

"வாட்?!" அவன் அதிர,

"உங்க டிப்பார்ட்மெண்ட்ல இந்த மாதிரியான ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க" என்றாள் அவள். வீரேந்திரனால் அவளின் வார்த்தையை முழுமையாய் ஏற்க முடியவில்லை.

"எல்லா துறையிலும் சில தப்பானவங்க இருக்கதான் செய்வாங்க தமிழ்" என்று விட்டுக் கொடுக்காமல் உரைத்தவனைக் கோபமாய் முறைத்தவள்,

"இருப்பாங்கதான்... ஆனா அதெல்லாம் வேற... கிரிமினல்ஸை பிடிக்க வேண்டிய போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல இருக்கிறவங்களே கிரிமினல்ஸா இருந்தா?!" என்றாள்.

இதனைக் கேட்டு அவன் கோபம் எல்லை கடந்துவிட, "நிறுத்துடி" என்று அவன் கத்த அந்த இடமே அதிர்ந்தது.

"சொல்ல வந்த மேட்டரை மட்டும் சொல்லு... எங்க டிப்பார்ட்மெண்ட் பத்தி தரைகுறைவா பேசுற வேலை வைச்சுக்காதே... அதுவும் நீ கண்டிப்பா பேசவே கூடாது" என்று அழுத்தமாகச் சொன்னவனைக் குழப்பமாகப் பார்த்தவள்,

"அதென்ன நான் பேசக் கூடாது?!" என்று வினவினாள்.

"ஏன்னா நான் உன் ஹஸ்பெண்ட்... நானுமே அதே டிப்பார்ட்மெண்ட்ல இருக்கேன்... அப்படி நீ தப்பா பேசுறது என்னைத் தாழ்த்திப் பேசுறதுக்கு சமம்... காட் இட்" என்றவன் கண்டிப்பான பார்வையோடு உரைக்க அவள் அமைதியானாள்.

அவனே நிதானித்து, "எனக்கு உன் வலி புரியாமல் இல்லை தமிழ்... ஆனா நீ கொஞ்சம் யோசிச்சு பாரு… எங்க டிப்பார்ட்மெண்ட்ல நிறைய பேர் இராத்திரி பகல் பார்க்காம நாள் கிழமைன்னு இல்லாம தன்னோட தனிப்பட்ட சந்தோஷங்களை எல்லாம் விட்டுட்டு வேலை செய்றாங்க... எத்தனையோ மோசமான கிரிமினல்ஸைப் பிடிக்க போய் உயிர் தியாகம் பண்ணி இருக்காங்க... ஒரு சிலருக்காக எல்லாரையும் பொத்தாம் பொதுவா அப்படி குற்றம் சாட்டக் கூடாது" என்றான்.

அவன் சொல்லும் வார்த்தையின் நியாயம் அவளுக்குப் புரிந்தது.

"இனிமே நான் அப்படி பேசமாட்டேன்" என்றாள் மெலிதான குரலில்.

"சரி அதை விடு... அப்புறம் என்னாச்சுன்னு சொல்லு"

"அப்புறம் என்ன? அந்த தர்மா எங்களைக் கூப்பிட்டு நிற்க வைச்சு எங்க கண்முன்னாடியே நாங்க அலைஞ்சு திரிஞ்சு கண்டுபிடிச்சுக் கொடுத்த எல்லா இன்ஃபார்மேஷன்ஸையும் ஒரே நொடியில எரிச்சுட்டான்... எந்தந்தக் கோயிலில் என்ன மாதிரியான சிலைகள் கடத்தப்பட்டுருந்துங்கிற மொத்த விவரமும் அதுலதான் இருந்துச்சு.

அதுக்கூட பரவாயில்ல அந்த தர்மா ரொம்ப தப்பு தப்பா பேசிட்டான்... அதுவும் என்னையும் ஆதியும் மரியாதை இல்லாம பேசி இரண்டு பேரையும் வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் பண்ணிடுவன்னு சொன்னதும் என்னால தாங்க முடியல... ரொம்ப கோபம் வந்துருச்சு... டைனிங் டேபிளில் மேல இருந்த கத்தியைப் பார்த்ததும் அதை எடுத்து அவனைக் குத்திடணும்னு தோனுச்சு" என்று அவள் சொல்லி முடிக்கும் போதே இடைபுகுந்து,

"உடனே மேடம் அந்தத் தர்மாவை குத்தப் போயிட்டீங்க" என்று கேட்டு விழிகளைச் சுருக்கினான்.

அவள் அழுத்தமாய் நிற்க, "எப்பவுமே நாம செய்ய போற காரியத்தோட விளைவு என்னன்னு நீ யோசிக்கவே மாட்டியா... இன்னைக்குக் கூட பாமைத் தூக்கிட்டு அஸால்ட்டா ஓடுற... என்னடி உனக்கு அப்படி ஒரு அசட்டு தைரியம்" என்று அவன் கோபமாகக் கேட்க, அவளின் சினமும் தூண்டப்பட்டது.

"ஏன் வீர்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க டிப்பார்ட்மெண்ட் பத்தி தப்பா பேசிட்டேன்னு உங்களுக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு... பொண்டாட்டின்னு கூட பார்க்காம என்கிட்ட அப்படியே முறைச்சுட்டு நின்னீங்க... அதே கோபம்தான் எனக்கும்... என் பெண்மையையும் என் நாட்டோட பாரம்பரியத்தையும் ஒருத்தன் விற்கிறேன்னு சொல்லுவான்... நான் கைக்கட்டி அவன் சொல்றதை எல்லாம் வேடிக்கைப் பார்த்திட்டுருக்கனும்... அப்படிதானே?!" என்றாள்.

இந்த விளக்கம் வீரேந்திரனுக்கும் குத்தலாய் இருந்தது. தானும் அவள் நிலைமையில் நின்றால் இப்படிதான் நடந்து கொண்டிருப்போம் என்று எண்ணி அமைதியானான்.

"சரி... இப்ப மாட்டிருக்குற அந்த உமேஷ் அந்தச் சிலைக் கடத்தல் நெட்வொர்க்கோட தலைவனா?!" என்றவள் தன் சந்தேகத்தைக் கேட்க,

"இல்ல... அவனும் அந்த நெட்வொர்க்ல ஒருத்தன்... அவ்வளவுதான்... வேற யாரோ போட்டுத்தர திட்டத்தை அவன் செயல்படுத்துறான்" என்றதும் தமிழ் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அந்த உமேஷிடம் தான் பொக்கிஷத்தின் ரகசியம் குறித்து சொன்னது அந்தக் கூட்டத்திற்குத் தெரிய வந்தால் திரும்பவும் வேறெதேனும் ஆபத்து நிகழ கூடுமோ என அவள் யோசித்திருக்க,

அவள் முகத்தில் படிந்திருந்த கவலை ரேகையைப் பார்த்து, "என்னாச்சு?!" என்று வினவினான்.

"இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு... அதை உங்ககிட்ட சொல்லணும்" என்று தயங்கியவளைக் கூர்ந்து நோக்கியவன்,

"என்ன விஷயம்?" என்று கேள்வி எழுப்ப அவள்,

"இங்கே வேணாம் வீர்... உள்ளே போய் பேசுவோமே" என்றாள்.

அவள் அந்தப் பொக்கிஷம் குறித்து பேசப் போகிறாளோ என்று சிந்தித்தபடி வர, இருவரும் அரண்மனைக்குள் நுழைந்தனர்.

ஆங்காங்கே சிறு சிறு இரவு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.

"யார் லைட்ஸ்லாம் போட்டிருப்பா?!" தமிழ் சந்தேகமாய் கேட்க,

"இங்கே வேலை செய்றவங்கதான்" என்றான்.

"அவங்களை எல்லாம் அந்தக் கடத்தல் கும்பல் அடிச்சு கட்டிப் போட்டு வைச்சிருந்தாங்க"

"அவங்க எல்லோரையும் காப்பாத்தியாச்சு... யாருக்கும் ஒன்னும் இல்ல" என்று சொல்லும் போதே தமிழ் தன் அரண்மனையைச் சுற்றி பார்வையைப் படரவிட்டாள்.

அப்போது அங்கே வந்த வேலையாள் பணிவுடன், "வாங்க ஐயா வாங்க அம்மா" என்று அவர்களை வரவேற்றவன்,

"இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வைச்சிருக்கேன்" என்று சொல்ல அவன் வேண்டாமென தலையசைத்தான்.

"ஐயா நீங்களும் அம்மாவும் கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே அவசரமா கிளம்பி போயிட்டீங்க... இன்னைக்கு நீங்க வந்த நேரம் என்னென்னவோ அசாம்பாவிதம் நடந்து போச்சு... நாங்க எல்லோரும் ரொம்ப பயந்துட்டோம்... நீங்களும் அம்மாவும் இல்லன்னா" என்று தன் வருத்தத்தை அவன் சொல்லிக் கொண்டிருக்க வீரேந்திரன் இடைமறித்து,

"அதெல்லாம் பத்தி விடுங்க... அதான் எதுவும் தப்பா நடக்கலேயே" என்றான்.

அவன் மேலும், "ஆனா... பெரிய ஐயா அரண்மனையை இடிச்சுற போறதா பேசிட்டிருந்தாரே... அது உண்மையா?!" என்று சந்தேகமான பார்வையோடு கேட்க, அந்தக் கேள்வியில் தமிழின் முகம் வாட்டமுற்றது.

வீரேந்திரனும் அந்த நொடி தன் மனைவியின் மாறிய முகபாவத்தைக் கவனித்தவன் அந்தப் பணியாளனிடம், "அப்படி எல்லாம் ஒன்னும் நடக்காது... நீங்க போங்க" என்று அவனை அனுப்பி வைத்தான்.

அதற்குள்ளாக தமிழ் அங்கிருந்து சென்று தன்னறைக்குள் நுழைய, அவள் சோர்ந்து படுக்கையில் அமர்ந்தபடி தலைகவிழ்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் இத்தனை நேரமும் குடிக்கொண்டிருந்த உறுதியும் தைரியமும் தொய்வடைந்திருந்தது.

அவளின் மனவேதனை அவனுக்குப் புரியாமல் இல்லை. தன் தந்தை பேசிய வார்த்தைகளால் அவள் ரொம்பவும் காயப்பட்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து அவள் அருகில் சென்று தலையை வருடிக் கொடுத்தான்.

அவனை நிமிர்ந்து நோக்கியவள், "இன்னைக்கு இந்த அரண்மனையை காப்பாத்தியாச்சு... ஆனா எப்பவுமே அப்படி முடியுமான்னு தெரியல" என்று சொல்லும் போதே அவள் உதடுகள் துடித்தது.

அவளின் பயத்தின் காரணத்தை அவள் சொல்லாவிட்டாலும் அவன் நன்கு உணர்ந்திருந்தான். வீரேந்திரன் அவள் அருகில் அமர்ந்து, "நீ பயப்படவே வேண்டாம்... யாரும் இந்த அரண்மனை ஒன்னும் பண்ண முடியாது... நான் இருக்கேன் உன் கூட... சரியா?!" என்று அழுத்தமாய் அவன் கூறவும்,

அவன் தோள் மீது ஆதரவாய் சாய்ந்து கொண்டவளுக்கு அவள் தாத்தா இதே அரண்மனையில் நின்றபடி அவளுக்கு வரப் போகும் கணவனைக் குறித்து சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

'என் தமிழச்சியைக் கட்டிக்க ராஜா மாதிரி ஒருத்தன் வருவான். அவன் இந்த தாத்தாவை போல உன்னை தங்கமாய் வைச்சு தாங்குவான் பாரு' என்று அவர் சொன்னதை எண்ணியவள்,

'நீங்க உண்மையிலேயே தீர்க்கதரிசிதான் தாத்தா' என்று மனதில் எண்ணி வியந்து கொண்டாள்.

அதே நேரம் வீரேந்திரனுக்கோ மனைவியின் நெருக்கம் மனதைச் சலனப்படுத்த அன்று முழுவதுமாய் அவளைத் தேடித் தேடி அலைந்த அவன் தவிப்பும் ஏக்கமும் அவன் உணர்வுகளை எழுப்பிவிட்டன.

சாய்ந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தியவன் கடற்காற்றில் அலைபாய்ந்து கலைந்திருந்த அவள் கூந்தலை வருடி காதோரம் ஒதுக்கிவிட்டான்.

அவளின் செவ்விதழ்களைப் பார்த்து கிறக்கம் கொண்டு நெருங்கி வந்தவனின் எண்ணம் புரிந்தவளாய் அவசரமாய் விலகி நின்று கொண்டாள். அவளின் அந்த விலகல் அவனை வாட்டி வதைத்தது.

கொஞ்சம் கோபத்தோடும் தவிப்போடும் அவள் மீது அவன் பார்வையைப் பதிக்க, அவனின் உணர்வுகளைக் காயப்படுத்த வேண்டுமென்பதல்ல அவள் எண்ணம்.

அவன் அந்த முத்தத்தை வழங்கிவிட்டால் பின் தன் உணர்வுகளோடு கட்டுண்டு மீண்டு வரமாட்டான். அதே சமயம் அவளையும் மீட்சி அடையவிடமாட்டானே!

பின் அவள் சொல்ல வந்ததை எங்கனம் உரைப்பது என்றெண்ணியவள், "மறந்திட்டீங்களா வீர்.... நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு சொன்னேனே" என்று அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

ஆம் மறந்துதான்விட்டான். அவளருகில் அவனின் எண்ணங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமாய் தள்ளப்பட்டுவிடுகிறது. சகலமும் அவளாகவே நின்றிருக்க தன் கிறக்கத்திலிருந்து மெல்லச் சுதாரித்தவன், "சரி... சொல்லு" என்றான்.

தான் அவனருகில் நின்றால் அவனைச் சலனப்படுத்த கூடுமோ என எண்ணி இன்னும் தள்ளி வந்து நின்று கொள்ள, அவள் விலகிச் செல்ல செல்ல அவனின் காதலும் காமமும் கட்டுக்கடங்காமல் போகும் என்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை.

எங்கிருந்து தான் சொல்ல நினைத்ததைத் தொடங்குவது என யோசித்தவள் பின் தெளிவான பார்வையோடு அவனை நோக்கி,

"வீர்... நீங்க தர்மா வீட்டில பார்த்த ஓவியங்கள் இருக்கு இல்ல... அது எல்லாம் எங்க முன்னோர்களோட வரலாறு" என்றாள்.

"ஹ்ம்ம்ம்... கேள்விப்பட்டேன்... ரகு இதை பத்தி சொன்னான்"

"ரகுதான் முதல்ல அந்த ஓவியத்தை என்கிட்ட ஃபோன்ல காண்பிச்சு இதை பத்தி தெரியுமான்னு கேட்டான்... அப்பதான் தர்மா ஏன் இதைபத்தி ரிசர்ச் பண்ணணும் டௌட் வந்து, நான்தான் ரகுவை கன்வின்ஸ் பண்ணி தர்மா வீட்டிற்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னேன்" என்றாள்.

இதைக் கேட்டு அவன் கோபமாய் முறைக்க... தமிழ் அவன் பார்வையைக் கவனித்து, "இப்ப ஏன் முறைக்கிறீங்க... அந்த டைம்ல உங்ககிட்ட அனுமதி கேட்கிறளவுக்கு எனக்கு தைரியம் இல்ல" என்றாள்.

" ஆனா திருட்டுத்தனம் பண்ண மட்டும் தைரியம் இருக்கோ?" என்றவன் எடக்காகக் கேட்க,

அவள் சலிப்புற்று, "இப்ப நான் விஷயத்தைச் சொல்லவா வேண்டாமா?" என்று கேட்க அவனும் அதே உணர்வோடு, "சரி சொல்லு" என்றபடி சௌகர்யமாய் அமர்ந்து கொண்டான்.

"தர்மா வீட்டில போய் அந்த ஓவியத்தைப் பார்த்துட்ட பிறகு அங்கிருந்த புக் ரேக்ஸைப் பார்த்தேன்... அதுல ராஜசிம்மன் வரலாறுன்னு போட்டிருந்த டைரியை பார்த்ததும் அப்படி என்ன அந்த தர்மா... ராஜசிம்மன் பத்தி ரிசர்ச் பண்ணி இருப்பாருங்கிற ஆர்வத்தில ரகுவுக்குத் தெரியாம அந்த டைரியை எடுத்துட்டேன்" என்றாள்.

"எடுத்துட்டேன்னு சொல்ல கூடாது... சுட்டுட்டேன்னு சொல்லணும்"

"ஆமாம் சுட்டுட்டேன்... இப்ப என்ன பண்ணணும்ங்கிறீங்க"

"ம்ம்ம்... ஒன்னும் இல்ல... நீ மேல சொல்லு" என, அவள் மேலே சொல்ல தொடங்கினாள்.

"சுனாமியின் போது வெளியே வந்த எங்க கோயிலோட மண்டப சுவர் அந்த தர்மா கண்ணுல பட்டிருக்கு... அதிலிருந்த கல்வெட்டை ரிசர்ச் பண்ணி ரொம்ப வருஷம் படாதபாடுபட்டு அந்தக் கோயில் எங்க இருந்தது... என்னன்னு கண்டுபிடிச்சிருக்கான்... இதுக்காகவே அந்த தர்மா காஞ்சிபுரத்தில வந்து தங்கியிருக்கான்"

"அந்தளவுக்கு தர்மா ஏன் ராஜசிம்மன் வரலாற்றை ஆராய்ச்சி பண்ணனும்... அப்படி என்ன ரகசியம்?!"

"ரகசியம்தான்... அது இந்த சிம்மவாசலில் ராஜசிம்மன் கட்டின ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் ரகசியம்"

"அந்த தர்மா வீட்டில இருந்தது கோயிலோட ஓவியமும் அந்த சிலையோட ஓவியமுமா?!"

"ஆமாம்... அதேதான்... அந்த முதல் ஓவியம்ல கடற்கரை பக்கத்தில நிறைய கப்பல் இருக்கிறது, சிம்மவாசல்... ராஜசிம்மன் காலத்துல பெரிய துறைமுகமா இருந்ததை சொல்லுது... இந்த கடற்கறையில அப்போ பொன்னும் பொருளும் குவிஞ்சு கிடக்குமாம்...

கடற்கரை முழுக்கவும் பெரிய பெரிய பாய் மரக்கப்பல்கள் நிற்குமாம்... பல தேசங்களில் இருந்து வணிகர்கள் அவங்க பொருட்களை விற்கவும் வாங்கவும் வருவாங்கன்னும் சொல்லப்பட்டது... இந்த மாதிரியான கப்பல் பயணங்களில் நிறைய ஆபத்து இருக்கும்.. கடற்கொள்ளையர்... புயல்... பேரலை... இந்த ஆபத்துகளுக்கு பயந்து அங்கே வர வணிகர்கள் சேர்ந்து ராஜசிம்மன் உதவியோட நிர்மானிச்சதுதான் அந்த கோயில்... அந்த இரண்டாவது ஓவியம்...

அப்புறம் அந்த மூணாவது ஓவியம்... அந்த கோயிலுக்குள் இருந்த ராஜ ராஜேசுவரி அம்மனோட ராஜகம்பீரமான சிலை... அதுவே ஒரு பிரமாண்டம்... அந்த சிலை உயரமா கம்பீரமா இருந்திருக்கும்னு எங்க தாத்தா சொல்வாரு.... அந்த கோயிலோட சிறப்பே அந்த பிரமாண்டமான சிலையோட ராஜசிம்மன் செஞ்சி வைச்ச கீரீடம்தான்... மே பீ அந்த தர்மா வரைஞ்ச கடைசி ஓவியம்... அந்த கீரிடமா இருக்கலாம்... அதைதான் அந்த உமேஷ்... தர்மாவைக் கொன்னுட்டு அவன் வீட்டில இருந்து எடுத்திருக்கணும்"

"அப்போ அந்தக் கடைசி ஓவியம் அந்த கீரிடம்தான்னு சொல்ல வர்றியா?!"

"அப்படிதான் இருக்க முடியும்... எங்க அரண்மனையில அந்த அம்மன் சிலையோட ஓவியம் இருக்கு... அதுல அந்த கீரிடமும் இருக்குமே... அதை பார்த்து வரைஞ்சுருக்கலாம்"

"ஓ... ஆனா நான் அந்தக் கடைசி ஓவியம் உங்க அரண்மனையா இருக்கும்னு நினைச்சேன்..."

"தெரியல... அதுவும் இருக்கலாம்" என்றவளை ஆவலோடுப் பார்த்தவன்,

"அந்த கீரிடத்துக்காகதான் அந்த கும்பல் உன்னைக் கடத்தினாங்களா?!"

"ஆமாம் வீர்... அந்த கீரிடத்தில பல நாட்டு விலைமதிப்பான ரத்தினங்கள் பதிச்சிருக்கு... அந்த கீரிடத்தோட அந்த ராஜகம்பீரமான சிலை பார்க்க அத்தனை தேஜஸா இருக்குமாம்... அது அந்தக் கோயில் கல்வெட்டுலயும் பொறிக்கப்பட்டிருந்துச்சுன்னு தர்மாவோட டைரியை வைச்சு தெரிஞ்சிக்கிட்டேன்...

அதுவும் அம்மனோட அந்த கீரிடத்தில இருந்து வர ஒளி அந்தக் கடலையே பிரகாசிக்க செய்யும்னும், வர கப்பல்களுக்கு வழிகாட்டின்னும் போட்டிருந்துச்சு... ஆனா அதுக்கு அர்த்தம்... அது வெறும் கோயிலா மட்டும் இல்லை...

கலங்கரை விளக்கம் மாதிரி பெரிய கடல் பாறை மேல உயரமான கோபுரமா கட்டப்பட்டதுதான்... அந்த கோயில் உச்சிக் கோபுரத்தில விறகுகள் எல்லாம் அடுக்கி ஜோதி ஏத்தி வைச்சிருக்க, அதோட பிரகாசம்தான சிம்மவாசலுக்குள் நுழையற கப்பலுக்கு வழிகாட்டியா இருந்துச்சு...

அதுவும் இல்லாம அந்த கீரிடத்தைப் பார்த்தாலே அந்த அம்மன் சிலை எத்தனை பெரிசா இருக்கும்னு நமக்கு புரியும்... ஆனா அதை தரிசிக்கிற பாக்கியம் எல்லாம் நமக்கில்லன்னு எங்க தாத்தா சொல்லி வருத்தப்படுவாரு"

"ஏன்? அந்தக் கோயிலுக்கு என்னாச்சு?!"

"அந்தக் கோயில்ல நாளடைவில கடல் நீர் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுடுச்சு... அப்போ அந்தக் கோயிலைக் காப்பாற்ற ஏதோ ஏதோ செஞ்சு தடுப்பரணெல்லாம் அமைச்சு முயற்சி பண்ணாங்க...

ஆனா ஒன்னும் யூஸ் இல்ல... ஒரு பெரிய பேரலையில கோயிலோட கோபுரம் சிதிலமடைஞ்சுடுச்சு... சிலையும் கடலுக்குள்ள மூழ்கிடுச்சாம்... அந்தக் கோயிலோட ஞாபகமா மிச்சமிருக்கிறது அந்த கீரிடம் மட்டும்தான்... எவ்வளவு கஷ்ட நஷ்டத்திலயும் ராஜசிம்மன் வாரிசுகள் அந்த கீரிடத்தை ரொம்ப பத்திரமா பாதுகாத்து வைச்சிருந்தாங்க" என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு வீரேந்திரன் மௌனமாயிருக்க அவளே மேலும் தொடர்ந்தாள்.

"அதுக்கப்புறமும் அந்த மாதிரியான சிலை அமைக்க முயற்சி எல்லாம் நடந்துச்சு.. இராஜஇராஜேஸ்வரி அம்மனுக்கு நகரத்தில ஒரு கோயில் அமைச்சாங்க... ஆனா அந்தச் சிலை அந்த கீரிடத்தோட பொருந்திப் போகவே இல்ல... அதனாலயே தாத்தா எப்பவும் என்கிட்ட கடலைக் காண்பிச்சு இங்கதான் நம்ம குலதெய்வம் இருக்குன்னு சொல்லுவாரு"

யோசனையோடு எழுந்து நின்றவன், "சரி... அந்த கீரிடத்தை எங்க வைச்சுருக்க?!" என்று கேட்க தமிழ் யோசனையில் ஆழ்ந்தவள் பின் அவனை நிமிர்ந்து பார்த்து, "என் ரூம்லதான் வைச்சுருக்கேன்" என்றாள்.

"உன் ரூம்லன்னா... நீ நிறைய கோயில் ஃபோட்டோஸ் எல்லாம் மாட்டி வைச்சிருக்க... அங்கதானே!"

அவள் புருவங்கள் சுருங்க வியப்பின் உச்சிக்கே சென்றாள். இதுவரை யாருமே கண்டறியாத விஷயம் இவனுக்கு மட்டும் எப்படிப் புலப்பட்டிருக்கும் என அவள் யோசித்திருக்க, வீரேந்திரன் அப்போது அவளின் அருகாமையில் நின்றிருந்தான்.

அவன் அவளிடம், "எனக்கு எப்படி தெரியும்னுதானே யோசிக்குற?!" என்று கேட்க, அவள் வியப்பில் இருந்து மீளாதவளாய் தலையை மட்டும் பொம்மை போல அசைத்தாள்.

அவளுக்கு மட்டுமான மெலிதான குரலில், "நான் அந்த ஃபோட்டோஸ் எல்லாம் உடைக்கும் போது உன் கண்ணில எதையோ மறைக்கிற தவிப்பு... நான் அன்னைக்கு அதை கவனிச்சேன் தமிழச்சி" என்றதும் அவள் அதிர்ந்து அவனை நோக்க,

"அதுக்குள்ள ஷாக்காயிட்டா எப்படி?! நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலேயே" என்றவன் கல்மிஷமாய் அவளைப் பார்க்க,

அவள் விழிகளோ பதட்டத்தை நிரப்பியது. அவனோ அவள் தவிப்பு புரியாமல் அவளை நெருங்கி தன் விரல்களால் வருட, அவனின் கரம் அவளின் இடையை வளைக்க முயல அவனைத் தடுக்க முடியாமல் விழிகளை மூடிக் கொண்டு, இன்னும் அவன் எதையெல்லாம் கவனித்திருப்பான் என்று யோசித்திருக்க அவன் சன்னமான குரலில் அவள் காதோரமாய் நெருங்கி, "பாரதியாரோட கண்ணில சென்ஸார் டிவைஸ் வைச்சிருக்க இல்ல... என்ன மூளைடி உனக்கு?!" என்று அவன் சொல்லிமுடிக்க அவள் அவசரமாய் விழிகளைத் திறந்தாள்.

 

அவன் மேலும், "அந்த டிவைஸை கவனிச்ச பிறகுதான் கெஸ் பண்ணேன்... ஸம்திங் இஸ் தேர்... அதுல இருந்து சிக்னல் நேரா இருக்கிற அதோட இன்னொரு டிவைஸ் கூட கான்டெக்ட் பண்ணும் போது அலார்ம் அடிக்கும்... ஆர் எல்ஸ் உன் ஃபோன்ல அலர்ட் டோன் வரும்.... கரெக்டா?!"என்று கேட்டான்.

"வீர்... இதெல்லாம் நீங்க எப்போ பார்த்தீங்க... ஏன் என்கிட்ட கேட்கல?" என்றவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்க,

"நீ கேட்டா சொல்லிடுவியா... அதான் அன்னைக்கு அந்த ஃபோட்டோஸை உடைச்சு பார்த்தேன்... முதல்ல நீ பயந்துட்டு... அப்புறமா நீ உடையுங்கன்னு தைரியமா சொன்னதும் திரும்பியும் என் கெஸ் தப்போன்னு தோனுச்சு... அதான் அந்த விஷயத்தைப் பத்தி பேச முடியல!" என்றவன் தன் கணிப்பைக் கூறினான்.

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல... ஆனா இப்போ என் பயமும் கவலையும் அந்த உமேஷ்கிட்ட நான் இதை பத்தி எல்லாம் சொல்லிட்டேன்"

"ஸென்ஸார் டிவைஸ் பத்தியுமா?!" பதட்டத்தோடுக் கேட்டான்.

"இல்ல அதை பத்தி சொல்லல"

"அப்படின்னா நிச்சயம் அந்த பொக்கிஷத்துக்கு ஒரு ஆபத்தும் வராது.... ஆனா இதை பத்தி உங்க வீட்டில இருக்கிறவங்க யாருக்காவது"

"தெரியாது வீர்... இது வரைக்கும் சொல்லல"

"ஏன்?"

"எங்க அப்பா எக்கச்சக்கமா கடன் வாங்கி வைச்சுருக்காரு... இதை பார்த்தா அவர் என்ன யோசிப்பாரோ... அதுவும் இல்லாம ரவிக்கும் சித்திக்கும் எங்க பாரம்பரியமான நகைகள் மேலே கண்ணு இந்த கீரிடத்தைப் பார்த்தா சும்மா விடுவாங்களா... தேவியோ சின்ன பொண்ணு... நான் யார்கிட்டன்னு இதேல்லாம் ஷேர் பண்ணிக்க முடியும்" என்றவளைப் பார்த்து வியந்தான்.

அவளின் தைரியம், புத்திசாலித்தனம், சமயோசிதம், வீரம் மற்றும் அவள் குடும்பத்தின் மீதும், நட்பின் மீதும், காதலின் மீதும், தாய்மொழியின் மீதும், தன் பாரம்பரியத்தின் மீதும் கொண்ட பற்றுதல் என அவள் அவனை ஒட்டுமொத்தமாய் வியப்பில் ஆழ்த்திவிட்டாள்.

இப்படியும் ஒரு பெண் அனைத்து சிறந்த குணங்களும் ஒரு சேர இருக்க முடியுமா என்று திகைப்புற்றவனிடம், "என்ன வீர்? என்ன யோசிக்கிறீங்க" என்று கேட்டவளின் கரத்தை அழுந்தப் பற்றி தன்னருகில் இழுத்து அணைத்துக் கொண்டான்.

"சொல்றதை கேளுங்க வீர்... டைமாயிடுச்சு தூங்கி ரெஸ்ட் எடுங்க... நாளைக்கும் அப்புறம் ஏதாவது வேலை வந்திரும் பரபரன்னு ஓடிடுவீங்க" என்றவள் அக்கறையோடு இயம்ப,

"நான் படுத்தா மட்டும் நீ என்னைத் தூங்க விட்டுருவியா?" என்றான் அவன் கல்மிஷ்மான பார்வையுடன்!

"என்னது? நான் உங்களைத் தூங்க விடமாட்டிறனா?"

"பின்ன... நீதான் தினைக்கும் ஏதாவது கனவு கண்டுட்டு என் காதில வந்து கத்தி... எழுப்பி விட்டிர... தெரியுமா?!"

அவள் யோசித்துவிட்டு முடிவாய், "அப்படின்னா நான் பக்கத்துல ரூம்ல போய் படுத்துக்கிறேன்... நீங்க நிம்மதியா தூங்குங்க" என்றதும் அவன் சினத்தோடு,

"நீ மட்டும் இந்த ரூம் வாசலைத் தாண்டிப் பாரேன்... கொன்றுவேன்" என்றான்.

"சரி இப்ப நான் என்னதான் பண்ணட்டும்" அவள் தவிப்போடுக் கேட்க,

"அதென்ன? ஒவ்வொரு தடவையும் நான் உன்கிட்ட வந்து கெஞ்சணுமா... எனக்கு என்ன வேணும்னு மேடமுக்கு தெரியாதோ?!" என்றதும் அவள் யோசனையோடு நின்றாள்.

வீரேந்திரன் அவள் காதோடு நெருக்கமாய் வந்து கிசுகிசுத்தான், "அந்த மிஸ்ஸான கிஸ்ஸிங் சீனை ரீப்பிளே பண்ணுவோமா?!" என்று சொல்லவும் அவள் பதறியபடி, "என்னது? உம்ஹும் முடியவே முடியாது" என்று விலக எத்தனித்தவளை அவன் இன்னும் இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

"ஒரு கிஸ்... அதுக்கு ஏன்டி இவ்வளவு டென்ஷன்"

"நீங்க இப்படி டவர் மாதிரி வளர்ந்து நின்னுக்கிட்டு என்னை இப்படி டார்ச்சர் பண்றீங்களே... அக்யூஸ்டுக்கும் உங்க பொண்டாட்டிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியாதா... எல்லாரையும் ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுவீங்களா?!" படபடவென பொறிந்து தள்ள,

"உனக்கு வாய் அடங்கவே அடங்காதா... நீ இப்படிதான் அந்தக் கடத்தல் கும்பல்கிட்டயும் எகத்தாளமா பேசியிருப்ப.... அதனாலதான் உன்னை ரூம்ல வைச்சு பாம் வைச்சானுங்க போல" என்றவன் சொல்ல, அவள் கோபமானாள்.

"ஹெலோ... பாம் அவனுங்க எனக்காகவோ அரண்மனைக்காகவோ வைக்கல... உங்களை டார்கெட் பண்ணதான் வைச்சாங்க... இது தெரியாம நீங்க என்னை கலாய்க்கிறிங்களாக்கும்"

"சும்மா சொல்லாதே… என்னை டார்கெட் பண்ணியிருந்தா... அவன் என்னைத்தானே கடத்திட்டுப் போகணும்"

"சிங்கத்தைக் கூண்டில அடைக்க யாராவது நேரா அதை கடத்துவாங்களா?! அதோட இரையை வைச்சா அது தானே கூண்டுக்குள்ள வந்திர போகுது"

"அப்போ நீதான் என்னோட இரை... இல்ல" என்று கேட்டு அவன் சத்தமாகச் சிரிக்க,

"நான் ஒரு எக்ஸேம்பிளுக்கு சொன்னேன்" என்றவள் சமாளித்தாள்.

"ஆனா நீ சொன்னது சிட்டுவேஷனுக்கு... எக்ஸேக்டா பொருந்திப் போச்சு"

அவள் முகத்தை நிமிர்த்திப் பிடித்து, "வளவளன்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணாதே தமிழச்சி" என்றவன் உரைக்க,

 "ஏன் இப்படி நீங்க அடம்பிடிக்கிறீங்க வீர்?" என்றவள் சிணுங்கினாள்.

"நீயும்தான் அடம்பிடிக்கிற"

"விழுந்த அடியும் வலியும் எனக்குதானே"

"விழமாட்டடி.. என்னை நம்பு"

"அது சரி... இப்போ உங்க ஃபோன் எங்க"

"அது சார்ஜ் இல்லாம ஸ்விட்ச்ட் ஆஃப்... போதுமா?!”

"நிஜமாவா?!"

"அடியே தமிழச்சி... இதுக்கு மேல எனக்கு பொறுமையில்லை" என்று உரைத்தவன் அவளின் இடையில் தன் கரத்தை அழுத்தமாய் பதித்தான்.

அதற்கு மேல் அவனைச் சமாதானம் செய்வது கடினம் என எண்ணியவள் வேறுவழியின்றி மிரட்சியோடு அவனைக் கெட்டியாய் தாங்கிக் கொண்டு அவன் இதழ்களை நெருங்க, அவன் ரசனையோடு அவளையே பார்த்திருந்தான்.

அவளை ஆழமாய் ஊடுருவிப் பார்த்தவனுக்கு அவள் நெருங்கும் வரையிலான பொறுமையில்லை. அவன் தன்வசம் இழந்தான் என்றே சொல்ல வேண்டும்.

அவளின் இதழின் அமுதைச் சுவைக்க காத்திருக்க முடியாமல் அவள் எம்பி நிற்கும் போதே தன் ஒற்றை கரத்தால் அவள் இடையை வளைத்துத் தூக்கிக் கொள்ள அந்தரத்தில் நின்றது அவள் கால்கள்.

அவள், "வீர்" என்று சத்தமிட அவனோ அடுத்த நொடியே அவள் இதழ்களைச் சிறையெடுத்துக் கொண்டான்.

அவளைத் தேடிய ஒவ்வொரு கணமும் அவள் மீதான காதல் அவனுக்குள் தீயாய் பரவிகிடக்க, அவளின் இதழ்களின் ஈரத்தால் குளிர்வித்திட எண்ணினானோ?!

அவள் மெல்லிய இடையை வன்மையாகவே பற்றியபடி, அவளின் தாமரை இதழ்களில் இணைந்து சில நொடிகள் அப்படியே ஆழ்ந்துகிடந்தான்.

காற்றுக்கும் வழிவிடாமல் அவனோடு இறுக்கமாய் உறவாடிக் கொண்டிருந்த அவள் தேகத்தை விலக்கிவிட மனமில்லாமல், அவளைத் தூக்கிகிடந்தவன் அந்த முத்தத்தை நீட்டித்து கொண்டிருக்க, அவனின் முத்தத்தில் பாய்ந்த மின்னல்கீற்றில் அவள் மொத்தமாய் செயலிழந்தாள்.

ஒரு நிலையில் அவன் உணர்வுகள் தன் எல்லைக் கோட்டை கடந்துவிட, அவளை அப்படியே தூக்கி வந்து படுக்கையில் கிடத்தினான்.

அவனின் ஒவ்வொரு அணுவிலும் அவளே நிலைபெற்றிருக்க, இனி கண நேரமும் தன்னைவிட்டு அவள் பிரியும் வாய்ப்பை அவன் தருவானா? உணர்வுகளைக் கடந்து உயிரோட்டமாய் அவளோடு கலந்துவிட்டான்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content