You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Monisha's VET - 43

Quote

43

நாட்கள் கடந்து மாதங்களாக, வீரேந்திரன் சிலைக்கடத்தல் வழக்கில் தீவிரமாய் இறங்கியிருந்தான். உமேஷ் தர்மாவைக் கொலை செய்த குற்றத்தை ஏற்றுக் கொண்டாலும் சிலைக் கடத்தல் நெட்வொர்க் பற்றிய முழுமையான தகவல் அவனிடமே இல்லை.

அதுவும் இல்லாமல் தர்மாவின் கொலை வழக்கு எப்போது சிலைக்கடத்தல் மற்றும் பொக்கிஷங்களைக் கடத்தும் குற்றம் சார்ந்து விசாரிக்கப்பட ஆரம்பித்ததோ, அன்றிலிருந்து அவனுக்கு நிறைய இடையூறுகளும் வர ஆரம்பித்தன.

அதுவும் இந்த வழக்கின் பின்னணியில் அறநிலைத்துறை அதிகாரிகளும் பெரும் அரசியல்வாதிகளும் கூட சம்பந்தப்பட்டிருந்தனர்.

அதேநேரம் அவன் குற்றவாளிகளைப் பிடிப்பதில் மட்டும் தீவிரம் காட்டாமல் தொலைந்து போன சிலைகளையும் பொக்கிஷங்களை மீட்பதிலும் அதிதீவிரமாய் இருந்தான்.

இதனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் அவனைப் பற்றிய பாராட்டுரைகள் ஓயாமல் ஒலிக்கத் தொடங்கின. இவற்றை எல்லாம் கண்ட மகேந்திரபூபதி பூரித்துப் போயிருந்தார். இருப்பினும் தன் மகனை அழைத்துப் பாராட்ட மனம் வராமல் தன் ஈகோவைக் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருந்தார்.

கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாய் மகனுடன் பேச்சு வார்த்தையே இல்லை. அதற்குக் காரணம் வீரேந்திரன் தன் மனைவிதான் முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியேறியது.

எந்த தந்தைக்குத்தான் கோபத்தை வரவழைக்காது? அதுதான் அவரின் ஈகோவை அதிகமாய் வேரூன்றி வளரச் செய்திருந்தது. ஆனால் அது அவர் பக்கத்திலான நியாயம் மட்டுமே!

கட்டிய மனைவியை வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் தந்தையிடம் எத்தனையோ விதமாய் சமாதானம் பேசிப் பார்த்தவன், இறுதியாகதான் இந்த முடிவை எடுத்தான்.

இத்தகைய நிலையில் மகேந்திரபூபதி அரண்மனையை இடித்துவிட்டு பெரியளவிலான பிரொஜக்ட்டை அங்கே கொண்டுவர எண்ணியிருந்தார். அதுவும் இயலாமல் போக அடிப்பட்ட சிங்கம் போல அவ்வப்போது தன் மனைவியிடம் மட்டும் கர்ஜித்து கொண்டிருந்தார்.

இன்றும் தொலைக்காட்சியில் மகனின் முகத்தைப் பார்த்து அவருக்குள் இருந்த ஏக்கத்தையும் வேதனையையும் மனைவியிடம் கோபமாகக் காட்டிக் கொண்டிருந்தார்.

"உன் மகனுக்கு நேத்து வந்தவதான் முக்கியம்... நம்மல பத்தி கொஞ்சங்கூட அக்கறையே இல்லை" என்று உரைக்க மேஜை மீது உணவு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்த சந்திரா இறுகிய முகத்தோடு அவர் முன்பு வந்து நின்றார்.

"உங்களுக்கு மட்டும் அவனை பத்தி கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா? மருமக மகனைவிட அந்த அரண்மனைதான் ரொம்ப முக்கியமா?" என்று கேள்வி எழுப்பினார்.

"ஆமான்டி... அவனுக்கு அவன் பிடிவாதம்னா... எனக்கு என் பிடிவாதம்... நான் அந்த அரண்மனையை இடிக்காம விடமாட்டேன்" என்றார்.

சந்திராவிற்கு தன் கணவன் இத்தனைக்குப் பிறகும் அந்த அரண்மனை விஷயத்தில் இறங்கி வராமல் உச்சாணிக் கொம்பிலேயே நிற்கிறாரே எனக் கடுப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

என்ன செய்வது? அதுதான் மகேந்திரனின் குணம்.. அதுதான் வீரேந்திரனின் குணமும் கூட...

வீரேந்திரனும் அவ்வாறே தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் அரண்மனையில் தன் மனைவியோடு தங்கியிருந்தான்.

அவர்கள் அங்கே இருக்கும் வரை தன் தந்தை அரண்மனையைத் தகர்க்க முயற்சிக்கமாட்டார் என்பதே அவன் எண்ணம். இந்தக் கோபத்தை எல்லாம் மகேந்திரபூபதி விக்ரமவர்மனிடம் திருப்பியிருந்தார். அவரின் தொழில் முதற்கொண்டு எல்லாவற்றையும் முடக்கி தன் பணத்தை உடனடியாய் திருப்பி தரும்படி பணித்திருந்தார்.

இதனால் விக்ரமவர்மன் ரொம்பவும் மனம் நொந்து போனார். தமிழ்தான் இவை எல்லாவற்றிற்றுக்கும் காரணம் என்ற கோபத்தில் அவர் உள்ளுர குமுறி கொண்டிருந்த நிலையில், விஜயா தேவியை தமிழுக்குத் துணையாக அரண்மனைக்கு அனுப்பியிருப்பதை அறிந்தவர், "யாரைக் கேட்டு நீ தேவியை அனுப்பின?" என்று மனைவியிடம் பொங்கினார்.

"இல்லை தமிழ்தான் அவ்வளவு பெரிய அரண்மனையில தனியா இருக்க கஷ்டம்ன்னு" என்று அவர் தயங்கிச் சொல்லும் போதே இடைமறித்தவர்,

"அவ அந்த அரண்மனை தான் முக்கியம்னு நம்ம எல்லோரையும் தூக்கி எரிஞ்சிட்டுப் போயிட்டா? அப்புறம் என்ன?!" என்றவர் கொதித்து கொண்டிருந்தார்.

"அப்படி எல்லாம் இல்லங்க... தமிழ் அப்படி எல்லாம் யோசிக்க மாட்டா" விக்ரமன் முகத்தில் வெறுப்பு கலந்த ஒரு புன்னகை இழையோடியது.

"என்ன விஜயா? நானும் கொஞ்ச நாளா பார்க்கிறேன்... உன் பிள்ளையும்... நீயும்... அவளைத் தலையில தூக்கி வைச்சு ஆடுறீங்க... இனிமே என்னால எந்த பிரோயஜனமும் இல்லன்னு... அவ பக்கம் சாயிறீங்களாக்கும்" என்றார்.

விஜயாவிற்கு அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. சொத்திற்காகவும் பணத்திற்காகவும் ஆசைப்பட்ட போதெல்லாம் இப்படி ஒரு பழி சுமத்தப்படவில்லையே!

ஆனால் இன்று அவர் மனம் திருந்தியிருந்த நிலையில் அந்த வார்த்தை அவரை ரொம்பவும் காயப்படுத்தியிருந்தது. தந்தை சொன்னதெல்லாம் கேட்டபடியே வந்த ரவி,

"ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்கப்பா? நானும் அம்மாவும் சொத்து பணம்னு ஒரு காலத்தில யோசிச்சுருக்கோம்... ஆனா அதெல்லாம் ஒன்னுமே இல்லன்னு அக்கா எங்களுக்கு புரிய வைச்சிட்டா... எவ்வளவோ நாங்க அக்காவுக்கு எதிரா செஞ்சிருக்கும்... அதெல்லாம் தெரிஞ்சும்... அக்கா எங்களை விட்டுக் கொடுக்கல... அப்பதான் பணம் காசைவிட உறவு பெரிசுன்னு புரிஞ்சுது... இப்ப கூட அக்கா அந்த அரண்மனைக்காக இவ்வளவு தூரம் நிற்கிறான்னா அதுக்கு காரணம் இல்லாம இருக்காது" என்று பொறுமையாய் விளக்கினான்.

அவனின் பேச்சும் அதில் வெளிப்பட்ட முதிர்ச்சியும் விக்ரமவர்மனுக்குப் புதிராகவே இருந்தது. இருந்தும் விக்ரமவர்மனின் மனக்குமுறல் அடங்கவில்லை.

"உனக்கு நம்ம நிலைமை புரியுதா இல்லையா... தமிழ் கையெழுத்துப் போடலன்னா நம்ம எல்லோரும் நடுத்தெருவுல நிற்கணும்" என்றவர் சொல்ல,

"அக்கா நம்மல அப்படி விட்டுற மாட்டாப்பா... இந்தப் பிரச்சனைய அக்கா சரி பண்ணிடுவா... நீங்க பாருங்க" என்று தீர்க்கமாய் சொன்ன ரவி, அதற்கு மேல் தன் தந்தையிடம் அந்த விஷயம் குறித்து விவாதிக்காமல் அகன்றான்.

விக்ரமவர்மனுக்கும் தமிழுக்கும் இடையிலான உறவில் ஆரம்பித்திலிருந்தே பெரும் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியை அவரின் தந்தை சிம்மவர்மன்தான் நிரப்பியிருந்தார். ஆனால் அவர் மரணத்திற்குப் பின் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பப்படாமலே இருந்தது.

இன்றளவிலும் அது அப்படியே இருக்க, பிரச்சனைகள் ஓய்ந்து அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நாளும் வெகு தொலைவில் இல்லை.

*

சிம்மவாசல் அரண்மனையை விட்டு வெகுதொலைவு வந்த அந்த கார், ஒரு கோயிலின் முன்புற வாசலில் வந்து நின்றது. தமிழ் தனக்கே உரியக் கம்பீரத்தோடு இறங்க தேவியும் அவளோடு இறங்கினாள்.

தேவி வண்ண தாவாணியில் மின்னிக் கொண்டிருக்க, தமிழோ எப்போதும் போலான அவளின் உடையிலும் நடையிலும் மாற்றங்கள் இல்லை. ஜீன்ஸ் பேன்டும் நீல நிற டாப்ஸும் அதே தமிழச்சிதான்.

தேவி உள்ளே செல்வதற்கு முன் பூக்கடையின் வாசலில் நின்றபடி, "அக்கா இருங்க... பூ வாங்கிட்டு வர்றேன்" என்றாள்.

"நீ வாங்கிக்கோ தேவி"

"அப்படியெல்லாம் சொல்லக் கூடாது" என்றவளைத் தமிழ் முறைத்துப் பார்த்தாள். தான் விரும்பாதவற்றை தன் மீது திணிக்காதே என்பது போன்ற பார்வை.

தமிழ் அக்காவின் பார்வைப் புரிந்தவளாய் திரும்பி, "ஒரு முழம் கொடுங்கக்கா" என்று சொல்லும் போதே,

"இல்ல இரண்டு முழமா கொடுத்திருங்க" என்றது ஒரு ஆண்மை நிரம்பிய குரல். திரும்பிப் பார்த்தவளுக்கு ரகு நிற்பது புரிய சட்டென்று உதட்டில் தவழ வந்த புன்னகை வெளிவராமல் உள்ளேயே சென்று ஒளிந்து கொண்டது.

முகத்தைத் திருப்பிக் கொண்டவள் மீண்டும் அந்தப் பூக்காரம்மாவிடம், "ஒரு முழம் கொடுங்கக்கா போதும்" என்று சொல்ல,

"உன் லாங் ஹேருக்கு பத்துமா தேவி?!" என்றவன் குழைவாகக் கேட்க, அவள் குழப்பத்துடன் புருவத்தை நெறித்தாள். அப்போது அவள் முன்னே வந்து நின்றவன் உதிர்த்த புன்னகையில் அவள் மனம் அவனிடம் வசீகரிக்கப்பட்டது.

தான் இன்னும் சில நொடிகள் இங்கிருந்தால் அவனிடம் முற்றிலுமாய் தொலைந்தே போவோம் என எண்ணி தன் தமக்கையைத் தேடினாள். ஆனால் அவள் அங்கு இல்லை.

கோயிலுக்குள் சென்றிருப்பாள் என எண்ணி அவனைப் பொருட்படுத்தாமல் அவள் உள்ளே சென்றுவிட அந்தப் பூக்காரப் பெண்ணோ பூ வாங்கிவிட்டுச் செல்ல சொல்லிக் கதற, அவள் திரும்பவேயில்லை.

அந்தப் பெண் தனக்கு நடக்க இருந்த வியாபாரத்தைக் கெடுத்துவிட்டான் என எண்ணி ரகுவைப் பார்த்து வசைமாறிப் பொழிந்தாள்.

தேவி சென்ற திசையிலேயே நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தவன் அந்தப் பெண்ணின் பாராட்டு மழைகளைக் காது கொடுத்தும் கேட்கவில்லை.

இப்படி ஒரு தேவதை தனக்கு உரிமையாவாளா என்ற ஏக்கம் ஆனந்தம் தவிப்பு எனக் கலவையான உணர்வுகளுடன் அவன் திக்குமுக்காடிக் கொண்டு அங்கேயே நிற்க அந்தப் பூக்காரம்மாவோ,

"காலங்காத்தால பொழப்பைக் கெடுக்க வந்துட்டானுங்க... உன்னை மாதிரி பொம்பள புள்ளகிட்ட வம்பு பண்றவனை எல்லாம் போலீஸ்ல பிடிச்சி கொடுக்கணும்" என்று சொல்ல, அந்தக் கணமே அவனுக்காகப் பரிந்து கொண்டு வந்தாள் அவன் உயிர்த் தோழி.

"நானும் பார்த்துட்டேருக்கேன்... நீங்க ரொம்ப ஓவரா பேசிட்டிருக்கீங்க... அவன் யாருன்னு தெரியாமாம்மா... மஹாபலிபுரம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்" என்றுரைக்க அந்தப் பெண் முதற்கொண்டு அந்தக் காட்சியை நேரம் போகாமல் பார்த்திருந்த அனைவரும் வாயடைத்துப் போயினர்.

இப்போது ரகு சுதாரித்தபடி தன் தோழியின் கரத்தைப் பற்றி ஓரமாய் அழைத்து வந்தவன், "இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம என் டீடைல்ஸ் எல்லாம் அந்த அம்மாகிட்ட கொடுத்திட்டிருக்க" என்றான்.

"டே அந்த லேடி ஓவரா பேசுது... உன்னையே போலீஸ்ட்ட பிடிச்சு கொடுத்துருவேன்னு சொல்லுது... அதான் உன் பவர் என்னன்னு சொன்னேன்" என்று அவள் இறுக்கத்தோடு பதிலுரைத்தாலும் அதிலுள்ள குறும்புத்தனத்தை அவன் அறிந்து கொண்டான்.

"ஒரு ஆணியும் நீ புடுங்க வேண்டாம்... அதே ஸ்டேஷ்னலதான் உன் புருஷனும் இருக்காரு... எவனாவது போய் ஏடாகூடாம போட்டுக் கொடுத்துட்டான்னா... அப்புறம் அந்த மனுஷன் என்னை வகுந்திருவாரு வகுந்து" என்று அவன் அச்சத்தோடு உரைக்க,

"டே இன்னுமாடா அவரைப் பார்த்து பயந்திட்டிருக்க" என்றாள் அலட்சியத்துடன்.

"ஏன் உனக்கு பயம் இல்லை?"

"இருக்க்க்கு... ஆனா இல்லை" என்றாள். அவளால் இன்றும் யூகிக்க முடியவில்லை. அவன் எப்போது எந்த ரூபத்திற்கு மாறுவான் என்று!

"அம்மா தாயே விடு... உன் புருஷன்கிட்ட ஏதேதோ பொய் சொல்லிட்டு வர்றதுக்குள்ள மண்டை காஞ்சிட்டேன்... இதுல நீ வேற"

"பொய் சொன்னியா?! டே அந்த மனுஷன் கண்டுபிடிச்சிருவாரேடா"

"அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்... நான் முதல்ல போய் எப்படியாவது தேவிகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணிடுறேன்"

"நீ செய்ற சேட்டைக்கெல்லாம் நான் பலி ஆடா? அவதான் ஹாஸ்பெட்டல்லையே உன்கிட்ட அவ லவ்வை சொன்னா இல்ல.. அப்பவே ஒத்துக்காம பெரிய புடுங்கியாட்டும் ஸ்டேட்டஸ் அது இதுன்னு பேசிட்டு... இப்ப வந்து என் உயிரை எடுக்குற"

"நீ என் ஃப்ரண்டுடி... என் காதலுக்கு நீ ஹெல்ப் பண்ணாம வேற யாரு ஹெல்ப் பண்ணுவா" என்றவன் சாமர்த்தியமாக சமாளிக்க அவனை முறைத்தவள்,

"நல்ல பொழப்பு... போய் எப்படியாவது பேசி அவளை கன்வின்ஸ் பண்ணு" என்றாள்.

ரகு தன்னை வார்த்தையாலேயே வறுத்தெடுத்த பூக்காரம்மாவிடம், "இரண்டு முழம் பூக் கொடுங்க" என்று கேட்டு வாங்கிக் கொண்டான்.

அந்தப் பெண்ணும் அவன் போலீஸ்காரனா என்று சந்தேகத்தோடே கொஞ்சம் அதிகமாகவே பூவைக் கத்தரித்துக் கொடுக்க, உள்ளே சென்றவன் அந்தக் கோயிலுக்குள் இப்படியும் அப்படியுமாய் சுற்றி வந்தான். அவன் பார்வை அவளைத் தேட, அவளும் தன் தமக்கையைத் தேடிச் சுற்றி வந்தாள்.

அவளைக் கண்டறிந்த ரகு, "தேவி" என்றழைக்க அவன் எங்கே என்று ஆவலோடு தேடிய அந்த துருதுருப்பான விழிகளைக் கண்டு களிப்புற்றவன் இன்னும் சில நொடிகள் அவள் தேடலை ரசித்த பின், அவள் கண்முன்னே பிரசன்னமானான்.

அவனைப் பார்த்ததுமே அவள் மனம் காதலை ஊற்றெடுத்தாலும், தன் காதலை அவனிடம் உரைத்த போது அவன் தட்டுகழித்ததை எண்ணுகையில் அவளுக்கு வலித்தது.

காதல் என்பது எத்தனைச் சுகமோ அத்தனை சுமை. இருவராய் அதைச் சுமக்கும் போது சுகம். ஒற்றையாய் சுமப்பவர்களுக்கு அது மனதையும் உயிரையும் கனக்க செய்யும் சுமை. அந்தச் சுமையால் மனம் கனத்து அவன் முகத்தைப் பாராமல் நின்றிருந்தாள்.

அவனுக்கு அவளின் நியாயமான கோபம் புரிந்தது. அவள் காதலை சொன்ன போது ஸ்டேட்டஸ் அது இது என்று அவளைச் சமாளித்து பார்த்தான். ஆனால் அவள் அந்தக் காரணத்தை ஏற்காத போது உன்னை அத்தகைய உறவுமுறையோடு பார்க்க இயலவில்லை என்று திட்டவட்டமாய் மறுத்துவிட்டான்.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. வீரேந்திரனின் எச்சரிக்கையும் இன்னொரு புறம் ரவியின் மீதான தவறான பார்வை. ரவி மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட போதும் அவனால் அதை நம்ப முடியவில்லை. தேவியை தான் காதலித்து அந்த உறவுமுறை தன் தோழியின் வாழ்க்கைக்குப் பிரச்சனையாய் முடிந்துவிடுமோ என்ற ஒரே எண்ணம் மட்டும்தான்.

அதனாலேயே தனக்கு விருப்பம் இருந்தும் தேவியை நிராகரித்தான். ஆனால் தமிழ் தன் நண்பனிடம் பேசி அவன் அர்த்தமற்ற பயத்தைப் போக்கியதில்லாமல் தேவி அவன் மீது கொண்ட காதலையும் தெளிவாய் புரிய வைத்திருந்தாள்.

அப்போதே ரகுவின் மனமும் தேவியிடம் சாய்ந்துவிட்டது. தற்போது அவளிடம் தன் முடிவைக் கூற வேண்டுமென்ற எண்ணத்துடனே அவன் அங்கே வந்திருந்தான்.

"நான் அப்படிப் பேசி உன் மனசை கஷ்டபடுத்திருக்கக் கூடாது" என்று அவன் அவளிடம் சமாதான கொடியைப் பறக்கவிட,

"பரவாயில்லை... என்னால புரிஞ்சுக்க முடியுது... நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணப் பண்ணிக்கோங்க" என்றவள் சாதரணமாக சொல்ல அவனுக்கு நெஞ்சை அடைத்தது.

அதிர்ச்சியடைந்தவன், "என்ன? பட்டுன்னு இப்படி சொல்லிட்ட..." என்றான்.

"எப்படி சொல்லிட்டேன்?"

"வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி"

"நீங்கதான் என்னை அந்த மாதிரி பார்க்கலயே... அப்போ எந்தப் பொண்ணைப் பார்த்தா அந்த மாதிரி ஃபீலிங்ஸ் வருதோ அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க"

"புரிஞ்சிக்கோ தேவி... உன்னை நான் அப்படி பார்க்கலங்கிறது உண்மை... அதே நேரத்தில உன்னை அப்படிப் பார்க்கவே முடியாதுன்னு சொல்லலேயே"

இந்த வார்த்தைகளைக் கேட்டு தேவியின் மனம் இன்புற்று மீண்டும் காதல் கனவில் மிதந்திருக்க அவனே தொடர்ந்தான்.

"உன்கிட்ட நான் அப்படி சொன்னனே அது உன்னை நிராகரிக்க இல்லை... வேற காரணம்..." என்றுரைத்தவனைக் கேள்வியாய் பார்த்தாள்.

"உன் அண்ணன் உங்க அம்மான்னு யாருக்குமே தமிழைப் பிடிக்காது... அதுவும் இல்லாம எங்க நட்பை கலங்கப்படுத்திப் பேசினவங்க... நாளைக்கே நான் உன்னை காதலிச்சு அதெல்லாம் தமிழோட வாழ்க்கையில பிரச்சனையா மாறிட்டா... அந்த பயம்தான்...

ஆனா தமிழ் எனக்கு புரிய வைச்சா... உங்க அண்ணனும் உங்க அம்மாவும் ரொம்பவும் மாறிட்டாங்கன்னு... அப்புறம் நீ என்னை எந்தளவுக்கு நேசிக்கிறன்னு" என்று ரகு சொல்ல, தேவி பொறுமையாய் கேட்டாள்.

அவன் அவனுடைய ஆசை கனவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் தன் தோழியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்திருக்கிறான் என எனும் போது இத்தகைய நட்பை பெற தன் தமக்கை உண்மையிலேயே புண்ணியம் செய்திருக்கிறாள் என்று தோன்றியது.

இவற்றை எல்லாம் தாண்டி ரகுவின் மீதான மரியாதை அதிகரித்து அவன் இன்னும் அவளுக்குள் போற்றுதலுக்குரிய இடத்தைப் பெற்றுவிட்டான்.

அவள் சமாதானமானதற்கு சான்றாய் அவள் உதடுகள் புன்னகையை உதிர்க்க, ரகு தன் கரத்திலிருந்த மல்லிகைப் பூவை அவளிடம் நீட்டினான்.

அவள் வித்தியாசமாய் பார்த்தபடி, "எல்லோரும் யூஸ்வலா ரோஸ்தானே கொடுப்பாங்க" என்று கேட்க,

அந்த நொடி அவர்கள் முன்னே பிரசன்னமான அவன் தோழி, "அவன் நிறைய பேருக்கு ரோஸ் கொடுத்துட்டான்... ஒன்னும் வொர்க் அவுட் ஆகல... அதான் உனக்கு டிஃப்ரண்ட்டா மல்லிப்பூக் கொடுத்துப் பார்க்கிறான்" என்றுரைத்து அவன் காலை வாரியதோடு அல்லாமல், "கரெக்ட்தானே ரகு" என்று கேட்டு குறும்புத்தனமாய் புன்னகையித்தாள்.

"ஒய் திஸ் கொலைவெறி?!" என்றவன் அவளைக் கடுப்பாகப் பார்க்க,

"ரொம்ப ஃபீல் பண்ணாதடா... அல்ரெடி உன் கதை எல்லாம் என் தங்கச்சிக்கிட்ட எப்பவோ சொல்லிட்டேன்" என்றாள்.

ரகு பதட்டத்துடன், "உங்க அக்கா என்னை பத்தி சொல்றதை எல்லாம் நம்பாதே... வேணும்டே என்னை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவா" என்றான்.

"அடப்பாவி... நான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்றேனா... இருடி இரு... நீ பொய் சொல்லிட்டு இங்க வந்த மேட்டரை என் வீட்டுக்கார்கிட்ட வத்தி வைக்கிறேன்"

"வத்தி வையேன்... எனக்கென்ன பயமா?"

"பயமான்னா கேட்கிற.. இரு... இப்பவே நான் கால் பண்றேன்??? "

தேவி புரியாமல் பார்த்திருக்க, ரகு ஏளனமாய் "பண்ணு" என்று தன் தோழியிடம் எகத்தாளமாக உரைத்தான்.

அவனுக்குத் தெரியும். அவள் அப்படி எல்லாம் செய்யமாட்டாள் என்று! ஆனால் தமிழ், "ஓ அவ்வளவு தைரியமா?" என்று தன் கைப்பேசியை எடுத்து உண்மையிலேயே அவனுக்கு அழைக்க முற்பட்டுக் கொண்டிருந்தாள்.

தேவிக்கோ அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைப் பார்த்துச் சிரிப்பு தாங்கவில்லை. இருவருக்கும் தடலாடியாய் பத்து வயது குறைந்துவிட்டதோ என்று தோன்றியது.

அந்த சமயம் தமிழ் தன் கணவனுக்கு அழைக்கும் முயற்சியைக் கைவிட்டு அதிர்ச்சியுடன், "டே ரகு... ஏசிபி" என்றாள்.

"என்ன? ஃபோன் பண்ணலயா... உனக்கே பேச பயமா இருக்கா?!"

"டே… அவர் இங்கே வந்துட்டிருக்காரு"

"இப்படி எல்லாம் சொன்னா நாங்க பயந்திருவோமா?! போடி"

"அட எருமை... திரும்பி பாரு" என்று அவள் பதட்டத்தோடுக் கூறவும் திரும்பிப் பார்த்தவனுக்கு பூகம்பமே வந்தது போல் ஓர் அதிர்ச்சி.

பூகம்பம் வரவில்லை. வீரேந்திரன்தான் வந்து கொண்டிருந்தான். காக்கி பேண்டும் நீல நிற ஷர்ட்டுமாய் கம்பீரமாய் வந்து கொண்டிருக்க ரகு தமிழிடம், "இப்ப என்னடி பண்றது? " என்றான்.

"என்னை கேட்டா? போய் ஒளிஞ்சுக்கோ... அவரு உள்ளேதான் வராரு... நீ அப்படியே வெளியே போயிடு" என்றதும் தன் கரத்தில் இருந்த பூவைத் தேவியின் கையில் அவசரமாக திணித்தவன், அடுத்த கணமே சென்று ஒரு தூணின் பின்புறம் மறைந்து கொண்டான்.

தேவி தன் தமக்கையிடம், "ட்யூட்டி டைம்ல மாமா ஏன் இங்க வர்றாரு?" என்று கேட்க,

"என்னை டென்ஷன் படுத்ததான்" என்றாள்.

"நீ ஏன் டென்ஷனாகனும்... ரகு ஏன் மாமாவைப் பார்த்து ஒளிஞ்சுக்கணும்" என்று தேவி தீவிரமாக தன் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே வீரேந்திரனின் பார்வை அவர்களை கவனித்துவிட்டது.

தன்னை நோக்கி வரும் கணவனை கவனித்த தமிழ் தன் தங்கையின் காதோரம், "தெய்வமே! வீட்டுக்கு போய் உனக்கு எல்லாத்துக்கும் விளக்கம் தர்றேன்... உங்க மாமா முன்னாடி எதையும் உளறி வைக்காதே" என்றாள

வீரேந்திரன் அவர்களை நெருங்கினான். எதிர்பாராமல் மனைவியைப் பார்த்த பூரிப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அவளோ பயத்தில் வராத புன்னகையை இயந்திரத்தனமாய் வரவழைத்தாள்.

"நீ காலையில என்கிட்ட கோயிலுக்கு வரப் போறேன் சொல்லவே இல்லயே"

"அது திடீர்னு தோனுச்சு... அதான் நானும் தேவியும்... நீங்க என்ன? ட்யூட்டி டைம்ல கோயிலுக்கு வந்திருக்கீங்க"

"ஒரு விசாரணைக்காகதான்..."

"என்ன விசாரணை?"

"அது ஒன்னும் இல்லை... இந்தக் கோயில் அறங்காவலரை விசாரிக்கலாம்னு வர்ற சொன்னேன்..." என்றவன் தன் மனைவியின் காதோடு ரகசியமாய்,

"இந்தக் கோயிலில் கூட எதோ ஒரு ஐம்பொன் சிலையை மாத்திருக்காங்கன்னு தகவல்" என்றான்.

அவள் அதிர்ச்சியோடு, "அப்படியா?!" என்று கேட்க அவனும் தலையசைத்தான். உடனடியாக தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், "நீங்க சாமி கும்பிட்டீங்களா?!" என்று கேட்க தேவி, "இல்ல மாமா" என்றாள்.

"சரிமா… நீங்க சாமி கும்பிட்டுக் கிளம்புங்க.. நான் கொஞ்சம் வேலையா வந்துருக்கேன்" என்றபடி தமிழைப் பார்க்க அவளும் இயல்பாய் தன் இமைகளை அசைக்க அவனும் தன் காந்தப் புன்னகையை வீசிவிட்டு அங்கிருந்து செல்ல ரகுவும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவிட்டான்.

தேவி ரகு கொடுத்தப் பூவை தன் தலையில் சூடிக் கொண்டு ஏக்கமாய் வாசலைப் பார்த்தாள். பார்த்து ரசிக்க அவனில்லை என்ற தவிப்பு!

"என்ன தேவி? ஃபீலிங்ஸா... எங்கப் போயிட போறான்? வாழ்க்கை பூரா உன் கூடவே வந்து உன்னைத் தொல்லை பண்ண போறான்" என்று சொல்லி நகைத்த தமிழ் தன் தங்கையின் தோளை அணைத்துப் பிடித்தாள்.

"சே! அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா" என்று சொன்னாலும் அவளின் நாணம் அவள் மனவுணர்வுகளை அப்பட்டமாய் காட்டிக் கொடுத்தது .

அதன் பிறகு இருவரும் கடவுளை வணங்க தமிழோ அவர்களின் காதலுக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ள, தேவி சந்தோஷத்தின் உச்சியில் இருந்ததால் எந்த வேண்டுதலும் வைக்கவில்லை.

அப்போதைக்கு ரகுவே அவளின் நினைவுகளை முழுமாய் ஆக்கிரமித்துக் கொண்டான். கோயிலைவிட்டு வெளியேறிய சமயம் தமிழின் விழிகள் கணவனை புறப்படுவதற்கு முன்னதாக ஒருமுறை பார்த்துவிட மாட்டோமா என்று சுற்றி ஆராய்ந்து கொஞ்சம் ஏக்கமானது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content