You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Monisha's VET - 8

8

சென்னை பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை. தங்க நிறத்தில் தகதகவென மின்னிக் கொண்டிருக்கும் கதிரவனின் கிரணங்கள் கடல் நீரில் பட்டு பொன்னாய் ஜொலித்து கொண்டிருந்த அந்த அழகான காலை வேளையில்....

இயற்கையின் அந்த அற்புத அழகை ரசிக்காமல் அல்லது ரசிக்கும் எண்ணமே இல்லாமல் தமிழ் மிக ஆர்வமாய் தன் தேடலைத் தொடங்கியிருந்தாள். அப்போதைக்கு அவள் விழிகள் காண விழைந்தது என்னவோ அந்த உயர்ந்த மனிதனைதான்.

வீரேந்திரனைத் தேடிக் அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தை சுற்றிலும் அவள் அலைந்து திரிந்துவிட்டாள். ஆனால் அவன் அவள் பார்வைக்கு புலப்படவில்லை.

இன்றும் மன்னிப்பு கேட்கும் வாய்ப்பு கிட்டாதோ என்று அவள் சோர்வாக இடையில் கை வைத்து கொண்டு நிற்க, யாரோ அவள் தோளை இடித்துவிட்டு எதிர்புறத்தில் ஓட,

‘யாருடா அவன்?’ என்று அவள் எரிச்சலாக நிமிர்ந்த அதே சமயம் ஒரு கம்பீர குரல் அவளிடம், "சாரி" என்றது. அந்த கம்பீர குரலுக்குரியவன் வேறு யாருமல்ல. வீரேந்திரனேதான்.

தமிழின் விழிகள் அசைவற்று அவனைப் பார்க்க, வீரேந்திரனும் ஒரு நொடி அவளைப் பார்த்து ஸ்தம்பித்துவிட்டான். அதேநேரம் அவனுக்குள் கோபமும் தலைதூக்க, கூர் வாளாக அவன் விழிகள் அவளைத் தாக்க முற்பட்டன.

ஆனால் அவளோ, “ஹாய்” என்று மிக சாதரணமாக அவனிடம் கையுயர்த்தி புன்னகைப் பூத்தாள்.

அவளின் அந்தப் புன்னகை சட்டென்று அவன் கோபத்தை எல்லாம் கரைந்து போகச் செய்துவிட, அதனைத் துளியும் விரும்பாதவன் முகத்தைத் திருப்பி கொண்டு மீண்டும் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தான்.

"ஹெலோ… சார்… ஏசிபி சார்… ஏசிபி சார்… நில்லுங்க" என்று அவள் கூப்பிட்டுக் கொண்டே அவன் பின்னோடு ஓட, அவனோ அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை.

'பெரிய இவன்னு நினைப்பு... கூப்பிட கூப்பிட கேட்காத மாறியே போறான்... அவ்வளவும் ஈகோ' என்றவள் கடுப்பான போதும் அவனை விடுவதாக இல்லை.

அவன் ஈகோவை சீண்டும் விதமாக, "ஒரு பொண்ணை நின்னு முகத்துக்கு நேரா ஃபேஸ் பண்ண முடியாம தெறிச்சு ஓடிறீங்க... இதுதான் உங்க வீரமா ஏசிபி சார்? நீங்கெல்லாமா நம் நாட்டோட சட்ட ஒழுங்கை காப்பாத்த போறீங்களா?" என்று ஏளனமாகக் கேட்டாள்.

அந்த நொடியே தன் ஓட்டத்தை நிறுத்திவிட்டு விறுவிறுவென திரும்பி அவளை நோக்கி நடந்து வந்தான்.

அவளுக்கு லேசாக கிலிப் பற்றிக் கொண்ட போதும் அதனைக் காட்டிக் கொள்ளாமல் நிற்க அவன் சீற்றமாக, "இப்போ யாரு தெறிச்சு ஓடினது" என்று கேட்டான்.

"வேற யாரு... நீங்கதான்" என்றவள் தோள்களை அலட்சியமாகக் குலுக்க, அவன் முகம் கடுகடுத்தது.

"முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்க... நான் உன்னைப் பார்க்கப் பேசக் கூட விருப்பப்படல... அதனாலதான் ஒதுங்கிப் போறேன்... அதை நீ உனக்கு சாதகமா எடுத்துக்காதே" என்றவன் சொல்லிவிட்டுத் திரும்பி நடக்க,

“சார்… ஏசிபி சார்… ஒரு நிமிஷம்” என்றவள் மீண்டுமே அவனைக் கத்தி அழைத்தாள். அவனுக்கு மிகுந்த கடுப்பானது.

“என்ன பிரச்சனை உனக்கு? காலங்கத்தால எதுக்கு என்னை டென்ஷன் படுத்திட்டு இருக்க… என்ன?... உன் பத்திரிகைக்கு ஏதாச்சும் கன்டென்ட் வேணுமா? அதுக்கு நான்தான் கிடைச்சேனா உனக்கு?

இப்படி துரத்திட்டே வந்து என்னை ஏதாச்சும் தப்பா பேச வைச்சு… அதை உன் பத்திரிக்கைல எழுதி… என் பேரை ஸ்பாயில் பண்ணலாம்னு இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்கியா நீ” என்றவன் படுகோபமாகப் பேச, அவள் விக்கித்து போய் நின்றாள்.

“அப்படி இல்ல ஏசிபி சார்” என்றவள் பொறுமையாகப் பேச முயன்றும் அவன் அதற்கான வாய்ப்பே தராமல்,

“ஊருக்குள் எவ்வளவோ அரசியல்வாதி மொள்ளமாறித்தனம் பண்ணிட்டு இருக்கான்… அவன் பின்னாடிப் போ… இல்ல ஏதாச்சும் போலி சாமியார் ஆசிரமத்துல போய் கேமரா வை… கன்டென்ட் கிடைக்கும்… என்னை விட்டுடு” என்றவன் வெறுப்பைப் பார்வையிலேயே உமிழ்ந்துவிட்டுத் திரும்பிச் செல்ல எத்தனிக்க,

"என்னை பேசவே விடாம… நீங்களே பேசிட்டுப் போனா என்ன அர்த்தம்… ஒரே நிமிஷம் நான் சொல்றதைக் கேட்டிட்டுப் போங்க" என்றவள் அழுத்தமாக உரைத்தாள்.

அவன் திரும்பி அவளை அதே மாறாத வெறுப்போடு நோக்க, "எனக்கு உங்க கோபம் புரியுது... பட் நான் அப்படி ஒரு தப்பைத் தெரிஞ்சு செய்யல... இந்த மாதிரி தப்பை நான் என் கரியர்ல இதுவரையிலும் செஞ்சதே இல்ல.. ஏதோ மிஸ்அன்டர்ஸ்டேன்டிங்லதான் அப்படி ஒரு தப்பான நீயூஸ் பப்ளிஷ் பண்ணிட்டேன்... ஐம் எக்ஸ்ட்டிரீம்லி சாரி ஃபார் தட்" என்றவள் நிதானமாய் சொல்ல, அவனின் கோபம் துளியளவும் குறைந்ததாகவே தெரியவில்லை.

"குத்திக் காயப்படுத்திட்டு சாரி கேட்டா சரியா போயிடுமா?" என்றவன் கேட்க,

"நீங்க சொல்றது புரியுது... நான் மறுப்பு செய்தியும் கொடுத்திட்டேன்... அது நெக்ஸ்ட் வீக் மேகஸின்ல வந்திரும்" என்றாள்.

"அதெப்படி?! உங்க இஷ்டத்துக்கு நீங்க எழுதிடுவீங்க... அப்புறம் மறுப்பு செய்தி கொடுத்திட்டா முடிஞ்சிடுமா... எனக்கு இதனால ஏற்பட்ட அவமானத்திற்கு என்ன பதில்?" என்று கேட்க அவள் மௌனமானாள்.

"பதில் சொல்ல முடியல இல்ல" என்று அவளைக் குத்தும் பார்வைப் பார்த்தவன் அவள் ஏதோ சொல்ல எத்தனிக்க அவன் கையமர்த்தி,

"நான் என்ன சொன்னாலும் உன்னால என் நிலைமையைப் புரிஞ்சிக்கவும் முடியாது... இப்ப நீ போடற உன் மறுப்பு செய்தியால எதையும் மாத்திடவும் முடியாது... நீ எனக்கு ஏதாவது செய்ய முடியும்னா... பெட்டர் டோன்ட் கம் இன் மை வே... யூ காட் இட்" என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவளைப் புறக்கணித்தபடி எதிர்புறத்தில் முன்னேறி நடந்தான். அவள் மனமோ தவிப்புற்றது.

அவன் வெகுதூரம் சென்றுவிட, சட்டென ஏதோ நினைவு வந்தவாளாய் அவனை நோக்கி ஓடிப் போனவள் அவனை வழிமறித்து மூச்சிறைத்தபடி நின்றாள். அவன் அவளைப் புரியாமல் பார்த்தான்.

அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபடி, "ஐம் சாரி… உங்களை டென்ஷன் படுத்திறது என் நோக்கம் இல்ல… ஆனா திரும்பவும் சொல்றேன்... உங்கப் பேரைக் கெடுக்கனும்னோ... இல்ல உங்க டிக்னிட்டியை ஸ்பாயில் பண்ணனும்னோ நான் இப்படி எல்லாம் செய்யல... சத்தியமா செய்யல… என்னை நம்புங்க” என்றவள் அழுத்தமாக உரைக்க, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இப்போதும் கூட அதே நேர்கொண்ட விழிகள்தான். மன்னிப்பு கேட்கும் போது கூட கண்களைப் பார்த்து பேசும் அவள் நேர்மை அவனுக்குப் பிடித்திருந்தது.

அன்று திமிராகவும் தைரியமாகவும் சண்டையிட்டு வியக்க வைத்தவள் இன்று நேர்மையாக தன் தவறை ஏற்று மன்னிப்பு கேட்டு வியக்க வைக்கிறாள். தன்னையறியாமல் அவனை ரசிக்க வைக்கிறாள்.

விழியெடுக்காமல் அவன் அவளையே பார்த்திருக்க, “ஏசிபி சார்” என்றவள் குரல் அவனை இயல்புக்கு அழைத்து வந்தது.

“உனக்கு இப்போ என்னதான் வேணும்” என்றவன் குரலில் இம்முறை கோபமும் இல்லை. வெறுப்பும் இல்லை. கைகளைக் கட்டிக் கொண்டு அவளை நிதானமாக ஏறிட்டான்.

“அக்சுவலி ஒரு காலேஜ் பொண்ணு... நீங்க அவகிட்ட மிஸ்பிஹேவ் பண்ணதா சொன்னா... நீங்க விடாம டார்ச்சர் பண்றதா வேற சொன்னா... நான் இதை பத்தி கமிஷ்னர்கிட்ட கம்பிளைன்ட் பண்ணலாம்னு சொன்னதுக்கு... போலீஸ்கிட்ட போனாலே என் கரியர் லைஃப் எல்லாம் ஸ்பாய்லாயிடும்னு பயந்தா.. அதான்" என்றவள் சொல்லி முடிக்க,

அவன் யோசனையோடு, "யார் அந்தப் பொண்ணு... அவ  டீடைல்ஸ் இருக்கா உன்கிட்ட" என்று கேட்டான்.

"ம்ம்ம்" என்று சொல்லி அவள் கைப்பேசியில் இருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் காண்பித்து அவள் பதிவு செய்து வைத்திருந்த அந்தப் பெண் பேசியதெல்லாம் அவனுக்குப் போட்டும் காண்பித்தாள். அவன் அவற்றை எல்லாம் கேட்டுத் திகைப்புற்றான்.

"அது சரி… யாராச்சும் என்னைப் பத்தி இப்படி தப்பு தப்பா சொன்னா உடனே அதை நம்பி எதை வேணா எழுதிடறதா?" என்று மீண்டும் கோபமாக அவன் கேட்க,

"அப்படி எல்லாம் இல்ல... நானே தனிப்பட்ட முறையில உங்களைப் பத்தி விசாரிச்சேன்" என்றவள் சொல்ல,

"என்ன விசாரிச்ச?" என்றவன் பார்வை அவளைக் கூர்மையாக நோக்கியது.

"நீங்க காலேஜ் டேஸ்ல எல்லாம் பிளே பாயாமே... நிறைய கேர்ள் ஃப்ரண்ட்ஸ் அப்படின்னு" என்று இழுத்தவளை முறைத்து பார்த்தவன்,

"அதெல்லாம் என் பழைய கதை" என்றான்.

"அப்போ அதெல்லாம் உண்மைதானா?" என்றவள் விழிகள் வியப்பைக் காட்டின.

"அது என் பெர்ஸனல்" என்றவன் சொல்லவும்,

"சரி ஓகே ... அப்போ அந்த ராதா கேஸ்" என்று அவனை நோக்கி கேள்வி எழுப்ப, மெல்ல தன் பாதையில் முன்னேறி நடந்தபடி சொன்னான்.

"அந்த கேஸ்ல... ராதாவோட ஹஸ்பென்ட்... வீட்டில வேலை செய்ற பொண்ணுகிட்ட மிஸ்பிஹேவ் பண்ணிருக்கான்... அவனைத் தடுக்க ராதா முயற்சிக்கும் போது கொஞ்ச பலமா அடிச்சதில அவன் இறந்துட்டான்... தற்காப்புகாகக் கொலைன்னு ஃபைல் பண்ணிருக்கலாம்...

ஆனா ராதா கோர்ட் கேஸ்னு அலையணும்... அப்புறம் அந்தப் பதினெட்டு வயசு பொண்ணோட ஃப்யூச்சர்னு... எல்லாத்தையும் பத்தி யோசிச்ச போது... நேர்மையா இருக்கிறதை விட மனதாபிமானத்தோட நடந்துக்கனும்னு தோனுச்சு... ஸோ நான் அந்த கேஸ்ஸை ஆக்ஸிடென்ட்னு ஃபைல் பண்ணேன்...இதுல என்ன தப்பு" என்று அவன் சொன்னதைக் கேட்ட நொடி தமிழுக்கு அவன் மீது அளவு கடந்த மரியாதை ஏற்பட்டது.

அவனைப் போய் தவறாகச் சித்திரித்துவிட்டோமே என்று தன் மீதே அவளுக்குக் கோபம் உண்டானது.

ஒரு வகையில் வீரேந்திரனுக்கும் தமிழ் மீது ஏற்பட்ட தவறான பிம்பமும் மாறியிருந்தது. இருவருமே மௌனமாய் அந்த மணற்பரப்பில் நடந்தனர்.

தமிழ் தன் மௌனம் கலைத்து, "நான் கேட்ட... விசாரிச்ச விஷயம் எல்லாம் உங்களைத் தப்பாவே காட்டிடுச்சா... இல்ல நான்தான் தப்பான கண்ணோட்டத்தில உங்களைப் பார்த்திட்டேனான்னு எனக்கு தெரியல... பட் எப்படி பார்த்தாலும் நான் செஞ்சது பெரிய தப்புதான்... எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்களேன்" என்று கேட்டாள்.

"தப்பு எல்லோருமே பண்ணுவாங்க... பட் அந்தத் தப்புக்கு இறங்கி வந்து மன்னிப்பு கேட்கிற துணிச்சல்... அது நிறைய பேர்கிட்ட இருக்கிறதில்ல... யூ ஹேவ் தட் கட்ஸ்" என்றவன் தன் இறுக்கத்தைத் தளர்த்திப் புன்னகைத்தான்.

“ப்பா சிரிச்சிட்டீங்க ஏசிபி சார்” என்றவள் ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போலக் கண்டவள் வழியில் இருந்த மேட்டைக் கவனிக்காமல் இடித்து விழப்போக, அவன் அவளைத் தாங்கிக் கொண்டான்.

வெகுசில நொடிகள்தான்… அவன் அவளைவிட்டு விலகி நின்றுவிட்டான். எனினும் அவர்கள் விழிகள் மிக நெருக்கமாக சந்தித்து கொண்ட அந்தக் கணத்தில் ஏதோ காந்த விசையை உணர்ந்தது போல இருவருமே பார்வையால் கட்டுண்டனர்.

அப்போது எங்கிருந்தோ ஒரு கைத்தட்டல் ஒலி அவர்களின் மோன நிலையை கலைக்க, இருவருமே சற்று சுதாரித்தனர்.

"வாட் அ ரொமான்டிக் சீன் வீர்…" என்று ஸ்வேதா கைத்தட்டியபடி அவர்கள் அருகில் வந்து நின்றாள்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy

You cannot copy content