You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Muran Kavithaigal - 14

Quote

14

எல்லோரும் முகப்பறையில் கூடியிருந்தனர்.

ஆனாலும் யாரும் எதுவும் பேசவில்லை. அந்த இடமே ஒருவித மோன நிலையில் அமிழ்ந்திருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு விதமான பீதி உணர்வு அலையலையாகப் பொங்கியதை அவர்கள் முகங்கள் அப்பட்டமாகப் பிரதிபலித்தன.

சுவரில் சாய்ந்தபடிக்கு நின்றிருந்த ஜோஷிகாவின் சிவப்பேறிய முகம் இன்னும் அதிகமாக சிவந்திருந்தது. இன்னும் அவள் கன்னங்களில் நீரின் தடங்கள் நின்றிருந்தன. நிரஞ்சன் அவள் கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டிருந்தான். அந்தப் பற்றுதலில் அவள் மனம் நிதானித்திருந்தது.

மனைவியின் முகத்தைக் கண்டவன், “நானும் ஜோஷியும் போய் அவங்க அப்பாவுக்கு ஹெல்பா இருக்கலாம்னு” என்று சொல்லி முடிக்கும் முன்னர் மாதவன் கொதிப்புடன் எழுந்தார்.

“என்ன விளையாடிட்டு இருக்கியா… உங்களுக்கும் ஏதாச்சும் வந்துட்டா… அப்புறம் உங்களை யார் பார்த்துக்கிறது” என்று சீறலாகக் கேட்க, ஜோஷிகா அதிர்ச்சியாக நிமிர்ந்தாள்.

“ஆமா மச்சான்… மாமா சொல்றது சரிதான்… நீங்க அங்கே போனா உங்களுக்கும் ரிஸ்க்தான்… அதனால எதுவா இருந்தாலும் இங்கிருந்தே செய்ய முடியுமான்னு பாருங்க” என்று உதய் பேச,

“அதெப்படி முடியும்… நம்ம வீட்டுல கைக் குழந்தை இருக்கு… சின்ன பசங்க இருக்காங்க… அப்பாவுக்கு வேற சுகர்” என்று மிருதுளா அடுக்கடுக்காகக் கருத்துச் சொன்னாள்.

சட்டென்று ஜோஷியின் கண்கள் சீற்றத்துடன் விரிய அதனைக் கண்டு கொண்ட நிரஞ்சன் அவள் பேசுவதற்கு முன்பாக முந்திக் கொண்டு,

“அதுக்காக ஜோஷியோட அப்பாவே விட்டுற முடியுமா?” என்று வினவவும் மீண்டும் ஒரு அமைதி நிலை ஆக்ரமித்துக் கொண்டது.

மிருதுளா அந்த மௌனத்தை உடைத்து மெதுவாகப் பேசினாள்.

 “நாம என்னடா செய்ய முடியும்… நியூஸ்ல எல்லாம் அவ்வளவு தூரம் சொல்றாங்க… கொஞ்சமாவது அதெல்லாம் ஃபாலோ பண்ணனுமா இல்லையா… எதையும் ஃபாலோ பண்ணல… இதுல எப்பப்பாரு ஹோட்டல் சாப்பாடு வேற” என்று அவள் வார்த்தைகள் பரிதாபாமாக ஆரம்பித்து குற்றச்சாட்டாக நீளவும் அதனை உணர்ந்த ரேணு, 

“மிருது அமைதியா இரு…” என்று அதட்டினார்.

மிருதுவின் பேச்சைக் கேட்ட ஜோஷிகா நிரஞ்சனைக் கோபமாக முறைக்க என்ன செய்வதென்று புரியாமல் அவன் சங்கடத்துடன் நின்றான்.

ரேணு நிதானமாக தன் குரலை எழுப்பினார்.

“மிருது… நீ பசங்களைக் கூட்டிட்டு உங்க வீட்டுக்குப் போ… அப்படியே போகும் போது சாதனாவையும் குழந்தையையும் அவங்க மாமியார் வீட்டுல விட்டுடு” என்றவர் ஒரு முடிவுடன் கூற, மாதவன் உட்பட எல்லோருமே அதிர்ந்தனர்.

அத்தனை நேரம் அந்தப் பிரச்சனைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல அமைதியாக நின்ற சாதனா எழுந்து, “என்னமா சொல்ற… எப்படிமா குழந்தையை வைச்சுக்கிட்டு நான்” என்று கேட்க,

“மாப்பிளைதான் ஹோட்டலில் தங்கிக்கிறாரு இல்ல… அப்புறம் அங்கே உன் மாமியார் மாமனார்தான் இருக்காங்களே… அவங்க பார்த்துப்பாங்க… அதுவும் இல்லாம பாப்பாவுக்கு அஞ்சு மாசம் ஆகப் போகுது… இனிமே நீயே சமாளிச்சுக்கலாம் சாதனா” என்றதும் அவளை அச்சம் தொற்றிக் கொண்டது. 

“அவங்க இருப்பாங்கதான்… ஆனாலும் எப்படி குழந்தையை வைச்சுக்கிட்டு நான் தனியா” என்று தயக்கத்துடன் இழுக்க, 

“என்ன தனியா… நாங்கெல்லாம் எதுவும் தெரியாத வயசுலேயே பிள்ளையைப் பெத்து வளர்த்திருக்கோம்… நீ என்னடானா டாக்டருக்குப் படிச்சிட்டு இப்படி பயப்படுற… தைரியமா கிளம்பிப் போ… இப்போ நீயும் குழந்தையும் இங்க இருக்கிறது சேஃப் இல்லன்னுதான் சொல்றேன்… இல்லாட்டி அம்மா உங்ளை அனுப்பிவிடுவேனா?” என்று கேட்கும் போதே அவர் தொண்டை அடைத்து கண்களில் கண்ணீர் நின்றது.

“சரிம்மா புரியுது…”  என்று சாதனா விருப்பமில்லாமல் தலையசைக்க,

“சரி உன் திங்க்ஸ்… பாப்பாவோடது எல்லாம் பார்த்து மிஸ் பண்ணாம பேக் பண்ணிக்கோ” என்று விட்டு மிருதுவின் புறம் திரும்பி,

“நீயும்தான்” என்றார்.

மிருது உடனே, “ம்மா நீயும் அப்பாவும் எங்க கூட வந்திருங்க” என,

“எங்களை எங்களுக்குப் பார்த்துக்க தெரியும்… நீங்க உங்களை உங்க பசங்களைப் பத்திரமா பார்த்துக்கிட்டா போதும்” என்று அந்தப் பேச்சை அதோடு முடித்துவிட்டார்.

ஜோஷிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. தன் தந்தையின் நிலைமையைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை. அமைதியாக அந்தக் கூட்டத்திலிருந்து நழுவிக் கொண்டு வந்து விட்டாள்.

கடந்த சில மாதங்களாக அவளும் ஜோசப்பும் சேர்ந்து செய்த அட்டாகாசங்கள் எல்லாம் நினைவுகளாகப் பெருகின. கூடவே மிருதுளா பேசியது என்னவோ மனதை அழுத்தியது. அவள் சொன்னது போல கொரானா எச்சரிக்கையை மிக இலகுவாக எடுத்துக் கொண்டது தவறாகிப் போனதோ? இதனால் தன் தந்தைக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்…

பால்கனியில் வந்து நின்று தன் அறையினைப் பார்த்தாள். தந்தைக்கு அலைப்பேசியில் அழைத்தாள்.

அதற்குள் கீழே இதை எடுத்து வை… அதை எடுத்து வை என்று அவர்கள் புறப்படுவதற்குள் வீடே அதகளப்பட்டுக் கொண்டிருந்தது. உதய்க்கோ கொரானா பயத்தை விட இனி மாமியார் கையால் சாப்பிட முடியாதே என்ற கவலைதான் அதிகமாக இருந்தது.

புலம்பிக் கொண்டே தன் லேப்டாப் பேகை தயார் செய்து கொண்டிருக்க தருண், “நாங்க இங்கேயே இருக்கோம் ப்பா” என்று கெஞ்ச, மிருது அவன் முதுகில் சரேலென்று ஒரு அடிப் போட்டாள்.

அவ்வளவுதான். கணவனுடன் சேர்த்து மகன்கள் இருவரும் கப்சிப்பென்றுக் கிளம்பி வெளியே வந்தனர்.

சாதனாவின் கண்களில் கண்ணீர் பிரவாகமாகப் பொங்கியது. அம்மா இல்லாமல் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ள போகிறோம் என்ற பயம் அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

ரேணு மகள் எதையும் மறந்துவிடாமல் அனைத்தையும் பார்த்து பார்த்து எடுத்து தந்தவர், “இந்தா குழந்தைக்கு தேவையான மருந்தெல்லாம் இதுல வைச்சு இருக்கேன்” என்று அந்த டப்பாவை அவள் கையில் கொடுத்து கண்ணீருடன் மகளையும் அவள் கையிலிருந்த பேத்தியையும் சேர்ந்தார் போல அணைத்து முத்தமிட்டார்.

குழந்தை அவரிடம் தாவிக் கொண்டு வந்தது. தன் பொக்கை வாயால் அவர் முகம் பார்த்து தெய்வீகமாகச் சிரித்தது. பேத்தியின் இந்த மழலைப் புன்னகையைப் பார்க்கையில் அவருடைய வேலை அலுப்புகள் மற்றும் வலிகள் யாவும் மறந்தும் மறத்தும் போய்விடும். இவ்வளவு நாளாக ஏதோ போதை மருந்து சாப்பிடுவது போல அப்படியே பழக்கப்பட்டுவிட்டார். ஆனால் இனி அந்தப் போதை இல்லை.

மார்போடு பேத்தியை அணைத்துக் கொஞ்சினார்.

பெண்ணைப் பெற்றவர்களுக்கு வளர்க்கதான் உரிமை உண்டு. உறவு கொண்டாட இல்லை. இந்தப் பிரிவு என்றாவது ஒரு நாள் நிகழ்ந்துதான் ஆக வேண்டும்.

ஆனால் இப்படி திடுதிப்பென்று நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கண்களில் நிற்காமல் வழிந்து கொண்டிருந்த நீரைப் புடவை முந்தானையால் துடைத்துவிட்டு பூஜை அறைக்குச் சென்று விபூதி தட்டை எடுத்து வந்து எல்லோர் நெற்றியிலும் விபூதியை இட்டு வழியனுப்பினார்.

“ஹைவேஸ்ல போகாதீங்க மாமா… போலீஸ் இருக்கும்” என்று நிரஞ்சன் உதய்யிடம் அவர்கள் செல்ல வேண்டிய பாதையைப் பற்றி விவரித்து முடிக்க,

“பார்த்து பத்திரமா ஓட்டிட்டுப் போங்க மாப்பிளை” என்று மாதவன் பின்னோடு நின்று அக்கறையாகச் சொன்னார். அவர் கண்களில் கண்ணீர் கரைத் தொட்டிருந்தன.

“சரிங்க மாமா… போயிட்டு வரேன் அத்தை… வரேன் ரஞ்சன்” என்று விடைப்பெற்றவன் அங்கே ஜோஷி இல்லாததைக் கவனித்து, “ஜோஷிகா கிட்ட சொல்லிடு மச்சான்” என்றபடி காரை எடுக்க அவர்கள் கண்ணீருடன் கையசைத்தனர்.

திடீரென்று இப்படியொரு சூழ்நிலை உருவாகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் எல்லாம் நிகழ்ந்துவிட்டது.

ஒவ்வொரு நாளிலும் வாழ்க்கை நமக்காக வைத்திருக்கும் ஆச்சரியங்கள் அது. 

அவர்கள் எல்லோரும் சென்ற பிறகு அந்த வீடே வெறிச்சோடி போனது. சோஃபாவில் வந்தமர்ந்த மாதவனுக்கு அந்த வீட்டில் தனிமைப் பீடித்துக் கொண்ட உணர்வு. எங்கு திரும்பினாலும் ஏதாவது ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பேரன்கள் எதையாவது உருட்டிக் கொண்டிருப்பார்கள். பேத்தி ஓயாமல் அழுது கொண்டிருப்பாள். உதய் ஏதாவது கமெண்ட் அடித்துக் கொண்டிருப்பான். மாலை நேரமாகிவிட்டால் எல்லோரையும் கார்ட் விளையாட அழைப்பான்.

சாதனாவிற்குத் திருமணமான பிறகு கூட இப்படி எல்லோரும் ஒன்றாக வந்திருக்கவில்லை. இந்த கொரானா எல்லோரையும் ஒன்றிணைத்தது. இப்போது இதே கொரானா கணநேரத்தில் எல்லோரையும் பிரித்துவிட்டது. கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் கடவுள் போல எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது.

தொலைக்காட்சியை இயக்கவும் மறந்து தன்னுடைய சிந்தனைகளில் அவர் ஆழ்ந்துவிட ரேணுகா எப்போதும் போல சமையலறையில் தன் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். உலகமே ஸ்தம்பித்தாலும் குடும்ப இஸ்திரிகளின் வேலைகள் ஓய்ந்து போகாது.

நிரஞ்சன் தங்கை தமக்கைகள் சென்ற திசையை கவலையுடன் பார்த்துவிட்டு அறைக்கு திரும்ப ஜோஷிகா ஒரு அசாதாரணமான அமைதியுடன் படுக்கையில் சம்மேளமிட்டு அமர்ந்திருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த விதமே ஏதோ புயலுக்கான எச்சிரிக்கையை விடுத்தது.

அவன் மெல்ல அவளருகில் வந்து, “மாமா… மிருது… சாதனா பாப்பா எல்லாம் கிளம்பிப் போயிட்டாங்க… தருண்தான் கிளம்புற வரை உன்னைக் கேட்டுட்டே இருந்தான்” என்று சொல்ல அவள் முகம் எந்தவித உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை.

“ஜோ” என்றவன் அருகே அம்ர்ந்து அவள் தோளில் கை வைக்கவும் அவள் அவன் கையைத் தட்டிவிட்டாள்.

“கோபப்படாதே ஜோ… கண்டிப்பா உங்க அப்பாவைப் பத்தி யோசிச்சு… ஏதாவது பண்ணுவோம்” என்று சொன்ன நொடி வெடுக்கென்று அவன் புறம் திரும்பியவள்,

“நோ தேங்க்ஸ்… நீ உன் குடும்பத்தைப் பாரு… எங்க அப்பாவை எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு தெரியும்” என்றாள்.

“மிருது பேசுனதை எல்லாம் மனசுல வைசுக்காதே” என்றவன் நிதானமாகச் சொல்லவும்,

“அவங்க பேசுனாங்க… நீங்கெல்லாம் எதுவும் பேசல… அவ்வளவுதான வித்தியாசம்” என்றாள்.

“ஜோ நீ நிலைமைப் புரியாம பேசுற”

“எனக்கு நல்லா புரியுது… உன் குடும்பமே ஒரு சுயநலமான குடும்பம்… உங்க எல்லோருக்கும் உங்களைப் பத்தி மட்டும்தான் கவலை… என்ன மாதிரி குடும்பம் இது… என் டேட் அப்பவே சொன்னாரு… நான்தான்…. நான்தான் கேட்கல” என்றவள் சரவெடியாக வெடித்துத் தள்ள,

“ஜோ ப்ளீஸ்… நீ பொறுமையா நான் சொல்றதைக் கேளு” என்றவன் அவளை அமைதிப்படுத்த முயன்றான்.

“கேட்கமாட்டேன் போடா” என்றவள் சீற்றமாக அவன் கையைத் தட்டிவிட்டு வெளியே வர, “ஜோ” என்று அழைத்துக் கொண்டே அவளைப் பின்தொடர்ந்தான்.

அப்போது வாசலில் ரேணு நின்றதைப் பார்த்து இருவரும் திகைத்து விட,

 “ம்…மா” என்ற நிரஞ்சன் மென்று விழுங்கினான். ஜோ சொன்னதை எல்லாம் அம்மா கேட்டிருப்பாரோ என்று அவன் பயத்துடன் ஏறிட ஜோஷிகாவை ஆழமாக ஒரு பார்வை பார்த்த ரேணு பின் மகன் புறம் திரும்பி, 

“நான் கஞ்சியும் கபசுரக் குடிநீரும் போட்டு வைச்சு இருக்கேன்… எடுத்துட்டுப் போய் உன் மாமானாருக்குக் கொடுத்திட்டு வந்திரு… போகும் போது கையில கிளவ்ஸ் மாஸ்க் எல்லாம் போட்டுட்டுப் போ… உள்ளே போகாம அவருக்கு ஃபோன் பண்ணிச் சொல்லி வாசலில வைச்சுட்டு வந்திரு… புரிஞ்சுதா” என, ஜோ விக்கித்து போய் நின்றாள்.

சற்று முன்பு தான் பேசிய வார்த்தையை எண்ணி அவள் குற்றவுணர்வில் ஆழ அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிரஞ்சன் அவள் தோளைத் தட்டிவிட்டு தன் அம்மாவுடன் கீழே சென்றான்.

ஜோசப்பிற்குத் தெரியப்படுத்திவிட்டு அவன் சர்வ ஜாக்கிரதையாக மாஸ்க் க்ளவுஸ் என்று அத்தனை பாதுக்காப்பு உபகரணங்களுடன் ரேணு கொடுத்த கஞ்சி, கபசுர குடிநீர் என்று அனைத்தையும் வாயிற் படிக்கட்டில் வைத்துவிட்டு நகர்ந்தான்.

ஜோ பால்கனி சுவரிலிருந்த திண்டில் அமர்ந்தபடி அந்தக் காட்சியை பார்த்தாள். தான் சட்டென்று அப்படியொரு வார்த்தையை விட்டிருக்கக் கூடாது என்று உள்ளுர மனம் குறுகுறுத்தது.

இப்படியும் அப்படியுமாக வெளியே பால்கனியில் நடந்து கொண்டிருக்கும் போது அவள் கைப்பேசி ஒலிக்க ‘டேடி’ என்று பார்த்ததும் ஆர்வமாக எடுத்துப் பேசினாள்.

“தாங்க்ஸ் ஜோ” என்றவர் குரல் நெகிழ்வாக ஒலிக்க,

“எதுக்கு டேடி?” என்றவள் புரியாமல் கேட்டாள்.

“இரண்டு நாளா என்னால எதுவுமே சாப்பிட முடியல… இட்ஸ் ஹாரிப்பிள்… தொண்டை எரிச்சல்… மூக்குல சுத்தமா ஸ்மெல் போயிடுச்சு… ரொம்ப அவஸ்த்தைப்பட்டேன்… ஆனா இன்னைக்குக் கொடுத்துவிட்ட கஞ்சி அப்படியே தேவாமிர்தம் மாதிரி உள்ளே இறங்கிடுச்சு… இப்பதான் கொஞ்சம் ரிலீஃப்பா ஃபீல் பண்றேன்… தேங்க்ஸ் டா” என்றவர் கூற,

“இந்த தேங்க்ஸ் நீங்க நிருவோட அம்மாவுக்குதான் சொல்லணும்” என்றாள்.

“தெரியும்… நீ என் தேங்க்ஸை அவங்ககிட்ட கன்வே பண்ணிடு” என,

“டேடி…ஈஈஈ” என்றவள் தயக்கமாக இழுத்தாள்.

“என்ன ஜோஷி” என்றவர் கேட்டதும் அவள் மனதிலிருந்து தவிப்பும் வேதனையும் ஒரு பிரவாகம் போல வார்த்தைகளாகப் பொங்கிவிட்டன. அவள் பேசியதெல்லாம் சொல்லி முடிக்கும் போது,

“நீ அப்படி பேசி இருக்கக் கூடாது ஜோஷிமா” என்றார்.

“தெரியும் டேடி… எனக்கும் ரொம்ப கில்டியா இருக்கு” என்றாள்.

“தப்பு உன்னோடது மட்டும் இல்ல… என்னோடதும் கூட” என்றவர் சொல்ல,

“இதுல உங்களோட மிஸ்டேக் என்ன டேட் இருக்கு… இட்ஸ் ஆல் மைன்” என்றாள்.

“இல்ல ஜோஷி… நான் உனக்கு நிறைய விஷயங்களை சொல்லி வளர்க்கல… எல்லாத்துக்கும் செர்வன்ட்ஸ் இருக்காங்க… அவங்க பார்த்துப்பாங்கனு விட்டேற்றியா இருந்துட்டேன்… உன்னையும் அப்படியே வளர்த்துட்டேன்… ஆனா இன்னைக்கு இந்த லாக்டௌன்… வந்து நம்ம வாழ்க்கையே புரட்டிப் போட்டிருச்சு… இப்படியெல்லாம் ஒரு சூழ்நிலை வரும்னு யாரும் எதிர்பார்க்கல.

நமக்கான தேவைகளை நாமே செய்து பழகிக்காதது பெரிய தப்போன்னு தோனுது… நான் அப்படி இருந்ததும் இல்லாம உன்னையும் அதேபோல வளர்த்துட்டேன்… உனக்கும் குடும்ப அமைப்புல வாழற அனுபவமும் இல்ல… இதெல்லாம் யோசிச்சுதான் நான் அந்த ஃபேமிலி உனக்கு செட்டாகாதுன்னு சொன்னேன்.

ஆனா இப்போ சொல்றேன் ஜோ… நீ அந்த வாழ்க்கைக்கு அந்த வீட்டுக்கு ஏத்த மாதிரி பழகிக்கணும்” என்றவர் சொல்லி முடிக்கும் போது ஜோஷிகாவிடமிருந்து பதிலில்லை.

“ஜோஷிமா” என்றதும் அவள் மெல்லிய குரலில், “அது பாஸ்பிள்னு எனக்கு தோணல டேடி… நானும் நிருவும் பெங்களூர் போயிட்டா கொஞ்சம் பெட்டரா இருக்கும்” என்றாள்.

“இப்போ நீதான் ஜோஷி சுயநலமா பேசுற… உன்னை மாதிரியே நிருவும் அவங்க அம்மாவும் நினைச்சிருந்தா எனக்காக இதெல்லாம் கொடுத்து விட்டிருக்க மாட்டாங்க… ஆக்சுவலி நான் யார் அவங்களுக்கு?” என்று கேட்ட நொடி அவளால் பதில் பேச முடியவில்லை.

“ஜோஷி… இந்தியாவுல மேரஜ்ங்குறது லிவ்விங் டூகதர் ரிலேஷன்ஷிப் இல்ல… அது ஒரு குடும்பத்தோட கட்டமைப்பு… இரண்டு குடும்பங்களோட இணைவு” என்றதும் அவள் மெல்லிய அதிர்வுடன்,

“நானும் நிருவும் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்ல இருந்தது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்க,

“நீ நிரஞ்சனை லவ் பண்றேன்னு சொன்னதுமே நீ அடிக்கடி பெங்களூர்ல ஸ்டே பண்ணதுக்கான காரணம் புரிஞ்சது… ஆக்சுவலி இட்ஸ் ஜஸ்ட் எ கெஸ்” என்றார்.

“சாரி டேடி… நான் உங்ககிட்ட இதெல்லாம் மறைச்சிருக்கக் கூடாது”

“அதெல்லாம் உன் பெர்ஸ்னல்… எல்லோருக்கும் நீ அதை தண்டோரா போடணும்கிற அவசியம் இல்ல… ஆனால் காதல் மாதிரி கல்யாண வாழ்க்கை சுலபம் இல்ல… அதுவும் ஒரு மிடில் க்ளாஸ் ஃபேமிலில உன்னை மாதிரி ஒரு பொண்ணு செட்டாகிறது அவ்வளவு சுலபம் இல்ல”

“இதை இங்கே வந்த கொஞ்ச நாளிலேயே அனுபவ பூர்வமா நான் உணரந்துட்டேன் டேடி… இங்கே யாருக்கும் என்னைப் பிடிக்கல… முக்கியமா நிருவோட அம்மாவுக்கு” என்றவள் சொல்லவும்,

“எப்படி பிடிக்குமாம்… அவங்க ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்ட்… நீ ஒரு இம்பெர்ஃபெக்ஷனிஸ்ட்” என்றவர் சொல்லி கேலியாகப் புன்னகைப்பது அவள் காதில் விழ,

“டேடி” என்றவள் செல்லக் கோபத்துடன் சிணுங்கிணாள்.

“உண்மையதானே சொன்னேன்”

“அதான் உங்களுக்கு தெரியுதே… அப்புறம் எப்படி நான் அவங்க கூட செட்டாக முடியும்… இட்ஸ் இம்பாஸிப்பிள்” என்றவள் அழுத்தமாக மறுக்க,

“காட்டுக்குள் போய் புலி சிங்கத்தை எல்லாம் ஃபோட்டோ எடுக்கிறது இம்பாஸிப்பிள்னு சொன்னா நீ ஒத்துப்பியா ஜோஷி” என்று கேட்டார்.

“ஏன் முடியாது… முடியுமே… கொஞ்சம் ரிஸ்க் எடுத்தா முடியும்” என்றவள் பதில் சொல்ல,

“கரெக்ட்… பிடிச்ச விஷயத்துக்காக நீ எந்த எக்ஸ்டென்டுக்கும் போய் நீ எப்படிப்பட்ட ரிஸ்க்கையும் எடுப்ப… சிம்பிள்… அதே ஃபார்மூலாதான்… பிடிச்சு முயற்சி செய்… பாஸிப்பிளாகும்… அதுவும் இல்லாம உன் மாமியார் ஒன்னும் புலி சிங்கமெல்லாம் கிடையாது” என்றதும் அவள் புன்னகைத்தாள்.

தந்தையிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த போது இத்தனை நேரம் மனதில் அழுத்தியிருந்த நிறைய குழப்பங்கள் கவலைகள் எல்லாம் தெளிவுப் பெற்றிருந்தன.

அசைந்தாடிக் கொண்டிருந்த அந்தத் தோட்டத்தின் செடிகளைப் பார்த்த போது ரேணுகாவின் நினைவு வந்தது.

அவரைப் பற்றி யோசிக்க யோசிக்க வியப்பாக இருந்தது. அவர் ஒரு அசாதாரணமான பெண்மணி என்று தோன்றியது. சுவையாக சமைக்க, கலைநயமாகக் கோலமிட, அழகாகத் தோட்டத்தைப் பராமரிக்க என்று ஒற்றை ஆளாக எப்படி இத்தனை வேலைகளையும் கச்சிதமாக நேரம் ஒதுக்கிச் செய்கிறார் என்று அவளுக்கு வியப்புதான். ஆனால் இன்று நடந்தது எல்லாவற்றிற்கும் மேல். சமாளிக்க முடியாத பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்ததை எத்தனைத் தெளிவாக யோசித்து தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படுத்தினார்.

தந்தை சொன்னது போல அவள் வாழ்ந்த உலகத்தில் இதுபோன்ற அனுபவங்கள் அவளுக்குக் கிடைத்ததில்லை. எல்லாவற்றையும் மிக இலகுவாக எடுத்துக் கொள்ள பழக்கப்பட்டவள். எதற்கும் பொறுப்பு ஏற்காதவள். ஏற்பதற்கு முயற்சி கூட மேற்கொள்ளாதவள்.

‘டோன்ட் கேர்’ மனநிலை. இதுவரை அது தப்பா என்று தெரியவில்லை. ஆனால் இனியும் அப்படி இருப்பது தவறு என்று தோன்றியது. 

நிரஞ்சனிடம் தான் அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டோம். ரேணுவின் பார்வை அவளைத் தாக்கியதை வைத்து அவரும் அவள் சொன்னதை நிச்சயம் கேட்டிருப்பார் என்றுதான் தோன்றியது. அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

மன்னிப்பு கேட்க அவளுக்கு எந்தவித ஈகோவும் இல்லை. ஆனால் எப்படி அவரிடம் பேசுவது என்றுதான் அவளுக்கு தயக்கமாக இருந்தது.

இப்படியே ஒரு வாரம் கழிந்துவிட்டது. ரேணு கஞ்சி, சூப்,  புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் என்று கொஞ்சமும் சளைக்காமல் நிரஞ்சனிடம் செய்து ஜோசப்பிற்குக் கொடுத்துவிட்டாள். மேலும் நிரஞ்சனும் சாதனாவின் கணவனை விசாரித்து அவன் அறிவுறுத்திய மாத்திரைகளையும் வாங்கிக் கொடுத்தான்.

இதனால் ஜோசப் ஒருவாறு நன்றாக உடல் நலம் தேறிவிட்டார்.

ஆனால் அதற்கு பின் நிலைமை தலைகீழாக மாறியது.

அன்று நடுநிசி இரவில் நிரஞ்சனின் கைப்பேசி அடிக்க, அவன் எடுத்துப் பேசினான். மாதவன் குரல் நடுக்கத்துடன் ஒலித்தது.

“ரஞ்சு அம்மாவுக்கு ஒரே ஜுரமா இருக்குடா… மூச்சு விட ரொம்ப கஷ்டபடுறா… நீ உடனே வா”

vanitha16, Rathi and Thani Siva have reacted to this post.
vanitha16RathiThani Siva
Quote

Joshiyoda appa kodutha advice super. Ippa joshiku arumaiyaana vaaippu maamiyara nerunga.

Quote

Super ma 

You cannot copy content