You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Muran kavithaigal - 3

3

‘The woods are lovely, dark and deep.’ - Robert Frost

பிரபல ஆங்கில கவிஞனின் வரிகள்.

கானகங்கள் அழகானவை. இருளடர்ந்தவை. ஆழமானவை. 

ஜோவின் அறைச் சுவர்களில் இப்படியான கிறுக்கல்கள்… காடுகளின் சுவரொட்டிகள்… காட்டு மிருகங்களின் புகைப்படங்கள்… என்று அந்த அறையே ஒரு கரடுமுரடான கானகம் போலதான் காட்சியளித்தது.

அலங்காரங்களும் நேர்த்திகளும் துளி கூட இல்லாத அடர்ந்த வனப்பகுதியாக அவை இருந்த போதும் அவற்றில் இயற்கையை நேசிக்கும் ஒரு பெண்ணின் காதலும் கலைநயமும் மிகுந்திருந்தது.

அவளோ இன்னும் போர்வைக்குள்தான் சுருண்டிருந்தாள்.

“ஜோஷிமா போதும்… எழுந்திரு… நான் வேற மார்கெட் போகணும்… வீட்டுல காய்கறி எதுவும் இல்ல” என்று அவள் தந்தை ஜோசப்பின் குரல் இம்முறை சற்றே அழுத்தமாக உசுப்ப,

“ம்ம்ம்… ஓகே ஓகே… எழுந்துக்கிறேன்” என்று மெல்ல எழுந்து அமர்ந்தாள். சுருள் சுருளான அவள் தலைமுடிக் கற்றைகள் அவள் முகத்தை மறைத்திருந்தன. இன்னும் அரைக்குறை தூக்கத்தில் இருந்தவளுக்கு கண்களைத் திறக்க முடியாமல் எரிந்தன.

“நைட்டெல்லாம் நெட்ஃப்ளிக்ஸ்ல சீரிஸ் பார்த்தா இப்படிதான் ஆகும்” என்றவர் குரல் கண்டனமாக வெளிவர,

“இட்ஸ் டேம் இன்டரஸ்டிங்… யூ நோ” என்று இப்போது கொஞ்சம் தெளிந்து கண்களைத் திறந்து பார்த்தாள்.

“இஸ் இட்?”

“எஸ்… க்ளைமேக்ஸ் அல்டிமேட்” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய சுருள் முடியை கோதி சரி செய்ய முற்பட்ட போதும் அது அடங்காமல் அவள் முகத்தில் வந்து விழுந்தன.

“ஓகே… அதை பத்தி அப்புறம் பேசிக்கலாம்… நீ டிஃபன் சாப்பிட வா” என்றவர் சொல்லவும், “டன்” என்று போர்வையை உதறிவிட்டு அருகிலிருந்த மேஜை மீதிருந்த க்ளிப்பை எடுத்து தன்னுடைய முடியைச் சுருட்டி மேலே தூக்கி இறுக்கி நிறுத்தினாள்.

இரவெல்லாம் தொலைகாட்சிப் பார்த்ததில் கண்கள் லேசாக சிவந்து வீங்கியிருந்தன. அவள் குளியலறைக்குள் புகுந்து தன் காலை கடன்களை முடித்து முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

“ஜோ…” என்று இரு குரல்கள் ஓங்கி ஒரு சேர அவள் அறைக்குள் ஒலித்தன. அவர்கள் முகத்தைப் பார்த்ததும் அவளின் சின்ன இதழ்கள் அழகாய் விரிந்தன.

முக மலர்ச்சியுடன், “ஹாய் கைஸ்” என்று எதிர் வீட்டு பால்கனியிலிருந்து அழைத்த தருணையும் கௌஷிக்கையும் பார்த்து கையசைத்தாள்.

ஒருமுறை அவர்கள் விளையாடும் போது பந்து அவர்கள் வீட்டில் விழ அதனை அவள் தூக்கி வீசினாள்.

‘தேங்க்ஸ் கா’ என்றவர்களிடம், ‘கால் மீ ஜோ’ என்று அவள் கூறியிருக்க, இதுதான் சாக்கு என்று அடிக்கடி அவர்கள் ஜோ என்று பால்கனியிலிருந்து கூவுவார்கள். அவளும் வந்து அவர்களுடன் பேசுவாள்.

இந்தப் பழக்கத்தின் அடிப்படையில் அந்த இரண்டு வாண்டுகளும், “ஜோ வீட்டுக்குப் போயிட்டு விளையாடிட்டு வரோம்” என்று ஒருமுறை கிளம்பிய போது செமத்தையாக ரேணுவிடம் வாங்கி கட்டிக் கொண்டார்கள்.

“அந்த வீட்டுப் பக்கம் போனீங்க காலை உடைச்சிடுவேன்” என்று கண்டித்தவர் மேலும்,

“அவங்க வீட்டுல எப்பவும் ஹோட்டலில்தான் வாங்கி சாப்பிடுறாங்க… அங்கே போய் பசங்களுக்கு ஏதாவது ஆகிட்டா” காரண காரியத்தோடு அங்கே போகவே கூடாது என்று அவர் தடை விதித்துவிட்டார்.

“அம்மா சொல்றது சரிதான்” என்று மிருதுளாவும் ஆமோதிக்க,

“ம்மா ம்மா கொஞ்ச நேரம்தான் ம்மா… வந்துடுறோம் ம்மா” என்று அதற்கு மேலாக அடம் பிடித்த மகன்கள் இருவருக்கும் பாரபட்சமின்றி முதுகில் நன்றாக விழுந்தது. அத்துடன் எதிர் வீட்டுக்குப் போகும் எண்ணத்தை விட்டுவிட்டாலும் பால்கனி வழியாக அவர்கள் ஜோவிடம் தங்கள் நட்புக்கரத்தை நீட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்.

“ஜோ… உன்கிட்ட இருக்க கேம்ஸ் எல்லாம் எங்களுக்குக் கொடுத்தனுப்புறியா?” 

“அதைக் கொடுக்க எல்லாம் முடியாது தருண்… எங்க டிவில இருக்கும்… அப்படியே விளையாடலாம்” என்றவள் சொன்னதும் அவர்கள் முகம் துவண்டு விட,

“கம்மான் கைஸ்… நீங்க என் வீட்டுக்கு வந்து விளையாடுங்க” என்றவள் மீண்டும் அழைக்க,

“உஹும் அம்மம்மாவும் அம்மாவும் அடிப்பாங்க” என்று அவர்கள் வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “தருண் கௌஷிக்… போதும் கேம் விளையாடினது கீழே வாங்க” என்று சாதனா குரல் கொடுக்க,

“ஐய்யய்யோ சித்தி கூப்பிடுறாங்க… கூப்பிட்டதும் கீழே போலனா ரிமோர்ட்டைத் தூக்கி ஒளிச்சு வைச்சுருவாங்க… நாங்க கிளம்புறோம்… பை” என்றவர்கள் அந்த நொடியே பறந்து கட்டிக் கொண்டு கீழே ஓடிவிட்டனர்.

அவர்கள் செல்வதைப் புன்னகையுடன் பார்த்தவள் எதிரே திறந்திருந்த அந்த அறையை ஒரு மாதிரி ஏக்கப்பெருமூச்சுடன் பார்த்தாள்.

“ஹாய் ஜோ” என்று உயரமான ஆடவன் ஒருவன் கையசைப்பது போன்ற பிரமை உருவாக, சட்டென்று அந்த நினைப்பை ஒதுக்கிவிட்டுப் படியிறங்கி முகப்பறைக்குச் செல்ல, அது வெறிச்சோடி காணப்பட்டது.

இரண்டு படுக்கையறைகள், திறந்த சமையலறை, பிரமாண்டமான முகப்பறை மேலும் உள்ளேயே சுழன்று செல்லும் படிக்கட்டுகள் என்று அந்த வீட்டின் அமைப்பிலும் பொருள்களிலும் அதீத ஆடம்பரம் வெளிப்பட்டது.

ஆனால் பெரிதாக பரிமாரிக்கப்படாமல் மூலைகள் யாவும் ஓட்டடைகளாகவும் கொஞ்சம் அசுத்தமாகவும் காட்சியளித்தன.

“டேடி… எனக்கு பயங்கரமா பசிக்குது” என்று சொல்லியபடி அவள் படிக்கட்டில் இறங்கினாள்.

“ரெடிதான்… இங்கே வா” என்று அவர் சமையலறையிலிருந்து குரல் கொடுக்க உள்ளே நுழைந்தவள் எப்போதும் போல சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொள்ளவும், “ஜோஷி மா அங்கே க்ளீனா இல்லை” என்பதைப் பொருட்படுத்தாமல்,

“தட்ஸ் ஓகே” என்று அசட்டையாகத் தோள்களை குலுக்கிவிட்டு தட்டில் வெண்ணெயும் ஜாமும் தடவி வைத்திருந்த பிரட் துண்டுகளை எடுத்து வாயில் வைத்து கொண்டு,

“இன்னைக்கு என்ன ப்ளான் டேட்”என்று கேட்டாள்.

“மார்கெட் போகணும்… வீட்டுல எதுவுமே இல்ல… ப்ரொவிஷன்ஸ் வாங்கணும்” என்றவரும் ஒரு பிரட் துண்டை சாப்பிட்டுக் கொண்டே பதில் சொல்ல,

“யூ வானமீ டூ கம்” என்று கேட்டாள்.

“நோ ப்ராப்ளம்… நான் பார்த்துக்கிறேன்”

“அப்போ நான் அமேசான் ப்ரமைல ஒரு புது பாலிவுட் மூவி ரிலீஸ் ஆகி இருக்கு… வித்யா பாலனோடது… நான் அதைப் பார்த்துட்டு இருக்கேன்”  

“இந்த லாக்டௌன்ல… நீ ரொம்ப டிவிக்கு அடிக்ட் ஆகிட்ட ஜோஷி… அதுவும் சீரிஸ் மூவிஸ்னு… இட்ஸ் நாட் குட்” அவர் குற்றச்சாட்டாகக் கூற,

“ஆ… நான் மட்டும்தான் பார்க்கிறேனா… நீங்களும்தானே என் கூட பார்க்கிறீங்க” என்றவள் தந்தையை எள்ளலுடன் பார்த்தாள்.

“நாட் ஆல்வேஸ்… நீதான் ரொம்ப அதிகமா அடிக்ட் ஆகி இருக்க… நைட்டெல்லாம் சீரிஸ் பார்த்துட்டு பகலெல்லாம் தூங்கிட்டு… கண்ணு கெட்டுப் போயிடும் ஜோஷிமா” என்றவர் அக்கறையாகக் கூறவும், அவள் அசட்டையாகப் புன்னகைத்துவிட்டு,

“வீட்டுக்குள்ளயே இருந்தா வேற என்னதான் பண்ண முடியும்?” என்றாள்.

“ஏதாச்சும் க்ரீயேட்டிவா பண்ணலாம் இல்ல” என்றவர் சொன்னதைக் கேட்டு சத்தமாகச் சிரித்தவள்,

“அதெல்லாம் சொல்றது ஈஸி” என்றவள் அலட்டிக் கொள்ளாமல் தட்டுடன் சோஃபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்ய,

“ஜோஷி மா” என்றவர் கடுப்பானார்.

“சும்மா அட்வைஸ் பண்ணிப் போரடிக்காம… ஏதோ வாங்கணும்னு சொன்னீங்களே… வாங்கிட்டுச் சீக்கிரம் வாங்க… அது வரைக்கும் நான் இந்தப் படத்தைப் பார்த்துட்டு இருக்கேன்”

“சரி… நான் போயிட்டு வந்துடுறேன்… நீ வந்து வீட்டை லாக் பண்ணிக்கோ”

“ஓகே ஓகே” என்றவள் சோஃபாவில் சௌகரியமாகப் படுத்து கொள்ள, ஜோசப் பெருமூச்செறிந்தார். ஐம்பத்தாறு வயதான போதும் இளமையாகதான் இருந்தார். உடற்பயற்சி செய்து ஒருவாறு தேகத்தைக் கட்டுக்கோப்பாகவும் பராமாரித்து வைத்திருந்தார். சால்ட் அன் பெப்பர் போல வெள்ளை முடியும் நரை முடியும் கலந்திருந்த அவர் தோற்றம் ஒரு பணக்காரத்தனத்துடன் அவரைக் காட்டியது.

 ஜோசப்பின் தோற்றத்தில் மட்டும் அல்ல. அவரின் செயல்பாடுகளிலும் அதே அளவுக்கான பணக்காரக்களைத் தாண்டவமாடும். அவர் ஒரு புத்திசாலியான வியாபாரி.

ஆனால் முதலில் அவர் ஒரு சாதாரண கம்பெனியில் மிகச் சிறிய வேலையுடன்தான் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின் தன் திறமையால் உயர்ந்து வெளிநாட்டிற்குப் பறந்து சென்றார். இடைப்பட்ட காலத்தில் ராதிகா என்ற பெண்ணைக் காதலித்து மணம் புரிந்து கொண்டவருக்கு ஜோஷிகா பிறந்தாள்.

அவள் பிறக்கும் போது ஒரு அமெரிக்க பிரஜை. அப்போது அவர்களின் வசிப்பிடமோ நியூயார்க்.

ராதிகாவும் ஜோசப்பும் அன்யோன்யமான தம்பதிகள். ஒரே மகள் என்பதால் ஜோஷிகா தாய் தந்தை இருவருக்கும் செல்லம். நல்ல சம்பாத்தியம். வேலை என்று ஒரு குறையும் இல்லாத குடும்பம்.

 ஜோஷிக்காவின் பத்து வயது வரை சுமுகமாக ஏற்ற இறக்கங்கள் ஏதுமின்றி நகர்ந்த அவர்கள் வாழ்க்கையில் இடியாக வந்தது அந்த நாள். நியூயார்கில் ஒரு அசாம்பவிதத்தில் ராதிகாவின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் இறந்துவிட்டார்.

காதல் மனைவியைத் தொலைத்துவிட்டதில் அவருக்கு உலகமே இருண்டு போனது. அந்த விபத்திலிருந்து ஒருவாறு மீண்டு மகளுக்காக அவர் சென்னை வந்தார். ஜோசப் இதுவரையில் அவர் வங்கிக்கணக்கில் சேமித்து வைத்திருந்த பணங்களை வைத்து ஒரு பங்குசந்தை நிறுவனம் தொடங்கி அதனை இன்று வரை வெற்றிகரமாக நடத்திப் பேறு பெற்ற நிறுவனமாகவும் மாற்றி விட்டிருந்தார்.

ஜோஷிகா அதுவரை தாத்தா பாட்டியின் பராமரிப்பில்தான் வளர்ந்தாள். அவர்களுக்கும் அவள் மிகுந்த செல்லம்தான். ஆனால் சில வருடங்களில் அவர்களும் உடல் நலம் குன்றி அடுத்தடுத்த வருடத்தில் இறந்துவிட, தன் அடுக்கு மாடிக் குடியிருப்பை காலி செய்துவிட்டு வேளச்சேரியில் இந்த இடத்தை வாங்கி வீடு கட்டிக் கொண்டு மகளுடன் குடிப்பெயர்ந்துவிட்டார்.

 இந்த கொரானா வருகையால் பங்குச்சந்தைகள் எல்லாம் சரிவை சந்தித்த போதும் அவரை அது பெரிதாகப் பாதிக்கவில்லை.

நிறைய சேமிப்புக்கள் சொத்துக்கள் அவருக்குப் பிறகு அவர் மகளுக்கு என்று ஏகபோகமாகச் சேர்த்து வைத்திருக்கிறார்.

 அதனாலேயே ஜோஷிகா  இதுவரையில் வேலைக்குச் செல்வது பற்றியோ பணம் ஈட்டுவது பற்றியோ யோசித்தது கூட இல்லை. எந்த இலட்சியங்களும் கனவுகளும் இல்லாத ஒருவித டோன்ட் கேர் மனநிலையுடன் வளர்ந்தவள். படிப்பைக் கூட ஏதோ பெயருக்கென்று முடித்தாள்.

ஆனால் அவள் சோம்பேறி எல்லாம் கிடையாது. காட்டுக்குள் செல்ல வேண்டுமென்றால் காலை நான்கு மணிக்கே தயாராகிவிடுபவள்தான். அவள் எடுத்தப் படங்கள் எல்லாம் மிக அட்டகாசமாக இருக்கும். ஒவ்வொரு படத்திற்கான அவளுடைய காத்திருப்பு ஒரு நீண்ட நெடிய நாளை விழுங்கிவிடும். அவள் ஒரே ஒரு படத்தை எடுப்பதற்காகப் பொறுமையாக மரத்தின் கிளையின் மீதோ அல்லது குளத்தின் நடுவிலோ அல்லது ஏதாவதொரு பொந்தின் மறைவிலோ அவள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

அவளுக்குப் பிடித்தது எல்லாம் ஃபோட்டோகிராபி. அதுவும் ஒயில்ட் லைஃப் ஃபோட்டோகிராபி.

“அது ஏன் ஒயில்ட் லைஃப் ஃபோட்டோகிராபி?” என்று கேட்டால்,

“இட்ஸ் அட்வஞ்சுரஸ்… காட்டுக்குள்ள எல்லா மாதிரியான சுவாரசியமும்… கூடவே ஆபத்தும் இருக்கும்… அது ஒரு மாதிரி த்ரில்லிங்கா இருக்கும்… ஐ என்ஜாய் தட்” என்பாள்.

அவருக்குப் பங்குச்சந்தையில் கிடைத்த திர்ல்லிங் உணர்வு அவளுக்கு காடுகளில் கிடைக்கிறது.

நடுப்பகல் இரவு காலை என்று அவள் நேரங்காலங்களை எல்லாம் பார்ப்பதே இல்லை. சுட்டெரிக்கும் சூரியனும் நடுங்கும் குளிரிலும் கூட தன் கேமராவைத் தூக்கிக் கொண்டு கணக்கில்லா தூரங்கள் கானகங்களில் நடப்பாள்.

கேரள காடுகளில் இருக்கும் யானைகளையோ படம் எடுக்கவோ அல்லது மத்திய பிரதேச காடுகளில் இருக்கும் சிறுத்தைகளையோ?

அவளுக்குப் பிடித்தமான ஒரே ஒரு படத்திற்காக அவள் எத்தனை தூரம் வேண்டுமானாலும் பயணிப்பாள். இந்தியா முழுக்க உள்ள ஏதோ ஒரு காடுகளைத் தேடி தன் கால் தடங்களை பதித்துக் கொண்டிருப்பாள்.

“ஏன் இவ்வளவு கஷ்டபடணும் ஜோஷி மா?” என்று ஜோசப் கேட்டால்,

“எனக்கு அதான் பிடிச்சிருக்கு” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து கொள்வாள். 

எத்தனைப் பேருக்கு தங்கள் மனதிற்குப் பிடித்தமான விஷயங்களை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது? அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் அதனை எத்தனை பேரால் செய்ய முடிகிறது? 

ஆதலால் தன் மகளுக்குப் பிடித்தமானவற்றை செய்வதில் அவளுக்கான முழு சுதந்திரத்தையும் அவளுக்குத் தேவையான பணத்தையும் கூட வழங்கினார். ஒரு நாளும் அவள் அதனை தவறாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டாள் என்று நம்பினார்.

இதுநாள் வரையில் அவர் நம்பிக்கையில் சிறு விரிசல் கூட விழுந்தது இல்லை. ஆனால் இன்று ஏனோ மகளின் இந்த அலட்சியப் போக்கு அவர் மனதை நெருடியது.

எல்லாமே இந்த லாக்டௌன் காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றம்தான். கொரானா வருவதற்கு முன்பெல்லாம் எப்போதும் அவர் வேலையிலும் இவள் காட்டிலும் சுற்றி அலைந்து கொண்டிருக்க, ஒருவரை ஒருவர் மாதத்திற்கு ஒருமுறை சந்தித்துக் கொள்வதே அசாத்தியம்தான்.

அப்படியொன்றை இந்த லாக்டௌன் சாத்தியப்படுத்தியதில் ஒருவகையில் இருவருக்கும் சந்தோஷம்தான். யூ டியூப் பார்த்து அரட்டை அடித்தபடி புதுப்புது வகையான உணவுகளை சமைத்து பழகுவது… பாப் கார்ன் தயாரித்து கொண்டு ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களை சேர்ந்து பார்ப்பது… செஸ் கேரம் விளையாடுவது என்று அவர்களின் லாக்டௌன் பொழுதுகள் ஆரம்ப கட்டத்தில் ஆர்ப்பாட்டமாகதான் கழிந்தன.  

 ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் கூட விஷம்தானே! இந்த லாக்டௌன் காலக்கட்டம் இப்படியே நீட்டித்துக் கொண்டிருப்பது மெல்ல மெல்ல அவர்களின் உற்சாகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துச் சலிப்புத்தட்ட செய்துவிட்டது.

அவராவது தன்னுடைய அலுவலக வேலைகளை அவ்வப்போது கவனிப்பார். ஆனால் ஜோஷிக்கு முழு நேரமும் தொலைக்காட்சியும் கைப்பேசியும்தான்.

இதை எல்லாம் யோசித்து கவலையுற்றபடி வாசலை கடந்தவர் வெளியே அவர் வீட்டின் வாயிலுக்கு எதிரே ஏதோவொரு கார் நிற்பதை கவனித்தார்.

காரிலிருந்து எதிர் வீட்டுப் பையன் இறங்கினான். பன்னிரென்று வருடங்களுக்கு மேலாக இரு குடும்பங்களும் எதிர் எதிர் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கும் இவருக்கும் பெரிதாக ஒட்டுதல் இல்லை. மாதவனை எப்போதாவது சாலையில் பார்த்தால் மெலிதாகப் புன்னகைப்பார். பதிலுக்கு இவரும் புன்னகைப்பார்.

மற்றபடி அவர்கள் மகள்கள் திருமணத்திற்கு எதிர் வீட்டுகாரர் என்ற முறையில் இவருக்கும் அவர் அழைப்பு விடுக்க, கூப்பிட்ட மரியாதைக்காக அவரும் ஒரு சிறிய பரிசை கொடுத்துவிட்டு வாழ்த்திவிட்டு வருவார்.

காரிலிருந்து இறங்கிய மகனை அவர்கள் குடும்பம் ஆரவாரமாக வரவேற்று உள்ளே அழைத்து கொண்டுச் சென்றது. அவன் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தான் என்ற தகவல் மட்டும் அவருக்குத் தெரியும். லாக்டௌன்களில் சமீபமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விமானங்கள் அனுமதிக்கப்பட்டன என்பதை நினைவுகூர்ந்தவருக்கு அவன் பெயர் கூட தெரியாது.

அவன் பெயர் என்னவாக இருந்தால் நமக்கு என்ன?

தோள்களைக் குலுக்கிக் கொண்டு அவர் தன் பைக்கில் சாவியை நுழைத்துவிட்டு, “ஜோஷி மா கதவைப் பூட்டிக்கோ” என்று மீண்டும் குரல் கொடுத்தார். பதிலே இல்லை.

அவள் அந்தப் படத்திற்குள்ளேயே மூழ்கியிருப்பாள். அவர் கடைக்குச் சென்று திரும்பிய போதும் அவள் அதே நிலையில் அப்படியேதான் படுத்திருந்தாள். போதாகுறைக்கு கிண்ணம் நிறைய சிப்பசை வைத்து மென்று கொண்டு…

“ஜோஷி மா” என்றவர் சத்தமாக குரல் கொடுக்கவும்தான் அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

“போயிட்டு வந்துட்டீங்களா?” என்று ஒரு அலட்சிய பாவத்தைக் காட்டிவிட்டு மீண்டும் அவள் தொலைக்காட்சி புறம் திரும்பிக் கொள்ள,

“கதவைப் பூட்டவே இல்லையா… எனக்கு பதிலா வேற யாராவது வீட்டுக்குள்ள வந்தா” என்றவர் முறைப்புடன் கேட்க,

“வந்தா ஒன்னும் கிடைக்காது… நீங்க உள்ளே வைச்சிருக்கிறதெல்லாம் டாகுமெண்ட்ஸ்… அதை எடுத்துட்டு போய் என்ன பண்ணுவான்… ஹ்ம்ம்… நம்ம வீட்டுல இப்போ சாப்பிட கூட எதுவும் இல்ல… நானே இந்த சிப்ஸ் பாக்கெட்டை கஷ்டப்பட்டுத் தேடி எடுத்தேன்… தெரியுமா?” என்றவளைப் பார்த்து தலையிலடித்து கொண்டவர் மேஜை மீதிருந்த ரிமோர்டை எடுத்து டிவியை அணைத்துவிட்டார்.

“டேடிஈஈ” என்றவள் கோபமாக எழுந்து கொள்ள,

“இப்படியே சாப்பிட்டுட்டு டிவி பார்த்துட்டே இருந்தேன்னா நீ பீப்பா மாதிரி ஊதிப் போயிடுவ” என்றவர் கடுப்பாகச் சொல்ல,

“அதெல்லாம் போகமாட்டேன்… ஐ நோ மை லிமிட்ஸ்” என்றாள்.

“ஆல்ரெடி நீ வெயிட் போட்ட மாதிரிதான் இருக்க”

“சும்மா சொல்லாதீங்க டேடி”

“நீ போய் கண்ணாடில பாரு”

“அதெல்லாம் அப்புறம் பார்க்கிறேன்… நீங்க ரிமோர்ட்டை கொடுங்க”

“நோ வே… நீ போய் முதல குளி” என்றவர் ரிமோர்ட்டை அவர் கையோடு எடுத்து கொண்டு செல்ல,

“இவ்வளவு காலையிலயா… நான் அப்புறமா குளிக்கிறேன்” என்றாள்.

“என்னது காலைலயா?… இது மதியம்… டைமை பாரு” என்றவர் அவள் புறம் முறைப்பாகத் திரும்ப,

“ஃபைன்… நான் ஈவினிங் குளிக்கிறேன்… இப்போ ரிமோர்டை கொடுங்க… இன்னும் ஒன் ஹவர் மூவிதான் இருக்கு” என,

“நோ வே” என்றவர் தீர்க்கமாகப் பார்த்தார்.

“ஓகே கொடுக்க வேண்டாம்… நான் மேலே இருக்க டிவில போய் பார்த்துக்கிறேன்” என்றவள் படிக்கெட்டில் ஏறவும்,

“நான் மெயின் ஆஃப் பண்ணிடுவேன்” என்றார்.

அப்படியே நின்று தன் தந்தையின் புறம் அதிர்ச்சியுடன் திரும்பி, “வாட்?” என்று கேட்க அவர் கைகளைக் கட்டிக் கொண்டு,

“ஒழுங்கா போய் குளி” என்றார்.

அவரை ஆழ்ந்து பார்த்தவள், “நோ” என்று மறுத்துவிட்டு,

“நான் என் ஃபோன்ல பார்ப்பேன்… இப்ப என்ன பண்ணுவீங்க” என்று சவாலாகக் கேட்க,

“ஐ ல் ஸ்மேஷ் யுவர் ஃபோன்… அன்ட் ஐ டோன்ட் பய் யூ அ அனதர் ஒன்” என்றவர் எச்சரிக்கை செய்தார். இம்முறை அவர் குரலில் அதீத கண்டிப்பு வெளிப்பட்டது.

“சீரியஸ்லி” அவள் அதிர்வுடன் நோக்க,

“சீரியஸ்லி” என்றவர் அழுத்தமாகக் கூறிவிட்டு, “ஒழுங்கா போய் குளி” என்று அதே வாக்கியத்தைச் சொல்லிவிட்டு இந்த உரையாடல் முடிந்துவிட்டது என்பது போல அவர் திரும்பிக் கொண்டார்.

அவள் கண்களில் கோபம் மின்னியது. அவரோ தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் பிரித்து எடுத்து வைக்க முற்பட, அதனைப் பார்த்தபடி சீற்றத்துடன் இறங்கி வந்தவள் அதீத கடுப்புடன் அவர் வாங்கி வந்த பைகளிலிருந்து பொருட்களை எல்லாம் தாறுமாறாகக் கொட்டிக் கவிழ்த்துவிட்டு,

“நான் குளிக்கப் போறேன்” என்று அடுத்த கணம் மாடிக்கு குதித்து ஓடிவிட்டாள்.

“ஜோஷி” என்றவர் கத்தலை அவள் காதிலே வாங்கவில்லை.

குளியலறைக்குள் புகுந்தவள் குளித்து முடித்து தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்து அவள் அறையிலிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

பளிச்சென்ற முகம். திருத்தமான புருவங்களும் தீர்க்கமான விழிகளும் அவள் முகத்திற்கு தனி வசீகரத்தைக் கொடுத்திருந்தது. சராசரிக்கும் அதிகமான உயரமும் அதற்கு ஏற்ற கச்சிதமான தேகத்துடன் இருந்தாள். இருப்பினும் தந்தை சொன்னது உள்ளுர நெருட, தன்னுடைய மேல் சட்டையை இழுத்துப் பிடித்து பார்த்தாள்.

கொஞ்சமாக உடல் பூசினார் போல தெரிந்தது. கன்னங்களும் கூட கொஞ்சம் கொழுத்திருந்தன. உடற்பயிற்சிகள் செய்யாமல் கொஞ்சமாக இடைப் பெருத்துவிட்ட உணர்வு ஏற்பட்டது.

 ஆனால் அதெல்லாம் அவளைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

“இட்ஸ் ஓகே” என்றவள் தோளைக் குலுக்கிக் கொண்ட போதுதான் அந்த நிலைக்கண்ணாடியில் வேறொரு பிம்பம் தெரிந்தது. நேரெதிராக எதிர் வீட்டு அறையிலிருந்த அவன் பிம்பம்.

‘நிரு’ அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே திரும்பிய போது அது வெறும் பிம்பம் இல்லையென்று புரிந்தது. அவன் அந்த பால்கனி கம்பிகளைப் பிடித்துக் கொண்டு அவளை… அவளின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்தபடி நின்றிருந்தான்.

வழக்கம் போல ‘ஹாய் ஜோ’ என்று அவனும், ‘ஹாய் நிரு’ என்று அவளும் சொல்லிப் புன்னகைத்து கொள்ளவில்லை. வழக்கத்திற்கு மாறாக இறுக்கமான பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர்.

‘ஹாய்’ என்று உயர இருந்த தன் கை விரல்களை கம்பிகளைப் பிடித்தபடி அவன் இறுக்கிக் கொள்ள, அவளோ அவனைப் பார்த்ததும் ஏற்பட்ட மெல்லிய சந்தோஷ உணர்வை வெளியிடாமல் தம் உதடுகளை அழுந்த பூட்டிக் கொண்டாள்.

அந்த அறையைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அவன் நினைப்பு வராமல் இருந்தது இல்லை.

அவனைப் பார்த்துக் கொண்டே நடந்து தன் அறைக் கதவருகே வர, அவன் கண்கள் அவளை ஏக்கத்துடன் பார்த்தன. மன்னிப்புக் கோரின.

அவள் மனமும் லேசாக அவன் புறம் சாய எத்தனித்தது. தடுமாறியது. விழிகள் கலங்கியது.

அதேசமயம் அவள் எண்ணங்களில், “நான் உனக்கு அலுத்து போயிட்டேன் இல்லடி” என்று அவன் இங்கிதமற்ற முறையில் கேட்ட அந்தக் கேள்வி அவள் காதில் அறைந்தது. மூளைக்குள் தெறித்தது.

பத்து வருட அவர்களின் நட்பையும் அதனுடன் இணைந்து பயணித்த காதலையும் இதை விடவும் கேவலமாக உதாசீனப்படுத்திவிட முடியாது.

அந்த நொடியே அவள் படாரென்று தன் அறைக் கதவை மூடிவிட்டாள்.

‘என் மனக்கதவு மூடப்பட்டுவிட்டது’ என்று அவளது அந்தச் செய்கை சொல்லாமல் சொல்ல, அவன் ஒருவித இயலாமையுடன் அந்த மூடிய கதவைப் பார்த்துக் கண்கள் கலங்கினான்.

vanitha16, Deleted user and Thani Siva have reacted to this post.
vanitha16Deleted userThani Siva

You cannot copy content