You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Muran kavithaigal - Final

Quote

16

சென்னை போன்ற பெரும் மாநகரங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக ஸ்தம்பித்தன. இரண்டாவது அலையை சமாளிக்க அரசாங்கங்கள் திணறின.

மருத்துவமனை வாசல்களில் நோயாளிகள் திரள் திரளாகக் காத்திருந்தனர். உயிருக்காகப் போராடினர். பலரின் உயிர்கள் மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் போதே முடிந்து போனது.

இங்கே பணக்காரன் ஏழை எல்லாம் சமம் என்பது போல கொரானா உடல்கள் எல்லாம் ஒரே போல தகனம் செய்யப்பட்டன. மனிதர்கள் பார்க்கும் தாராதரம் எல்லாம் மரணத்திற்கு இருப்பதில்லை.

மரண பயம்தான் மனிதநேயத்தை வார்த்து எடுக்கிறது. ரேணுவை ஜோசப்பிற்கு உதவ வைத்தது. அதே மனிதநேயம் அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவியது.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது போல எங்கேயோ முகம் தெரியாத மனிதன் தேடி வந்த ரேணுவின் உயிர் காக்க உதவினார்.

ரேணுவிற்கு சிகிச்சைத் தொடங்கி மூன்று மணிநேரம் அனாயசமாக பறந்து போனது. அதன் பின் மருத்துவர் நிரஞ்சனிடம், "ஆக்சிஜன் கொடுத்திருகோம்... உங்க அம்மாவுக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்ல... ஆனாலும் அட்மிட் பண்ணி ஆகணும்... எங்களுக்கே ரொம்ப நெருக்கடியான சிட்டுவேஷன் இது... ஏற்கனவே இங்கே அதிகமான பேஷன்ட்ஸ் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டிய நிலைமை... ஸோ இங்கே வேலை பார்க்கிற டாக்டர்ஸ் நர்ஸஸ் வார்ட் பாய்ஸ்னால எல்லாம் பேஷண்ட்ஸ் கவனிச்சுக்க முடியாது... ஒவ்வொரு பேஷன்ட் கூடவே அவங்களோட நெருங்கன ரிலேட்டிவ் ஹாஸ்பிட்டலேயே இருந்து பார்த்துக்கணும்... பேஷன்டுக்கு தேவையானதை எல்லாம் செஞ்சு கொடுக்கணும்... இந்த ரிஸ்க்கை யாராவது எடுத்துதான் ஆகணும்... இந்த எமர்ஜன்ஸி டைம்ல வேற வழியும் இல்ல" என்றவர் தெளிவாக விளக்கிச் சொல்ல அவன் பட்டென,

"நான் இருக்கேன் டாக்டர்... எங்க அம்மா கூட" என்றான்.

"யாரும் லேடிஸ் இல்லையா உங்க வீட்டுல... டிரஸ் சேஞ் பண்றது... இந்த மாதிரி ஹெல்ப் எல்லாம் செய்ய வேண்டி இருக்கும்..." என்று அவர் சொன்னதும் அவன் முகம் யோசனையாக மாறியது. உடனடியாக மிருதுளாவுக்கு அழைக்க, உதய்தான் எடுத்துப் பேசினான்.

நிரஞ்சன் ரேணுவின் உடல் நிலைப் பற்றித் தெரிவிக்க, "அட கடவுளே... அத்தை இப்போ எப்படி இருக்காங்க?" என்று பதற,

"ட்ரீட்மெண்ட்லதான் இருக்காங்க மாமா... கொஞ்சம் சீரியஸ் சிட்டுவேஷன்தான்" என்று தயங்கியபடி கூறியவன் மேலும்,

"மாமா... வந்து... இங்கே அம்மாவைப் பார்த்துக்க யாராவது ஒருத்தர் கூடவே இருக்கணும்னு சொல்றாங்க... அதான் மிருதுவை அனுப்பிவிட முடியுமா?" என்று கேட்டான்.

"மிருதுவுக்கே இரண்டு நாளா உடம்பு சரியில்ல மச்சான்... ஆக்சுவலி கொரானா சிம்ப்டம்ஸ்தான்" என, ரஞ்சன் அதிர்ந்தான்.

"என்ன மாமா சொல்றீங்க?"

"ஆமா மச்சான்... டெஸ்டுக்குக் கொடுத்திருகோம்... ரிசல்ட் வரல... எங்கே சொன்னா பயந்துட போறீங்கன்னு சொல்லாம இருந்தேன்... அதுவுமில்லாம ஜோஷி அப்பா பத்தி இவ பேசுன பேச்சுக்கு இப்போ தனக்கே உடம்பு சரியில்லன்னு சொன்னா அவமானமா இருக்கும்னு உங்க அக்காவே சொல்ல வேண்டாம்னுட்டா... இப்போ அவ தனி ரூம்ல இருக்கா... நான்தான் வீட்டு வேலை குழந்தைங்கன்னு எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்"

"அக்காவையும் பசங்களையும் பார்த்துக்கோங்க மாமா... நிலைமை ரொம்ப சீரியஸா இருக்கு... ஒரு ஹாஸ்பிட்டல்ல கூட பெட் இல்ல" என்று நிரஞ்சன் நிலைமையை எடுத்துரைத்தான்.

"இல்ல மச்சான்... இப்போதைக்கு அவ்வளவு சீரியஸா இல்ல... நான் மிருதுவைப் பார்த்துக்கிறேன்.... நீ அத்தையைப் பார்த்துக்கோ... எதுவா இருந்தாலும் ஃபோன் பண்ணு"

அவர்கள் உரையாடல் முடிந்து அழைப்பைத் துண்டித்த நிரஞ்சனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. கைக் குழந்தையுடன் இருக்கும் சாதனாவை இப்படியொரு உதவிக்காக எதிர்பார்க்க முடியாது. அம்மாவிற்கு மிக நெருக்கமான சகோதரி உறவு முறைகள் கூட கிடையாது.

 அவன் குழப்பத்துடன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, "நீ ஏன் இவ்வளவு குழப்பிக்கிற நிரு... நானே ஆன்டி கூட இருக்கேன்" என்று சரியான நேரத்தில் ஜோஷி அவனுக்குக் கைக் கொடுத்தாள்.

மனைவியின் கரத்தை அவன் நெகிழ்ச்சியாகப் பற்றிக் கொண்டு கண்ணீர் வடிக்க ரேணு அவன் தோளில் தட்டிக் கொடுத்தாள்.

ஒரு வழியாக ரேணுவுடன் ஜோஷிகா தங்குவதென முடிவான பின்னர் அவர்களுக்குத் தேவையான உடை மற்றும் இதர பொருட்களை எடுத்துவர அவன் வீட்டிற்குப் புறப்பட்டான்.

இருப்பினும் மனதில் ஒரு நமைச்சல் இருந்து கொண்டே இருந்தது. ஜோஷியும் ரேணுவும் வெவ்வேறு துருவங்கள். இருவரும் ஒன்றாக சமாளிப்பது சாத்தியப்படுமா?

இந்தக் கவலையுடனே அவர்களுக்குத் தேவையானப் பொருட்களையும் உடைகளையும் மருத்துவமனை வாயிலுக்குச் சென்று கொடுத்துவிட்டு வந்தான்.

விஷயம் அறிந்து சாதனா வேறு, "என்கிட்ட ஏன் சொல்லல... ஐயோ! இந்த மாதிரி சூழ்நிலைல நான் வந்து அம்மாவைப் பார்த்துக்க முடியாத போச்சே!" என்று வருந்தி அழ,

"இங்கே அம்மாவை ஜோஷி பார்த்துக்கிறா... நீ கவலைப்படாதே" என்றான்.

"நாங்கெல்லாம் இருந்தும் அம்மாவை யாரோ பார்த்துக்கிற மாதிரி" என்ற வார்த்தையை முழுவதுமாக சொல்ல முடியாமல் விழுங்கிக் கொள்ள,

"ஜோ யாரோ இல்ல... இந்த வீட்டோட மருமக... அவ அம்மாவை நல்லா பார்த்துப்பா... உனக்கு தெரியாது சாதனா... இன்னைக்கு அவ இருந்ததாலதான் அம்மாவை ஹாஸ்பிட்டல்ல சேர்க்க முடிஞ்சுது" என்றவன் நடந்த விவரங்களை விளக்க,

"நீ சொல்றது சரிதான்... ஆனா ஜோஷி எப்படி அம்மாவை நல்ல பார்த்துப்பாங்கன்னு எனக்கு யோசனையாதான் இருக்கு" என்றவள் மனம் சமாதானமாகவில்லை.

"இப்ப நமக்கு வேற வழியும் இல்ல சாதனா... மிருது அக்காவுக்கும் உடம்பு சரியில்ல" என்றதும் அவள் மௌனமாகிட,

"குழந்தையை வைச்சிருக்க நீ இவ்வளவு ஸ்ட்ரஸ் ஆகக் கூடாது... நீதான் இப்போ ரொம்ப சேஃபா இருக்கணும்" என்றவன் அக்கறையாக அவளுக்குப் புரிய வைக்க, "ஹம்ம்... சரி... அம்மாவைப் பார்த்துக்கோங்க" என்ற அவள் குரல் தழுதழுத்தது.

சாதானாவை சமாளித்துப் பேசி அழைப்பைத் துண்டித்தப் பின் அவனுக்கே ஜோஷி எப்படி அம்மாவைப் பார்த்துக் கொள்வாள் என்ற சந்தேகம் எழுந்தது. இதுவரையில் பெரிதாக வீட்டு வேலை கூட செய்யாதவள். அப்படி இருக்கும் போது இங்கே மருத்துவமனையிலிருந்து அம்மாவுக்கு வேண்டிய உபகாரங்களைச் செய்து கொடுக்க இயலுமா? அம்மா ஜோஷி அவருடன் தங்குவதை ஏற்றுக் கொள்வாரா என்று பல நூறு யோசனைகளும் குழப்பங்களும் அவன் மனதிற்குள் சுழன்று கொண்டிருந்தன.

அடுத்து வந்த நாட்களில் மாதவனுக்குத் தீவிர காய்ச்சல் வந்ததால் இந்த யோசனைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அவருக்கு மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே மாத்திரைகளும் சிகிச்சைகளும் வழங்கியதில் ஓரளவு சமாளிக்க முடிந்தது. உடன் ஜோசப்பும் மிகவும் உதவியாக இருந்தார்.

அவனையும் கூட கொரானா விட்டு வைக்கவில்லை. அவனுக்கும் லேசாக காய்ச்சல் அறிகுறித் தென்பட்டது. ஆனால் ரேணுவுக்குச் சிகிச்சை தரும் மருத்துவர் முன்னெச்செரிக்கையாக அவனுக்கு விட்டமின் மற்றும் இதர சத்து மாத்திரைகள் எழுதி தந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து போட்டு வந்ததால் அவன் கொஞ்சம் சமாளித்துக் கொண்டான்.

இத்தனை களேபரங்களுக்கு இடையிலும் தினமும் ரஞ்சன் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அல்லல்ப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் ரேணுவையும் உடன் இருந்த ஜோஷியையும் அவன் நேரில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இப்படியாக இரண்டு வாரங்கள் கழிந்தன.

இந்த இரண்டு வாரங்களில் ஜோசப்பிற்கும் மாதவனுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டிருந்தது. இருவரும் ஒன்றாக சமைத்துப் பேசி என்று பொழுதைக் கழித்தனர். அதேநேரம் நிரஞ்சன் மீது ஜோசப் கொண்டிருந்த தவறான பார்வைகளும் மாறி புரிதல் ஏற்பட்டிருந்தது.

அன்று காலை வீடியோ காலில் ரேணுவிடம் பேசிய போது ஓரளவு அவர் முகம் தெளிந்திருந்தது. மருத்துவரும் இன்னும் இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் செய்துவிடலாம் என்று அறிவுறுத்த அவன் மிகப் பெரிய யுத்த களத்தில் நின்று வென்ற உணர்வில் சிலாகித்துப் போனான்.

ஆனால் இதற்கு பிறகுதான் அவர்கள் உண்மையான யுத்தகளத்தில் நின்றனர்.

ரேணு வீடு திரும்புவதற்கு முன்பாக மாதவனும் நிரஞ்சனும் வீட்டை முழுவதுமாக கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்தனர். உண்மையில் அது அத்தனை சுலபமாக இல்லை. படுக்கை விரிப்பை மாற்றித் துவைப்பது, துவைத்த துணிகளை மடித்து அலமாரிகளில் அடுக்கி வைப்பது என்று அந்த இரண்டு நாளாக வேலைகள் பெண்டு நிமிர்ந்தன.

எல்லாவற்றிற்கும் மேல் ரேணு அந்த சமையலறையை எப்படி வைத்திருந்தாரோ அதே போன்று சுத்தம் செய்து துடைத்து வைப்பதுதான் அவர்களுக்குப் பிரம்மபிராயத்தனமான வேலையாக இருந்தது.

வீட்டைப் பார்த்துக் கொள்ளுதலும் பராமரித்துக் கொள்ளுதலும் என்பது மிகச் சாதாரண வேலைகள் போல தோன்றினாலும் அது எத்தனை கிளை வேலைகளைக் கொண்டது என்று செய்து பார்த்த போதுதான் மாதவனுக்குப் புரிந்தது.

இத்தனை வருடங்களாக வீட்டைப் பார்த்து பார்த்து பராமரித்துக் வரும் குடும்ப பெண்களின் வேலைகள் அத்தனை எளிதில்லை. வேலைக்காரிகள் கூட இதுபோன்ற நுணுக்கமான வேலைகளை செய்வதில்லை என்பது விளங்க, மனைவியின் மீது அதீத மதிப்பும் பற்றுதலும் ஏற்பட்டது.

அன்று மாலை ரேணு வந்து வீட்டில் இறங்க மிருதுளாவும் தன் வீட்டிலிருந்து வந்து சேர்ந்திருந்தாள். ரேணு ஒரளவு உடல் தேறி இருந்த போதும் சோர்வுடன் தென்பட்டார்.

மரண படுக்கை வரை சென்று வந்த தாயிற்கு ஆலம் சுற்றி உள்ளே அழைத்த மகள் கண்களில் கண்ணீர் நிரம்பியது. அந்த கணம் எல்லோரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் நிறைந்திருந்தது.

அம்மாவின் கைப் பிடித்து நிரஞ்சன் உள்ளே அழைத்துச் சென்று அவர் அறையில் படுக்க வைக்க மிருதுளா, "இந்த மாதிரி நேரத்தில உங்க கூட இல்லாம போயிட்டேனேம்மா" என்று குற்றவுணர்வுடன் அழத் தொடங்கிவிட்டாள்.

"அதுக்கு என்ன பண்ண முடியும் மிருது... நீயும் உடம்பு சரியில்லாமதானே இருந்த" என்றவர் மகளின் கண்ணீரைத் துடைத்து சமாதானம் செய்ய,

"இல்ல... நான் உங்க கூட இருந்திருக்கணும்" என்றவள் மனம் ஏற்கவே இல்லை.

"அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல... விடு... என்னை ஜோஷிகா நல்லா பார்த்துக்கிட்டா" என்றார். நிரஞ்சன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அதேநேரம் ஜோவும் ரேணுவும் பரஸ்பரம் ஒரு சிநேகமான புன்னகையைப் பரிமாறிக் கொண்டது அவனை இன்னும் ஆச்சரியப்படுத்தியது.

"சரி நீங்கப் பேசிட்டு இருங்க... நான் போய் ஃப்ரஷ்ஷாகிட்டு வரேன்" என்று ஜோ அங்கிருந்து செல்ல எத்தனிக்கும் போது, "ஜோஷி" என்று அழைத்த மிருதுளா,

"சாரி... அன்னைக்கு நான் உங்க அப்பாவுக்கு கொரானா வந்த போது நீங்க போய் பார்த்துக்கிறேன்னு சொன்னதுக்கே நான் என்னன்னவோ பேசிட்டேன்... ஆனா நீ எங்க அம்மா கூட ஹாஸ்பிட்டல இருந்து அவங்களை நல்லா பார்த்துக்கிட்ட" என்று நன்றியுணர்வுடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு பேச,

"அவங்க உங்களுக்கு மட்டும் அம்மா இல்லையே... எனக்கும் அம்மா மாதிரிதான்... ப்ளீஸ் தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை ஸ்டரேஞ்சர் ஆக்கிடாதீங்க" என்ற ஜோவின் வார்த்தைகள் மிருதுளாவை நெகிழ்த்தின. அவளைக் கட்டியணைத்துக் கொண்டாள்.

ஜோவின் பேச்சிலிருந்த முதிர்ச்சியைப் பார்த்து வியந்தவண்ணம் நின்றிருந்தான் நிரஞ்சன். அதன் பின் அவள் அறைக்குச் சென்றுவிட, ரேணு சாதனாவிடம் வீடியோ கால் போட்டு பேசிக் கொண்டிருந்தார்.

"நான் டிஃபன் ரெடி பண்றேன்" என்று மிருதுளா சமையலறை நோக்கி வர பின்னோடு வந்த நிரஞ்சன், "நானும் ஹெல்ப் பண்றேன்" என்றான்.

"இருக்கட்டும் ரஞ்சு நான் பார்த்துக்கிறேன்"

"பரவாயில்ல நான் ஹெல்ப் பண்றேன்" என்று தமக்கையின் உடன் இருந்து உணவை தயார் செய்ய உதவியவனிடம் வேலைகளை முடித்தவுடன்,

"நான் அம்மாவுக்குக் கஞ்சிக் கொடுக்கிறேன்... நீ ஜோவை சாப்பிட கூப்பிட்டுட்டு வா" என்றாள்.

அவன் மேலே செல்ல தன் அம்மா அப்பாவின் அறையைக் கடக்கும் போது எதேச்சையாக அவர்கள் பேசிக் கொள்வது அவன் செவியில் விழுந்தது.

மாதவன் மனைவியின் கால்களை அழுத்தியபடி, "இந்த இரண்டு வாரத்துல நீ எனக்கு நரக வேதனையைக் காட்டிட்ட ரேணு " என்று கூறினார்.

"நான் என்ன பண்ணேன்... எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியுமா?"

"எங்க உடம்பை எல்லாம் பார்த்து பார்த்து கவனிச்சிக்கிட்ட நீ உன்னை கவனிச்சிக்காம விட்டுட்ட... ஆனா தப்பு என் பேர்லதான்... உன்னைப் பத்தி நான் இல்ல யோசிச்சிருக்கணும்" என்றவர் வருந்தி பேசுவதைக் கேட்டு,

"இப்ப எதுக்கு இதெல்லாம்... அதான் நான் நல்லாயிட்டேன் இல்ல" என்றார்.

"நீ இப்போ நல்லாயிட்ட... ஆனா இந்த இரண்டு வாரத்துல நான் பேசுன வார்த்தையை நினைச்சு நினைச்சு குற்றவுணர்வால செத்தேன்... அந்த வார்த்தை உன்னை எந்தளவுக்கு ஆழமா தாக்கி இருக்கும்னு எனக்கு இப்பதான் புரிஞ்சுது... என்னை மன்னிச்சிடு ரேணு" என்றவர் கண்ணீர் அவர் பாதம் நனைக்க,

"ஐயோ என்னங்க நீங்க... அதெல்லாம் ஒன்னும் இல்ல.... விடுங்க" என்று ரேணு அவரைத் தேற்ற மாதவன் மேலும் கண்ணீர் வடித்தார். சோதனை காலங்களைக் கடக்கும் போதுதான் மனிதன் தன்னுணர்வு பெறுகிறான்.

இறுதியாக ரேணு அவர்கள் பேச்சின் தொடர்ச்சியாக சொன்னதுதான் கடந்து சென்ற நிரஞ்சன் செவியில் விழுந்தது.

"எனக்கு சுத்தமா இப்போ கோபமெல்லாம் இல்ல... அன்னைக்கு நீங்க பிடிவாதமா இல்லன்னா ஜோஷிகா மாதிரி ஒரு நல்ல மருமக நமக்கு கிடைச்சிருக்க மாட்டா"

அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட நிரஞ்சனுக்கு உடலெல்லாம் சிலிர்த்து மயிர்கூச்செறிந்தது. கடைசி வரை அவர் தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று பயந்து கொண்டிருந்தான்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. ஜோஷிகாவை மருமகளாகப் பெற்றதற்காக அவர் சந்தோஷம் கொள்கிறார். அந்த நொடி அவன் பாதங்கள் தரையில் நிற்கவில்லை. பறந்து கட்டிக் கொண்டு மனைவியைப் பார்க்க மாடிக்கு ஓடினான்.

அப்போது ஜோ தன்னுடைய ஈர கூந்தலைத் துவட்டியபடி மாலை நேர சூரியனின் மஞ்சள் நிறத்தை ரசித்தபடி பால்கனி திண்டில் அமர்ந்திருந்தாள். ஒரு ஓவியப் பாவை போல...

அவள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை அவளது பார்வைச் சொன்னது. அவளின் அந்த அமைதியைக் குலைக்காமல் அவன் படிக்கட்டின்  ஓரமாக நின்றுவிட அவள் வழக்கமில்லாமல் பல வகையான பறவைகளை வானில் கூச்சலிட்டுக் கொண்டு பறப்பதைப் பார்த்து அதிசயித்துக் கொண்டிருந்தாள். எல்லாம் கொரானா மயம். மனிதனின் தலையீடு இல்லாத உலகம் அழகாகவும் அமைதியாக இருந்திருக்கும்.

சட்டென்று காட்டு பாதைகள் அவள் மனதில் விரிந்தது.

'The woods are dark, deep and lovely' என்று மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டவளுக்கு அந்த நீண்ட பாதையின் உள்ளே உள்ளே சென்று தொலைவது போன்ற எண்ணம் தோன்றியது.

ஆர்ணயங்களில் ஓர் அரூபமான அமைதி அவளைத் தொடர்ந்து வரும். சட்டென்று ஒரு அசாம்பாவிதமான சத்தம் எழுந்து அவளைத் திடுக்கிட செய்யும். அவற்றுக்கு எல்லாம் பழக்கப்பட்டவள். ஆனால் இந்த குடும்பம வாழ்க்கைக்கு...

நீச்சல் தெரியாமல் காட்டாற்று வெள்ளத்தில் தள்ளிவிட்டது போல அவளுக்கு உண்மையிலேயே இந்த உலகத்தில் மூச்சுத் திணறிப் போனது. ஆனால் இந்த உயிர் போராட்டம்  குடும்பத்தின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்தது. இதுபோன்ற இக்கட்டான சூழல்களில்தான் ஒவ்வொருவருக்கும் அன்பும் அக்கறையும் குடும்பத்தின் அரவணைப்பு தேவையாக இருக்கிறது.

கொரானா உடல்களை மட்டும் தாக்கவில்லை. மனங்களையும் கூட தாக்குகிறது. ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்திற்கு எத்தனை முக்கியத்துவமானவள் என்ற புரிதல் ஏற்பட்டிருந்ததை அவள் உளமார உணரும் போது நிரஞ்சனின் கரம் அவளைத் தழுவிக் கொண்டன.

அவள் திடுக்கிட்டு திரும்பும் போது அவன் கரங்கள் அவளை இடையோடு தூக்கிக் கொண்டன.

கால்கள் காற்றில் பறக்க, "நிரு என்ன" என்றவள் வார்த்தைகள் முடியும் முன்னர் அவன் அதரங்கள் அவள் இதழின் மீது பதிந்தன.

அவளை அப்படியே தன்னறைக்குள் தூக்கி வந்து படுக்கையில் கிடத்தியவன் அவள் முகம் முழுக்க முத்தமிட்டுத் தீவிர தாபத்துடன் அவள் தேகத்தைத் தழுவினான். இறுகிய அவன் கர வளையத்திற்குள் பாவையவள் ஒடுங்க, அவன் தன் காதலையும் காமத்தையும் அதீத வீரியத்துடன் காட்டினான். பின் மெல்ல எழுந்தவன் அவள் முகத்தில் சரிந்திருந்த சுருள் முடியை விலக்கிவிட்டு,

"லவ் யூ ஜோ... நீ இல்லனா எங்க அம்மா இல்ல... ஏன் நானும் இப்போ இல்ல... யூ ஆர் ஆன் ஏஞ்சல்" என்று கம்மிய குரலில் உரைக்க அவள் உதடுகள் அலட்சியமாக வளைந்தன.

"ப்ளீஸ் நிரு... என்னை ஏஞ்சல்னு நீ தூக்கி மேலயும் வைக்க வேண்டாம்... கோபம் வந்தா சில்லின்னு கீழேயும் போட வேண்டாம்... நான் ரொம்ப சாதராணமான பொண்ணு" என்றவள் மிக மிக நிதானமாக தன் வார்த்தைகளைக் கோர்த்துப் பேச அவன் அதிர்ந்து பார்த்து,

"சாரி ஜோ... அன்னைக்கு நான் அப்படி பேசி இருக்கக் கூடாது" என்று மன்னிப்பு கோரும் போது அவன் விழிகளோரம் ஒதுங்கிய நீர் அவள் கன்னங்களில் விழுந்து நனைத்தது.

"நிரு" என்று நெகிழ்வுடன் அவனைப் பார்த்தவள், "உன்னைக் குத்திக் காட்டணும்னு அப்படிச் சொல்லல... ஆக்சுவலி நான் சில நேரங்களில் ரொம்ப சில்லியா நடந்துப்பேன்... ஒரு வகையில அதுவும் என் கேரக்டர்தானே" என,

"உண்மைதான் ஜோ... நமக்குள்ள எல்லா மாதிரியான கேரக்டரும் இருக்கு... ஆனா பிரச்சனை வரும் போது நமக்குள்ள இருந்து வெளிப்படுற கேரக்டர் இருக்கு இல்ல... அதுதான் நிஜம்... நீ எவ்வளவு பொறுப்பான தைரியமான பொண்ணுன்னு இந்த இக்கட்டான சூழ்நிலை எனக்கு புரிய வைச்சிருக்கு... ஏன் என் அம்மாவுக்கே புரிய வைச்சிருக்கு.

அதான் அம்மா அப்பாக்கிட்ட உன்னைப் பத்தி பாராட்டிப் பேசிட்டு இருந்தாங்க" என்றவன் கேட்டவற்றைச் சொல்ல,

"நிஜமாவா நிரு" என்றவள் ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

"ம்ம்ம்" என்றவன் ஆமோதிக்க தன் முடியைக் கோதிக் கொண்டவள், "நான் எதுவுமே பண்ணல... நீ அலைஞ்ச அளவுக்கு கூட நான் அலையல... ஜஸ்ட் நான் ஹாஸ்பிட்டல ஆன்டி கூட இருந்தேன் அவ்வளவுதான்" என்றவள் சாதாரணமாகச் சொல்ல,

"நீ செஞ்சது எவ்வளவு பெரிய விஷயம்னு உனக்கு தெரியாது ஜோ" என்றவன் காதலுடன் மீண்டும் அவள் உதடுகளை ஸ்பரிசித்தான். அவள் அந்த முத்தத்தில் கரைய பிரிவினால் அவனுக்குள் செறிந்த தாப உணர்வை அவளிடம் காட்டியவனின் கரங்கள் அவளின் தேகங்களில் வளைய வந்தன.

சட்டென்று கீழே மிருதுவின் அழைப்புக் கேட்டு சுதாரித்துக் கொண்டவன், "அக்கா டின்னர் சாப்பிட கூப்பிடுறா" என்று எழுந்து தன் சட்டைப் பொத்தான்களைப் போட்டுவிட்டு களைந்த முடியை சரி செய்தான்.

"ஜோ எழுந்திரி... சாப்பிட போலாம்" என்றவன் அவசரமாகக் கூற,

அவள் படுத்தபடி, "மாட்டேன்" என்றாள்.

"ப்ச் ஜோ" என்றவன் அவளைப் பார்க்க,

"தூக்கிட்டுதானே வந்த... தூக்கிட்டுப் போ" என்றவள் தம் கரங்களைத் தூக்கிக் காட்டினாள்.

"எப்படி ஜோ... கீழே அக்கா அம்மா எல்லோரும் இருக்காங்க"

"தூக்கிட்டுப் போ" என்றவள் பிடிவாதமாக கைகளை உயர்த்த வெகுநேரம் அவளிடம் மன்றாடி முடியாமல், வேறு வழியின்றி மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு அவளைத் தூக்கிக் கொண்டு படியிறங்கி வீட்டு வாயிலை நெருங்கவும் அவள் சரேலென்று கீழே குதித்து அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தாள். அதுதான் ஜோ.

அவளின் அந்த குழந்தைத்தனம்தான் அழகு.

எல்லோரும் ஒன்றாக உணவு உண்டு முடித்த பின் ஜோ ரேணு உட்கொள்ள வேண்டிய மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாள்.

"இந்த டானிக் வேண்டாம் ஜோ... ரொம்ப கசக்குது"

"ஆன்டி" என்றவள் புருவத்தைச் சுருக்க,

"முறைக்காதடி... குடிக்கிறேன்" என்றாள்.

இருவரும் கலகலப்பாகப் பேசிச் சிரித்துக் கொள்வதைப் பார்த்த எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. மருத்துவமனையில் ஒன்றாகத் தங்கி இருந்த அந்த இரண்டு வாரத்தில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை ரேணுகாவும், தான் காடுகள் எல்லாம் சுற்றிய அனுபவங்களை ஜோஷிகாவும் பகிர்ந்து கொண்டனர்.

இப்படியாக இருவருக்குள்ளும் ஏற்பட்ட பேச்சுக்கள் ஒரு அழகான நட்பாக மலர்ந்திருந்தது.

ரேணுகாவின் அனுபவம் ஜோவிற்குப் புதிதாக இருந்தது. ஜோவின் கதைகள் ரேணுவிற்கு புது உலகத்தைக் காட்டியது.

எதிர்காலத்தில் அது இருவரின் வாழ்விலும் மனங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

***

இரண்டு மாதங்களுக்குப் பிறகு...

மெல்ல இரண்டாவது அலை ஓயத் தொடங்கியிருந்தது.

கடந்து சில நாட்களாக ரேணுகா தன்னுடைய காலை தேநீரை சூரியனின் பொன்கிரணங்களை ரசித்தபடி குடிக்க தொடங்கியிருந்தார்.

எத்தனையோ வேலைகள் இருந்தாலும் நமக்கே நமக்கான சில நிமிடங்களை ஒதுக்கிக் கொள்ளுதல் முக்கியமென்று ஜோஷிகாவிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தார்.

அதேபோல ஜோஷிகா குடும்பத்திற்காக தன்னுடைய நேரங்களை ஒதுக்க வேண்டும் என்று ரேணுகாவிடமிருந்து கற்றுக் கொண்டாள்.

ஜோ ரேணுவிடமிருந்து சமையல் கற்று கொள்வது போல பரஸ்பரம் ரேணு அவளிடமிருந்து சமூக ஊடகங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவங்களைக் கற்றுக் கொண்டார்.

தான் செய்த சமையல் ரெசிபிகள், தோட்ட பராமரிப்புகளின் குறிப்புகளை ரேணு சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் பாராட்டுகள் அவருக்கு ஒரு அலாதியான சந்தோஷத்தைக் கொடுத்தது.

அவரின் நட்பு வட்டமும் உலகமும் விரிவடைந்தது.

ரேணு ஜோவின் நட்பை கண்ட அவர்கள் வீட்டிலுள்ள எல்லோரும் நம்ப முடியாத ஆச்சரியத்தில் இருந்தனர்.

அன்று எதார்த்தமாக ஜோஷிகா ரேணுகாவை எதிர் வீட்டிலிருந்த தனது அறையைக் காட்ட அழைத்துச் சென்றாள்.

அந்த அறை ஒரு கானகத்திற்குள் செல்லும் உணர்வைக் கொடுத்தது ரேணுவிற்கு!

அத்தனை வகையான படங்கள், விலங்குகள், அருவிகள், மரங்கள், ஆறுகள், மண்டிய புதிர்கள் என்று காட்டின் ஒவ்வொரு இண்டு இடுக்குகளையும் அவள் நிழற்படமாக மாற்றி தன் அறையை நிரப்பியிருந்தாள்.

ஆச்சிரியத்துடன் அவற்றை பார்வையிட்ட ரேணு, "இந்த ஃபோட்டோஸ் எல்லாம் நீயே எடுத்தியா?" என்று கேட்க,

"எஸ் ஆன்டி" என்றவள் ஆர்வமாக அந்தப் படங்களை அவள் எடுத்த போது நடந்த சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டவள் சட்டென்று நிறுத்தி,

"ஆனா என்ன... எதையும் அடுக்காம எல்லாத்தையும் கண்ட மேனிக்கு தூக்கிப் போட்டு வைச்சிருக்கேன்... அதான் இப்படி குப்பையா இருக்கு... உங்களவுக்கு என்னால சுத்தமான மெய்ட்டைன் பண்ண வராது" என்று சொல்ல,

"இல்ல... இப்ப எனக்கு அப்படி தோனல... இப்படி கலைஞ்சிருக்கிறதுலயும் ஒரு தனியழகு இருக்குன்னு உன் ரூமை பார்த்த பிறகு எனக்கு தோனுது" என்றார்.

"ஆன்டி... சீரியஸ்லி" என்றவள் வியப்புடன் வினவ,

"ம்ம்ம்" என்று தலையசைத்தவர், "நான் வீட்டை அழகா வைச்சிக்கணும்னு நினைக்கிறேன்... நீ உலகத்துல இருக்க இயற்கை அழகை ரசிக்கிற... இரண்டு பேர்கிட்டயும் ரசனை இருக்கு... ஆனா அது வெவ்வேறான கண்ணோட்டத்துல இருக்கு அவ்வளவுதான்...

உன்கிட்ட பழகின பிறகு நான் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கிட்டேன்.

யாரையும் நம்முடைய கண்ணோட்டத்தை வைச்சு தப்பு சரின்னு எடை போட கூடாது. அவங்க அவங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கு... அது அவங்க வாழ்க்கையையும் சூழ்நிலையையும் பொறுத்தது.

மருமகள்னா சமைக்கவும் வீட்டைப் பார்த்துக்கவும்தான் தெரியணும்கிற பழைய கண்ணோட்டத்தை நான் இப்போ மாத்துக்கிட்டேன்.

பெண்களோட உலகம் மாறிக்கிட்டே வருது... விரிவடைஞ்சிட்டே வருது... எங்களை மாதிரி நீங்களும் சமையல்கட்டுலேயே உங்க வாழ்க்கையை முடிச்சுக்க வேணாம்...

உனக்கு ஃபோட்டோ எடுக்க நல்லா வருதா... நீ அதைப் பண்ணு... வெறும் பொழுதுபோக்கா இல்லமா... அதுல நீ உன் அடையாளத்தை உருவாக்கு... சாதனை பண்ணு.

இந்தத் துறையில உனக்குன்னு நீ தனி அங்கீகாரத்தை உருவாக்கிக்கோ ஜோ.

அப்பதான் எல்லோரையும் போல என் மருமக நல்ல சமைப்பா வீட்டைப் பார்த்துப்பான்னு யூஸ்வலான டைலாக்கா சொல்லாம வித்தியாசாம என் மருமக ஒயில்ட் லைஃப் ஃபோட்டோகிராபில எக்ஸ்பர்ட்னு சொல்லிக்க முடியும்" என்று அவர் பேசி முடிக்கும் போது ஜோ வியந்து அவரைப் பார்த்தாள்.

இதையே தன் தந்தை சொன்ன போது அத்தனை பெரிய விஷயமாக அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் ரேணு இப்படி சொல்லும் போது வியப்பாகவும் விசித்திரமாகவும் இருந்தது.

"சீரியஸா சொல்றீங்களா ஆன்டி?"

"ஆமா" என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டவர், "நான் உனக்கு எப்பவும் சப்போர்ட்டா இருக்கேன்" என்றார்.

ஜோவால் நம்பவே முடியவில்லை.

ஆனால் லாக்டௌன் முடிந்த கையோடு கேரளாவின் நீலம்பரி கானகத்திற்குள் காலடி எடுத்த வைத்த போது...

The woods are lovely, dark and deep

But I have promises to keep

And miles to go before I sleep

And miles to go before I sleep

//கானகங்கள் அழகானவை. இருளடர்ந்தவை. ஆழமானவை, 

ஆனால் நான் அக்கானகத்திற்குள் தொலைந்து போய்விட கூடாது... நான் காப்பாற்ற வேண்டிய சத்தியங்கள் பல உள்ளன...

தூங்குவதற்கு முன்பாக நான் என் இலக்கைச் சென்றடைய வேண்டும்.

தூங்குவதற்கு (மறிப்பதற்கு) முன்பாக நான் என் இலக்கை சென்றடைய வேண்டும்//

இந்த வரிகள்தான் ஜோவின் நினைவிற்கு வந்தன.

இலக்கின்றி சுற்றித் திரிந்தவளை ரேணுவின் வார்த்தைகள் மாற்றின. தான் வகுக்கும் வெற்றிப் பாதைகள் பல பெண்களின் முன்னேற்றங்களுக்கு அடிப்படையாகக் கூடும் என்ற ஞானம் பிறந்தது.

ரேணுகாவின் மூலமாக ஜோஷிகா தான் செல்ல வேண்டிய இலக்கைக் கண்டுகொண்டாள்.

சிந்தனைகளிலும் சந்ததிகளிலும் இருவரும் மாறுப்பட்டிருந்தாலும் பரஸ்பரம் ஒருவரிடமிருந்து மற்றவர்கள் புது விஷயங்களைக் கற்று... வயது வரம்பின்றி அனுபவங்களைப் பெற்று கொண்ட வகையில்...

அவர்கள் அழகான முரண் கவிதைகள்!

***

பெண்களின் முன்னேற்றங்கள் என்பது எதிர்கால சந்ததிகளின் மாற்றங்களை மனதார ஏற்றுக் கொள்வதில் நடைபெறுகிறது. புதுப் பாதைகளைக் கண்டடைவதில் பரிணமிக்கிறது.

எதிர்கால சந்ததிகளை ஆக்கப்பூர்வமான பாதைகளில் வழிநடத்தி நற்சிந்தனைகளைக் கை மாற்றிவிடுவதுதான் முந்தைய சந்ததியின் கடமையாகும். ஆனால் பெரும்பாலான பெண்களே பெண்களுக்கு நண்டு காலை இழுப்பதைப் போல அவரவர் இன முன்னேற்றங்களின் தடையாகிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய எதார்த்தம்!

அது மாற வேண்டும். மாற்றங்கள் பிறக்க வேண்டும்.

********நிறைவு*********

vanitha16, Rathi and Thani Siva have reacted to this post.
vanitha16RathiThani Siva
Quote

அருமையான கதை. கதை அல்ல வாழ்வியல் பாடம். ரொம்ப நெகிழ்வான நிறைவான முடிவு.

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from Rathi on September 22, 2022, 8:19 PM

அருமையான கதை. கதை அல்ல வாழ்வியல் பாடம். ரொம்ப நெகிழ்வான நிறைவான முடிவு.

ரொம்ப ரொம்ப நன்றி மா. தொடர்ந்து உங்கள் கருத்தை படிக்கிறேன். கதையின் உணர்வுகளினூடாக அழகாக பயணித்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதம் கிரேட். மீண்டும் நன்றி மா

Rathi has reacted to this post.
Rathi
Quote

Very nice story 👍

You cannot copy content