You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 4

Quote

4

வெறுப்பு

சிகரெட்டின் புகை நாற்றம் அந்த இடத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது. வேந்தன் தன் கரத்தில் சிகரெட்டை புகைத்தபடியே கைப்பேசியில் அளவளாவிக் கொண்டிருந்தான்.

"என்ன வேந்த்? ... ஜஸ்ட் ஓன் வீக்னுதானே சொன்ன... இப்ப என்ன? அங்கயே தங்கிட்ட... ஒரு கால் கூட பண்ண மாட்டேங்குற"

அவன் நண்பன் தயா கேட்கவும் வேந்தன் தயக்கத்தோடு, "அது... ஒரு பிரச்சனை" என்று இழுத்தான்.

"டேய்... டேய்... என்கிட்டியேவா...என்னடா? எனக்கு தெரியாம...யாரையாச்சும் செட்டப் பண்ணிட்டியா... யாருடா அந்த பொண்ணு?" என்று கேட்க எதிர்புறத்தில் பேசியில் ஒரு கூட்டமே சிரிக்கும் ஒலி கேட்க அவன் கொந்தளிப்பானான்.

எதிர்புறத்தில் அவன் நண்பர்கள் மீண்டும், "எங்கிருந்துடா உனக்கு மட்டும் ஃபிகருங்க மடங்குறாங்க" என்று கேட்டனர்.

உச்சக்கட்ட வெறுப்பை எட்டியவன், "நான்சென்ஸ்... இங்க என்ன பிரச்சனைன்னு தெரியாம நீங்க பாட்டுக்கு பேசிட்டிருக்ககீங்க...  ஃபோனை வைங்கடா" என்று ஒட்டுமொத்தமாய் திட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவனிடம் பேசியது அவனுடன் கனடாவில் பணிபுரியும் அவன் நண்பர்கள் கூட்டம்தான். எல்லோரும் ஒற்றுமையாக வேலை செய்வார்களோ இல்லையோ?! ஒற்றுமையாய் குடித்து அவர்கள் நட்பைத் தழைக்கச் செய்வார்கள்.

இப்படிதான் அவர்கள் எப்போதும் பேசுவார்களெனினும், இன்று அவன் நிலைமையும் பிரச்சனையும் வேறு. அதனாலேயே சற்றுக் கடுமையாய் பேசிவிட்டான்.

வேந்தன் தன் சிகரெட்டை மொத்தமாய் கரைத்து அதன் நச்சுத்தன்மையை முழுமையாய் தனக்குள் வாங்கிக் கொண்டுவிட்டு, படியிறங்கி தன் வீட்டிற்குள் சென்றான். அவன் வாயிலிருந்து வாசனை வராத மாதிரி சாக்லேட் ஒன்றைச் சுவைத்தபடி வீட்டிற்குள் நுழைய, அவன் வீட்டார் சோகத்தின் பிடியில் மூழ்கியிருந்தனர்.

எந்த உறவுமே இல்லாத பெண்ணுக்காக அவர்கள் இப்படி ஒருவாரமாய் துக்கம் அனுசரிப்பது அவனுக்கு எரிச்சலாய் இருந்தது. ஒரு பக்கம் அவனின் தாய் வள்ளியம்மை. இன்னொருபக்கம் தங்கை எழில். இருவரும் கப்பல் கவிழ்ந்துவிட்டது போல அமர்ந்திருந்தனர்.

வள்ளியம்மை வங்கியில் மேனேஜர், அவன் தந்தை ஞானசேகரோ கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலம் கற்றாலும் தமிழ் மீது அவருக்கு அலாதியான காதல். அதனால்தான் அவரின் பிள்ளைகளுக்கு வேந்தன், எழில், மகிழ் என அழகான தமிழ் பெயர்களைத் தேடித் தேடிச் சூட்டியிருந்தார்.

மெத்தப் படித்த வேலைக்குப் போகும் பெற்றோர்கள் அல்லவா?! ஆதலால் அவர்கள் வளர்ப்பில் கண்டிப்பு இருந்தாலும் பிள்ளைகளின் நடவடிக்கையில் கவனிப்பு குறைவாயிருந்தது.

 முதல் மகன் வேந்தன்அதிக நேரம் தனிமையில் இருந்தான். தங்கை எழில் ஐந்து வயதிற்குப் பிறகு பிறந்ததினால் அவளிடம் அவனால் நெருங்கிப் பழக முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு தம்பி மகிழ் பிறக்க, அவனும் எழிலும் ஒருவாறு நல்ல நட்புறவாய் இருந்தனர். இதில் வேந்தன் அதிகம் தனிமைப்பட்டான். அம்மா, அப்பா, தம்பி, தங்கை என எல்லா உறவும் அவனிடமிருந்து விலகி நிற்க, அவனுக்குக் கிடைத்த தனிமை தீயப்பழக்கங்களை பழகுவதற்கு ஏதுவாய் இருந்தது.

அம்மா அப்பாவின் கண்டிப்பிற்காக பயந்து படித்தவன் வெளிநாட்டில் கிடைத்த வேலையை சமார்த்தியமாய் பற்றிக் கொண்டான். விரும்பியவற்றை எல்லாம் அனுபவிக்கக் கிடைத்த அருமையான வாய்ப்பு.

அவன் நல்லவன் கெட்டவன் என்ற கூட்டில் அடைபட விரும்பவில்லை. விரும்பியவற்றை அனுபவிக்க எந்த எல்லைக் கோட்டை மீறவும் தயாராயிருந்தான். அவன்தான் வேந்தன்!

அவன் சோகமே உருவமாய் அமர்ந்திருந்த தன் தங்கையையும் தாயையும் நோக்கி,

"இப்ப என்னாயிடுச்சின்னு ஆளுக்கொரு மூலையில உட்கார்ந்து அழுதிட்டிருக்கீங்க... யாரு அவ நமக்கு... ஒட்டா இல்ல... உறவா... சரி ஏதோ பழகின தோஷத்துக்குப் போய் பார்த்துட்டு வந்தாச்சு... அதோடு விடுவீங்களா”

“இப்படி ஒரு வாரமா மூஞ்சிய தூக்கி வைச்சிட்டிருக்கீங்க" என்று ஒரு வாரமாய் தன் மனதில் தேக்கியிருந்த கோபத்தை சமயம் பார்த்து கொட்டிவிட்டான். அவன் பேசிய வார்த்தைகளில் இருவருமே அதிர்ந்து அவனை நோக்கினர்.

எழில் தன் கண்ணீரைத் துடைத்தபடி, "என்ன அண்ணா இப்படி பேசுறீங்க .. அந்த பொண்ணு பாவம்" என்றாள். 'ஆமாம் ஆமாம் பாவம்தான்' எனக் கிண்டலாய் மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் தன் தங்கையை நோக்கி,

"ஊர்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் பாவம் பாத்திட்டிருந்தா... உன் புருஷன் பிள்ளையை யார் பார்த்துப்பா? ஒழுங்கா நாளைக்கு கிளம்பி உன் வீட்டுக்குப் போற வழியைப் பாரு" என்றான் அதிகாரத் தொனியில்.

எழிலுக்கு திருமணமாகி ஆறு வயதிலும் எட்டு வயதிலும் ஆண் குழந்தைகள் இருந்தனர். அந்தப் பெண்ணின் மரணச் செய்தி கேட்டதில் இருந்து எழில் தன் குடும்பத்தின் நினைவுகள் பற்றி மறந்திருந்தாள். வேந்தன் சொன்ன பிறகுதான் அவளுக்கே நினைவு வந்தது.

வள்ளியம்மைக்கு வேந்தன் சொன்னது சரியென்று தோன்ற மகளை நோக்கி நிமிர்ந்தவர், "வேந்தன் சொல்றது சரிதான் எழில்... நீ வீட்டுக்கு போ... மாப்பிள்ளை ஏதாச்சும் நினைச்சிக்க போறாரு" என்றார்.

எழில் அவர்கள் வார்த்தையை ஏற்காமல், "உம்ஹும்... இல்ல.. மகிழை என்னால இப்படியே விட்டுவிட்டு போக முடியாது... அவன் நிலைமையை பார்த்தால் ரொம்ப கஷ்டமாயிருக்கு" என்றாள்.

வேந்தன் தன் தங்கையிடம், "பின்ன கஷ்டமா இருக்காதா.?... காதலிச்ச பொண்ணாச்சே... ஆனா கொஞ்ச நாளாயிட்டா எல்லாம் சரியாயிடும்... அவன் நார்மலாயிடுவான்" என்றான்.

"எனக்கு அப்படித் தோணல... மகிழ் ரொம்ப சின்ஸியரா இருந்தான்.. அந்த பொண்ணை ரொம்ப லவ் பண்ணான்... எங்க தப்பா ஏதாச்சும் பண்ணிப்பானோன்னு" என்றவள் சொல்லும் போதே குரல் நடுக்கமுற்றது.

வள்ளியம்மைக்கும் அதே அச்சம் உள்ளுக்குள் இருக்கவே செய்தது. ஆனால் வேந்தன் அலட்டிக் கொள்ளாமல், "அதெல்லாம் பண்ணிக்க மாட்டான்... அவ கொஞ்சம் பார்க்க அழகாயிருந்தா... அதனால அவ மேல அவனுக்கு அட்ராக்ஷன்...மத்தபடி நீ இமோஷனலா யோசிக்கிறளவுக்கு ஒரு மண்ணுமில்லை" என்றான்.

வள்ளியமைக்கு அவனின் இரக்கமற்ற பேச்சு காயப்படுத்தியது.

"நீ நினைக்கிற மாதிரி இல்ல வேந்தா... அந்த பொண்ணு ரொம்ப நல்லவ... அதனாலதான் மகிழுக்கு அவளை பிடிச்சிருந்துது"

"நல்ல பொண்ணுன்னா... அப்புறம் ஏன் மகிழுக்கு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொன்னீங்க ?"

வேந்தன் கேட்ட இந்த கேள்வி அவருக்குக் குற்றவுணர்வை மேலோங்கச் செய்தது. மகிழ் அவளைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று திட்டவட்டமாய் சொன்ன போது வள்ளியம்மை, ஞானசேகர் இருவருமே அவள் பார்வையற்றவள் என்ற ஒற்றை காரணத்துக்காக அவர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

அவள் புத்திக்கூர்மையும் அழுகும் நிறைந்தவள்தான். அந்த பெண்ணை மகிழுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என எழிலும் கூட சொல்லிப் பார்த்தாள். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு பெரிதாய் தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் குறையைச் சுட்டிக்காட்டி அவள் ஆசையை நிராகரித்தது எந்த விதத்திலும் நியாயமில்லை.இப்போது எண்ணும் போது இருவருக்குமே தங்கள் முடிவு தவறென்றுப்பட்டது. ஆனால் விதியின் எண்ணம் அதுவாக இல்லையே!

இவர்கள் இப்படி சிந்தனையில் மூழ்கியிருக்கும் போதே மகிழின் அறைக்குள் நுழைந்தான் வேந்தன். உயிருக்கு உயிராய் நேசித்த பெண்ணை இழப்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. அழுது புரண்டு ஒரு வாரமாய் சரியாய் சாப்பிடாமல் பாதியாய் கரைந்து போயிருந்தான்.

மகிழ் அந்த வீட்டின் செல்ல மகன். அவன் முகத்தில் ஒருவித வெகுளித்தனம் இருக்கும். சிரிக்கச் சிரிக்க பேசும் குணமுடையவன். அவன் எங்கிருந்தாலும் அந்த இடமே கலகலப்பாய் மாறிவிடும். எப்போதும் அவன் முகத்தில் புன்னகை ஒட்டிக் கொண்டிருக்கும்.

அத்தகையவன் இன்று சோகமே உருவமாய் இருந்தான். ஆற்றமுடியாத துயரில் மூழ்கிகிடந்தான். அவனைத் தேற்ற முடியும் என்று வேந்தனுக்கு தோன்றவில்லை. வெளியே எல்லோரிடமும் ஜம்பமாய் பேசிவிட்டாலும் மகிழின் நிலையைப் பார்க்க வேதனையாய் இருந்தது. இந்தத் துயரில் இருந்து அவன் மீண்டு வந்துவிடுவானா என்ற சந்தேகம் அவனுக்குமே எழுந்தது. தம்பியின் இந்த நிலைக்கு அவள்தானே காரணம் என்று வேந்தனுக்கு அவள் மீது கோபம் எழுந்தது.

ஏன் அவள் இவன் வாழ்வில் வந்து தொலைக்க வேண்டும்? இன்று அவளை இழந்து இவன் பரிதவிக்க வேண்டும். தன் தம்பியின் இந்த நிலையைப் பார்க்க சகியாமல், "மகிழ்" என்றழைத்தபடி அவன் அருகாமையில் அமர்ந்தான்.

பரிவோடு அவன் தலையை வருடியவன், "ப்ளீஸ் இப்படி இருக்காதே மகிழ்... எழில், அம்மா, அப்பா எல்லோரும் உன்னை நினைச்சு ரொம்ப கவலையில இருக்காங்கடா... என்னாலயும் நீ இப்படி இருக்குறதைப் பார்க்க முடியல" கண்ணீர் தளும்ப உரைத்தான்.

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே. மகிழின் நிலையைப் பார்த்து வேந்தனின் உள்ளம் கலங்கிப் போனது. தமையனின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல்,

"ஏன்னா அவ என்னை விட்டுட்டுப் போனா?... என் மேல அவளுக்கு அப்படி என்ன கோபம்? நான் அவளை எந்தளவுக்கு லவ் பண்றேன்னு அவளுக்கு தெரிஞ்சிருந்தும் என்னை எதுக்கு விட்டுவிட்டு போனா? என்னை விட்டுட்டுப் போக அவளுக்கு எப்படிண்ணா மனசு வந்தது?" என்றவன் புலம்பித் தீர்க்க,

"யாருக்குடா தெரியும் இப்படி எல்லாம் நடக்கும்னு... ஏதோ விதி... இப்படி எல்லாம் நடக்கணும்னு இருக்கு" என்று சமாதானம் உரைத்தான் வேந்தன்.

"இல்லண்ணா... அப்படி ஈஸியா என்னால எடுத்துக்க முடியல... அவ சின்னதா கூட ஒரு தப்பு செய்யமாட்டா... அவ தட்டுத்தடுமாறுவதை கூட... நான் பார்த்ததே இல்ல... அவளுக்கு விஷன் இல்லன்னு அவளே சொன்னாதான் மத்தவங்களுக்கு தெரியும்... அந்தளவுக்கு ஷார்ப்

 அப்படி இருக்கவ ரோட் ஆக்ஸிடென்ட்ல இறந்திருப்பாளா... உம்ஹும்... தூரத்தில கேட்கிற சின்ன சத்தத்தைக் கூட அவ கரெக்டா கண்டுபிடிப்பா”

அப்படிப்பட்டவ வண்டி வர்றது தெரியாம க்ராஸ் பண்ணி இருப்பாளா?... நிச்சயம் ஏதோ தப்பு இருக்கு" என்று தன் மனதை அழுத்திக் கொண்டிருந்த எண்ணத்தை வேந்தனிடம் சொல்ல,

அவன் இறுக்கமான பார்வையோடு, "எவ்வளவு புத்திசாலியாய் இருந்தாலும்... ஷீ இஸ் ப்ளைட்... அதை நீ மறுக்க முடியாது" என்றான்.

மகிழ் ஆவேசம் பொங்க, "இல்லண்ணா... என் சாக்ஷி ப்ளைன்ட் இல்லை... நான் அதை ஒத்துக்க மாட்டேன்" என்றான்.

"பைத்தியம் மாதிரி உளறாதே மகிழ்... ஏதோ அவ உன் ஃலைப்ல வந்தா... இரண்டு பேரும் பழகுனீங்க... காதலிச்சிங்க... இப்போ அவ இல்லாம போயிட்டா... அதான் நிஜம்... நீ அந்த நிஜத்தை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்"

மகிழால் அவள் இல்லை என்ற நிஜத்தை ஏற்க முடியவில்லை. அதே நேரத்தில் அவள் விபத்தால் மரணித்தாள் என்பதை நம்பவும் முடியவில்லை.

தன் தமையனின் வார்த்தைகளால் காயப்பட்டு சிலையாய் அவன் அமர்ந்திருக்க, வேந்தன் எழுந்து கதவருகில் சென்று, "உனக்கும் சேர்த்து கனடாவுக்கு டிக்கெட் புக் பண்றேன்... என் கூட வந்து கொஞ்ச நாள் தங்கு.... எல்லாம் தானே சரியாயிடும்" என்று சொல்லியவன் வெளியேற எத்தனிக்க,

"நான் எங்கயும் வரலண்ணா" என்று மகிழ் தன் தமையனிடம் தீர்மானமாய் உரைக்க வேந்தன் கோபமானான்.  

"அப்போ எவளோ ஒருத்திக்காக எங்க எல்லாரோட நிம்மதியும் நீ கெடுக்க போற... இப்படியே கிடந்து எங்க உயிரை எடுக்க போற... அப்படிதானே?!" என்று கேட்டவன் மகிழ் மௌனமாய் நிற்பதைப் பார்த்து,

"எப்படியோ கெட்டொழி" என்று சொல்லிவிட்டு அந்த அறையின் கதவை படாரென மூடிவிட்டுச் சென்றான்.

'எவளோ ஒருத்தி' என்று வேந்தன் சொன்னது மகிழ் மனதை ரொம்பவும் காயப்படுத்தியது. சாக்ஷியை திருமணம் செய்விக்கக் கூடாது என அவன் பெற்றோர்கள் சொன்னாலும் அவளை அவர்களுக்குப் பிடிக்காமல் இல்லை.

அவள் மீது எல்லோருக்குமே அன்பும் மரியாதையும் இருந்தது. ஆனால் வேந்தனுக்கு மட்டும் அவள் மீது வெறுப்பு. அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.

அவள் மீது அப்படி என்ன வெறுப்பு என்று அவனுக்கு இப்போது சிந்திக்க தோன்றியது. அதுவும் அவள் இறந்தவிட்ட பிறகும் கூட அவன் வார்த்தையில் அவள் மீதான வெறுப்பே நின்றது. அதற்கான காரணத்தை மகிழால் அறிந்து கொள்ள முடியவில்லை.

அது வேந்தனுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். வேந்தன் சென்ற சில நிமிடங்களில் மகிழின் தமக்கை எழில் அவன் அறைக்குள் நுழைய, அவளைச் சலிப்பாய் பார்த்தான்.

"நீ வேற அட்வைஸ் பண்ண வந்துட்டியா?!" என்றவன் கேட்க,

"அது இல்லடா... உனக்கு ஃபோன் வந்திருக்கு... உன் ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்ல இருக்காமே" என்றாள்.

"இப்போதைக்கு என்னால யார்கிட்டயும் பேச முடியாது"

"உன் ஆபிஸ்ல இருந்து மகிழ்"

"ப்ச்... போ எழில்" என்றவன் தவிர்க்க

அவள் விடாமல், "பேசுடா" என்றாள்.

அவனின் மனநிலையை மாற்ற இது ஒரு சந்தர்ப்பம் என்று எண்ணியவள் அவன் கரத்தில் அந்தப் பேசியை வைக்க வேண்டா வெறுப்பாய் அதனைக் காதில் நுழைத்து சிரத்தையின்றி, "ஹ்ம்ம்ம்" என்றான்.

"சாரி... உன்னை டிஸ்டர்ப் பண்றேன்னு புரியுது... இருந்தாலும் உன் நிலைமை எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு"

"நீ ஏன் கால் பண்ணன்னு எனக்கு புரியுது ஷாலு... இப்ப இருக்குற நிலைமையில என்னால ஷோ பண்ண முடியாது... புரிஞ்சிக்கிட்டு என்னை கொஞ்ச நாளைக்கு டிஸ்டர்ப் பண்ணாதே... ஐ நீட் அ பிரேக்" என்றான்.

"புரியுது... ஆனா நீ ஸ்டேஷன் வந்தா உனக்கு ஒரு ரிலீஃப் கிடைக்கும்னு"

"என் சாக்ஷி தவிர வேறெதுவும் எனக்கு ரிலீஃப் தர முடியாது"

"ஒகே ... டேக் யுவர் டைம்... இது சொல்லலாமா தெரியல... பட் உன் லிஸனர்ஸ் எல்லோரும் நீதான் ஷோ நடத்தணும்னு ரிக்வஸ்ட் பண்றாங்க" என்று சொல்ல அவன் எந்தவித பதிலுரையும் கொடுக்கவில்லை.

"சரி நான் வைச்சிடிறேன்" என்றவள் அழைப்பைத் துண்டித்துவிட, அவன் கைப்பேசியை தன் தமக்கையிடம் கொடுத்து பார்வையிலேயே அவளை வெளியேப் போகச் சொன்னான்.

அவளும் இயலாமையோடு வெளியேறிவிட, அவன் மனம் தன்னவளின் எண்ணத்தில் வெதும்பிக் கொண்டிருந்தது. அவளைப் பார்க்க முடியாமல் அவள் இல்லாமல் தனக்கு மட்டும் இந்த உலகத்தில் என்ன வேலை என்ற ஒரு விரக்தி மனதை அழுத்த, அவளின் நினைவு மட்டுமே இப்போதைக்கு அவனின் ஆறுதல்.

முதல் முதலாய் அவளின் குரலைத்தான் கேட்டான். எத்தனையோ பேர் அவன் குரலுக்கு அடிமையாயிருக்க அவனை மயக்கியது அவள் குரல்தான்!

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content