You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Naan Aval Illai - 9

Quote

9

ஆழமான நட்பு

ஜே நெட்வொர்க் அலுவலகத்தின் பிரமாண்ட அறையில் தயக்கங்கள் சூழ புரியாமல் விழித்தபடி இருக்கையில் இருந்து விழுந்து விடுவாளோ என்றளவுக்கு அமர்ந்திருந்தாள் மாயா.

அந்த அறையின் ஒரு பக்கத்தின் சுவற்றில் ஷோ ரூம்களில் மாட்டியிருப்பது போல நிறைய டீவிக்கள் சுவற்றில் மாட்டியிருந்தன. ஒவ்வொரு டீவியிலும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி.

எல்லாமே ஜெ நெட்வொர்க்கில் இயங்கும் வெவ்வேறு சேனல்கள். அந்த அறை முழுக்க சென்ட்ரலைஸ்ட் ஏசி வேறு. பதட்டத்தோடும் குளிரும் சேர்ந்து அவளை நடுக்கமுறச் செய்தது.

அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன் இருந்த மேஜை மேல் இருந்த நேம் பிளேட்டில் டேவிட் அந்தோணி எம்.டி என்றிருந்தது.

டேவிட் அவள் எதிரேதான் நிமிர்வாய் அமர்ந்திருந்தான். உடையில் பணம் படைத்தவன் என்ற தோரணை இருந்தாலும் அவன் முகத்தில் அத்தகைய வெளிப்பாடு இல்லை.

கடந்த இரண்டு வருடத்தில்…

டேவிடின் தந்தை தாமஸ் அந்தோனியின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக் கொண்டே வர, அதற்கு மேல் அவரால் நிர்வாகப் பொறுப்பை சரியாகக் கவனிக்க முடியாமல் போனது.

ஆதலால் வேறுவழியின்றி சில மாதங்களாய் நிர்வாகப் பொறுப்பு மொத்தமாய் டேவிட் கைக்கு மாறியிருந்தது. மாயாவின் மனம் முழுவதுமாய் அச்சத்தின் பிடியில்தான் இருந்தது.

டேவிட் போன்ற பணம் படைத்தவர்கள் தன்னை போன்ற சாதாரணமானவர்களைச் சந்திக்க ஏன் விழைய வேண்டும்? நிராகரிக்கவும் முடியாமல் அவனின் அழைப்பின் காரணமும் புரியாமல் தவிப்போடும் பயத்தோடும் அவன் முன்னிலையில் அமர்ந்திருந்தாள்.

மாயாவின் பயத்தைப் பார்வையிலேயே அறிந்து கொண்டவன், இயல்பான புன்னகையோடு, "ரிலக்ஸா இருங்க மாயா... நீங்க பதட்டப்படறளவுக்கு எல்லாம் பெரிய விஷயம் ஒண்ணும் இல்லை" என்று தைரியம் உரைத்தான்.

அவன் பார்வையிலிருந்த தெளிவும் அவன் புன்னகையிலிருந்த இயல்புத்தன்மையும் அவள் அச்சத்தைத் தகர்த்திருந்தது. பணம் படைத்தவர்களிடம் இருக்கும் கர்வமும் அகங்காரமும் அவனிடம் துளியளவும் இல்லை என்பது பெரும் வியப்புதான்!

அவனை ஆராய்ச்சியோடு பார்த்திருந்தவளை புன்முறுவலோடு கவனித்தவன், "வாட் வுட் யூ லைக் டூ டிரிங்... காபி ஆர் கூல்டிரிங்க்ஸ்?" என்று கேட்க

"நோ தேங்க்ஸ் " என்று மறுத்தாள்.

அவள் முகத்தில் இன்னமும் பதட்டம் மீதமிருந்தது. அவளிடம் அவன் இயல்பாக இருக்கப் பார்த்தாலும் அவளால் அது முடியாது என்பது புரிந்தது.

"நீங்க என்னை ஏன் வரச் சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டாள்.

"உங்க சர்வீஸ்சை பாராட்டணும்னு தோணுச்சு மாயா... அதுவும் இந்த வயசுல நீங்க செஞ்சிட்டிருக்கிறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.. இட்ஸ் ரியலி கிரேட்" என்று சொல்லி டேவிட் அவளைப் புகழ்ந்தான்.

அவள் புரியாமல் நெற்றியைச் சுருக்கினாள்.

அவன் மேலும் "சாக்ஷி ஸைட் ஸேவர் பத்தி கேள்விப்பட்டேன் மாயா" என்றான்.

இப்போது மாயாவுக்கு அவன் புகழ்ச்சிக்கான காரணம் புரிந்தது. கடந்த வருடம்தான் பல நல்ல மனிதர்களின் உதவியோடு அந்தச் சேவை நிறுவனத்தை அவள் ஆரம்பித்திருந்தாள்.

சாக்ஷியுடன் இருந்த நாட்களின் நினைவுகளும் அவளின் மரணமும் அவள் வாழ்க்கையை முற்றிலுமாய் வெறுமையாக மாற்றியிருந்தது. சாக்ஷியின் மரணத்திற்கு தன் அலட்சியமும் காரணமோ என்ற குற்றவுணர்வு அவளைக் கரையான் போல அரித்துக் கொண்டிருந்தது.

அந்த எண்ணங்களில் இருந்து விடுபடவே மாயா பிரயத்தனப்பட்டு இந்தச் சேவை மையத்தைத் தொடங்கினாள். பார்வையற்றவர்கள் பலருக்கு பார்வை வழங்கவும், அவர்கள் சுயமாய் செயல்பட பல உதவிகள் புரியவும் அந்தச் சேவை மையத்தின் மூலம் பலரிடம் இருந்து உதவிப்பெற்று மாயா அதனை நடத்திக் கொண்டிருந்தாள்.

அவள் செய்வது உண்மையிலேயே சாதனைதான். மாயாவின் தோற்றத்திற்கும் அவள் செய்யும் சேவைக்கும் சம்பந்தமில்லை என்று தோன்றி வியந்தவன் தன் அருகாமையில் இருந்த தொலைபேசியை எடுத்து யாரிடமோ பேசினான்.

உடனே அந்த அறைக்கதவைத் திறந்து நுழைந்தார் டேவிடின் காரியதரிசி ராஜன். அவர்தான் அவன் தந்தைக்கும் காரியதரிசியாக இருந்தவர். அவருக்கும் அவன் தந்தையின் வயதும் அந்தளவுக்கு அனுபவமும் இருந்தது.

அவர் உள்ளே நுழைந்ததும் செக் புக்கை டேவிடிடம் நீட்ட, அவன் கையெழுத்திட்டு மாயாவிடம் நீட்டினான். மாயா திகைப்போடு பார்க்க, அவன் இதழ்கள் விரிய,

"இட்ஸ் ஜஸ்ட் அ காம்பிளமன்ட் ஃபார் யுவர் சர்வீஸ்" என்க,

அவள் அந்த செக்கை பெற்றுக் கொண்டாள். அதில் எழுதியிருந்த தொகையை பார்த்தவள் அதிர்ந்து போனாள். பத்து கோடி... மூச்சுவிடவும் சற்று நேரம் மறந்திருந்தாள்.

இதே அளவிலான அதிர்ச்சி ராஜனுக்கும் ஏற்பட்டிருந்தது. தாமஸ் ஒரு நாளும் அவ்வளவு பெரிய தொகையை இனாமாக வழங்க மாட்டார். அப்படி வழங்குகிறார் எனில் அதில் ஏதேனும் வியாபார நோக்கம் அடங்கியிருக்கும்.

ஆனால் டேவிட் கொஞ்சமும் யோசிக்காமல் பத்து கோடி வழங்குவதை அவரால் நம்ப முடியவில்லை. அதுவும் பிரதியுபகாரம் எதிர்பார்க்காமல் என்பது இன்னும் வியப்புக்குரிய ஒன்று.

அதிர்ச்சியில் இருந்த மாயா மெல்லத் தன்னிலை மீட்டு டேவிட்டை நோக்கி, "சார் டென் க்ரோர்ஸ்ங்கிறது" என்று ஏதோ சொல்ல வர அவன் இடைமறித்தான்.

"நீங்க செய்ற சேவைக்கெல்லாம் முன்னாடி இது ரொம்பவும் சாதாரணமான தொகைதான்" என்று சொல்லி அவள் வாயடைக்கச் செய்தான். பணக்காரர்கள் என்றாலே சுயநலமிகுந்தவர்கள் என்ற கோட்பாட்டை ரொம்பவும் அசாரணமாய் டேவிட் உடைத்து நொறுக்கினான்.

மாயாவிற்கு உண்மையில் எத்தகைய உணர்வை வெளிப்படுத்துவது என்று புரியவில்லை. அதே நேரத்தில் இத்தனைப் பெரிய தொகையை அத்தனை சுலபமாய் யாராவது தூக்கித் தருவார்களா என்ற சந்தேகமும் மிகுந்திட யோசனையோடு அமர்ந்திருந்தாள்.

அந்தச் சமயம் ராஜனின் பார்வையும் டேவிடை ஆழமாய் பார்த்திருக்க அவன் அதனை விரும்பாமல்,

"இன்னைக்கு மீட்டிங் இருக்கு இல்ல... நீங்க போய் அந்த அரேஞ்ச்மென்ட்ஸ் பண்ணுங்க... நான் இதோ வந்திடுறேன்" என்று சொல்லவும் அவர் அவன் எண்ணம் புரிந்து வெளியேறினார்.

மாயா இன்னும் டேவிட்டை ஆச்சர்யம் நீங்காமல் பார்த்திருக்க அவன் அவளை இயல்பு நிலைக்கு மீட்க எண்ணி புன்னகையோடு, "மாயா... சீ தேர்.. உங்க ஹஸ்பென்டோட ஷோதான் டீவில போயிட்டிருக்கு" என்றதும் அவளும் ஆவலாய் திரும்பினாள்.

அங்கே மாட்டியிருந்த டீவிகளில் ஜே டிவி சேனலில் மகிழ் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தான். அது பிரத்தியேகமாய் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

ஒரு நொடி அதனைப் பார்த்துவிட்டு அவள் திரும்பிக் கொண்டாள். டேவிட் அவளிடம் , "மகிழுக்கும் உங்களுக்கும் இப்பதானே மேரேஜாச்சு... இல்ல" என்று கேட்க

 அவள், "ம்ம்ம்" என்று வேண்டா வெறுப்பாய் தலையசைத்தாள்.

மகிழ் அவளின் கணவன் என்ற பெயர், வெறும் வார்த்தையளவில் மட்டுமே அவளோடு பிணைந்திருந்தது. அந்த எண்ணம் மனதில் தோன்றி மறைந்து மாயாவின் முகத்தில் விரக்தியான உணர்வைத் தோற்றுவித்தது.

மகிழ் ஜே சேனலில் ஒன்றரை வருடமாகவே நிகழ்ச்சி தொகுப்பாளராய் இருக்கிறான். இருப்பினும் இத்தனை நுணுக்கமாய் டேவிட் அவனைத் தெரிந்து பேசுவது மாயாவிற்கு வியப்பாக இருந்தது.

அவளின் மனநிலையை யூகித்தவன் மேலும், "ஒகே மாயா... நான் இப்போ ஒரு மீட்டிங் போகணும்.... இன்னொரு சமயம் நாம பார்ப்போமே" என்க,

மாயாவும் அவன் எண்ணம் புரிந்தவளாய் எழுந்தபடி, "நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ்... இந்த பணம் பலரோட வாழ்க்கையில வெளிச்சத்தை கொண்டு வரப் போகுது" என்று நன்றியுணர்வோடு உரைத்தாள்.

அவன் தன்னடக்கத்தோடு, "நீங்க செய்றளவுக்கு நான் எதுவும் பெரிசா செஞ்சிடல மாயா" என்றான்.

அவனின் அந்த வார்த்தையால் திகைப்புற்றாலும் அவன் நேரத்தை விரயமாக்காமல் அவனிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டாள். அவள் சென்ற பிறகு டேவிட் ஜே டீவியை கூர்ந்து பார்த்தபடி வந்து நின்றான். மகிழின் பேட்டி நிகழ்ந்து கொண்டிருந்தது.

பிரபலங்களோடு நான்.. என்ற அந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தான் மகிழ். எப்போதும் யாரேனும் ஒருவர்தான் விருந்தினராய் அழைப்பது வழக்கம். ஆனால் இம்முறை இருவர் வந்திருந்தனர்.

அது ராகவும் சையத்தும்தான். அவர்கள் இருவரின் நட்பு பெருமளவில் வியப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயமாய் மாறியிருந்தது. அந்த நட்பில் நன்றிக்கடனும் கலந்திருந்ததால் அது அத்தனை சீக்கிரத்தில் முறிந்துவிட வாய்ப்பில்லாமல் தழைத்தோங்கி வளர்ந்திருந்தது.

மகிழ் அவர்கள் இருவரையும் நோக்கி, "ஹீரோ ஹீரோயின் கெமிஸ்டிரிதான் கேள்விப்பட்டிருக்கோம்... பட் இந்த டைரக்டர் ஹீரோ கெமிஸிட்டிரி எப்படி உருவாச்சு?" என்று கேட்க,

சையத்தும் ராகவும் ஒருவர் முகத்தைப் பார்த்து ஒருவர் புன்னகைக்க, ராகவ் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னான்.

"நந்தகுமார் ஸார் படத்தில வொர்க் பண்ணும் போது சையத் அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணிட்டிருந்தாரு... அப்பதான் எங்களுக்குள்ள அந்த பாண்டிங் ஏற்பட்டுச்சு"

சையத்தும் ஆமோதித்தபடி, "எஸ்... அந்த பாண்டிங் என்னை இன்னைக்கு இவ்வளவு பெரிய லெவல்ல நிறுத்தியிருக்கு" என்று சொல்லி ராகவை நன்றியுணர்வோடு பார்த்தான்.

"சையத்தோட வெற்றிக்கு முழுக்க முழுக்க அவரோட திறமைதான் காரணம்" என்றான் ராகவ். மகிழையும் அவர்களின் நட்பு வியப்புக்குள்ளாக்கியது.

பிரபலங்களின் நட்பு எல்லாம் பல நேரங்களில் வெளித்தோற்றத்தில்தான். ஆனால் இவர்கள் இருவரின் நட்பு ரொம்பவும் ஆழமானதாக இருந்தது. ஆதலாலேயே வேறு வேறு வித்தியாசமான கதைக்களத்தில் இருவரும் ஒன்றிணைந்து தொடர்ச்சியாய் மூன்று படம் வெற்றி கொடுத்திருந்தனர். அதில் ஒரு படம் ராகவிற்கு முதல் தேசிய விருதைப் பெற்று தந்தது.

உலகமே பார்த்துக் கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியை சாஜியும் ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

மகனின் உறவை அவர் வேண்டாமென தூக்கியெறிந்து இரண்டு வருடம் கடந்திருந்தது. அதற்குப் பிறகு பலமுறை சையத் அவரைப் பார்க்க வந்தும் சாஜி அவனை உதாசீனப்படுத்தி அனுப்பிவிட்டார். என்னதான் கோபம் இருந்தாலும் மகனின் வெற்றி அவர் மனதை நிறைத்திருந்தது.

 நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருக்க மகிழ் அவர்களிடம்,

"அடுத்த படத்தில் ராகவ் ஹீரோவா மட்டுமில்லாம ப்ரொடியூஸராகவும் இருக்கப் போறாராமே" என்று கேட்டான்.

"எஸ்... அந்த படம் சையத்தோட ட்ரீம்... பெரிய ப்ராஜெக்ட்" என்று ராகவ் உரைக்க,

சையத் இடைப்புகுந்து, "நீங்க சொன்னதுல ஒரு சின்ன கரெக்க்ஷன் மகிழ்" என்றான்.

"கரெக்க்ஷனா? "

"ம்ம்ம்... என்னோட அடுத்த படத்தில ராகவ் ஹீரோ இல்ல... அன்ட் இட்ஸ் அன் ஹீரோயின் சப்ஜெக்ட்" என்றான்.

"வாவ்... இட்ஸ் அ கிரேட் நியூஸ்" என்றவன் மீண்டும் அவர்களை நோக்கி, "யாரு அந்த ஹீரோயின்?" என்று கேட்டான்.

"அது சீக்ரெட்" என்று சையத் உரைக்க,

அந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்த எல்லோருக்குமே சையத்தின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகரித்தது. அத்தகைய ஹீரோயின் யாரென்று கேள்வி எல்லோர் மனதிலும் உதித்தது.

 அந்த நிகழ்ச்சி முடிவுப்பெற்றுவிட, டேவிட் அப்போது ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான்.

Muthu pandi has reacted to this post.
Muthu pandi
Quote

Nice

You cannot copy content