You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Please or Register to create posts and topics.

Nee Enbathe Naanaga - 18

18

காதல்

காலை எழுந்ததும் ஜானவி பரபரவென தம்முடைய அன்றாட வேலைகளில் ஈடுபட தொடங்கினாள்.

சந்தானலட்சுமி மருமகளுக்கு சமையல் வேலைகளில் உடன் இருந்து உதவி புரிந்ததால் இருவரும் சேர்ந்து காலை உணவு மற்றும் பள்ளிக்கு செல்பவருக்கு கட்டி கொடுக்க வேண்டிய மதிய உணவையும் விரைவாக தயார் செய்துவிட்டனர்.

அதன் பின் ஜானவி மூவரின் டிபன் பாக்ஸை எடுத்து சந்தானலட்சுமியிடம் கொடுக்க, அவர் அதினில் மதிய உணவை  கட்டி அவரவர்களில் சாப்பாடு கூடையில் எடுத்து வைத்துவிட்டு, செழியன் உணவை தனியாக அவனின் பேகினுள் வைத்தார்.

பாண்டியன் மறுபக்கம் குழந்தைகளின் பள்ளி சீருடைகளையும் செழியனின் சட்டையையும் தேய்த்து வைக்க, செழியன் மகள்களை எழுப்பி குளிக்க செய்து அவர்களின் பள்ளிக்கு சீருடையை அணிவித்து தயார் செய்தான்.

அதன் பின்னர் அவன் குளிக்க சென்றுவிட சந்தானலட்சுமி பேத்திகளுக்கு காலை உணவை கதை சொல்லி நிதானமாக ஊட்டி கொண்டிருந்தார்.

"அவங்களே சாப்பிடட்டும் விடுங்க அத்தை" என்று ஜானவி சொல்ல,

"என் பேத்திங்களுக்கு நான் ஊட்டிறேன்... அதுல உனக்கென்ன பிரச்சனை?" என்று சந்தானலட்சுமி முறைத்து கொண்டே கேட்டார். ஜானவிக்கு அவரின் முகபாவனை சிரிப்பை வரவழைக்க அங்கே வந்த பாண்டியன்,

"பேத்திங்களுக்கு ஊட்டிறதை விட பாட்டிக்கு வேற என்ன வேலையாம்... ஊட்டட்டும் விடுமா" என்றார்.

சந்தானலட்சுமி கடுப்பாகி,

"என்னை ஓட்டிறதுன்னா முதல் ஆளா கிளம்பி வந்திருவீங்களே!" என்க,

"எனக்கு அதை விட வேறென்னடி வேலை" என்றார் அவர்!

"ஆமா பேத்திங்க ஷுவுக்கு பாலிஷ் போட்டீங்களா?" என்று சந்தானலட்சுமி கேட்க அவர் தலையில் கை வைத்து கொண்டு,

"அச்சச்சோ! மறந்துட்டேனே!" என்றார்.

"பரவாயில்ல மாமா... நான் போடுறேன்" என்று ஜானவி சொல்ல,

"பேத்திங்க ஷுக்கு பாலிஷ் போடுறதை விட தாத்தாவுக்கு வேற என்ன வேலையாம்... விடும்மா செய்யட்டும்" என்று கணவரின் வசனத்தை அப்படியே சூழ்நிலைக்கு தகுந்த மாறி அவருக்கே மாற்றி போட்டார்.

"பரவாயில்ல லட்சு! நீ ரொம்ப தேறிட்ட... செம டைமிங்..." என்று பாராட்டி கொண்டே பாண்டியன் தன் வேலையை பார்க்க செல்ல,

"அய்யோ! இந்த மனுஷனை வைச்சுக்கிட்டு" என்று சந்தானலட்சுமி கடுப்பாக,

"வைச்சுக்கிட்டு... அடுத்த டயலாக்கை சொல்லுங்க பாட்டி" என்று மீனா ஆர்வமாக கேட்டாள்.  சந்தானலட்சுமி எப்போதும் மாமூலாக சொல்லும் வசனம் அது!

அதற்கு மேல் இதுவரை அவர் சொல்லாததால் இம்முறை அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் மீனா கேட்க,

ஜானவிக்கு சிரிப்புதாங்கவில்லை.

"இந்த வாயாடிங்க முன்னாடி எதையும் பேச முடியாது போல" என்று சொல்லி சந்தானலட்சுமியும் சிரிக்க,

அப்போது, "ஜானவி" என்று செழியன் தன்னறைக்குள் இருந்து கொண்டு சத்தமாக அழைத்தான்.

ஜானவி துணுக்குற்றாள். நேற்று நடந்த சண்டையை பற்றி யோசித்து கொண்டே அவள் நிற்க, "அன்பு கூப்பிடுறான் பாரு... போம்மா" என்றார் சந்தானலட்சுமி!

"போறேன்" என்று சொல்லி கொண்டே ஜானவி அறை வாசலில் நின்று, "என்ன செழியன்? சொல்லுங்க" என்றாள்.

அவன் தன் சட்டையை இன் செய்து கொண்டே, "ஏன்? உள்ளே வந்து என்னன்னு கேட்க மாட்டீங்களோ?!" என்று கேட்க அவள் தயக்கமாக அறைக்குள் நுழைந்து,

"என்ன செழியன்?" என்றாள்.

"கதவை க்ளோஸ் பண்ணிட்டு வாங்க... பர்ஸனலா ஒரு விஷயம் பேசணும்" என்று அவன் சொல்ல,

"அத்தை மாமா பசங்க எல்லாம் வெளியே இருக்கும் போது கதவை எப்படி மூடுறது" என்றவள் தயங்கி கொண்டே அவனை பார்த்தாள்.

"எப்பவும் எப்படி மூடுவோமோ அப்படிதான் மூடணும்... போய் மூடிட்டு வாங்க" என்றவன் அலட்டி கொள்ளாமல் சொல்ல,

"எதுவா இருந்தாலும் ஈவனிங் பேசிக்கலாமே... நீங்க இன்னும் டிபன் வேற சாப்பிடல... சாப்பிடிட்டு பசங்கள வேற கூட்டிட்டு போகணும்... லேட்டாயிட போகுது" என்று அவள் படபடவென நின்ற இடத்திலிருந்தே காரணங்களை அடுக்க,

"பேசணும்னு சொன்னா என்ன ஏதுன்னு கேட்கணும்... இப்படி காரணம் சொல்லி பேச விடாம பண்ண கூடாது... நேத்தும் இதேதான் பண்ணீங்க... அதனாலதான் நமக்குள்ள தேவையில்லாம சண்டை வந்திருச்சு... பேசணுங்கிற மூடும் போச்சு" என்றவன் தீவிரமாக சொன்னான்.

"இன்னைக்கு அப்படியெல்லாம் ஆகாது... நான் சீக்கிரமா என் வொர்க்கை முடிச்சிடுறேன்... இனிமே என் லேப்டாப்பை பெட் ரூமுக்கு எடுத்துட்டு வரவே மாட்டேன்... பிராமிஸ்" என்று ஜானவி பயபக்தியோடு சொன்னாலும் அவள் மனதில் அவனிடம் எந்தவித மனத்தாங்கலும் வைத்து கொள்ள கூடாதென்ற
எண்ணமே மேலோங்கியிருந்தது.

அவள் அப்படி தன் தவறை உணர்ந்து விட்டு கொடுத்து பேசுவது செழியனுக்கு வியப்பாக இருந்தது.

இருந்தாலும் அவன் தன்னிலையிலிருந்து கிஞ்சிற்றும் இறங்கி வராமல், "அதெல்லாம் இருக்கட்டும்... ஆனா இப்ப நான் உங்ககிட்ட பேசணும்... பேச முடியுமா முடியாதா?" என்றவன் தீவிரமாக கேட்க,

அவள் விழிகள் நேராக கடிகாரத்தை பார்த்தது.

"லேட்டாயிட போகுது" என்றவள் மீண்டும் சொல்ல கடுப்பானவன்,

"ஒரு நாள் லேட்டானாலும் ஒண்ணும் ஆகிடாது" என்று சொல்லி கொண்டே கதவை மூடிவிட அவள் திரும்பி பார்த்து உள்ளம் படபடத்தாள்.

'கதவை மூடிட்டு அப்படி என்ன பேச போறாரு' என்றவள் யோசிக்கும் போதே செழியன் அவளை நெருங்கி வரவும் ஜானவி முகம் பதட்டத்தை தத்தெடுத்து கொண்டது.

அவள் பின்னோடு விலகி செல்ல பார்க்க, "நில்லுங்க ஜானவி" என்றவன் அவள் முன்னே வந்து நின்று அவள் முகம் பார்க்க,

"என்ன பேச போறீங்க?" என்றவள் படபடப்போடு அவனை கேட்டாள்.

"பேசறது இருக்கட்டும்... அதுக்கு முன்னாடி உங்ககிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணும்"

"என்ன கேட்கணும்?"

"யார் கோபப்பட்டாலும் நான் மட்டும் உங்ககிட்ட கோபப்பட கூடாதோ" என்றவன் நகைப்போடு கேட்க,

அவள் விழிகள் பெரிதாகின.

'அய்யய்யோ நம்ம தூக்கத்தில சொன்னதை இவர் கேட்டுட்டாரா?' என்றவள் யோசிக்கும் போதே,

"நான் தூங்கிட்டு இருந்தேன்னு நினைச்சீங்களோ" என்றான் கல்மிஷமான பார்வையோடு!

பெண்ணவள் அதற்கு மேல் தன்னவனின் முகம் பார்க்க முடியாமல் நாணத்தில் தலை கவிழ்ந்து கொள்ள,

அவள் காதோரம் இறங்கி, "உங்களுக்கு மட்டுமில்ல... எனக்கும் உங்களுக்கு இருக்க மாறி அதே பீலிங்ஸ் இருக்கு" என்றதும் அவள் தலையை நிமிர்த்தி அதிர்ச்சியாக பார்த்தாள்.

"இப்படியெல்லாம் பார்த்தா நெஞ்சு படக் படக்னு அடிச்சுக்குது ஜானவி... ஷாக்கை குறைங்க" என்றவன் சொல்லி சிரிக்க, அவளும் அவனோடு சேர்ந்து புன்னகைத்தாள்.

"கடமையை மட்டும் ஷேர் பண்ணிக்கிட்டா அது கமிட்மென்ட்... காதலோட கடமையை ஷேர் பண்ணிக்கிட்டாதான் அது கல்யாணம்?" என்று அவன் சொல்ல

அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.

"இந்த செழியனை நம்பி நீங்க இன்வஸ்ட் பண்ணலாம் ஜானவி... கண்டிப்பா லாஸாகாது"

"எதை?" என்று அவள் புரியாமல் கேட்க,

"காதலை... " என்றதும் அவள் முகம் நாணத்தில் சிவந்தது.

செழியன் அப்போது, "அய்யய்யோ ஸ்கூலுக்கு லேட்டாகுது...  போய் டிபன் சாப்பிடிட்டு பசங்கள கூட்டிட்டு போகணும்... மிச்சத்தை அப்புறமா ஆரத்தீர பேசிக்கலாம்" என்றவன் பார்வை  இப்போது அவசரமாக கடிகாரத்தின் மீது விழுந்தது.

"ஒரு நாள் லேட்டான ஒண்ணும் தப்பில்ல" என்று ஜானவி கிண்டலாக சொல்ல, செழியன் முகம் மலர்ந்தது.

"இப்ப என்ன சொன்னீங்க?" என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க,

"சும்மா சொன்னே செழியன்... நீங்க கிளம்புங்க" என்றாள்.

அவன் புன்னகையோடு அவளிடம் தலையசைத்துவிட்டு கதவை திறக்க போனவன் திரும்பி நின்று, "அப்புறம்... இன்னொரு விஷயம் சொல்லணும்... மணி இஸ் நாட் எவிரித்திங்... லவ்... லவ் இஸ் எவிரித்திங்... பிலாசபி நம்பரை பார்த்து கரெக்டா குறிச்சு வைச்சுக்கோங்க" என்று சொல்லிவிட்டு காதலோடு ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு செல்ல அவள் உள்ளம் மொத்தமாக அவனிடம் சரிந்தது.

இளமையிலேயே சந்தோஷங்களை தொலைத்துவிட்டு வாழ்க்கை பாரத்தை தனியே சுமந்த பெண்ணவளுக்கு இன்று முதல்முறையாக வாழ்க்கை இனித்தது. வாழ வேண்டுமென்ற ஆசை வண்ணமயமாக அவளுக்குள் மீண்டும் ஜனனமெடுத்தது.

அதுவும் காதல் என்ற உணர்வு அவளுக்கு புதியது. சுவாரிசியமான அந்த அனுபவத்தை ரசிக்க தொடங்கியிருந்தாள் ஜானவி.

வாழ்க்கை மீதான அவள் பார்வை முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு மாறியிருந்தது.

சிறிய விதையாக வீழ்ந்து விருட்சமாக வளர்வது போல அவர்கள் காதல் நின்று நிதானமாக அதேநேரம் ஆழமாக வேரூன்றி வளர்ந்து கொண்டிருந்தது.

உடல் தீண்டாமல் மனதால் சங்கமித்து கண்களால் காதல் செய்யும் அந்த தம்பதிகளுக்கு தாம்பத்யம் தேவைப்படவில்லை. கைகளை பிடித்து  கொண்டு கூட பேசியதில்லை.

ஆனால் மாதங்கள் செல்ல செல்ல காதல் என்ற உணர்வு கண்களை தாண்டி அவர்கள் உணர்வுகளோடு விளையாட செழியன் ஜானவியின் இளமை ஒருவரை ஒருவர் நெருங்க சொல்லியது.

ஆனால் அன்பு மீனாவிற்கு அம்மா அப்பா என்ற எல்லை கோட்டை தாண்ட இருவருக்குமே சங்கடமாக இருந்தது.

அன்று பாண்டியன் சந்தானலட்சுமிக்கு திருமண நாள். செழியனோடு பேத்திகள் இருவரும் பள்ளியிலிருந்து திரும்பியதும் மாலை வேளை எல்லோரும் தயாராகி காரில் கிளம்பி  குடும்பமாக அஷ்டலட்சுமி கோவிலுக்கு சென்றுவிட்டு பெசன்ட் நகர் பீச்சிற்கு வந்திருந்தனர்.

அன்புவும் மீனாவும் அலைகளில் ஆட்டம் போட்டு கொண்டிருக்க, பாண்டியனும் சந்தானலட்சுமியும்தான் அவர்களோடு போராடி கொண்டிருந்தனர்.

செழியன் அலைகளை விட்டு தள்ளி நின்றுவிட ஜானவியும் அவன் உடன் நின்று கொண்டாள்.

"எனக்கு கொஞ்சம் பேலன்ஸ் பண்ண கஷ்டம்... அதான் நான் இங்கயே நிற்கிறேன்... நீங்க போங்க" என்று செழியன் சொல்ல,

"நானும் உங்க கூடவே நிற்கிறேனே" என்று குழந்தைகள் விளையாடுவதை பார்த்து கொண்டு அவன் அருகிலேயே நின்றுவிட்டாள்.

செழியன் அவளை பார்த்து, "அப்படின்னா பசங்க விளையாடட்டும் நம்ம கொஞ்ச தூரம் நடப்போமா?" என்று சொல்ல,

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள்.

செழியன் தன் தந்தையிடம், "அப்பா! பசங்கள பார்த்துக்கோங்க... நாங்க அப்படியே சும்மா கொஞ்ச தூரம் நடந்துட்டு வரோம்" என்று சொல்ல,

"சரி... ஆனா ரொம்ப தூரம் போகாதீங்க" என்றார் பாண்டியன் அலைகளில் சத்தத்திலிருந்து சற்றே சத்தமாக!

இருவரும் ஒன்றாக மணல்வெளியில் கடலலைகளின் ரீங்காரத்தோடு ஓன்றாகவே தங்கள் பாத தடத்தை பதித்து கொண்டு நடந்து சென்றனர்.

செழியனுக்கு அவள் கரத்தை கோர்த்து கொள்ள வேண்டுமென்று தோன்றினாலும் அதை அவனாக செய்ய என்னவோ போல இருந்தது.

ஜானவிக்கும் அதே நிலைதான். அப்போது  ஜானவி தன் எதிரே வந்தவனை பார்த்து அசூயையாக முகத்தை திருப்பி கொண்டு,

'ச்சே! சாகிற வரைக்கும் எந்த மூஞ்சியை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேனோ அந்த மூஞ்சியை திரும்பி பார்க்க வேண்டியதாயிடுச்சே' என்று வாய்க்குள்ளேயே முனகிவிட்டு,

"செழியன்... வாங்க திரும்பி போலாம்" என்றாள்.

"ஏன்?"

"போலாமே" என்றவள் அழுத்தமாகவும் தவிப்பாகவும் அவள் கூறும் போது செழியன் எதிரே தன்  மனைவியோடு நடந்து வந்து கொண்டிருந்த ராஜனை பார்த்து,

ஜானவியின் மனநிலையை கணித்து கொண்டான்.

"சரி போலாம்" என்று செழியனும் சம்மதித்து அவளோடு திரும்பி நடக்க,

"ஜானு" என்ற ராஜனின் அழைப்பு அவளை கடுப்பேற்றியது.

"இவன் யார் என் பேரை சொல்ல" என்றவள் சீற்றமாக செழியன் ஜானவியின் கரத்தை பற்றி, "பிரச்சனை வேண்டாம்" என்று சொல்ல மறுகணமே அவள் அமைதியானாள்.

ஆனால் ராஜன் அவளை விடுவாதாக இல்லை. வேகமாக  அவர்களை முந்தி கொண்டு வந்து நின்றவன், "என்ன கூப்பிட கூப்பிட கண்டுக்காம போற" என்று கேட்க,

ஜானவி செழியனை பார்த்தாள். அவன் மௌனமாக இருக்க சொல்லி தலையசைக்க ராஜன், "அனு வா... ஒரு முக்கியமானவங்கள இன்ட்ரோ கொடுக்கிறேன்" என்று அவன் உடன் வந்த பெண்ணை அழைக்க,

"ஹெலோ மிஸ்டர்... உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்... ஒழுங்கா வழியை விட்டு போங்க" என்று செழியன் கறாராக உரைத்தான்.

ராஜனின் பார்வை ஜானவியின் முகத்தையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்து, "நினைச்சேன்.. என் பொண்ணு உன்னை அப்பான்னு கூப்பிடும் போதே" என்று ஒருவிதமாக சொல்ல,

"யாருடா உன் பொண்ணு" என்று ஜானவி கேட்கும் போது ராஜன் அருகில் வந்த அந்த பெண்,

"என்னங்க பிரச்சனை? யார் இவங்க?" என்று கேட்க, "என் முன்னாள் பொண்டாட்டி" என்று கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் ஜானவியை காட்டி உரைத்தான்.

அந்த வார்த்தையை செழியன் முன்னே அவன் சொன்னதை கேட்ட ஜானவியின் உள்ளம் கொந்தளிக்க செழியன் முந்தி கொண்டு,

"பொண்டாட்டி அது இதுன்னு சொன்ன கொன்னுடுவேன்" என்று எச்சரிக்கை செய்தான்.

ராஜன் அருகிலிருந்த பெண், "பிரச்சனை வேண்டாம்... போலாம்ங்க" என்று சொல்ல,

ஜானவியை ராஜன் எளக்காரமாக பார்த்து,

"உன் இரண்டாவது புருஷனை பார்த்து கூட்டிட்டு போம்மா... பாவம் கால் வேற நொண்டி" என்று சொன்ன மறுகணம் அவள் அடக்கி வைத்திருந்த மொத்த கோபமும் வெடித்து சிதறியது.

"அடி செருப்பால... யாரடா நொண்டின்னு சொன்ன?" என்று தன் பாதணியை கொண்டு சரமாரியாக அவன் முகத்திலறைந்துவிட,

அங்கே இருந்த மக்கள் கூட்டமெல்லாம் என்ன ஏதென்று விசாரித்து கொண்டே அவர்களை சூழ்ந்து கொண்டது.

செழியன் ஜானவியை கட்டுக்குள் கொண்டு வர அவளை அணைத்து பிடித்து, "ஜானவி வேண்டாம்" என்று கத்தவும் அவள் சற்று அமைதி பெற,

ராஜன் அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தான்.

செழியன் ஜானவியை துணையாகவும் அதேநேரம் துணைவியாகவும்
பிடித்து கொண்டு தன் ஸ்டிக்கால் அவனை தட்டிவிட ராஜன் கீழே வீழ்ந்தான்.

"நான் அப்பவே சொன்னேன்... உங்களுக்கு இது தேவையா?" என்று அந்த பெண் ராஜனிடம் கேட்டுவைக்க,

"நீங்க வாங்க ஜானவி" என்றவன் தன்னவளை அணைத்து பிடித்து கொண்டு அந்த கூட்டத்தை விலக்கி  வெளியே அழைத்து வந்தான்.

ஜானவி அப்போதே கவனித்தாள். செழியனின் கரம் அவள் தோள் மீது அணைத்து பிடித்திருந்தது.

"செழியன் கையை எடுங்க" என்றவள் சங்கடமாக நெளிய அவன் கரத்தை விலக்கி கொண்டு அவளை ஆழந்து பார்த்தான். அந்த பார்வை அவளுக்குள் ஊடுருவி சென்றது.

அப்போது பாண்டியன் அவர்களை நெருங்கி வந்து, "என்னாச்சு அன்பு? ஏதாச்சும் பிரச்சனையா?"  என்று கேட்டார்.

செழியனும் ஜானவியும், "அதெல்லாம் ஒண்ணும் இல்லையே" ஒரே மாதிரியாக மறுத்து தலையசைக்க பாண்டியன் அவர்களை ஆழ்ந்து பார்த்தார். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

"சரி கிளம்பலாம் ப்பா... லேட்டாயிடுச்சு" என்று செழியன் சொல்ல பாண்டியனும் ஆமோதிக்க எல்லோரும் அங்கிருந்து புறப்பட்டனர்.  அவர்கள் கார் ஒர் உணவகத்தில் நின்றது.

அன்புவும் மீனாவும் சேட்டைகள் செய்து கொண்டே உண்ண, பாண்டியனும் சந்தானலட்சுமியும் அவர்கள் சேட்டையை ரசித்து கொண்டே உண்டனர்.

ஆனால் ஜானவி அவளுக்கு ஆர்டர் செய்த உணவை ஒரு பருக்கை கூட உண்ணாமல், நடந்த விஷயத்தை நினைத்து வேதனையுற்றாள்.

"பீச்ல நடந்ததை விடுங்க ஜானவி... சாப்பிடுங்க" என்று அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை.

"எனக்கு வேண்டாம்... இதை அப்படியே பேக் பண்ணிட சொல்லுங்க" என்றவள் சொல்ல,

"என்னாச்சு ஜானு?" என்று சந்தானலட்சுமி கேட்க, "தலைவலிக்குது அத்தை... நான் கார்ல போய் உட்கார்ந்துக்கிறேன்... நீங்க சாப்பிட்டு வாங்க" என்று சொல்லி எழுந்து சென்றுவிட்டாள்.

"பீச்ல என்னடா நடந்துச்சு?" என்று   பாண்டியன் தனியாக செழியனை அழைத்து கேட்க,

அவன் நடந்த எல்லாவற்றையும் உரைத்தான். அவருக்கும் கோபம் பொங்கி கொண்டு வந்தது.

"என்ன பிறப்போ இவனுங்க எல்லாம்?!" என்று சீற்றமாக சொல்லியர்,

"ஜானு பாவம்... அவளை எப்படியாச்சும் சமாதானப்படுத்து" என்றார்.

"சரி ப்பா" என்று செழியன் சொல்லி சாப்பிட்டு முடித்து ஜானவியை அமர சொல்லிவிட்டு செழியனே காரை ஓட்டினான்.

ஆட்டோமெட்டிக் கீர் என்பதால் அது அவனுக்கு அத்தனை சிரமமாக இல்லை.

அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும் பாண்டியனும் சந்தானலட்சுமியும் பேத்திகளை அவர்கள் அறைக்கு உறங்க அழைத்து கொண்டு  சென்றுவிட,

ஜானவி தன்னறைக்குள் புகுந்து தலையணையில் முகத்தை புதைத்து அழ தொடங்கினாள்.

கதவை மூடிவிட்டு வந்த செழியன், "ஜானவி இப்போ எதுக்கு அழறீங்க?" என்று கேட்க,

"அந்த பொறுக்கி உங்களை பத்தி அப்படி சொன்னதை என்னால தாங்கிக்கவே முடியல... அவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு உங்களை பத்தி பேச... பேசின நாக்கை அறுக்க வேண்டாமா " என்று படுத்தபடியே தன் வேதனையை சொல்லி அழுதாள்.

"அதுக்காகவா நீங்க இப்படி பீல் பண்ணிட்டு இருக்கீங்க" என்றவன் வியப்போடு கேட்க,

"ஹ்ம்ம்" என்று படுக்கையில்  இருந்தபடி தலையை மட்டும் அசைத்தாள். அதேநேரம் அவளின் விசும்பல் சத்தம் கேட்டு கொண்டே இருக்க, "ப்ளீஸ் ஜானவி அழாதீங்க" என்றவன் கெஞ்சி பார்த்தும் அவள் அழுகையை நிறுத்த முடியவில்லை.

ஓயாமல் அவள் விசும்பல் சத்தம் கேட்டு  கொண்டே இருக்க செழியன் அவளருகில் அமர்ந்து தலை கவிழ்ந்திருந்தவளை தன் புறம் திருப்ப அவன் நெருக்கத்தை கண்டு அவள் திக்குமுக்காடி போனாள்.

பதறி கொண்டு எழுந்து கொள்ள பார்த்தவளை அவன் படுக்கையில் சரித்து அவள் முகத்தருகே குனிந்தான். அவன் செய்கையில் அவள் விழிநீர் அப்படியே உறைந்து நிலையில் நின்றது.

அவள் கருவிழிகள் இரண்டும் அசையாமல் அவனை மிரட்சியோடு பார்க்க, "என்ன ஜானவி உங்களுக்கு பிரச்சனை? எதுக்கு இப்போ அழறீங்க?" என்று அதே நெருக்கத்தோடு கேட்டவனை பார்த்து பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.

அவன் மேலும், "எனக்கென்னவோ நீங்க அந்த ஆள் பேசனதுக்கு அழுத மாறி தெரியல... எனக்கிருக்க குறையை நினைச்சு அழுத மாதிரிதான் இருக்க?" என்று கேட்டதும் அதிர்ந்த பார்வையோடு,

"சேச்சே... நான் போய் அப்படி நினைப்பேனோ... அதுவும் உங்ககிட்ட குறைன்னு" என்றாள்.

"அப்புறம் எதுக்கு அழறீங்க?" என்றவன் நிதானமாக கேட்க,

"தெரியல... உங்களை அந்த ஆளு அப்படி சொன்னதும் எனக்கு உயிரே போற மாதிரி வலிச்சுது" என்று விழிகளில் நீர் தளும்ப தன் மனநிலையை உரைத்தாள்.

செழியன் அவளை வியப்படங்காமல் அப்படியே பார்த்தபடி இருக்க, "செழியன்" என்றவள் அழைப்பு அவன் செவிகளை எட்டவில்லை.

அவள் மீதான காதல் பன்மடங்காக கூடிய அதேநேரம் அவளின் நெருக்கத்தில் தன்னிலை மறந்தான்.

காதலும் காமமும் சரிவிகிதமாக கலந்திருந்த அவன் பார்வை அவளுக்குள் ஒரு சிலாகிப்பு உணர்வை கொடுக்க, "செழியன்" என்று மீண்டும் அழைத்தாள்.

"ஹ்ம்ம்" என்றவன் குரல் எழ,

"நீங்க உங்க இடத்தில போய் படுங்க?" என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

"உம்ஹும்" என்று அவன் மறுக்க அவள் அதிர்ச்சியுற அவனை பார்க்கும் போதே அவள் நெற்றியில் முத்தம் பதித்தான் அவன்.

"செழியன்" என்றவள் குரலை காதில் வாங்காமல் மேலும் அவள் கன்னங்களில் தம் இதழ்களை மாறி மாறி பதித்தான்.

இறுதியாக அவள் இதழ்களை நோக்கி  அவன் உதடுகள் வரவும் அவள் விழிகளை அழுந்த மூடி கொள்ள, அவள் எதிர்பார்த்தது நிகழவில்லை.

அவள் குழப்பமாக தம் விழிகளை திறக்க அவன் அவளை விட்டு விலகி சென்று நின்றிருந்தான். அவளுக்குள் விளைந்த ஏமாற்றத்தை மறைத்து கொண்டு அவள் எழுந்தமர்ந்தாள்.

அவனோ தவிப்போடு தலையை குனிந்து கொண்டு நிற்க, "செழியன்" என்று அவள் அழைப்பு கேட்டு நிமிர்ந்து,

"சாரி ஜானவி... உன் லிப்ஸை பார்த்த போது எனக்கு ரஞ்சு லிப்ஸை பார்க்கிற மாதிரி ஒரு பீல்... அதான் சாரி" என்று மன்னிப்பு கோர அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

"இதுக்கு எதுக்கு செழியன் சாரி" என்று ரொம்பவும் சாதாரணமாக கேட்டு எழுந்து வந்து அவன் அருகில் நிற்க,

"ப்ச்... இல்ல ஜானவி" என்று அவன் பதில் சொல்லவும் முடியாமல் அவன் முகம் பார்க்கவும் முடியாமல் நின்றான்.

"செழியன் பரவாயில்ல விடுங்க... நீங்க ரஞ்சனியை எந்தளவுக்கு லவ் பண்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும்... அத்தனை சீக்கிரத்தில அவங்க நினைவுகளை உங்களால மறக்கவும் முடியாது"

"அதெல்லாம் சரி... ஆனா என் சுயநலத்திற்காக உங்க உணர்வுகளோட விளையாடிட்டேனோனோன்னு எனக்கு கில்டியா இருக்கு"

"அட என்ன செழியன் நீங்க... இதுக்கெல்லாம் கில்டியாகிட்டு.. அப்படி பார்த்தா என் உணர்வுகளை கொஞ்சம் கூட மதிக்காம என்னை வெறும் உடம்பா மட்டும் யூஸ் பண்ணிக்கிட்டானே... அவன் முன்னாடியெல்லாம் நீங்க கடவுளுக்கு சமானம்"

"என்ன பேசுறீங்க ஜானவி? அதுவும் கடவுள் அது இதுன்னு"

"உண்மையைதான் சொல்றேன்" என்றவள் நிறுத்தி,

"நான் ஒண்ணு சொல்லட்டுமா... நீங்க ரஞ்சனி மேல வைச்சிருக்க லவ்வை பார்த்துதான் உங்க மேல நான் ரொம்ப இம்பிரஸ் ஆனேன்... பொறாமையெல்லாம் இல்லை ஆனா லைட்டா பொறாமைதான்" என்று கிண்டலடித்து சிரிப்போடு சொன்னவளை அவன் இமைக்காமல் பார்த்து கொண்டு நிற்க,

"இந்த மேட்டரை இத்தோடு விடுங்க... நானும் அந்த பீச் மேட்டரை மறந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு அவள் திரும்ப,

அவன் தன் கரத்தால் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

அவள் அதிர்ந்து பார்க்கும் போதே அவன் உதடுகள் அவள் இதழ்களை தொட்டு மீண்டது.

ஒரு நொடிதான் என்றாலும் அவளுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வில் அவள் ஸ்தம்பித்து அவனை பார்க்க,

"என்ன மாதிரியான காதல் ஜானவி உங்களோடது" என்று சொல்லி மீண்டும் அவள் இதழ்களில் முத்தம் பதிக்க, இம்முறை அது நொடிகளை கடந்து நீண்ட நேரம் பயணித்தது.

அவன் பிரிந்த மாத்திரத்தில் அவள்  மூச்சு வாங்க அவனை நிமிர்ந்து பார்க்க, "இது என் ஜானவிக்காக" என்றான்.

அவன் அதோடு அவள் இடையை வளைத்து கொண்டு காதோரமாக ஏதோ ரகசியம் பேசினான்.

வெட்கமாக அவனை பார்த்து வேண்டாமென்று தலையசைக்க, "கண்டிப்பா வேண்டாமா?" என்று கேட்டு கொண்டே அவள் இடையை பற்றி இழுக்க நாண மேலிட அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டுவிட்டாள்.

அப்போது, "அப்பா" என்று மீனா கதவு தட்ட ஜானவி அவனை விட்டு விலகி வர, செழியன் அவளை பார்த்து கொண்டே கதவை திறந்துவிட்டான்.

அன்புவும் மீனாவும் ஓடி வந்து எப்போதும் போல் அவர்களிடத்தில் சென்று படுத்து கொள்ள, "இன்னும் நீங்க இரண்டு பேரும் தூங்கலயா?" என்று செழியன் கேட்க,

"தாத்தா விடுற குறட்டை சத்தம் தாங்க முடியல" என்றாள் மீனா!

"தப்பு மீனு... அப்படியெல்லாம் சொல்ல கூடாது" ஜானவி அதட்ட,

"நிஜமாதான் ஜானும்மா... அதான் நாங்க இரண்டு பேரும் எழுந்து இங்க வந்துட்டோம்" என்றாள் அன்பு!

"ரொம்ப நல்ல விஷயம்" என்று சொல்லிய செழியன் ஜானவியை ஏக்கமாக பார்க்க அவன் அடக்கப்பட்ட புன்னகையோடு,

"லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து படுங்க" என்றாள்.

"அப்போ அவ்வளவுதானா?" என்றவன் ஏக்கமாக இழுக்க,

"குழந்தைங்க இருக்காங்க" என்றாள் அவள் விழிகளை சுருக்கி!

அவன் பெருமூச்செறிந்து விளக்கை அணைத்துவிட்டு தன்னிடத்தில் படுத்து கொள்ள ஜானவியும் படுத்து கொண்டு அருகில் படுத்திருந்த அன்புவை தட்டி கொண்டிருந்தாள்.

செழியனின் கரம் எட்டி அவள் கரத்தை பிடித்து கொள்ள, "செழியன் கையை விடுங்க" என்று குரலை தாழ்த்தி சொல்ல, பிடிவாதமாக மறுத்துவிட்டான்.

"அப்பா" என்று மீனா அழைக்க சட்டென்று தன் கரத்தை விலக்கி கொண்டு, "என்ன மீனு?" என்று கேட்டான்.

"என்னை தட்டுங்க ப்பா" என்றவள் சிணுங்கி கொண்டே சொல்ல, "சரி" என்று அவளை தட்டி கொண்டே ஜானவியை பார்க்க, அவள் சிரித்து கொண்டிருந்தாள்.

அவன் கடுப்பாக அவளை பார்க்க,

"தூங்குங்க செழியன் குட் நைட்" என்று சொல்ல,

"எப்பவும் குட் நைட்டாவே இருக்காது ஜானவி" என்று பதலளித்தான்.

"அப்புறம்"

"இந்த அன்புக்குன்னு ஒரு நைட் வரும்" என்று மெலிதாக சொல்ல,

"ஆஹான்!" என்று ஜானவி கேலியாக நகைக்க அவன் அவளையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருக்க அவளும் அவனையே பார்த்து கொண்டிருந்தான்.

எத்தனை நேரம் என்றெல்லாம் தெரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் விழி அகற்றாமல் பார்த்து கொண்டிருக்க அன்புவும் மீனாவும் தூங்கிய பின்,

செழியன் ஜானவியின் விரல்களோடு தம் விரல்களை கோர்த்து கொண்டான். அப்படியே இருவரும் உறங்கி போயினர்.

Deleted user, Muthu pandi and 2 other users have reacted to this post.
Deleted userMuthu pandiDeleted usershiyamala.sothy

Nice

You cannot copy content